சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 4

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்

 

சர்வ ஃபூதேஷு கதை ஓர் இனிய அனுபவம். இந்தக்கதை வாசிக்கும் அனுபவத்தை இதுவரை அடைந்ததே இல்லை. அதாவது ஒரு கதை வாசிக்கிறோம். பலநாட்கள் அதைப்பற்றிய விவாதம் நடைபெறுகிறது. நண்பர்களுடன் பேசுகிறோம். கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதன்மூலம் அந்தக் கதைக்குள் ஆழமாகச் சென்றுவிடுகிறோம். எல்லா ஆன்ஸெலும் ஸ்ரீதரனும் நமக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அடுத்த கதை அந்த நீண்ட அனுபவத்தின் தொடர்ச்சியாக அமைகிறது

 

எல்லா ஆன்ஸெலின் கதாபாத்திரம் மிகச்சுருக்கமாகவே சொல்லப்படுகிறது. அதுவும் ஸ்ரீதரனின் பார்வையில். அவன் அவளை நெருக்கமாக அறியவே முயலவில்லை. அவளை அவன். Personalaize பண்ணவே இல்லை. அவளுடைய தனிவாழ்க்கை தனிமனசு எதற்குள்ளும் செல்லவில்லை. அவன் அவளை generalize தான் செய்கிறான். பெண், அன்னை, சக்தி என்று வகுத்துக்கொள்கிறான். எல்லா என்று பார்க்கவே இல்லை. ஆகவே அவளுக்கு வேறுவழி இல்லை. அவள் தன்னை அந்த பெரிய பிம்பம் நோக்கி கொண்டுசென்றே ஆகவேண்டும். இது ஒரு முறைதான்.. அலோபதி அவளை . Personalaize பண்ணும். இது அவளை generalize பண்ணுகிறது. இதுதான் வேறுபாடு.

 

எல்லா ஆன்ஸெல் இங்கே ஒரு வெறும் உடலாக வருகிறாள். உடலாக ஆகும் இன்னொரு பெரிய உள்சாரத்தை அவளுக்கு அவன் காட்டுகிறான். அவள் இயல்பாகவே அதைநோக்கிச் செல்கிறாள்.

 

ஸ்ரீதர்

அன்புள்ள ஜெ

 

சர்வஃபூதேஷு கதையில் சிக்கலான பகுதி என்பது ஒன்றுதான். அதைத்தான் கொஞ்சம் சாக்தம் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது. சாக்தம் இல்லாமல் பார்ப்பவர்களுக்கு கொதிப்பையும் அளிக்கும்.

 

மாத்தன் அவளை மேர்iயாகத்தான் பார்க்கிறான். அன்னையாக பார்க்கிறான். கடைசியில் அப்படித்தான் அவள் மடியில் கிடக்கிறாள். ஆனால் அவன் அவளுடைய பொம்மையை பயன்படுத்துகிறான். அவளிடம் கேட்கிறான். அதைப் பயன்படுத்தலாமா என்று. அவள் நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று சொல்லி சிரித்து முத்தமிடுகிறாள்.

 

அன்னையாகவும் காதலியாகவும் ஒரே சமயம் உருமாறும் ஒரு உருவம் இங்கே எல்லா. அவள் தேவி ஆகையால் அதுவே அவளுடைய இயல்பு. இதெப்படி என்று கேட்டால் அதற்கும் மாத்தனே பதில் சொல்கிறான்.  “அவளுடைய பொம்மைகளைத்தான் மக்கள் தொடமுடியும்”. இங்கே அன்னையாக இருப்பதும் அவளுடைய பொம்மைதான். எல்லாமே அவளுடைய பொம்மைகள்தான்.

