கூடு, தேவி- கடிதங்கள்

கூடு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

கூடு கதையின் மிக அழகான பகுதியே லடாக்கின் நிலப்பரப்பை, அங்கே பயணம் செய்வதை விவரித்திருந்த முறைதான். ஒரு பயணக்குறிப்புக்கும் அதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. பயணக்குறிப்புகளில் ஒரு வகையான objectiveness உள்ளது. அது வேறு ஒரு அனுபவம். இதிலுள்ளது subjectiveness இது அந்தக்கதைக்குள் ஒரு கதாபாத்திரம் செய்யும் பயணம். ஆகவே அவருடைய மனநிலைக்கு ஏற்ப ஒருவகையான குறியீட்டு அர்த்தமும் உணர்ச்சிகளும் வந்துவிடுகிறது

கதையில் அந்தக்கதாபாத்திரம் ஆன்மீகமாக பயனம் செய்கிறது. ஆகவே அந்தத் தேடலின் அர்த்தம் பயணம் சம்பந்தமான குறிப்புகளில் ஊடுருவியிருக்கிறது. பாதையில் சாவுக்கான பொறிகள் இருக்கின்றன. மேலிருந்து விழும் பாறைகள். அருவியாக கொட்டும் கல். ஒவ்வொரு முறையும் புதிதாக உருவாக்கப்படும் பாதை. மாறிக்கொண்டே இருக்கும் பாதை. அது ஆன்மீகமான அர்த்தம் அடைந்துவிடுகிறது.  spiritual journeyயை குறிப்பாலுணர்த்துவதாக அது ஆகிவிடுகிறது.

அந்த பயணத்தின் ஒரு பகுதியகா அவர் சென்றடைவதே மடாலயங்கள். அவையும் அத spiritual journeyயின் நடுவே வந்து கடந்து செல்லும்spiritual positions ஆக உள்ளன. ஒவ்வொரு மடாலயமும் ஒவ்வொரு வகை. சின்ன மடாலயத்திற்குள் அமர்ந்திருக்கும் பொன்வடிவ புத்தர் ஒரு கனவுபோல தெரிகிறார்.

கூடு கதையே மூன்று அடுக்குகளால் ஆனது. ஒரு பகுதி அந்த லாமாவின் தேடல் மற்றும் மரணத்தின் கதை. இன்னொரு பகுதி அதை தேடிச்ச்சென்று கண்டடைபவர் சொல்லும் அவருடைய தேடலின் கதை, அவருடைய பயணங்களின் கதை. மூன்றாம்பகுதி அவர் அதன்மேல் சொல்லும் கருத்துக்கள். மூன்று பகுதிகளையும் ஒன்றுக்குமேல் ஒன்றாக பொருத்தினால்தான் நாம் இந்தக்கதையை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்

 

எஸ்.மகாதேவன்

 

 

வணக்கம் ஜெ

 

கூடு சிறுகதையை வாசித்தேன். இயற்கையுடனான திமிறல் தான் நில்லாத அலைபாய்தலும் நிலையில்லாமையும். ஆனால், உள்ளொடுங்கி கருக்குழவியாகும் தருணம் அந்த மாபெரும் இயற்கையில் நம் மெய்யான இடம் துலங்கி வரும் இடம். கூடு உறைதல், கூடு நீங்குதல், கூட்டில் உள்ளொடுங்குதலான புத்தப்பிட்சுக்களின் வாழ்வு பிரமிக்க வைக்கிறது. நாம் சுழற்றாமலே அறச்சக்கரங்கள் சுழலும், ஒத்திசைவும் நெறியும் தன்னிடத்தே கொண்டது எனும் போது ஏற்படுகிற வெறுமைதான் உள்ளொடுங்கும் நிலை. அந்த முற்றொடுங்குதல்தான் ஏதேனும் வகையில் அவர்ககை இவ்வுலகில் பேருரு கொள்ளச் செய்கிறது.

 

அரவின் குமார்

தேவி [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

தேவி ஒரு பெரிய கொண்டாட்டமான கதை. காதர்பாய் இந்து கோயில் விழாவின் தொடக்கத்திலேயே அல்லாவை நாம் தொழுதால் என்று ஆரம்பிக்கிறார். திருவிழா ஜெமினிகணேசனின் காதல்பாட்டுடன் ஆரம்பமாகிறது. நாடகத்தின் உள்ளடக்கம் நக்சலைட் ஆதரவு. திருவிழா என்பதைவிட அது ஒரு கொண்டாட்டம். ஊரே சேர்ந்து கொண்டாடுகிறது

