கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

Turtle’s back background texture abstract pattern nature.

நாங்கள் சென்றபோது நாகப்பன் முதலாளி வீட்டிலேயே இருந்தார். மிகப்பெரிய கேட்டுக்கு உள்ளே பிஎம்டபிள்யூ கார் நின்றிருந்தது. எட்டிப்பார்த்துவிட்டு ராஜேந்திரன் “கார் நிக்குது” என்றான்.

கேபினில் இருந்து வாட்ச்மேன் எட்டிப்பார்த்து “ஆரு? என்ன?” என்றான்.

“நாங்க பனை சொசைட்டியிலே இருந்து வாறம்… பனைப்பாதுகாப்புச் சங்கம். முதலாளியை பாக்கணும்” என்றான் ராஜேந்திரன்.

“டொனேசனுக்குன்னா ஆரையும் உள்ள விடக்கூடாதுன்னாக்கும் அறிவிப்பு” என்று வாட்ச்மேன் சொன்னான்.

“இல்ல, இது டொனேசன் இல்லை. வேற விசயம்…” என்று ராஜேந்திரன் சொன்னான். “முதலாளிக்க சொத்து ஒண்ணு இருக்கு… பனைவிளை. அது சம்பந்தமான பேச்சுக்காக்கும்.”

அவன் “கேட்டுப் பாக்குதேன்” என்று உள்ளே மறைந்தான்.

“டேய் என்னடே செய்யுதே? உள்ள போயி டொனேசன் கேட்டா செருப்பாலே அடிப்பாரு” என்றான் குஞ்ஞச்சன்.

“கேக்குத விதத்திலே கேப்போம்… எல்லாம் நாக்குல்லா? பின்ன அடி விளுந்தா அதை பிறவு பாப்போம்” ராஜேந்திரன் சொன்னான்.

கதவு திறந்தது. வாட்ச்மேன் வந்து “விளிக்காரு” என்றான்.

நாங்கள் உள்ளெ சென்றோம். நான் அந்த கேட்டைக் கடந்து அப்போதுதான் வருகிறேன். மிகமிகப்பெரிய வீடு. அப்படி ஒரு வீட்டை எங்களூர்ப்பக்கம் காணவே முடியாது. வெளியே இருந்து பார்த்தால் தெரியாது. பிரிட்டிஷ் பாணியிலான இரட்டைத்தூண் முகப்பு. அதையொட்டி விரிந்து சென்ற அறைகள்.

“கெட்டி அறுபது வருசமாச்சுடே” என்றான் குஞ்ஞச்சன். “நான் இப்பதான் பாக்குதேன்… எவ்ளவுபெரிய வீடு.”

“நாப்பது ரூம் உண்டுன்னாக்கும் கணக்கு. உள்ளயே குளமும் உண்டு” என்றான் ராஜேந்திரன். “பத்து வருசம் முன்னாடி ரீமாடலிங் பண்ணினாங்க. நம்ம ராபின்ஸனாக்கும் ப்ளூபிரிண்டு போட்டது.

இருபுறமும் குரோட்டன்ஸ் வளர்க்கப்பட்ட பாதையில் சென்று வளைந்து போர்ட்டிகோவை அணுகவேண்டியிருந்தது. எங்கோ டாபர்மான் நாய்கள் குரைத்தன.

உள்ளே போர்ட்டிகோவில் நாகப்பன் முதலாளி பெரிய மூங்கில் நாற்காலியில் சட்டைபோடாமல் ஒரு லுங்கி மட்டும் கட்டி அமர்ந்திருந்தார். வெளிறிய உடம்பு. தொங்கும் தாடை. களைப்பான கண்கள். பெரும்பாலும் எல்லா முதலாளிகளும் இப்படித்தான். இரவுபகலாக வேலை, கண்விழிப்பு, குடிகொண்டாட்டங்கள். சீக்கிரத்திலேயே பழுத்து கிழவர்களாக ஆகிவிடுவார்கள்.

“என்ன?” என்று நாங்கள் கும்பிடுவதற்கு முன்னாலேயே முகத்தைச் சுருக்கிக்கொண்டு கேட்டார்.

“ஒரு சின்ன விஷயம் பேசுகதுக்காக்கும் வந்தது” என்றான் ராஜேந்திரன்.

“என்ன விசயம்? என்னமோ சொத்து விசயம்னு சொன்னீங்களாம்.”

“உங்களுக்கு மேகரையிலே பதினாறு ஏக்கர் மண்ணு இருக்குல்லா? அதுக்க பேரு பனைவிளைன்னாக்கும். பனையைப்பத்தியாக்கும் நான் பேசவந்தது. இங்க நூறுவருசம் முன்னாடி ரப்பர் வந்தது. அப்ப அது மலையிலயும் மலையடிவாரத்திலேயும் இருந்தது. இங்க முளுக்க தெங்கும் பனையும் வாழையும் பலாவும் மாமரமும் நிறைஞ்சிருந்தது. ரப்பராக்கும் லாபம்னு எல்லா மரத்தையும் முறிச்சிட்டாங்க. இப்ப எங்க பாத்தாலும் ரப்பர்” ராஜேந்திரன் நிறுத்தாமல் சொன்னான்.

