‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–11

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 6

சாத்யகி கூறினான். அரசே, நான் பிற அரசியரை அதன்பின் உடனே சந்திக்க விழையவில்லை. அவர்களின் உள்ளங்கள் எப்படி இருக்கும் என்பதை ஒருவாறாக கருதிவிட்டிருந்தேன். அவர்கள் எவரும் தம்மை உங்களுக்கு அயலானவர்கள் என்று எண்ணவில்லை. உங்களை மீறி ஒரு சொல் உரைக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை உங்களுக்கு முதன்மை அணுக்கர்கள் என்று எண்ணுகிறார்கள். உங்கள் கொடையனைத்தும் தங்களுக்குரியது என்று எண்ணுகிறார்கள். நீங்கள் வரவேண்டும் என்று அவர்கள் விழைவது அவ்வாறு வந்தால் பிறிதொருவருக்கு நீங்கள் அருள மாட்டீர்கள் என்ற அறுதியான நம்பிக்கையால்தான்.

மெய்யாகவே அவ்வெண்ணம் அச்சுறுத்தியது. எண்ணிய ஒவ்வொன்றும் கூர்கொண்டது. ஒவ்வொன்றும் பயின்ற வாளென பிறிதொன்றை தடுத்தது. அன்று என் அறைக்கு மீண்டு தலைநிறையும்வரை மதுவருந்தி தன்னிலை இழந்து துயில்கொள்ளவேண்டும் என்றே விரும்பினேன். ஆயினும் அப்பணியை முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தால் ஏவலனிடம் ஜாம்பவதியையும் காளிந்தியையும் சந்திக்கவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினேன். உணவுண்டு ஓய்வெடுக்கும் பொருட்டு என்னுடைய அறைக்குத் திரும்பி அங்கு சோர்ந்து தனித்து அமர்ந்திருந்தேன். ஏவலன் கொண்டுவந்த உணவை சற்றே உண்டேன். மதுவை மிகுதியாக அருந்தினேன். பின்னர் துயின்று உடனே விழித்துக்கொண்டேன்.

மஞ்சத்தில் அமர்ந்து தனித்தலையும் என் எண்ணங்களை நானே நோக்கிக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டு இதை தொடங்கினேன் என்று வியந்துகொண்டேன். அரசியருக்கும் உங்களுக்குமான உறவு ஒருபோதும் என்னால் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் மட்டுமே வாழும் ஓர் உலகில் உங்களை வைத்திருந்திருக்கிறார்கள். அங்கு பிற எவருக்கும் இடம் இருந்திருக்கவில்லை. எனில் அவர்களின் மைந்தர்கள் எவர்? எங்கிருந்து ஊடே அவர்கள் எழுந்தனர்? அம்மைந்தர்களே அவர்களை இன்று ஆட்டிவைக்கிறார்கள், தெய்வங்கள் என, இயற்கைப்பெருவிசைகள் என. அவர்களுடன் ஒத்துச்சென்றாலும் முரண்பட்டு விலகிச்சென்றாலும் இன்று மைந்தர்களாலேயே அவர்களின் அனைத்துச் செயல்களும் இயக்கப்படுகின்றன.

அரசே, நான் இவ்வாறு கூறுகிறேன், பிழையென்று இருந்தால் பொறுத்தருள்க! உங்களுடன் இருக்கையில் அவர்கள் முற்றிலும் நிறைகிறார்கள். அக்கணத்தில் அவர்கள் உணரும் ஒருவரை அவர்கள் உடனே இழக்கிறார்கள். உங்களில் ஒரு பகுதியையே அவர்கள் கொள்ள முடியும். அதை அவர்கள் அறிவதே அவர்களின் துயர். துவாரகையில் அத்தனை இல்லங்களிலும் காதலர் என, கணவர் என, தந்தை என நீங்கள் நிறைந்திருக்கிறீர்கள். அத்தனை பெண்டிரில் ஒருவர் என தங்களை உணர உங்கள் துணைவியரால் இயல்வதில்லை. அவர்கள் விழைவது மேலும் ஒரு யாதவரை, தங்களுக்கேயான ஒருவரை. அவ்வண்ணம் ஒருவரை எப்போதும் உடனமைத்துக் கொண்டிருக்கும் பொருட்டு தங்களுள் திகழும் கனவிலிருந்து உங்கள் உருவொன்றை படைத்துக்கொள்கிறார்கள். அரசே, அவர்களிடமிருக்கும் ஒன்றுதான் அவர்களின் வயிற்றில் மைந்தனாக உருப்பெறுகிறது.