அந்த நாடகத்தின் எல்லா நகைச்சுவைகளையும் சிரித்து சிரித்து ரசித்தேன். பல்லாலேயே டார்ச் அடிக்கும் உள்ளூர் ரசிகர், அவருக்கும் லாரன்ஸுக்குமான மென்மையான பனிப்போர், அரைக்கட்டை குறைவதனால் அலைக்கழியும் பாய், குன்னக்குடியில் காருக்குறிச்சியை கேட்கும் தாத்தா, மீசை இல்லாவிட்டால் நாடகமே வேண்டாம் என்று குமுறும் போஸ்ட்மேன், ஃபைட்டுக்கு ரெடியாக இருக்கும் ஃபாதர் வேஷம், லாரன்ஸ்க்கு வயிற்றிலிருந்து போகும் கேஸ். அந்த கொண்ட்டாட்டத்தை இயல்பாக சொல்லிச் செல்வதனால்தான் இது மாஸ்டர்பீஸ் கதை

ஜெயக்குமார்

என் அன்பு ஜெ,

 

“தேவி” படித்து முடித்ததும் எனக்குத் தெரிந்த உங்களின் அனைத்து பெண் கதாப்பாத்திரங்களையும் நினைத்துக் கொண்டேன். நீலிமா, நீலி, லலிதாங்கி, எல்லா, கமலம் இப்படி… அதில் இந்த ஸ்ரீதேவியும் இப்பொழுது. பெண்களை நீங்கள் சக்தியின் உச்சமாகக் காண்கிறீர்கள் என்றே தோன்றும் எனக்கு. அவர்களுக்கு ஆண்கள் எவ்வளவு துச்சமானவர்கள் என்பதை ஆழமாக விளக்கியிருப்பீர்கள். சக்தியின் ரூபமாக, யட்சியாக, உடலாலும், உள்ளத்தாலும், திறமையாலும் உச்சத்தில் நீங்கள் தூக்கி நிறுத்துவதில் பெருமை எனக்கு.

அதற்காக அப்படி மட்டும் தான் எழுதுகிறீர்கள் என்றில்லை. பெண்ணின் மனத்தை இத்துனை ஆழமாக தோண்டிப்பார்க்க முடியுமா என பல இடங்களில் வியந்திருக்கிறேன். எப்படி உங்களுக்கு சாத்தியம் என்றெல்லாம் கூட நினைத்தடுண்டு. அத்துனை உணர்வு பூர்வமாக, சமமாக, சில சமயம் ஒரு படி மேலே போய் அவர்களைக் காணிக்கிறீர்கள். அது தவிரவும் அவர்கள் ஆண் சமூகத்தால் படும் அவஸ்தையையும், அவர்களைப் புரிந்து கொள்ளாதது பற்றியும், அவர்கள் நிச வாழ்வில் பெண்களைப் பற்றிய கேவலமான மதிப்பீடு பற்றியும், இன்ன பிற வக்கிற எண்ணங்களையும் எழுதாமல் இருந்ததில்லை. அப்டியான தருணங்களை யாவும் கோர்த்துக் கொண்டே வருகிறேன் ஜெ. அவற்றையெல்லாம் தொகுத்து “ஜெயமோகனின் எழுத்துகளில் பெண்” என்று எழுதுமளவுக்கு கொட்டிவைத்திருக்கிறீர்கள்.

ஏனோ பெண் என்பதால் நானே மிகைப்படுத்திக் கொள்கிறேனா? தெரியவில்லை ஜெ. ஆனால் பெண் பற்றிய சித்தரிப்புகள், பெண்னின் மனதில் ஆண், ஆணின் மனதில் பெண், சமூகத்தில் பெண் இவையாவும் எழுத்துக்களில் இன்றியமையாதது. உங்கள் எழுத்துக்களில் அவற்றை மிகவும் நேசிக்கிறேன். என்னை நானே சில சமயம் கொற்றவையாக, யஷியாக, சக்தியாக உணர்ந்து கொண்டதுண்டு. எழுத எழுத பெண் என்ற ஒற்றை வரிக்குள் தொலைந்துவிட்டாற் போலுணர்வு. இருந்தும், நாடகக் கலையில் நடிப்பின் உச்சமென சொல்லவரும் ஓர் கதையில் பெண் கதாப்பாத்திரத்த அளித்திருப்பது திருப்தியளிக்கிறது.