“என்னவே சொல்லுதீரு? என்ன சொல்ல வாறீரு?” என்று அவர் பொறுமையிழந்து இடைமறித்தார்.

“நான் சொல்லிடுதேன்… தென்னையும் வாளையும் பணப்பயிரு. அது இருக்கும். மாமரமும் பலாமரமும் இருக்கும். ஆனா பனைய இப்ப யாருக்கும் வேண்டாம். பனைவிடலிகளைக்கூட முறிச்சு செங்கல்சூளைக்கு விறகாட்டு அனுப்பியாச்சு. இப்ப நம்ம நாட்டிலே பனை இல்லை…”

“அதுக்கு நான் என்னலே செய்யணும்? என்ன பேசுதீக?” என்று அவர் கையில் இருந்த நாளிதழை டீபாயில் எறிந்தார்.

“நம்ம கல்ச்சர் முழுக்க பனையை நம்பியாக்கும். பனையடியிலே நம்ம மாடனும் எசக்கியும் இருக்காங்க. கரும்பனையிலே பத்ரகாளி உண்டுன்னாக்கும் நம்பிக்கை. பனை இல்லேன்னா நாம பஞ்சத்திலே செத்திருப்போம். பனையும் எருமையும் பாவப்பட்ட மனுசன்மாரை காப்பாத்துகதுக்கு பாதாள நாகங்கள் மேலே வந்து உருவம் கொண்டதாக்கும்னு சாஸ்திரம் உண்டு.”

“வெளியே போலே” என்று அவர் எழுந்து கையை நீட்டினார்.

ராஜேந்திரன் அவசரமாக “நான் சொல்லிடுதேன்… இங்க நம்ம மண்ணிலே உள்ள பனை வேற எங்கையும் இல்ல. இது வேற எனமாக்கும். பாண்டிப்பனை மாதிரி இல்லை. இந்தப்பனையை எல்லாம் அழிச்சா பிறகு நினைச்சாலும் நம்மளால உருவாக்கிக்கிட முடியாது” என்றார்.

“டேய் வெளியே போ!” என்று அவர் கூவினார் “ஏலே மாணிக்கம்…ஏய்!”

“பனையிலே இங்க பன்னிரண்டு வெரைட்டி உண்டு. அதிலே குடைப்பனையும் தாலிப்பனையும் ரொம்ப அபூர்வம்… வேற எங்கேயுமே வளராது. குடைப்பனையிலே அந்தக்காலத்திலே குடை செய்ஞ்சாங்க. தாலிப்பனையிலேதான் ஓலைகள் செஞ்சாங்க. தாலியைக்கூட அதிலேதான் செஞ்சிருக்காங்க”

அவர் முகம் சிவந்து மூச்சிரைக்க “உனக்கு என்னவேணும்?” என்றார்.

“டொனேசன்… நாங்க பனையோட எல்லா வெரைட்டிகளையும் நட்டு பாதுகாக்குதோம். அதுக்கு கொஞ்சம் மண்ணிருக்கு. இன்னும் மண்ணு வாங்கணும்… உங்களை மாதிரி ஆளுக குடுக்கணும்.”

“குடுக்கல்லேன்னா?”

“தெரியாம குடுக்காம இருக்கக்கூடாது. இப்ப தெரிஞ்சாச்சுல்லா? இனி குடுக்காம இருந்தா அது உங்க பொறுப்பு. உங்க தெய்வங்களும் பனையடியிலே இருக்குத தெய்வங்களாக்கும்… கிறிஸ்தவங்களுக்கு கூட குருத்தோலைத்திருநாள் இருக்கு.”

அவர் “தெய்வங்களா? த்தூ!” என்று துப்பினார் “எனக்கு எந்த சாமியையும் பயமில்லை, தெரியுதா? எனக்கோ எனக்க அப்பன் பாட்டனுக்கோ எந்த சாமியும் எள்ளுமுனை அளவுக்குக் கூட குடுக்கல்ல… நாங்க இந்த மண்ணிலே சாணிப்புளு மாதிரி வாழ்ந்தவங்க. தெரியுதாலே, சாணிப்புளு… ”

அவருக்கு மூச்சிரைத்தது “எனக்க தாத்தனுக்க அப்பன் கண்டன் புலையன் எட்டுநாள் பட்டினி கிடந்தாக்கும் செத்தாரு. அப்ப ஒரு சாமியும் ஒரு கை கஞ்சிவெள்ளம் அள்ளி குடுக்கல்லை. எனக்க தாத்தன் சந்தையிலே மூட்டை தூக்கினாரு. எனக்க அப்பன் அதே சந்தையிலே தரகு பாத்தாரு. நான் அதிலேருந்து மொத்த ஏவாரியா மேலே எந்திரிச்சு வந்தேன். இனியிப்ப ஏதாவது சாமி வந்து என்ன வரம் வேணும்னு கேட்டாக்கூட போடா மயிராண்டின்னாக்கும் சொல்லுவேன்… போ போ… எடம் காலியாக்கு.”

