‘பிறசண்டு’ [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
பிரசண்டு கதையில் வரும் மாயக்காரனாகிய திருடன் ஒரு கற்பனையா? உண்மையில் அப்படி இல்லை. என் வீட்டில் முன்பு ஒரு சிறுவன் பெரிய பித்தளைக் கடாரத்தை உருட்டிக்கொண்டு போய்விட்டான். விற்றும்விட்டான். கடைசியில் போலீஸ் பிடித்தார்கள். மூன்றுமாசம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்து அந்தவழியாக போனான். என் பாட்டி “ஏண்டா இப்டி பண்ணி அடிவாங்குறே?”என்று கேட்டாள். “தவுலா பிறந்தா அடிவாங்கணும்லா அம்மணி?”என்னு அவன் கேட்டன. பாட்டி சிரித்துவிட்டாள்
ஆச்சரியம் என்னவென்றால் பாட்டிக்கு அந்தப் பையனை ரொம்ப பிடித்துவிட்டது. சூட்டிகையான பையன் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பாட்டி அவனுக்கு நிறைய பணம் கொடுத்திருக்கிறாள் என்பதுகூட பின்னாடிதான் தெரிந்தது
எஸ்.சந்தானகிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
‘பிறசண்டு’ சிறுகதை பலிக்கல் கதையின் வேறு ஒரு வடிவம். அநீதியால் தண்டனை அனுபவித்த அப்பாவி மனிதனின் முதுமைக்கலாம்.
ஆனால் எனக்கு இக்கதை ‘பலிக்கல்’ கதையை விட அதிர்ச்சி கொடுத்தது. எவ்வளவு மன்னிப்புகளுக்கும் கண்ணீர்களுக்கும் மத்தியில் நாம் வாழ்கிறோம்.
“அடிக்கடி வீட்டுக்கு வாடே” என்று அந்த கிழவர் சொல்கிறார். அந்த மன்னிப்புகள் தான் அற சக்கரத்தை சுழலவிடுகின்றன.
அவர் அசடனாக, ஏமாளியாக இருக்கலாம், ஆனால் அதையும் கடந்த ஒரு பரிசுத்தசம் அவரிடம் உள்ளது.
“எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்.
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்..”
என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் மனதுள் ஓடுகின்றது.
தங்கள்,
கிஷோர் குமார்.
திருச்சி.
தேனீ [சிறுகதை]
அன்புள்ள ஜெ
தேனீ கதையை பலர் ஒரு கண்ணீருடன் நினைத்திருக்கலாம். இங்கே பெண்களின் கனவுகள் திருமணத்துடன் இல்லாமல் போவதைப்பற்றி பலர் எழுதி குவித்திருக்கிறார்கள். ஆண்களின் கனவுகள் ஒரு வேலையிலேயே இல்லாமலாகின்றன. பெண்களுக்கு திருமணம் போலத்தான் ஆண்களுக்கு வேலையும்.ஆண்கள் அதையே நினைத்து அதுக்காகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.வாழ்க்கையையே வேலைக்கு கொடுத்துவிடவேண்டும். கனவு இலட்சியம் கலை எதுக்குமே பிறகு வாழ்க்கையில் இடமில்லை.
ஒரு பெர்சனாலிட்டியாக நிமிரவேண்டிய காலகட்டத்தில் தன் தொழிலுக்காக வாழ்க்கையை செலவிட்டவர்களைப்போல துரதிருஷ்டமானவர்கள் வேறில்லை. தேனிலிருந்து பிரிக்கப்பட்ட தேனீக்கள். தேனை மனசுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டியவர்கள். கல்லை நக்கி இனிப்பை அறியவேண்டிய நிலையில் இருப்பவர்கள்
சரவணக்குமார்
***
என் அன்பு ஜெ,
சண்முகத்தின் அப்பா ஒரு தேனீயே தான். அப்படியான தேனீ மனிதர்களை இந்த வாழ்வில் சந்திக்கும் போதெல்லாம் நெகிழ்ந்ததுண்டு.
“குடுக்காதவன் விரியமாட்டான். விரியாதவனுக்கு மெய்யான சந்தோசம்னு ஒண்ணு இல்லை”. இந்த வரிகளை எல்லாம் என் தந்தையின் காதுகளில் உரக்க சொல்ல வேண்டும் போலிருந்தது ஜெ. என் தந்தை அவர் குடும்பத்தில் மூத்த அண்ணன். அவர் அவரின் சகோதரிகள் இருவருக்கும் எதுவுமே செய்ததில்லை. என்றோ செய்த சிறு உதவிகளையும் அவர் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு தந்தையாகவும் அவர் தன் கடமைகளைச் செய்ததில்லை. தான், தனக்கு, எனது என்ற சுயநலத்தின் உச்சமாயிருப்பவர். நித்தமும் குடிக்கும் பழக்கம், மனிதரை அப்படி மாற்றிவிடுமோ என்னவோ.