வில்லிக்கு பெண் சரிவரது என்றெண்ணி அங்கே ஆணை நடிக்க வைப்பார்களோ என்று பயந்த மாத்திரத்தில் ஸ்ரீதெவியே அது நடித்தது எனக்கு ஆறுதல் தந்தது. நீங்கள் சொன்ன சில காட்சிகளிலேயே எனக்கு ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. ஆனந்தன் செயித்துவிட்டான் என்று அவன் அப்பா நம்பியதாக சொன்னபோது எனக்கு ஸ்ரீதேவியின் நினைப்பு வந்து மேலும் கண்ணீர் கொட்டிவிட்டது. கதையின் உச்சமாக லாரன்ஸ் காலில் விழுகையில் ஓர் ஏக்கப் பெருமூச்சோடு இன்னும் இரண்டு துளிக் கண்ணீர் நிறைவாக வந்து மடிக் கணிணியில் கொட்டியது. அவளை காமக் கண்ணோடு பெரும்பாலான ஆண்கள் நோக்கும் கண்ணோட்டத்தில் கண்ட லாரன்ஸே கண்ணீர் சொரிந்து காலில் விழவைத்தது அவளின் கலை.

இது நாள் வரை கலையின் உச்சத்தை தொட்டவர்கள்(நடிகர்களாக) நாம் சொல்வது சிவாஜி, கமல், எம்.ஆர். இராதா போன்றோரைத் தான். அரிதாக நடிகைகள் (சாவித்ரி). இன்னும் நடிகர்களையே புகழ்ந்து கொண்டிருக்கும் நாடகக் கலையில் ஓர் பெண்ணை நடு நாயகமாக்கி நடிப்பின் உச்சத்தை அவளிடம் காணித்தமைக்கு நன்றி. அன்னையாக, காதலியாக, வில்லியாக ஒரு பெண்ணுக்குள் அத்தனையும் புதைந்து தான் கிடக்கிறது. ஒரு பெண் தன்னை பிறர் என்னவாக பார்க்க வேண்டுமென நினைப்பதை அவளே அரங்கேற்ற முடியும். பேச்சளவில், உடலளவில். லாரன்ஸ் நடிக்கும் முன் தயங்கியதற்கான காரணம் புரிந்தது. ஆனால் கதாப்பாத்திரமாகவே மாறிவிட்ட ஓர் கலை தெய்வத்தின் முன் வேறெதுவுமின்றி அந்த கதாப்பாத்திரத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது என்பதே ஸ்ரீதேவியின் நடிப்பின் உச்சத்தை புலப்படுத்தியது.

இன்னும் நிறைய சொல்ல இருந்தாலும் ”தேவி” கதை அது மட்டுமல்ல. அந்த மகா நடிகையின் நடிப்பைத் தாண்டி, நாடகக் கலை பற்றியது. நாடகம் யாருக்காக போடுகிறோம் அது சார்ந்த மக்களின் மனங்களுக்கேற்றாற்போல அனந்தன் பெரியவர் சொல் கேட்டு மாற்றிக் கொண்டது என்னவோ போலிருந்தாலும், அது தான் நிதர்சணமான உண்மை. எதற்காக நாடகம் போடுகிறோம்? யாருக்காக? என்ற கேள்விகளைக் கேட்டாலே மாற்றத்திற்கு தயாராவோம். எந்தத் துறையிலும் புதுமையைத் தாண்டி பழமையின் ஆணிவேரையும் மறக்கக்கூடாது என்று காணித்திருந்தது அருமை. அது எனக்கு ஒரு பாடமாக அமைந்தது.

பள்ளியில் பல நாடகங்கள் நடித்திருக்கிறேன். கல்லூரியில் நானே பல விழிப்புணர்வு நாடகமும் போட்டிருக்கிறேன். கைத்தட்டலகளில் மெய்மறந்து அலைந்திருக்கிறேன். நானென்ற அகங்காரமிருந்தது என்னுள். இன்று அந்தக் காலவெளியைத் தவிர, அது சார்ந்த மக்களைத் தவிற எங்கும் அந்த சுவடுகள் இல்லை. நினைவுகளைத் தவிர வேறெங்கும் அதன் சுவடுகள் இல்லை. அனைத்தும் மறைந்துவிட்டார் போல ஓர் உணர்வு. அந்த நினைவடுக்கினின்று மீண்டும் அதைத் தட்டியெழுப்பியது இந்தக் கதை. நாடகம் நடக்குமா என்பது போன்ற கிளைமாக்ஸ் காட்சி போல் வந்து சிறப்பாக முடிந்து சுபம் போட்டு திருப்தியாய் வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பதான கதை. பாகங்களாக வகுத்து (உங்கள் நாவல் பாணியைப் போல) ஒன்றுக்கும் இன்னொன்றுக்குமான இடைவெளிகளை இட்டு நிறப்ப வாசகர்களுக்கு வாய்ப்பளித்தமைக்கும் நன்றி. அருமை ஜெ. என்றும்

அன்புடன் இரம்யா.

முந்தைய கட்டுரைநிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேனீ [சிறுகதை]