‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72

பகுதி ஏழு : பெருசங்கம் – 4

சுதமன் தன் அறைக்கு மீண்டபோது உளநிறைவால் முகம் மலர்ந்திருந்தார். இடைநாழியினூடாக தனியாக மெல்லிய குரலில் தானறிந்த பழம்பாடல் ஒன்றை முனகியபடி நடந்தார். அவரை வழியில் கண்ட சம்வகை “என்ன, முகமெங்கும் மகிழ்ச்சி?” என்றாள். “இனி செய்யவேண்டியதொன்றும் இல்லை. அனைத்தும் அவற்றுக்குரிய இடங்களில் சென்றமைந்துவிட்டன” என்று சுதமன் சொன்னார். “இன்னும் சிக்கல்கள் உள்ளன, ஆனால் அனைத்தும் முறையமையும் என்னும் நம்பிக்கை வந்துவிட்டது.”

ஆனால் சம்வகை “அது ஓர் உளமயக்கு. நாம் செய்த ஒரு பணி சரியாக அமைந்துவிட்டதென்றால் இங்கே அனைத்தும் சரியாக அமைந்துவிட்டது என்னும் நிறைவை நாம் அடைந்துவிடுகிறோம். எதிலாவது ஒரு பிழையை கண்டடைந்து அதை சீரமைத்துவிட்டோம் என்றால் பலநூறு பிழைகளை விட்டுவிடுகிறோம்” என்றாள். சுதமன் எரிச்சலுடன் “இது முடிவேயில்லாத அலைபாய்தல். இந்த அலைபாய்தல் நமக்கு தேவையாகிறது. எங்கோ ஏதோ இடர் இருந்துகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டால்தான் நாம் நமக்குரிய மைய இடத்தில் நிறைந்து அமைய முடியும். இடர் இல்லையென்றாலும் உருவாக்கிக் கொள்வோம்” என்றார்.

சம்வகை சிரித்து “இருக்கலாம். ஆனால் என் உள்ளம் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறது. அது பிழையாக இருந்தால் நன்று. ஆனால் பொய்யான நிறைவால் எதையேனும் நான் தவறவிட்டுவிட்டேன் என்றால் அதன்பொருட்டு வருந்தவேண்டியிருக்கும்” என்றாள். சுதமன் “மெய்தான்” என்றார். “ஆனால் எனக்கு இப்போது ஒரு பெரிய நிறைவு உருவாகியிருக்கிறது. இதில் திளைக்க விழைகிறேன். ஆகவே இதை தவறவிட விரும்பவில்லை” என்றார். சம்வகை “நாம் இருவரும் இரு வழிகளில் செல்பவர்கள்” என்றாள்.

சுதமன் சற்று தணிந்தார். “இதுவரை பலவகையான இடர்களை நான் எண்ணி கணக்கிட்டுக்கொண்டிருந்தேன். ஷத்ரிய அரசே மீண்டும் எழுகிறது என்னும் ஐயமும் கலக்கமும் கொண்ட நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் சிலர் இருந்தனர். அவர்கள் ஏதேனும் செய்யலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நாகர்களை உண்மையாகவே அஞ்சிக்கொண்டிருந்தேன், ஆகவே அவர்களைப் பற்றி எண்ணவே இல்லை. இப்போது எல்லாமே சரியாக அமைந்துவிட்டது. இங்கே இனி புறக்குடியினரோ நாகர்களோ எந்த இடரையும் செய்யப்போவதில்லை. ஐயமே வேண்டியதில்லை” என்றார்.

“ஏனென்றால் அனைவரையும் அணைத்து அருகமையச் செய்யும் வழிமுறையையே அரசர் கைக்கொள்ளவிருக்கிறார். இந்த நகரம் இனி அனைவருக்கும் உரியதென்றாகும். இங்கே எவரும் எதிரியில்லை என்ற நிலை வரும். ஆகவே எந்த அச்சமும் தேவையில்லை.” அதை சொல்லி முடித்தபோதே அதிலிருந்த பொய்மை தெரிய அவர் முகம் சிவந்தார். விழிகளை திருப்பிக்கொண்டு “மெய்யாகவே அவ்வண்ணம்தான் நிகழும்… தெய்வங்கள் நம்முடன் இருக்கும்” என்றார்.

