‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20

பகுதி நான்கு : அலைமீள்கை – 3

தந்தையே, நான் திரும்பி துவாரகைக்கு வந்தபோது முற்றிலும் மாறிவிட்டிருந்தேன். ஆனால் அதை நான் மட்டுமே அறிந்திருந்தேன். பெருவாயிலுக்குள் நுழைகையிலேயே நகரின் உளநிலை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன். ஒருநாள் மட்டுமே ஆகியிருந்தது. சொல்லப்போனால் ஓர் இரவு. அதற்குள் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்துவிட்டிருந்தது. ஏனென்றால் அனைவரும் அரண்மனையையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர். அத்தனை கூர்ந்து நோக்குபவர்களிடமிருந்து எவரும் எதையும் மறைத்துவிடமுடியாது.

ஏன் அந்த கூர்நோக்கு? ஏனென்றால் அவர்கள் எதிர்நோக்கியிருக்க வேறேதும் எஞ்சியிருக்கவில்லை. மானுடவாழ்க்கை என்பது எழும் நல்லநாள் என்னும் கனவிலேயே சென்றுகொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேசி, புனைந்து வாழ்கிறார்கள். மகிழ்ந்தும் ஐயுற்றும் நாளெண்ணியும் பதற்றம்கொண்டும் அன்றாடத்தை கடந்துசெல்கிறார்கள். நாளை பறிக்கப்பட்ட மனிதர்கள் தீயூழ் கொண்டவர்கள். அவர்கள் உடனடியாக தங்கள் இன்றை சிதைக்கத் தொடங்குகிறார்கள். அதிலிருந்து துண்டுகளை எடுத்து தங்கள் நாளைகளை கற்பனை செய்வார்கள்.

என் மாற்றத்தை எவரும் அறியலாகாது என்று நான் எனக்கே ஆணையிட்டுக்கொண்டேன். ஆகவே என் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தேன். துயிலெழுந்தபோது அரண்மனையிலிருந்து அடுத்த செய்தி வந்திருந்தது. மத்ரநாட்டு படைத்தலைவர்களும் குடித்தலைவர்களும் யாதவர்களின் படைத்தலைவர்களுடனும் குடித்தலைவர்களுடனும் இணைந்து கொண்டாடும் ஒரு பெருவிருந்து அரண்மனையில் ஒருக்கப்பட்டிருந்தது. வியப்பாக இருந்தது, அது ஓர் அறிவிப்பு. போருக்கான அறைகூவலென்றே சொல்லலாம். அத்தனை விரைவாக அதைச் செய்ய மூத்தவர் ஃபானு துணிவார் என நான் நினைத்திருக்கவில்லை.

ஆனால் மூத்தவர் சுஃபானு என்ன எண்ணியிருக்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வெல்லும்தரப்பு என்னும் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார். அது எஞ்சியிருக்கும் ஆறு அன்னையரின் மைந்தர்களில் சிலரையேனும் ஈர்க்கும் என்று கருதுகிறார். நான் உடனே எண்ணியது அவருடைய இலக்கு காளிந்தியின் மைந்தர்களாகவே இருக்கும் என்றுதான். அதன்பின் தோன்றியது அவருடைய உடனடி இலக்கு யாதவக் குடித்தலைவர்களிடம் அவர் குடிமுதன்மை பெற்று முடிசூடுபவராகிவிட்டார் என்பதை அறிவிப்பதே என்று தோன்றியது. மத்ரர்களின் ஆதரவு அவருக்கே என்றால் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் அவரை ஏற்றேயாகவேண்டும். எண்ணியபோது அது சரியே என்று தோன்றியது. எனில் ஓர் ஐயமும் என்னை குடைந்துகொண்டிருந்தது.

