மூன்று டைனோசர்கள்-கடிதங்கள்

மூன்று டைனோசர்கள்

அன்புள்ள ஜெ.

இந்த அனுபவம் எனக்கும் உண்டு. பறவைகள் வீடுகளுக்குள் கூடு கட்டியது போல எங்கள் வீட்டின் பின் வாசற் கரையில் பட்ட கமுக மரம் ஒன்று இருந்தது.  அதன் நடுப்பக்க பொந்தினுள் ஒரு பெரிய வகைக் கரிக்குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. தாய்க்குருவி உணவூட்டுவது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். அதைப் பார்த்துவிட்டே குளிக்கப்போவேன். கீழேயுள்ள புகைப்படத்தைக் குஞ்சு வளர்ந்த நாட்களில் எடுத்திருந்தேன்.

எனக்குப் பயம் என்னவென்றால் இரண்டு பூனைகள் கீழே சுற்றிக்கொண்டு திரிந்தன. ஏதேனும் நடந்துவிடும் என்று. பூனைகளை இரவில் தூரத் துரத்திவிட்டு தூங்கச்செல்வேன். துரதிஷ்டவசமாக நேற்று விடியற்காலை எழுந்து பார்த்தேன் மூன்று குஞ்சுகளும் பொந்தில் இல்லை. கீழே தலைகள் மட்டும் கிடந்தன. வேதனையாக இருந்தது, தாய்க்குருவியின் கதறல்.

சமயத்தில் பூனைகள் ஆபத்தானவையாக மாறக்கூடும். முன்னெச்சரிக்கையாக குறிப்பிடுகிறேன்.

சுயாந்தன்.

***

அன்புள்ள சுயாந்தன்

முன்பு என் அப்பா இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று சங்கிலிகளை இணைத்து அதில் நாயை கட்டி அந்த மரத்திலேயே இரவில் கட்டிவைத்தார். ஒருவாரம்தான், குஞ்சுகள் பறவைகளாகி பறந்துவிட்டன

ஜெ

***

என் அன்பு ஜெ,

நான் காத்துக் கொண்டிருந்த மூன்று வருகைகள். மகிழ்ந்தேன். பார்ப்பதற்கு நீங்கள் சொன்னது போலவே டைனோசர் குட்டிகள் தான். டைனோசர்கள் “ஜுராசிக்” என்ற புவியியல் கால அளவுகோலில்  மறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதில் பறந்து தப்பிப் பிழைத்த ‘பறக்கும் டைனோசர்’ போலான இந்தக் குஞ்சுகள். எப்படிப் பிழைத்ததென ஆச்சரியப்படுத்தும் பல்லி வகையறாக்களும், முதலைகளும். எப்படியோ அவர்களின் முதாதையர் டைனோசர் என்பது உறுதி. (நீங்கள் விஷ்ணுபுரத்தில் மணிமுடியில்:பாம்புகள் தங்களை முடித்துக்கொள்ள அதன் மூதாதையரான மீன்கள் இனத்தத்தைத் தேடி நீருக்குள் புகுந்தது ஞாபகம் வந்தது.)

“பிரபஞ்ச பசி” என்ற வார்த்தை ஓர் அகண்ட வார்த்தை ஜெ. அது அந்த வார்த்தையாலேயே என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அன்னையும், தந்தையும் தீர்க்க இயலா பிரபஞ்சப் பாசிகள் அவை. அவை தந்துவிட்ட உணவுகளைத் தவிறவும் மிச்சமிருக்கும் பசியால் மேல் நோக்கி எழுந்து வளரத் துவங்குமோ?!

“வளர்க!” எத்துனை அற்புதமான ஆசிர்வாதம். அவைகள் உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளாவிடினும், நீங்கள் அனுப்பும் அந்த அற்புதமான அலைவரிசையில் அவை சிறப்பாக வாழும். குடும்ப சகிதம் (உங்கள் வாசகர்களையும் சேர்த்து) அவர்களை வரவேற்றிருக்கிறோம்.

மன்னருக்கு இந்த விசயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவரும் வாழ்த்தியிருக்கக்கூடும். என்னுடைய வாழ்த்துக்களும் சொல்லிவிடுங்கள்.

ஒரு வாரமாக நான் வைத்திருந்த குருவிக் கின்னங்கள் இன்று அடையாளம் கண்டறியப்பட்டு புசிக்கப்பட்டது. அடைக்கலாங் குருவி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஓர் மண்சட்டி உலை மூடியில் அவள் குடிக்க சற்று நீரும் வைத்திருக்கிறேன். அவை மகிழ்வாக இருக்கும் என்றெண்ணுகிறேன். அவளை படம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கையில் அனுப்புகிறேன் ஜெ.