ஒவ்வொன்றும் ஒன்று. உங்கள் எண்பது வடிவங்கள். தயக்கமும் தனிமையும் கொண்ட ஃபானுவும் சீற்றமும் விழைவும் கொண்ட பிரத்யும்னனும் ஆற்றலும் சூழ்ச்சியும் கொண்ட சாம்பனும் நீங்களே. அவர்கள் எண்பதின்மரும் ஒருவரே என்று ஒருகணமும் முற்றிலும் வேறுபட்டோர் என்று பிறிதொரு கணமும் தோன்றுகிறது. அரசே, உங்களில் அவர்கள் காணமுடியாதவைதான் அவர்களினூடாக மைந்தராயிற்றா? அன்றி, காணவிழைந்தவையா? உங்களில் எஞ்சியவையா? மிக அணுக்கமானவருடன் அணுக்கத்தைக் காட்டும்பொருட்டு நாம் அவர்களின் அறியாத் தீமை ஒன்று நமக்குத் தெரியும் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆற்றலற்ற பகுதி ஒன்றை அறிவோம் என்கிறோம். அவையே அம்மைந்தர்களா? எப்படி எழுந்தனர் அம்மைந்தர் உங்கள் குருதியில்?

இவ்வண்ணம் சொல்வேன். ஆம், பிழையென்றும் அறிவேன். பாமையிலிருந்த அச்சம் அம்மைந்தர்களாகப் பிறந்தது. ஷத்ரியர்களின் விழைவு ருக்மிணியின் மைந்தர்களாகியது. ஜாம்பவதியிடம் இருந்து பிறந்தது அசுரர்களின் அடங்காமை. அரசே, ஒருவேளை அவ்வியல்புகளும் உங்களுடையதுதானோ? இவ்வண்ணம் பரவி இப்புவியில் வளர்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் எண்பது மாற்றுருக்கள்தானா இவை? இவ்வுருவில் நின்று நீங்கள் ஆடியவை போதா என்று கண்டு அவ்வண்ணம் எண்பதின்மர் என எழுந்தீர்களா? தந்தையிடம் எஞ்சியதும் விஞ்சியதும் மைந்தர்களாகின்றன என்றொரு சொல் உண்டு. அரசே, உங்களிடம் விஞ்சுவதொன்றில்லை. எஞ்சுவதே இம்மைந்தர்களா?

சாம்பனின் அரண்மனையில் இருந்து அணுக்கஏவலன் என்னை வந்து சந்தித்து அரசி ஜாம்பவதி பொழுது அருளியிருப்பதாக சொன்னான். இம்முறை முறைமையை கைக்கொள்வோம் என்று எண்ணி நான் அவையுடையுடன் அரசியை பார்க்கும்பொருட்டு சென்றேன். ஜாம்பவதி நகரின் மேற்கு எல்லையில் வளைந்தோடும் சிறிய ஓடையின் கரையில் அமைக்கப்பட்டிருந்த புதிய மாளிகையில் தங்கியிருந்தார். அங்குதான் சாம்பனின் அவையும் இருந்தது. அவர்களைச் சுற்றி வலுவான அரண் அமைக்கப்பட்டிருந்தது. அசுரர்கள் காவல் காக்கும் பன்னிரண்டு காவல்மாடங்களும், ஏழு அடுக்கு படைத்திரளும் இருந்தன. என்னை முற்றிலும் உடல் நோக்கி படைக்கலம் நோக்கிய பின்னரே உள்ளே செல்ல ஒப்பினர்.