சம்வகை புன்னகைத்து “அவ்வண்ணமென்றால் நன்று” என்றாள். “எனில் சொல்க, நீங்கள் எதிர்பார்ப்பது என்ன வகையான இடர்?” என்று அவர் கேட்டார். “அதை அறிந்தால் உடனே அதை தீர்க்கச் சென்றிருக்கமாட்டேனா?” என்றாள் சம்வகை. “நான் கருதும் இடர் என்ன என்று எவ்வகையிலும் என்னால் எண்ண முடியவில்லை. ஆனால் ஏதோ ஓர் இடர் எங்கோ உள்ளது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது” என்றாள்.

“ஏன்?” என்று அவர் கேட்டார். “இந்த மங்கலம், இந்த அழகு, இந்த ஒழுங்கு… இவ்வண்ணம் ஒரு முழுமை நிகழமுடியாது. இதை இதற்குள் இருப்பவர்களுடைய ஆழத்தில் வாழும் தெய்வங்களே விழையா…” என்றாள். சுதமன் தளர்ந்து “அதற்கு நாம் செய்வதற்கொன்றும் இல்லை…” என்றார். “ஆம்” என்றபின் சம்வகை தலைவணங்கி அப்பால் சென்றாள். அவர் அவளுடைய கவசஉடை எடையுடன் அசைந்து செல்வதை நோக்கிக்கொண்டு நின்றார். அவருடைய ஊக்கம் சற்று குறைந்தது. ஆனால் உடனே அது மீண்டும் எழுந்தது. மீண்டும் அவர் முனகியபடி நடந்தார். அந்த மெட்டு அவருக்குள் நாவுக்காக காத்து நின்றிருந்தது. பழைய சூதர்பாடல். “எதிரிகள் அகல்கிறார்கள். ஏனென்றால் நான் எதிர்ப்பை துறந்துவிட்டேன்.”

அவர் தன் அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்தார். துயிலில் இனிய கனவுகள் வழியாக சென்றார். காலையில் விழித்தபோது அவர் முகம் மலர்ந்திருந்தது. அதைக் கொண்டே அவர் கனவுகளை நினைவுகொண்டார். ஆனால் எவையும் தெளிவாக உருத் தெரியவில்லை. எழுந்து நீராடி ஆடை மாற்றி அவர் சுரேசரின் அரண்மனைக்கு சென்றார். அங்கே இரவென்று ஒன்று நிகழ்ந்ததாகவே தெரியவில்லை. சுரேசர் அப்போதுதான் தன் அறைக்கு துயிலச் சென்றிருப்பதாக சொன்னார்கள்.

சுரேசர் அவருக்கு ஏழு ஆணைகளை இட்டிருந்தார். அந்த ஓலையை அவர் ஒருமுறை புரட்டி நோக்கிவிட்டு நடந்தார். மிக மெல்ல இறகுபோல அரண்மனையின் இடைநாழிகளின் வழியாக சென்றார். ஆங்காங்கே கூச்சலிட்டபடி ஓடிக்கொண்டிருப்பவர்களை கண்டதும் புன்னகைத்தார். அவர்களின் விசை அளித்த கோணலான அசைவுகள் சிரிப்பூட்டின. அவர்கள் நூல்பாவைகளை குரங்குகள் இழுப்பதுபோல அசைகிறார்கள் என எண்ணியதும் அவர் வாய்விட்டு சிரித்துவிட்டார்.

அவரை நோக்கி ஓடிவந்த காவலர்தலைவனாகிய யௌனன் “அமைச்சரே, காவல்படையினர் அனைவருக்கும் உரிய ஆணைகள் சிலவற்றை தலைவி சம்வகை அளித்திருக்கிறார். ஆனால் இங்கே காவலர்தலைவியர் என எவருமில்லை” என்றான். அவன் சொல்ல வருவதை செவிகொள்ளாமல் சுதமன் “முதலில் உன் உடலை நிலையாக நிறுத்துக! சொற்களின் பொருளை உள்ளம் வாங்குக…” என்றார். “மேலும் நீ இதை சொல்லவேண்டியவன் நான் அல்ல. நான் ஆட்சித்துறை அமைச்சன்” என்றபின் மேலும் நடந்தார். அரண்மனையின் அறைகளிலிருந்தெல்லாம் ஓசைகள் எழுந்துகொண்டிருந்தன. அப்போதுகூட பழுதுநீக்கும் பணி முடிந்திருக்கவில்லை. ஒரு தூணின் வெண்கலப் பட்டையை அப்போதுதான் பொருத்திக்கொண்டிருந்தார்கள்.