அந்தப் பெருவிருந்து எதன் பொருட்டு தொடங்குகிறது என்று இளையோராகிய எங்களுக்கு சொல்லப்படவில்லை. மூத்தவரிடமிருந்து அன்று மாலை ஓர் உண்டாட்டு நிகழ்வு இருக்கிறது என்று மட்டுமே செய்தி வந்தது. அதன் பின்னரே அது குடியுண்டாட்டு என்ற செய்தி வந்தது. அப்போது நான் என் இளையவன் அதிஃபானுவுடன் களிப்படகில் கடலில் சென்று அலையாடி கரை வந்திருந்தேன். எனக்காகக் காத்திருந்த ஏவலன் அச்செய்தியை சொன்னான். “இன்று மாலையா?” என்று நான் கேட்டேன். “ஆம்” என்றான். “மாலைக்கு இன்னும் பொழுது அதிகம் இல்லையே?” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை.

அதிஃபானு “ஏதேனும் மந்தணச் செய்திகள் உண்டா?” என்றான். “இல்லை” என்று அவன் சொன்னான். “மூத்தவர் வெறுமனே கொண்டாட விழைகிறார் போலும்” என்றான் அதிஃபானு. ஏனெனில் அதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. பொதுஉண்டாட்டு நிகழ்வதற்கு துவாரகையில் முதன்மையான எந்த அடிப்படையும் தேவையில்லை என்றாகிவிட்டிருந்தது. பொதுஉண்டாட்டு என்பது மிகமிக அரசியல்முதன்மை கொண்ட செயலாக ஒருகாலத்தில் இருந்தது. அத்தனை குடித்தலைவர்களும் வருவார்கள். அவர்கள் அனைவரையும் அவர்களின் குடிமுதன்மை நோக்கி அவையமரச் செய்வதென்பது சிலந்தி வலையைப் பிரித்து நூலென நீட்டுவதுபோல என்பார்கள்.

என்னதான் செய்தாலும் ஏதேனும் முரண்பாடு எழும். பூசல் நிகழும். உளக்கசப்பு எழும். ஒவ்வொரு பொதுஉண்டாட்டும் கசப்புகளை உருவாக்குவது என்பதனால், முந்தைய உண்டாட்டின் கசப்புகள் எஞ்சியிருக்கையில் அடுத்த உண்டாட்டை நிகழ்த்தலாகாது என்பதனால் ஆண்டுக்கு ஒருமுறைகூட குடிசூழ் உண்டாட்டுகள் நிகழ்வது யாதவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் நீங்கள் இருந்தபோது துவாரகையில் குடியுண்டாட்டுகள் இயல்பாக அடிக்கடி நிகழ்ந்தன. அன்று அந்நகரில் இரவும் களியாட்டு நிறைந்திருந்தது. அதன் பகுதியாக உண்டாட்டுகள் எங்கும் நடந்தன. துவாரகையில் என்றும் திருவிழா என்று சூதர்கள் பாடிய காலம் அது.

அவற்றுக்கும் இப்போது நடைபெறுவனவற்றுக்கும் பெரிய வேறுபாடு இருந்தது. அன்றெல்லாம் உண்டாட்டென்பது குலம் என்றும், குடி என்றும், தொழில் என்றும், வாழ்விடம் என்றும் பிரிந்து கிடக்கும் மக்கள் ஒருவரோடொருவர் கலந்து உரையாடி புரிந்து ஒன்றாவதற்கான வழிமுறை. நீங்கள் குடியுண்டாட்டில் எல்லாக் குடியும் பங்குகொள்ளச் செய்தீர்கள். யவனரும் பீதரும் காப்பிரிகளும் சோனகர்களும் பங்குகொள்ளும் பெருவிழவுகள் அவை. என் இளமையிலேயே அரண்மனையிலும் களியாட்டரங்குகளிலும் ஒருமுறை விழி சுழற்றிப் பார்த்தாலே துவாரகையில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களையும் பார்க்க முடியும்.