“என்னை இவ்வண்ணம் எவரும் நோக்குவதில்லை” என்றேன். என்னை அழைத்துச்சென்ற ஏவலன் “இங்குள்ள பூசல்சூழலில் இது இயல்பானதே. ஏனென்றால் இங்குதான் அரசரும் இளையோரும் இருக்கின்றனர்” என்றான். மீண்டும் அச்சொல் இடறவே “அரசர் என்று எவரை கூறுகிறாய்?” என்றேன். அவன் கண்களில் சினம் வந்து மறைந்தது. “இன்று இந்நகரை ஆள்பவர் ஜாம்பவதியின் மைந்தரும் ஜாம்பவானின் கொடிவழிவந்தவருமான சாம்பன். அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் மகள் கிருஷ்ணை அவருடைய பட்டத்தரசியென அமர்ந்திருக்கிறார். அரசர் நகர்நீங்கும்போது பன்னிரு போர்முனைகளில் தன்னுடன் தோளிணை என நின்ற மைந்தர் சாம்பனுக்கே மணிமுடியை அளித்துச் சென்றார். இங்கு பிறிதொருவர் அரசர் என்று இல்லை” என்றான்.

“ஆம், நீங்கள் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று அறிந்தேன்” என்றேன். “அதை மறுப்பவர்கள் இன்னும் இந்நகரில் உள்ளனர்” என்று அவன் சொன்னான். “அவர்கள் நெடுநாட்கள் அவ்வண்ணம் மறுக்கமாட்டார்கள்.” நான் என்னை முயன்று திரட்டிக்கொண்டேன். அவனிடம் பேசுவது வீண் என்று எண்ணினேன். ஆனால் ஒரு வேறுபாட்டை உணர்ந்தேன். யாதவ வீரர்களுக்கு அரசியலில் ஈடுபாடே இல்லை. அவர்கள் தங்கள் குடிப்பூசலிலேயே மூழ்கியிருக்கிறார்கள். நிகழ்வதென்ன என்றுகூட செவிகொடுப்பதில்லை. ஷத்ரிய வீரர்களுக்கு அரசியலே மூச்சு. ஆனால் அவர்கள் அதை அறிவுசார்ந்தே அணுகுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் கருத்து என ஒன்று இருக்கிறது. ஆனால் அசுரர்கள் ஒற்றை உள்ளமென, ஒற்றை உணர்வென திரண்டிருக்கிறார்கள். அதுவே அவர்களின் ஆற்றல். ஆனால் அவர்களின் தலைவர் வெல்லப்பட்டால் அக்கணமே அவர்களும் முற்றாக அழிகிறார்கள். ஷத்ரியர்களைப்போல கணுதோறும் முளைத்து மீண்டும் எழுவதில்லை.

ஜாம்பவதியின் அறைக்கு முன் என்னை அரைநாழிகை அமரச்செய்தனர். அவர்கள் எவருக்காக காத்திருக்கின்றனர் என்று எனக்கு புரியவில்லை. சற்று நேரம் கழித்து இயல்பாக திரும்பி சாளரத்தினூடாக பார்த்தபோது கீழே அரவக்கொடி கொண்ட பல்லக்கு ஒன்று நின்றிருப்பதை கண்டேன். அதன் பின்னரே கிருஷ்ணை அங்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்றும், அவர் வரும்பொருட்டே ஜாம்பவதி காத்திருந்தார் என்றும் புரிந்துகொண்டேன். கிருஷ்ணையின் வரவு என்னை அமைதியிழக்கச் செய்தது. நான் பேச விழைவது அரசரின் துணைவியரிடம். அவர்களின் மைந்தர்களைக்கூட என்னால் ஏற்கமுடியும், கிருஷ்ணை துரியோதனனின் மகள். துவாரகையின் அரசியென்றே அவர் கருதப்பட்டாலும் அந்நிலத்திற்கு உரியவர் அல்ல. ஆனால் நான் ஒன்றும் செய்ய இயலாது, அதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