ராஜேந்திரன் என்னிடம் போவோம் என்று கண்காட்டினான். அவன் திரும்பும்போது உள்ளிருந்து “நில்லுங்கலே”என்று குரல் கேட்டது.

உடல் நன்றாக வளைந்து தாடைத்தசை தொங்கிய முதியவர் கைகளால் நாற்காலிகளை பிடித்தபடி நடந்து வந்தார். “நில்லுங்கலே… ஆரு இப்ப பனையை பத்தி பேசினது?”

“நானாக்கும்” என்று ராஜேந்திரன் சொன்னான். “நான் என்ன சொல்லுதேன்னா…”

“நீ சொன்னதை கேட்டேன். நீ நல்ல நாக்குச்சூடு உள்ள பயலாக்கும்” என்று சிரித்தார். “நான் இவனுக்க அப்பன். எனக்கபேரு அனக்கன். அனக்கன் தரகன்னு சொன்னா அந்தக்காலத்திலே உள்ளவங்களுக்கு தெரியும்.. உக்காருங்க.”

“அப்பன் எதுக்கு இங்க வந்தீரு… இது வேறவிசயம்.”

“நீயும் உக்காருலே… நீயும் கேக்கணும்” என்றார் அனக்கன் “ஏட்டீ…”

உள்ளிருந்து ஒரு பெண் “என்ன பாட்டா?” என்றாள். பைஜாமா போட்டு வெண்ணிற குர்தா அணிந்திருந்தாள். பளபளக்கும் தலைமயிரும் செதுக்கப்பட்ட புருவங்களும் நகப்பாலீஷும் கொண்ட நகரத்துப்பெண்.

“எனக்க பேத்தியாக்கும். பேரு வர்ஷா… வர்ஷான்னா மழை. இவளுக்க தங்கச்சி ஒருத்தி உண்டு. அவபேரு விருஷ்டி. அதும் மழைக்க பேராக்கும்” என்றார்.

“என்ன படிக்கிறீங்க?” என்று நான் கேட்டேன்.

“எம்.பி.பி.எஸ்” என்றாள். “மெட்ராஸ் ஸ்டேன்லியிலே”

“இப்ப லீவா?”

“ஆமா ஒரு எட்டுநாள் லீவு” என்றாள்.

“பயக்களுக்கு ஓரோ சாயை கொண்டுவரச் சொல்லு. எனக்கும் வேணும் ஒரு சாயை” என்றபின் “நான் சீனி போடுகதில்லை” என்றார்.

நாகப்பன் கசப்பு தெரியும் முகத்துடன் அமர்ந்தார். நாங்களும் கூடைநாற்காலிகளில் அமர்ந்தோம்

“நீ சொல்லுகது உண்மைதான் மக்கா. இங்க ஒரு காலத்திலே எங்க பாத்தாலும் பனையாக்கும். பனையை நம்பித்தான் வாழ்க்கை. பாதிப்பேரு பனையேறிகள். அவனுக்க பெஞ்சாதிகள் அக்கானி காய்ச்சுவாங்க. இங்க ஊரிலே இருந்து சந்தைக்கு போற சாமான்களிலே கருப்பட்டிதான் கூடுதல் விலையுள்ளது… உப்பு முதல் துணிவரை எல்லாமே கருப்பட்டிக்கு பதிலா வாறதாக்கும்” என்று கிழவர் தொடர்ந்தார்.

“பனம்பழம் அப்பல்லாம் ஒரு பெரிய தீனி. எனக்க அம்மை பனம்பழத்தைச் சுட்டுதருவா. அதை தின்னுட்டு பள்ளிக்கூடம் போவேன். மணமா இனிப்பா இருக்கும். அப்டி ஒரு ருசியான பண்டம்… இப்ப கண்ணாலே பாக்குறதுக்கில்லை. வெயிலு காலமானா நுங்கு. பிறவு பனங்கொட்டை முளைச்ச டவுணு. பனங்கிளங்கு… பனையை தின்னும் குடிச்சும் வாழ்ந்தோம்.”

அவருக்கு குரல் நடுக்கம் இருந்தது. ஆனால் உத்வேகத்துடன் பேசிக்கொண்டே போனார்.

“பனைன்னா அம்மையில்லா? எல்லாமே அவ தருவா. அந்தக்காலத்திலே துணி ஏது? மண்ணுலே சேத்திலே வேலை செய்யுத சனங்களுக்கு பனையை முடைஞ்சுதான் உடுதுணி”

“பாய் மாதிரியா?” என்றேன்

“இல்ல சின்னதா ஓலையை கீறி துணிமாதிரி நெய்வாங்க.. பாயிதான். ஆனா மெல்லிசா இருக்கும். கரும்பனைக்க ஓலையில்லை. இது குடைப்பனை ஓலை… தாளுமாதிரி மெல்லிசா இருக்கும்” என்றார் “ஆம்புளைக்கு ஜட்டிமாதிரி பொம்புளைகளுக்கு முட்டிவரை வரும். முலைக்குமேலே போடுகதுக்கும் ஜாக்கெட்டு மாதிரி உண்டு” என்றார். “எனக்க சின்னவயசிலேயே அப்டி பனைத்துணி போட்ட ஆளுகளை பாத்திருக்கேன்…”