 

எஸ்,மகாதேவன்

 

அன்புள்ள ஜெயமோகன்

 

ஃபூதேஷு   என்ற வார்த்தை சமஸ்கிருத भ    என்பதை கொண்டுள்ளது. நாம் தமிழில்  ஃபூ என்பதை ஆங்கில FU  என உச்சரிப்போம். தமிழில் சமஸ்கிருத भ  ன்பதற்க்கு இணையான எழுத்து இல்லை. அதனால் சமஸ்கிருத प , फ , ब , भ   என்ற எழுத்துகளுக்கு இணையானது ப தான் . அதனால்   பூதேஷு  என எழுதினால் போதும்.   ஃபூதேஷு என்றால்  fUthEshu    என பொருளில்லாமல் போய்விடும்

 

அன்புடன்

 

வ.கொ.விஜயராகவன்

 

 

அன்புள்ள விஜயராகவன்,

 

நான் இதை பலமுறை விளக்கி எழுதியிருக்கிறேன். சம்ஸ்கிருதத்தின் ஒலியை தமிழில் சரியாக எழுதவே முடியாது. அதன்பொருட்டே கிரந்த எழுத்துக்கள் உருவாயின. இன்று அவை காலாவதியாகியிருக்கின்றன. இன்று சம்ஸ்கிருதச் சொற்களை தமிழில் எழுதுகையில் நடைமுறையில் அவை மூல உச்சரிப்புக்கு ஓரளவு அருகே வருகின்றனவா, ஏற்கனவே இருக்கும் உச்சரிப்புமுறைகளால் வேறு சொற்களாக பொருள்கொள்ளப்படாமலிருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடுவது.

 

இன்றைய எழுத்துருவில் சம்ஸ்கிருதத்தை எழுதுவது இயல்வது அல்ல. ஆகவே  சம்ஸ்கிருத ஒலிகளை தமிழில் எழுதும்பொருட்டு ரோமன் எழுத்துரு பாணியிலான மேல் கீழ் கோடுகள் மேற்புள்ளிகள் இணைப்புள்ளிகள் போன்றவற்றை போடுவது, ஆங்கில எழுத்துக்களை கலந்து எழுதுவது என பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவை எவையுமே நிலைபெறவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையைக் கையாள்கிறார்கள். உண்மையில் அதிலேயே கூட பண்டிதர்கள் சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

பக்தி – தியான மரபில் சம்ஸ்கிருத மந்திரங்களையும் சுலோகங்களையும் தமிழில் அப்படியே எழுதவேண்டிய அவசியம் உண்டு. அப்படி எழுதுவதற்கு மேலே சொன்ன ஏதேனும் வழிமுறையைக் கையாளலாம். மற்றபடி பொதுவாக எழுதும்போது அந்தச் சிக்கலான வழிமுறைகளைக் கையாள்வதில் பொருள் இல்லை. அப்படி எழுதினாலும்கூட செவிகளில் சொல்லப்படாமல் அந்த ஒலியைச் சென்றடைய முடியாது. ஆகவே கூடுமானவரை தமிழின் ஒலியமைவுக்குள், நம் புழக்கத்திற்குள் நிற்கும்படி உச்சரிப்பை கண்டடைவது, எழுதுவதே சிறந்தவழி.

 

இதில் ஒருவர் கடைப்பிடிக்கும் வழி என்ன என்று உசாவலாம். அதில் புரிதல்பிழைகள் வருமென்றால் கூட்டாக மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் இங்கே இவை உடனே கீழ்த்தரமான ஆணவப்பிரகடனங்களாக நையாண்டிகளாகவே வெளிப்படுகின்றன. அத்தகைய நாலைந்து கடிதங்கள் கிடைத்தன. நான் அவற்றை பொருட்படுத்துவதில்லை. உங்கள் கடிதத்தில் அத்தகைய தொனி இருந்திருந்தால் இந்த விளக்கத்தையே அளித்திருக்க மாட்டேன்.