கதவைத் திறந்து ஏவலன் வெளிவந்து என்னை உள்ளே அழைத்தான். நான் உள்ளே செல்லும்போது ஜாம்பவதியும் கிருஷ்ணையும் அருகருகே இணையான பீடங்களில் அமர்ந்திருந்தனர். ஏனோ அங்கு காளிந்திதேவி இருப்பார் என்று எண்ணினேன். பின்னர் அவ்வாறு எதிர்பார்த்தது பிழை என்று தெரிந்தது. அவர் பிறிதொரு உளநிலையில் இருக்கிறார் என்பதை முன்னரே செய்திகளினூடாக அறிந்திருந்தேன். அரசியர் இருவருமே முறைமைசார் ஆடை அணிந்திருக்கவில்லை. கிருஷ்ணை பட்டுமேலாடை ஒன்றை அள்ளி தோளில் இட்டிருந்தார். நீண்ட துயில்நீப்பு கொண்டவை போலிருந்தன ஜாம்பவதியின் கண்கள். கிருஷ்ணை என்னை அறிந்தவர் என்றே விழிகாட்டவில்லை. என் வணக்கத்தைக்கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை.

நான் வணங்கி முகமன் உரைத்தேன். என்னை அமரச்சொன்ன ஜாம்பவதி புன்னகைத்து “முழுதணிக்கோலத்தில் வந்திருக்கிறீர்கள், நன்று” என்றார். நான் “ஆம் அரசி, அரசியை அவைநின்று பார்க்கும்பொருட்டு இவ்வாறு வரவேண்டும் என்பது முறைமை” என்றேன். “அந்த முறைமையை நீங்கள் சத்யபாமையையும் ருக்மிணியையும் சந்திக்கச் செல்லும்போது பேணவில்லை அல்லவா?” என்றார் ஜாம்பவதி. அவ்வினாவால் நான் திகைத்துவிட்டேன். “ஆம், ஆனால்…” என்று சொல்வதற்குள் கைநீட்டித் தடுத்து “புரிகிறது. அவர்கள் உங்களுக்கு அரசியர் அல்ல, அணுக்கமான அன்னையர். இங்கு நீங்கள் வந்திருப்பதென்பது அவர்களின் அணுக்கர் என்னும் நிலையில்தான். நாங்கள் அயலவர், எனவே அரசியர் அல்லவா?” என்றார்.

நான் முற்றிலும் சொல்லிழந்தேன். ஆகவே எரிச்சல்கொண்டேன். “அவ்வாறு அல்ல… அவர்களை நான் முன்பு எண்ணாமல் இயல்பாக சந்திக்கச் சென்றேன்…” என்றேன் “இயல்பாகச் சென்று சந்திக்கும் நிலையில் தாங்கள் இருக்கிறீர்கள்” என்று ஜாம்பவதி கூறினார். நான் சலிப்புடன் தலையை அசைத்து “இதைப்பற்றி மேலும் நான் பேச விழையவில்லை. தூது மட்டும் கூறிச்செல்லவே வந்தேன்” என்றேன். “கூறுக!” என்று அரசி சொன்னார். கிருஷ்ணை என்னை உற்றுநோக்கியபடி அமர்ந்திருந்தார். ஜாம்பவதியின் அசைவுகளிலிருந்து எழுந்த ஒவ்வாமை என்னையும் கசப்படையச் செய்தது. அச்சந்திப்பு சினமின்றி முடியுமென்றால் நல்லூழே என எண்ணிக்கொண்டேன்.

ஜாம்பவதி “கூறுக!” என்றார். அவர்கள் அனைவரிடமும் ஒரே அசைவும் சொல்லும் எழுகின்றன. பின்பு அவற்றிலிருந்து அவர்கள் விலகி விலகிச் சென்று பிறிதொருவர் ஆகிறார்கள். “அரசி, இன்று துவாரகை இருக்கும் நிலையை நீங்கள் அறிவீர்கள். இந்நாடு அழிந்துகொண்டிருக்கிறது. இங்கு குடிப்பூசல் எக்கணமும் வெடிக்கலாம். குருதி சிந்தப்படலாம்” என்று நான் சொன்னேன். “ஆம், அதைத்தான் நானும் இவளும் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் சென்று பாமையிடம் பேச வேண்டியது அதுவே. போஜர்களும் அந்தகர்களும் விருஷ்ணிகளுடன் போர் புரிவார்கள் எனில் இந்நகரம் அழியும்” என்றார் ஜாம்பவதி. “ஆம், அதை நான் அவர்களிடம் சொன்னேன். அதைவிட முடியுரிமைக்காக இளைய யாதவரின் மைந்தர்கள் போர்புரிவார்கள் என்றால் இந்நகர் பொலிவிழக்கும்” என்றேன்.

“இங்கு போரென எதுவும் நிகழவில்லை, இனி நிகழவும் வாய்ப்பில்லை. இந்நகர் சாம்பனின் ஆட்சியில் முழுதமைந்திருக்கிறது. இளையோருக்கும் மூத்தோருக்கும் சில மாற்றுச் சொல்லிருக்கலாம். அவ்வாறு எதிர்ச்சொல் இல்லாத நாடென எதுவுமில்லை. அவர்கள் கோருவது எதுவோ அதை அளிக்க சாம்பன் சித்தமாகவும் இருக்கிறான். மீறுவார்கள் எனில் இளையோர் தண்டத்தாலும் மூத்தோர் அச்சத்தாலும் அமைதியாக்கப்படுவார்கள். ஒரு மன்னன் முடிகொண்டு கோல்சூடி ஆட்சி செய்யும் நாடு இது. இங்கு குடிகளுக்கு மாற்றுச்சொல் இல்லை. அந்தணரும் அறவோரும் மறுப்புரைக்கவில்லை. அயல்நாட்டு அரசர்களும் அடிபணிந்தே இருக்கிறார்கள். ஏது குறை?” என்றார் ஜாம்பவதி.

அச்சொற்கள் அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டவை என்று எனக்குத் தோன்ற, எழுந்த சினத்தை அடக்கி “அரசி, தாங்கள் அறிந்ததை நான் மீண்டும் சொல்லவேண்டுமென்று விழைகிறீர்கள். ஆகவே சொல்வது என் கடன். இங்கு யாதவர்களும் ஷத்ரியர்களும் அசுரர்களும் மூன்று குழுக்களாக அமைந்திருக்கிறார்கள். ஷத்ரியர்கள் இயல்பாக தங்களுக்குரியதே இந்நாட்டின் உரிமை என்று எண்ணுகிறார்கள். யாதவர்களோ குலவழியில் துவாரகை தங்களுக்குரியது என்று எண்ணுகிறார்கள்” என்று நான் சொன்னதும் ஜாம்பவதி தடுத்து “ஷத்ரியர்கள் அவ்வாறு விரும்பவில்லை. ஷத்ரியர்களுக்கு சாம்பன் அயலான் அல்ல. அவன் மணம்முடித்திருக்கும் பெண் ஷத்ரியகுடிப் பிறந்தவள், ஷத்ரியர்கள் தங்கள் தலைவர் என ஏற்ற பேரரசரின் மகள்” என்றார்.

நான் “ஆம், அது உண்மை. ஆனால் மணவுறவுகளை எவர் முதன்மையெனக் கருதுகிறார்கள்? பிரத்யும்னனே அசுரகுடியில் மணம்புரிந்தவர் அல்லவா?” என்றேன். ஜாம்பவதி “அதைத்தான் சொல்லவந்தேன். பிரத்யும்னனின் மைந்தன் அனிருத்தன் மணந்திருப்பது பாணாசுரரின் மகள் உஷையை. இன்று சம்பராசுரரும் பாணாசுரரும் எங்களுடன் இருக்கிறார்கள். ஷத்ரியர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்த பின்னர் எஞ்சியிருப்பவர் எவர்? ஒருவரோடொருவர் பூசலிட்டுக்கொண்டிருக்கும் யாதவர்களா? அந்த யாதவர் தங்கள் பூசலை நிறுத்திவிட்டு ஒன்றெனத் திரண்டு வந்து கோரிக்கை என்ன என்று எனது மைந்தனிடம் சொல்லட்டும். அவன் அதை எண்ணி, அவைசூழ்ந்து உகந்ததை முடிவெடுப்பான்” என்றார்.

நான் கிருஷ்ணையை பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சொற்களில் அவருக்கு உடன்பாடுள்ளதா என்று நோக்கில் தெரியவில்லை. அங்கிலாததுபோல் சற்றே விழி திருப்பி அமர்ந்திருந்தார். ஒருகணத்திற்குப் பின் நான் நேரடியாக ஜாம்பவதியிடம் “அரசி, இங்கு பூசல் நிகழலாகாது. அதை தவிர்க்கும் பொருட்டே நான் வந்துள்ளேன்” என்றேன் “அசுரர்களிடம் பூசலேதும் இல்லை” என்றார் ஜாம்பவதி. நான் மீண்டும் ஒருகணம் கிருஷ்ணையைப் பார்த்த பின் “அரசி, பூசலிடுவது எவராயினும் நம் மைந்தர். இளைய யாதவரின் கொடிவழியினர். பூசலால் குடியழியுமென்றால் இழப்பவர் நாம்” என்றேன். “தோற்பவர் இழக்கிறார், வெல்பவர் பெறுகிறார்” என்றார் அரசி.

“எவர் இழந்தாலும் இழப்பவர் இளைய யாதவர். என் கவலை அதன்பொருட்டே. அரசி, இங்குள்ள இடரைத் தீர்க்க துவாரகையை சமைத்த அரசர் இங்கு வருவது ஒன்றே வழி. எவர் ஆளவேண்டும் என்று இளைய யாதவர் முடிவுசெய்யட்டும் எட்டு அரசியரும் ஓலை அனுப்பினால் அதை ஆணை என்றுகூடக் கொள்ளலாகும். அவர் வந்து சேர்ந்தால் இங்குள்ள அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். அதன் பின் இங்கொரு மாற்றுச் சொல் எழாது என்பதில் ஐயமில்லை” என்றேன். ”அவருடைய நகர் இது, அவர் வரட்டும்” என்றார். “ஆம், ஆனால் அவரை நாம் இங்கிருந்து விலக்கினோம். நம் சொல் எழுந்தாலொழிய அவரை இங்கு வரவழைக்க முடியாது. அதன்பொருட்டே நான் முயல்கிறேன்” என்றேன்.

ஜாம்பவதி “அவர் வரட்டும். சாம்பனை அரசபீடத்தில் அமர்த்தியது அவர், அதை மீண்டும் அவர் சொல்லட்டும். பிறிதொன்று அவர் சொல்ல வாய்ப்பில்லை. அவர் சொல் எழுந்தால் அன்றி இந்த ஷத்ரிய அரசியரும் யாதவ அரசியும் அடங்கமாட்டார்கள்” என்றார். “அவர்களும் அவர் வந்துகூற வேண்டுமென்று விழைகிறார்கள். அவர் வருவார் எனில் அனைத்தும் முடிவுற்றுவிடும் என்று நம்புகிறார்கள். அவர்களிடம் ஓலை பெற்றுவிட்டேன். தாங்களும் ஓலை ஒன்றை அளிப்பதாக இருந்தால்…” என்று நான் சொல்ல “ஓலை அளிக்கிறேன். அவ்வோலையை நீங்கள் சாம்பனிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்” என்றார் ஜாம்பவதி. நான் “அந்த ஓலையை தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள விழைகிறேன், அரசி“ என்றேன்.