அடுத்தகட்டமாக அடைக்கலாங்குஞ்சுகள் பறப்பதற்கான வாழ்க்கைப் பாடத்தை தாயும், தந்தையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும். பின் அடைக்கலாங்குருவி சமூகமே வந்து பறப்பதற்கு சொல்லிக் கொடுக்கும். ஓர் அனுமானந்தான். எங்கள் வீட்டின் முன்னுள்ள வேப்பமரத்தில் குஞ்சு பொறித்த தேன்சிட்டு அப்படித்தான் செய்தது. ஒருவேளை அடைக்கலாம் குருவிகளும் அதையே செய்யலாம். பார்த்தீர்களானால் பகிருங்கள் ஜெ.

வளர்க!

மன்னரின் இராச்சியத்தில் மூன்று வருகைகள். வளரட்டும் வளமாக!

அன்புடன்

இரம்யா.

***

இனிய ஜெயம்

மூன்று டைனோசர்கள் வாசித்தேன். முதலில் என்னை துணுக்குறச் செய்தது அந்தக் குட்டி ஜீவன்களின் பசி. பசி கூட அல்ல பசித்தீ. முதல் உயிர் தோன்றிய தருணம் தொட்டு இன்று உயிர்த்தொகுதி என்று பெருகி நின்று, புழு முதல் திமிங்கலம் வரை வெவ்வேறு வயிருகள் கொண்டு பசி என எழுந்தாடுவது என்ன? அது வடவைத் தீயேதானா?

இரண்டாவதாக என்னை சிந்தனைக்குள் தள்ளியது இதற்குள் செயல்படும் பரிணாமவியல் நோக்கு. கொஞ்ச நாளாக இயற்பியல் மூளைநரம்பியல் வரலாறு உயிரியல் இவற்றில் எல்லாம் பரிணாமவியல் கோட்பாடு நிகழ்த்திய தாக்கம் குறித்து சொற்ப ஆங்கில அறிவைக் கொண்டு வாசித்து வருகிறேன்.

முதற்கண் இந்த பரிணாமவியல் கோட்பாடு என்பது ‘நிரூபண’ சாட்சியம் கொண்ட உண்மை அல்ல. அனைத்தையும் இனைக்கக் கூடிய தர்க்கபூர்வமான ஒரு ஊகம் மட்டுமே. ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு போல. மயக்கம் எங்கே உருவாகிறது என்றால் அந்த ஒன்றே முற்ற முழுதான விடை என ‘நம்ப’ த் தலைப்படும் போதே. ஆகவேதான் குவாண்டம் இயலின் முதல் இயல்பு வெளியே தெரிந்த போது  ஐன்ஸ்டின் கடவுள் சூதாடி அல்ல என்று சொல்லி பொருமினார்.

பரிணாமவியல் கோட்பாடும் முற்ற முழுதான ஒன்றல்ல என்பது (சார்ப்பியலுக்கு குவாண்டம் ஒன்று எதிராக கிளம்பி வந்தது போல) அதற்க்கு மாறான மற்றொரு உண்மை வலிமையாக எழுந்து வரும் போதே நிகழும். இவை போக பரிணாமவியல் எல்லா இயலையும் போல அடிப்படை கேள்விகளை ‘விளக்க’ வகையற்றதாகவே இருக்கிறது.

மொழி எப்படி தோன்றியது?

மூளையில் ஒரு சடுதி மாற்றம்.

பிரபஞ்சம் எப்படி தோன்றியது?

மூலக் கருவில் ஒரு சடுதி மாற்றம்.

முதல் உயிர் எப்படித்தோன்றியது?

ரசாயனக் குழம்பில் ஒரு சடுதி மாற்றம்.

இந்த மூன்றிலும் இந்தக் கரு, மொழிக்கான மூளைஅமைப்பு, உயிர் துளிர்க்கும் ரசாயன குழம்பு இந்த அடிப்படை கலவையே மிக மிக சிக்கல் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.  எத்தனை நிகழ்தகவுதான் இங்கே திரும்ப திரும்ப நிகழ முடியும்?  ஒரு அடிப்படை செல் என்பதே தன்னளவில் மிக சிக்கல் வாய்ந்த வடிவத்தை கொண்டிருக்கிறது. அது பரிணாம வளர்ச்சி அடைந்தே அந்த வடிவம் கொண்டது எனில், இந்த பூமியில் இவை ஒவ்வொன்றும் வடிவம் கொள்ள சூழல் தகாவுடன் இணைந்த ஒரு டைம் ஸ்பான் இருக்கும் இல்லையா. அதன் அளவீடுதான் என்ன? மொத்தத்தில் எல்லா துவக்கத்துக்கும் பரிணாமம் தற்காலிகமாக சொல்லும் பதில் சடுதி மாற்றம். இந்த விடை எப்படிப் பட்டது என்றால், அங்கே காகிதங்கள் இருந்தது, அச்சுக் கூடம் இருந்தது, எழுத்துருக்கள் இருந்தது, மை இருந்தது, நிலநடுக்கம் போல ஒரு சடுதி மாற்றம். முன்பிருந்த எல்லாமே மறைந்து போய் அங்கே விஷ்ணுபுரம் நாவல் இருந்தது. இப்படிப் பட்ட விடையைத்தான் வித விதமான கணக்குகள் ஈவுகள் வழியே அறிவியல் தந்து கொண்டு இருக்கிறது .