 

இங்கே சொல் பெரிய ஒலித்திரிபு இன்றி சென்றடைகிறதா, குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளப்படுகிறதா என்பதே பார்க்கப்படவேண்டியது. அதைவைத்துக்கொண்டு நீண்ட விவாதங்களில் ஈடுபடுவதெல்லாம் அறிவுத்தளச் செயல்பாடு அல்ல, ஒருவகை வெட்டிவம்பு மட்டுமே. பெரும்பாலும் சம்ஸ்கிருதத்திற்கு உரிமைகொண்டாடும் சாதிப்பெருமிதமே அதில் வெளிப்படுகிறது. மெய்யாகவே சம்ஸ்கிருதம் நன்கறிந்தவர்கள் இதற்கெல்லாம் வருவதில்லை

 

தமிழில் உச்சரிப்புகள் உண்மையில் எப்படி நிகழ்கின்றன என்னும் நடைமுறை அறிவிலிருந்தே இந்த எழுத்துக்களை எப்படி எழுதுவது என முடிவெடுக்கவேண்டும். உதாரணமாக காகம் என்பதிலுள்ள இரண்டாவது க ga என்றே உச்சரிக்கப்படுகிறது. இயல்பாக அது நிகழ்வதனால் அதை மாற்றவேண்டியதில்லை.

 

இதில் முதலில் உள்ள சர்வ என்பதை எவரும் charva என உச்சரிப்பதில்லை. ஆகவே அங்கே ஸ தேவையில்லை. இதையெல்லாம் நான் ஒரு நடைமுறை நோக்கிலெயே முடிவெடுக்கிறேன். நான் எழுதுவது தியான – மந்திர உச்சரிப்புகளை அல்ல. ஆகவே இதில் உட்கார்ந்து மண்டையை குழப்பிக்கொள்வதில்லை.

 

ஆனால் பூ என்பது தமிழின் புகழ்மிக்க உச்சரிப்பு – மலரைக் குறிப்பது. ஆகவே Poo என்றே அது சொல்லப்படுகிறது. Ph,Bh ஒலிகள் கொண்ட பரவலான சொற்கள் ஏதும் இங்கில்லை. ஆகவே பூதேஷு என்று என்று எழுதினால் அது பூ உச்சரிப்பையே சென்றடையும். நடைமுறையில் பூதம் என்னும் சொல்லின் பொருளையும் அடையக்கூடும். அகவே வேறுபடுத்தியாகவேண்டும்.

 

ஃ ஒலிக்கு தமிழில் முடிவான இலக்கண வரையறை இல்லை. எல்லா மெல்லொலிகளையும் அது சுட்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு புதிய ஒலிகளுக்காக இலக்கணமுன்னோடிகளால் அதன் பயன்பாடு மேலும் நெகிழ்வாக்கப்பட்டது. ஆகவே அவ்வொலி இன்று இடத்துக்கேற்ப பொருள்கொள்ளப்படும். ஃபூ எனும்போது அது P என்னும் உச்சரிப்பு அல்லாத  F, Bh, Ph என்னும் ஒலிகள் அனைத்தையுமே குறிக்கும். அதாவது அது வல்லின உச்சரிப்பை மெல்லினமாக காட்டும் ஓர் அடையாளம், அவ்வளவுதான். இடத்துக்கேற்ப சற்று ஒலிமாறுபாட்டுடன் பயன்படுத்தவேண்டியதுதான். முன்னோடிகள் பலர் அவ்வாறு எழுதியிருக்கிறார்கள். ஆகவே அதை பயன்படுத்துகிறேன். இப்படி பலசொற்களை நான் பயன்படுத்துவது உண்டு. உரிய அறிஞர்களிடம் கலந்துகொள்வதும் உண்டு.

 

உங்கள் கடிதம் கண்டபின் நான்குபேரிடம் பூதேஷு என்று எழுதி வாசிக்கச் சொன்னேன். நான் எண்ணியதுபோலவே poosheshu என்றே  உச்சரித்தனர். வல்லின பூ அல்ல என உணர்த்துவதே முக்கியம் என்னும் என் புரிதலை உறுதிசெய்துகொண்டேன். என் வழிமுறை அதுவே,நீங்கள் பூ என எழுதி அது bh என  உச்சரிக்கப்படுமென்றால் அதுவும் சரியே. இம்மாதிரி உச்சரிப்புப் பூசல்களில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வமில்லை.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைமொழியாதது