சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

 

சர்வ ஃபூதேஷு கதையை படித்தபின்னர்தான் யா தேவி படித்தேன். அதன்பின் மீண்டும் இந்தக்கதையை வாசித்தேன். முதல்கதையின் நீட்சி. இரண்டாம் கதையில் முதல்கதை தொடாத ஒன்று இருக்கிறது – முதல்கதையில் எல்லா ஆன்ஸெலை அன்னைவடிவமாக ஸ்ரீதரன் பார்க்கிறான். இரண்டாம் கதையில் அவளே அன்னைவடிவமாக ஆகிவிடுகிறாள்.

 

அவளுடைய பல வடிவங்கள். பலரால் காமம்கொள்ளப்படுபவை. ஆனால் இந்த வடிவம் அன்னை. வியாகூல மாதா. மகனுக்காக கண்ணீர்விடும் தாய். இதை அவள் அறிந்திருக்க மாட்டாள். ஆனால் அவளே அப்படி ஆகிவிட்டாள். மெல்லமெல்ல அதைநோக்கி வந்துவிட்டாள். அவன் அவளுக்கு அளித்த சிகிச்சை என்பது அவளிடமிருந்து அந்த அன்னையை வெளியே கொண்டுவந்ததுதான்.

 

சத்யமூர்த்தி

சென்னை

அன்புள்ள ஜெ,

 

சர்வ பூதேஷு கதையில் நான் கண்ட ஒரு விஷயம். இது முக்கியமான வாசிப்பா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் தொழில்முறை மருத்துவன் ஆகவே இதை என் அனுபவமாகக் கொள்ளலாம்

மாத்தனின் பிரச்சினையே உணவுதான். பசிதான். அந்த வகையான பசி என்பது உண்மையில் உடலில் உள்ள பசி அல்ல. அது வேறேதோ பசி. அதை உடல்பசியாக ஆக்கிக்கொள்வார்கள். டிப்ரஷன் நோயாளிகள் நிறையச் சாப்பிடுவார்கள். அலுப்பு காரணமாக சாப்பிடுவார்கள். அன்பு கிடைக்காதவர்கள் சாப்பிடுவார்கள். குழந்தைப் பருவத்தைவிட்டு வெளியே செல்லவே மனமில்லாத செல்லப்பிள்ளைகளும் ஜாஸ்தியாகச் சாப்பிடுவாrகள். சாப்பாடு நோயாக ஆகும் கணம் இது

மாத்தன் கனவில் காண்பதெல்லாம் சாப்பாடுதான். மீன் சந்தைக்கு கூட்டிச் செல்கிறான். பீஃப் பொரியல் பற்றி பேசுகிறான். அது ஸ்பிரிச்சுவல் ஆன ஒரு பசி. அந்தப்பசியின் உடல்வடிவம். அவனுடைய அந்தப்பசியைத்தான் எல்லா இல்லாமலாக்குகிறாள். அதுவரை அவள் காமப்பசி கொண்டவர்களுக்கு உடலை அளித்தவள். இப்போது இவனுடைய பசிக்கு தன்னை அளிக்கிறாள்

எல்லாமே அன்னையின் வடிவங்கள்தான்.அன்னை செய்யும் வெவ்வேறு பணிகள்தான்.

 

மகேஷ்

 

முந்தைய கட்டுரைஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்