இன்று அவ்வாறல்ல. இன்று ஒவ்வொருவரும் தங்களை தாங்களே தொகுத்துக்கொள்ள, அதனூடாக பிறரிடமிருந்து பிரித்துக்கொள்ள உண்டாட்டுகளை அமைக்கிறார்கள். இன்று நிகழும் உண்டாட்டுகளில் மிகமிக நம்பிக்கையான உள்வட்டத்தினர் மட்டுமே பங்கு கொள்கிறார்கள். யாதவர்களின் உண்டாட்டுகளில் பிறர் ஒருவர் கூட இருப்பதில்லை. யாதவர்களுக்குள்ளேயே விருஷ்ணிகளும் போஜர்களும் அந்தகர்களும் தனித்தனியான உண்டாட்டுகளை ஒருங்கிணைக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே குடித்தொடர்புடையவர்கள் வேறு உண்டாட்டுகளை அமைக்கிறார்கள்.

உண்டாட்டு என்பது முன்பு வெற்றிக்களியாட்டு, தெய்வவழிபாடு, மூதாதை வணக்கம் என்னும் அடிப்படைகள் கொண்டதாக இருந்தது. இன்று அங்கே மிக எளிய ஒன்றை அறிவித்துக்கொண்டதாக இருக்கிறது. மைந்தர் ஒருவரின் பிறந்தநாள், தொலைவிலிருந்து ஒருவர் பயணம் முடித்து வந்த நாள், பயணம் தொடங்கும் நாள், ஏதேனும் சிறுதெய்வம் ஒன்றுக்கு பூசனை என்று. ஆனால் நோக்கம் அதுவாக இருக்காது. அது அனைவருக்கும் தெரியும். உண்டாட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே அங்கு அனைவரும் ஏன் கூடியிருக்கிறார்கள் என்பதை உணரமுடியும். அவ்வாறு ஏதோ புதிய செய்தி வந்துள்ளதென்று நான் புரிந்துகொண்டேன்.

அன்று சலிப்புற்றிருந்தேன். முன்பெல்லாம் பதற்றமும் ஆவலும் கொண்டிருப்பேன். அங்கு செல்வதற்கு முன்னரே அது என்ன செய்தி என்று அறிந்துகொள்ள முயல்வேன். உடன்பிறந்தாரிடம் அதைப்பற்றி உசாவுவேன். அவர்களும் அதே ஆர்வம் கொண்டிருப்பதனால் என்னிடம் தங்களுக்குத் தெரிந்தவற்றை புனைந்துரைப்பார்கள். அவர்கள் எண்ணுவது அச்செய்தியின் நுனி பற்றி நான் எனக்குத் தெரிந்த எதையேனும் சொல்வேன் என்று. அவ்வாறு சொல்லாதொழிந்தால் எனக்கு ஒன்றுமே தெரியாதாகும் என்பதனால் நானும் எதையேனும் புனைந்துரைப்பேன். அவ்வண்ணம் புனைந்து புனைந்து மிகப் பெரிதாக ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு சென்று அமர்ந்திருப்போம்.

முதலில் உண்டாட்டுச் சடங்குகள் நிகழும். எளிய முகமன்கள் உரைக்கப்படும். அவைமுறைமைப் பேச்சுகள் எழும். மெல்ல மெல்ல பேச்சு வளர்ந்து ஓர் இலக்கை அடைந்து சொல்லவிந்து நின்றிருக்கும். அந்த அமைதியில் அங்கு அச்செய்தியை சொல்லக் கடமைப்பட்டவர் சூழநோக்கி தன்னை ஒருக்கிக்கொண்டு மெல்ல கூறுவார். அது கூறப்படும்போதுகூட கூறப்படும் முறையால் அது சிறிதாக இருக்கிறது என்றும், மேலும் பெரிதாக ஒன்று எழுந்து வரும் என்றும் எதிர்பார்த்து காத்திருப்போம். ஆனால் அது நிகழ்வதில்லை. மெல்ல மெல்ல அச்செய்தி அவ்வளவுதான் என்று புரியும். அப்போது அவையில் ஏற்படும் தளர்வை உடலசைவாக விழிகளாலேயே காணமுடியும்.

அதற்காகவா என்று ஏமாற்றம் எழுந்தாலும் அதன் பொருட்டு அங்கு கூடிவிட்டோம் என்பதனாலேயே அதை பேசி பெருக்கிக்கொள்ளவேண்டிய நிலையை அடைவோம். ஒவ்வொருவரும் அதை விரித்தெடுப்போம். இல்லாத நுட்பங்களை கண்டடைவோம். சூழ்ச்சிகளை முன் வைப்போம், தீர்வுகளை சென்றடைவோம். பேசிப் பேசி உடன் மதுவும் அருந்தி தளர்ந்து நாகுழைந்து எவர் எங்கு சென்றால் எங்களுக்கென்ன என்ற நிலையை ஒவ்வொருவரும் சென்று அடைவோம். மது விசைகொண்ட நீர்ப்பெருக்கென ஒவ்வொருவரையும் அள்ளிச் சுழற்றி கொண்டுசென்று அவரவருக்கான மணல் திட்டுகளில் அமரவைக்கும். அங்கே அமர்ந்து புலம்பிக்கொண்டிருப்போம்.

நெடுநாள் இதுவே நிகழ்ந்தது. மறுநாள் அவ்வுண்டாட்டு எதன்பொருட்டு என்று கேட்டால் எவராலும் மறுமொழி சொல்ல இயலாது. எனினும் உண்டாட்டுகள் எதற்கு நிகழ்கின்றன என்றால் அதனூடாக எங்கள் அனைவருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டுவிட்டதென்றும், அச்செய்தியினூடாக பொதுக்கருத்து எட்டப்பட்டுவிட்டதென்றும் நாங்களே நம்புவதற்காகத்தான். உண்மையில் அவ்வுண்டாட்டின்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தோன்றும். ஆனால் அம்முடிவுகள் முன்னரே சுஃபானு முதலிய சூழ்வலரால் எடுக்கப்பட்டுவிட்டிருக்கும். அம்முடிவுகள் அங்கு அறிவிக்கப்படவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அங்கிருப்பவரில் எவர் எங்கே எதை சொல்வார்கள் என்று நம்ப முடியாது. ஆகவே பின்னர் அம்முடிவு அந்த உண்டாட்டுச் சந்திப்பில்தான் எடுக்கப்பட்டது என்று சொல்லும்போது எவராலும் மறுக்க முடியாது. எடுக்கப்பட்ட முடிவுடன் அனைவரும் ஒத்து சென்று சேர்ந்தே ஆகவேண்டும். ஏனெனில் அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு.

அவ்வாறாக உண்டாட்டுகள் விந்தையான இளிவரல் நாடகமென ஆகிவிட்டிருந்தன. ஆயினும் அவை தேவையாயின. அதற்கும் அப்பால் அவற்றை ஒருங்கிணைக்கும் தலைவர்களுக்கு எவர் எவர் உடன் நிற்கிறார்கள் என்று அறிவதற்கான வாய்ப்பு. உடன் நிற்கிறவர்கள் உளத்திரிபு கொண்டிருக்கிறார்களா என்பதற்கான உசாவல். தங்களுடன் அத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளும் முனைப்பு. சூழ்ச்சிகள் நிறைந்த சூழலில் ஆள்வோருக்கு அவ்வப்போது ஓர் அலையென தனிமை வந்து தாக்குகிறது போலும். கைவிடப்பட்டிருக்கிறோமோ என்னும் ஐயம் எழுகிறது. அதற்கு மறுமொழி என நாங்கள் இணைந்து பின்குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

உண்டாட்டின்போது ஏதோ ஒரு கணத்தில் தன்னைச் சூழ்ந்திருக்கும் இளையோரையும் உற்றாரையும் கண்டு அவர்கள் நிறைவுறுகிறார்கள். ஆம், இவர்கள் என்னவர் என எண்ணுகிறார்கள். தாங்களே கைபெருகி கண்பெருகி நின்றிருப்பதுபோல் கருதிக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு நிகழும் ஒரு பொய்யான பயிற்சி அது. போருக்குப் பிந்தைய உண்டாட்டுகளைப்பற்றி கேட்டிருக்கிறேன். போர்களே பலநூறு உண்டாட்டுகளின் வழியாகத்தான் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று தோன்றுகிறது. போருக்குப் பிந்தைய உண்டாட்டு அதன் தொடர்ச்சி மட்டுமே.