“அந்த ஓலையை அளிக்கவேண்டியவள் நான் அல்ல, அவனே. இந்நாட்டை ஆள்பவன் சாம்பன். அவன் மணிமுடிக்குக் கீழ் அமைந்திருக்கும் குடி நான். அவனை மீறி ஒரு சொல்லும் உரைக்க உரிமையற்றவள். என் ஓலையை அவனே எழுதுவான். அவ்வோலை எழுதுவதற்கான ஒப்புதலை மட்டுமே நான் அளிக்கமுடியும்” என்றார் ஜாம்பவதி. “அரசி, இது தங்களுக்கும் தங்கள் கொழுநருக்குமான உறவு குறித்தது” என்றேன். “அரசனே குடிகள் மேல் முற்றுரிமை கொண்டவன்” என்று ஜாம்பவதி சொன்னார். நான் திரும்பி கிருஷ்ணையை பார்த்தேன். “அரசி, அரசரின் சார்பில் தாங்கள்கூட அவ்வண்ணம் ஒரு ஓலை அளிப்பதற்கு ஆணையிடலாம்” என்றேன். அவரை உரையாடலுக்குள் இழுப்பதற்காகவே அதைச் சொன்னேன்.

கிருஷ்ணை புன்னகைத்து “இங்கு பூசல் ஏதோ நிகழ்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதுதான் எனக்குப் புரியவில்லை. நான் அறிந்து பாரதவர்ஷத்தில் பூசல் நிகழாத ஒரே நகர் இதுதான். இன்று வரை இங்குள்ள மைந்தருக்கும், மைந்தர் மைந்தருக்கும் நடுவே எந்த மோதலும் நிகழவில்லை. ஒரு சொல்கூட எதிர்த்து சொல்லப்படவில்லை. ஒருவேளை பூசலை உருவாக்க நீங்கள் எண்ணுகிறீர்களோ என்று ஐயம்கொள்கிறேன்” என்றார். அவர் விழிகளில் நான் முன்பறிந்திருந்த ஒருவரை கண்டேன். உடனே அவர் எவர் என்றும் புரிந்துகொண்டேன். அவை பாஞ்சாலத்து அரசி திரௌபதியின் கண்கள். “ஏனெனில் நீங்கள் விருஷ்ணி குலத்தவர். இந்நகரில் விருஷ்ணிகளுக்கு இருக்கும் முன்தூக்கு சற்றே குறைகிறது என்று எண்ணுகிறீர்கள். ஆகவே இங்கு வந்து இச்சூழ்ச்சியை செய்கிறீர்கள்” என்றார்.

நான் “அவ்வாறல்ல, அரசி…” என்றேன். எழாக் குரலில் கிருஷ்ணை “யாதவரே, அந்த முன்தூக்கம் குறைந்தே ஆகும். அதை எவரும் தடுக்கவியலாது. ஏனெனில் இப்போது இந்நகரை ஆள்பவர் சாம்பன். இளைய யாதவரின் ஆட்சி முடிந்துவிட்டது. அன்று விருஷ்ணிகள் தங்கள் தகுதியால் அல்ல, குருதித்தொடர்பால் மட்டுமே இங்கு பெரும் பதவிகளையும் இடங்களையும் நிறைத்திருந்தார்கள். அது இனி நிகழப்போவதில்லை. அதை அவர்கள் உணர்ந்தாகவேண்டும். அதை அவர்களுக்கு உணர்த்துவது உங்கள் பொறுப்பு. அதற்கு மாறாக அவர்களை மேலும் தூண்டிவிடும் பொருட்டு இச்செயலை நீங்கள் செய்கிறீர்கள். அதனூடாக அவர்களை அழிவுக்கு இட்டுச் செல்கிறீர்கள்” என்றார்.