“பெட்டி கடவம் எல்லாமே பனைதான். வீட்டிலே பனையிலே செய்ஞ்ச சாமானாக்கும் கூடுதலும்” என்று அவர் தொடர்ந்தார். “குடைப்பனை கொஞ்சம் அபூர்வம். நல்ல காட்டுக்குள்ள தனியா நின்னுட்டிருக்கும். ஓலையும் ஆண்டோடாண்டு வராது. கரும்பனைதான் ஊரெங்கும் நாணலு மாதிரி நிறைஞ்சு கிடக்கும்…”

டீ வந்தது. நாங்கள் டீ குடித்தோம். ராஜேந்திரன் நாகப்பன் முதலாளியை பார்த்து புன்னகைத்தார். அவர் கசப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

வர்ஷா உள்ளே போக திரும்ப “ஏட்டி இரு. நீ கேக்கணும்” என்றார். அவள் அமர்ந்துகொண்டாள்.

கோப்பையை வைத்தபடி அனக்கன் “நீங்க கொரம்பைன்னு ஒரு சாமான் இருக்கு, அதைப்பத்தி கேட்டிட்டுண்டா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

“அந்தக்காலத்திலே எல்லா வீட்டிலேயும் இருக்கும். காமணம்னும் சொல்லுகதுண்டு” என்றார். “இப்ப பனையோலையிலே தலைக்குடை செய்யுதாகள்லா?”

“ஆமா, தொப்பி மாதிரி வச்சுகிடுதது”

“அதேதான். அதைப்போல இது இன்னொண்ணு. இப்ப அதே ரூபத்திலே பிளாஸ்டிக் சாக்கை உள்ள மடிச்சு தலையிலே போட்டுக்கிடுதாங்க. அது அப்டித்தான் இருக்கும். தலையிலே மாட்டிக்கிட்டா தோளும் முதுகும் உள்ள மறைக்கிற மாதிரி இருக்கும். குனிஞ்சுகிட்ட கூரை மாதிரி நம்ம உடம்புமேலே நிக்கும். ஆமையோடு மாதிரின்னு வைங்க.”

“அப்பல்லாம் இங்க எப்பமும் மழை. மலையாளத்திலே மழைக்கு எவ்ளவு சொலவடைகள் தெரியுமா? துள்ளிக்கொருகுடம் மழை, கோரிச் சொரியுத மழை,வேரும்விழுதுமுள்ள மழை, பகலிருட்டு மழை, கறுத்த மழை ,சரவர்ஷம்… தமிழிலே ஒரே சொலவடைதான். அடைமழை. அடைச்சுக்கிட்டு கொஞ்சநேரம் பெய்யுத மழைதான் அவனுக கண்டது…”

சிரித்துக்கொண்டு அனக்கன் தொடர்ந்தார் “இந்த ஊரு மழைக்கு கொரம்பை இருந்தாத்தான் வாழ்க்கையே. தலையிலே போட்டுக்கிட்டு குனிஞ்சு நடந்தா கூடாரத்துக்குள்ளே நடக்குத மாதிரியாக்கும். ஒரு துளி உடம்பிலே படாது வயலிலேயும் விளையிலேயும் வேலை செய்யலாம். நாத்துநடுகது களை பறிக்குதது எல்லாமே கொரம்பைக்கு அடியிலே நின்னுதான். அந்தக்காலத்திலே இங்கே வயலுகளை பாத்தா கொரம்பைகள் நின்னுட்டிருக்கிறது தெரியும். பாக்க எருமைமுதுகு மாதிரி இருக்கும்.

ஆனா நல்ல கொரம்பை ஒரு பெரிய சொத்து. குடைப்பனை கொரம்பைன்னா அது சாதாரண விஷயம் இல்லை. நாலஞ்சு தலைமுறையாக்கூட வச்சிருப்பாங்க. யாருக்கதுன்னு அதிலே அடையாளமெல்லாம் போட்டிருக்கும். அதுக்க இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தா அடியிலே புதிய ஓலையை கோத்து செரியாக்கிடுவாங்க.

அப்டி சரிபண்ணிட்டே இருக்கணும். மேலே உள்ள ஓலை காலப்போக்கிலே கருகி மட்கிபோகும். அப்ப அடியிலே உள்ள ஓலை மேலே வரும். வெயிலுள்ள காலத்திலே தேன்மெழுகு எடுத்து அரக்கும்சேத்து உருக்கி மேலே பூசிவைச்சா பல ஆண்டுகள் அப்டியே இருக்கும்.