 

அரண்மனையின் யாதவர்களுக்குரிய பகுதியில் அமைந்த மையப்பெருங்கூடத்தில் அந்த உண்டாட்டு நிகழ்ந்தது. தந்தையே, அங்கு தங்கள் காலகட்டத்தில் பல பெருவிருந்துகள் ஒருக்கப்பட்டிருந்தன. பல அயல்நாட்டு அரசர்கள் இங்கு வந்து விருந்தோம்பலை பெற்றிருக்கிறார்கள். என் அகவைநிறைவுக்காக அளிக்கப்பட்ட உண்டாட்டில் மையத்தில் பொன்னாலான பீடத்தில் நான் அமர்த்தப்பட்டதும், என் இரு பக்கமும் தாங்களும் மூத்த தந்தையும் அமர்ந்திருந்ததும், அன்று வந்திருந்த அரசர்கள் ஒவ்வொருவராக வந்து எனக்கு பெருமைமிக்க பரிசுகளை தந்ததும் என் நினைவில் இன்றும் நீடிக்கின்றன. அந்நினைவை சற்றேனும் தொடாமல் என்னால் அந்த அறைக்குள் நுழைய முடிந்ததே இல்லை.

நான் உள்ளே செல்லும்போது ஏற்கெனவே என் உடன்பிறந்தாரில் பலர் அங்கு வந்துவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் குழம்பிய, கவலையுற்ற உளநிலையிலேயே இருந்தனர். என்னைப் போலவே அவர்களும் சலிப்பு அடைந்திருந்தனர். ஆனால் முற்றிலும் விட்டொழிக்க முடியாத சிறு ஆர்வத்தையும் தக்க வைத்துக்கொண்டிருந்தனர். என்னை நோக்கி எழுந்து வந்த அதிஃபானு “இந்த விருந்தில் யாதவ குலங்கள் அனைத்தும் பங்கு பெறுகின்றன என்றார்கள்” என்றான். நான் “ஆம், அவ்வாறுதான் அறிந்திருந்தேன்” என்றேன். “அன்னை லக்ஷ்மணையின் மைந்தர்கள் நம்முடன் சேர்ந்தது ஒரு நல்ல அறிகுறி. அவர்களை இங்கே வென்றெடுத்து கொண்டுவந்தவர் சுஃபானு. இன்று அவருக்கு அவையில் மூத்தவர் ஒரு பரிசை அளிக்கக்கூடும்” என்றான்.

“நன்று. நாம் பெருகுகிறோம்” என்று நான் சொன்னேன். ஊண்அறை ஒருங்கிக்கொண்டிருப்பதை அங்கு கேட்டுக்கொண்டிருந்த கலங்களின் ஓசையிலிருந்து புரிந்துகொண்டேன். நான் அதை செவிகூர்வதைக் கண்ட ஃபானுமான் “இங்கு நிகழும் சொல்லாடலை திசைதிருப்புவது அங்கு கேட்கும் ஒலிகளே. உண்மையில் அங்கு சென்று உண்டு முடித்து அங்கு அமர்ந்து பேசத்தொடங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும்” என்றான். “ஆம், சொல்லில் ஆர்வம் உடையவர்கள் மட்டுமே செவி கொடுப்பார்கள். எஞ்சியோர் கள்ளும் ஊனும் உண்டு மயங்கிவிட்டிருப்பார்கள்” என்றேன். ஒவ்வொருவரும் பொய்யாக சிரித்துக்கொண்டோம். இளிவரலினூடாக, ஏளனத்தினூடாக ஒவ்வொருவரும் அணுக்கத்தை நடித்துக்கொண்டோம்.

உண்மையில் உடன்பிறந்தாரிடம் ஒருவரோடொருவர் அணுக்கமிருந்ததா? இல்லை என்றே என் அகம் சொல்கிறது. ஏனெனில் அடிப்படையில் ஓர் ஐயம் தோன்றிவிட்டிருந்தது. மூத்தவர் எங்கள் அனைவரையுமே ஒற்று அறிகிறார் என்று எங்களுக்கு தெரியும். எங்களை எவரேனும் ஒற்றறிந்தால் நாமும் பிறரை ஒற்றறியத் தொடங்கிவிடுகிறோம். ஒற்றறிதல் நமது உள்ளத்தை கூர் கொள்ளச்செய்கிறது. நமது அனைத்து ஆற்றல்களும் அங்கு திரள்கின்றன. நாம் மகிழ்வு கொள்ளும் தருணம் என்பது நமது ஆற்றல்கள் திரளும்போதுதான். ஆகவே உளவறியப்படுபவரும் உளவு செய்பவரும் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சி மிகுந்த தருணங்களை அடைகிறார்கள். எனவே அதிலிருந்து அவர்களால் விடுதலை கொள்ள இயல்வதில்லை.

இடைவிடாது செய்யப்படும் ஒன்று நம்மை முற்றாக மாற்றிவிடுகிறது. உளவறியத் தொடங்கும் நாம் மிகச் சில நாட்களிலேயே ஒற்றர்களாக மாறிவிடுகிறோம். ஒற்றர்கள் எவரையும் நம்புவதில்லை. ஒற்றர்கள் முற்றிலும் தனித்தவர்கள். தந்தையே, யாதவ மைந்தர்களாகிய நாங்கள் அனைவருமே முற்றிலும் தனித்தவர்களாக ஆகிவிட்டிருக்கிறோம். எப்போதும் என்னுடன் இருந்துகொண்டிருக்கும் இளவலாகிய அதிஃபானுவைக்கூட நான் மாறாத ஐயத்துடனேயே அணுகினேன். அவன் என்னைக் கடந்துசென்று வேறெவருடனாவது உளத்தொடர்புடன் இருக்கிறானா என்பதை எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கிறேன்.

எங்களை அவைக்குள் கொண்டுசென்று ஒவ்வொருவராக அமரவைத்தனர் சிற்றமைச்சர்கள். குடித்தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய இடம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும் அதில் ஒவ்வொருவரையும் எவரேனும் கூட்டிச்சென்று அமர்த்த வேண்டியிருந்தது. அனைவரும் அமர்ந்து முடித்து ஆழ்ந்த அமைதி நிலவியது. ஒருவரை ஒருவர் ஐயத்துடன் பார்த்துக்கொண்டனர். தங்கள் இடம் மாறிவிடவில்லையே என்று. தங்களைவிட எவரும் அவைமுதன்மையும் அரசரின் அணுக்கமும் பெற்றுவிடவில்லையே என்று. கண்கள் ஒன்றையொன்று சந்தித்தபோது திகைத்தன. பொய்முறுவல் காட்டின. யாதவர்கள் இன்னும்கூட அவையில் புழங்கக் கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிந்தது.

வெள்ளிக்கோலுடன் நிமித்திகன் மேடைக்கு வந்து துவாரகையின் அரசர் ஃபானு அவை நுழைய இருப்பதாக அறிவித்தான். ஒவ்வொரு முறை அந்த அறிவிப்பு எழுகையிலும் அவையில் ஒரு சிறு விழிப்பரிமாற்றம் நிகழ்வதை நான் பார்த்திருக்கிறேன். எவர் முகத்திலும் இளிவரல் தோன்றுவதில்லை. எனினும் விழிகளில் விந்தையானதோர் மின்னொளி தோன்றி மறையும். மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது அந்த அறிவிப்பு. தொல்புகழ் கொண்ட யாதவ குலத்தில் சூரசேனரின் கொடிவழியில் பிறந்த மைந்தராகிய ஃபானு என்பது முதல் வரி. அந்தகக் குடியில் பிறந்த அன்னை சத்யபாமையின் மைந்தரென எழுந்தவர் என்பது பிறிதொரு வரி. பாரதவர்ஷத்தின் கலைநிலமாகிய துவாரகையை முற்றிலும் வென்று கோல்கொண்டு அமர்ந்த பேரரசர் என்பது மூன்றாவது வரி.

மூன்று வரிகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. விருஷ்ணி குலத்தவன் என்றும் அந்தக குலத்தவன் என்றும் தன்னை அறிவித்துக்கொள்ளவேண்டிய நிலை எப்போதும் இருந்தது அவருக்கு. முன்பு ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது மூத்தவர் பிரஃபானு சிரித்தபடி “போஜர் குலத்தில் ஒரு பெண்ணை மணந்து போஜர் குலத்து அரசியின் தலைவருமாகிய என்று அறிவித்தால் என்ன?” என்று சொன்னார். ஆனால் மெய்யாகவே சில நாட்களுக்குப் பின்னால் அது நடந்தது. போஜர் குலத்து சுதீரரின் மகள் பௌமையை ஃபானு மணந்துகொண்டார். சுதீரையின் கொழுநர் என்று அவையில் அறிவிப்பது அத்தனை முறையானதல்ல என்பதனால் ஒவ்வொரு முறையும் அறிவிப்புகள் முடிந்த பின்னர் சுதீரர் எழுந்து கோல் தூக்கி மூத்தவரை வாழ்த்தும் மரபொன்று உருவாக்கப்பட்டது.

துவாரகையின் தலைவர் என்று அவரை அறிவிக்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்த இளிவரலுக்கான அடிப்படை ஒன்றே. கசந்து சிரித்தும் வஞ்சம் கூர்கொண்டும் நாங்கள் பல முறை சொல்லிக்கொண்டது அது. ஒவ்வொருவரும் துவாரகையின் அரசர், ஆகவே எவரும் துவாரகையின் அரசர்களாக திகழ முடியாது. எண்பதின்மரில் ஒன்று குறைவோர் எவரேனும் இருக்கக்கூடுமென நான் எண்ணவில்லை. மூப்பு இளமை, வீரம், திறன் என பகுப்புகள் எல்லாம் அவைப்பாவனைகள். அனைத்திற்கும் அப்பால் அனைவரும் இணையானவர்களே. தந்தையே, அங்கிருந்த அனைவருமே தந்தையைக் கொன்று தானென்று எழுந்தவர்களே. அங்கிருந்த அனைவர் விழிகளையும் நோக்கிக்கொண்டிருந்தேன். ஒன்றுபோலிருந்தன அவை. அனைத்து முகங்களும் ஒன்றுபோலத் தோன்றச்செய்தன விழிகள்.

நான் என் உடன்பிறந்தார் இருவருக்கு அருகே அமர்ந்திருந்தேன். அவர்கள் இருவரும் அங்கு நிகழவிருக்கும் அவை கூடலில் எந்த ஆர்வமும் இன்றி தங்களுக்குள் எதையோ மெல்ல பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். கொம்பொலி எழுந்ததும் ஒவ்வொருவரும் எழுந்து முறைப்படி வணங்கினோம். மூத்தவர் ஃபானுவும் மத்ரநாட்டு மூத்தவர் பிரகோஷனும் இணையாக அவைநுழைந்தனர். ஃபானு அவருக்கு இடப்பட்ட அரியணைபோன்ற பீடத்தில் அமர்ந்தார். சுஃபானு அவருக்குப் பின்னால் நடந்து வந்து இணையான பீடத்தில் அமர்ந்தார். அவையிலிருந்து எழுந்த அனைத்து வணக்கங்களையும் தானே பெற்றுக்கொள்வதுபோல் முகமும் தலையசைவுகளும் சுஃபானுவில் வெளிப்பட்டன. பிரகோஷன் இன்னொரு இணையான பீடத்தில் அமர்ந்தார். அவர் அருகே ஓஜஸ் அமர்ந்தான்.