சினத்தை அடக்கி “இந்நகர் வாழ வேண்டும் என்பதற்கப்பால் நான் கூறுவது ஒன்றில்லை” என்று நான் சொன்னேன். குரலெழாமலேயே உறுதியுடன் “ஒன்றுணர்க அரசி, என்றேனும் விருஷ்ணிகளுக்கும் நிஷாத அசுர குடிகளுக்கும் இடையே போர் நிகழுமெனில் விருஷ்ணிகளின் பொருட்டுத்தான் வில்லெடுத்து களம் முன் நிற்பேன். என்னை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர் இங்கு எவரும் இல்லை. பிரத்யும்னனோ சாம்பனோகூட. எண்ணுக, ரிஷபவனத்தின் படைகளும் என்னுடன் எழும்!” என்றேன். கிருஷ்ணை ஏளனச் சிரிப்புடன் “ஏன் உங்கள் இறைவர் கூடவா உங்களுக்கு நிகரல்ல? அவரது படையாழியை எதிர்த்து நிற்குமா உங்கள் வில்?” என்றார்.

நான் திகைத்து “அவர் வருவாரெனில் இங்கு வேறு பேச்சே இல்லை” என்றேன். “அவர் வந்தாக வேண்டும். ஏனெனில் சாம்பன் முடிசூடியது அவரது காலத்திலேயே. இன்றுவரை சாம்பனின் முடிக்கெதிராக அவர் எதுவும் சொல்லவும் இல்லை. ஆகவே அரசருக்கெதிராக துவாரகையின் குடிகள் எவர் எழுந்தாலும் அரசரின் பொருட்டு படைக்கலத்துடன் வந்து நிற்பது அவருடைய பொறுப்பு” என்றார் கிருஷ்ணை. “இப்பூசல்களை நாம் மீள மீள ஏன் பேசுகிறோம்? தாங்கள் ஓலை அளிப்பீர்கள் என்றால் நான் கிளம்புகிறேன்” என்றேன். “ஓலை அளிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சென்று சாம்பனிடம் பெற்றுக்கொள்ளுங்கள் அந்த ஓலையை. பிறிதொன்றும் நான் உரைப்பதற்கில்லை” என்றார் ஜாம்பவதி.

“நன்று!” என்றபடி நான் எழுந்துகொண்டேன். ஜாம்பவதி உதடுகளை இறுக்கியபடி “நோக்குக! அரசியிடம் இருந்து ஆணை பெறாது உரையாடலை முடிக்கும் உரிமை உங்களுக்கில்லை. இதை நீங்கள் உங்கள் அரசியிடம் செய்யமாட்டீர்கள். நிஷாத குலத்து அரசி என்பதனால் இதை செய்கிறீர்கள். இப்போது உங்கள் உள்ளத்தில் இருப்பது என்னைவிட குடியில் முந்தியவர் என்னும் எண்ணம் மட்டுமே” என்று சொன்னார். அதை அவர் ஒரு படைக்கலமாகவே கையாள்கிறார் என்று உணர்ந்தேன். “அல்ல அரசி, தங்கள் அவைமுறைமைகளை பேணவே விழைகிறேன்” என்றேன். “எனில் அதை பேணியிருக்க வேண்டும்” என்றார். “பிழை நிகழ்ந்துவிட்டது, பொறுத்தருள்க!” என்றேன். “அப்பிழையை நிகழ்த்திய உளநிலையையே நான் சுட்டுகிறேன்” என்றார் ஜாம்பவதி.

“நான் எதுவும் சொல்வதற்கில்லை. இந்த உளநிலைகள் எல்லாம் இங்கு இளைய யாதவர் இருந்தபோது எங்கிருந்தன? ஒவ்வொருவரிலும் எழுந்திருக்கும் இந்த தெய்வங்கள் எல்லாம் அன்று எவ்வண்ணம் அடங்கிக்கிடந்தன? புரியவில்லை. மானுடருக்கு மேல் தெய்வங்களின் ஆட்சி என்பது கணந்தோறும் மாறிக்கொண்டிருப்பது என்பார்கள்” என்றபின் தலைவணங்கி கதவைத் திறந்து வெளியே சென்றேன்.

முந்தைய கட்டுரைவேட்டு [சிறுகதை]
அடுத்த கட்டுரைதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்