குடைப்பனை கொரம்பைதான் நல்லது, அதுக்கு வெயிட்டு குறைவு. கரும்பனையோலையிலயும் கொரம்பை செய்வாங்க. ஆனா நல்ல கனமா இருக்கும். மழையிலே ஊறியாச்சுன்னா தூக்கி நடக்க முடியாதபடி கனமா இருக்கும். எனக்க பாட்டிக்க கையிலே ஒரு கொரம்பை இருந்தது. அது கரும்பனைக் கொரம்பை.

பாட்டி ரொம்பச் சின்ன உருவம். அவ அந்தக் கொரம்பையை தூக்கி போட்டுக்கிட்டா உள்ளேயே ஒண்டிக்கிடுவா. அது ஒரு நாலஞ்சு கிலோ இருக்கும். ஆமையோடேதான். தேன்மெழுகும் அரக்கும் எடுத்து பூசிக்கிட்டே இருப்பா.

எனக்க தாத்தா கொச்சன் புலையன் ஒரு வேளாளனுக்க வயலுக்கு கரையிலே குடிலுபோட்டு தங்கியிருந்தாரு. அப்பல்லாம் புலையங்க அஸ்திவாரமுள்ள குடிலு கட்டக்கூடாது. மண்ணுதரைதான் இருக்கணும். அம்பது ஓலைக்குமேல் வைச்சு கெட்டப்பிடாது. செற்றைப்புரைன்னு பேரு. செற்றைன்னா மலையாளத்திலே சீப்பட்டவன்னு அர்த்தம்… கெட்டவார்த்தையில்லா.

அந்தச் செற்றக்குடிலையும் ஒவ்வொரு சீசனுக்கும் இடம் மாறி புதிய குடிலு கெட்டிக்கிடணும். மண்ணிலே அவங்க உரிமைகேக்கப்பிடாதுன்னு இந்த ஏற்பாடு. அங்க மரமோ செடியோ வச்சு வளத்திரப்பிடாது… ஆண்டோடாண்டு ஆண்டானுக்க காரியஸ்தனுங்க வந்து அடிச்சு கிளப்பிட்டே இருப்பானுக. அதொரு பெரிய நாடகமாக்கும் அப்ப. புதிய மண்ணுக்காக புலையனுங்க அடிபிடி கூடுவானுக. கொஞ்சம் வலுக்குறைஞ்சவன்ன்னா ஈரம் மாறாத சேத்துலே குடிலு கெட்டிக்கிடணும். அடிதடியிலே ஒருத்தன் இன்னொருத்தனை அடிச்சு கொல்லுகதும் உண்டு.

அதிலயும் ஒரு கணக்குண்டு. ஆம்பிளைக்கு மட்டும்தான் குடிலுகெட்ட அனுமதி. பொம்புளைக்கு இல்லை. அப்டி கிடைக்கணுமான காரியஸ்தனுக்கு படுத்துக் குடுக்கணும். அதொரு காலம். மானம் மரியாதை சூடு சுரணை ஒண்ணுமில்லை. வயிறு ஒண்ணுதான்… சொந்த வயிறில்லை பெத்த பிள்ளைகளுக்க வயிறு. எனக்க பாட்டி பாக்க நல்லா இருக்கமாட்டா. பட்டினிக்கோலம். சுள்ளிசுள்ளியா காலும் கையும். ஒட்டிப்போன முகமும். அதனாலே அவளை யாருக்கும் வேண்டாம்.

குடிலுகளிலே காலரா அன்னைக்குள்ள மாறாநோயாக்கும். நீர்க்கம்பம், நீக்கம்புன்னு இப்ப சொல்லுதோம்.சேத்துக்குளியிலே ஒருத்தனுக்க பீமூத்திரத்திலே இன்னொருத்தன் வாழ்ந்தா எங்க காலரா மாறும்? மழைசீசனிலே பிள்ளைகளிலே பாதி செத்திடும். எனக்க தாத்தா சீக்கு வந்து எந்திரிக்க முடியாம கிடந்தார். ஒருவாய் சோறில்லை. பட்டினியிலேயே செத்தார். ரெண்டு பிள்ளைகளும் போச்சு. எனக்க எனக்க அப்பா ஒத்தமகன்  மட்டும்தான் மிச்சம்.

“எனக்க பாட்டிக்க குடிலை ஒருத்தன் பிடுங்கிக்கிட்டான். அவளுக்கு மிஞ்சினது ஒரு கொரம்பை மட்டும். பிறகு பன்னிரண்டு வருசம் அவ வாழ்ந்தது அந்த கொரம்பைக்கு உள்ளயாக்கும்” என்றார் அனக்கன்.

“அதுக்குள்ளையா?”

“ஏன் ஆமை வாழல்லியா? நத்தை வாழல்லியா?” என்று அவர் புன்னகைத்தார். கண்களில் ஓர் உணர்ச்சியின்மை.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“பன்னிரண்டு வருசம் அவ அந்த கொரம்பைக்கு உள்ளே இருந்து வெளியே வந்ததே இல்லை” என்று அனக்கன் சொன்னார். “எனக்க அப்பா அதை சொல்லியிருக்கார். அவளுக்கு ஆமைக்காரின்னுதான் பேரே. ஆமை மாதிரி வீட்டை முதுகிலே வச்சுக்கிட்டிருந்தா. களட்டி வச்சுகிட்டு எங்கயாம் போனா யாராவது எடுத்திருவாங்கன்னு பயம். அவளுக்கு மிஞ்சினது அதுமட்டும்தான். அதுவும் போச்சுதுன்னா பிள்ளையோட போயி சாகவேண்டியதுதான்.