சுதமன் அரசவை மண்டபம் நோக்கி சென்றார். அவரைக் கண்டதும் அங்கிருந்த சிற்றமைச்சன் வித்யோதன் அவரை நோக்கி ஓடிவந்தான். “உத்தமரே, இங்கே எனக்கு ஆணைகள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் செய்யவேண்டியதென்ன என்று தெரியவில்லை. நோக்குக! இந்த அவைக்கூடம் மிகத் தொன்மையானது. ஆகவே மிகச் சிறியது. இங்கே வந்தமரக்கூடும் அரசரின் நிரை மிகப் பெரியது. எவருக்கு எங்கெங்கே பீடம் என சொல்கிறார்கள். இங்கே அத்தனைபேர் அமரமுடியாது” என்றான்.

சுதமன் “நீ சொன்னதே அதற்கான மறுமொழி. இது மிகமிகத் தொன்மையான கூடம். ஹஸ்தியும் அவர் வழிவந்தவர்களும் அமர்ந்து நாடாண்ட அரியணை. அவர்கள் சூடிய மணிமுடியும் கோலும். அதை மாற்ற முடியாது. வேள்விக்குப் பின் பெரிய அவைக்கூடம் அமைக்கப்படலாம். அப்போதுகூட தொன்மையான நிகழ்ச்சிகள் இங்கேதான் நிகழும்” என்றார். “ஆனால் இடம் வேண்டாமா? நீங்கள் இந்த வெற்று அவையை நோக்கினால் இது பெரிதென்றே தோன்றும். வரவிருக்கும் அரசர்களின் நிரையை நோக்கினால்…” என்று வித்யோதன் சொன்னான்.

சுதமன் “அதை சுரேசர் நோக்குவார். நம் பணி அதுவல்ல. அரியணை துலக்கப்பட்டுவிட்டதா?” என்றார். “அருமணி துலக்குவோர் எழுவர் நேற்றிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் வித்யோதன். சுதமன் அப்போதுதான் அவைமேடையில் அரியணைகளை துலக்கிக்கொண்டிருப்பவர்களை கண்டார். அவர்கள் அரியணையின் பொற்செதுக்குகளையும் அருமணிப் பதிப்புகளையும் துடைத்துக்கொண்டிருந்தனர். “திரும்பத் திரும்ப ஒன்றையே செய்துகொண்டிருக்கிறார்கள். துலங்கிவிட்டது, ஒளிவந்துவிட்டது என்று தோன்றும். ஆனால் துலக்கத்துலக்க ஒளி மிகுந்தபடியே செல்வதையும் காணமுடிகிறது” என்றான் வித்யோதன்.

சுதமன் அந்த அரியணையின் காட்சியால் விழிமயங்கி அசைவிலாது நின்றார். அது ஒரு மாபெரும் மலர்போலிருந்தது. மஞ்சள் மலர். செம்மணிகள் பதிக்கப்பட்டது. அவர் உள்ளம் விம்மியது. அது கோன்மையின் அடையாளம் அல்ல. பல்லாயிரம் படைக்கலங்களால் காக்கப்படும் மையம் அல்ல. வேதச்சொல்லும் அல்ல. அதற்கும் அப்பால் மேன்மையேறிய ஒன்று அதில் இருந்தது. அதை வடிவமைத்த பொற்கொல்லனின் கைகளில் அமைந்து ஒரு தெய்வம் தன்னை எழுப்பிக்கொண்டிருக்கிறது. அது சொல்லுக்கு ஆழத்தை அளிப்பது. வெறும் கோலை காவல்தெய்வமென நிலைநிறுத்துவது.