தேன்சிட்டுகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பொறாமை வருவதுண்டு. அது தன் குங்சுகளை பறக்கும் வரை உடனிருந்து பாதுகாத்து உணவளித்து, தன் சமூகத்தின் ஓர் அங்கமாக ஆக்கும் வரை கண் ஓய்வதில்லை. ஓர் தந்தைக்கும் தாய்க்கும் அப்படிப்பட்ட கடமை உண்டு தானே. அவர்கள் அதை செய்யாதபோது தான் சமூகத்தில் ஊனம் ஏற்பட ஆரம்பிக்கிறது. ஒரு வகையில் சமூகத்தின் பல பிரச்சனைகளின் வேராக இந்த தாய், தந்தையர் இருக்கின்றனர். நீங்கள் அஜிதனின் சிறு வயதில் நிகழ்ந்த ஓர் அனுபவத்தை பகிர்ந்திருந்தீர்கள். ”அந்த தைலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நபர் தான் தேய்த்துவிட வேண்டும்னு போட்டிருக்கு” என்று நீங்கள் உங்கள் மனைவியிடம் சொல்லும்போது அஜிதனின் கண்ணீர் உங்கள் கழுத்துகளில் விழுந்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அப்போது நானும் தேம்பி அழுதிருந்தேன் என் சிறுபிராய ஏக்கங்களையும் உடன் சேர்த்து… சண்முகத்துக்கு நல்ல அப்பா வாய்த்திருக்கிறார். அவருக்கு இருக்கும் இந்த அனுபவங்களைப் போல சொல்ல எனக்கு ஒன்றுமில்லையே என்று ஏங்கினேன். ஒரு தந்தையாக, சமூகத்தில் நல்ல மனிதனாக ஒருவன் விட்டுச் செல்ல வேண்டிய நல்ல நினைவலைகளை அவன் அப்பா விட்டுச் சென்றிருக்கிறார். அவனுக்காக மகிழ்ந்தேன்.
சண்முகத்தின் அப்பாவான தேனீ மனிதன் சமூகத்தின் ஆணி வேர். இவர் போன்றவரால் தான் சமூகம் தழைக்கிறது. நல்ல கணவருக்கேற்றார்போல் மனைவியும் அமைந்திருப்பது சிறப்பின் உச்சம்.
தேனீயை மூன்று இடங்களில் சொல்லியிருந்தீர்கள். ஒன்று அவரின் சுறுசுறுப்பைக் குறிப்பிடுகையில்; இரண்டாவது தேன் மேல் தேனீக்கு இருக்கும் காதலைப்போல, அவருடைய அப்பாவுக்கு ராஜரத்தினம் பிள்ளை/ அவரின் இசை மேல் இருந்த காதல் பற்றி சொல்லும் போது, மூன்றாவது அப்பா சண்முகத்தின் வாயில் ஒழுகிய நீரை தேனுன்னு குடித்தது. நான்காவது ஓரிடம் உள்ளது ஜெ. அது, இந்த கதையை சொல்லிமுடித்தபின் சண்முகம் ஏன் தூணை நக்கினான் என்பதை நாராயணனனும் நாமும் அறியும் இடம்.
ஒரு குறுந்தொகைப் பாடல் நினைவிற்கு வந்தது.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
தேனீ கிடைத்த பூவிலுள்ள தேனையெல்லாம் உரிஞ்சும் குணம் கொண்டதல்ல. சிறந்த பூவிலுள்ள தேனையல்லவா சுவைக்கக் கூடியது. அப்படி சண்முகத்தின் அப்பா என்ற தேனீ மனிதன் சுவைத்த ஆகச் சிறந்த தேன் ராஜரத்தினத்தின் இசை. ஏதோ ஓர் காலவெளியினின்று, அந்த இசை அவரை அடைந்து அவர் மகிழ்ந்ததில் மகிழ்ச்சி எனக்கு. அதே தேனைத்தான் சண்முகம் சுவைக்க அவ்வபோது வருவார் போலும். அப்படி இலயித்து தேனை சுவைத்துக் கொண்டிருக்கும் போது நாரயணின் கண்களில் பிடிபட்டுவிட்டார். அவர் பிடிபட்ட காரணத்திற்காகவே நாரயணனுக்கும், எங்களுக்கும் இந்த தேனீ சிறுகதை கிடைத்தது.
இதை படித்து முடித்துவிட்டு ராஜரத்தினம் அவர்களின் நாதஸ்வர இசையைக் கேட்டேன். தேன் மாதிரியே இனித்தது ஜெ. “தேனுல்லா! தேனுல்லா!”…
உண்மையில் பிரேமை அற்புதமான வார்த்தை தான் ஜெ.
-பிரேமையுடன்
இரம்யா.
***