பகல் முழுக்க வயலிலே வேலை செய்வா. அவ மகனுக்கு ஒருவயசு. அவனை தோளிலே கட்டி வைச்சு அதுக்குமேலே கொரம்பையை போட்டுக்கிடுவா. அவன் கொஞ்சம் வளந்ததும் அவனையும் கொரம்பைக்குள்ள நிக்கவச்சுட்டே வயலிலே நாத்துநடுவா, களை பறிப்பா, கிளங்கு பிடுங்குவா. எல்லா வேலையையும் செய்வா.

கொரம்பையே குடிலு மாதிரி. அதை ஒரு குச்சியிலே வச்சு நிக்கவச்சுட்டு உள்ள உக்காந்து கல்லுகூட்டி சட்டியிலே கஞ்சி காய்ச்சுவா. கிளங்கு அவிப்பா. பனம்பளம் சுடுவா. தின்னுட்டு கொரம்பையை மேலே வச்சு கூரை மாதிரி மூடிக்கிட்டு ரெண்டாளும் தூங்கிடுவாங்க. மாத்துத்துணியும் மத்த அவசிய சாமானங்களும் எல்லாமே கொரம்பைக்கு அடியிலே சேத்து கட்டிவச்சிருந்தா. சட்டியை மட்டும் மரத்துக்கு அடியிலே வச்சிருப்பா.

அந்த கொரம்பை அவ உடலாட்டே ஆகியிருந்தது. அதை எடுத்தா பின்ன அவளாலே நடக்கமுடியாதுன்னு தோணும்.அவ உடம்பிலே உள்ள தோலே இல்லாம வெறும் சதையாட்டு இருக்கும்னு பலபேருக்கு நினைப்பு. அவளுக்கு மண்ணுன்னு ஒண்ணுமில்லை. அன்னன்னைக்கு கண்ட உலந்த எடத்திலே கொரம்பையோட போயி படிஞ்சிருவா. எந்த இடத்திலயும் ஒருநாளுக்குமேல் இருக்க விடமாட்டானுக. அடிச்சு தொரத்திருவானுக.

அவளும் ஆமைமாதிரி கூச்சம் நிறைஞ்சவ. ஆருகிட்டயும் பேசமாட்டா. வேலைக்கு போனா கேட்ட கேள்விக்கு மட்டும் மண்ணைப்பாத்து பேசுவா. ஆனால் எறும்புமாதிரி வேலை செஞ்சுகிட்டே இருப்பா. அதனாலே வேலை கிடைக்கும். ஆடிமாசம் வேலை இல்லாதப்ப பெரியவீடுகளுக்க முன்னாலே போயி நின்னு கைநீட்டி எதாவது இரந்து வாங்கி பிள்ளைக்கு குடுப்பா.

கொரம்பையோட உக்காந்திருக்கிறப்ப சின்ன சத்தம் கேட்டாக்கூட அப்டியே உள்ள உடம்ப இளுத்திருவா. ஒரு சத்தம் அசைவு இருக்காது. மணிக்கணக்கா அங்க கிடப்பா. ஒரு வெறும் கொரம்பை அங்க கிடக்குதுன்னு தோணிடும். ஒருக்க கோயில் யானை மதமிளகி கெளம்பிட்டுது. நாலஞ்சாளை அடிச்சு தள்ளிட்டு பிளிறிட்டு போகுது. அவ பிள்ளையோட உள்ள போயி சுருண்டுகிட்டா. ஆனை அந்த கொரம்பை பக்கத்திலே ஒருமணிநேரம் நின்னுது. உள்ள ஆளிருக்கிறதே அதுக்கு தெரியல்ல.

அவ மனிசங்க நடக்குத காலடியோசையிலே இருந்து நடுக்கத்தை வச்சு ஆளு ஆருண்ணு தெரிஞ்சுகிடுவா. அந்த ஊரிலே உள்ள எல்லாருக்க காலடிச்சத்தமும் அவளுக்கு தெரியும். ஊரிலே பலபேரு அவளை போட்டு கேலிசெய்ததுண்டு. அப்டியே கொரம்பையோட தூக்கி மறிச்சு போடுவாங்க. கொரம்பைக்குள்ளேயே ஒட்டிக்கிட்டு இருப்பா. தூக்கி தண்ணியிலே போடுவாங்க. அப்டியே கொரம்பையோட நீந்தி மறுகரைக்கு போயி வெளியே வந்திருவா