அடிப்படை கேள்வியை விட்டால் அடுத்த வரிசையியலும்  பரிணாமவியல் பதிலளிக்க இயலா கேளிவிகளின் தொடர் நீள்கிறது. கேம்ப்ரியன் காலத்தில் சடுதி மாற்றம் வழியே நண்டு போன்ற உடலிகளின் பெருக்கம் நிகழ்கிறது. இந்த உடலிகள் எதற்கும் மூதாதை வரிசை இல்லை. குறிப்பாக ட்ரைலோபைட்டா எனும் உயிர் அப்போது உள்ள எந்த உயிரைக் காட்டிலும் மிக மிக சிக்கல் வாய்ந்த விழி அமைப்பைக் கொண்டிருக்கிறது. அந்தவிழி அமைப்புக்கு முன்னாடியே இல்லை.

அதே போல மீன் அதிலிருந்து நீர் நில பிராணி எனக் கொண்டால் பரிணாமவியல் கோட்பாடு இதை இணைக்க திணறுகிறது. முதுகு எலும்பும் இடுப்பு எலும்பும் இணைந்த உடலே நிலநீர் உயிர்களின் அடிப்படை. இந்த இணைப்பு பரிணமித்து வந்த எந்த தடயமும் இல்லை. இப்படி சுவாசப் பைகள் விழிகள், அதை விட குறிப்பாக நாக்கு. இப்படி நிலநீர் உயிரின் தனித்துவம் எதற்கும் மீன்களில் பரிணாம மூதாதை சுவடு இல்லை.

நிலநீர் உயிரில் இருந்து ஊர்வன வந்தது எனக் கொண்டால் இரண்டும் ஈனும் முட்டைகள் அதன் அமைப்பு சிக்கல் அது பொரிக்கும் முறை இவை பரிணாமத்தால் பதில் சொல்ல இயலா சிக்கல் கொண்டதாக இருக்கிறது. அங்கிருந்து பறவை என்றால் நிலைமை இன்னும் சிக்கல் கொள்கிறது. எல்லா ஊர்வனவும் குளிர் குருதி கொண்டவை. பறவை இதற்க்கு நேர் எதிர். மீனின் சுவாச உறுப்புக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத சுவாச உறுப்பை எவ்வாறு ஊர்வன கொண்டிருக்கிறதோ, அதே போல ஊர்வனவற்றுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத சுவாச அமைப்பை பறவைகள் கொண்டிருக்கிறது. ஊர்வன பறப்பன இரண்டின் விழித் திறன்களும் முற்றிலும் வேறு வேறான இவற்றுக்கு எங்கும் பரிணாம மூலமே இல்லை.

டேவிட் அட்டன்பாரோ ஆவணங்கள், டாக்கின்ஸ் நூல்கள் போல பெரும்பான்மை மக்களை நிறைக்கும் பரிணாமவியல் ஆதரவு தரவுகள் எதுவும், பரிணாமவியல் உண்மையில் எங்கெங்கு பதில் சொல்ல இயலா கேள்விகளை சந்திக்கிறது என்பதை பேசுவதே இல்லை. அந்த இடைவெளிகளில்தான் இருக்கிறது பிரம்மத்தின் மற்றொரு முகம். ஒரே ஒரு மூலம் மட்டுமே அதன் கைவசம் வைத்திருக்கும் அளவு பிரம்மம் அவ்வளவு கஞ்சனாக இருக்க வாய்ப்பில்லை என்றே நானும் நம்புகிறேன். உரையாடல்களை சொற்ப ஆங்கில அறிவு கொண்டு புரிந்து கொண்ட வகையில், ஊட்டி நித்யாகுருகுலம் சுவாமி வியாச பிரசாத் பரிணாமக் கோட்பாட்டை ஏற்பவர் அல்ல என்றே அறிகிறேன். குரு நித்யாவும் இதை போதாமை கொண்ட கோட்பாடு என்றே சொல்லுவார் என நினைக்கிரென். தன்னை நம்ப வைத்து அதன் வழியே தனது முட்களை உதிர்க்க வைத்து, முட்கள் இல்லாத கள்ளிச் செடியை பிறப்பிக்க வைத்த ஆய்வு குறித்து நித்யா குருகுலத்தில் பேசி இருக்கிறோம். இந்த பரஸ்பர நம்பிக்கை அன்பு இதை பறிமாவியல் கோட்பாடு கொன்டு விளக்கிவிட முடியுமா என்ன?  பிறகு என் பரிணாமவியல் இருக்கிறது? உங்கள் கதையில் வருவதே பதில். மனிதன் நம்புகிறான். ஆகவே பிரம்மம் அவ்வாறு நடிக்கிறது. :)

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–64
அடுத்த கட்டுரைகதைகள்- கடிதங்கள்