நிமித்திகன் அவை தொடங்கவிருப்பதை அறிவித்து கோல் தாழ்த்தி வணங்கி அகன்றான். தன் கையிலிருந்த வெண் செங்கோலை ஏவலனிடம் அளித்துவிட்டு கைகளை மடித்து விரல்களை நெரித்து எளிதாக்கிக்கொண்ட பின் ஃபானு அவையினரிடம் “நன்று. மீண்டும் உண்ணப்போகிறோம்” என்றார். அந்த அவையை எளிதாக்கும்பொருட்டு அந்த வரியை சொன்னார். அது ஒரு முதிரா நகைச்சொல். ஆயினும் அவை நகைத்தது. “இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதை சுஃபானு அறிவிப்பார்” என்றார் ஃபானு. சுஃபானு தலைவணங்கிவிட்டு “அனைவரும் ஓரளவு அறிந்திருப்பீர்கள். எனினும் இந்த அவையில் முறையாக அறிவித்தாகவேண்டும். ஏனென்றால் யாதவ குடியின் தலைவர்கள் அனைவரும் இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே நாம் முடிவெடுத்த பின்னரே அதை மதுராவுக்கும் மதுவனத்திற்கும் முறைப்படி தெரிவிக்கவேண்டும்” என்றார்.

அதன்பின் அவர் லக்ஷ்மணையின் மைந்தர் வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டதை அறிவித்தார். அவர்கள் எப்படியெல்லாம் எங்கெல்லாம் சிறுமைப்படுத்தப்பட்டனர் என்றும் எப்படி அவர்கள் முறையான இடத்திற்கு அறுதியில் வந்துசேர்ந்துள்ளனர் என்றும் சொன்னார். அவர்களை வாழ்த்தி குரலெழுப்பும்படி அவர் கோர யாதவ குடித்தலைவர்கள் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினார்கள். பிரகோஷன் தலைவணங்கி அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். யாதவ குடித்தலைவர்களில் மூத்தவரான கன்மாஷர் எழுந்து வந்து தன் வளைதடியை பிரகோஷனிடம் கொடுத்தார். அந்த அவை வணக்கத்தை ஏற்று பிரகோஷன் அதை வாங்கி தலைமேல் தூக்கினார். யாதவர்களின் குடித்தலைவர்களில் ஒருவராக பிரகோஷன் மாறிவிட்டதான அறிவிப்பு அது. யாதவர்கள் களிவெறிக்கூச்சல் எழுப்பினர்.

அதன்பின் ஃபானு மத்ரர்கள் பேசும்படி கோரினார். பிரகோஷன் யாதவர்களிடம் அவர் மீண்டுவந்ததே தெய்வங்களின் ஆணை என்றும், மூதாதையரை மகிழ்விப்பது என்றும் சொன்னார். மத்ரர்களும் பிறரும் மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். ஒவ்வொன்றும் முறையாக நிகழ்ந்துகொண்டிருப்பதை மூத்தவர் ஃபானுவின் முகக்குறியில் கண்டேன். அவர் அஞ்சிக்கொண்டுதான் இருந்திருப்பார். ஏனென்றால் மங்கல நிகழ்வுகளை சிதைப்பதில் யாதவர்களுக்கென்றே ஒரு பயிற்சி உண்டு. அவர்கள் அவைமுதன்மை கொள்வதே அவ்வாறுதான். நான் முகங்களை ஒவ்வொன்றாக நோக்கிக்கொண்டிருந்தேன். எண்ணியிராதபோது ஒன்று தோன்றியது, வேறு எவருமே வேண்டியதில்லை, மூத்தவர் ஃபானுவே அதை செய்யக்கூடும். நான் புன்னகைத்துக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஆடகம், ஆனையில்லா- கடிதங்கள்