“ஒருநாள் ஆமைன்னு நினைச்சு யாராவது சமைச்சு திங்கப்போறானுக” அப்டீன்னு ஒரு சிரிப்பு அப்பல்லாம் இருந்திருக்கு. அவ தங்குற எடங்களிலே கொஞ்சம் தள்ளிப்போயி குழி தோண்டி உள்ளேயே வெளிக்கெறங்கி அப்டியே மூடிட்டு போயிடுவா. அப்டியே கொரம்பையோட தண்ணியிலே எறங்கி அதுக்க அடியிலே இருந்து குளிச்சிருவா. அவ வெளியே வரவே இல்லை. அவ உடம்பு எப்டி இருக்குன்னு ஒரு தலைமுறைக்கே தெரியாது

எனக்க அப்பா கொரம்பைக்குள்ளேயே பத்துவருசம் அவருக்க அம்மைகூட வாழ்ந்திருக்காரு. அப்பா சொல்லுகதுண்டு, கொரம்பைக்கு மேலே மழைவிழுற சத்தம்தான் அவரு சின்னவயசுன்னு நினைக்கிறப்ப வாற ஞாபகம்னு. கொரம்பை மழையிலே அடிவாங்கி அடிவாங்கி அதிர்ந்திட்டிருக்கும்.

ஆனா அவருக்கு அது ரொம்ப இனிப்பான ஞாபகம். அவளுக்க உடம்புசூட்டை இப்பமும் அறிய முடியுதுடே. குளிரும் பட்டினியும் இருந்தது. ஆனா பெத்த அம்மைக்க உடம்புலே ஒட்டிக்கிட்டு அவளுக்க மணத்திலேயே பத்துவருசம் வாழுற பாக்கியம் எவனுக்கு கிடைக்கும்னு சொல்லுறப்ப அழுதிருவாரு. கடைசிவரை நல்ல மழைன்னா உடனே அம்மை நினைப்பு வந்திரும் அவருக்கு.

எனக்க பாட்டி மகனை பொத்திப்பொத்தி வளத்தா. அவருக்கு தோளு வைச்சப்ப ஊரைவிட்டு சந்தையிலே மூட்டைதூக்க போனாரு. அவ அப்பவும் அந்த கொரம்பைக்குள்ளதான் கிடந்தா. அவரு அப்பப்ப வந்து பைசா குடுத்திட்டு போவாரு. ஒருநாள் கொரம்பை தெக்கே மேட்டிலே நாலுநாளா கிடந்திருக்கு. நாறுதுன்னு சொல்லி கொரம்பையை தூக்கி பாத்தப்ப உள்ள செத்து சுருண்டு இருந்திருக்கா.

எனக்க அப்பா வந்தப்ப அந்த கொரம்பையை அப்டியே சட்டிமாதிரி நிமித்து அதுலே அவளை போட்டு வச்சிருந்தாங்க. ஆமையை கவுத்தமாதிரித்தான் இருந்தாளாம். அப்டியே கொண்டுபோயி காட்டிலே வெறகு போட்டு கொரம்பையோட சுட்டிருக்காங்க. கொரம்பையோட சொர்க்கத்துக்கு போனான்னு ஒரு சிரிப்பு கதை உண்டு. கடவுள் வெளியே வாடீன்னு கூப்பிட்டப்ப தலையை மட்டும் நீட்டி ‘என்ன சொல்றீக’ன்னு கேட்டாளாம். “உனக்கு சொர்க்கம்னு” சொன்னப்ப கொரம்பையோட நடந்து உள்ள போனாளாம்.

கொரம்பை ஒரு கோட்டை அவளுக்கு. அதுக்குள்ள கையையும் காலையும் உள்ள இளுத்துக்கிட்டு சுருண்டுகிட்டா அப்டி ஒரு நிம்மதியா சந்தோசமா இருப்பாளாம். எனக்க அப்பா கிட்ட சின்னக்குரலிலே பேசிட்டே இருப்பா. இந்த கங்காருல்லாம் அதுக்க வயித்திலே பைய வைச்சு அதுக்குள்ள பிள்ளைய போட்டு உள்ளேயே பாலுகுடுக்கும்ல, அதுமாதிரி. அவ முகம் அப்டி ஒரு சாந்தமா இருக்குமாம்.செத்த முகமும் அப்டித்தான் சாந்தமா இருந்திருக்கு.

எனக்க அப்பா சந்தைப்பக்கம் கடைத்திண்ணைகளிலேதான் அந்தியுறங்கினாரு. மறுபடி ஏழு வருசம் கழிஞ்சுதான் அவருக்கு தலைசாய்க்க ஒரு கூரை அமைஞ்சுது. பெண்ணுகெட்டினாரு. நான் பிறந்தேன்” என்றார் அனக்கன் “எனக்க அப்பா ஏதோ ஒரு நேரத்திலே கிராமத்திலே இருக்கவேண்டாம், சந்தையாக்கும் நம்ம எடம்னு முடிவுசெய்து கிளம்பி வந்தாரு. அதனாலே நாங்க தப்பினோம்.

நாகப்பன் பொறுமையின்மையுடன் அசைந்தார்.

அனக்கன் அவரை நோக்கி “நீ கொரம்பைய பாத்திருக்கியாலே?” என்றார்.

“இல்ல… ஆனால் அப்பனுக்க பாட்டிக்கபேரு ஆமைக்காரின்னு தெரியும்” என்றார்.

“உனக்கு சொல்லியிருக்கேன். மறந்திருப்பே. உனக்கு ஆயிரம் ஜோலி” திரும்பி வர்ஷாவிடம் “உங்கிட்ட சொன்னதில்லை” என்றார்.

அந்தப்பெண் கண்ணீருடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

அனக்கன் “எனக்க அப்பனுக்கும் கொரம்பக்காரன்னு பேரு உண்டு. அவருக்கு சந்தையிலே மஸ்டர்கார்டு போடுறப்ப இனிஷியலு கேட்டிருக்காங்க. அவருக்கென்ன தெரியும். அப்பன் பேரு தெரியாது.அம்மைபேரு ஆமைன்னு சொல்லியிருக்காரு. ஆபீசரு சிரிச்சுட்டாரு. அவருக்க கூட்டுகாரனுக ஆரோ கொரம்பையில்னு போடுங்கன்னு சொன்னப்ப அவரும் செரீன்னுட்டாரு. அப்டியே எனக்க குடும்பப்பேரும் கொரம்பையில்னு ஆகிப்போச்சு. கே.அனக்கன். கொரம்பையில் அனக்கன்”

அனக்கன் சிரித்து “வடக்கே கொரம்பயில் அகமது ஹாஜின்னு ஒரு பெரிய ஆளு உண்டு. நம்ம பேரை கேக்குறப்ப அதைமாதிரி பெரிய குடும்பம்னு நினைச்சுகிடுவாங்க. நாயரான்னு கேட்டவனுக உண்டு. நான் சிரிச்சுக்கிடுவேன். ஒருதடவை ஒரு வடக்கன் ஏவாரி தறவாடு எங்க இருக்குன்னு கேட்டான். கொரம்பையில் தறவாடு திருவரம்பிலே இருக்குன்னு சொன்னேன். வீடு உண்டான்னு கேட்டான். இல்லை. ஆனா பெரிய வீடுன்னு சொன்னேன்.

அனக்கன் சிரித்து வாயை துடைத்துக்கொண்டு “செரி, பனையைப் பத்தி பேசினீங்க. எனக்க பய சொன்னது உண்மையாக்கும். எங்களுக்கு ஒருவாய் கஞ்சிவெள்ளம் கொண்டுவந்து தாறதுக்கு எந்த தெய்வமும் இல்லை. ஆனா பனை அப்டி இல்லை. எனக்கு அது தீனிபோட்டிருக்கு. எனக்க அப்பனுக்கும் தாத்தனுக்கும் தீனிபோட்டிருக்கு. ஆமைக்காரிக்கு வீட்டை குடுத்திருக்கு. அதுக்கு நாம பதிலு செய்யணும்… ஏம்லே?”

“ஆமா” என்றார் நாகப்பன்.  “என்ன செய்யணும் சொல்லுங்க.”

“நீங்க பாத்து செய்யுங்க” என்றேன்.

அவர் திரும்பி கண்காட்ட அந்தப்பெண் சென்று செக்புக்கை எடுத்து வந்தாள். அவளுடைய கண்கள் சிவந்து முகம் வீங்கியது போலிருந்தது.

நாகப்பன் அதில் தொகையை எழுதி கையெழுத்திட்டு “உங்க சொசைட்டி பேரை எழுதிக்கிடுங்க” என்றார்.

நான் தொகையைப் பார்த்தேன். இரண்டு லட்சம் எழுதியிருந்தார். ராஜேந்திரனே திகைத்துவிட்டான். எங்கள் மொத்த உத்தேச இலக்கே இரண்டு லட்சம்தான்.

“வாறோம்” என்று கைகூப்பி எழுந்துகொண்டோம். அனக்கன் அமர்ந்தபடியே கைகூப்பினார். நாகப்பன் எழுந்து எங்களை தொடர்ந்து வந்து கைகூப்பி விடைகொடுத்தார்.

கேட்டுக்கு வெளியே வந்ததும் ராஜேந்திரன் “இப்ப என்னலே சொல்லுதே? ஏலே,ரெண்டு லெச்சம் ரொக்கம்!” என்றான் “நான்லாம் வச்சா வச்சகுறி தப்பாது தெரிஞ்சுக்க.”

நான் “டேய் வீட்டுப்பேரைப் பாருடா” என்றேன்.

“கொரம்பையில் வில்லா” என்று படித்த குஞ்ஞச்சன் “அப்ப இதாக்குமா சங்கதி?” என்றான்.

“ஒரு கொரம்பை இப்டி ஒரு மாளிகையாட்டு வளரமுடியும்டே” என்றேன்.

“ஆமைக்க சக்தி அதாக்கும் மக்கா, அதுக்கு வேகமில்லை , ஆனா விட்டுக்குடுக்காத பிடிவாதம் உண்டு” என்றான் ராஜேந்திரன்.

***

முந்தைய கட்டுரைகணக்கு,சுக்ரர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி என்ன செய்தார்?