அவர் பிற அந்தணச் சிறுவர்களைப்போல குருநிலையில் நூல்நவிலச் சென்றபோதே அரியணைகள், மணிமுடிகள், செங்கோல்கள் குறித்த இளிவரலைத்தான் முதலில் கற்றுக்கொண்டார். அவை நிலம்நாடுவோர், தான்தான் என தருக்குவோர், விழைவுக்கு அப்பால் ஏதுமற்றோர் தங்களை தெய்வமென்று அமர்த்திக்கொள்ளும் பொருட்டு உருவாக்கிக் கொண்டவை. அவை எளிய மானுடரை ஆணவம் கொண்டவர்கள் ஆக்குகின்றன. பிறரை கொன்று அழிக்கவும் தன்னைத்தானே அழித்துக்கொள்ளவும் செய்கின்றன.

“அந்தணனின் பணி என்பது காட்டுயானை என கட்டற்று நாற்புறமும் திமிறும் அந்த ஆற்றலை கட்டுப்படுத்துவது. செவிகளில் சொற்களாக, துரட்டியின் கூர்முனையாக அதை ஆள்வது” என்று அவருக்கு கற்பிக்கப்பட்டது. “அறிவின்மைக்குத் துணைநிற்கும் அறிவையே அமைச்சுப்பணி என்கிறோம்” என்று அவருடைய ஆசிரியர் கணபத்ரர் வகுப்பில் சொன்னார். அவரும் உடனிருந்தோரும் நகைத்தனர். “அறிவின்மையை எதுவும் அறிவென ஆக்கிவிடாது. அறிவின்மையின் தீங்கை தணிக்கலாம், அதன் விசையை குறைக்கலாம், மீறி அது இழைக்கும் தீங்குகளை சொல்லால் நிகர்செய்யலாம்.” அத்தனை மாணவர்களுக்கும் அதுவே ஆழப் பதிந்தது. அது மானுடத்திரளை உண்டு ஒளிகொள்ளும் ஒரு கொடுந்தெய்வம் என்றே அவரும் எண்ணியிருந்தார்.

ஆனால் அங்கு நின்று அந்த அரியணையை நோக்கிக்கொண்டிருந்தபோது அவர் வெளியே அலைகொண்டிருந்த மக்களின் ஓசையை கூடவே கேட்டார். அங்கிருந்தபடி அது அவ்வோசையை ஆள்கிறது. எத்தனை தலைமுறைகளாக, எத்தனை எத்தனை ஆண்டுகளாக! ஏனென்றால் அது அம்மக்களுக்கு காவல். வெளியே இருந்து வரும் எதிரிகள் முன் அது எல்லை வரம்பென்றாகி அவர்களைச் சூழ்ந்துகொண்டு காக்கிறது. உள்ளிருந்தே எழும் சிதைவுகள் சிதறல்கள் மீறல்களுக்கு முன் மையமென்று அமைந்து அவர்களை தொகுக்கிறது.

அது இல்லையேல் குலங்கள் இல்லை, குடிகள் இல்லை, நாடுகள் இல்லை, உறவுகள் இல்லை, எந்தச் சொல்லும் பயனுறுமதிப்பு கொள்வதில்லை. அதை எளியோர் உயிர்கொடுத்து காக்கிறார்கள். அவர்கள் அதை தங்கள் விழிதொடு தெய்வமென்றே எண்ணுகிறார்கள். அதன்மேல் அமர்பவனுக்கு அது ஆணையிடுகிறது. அவனை நடத்துகிறது. அவன் மீறிச்செல்வான் என்றால் அவனை வீழ்த்தி தன் காலால் நசுக்கிவிடுகிறது. சுதமன் மெய்ப்புகொண்டார். அதை வித்யோதன் உணர்கிறானா என்று திரும்பி நோக்கி மேலாடையை சீர்செய்துகொண்டார்.

வித்யோதன் உரக்க தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான் “இன்று மாலையே வேள்விக்கான அறிவிப்பு எழக்கூடும் என்றார்கள். இன்று உச்சிப்பொழுதுக்குப் பின் நாள் குறித்திருக்கிறார்கள். ஆணையோலையை தெய்வங்கள் முன் படைத்து சொல்பெற்று அமைச்சுநிலைக்கு அனுப்ப அந்தியாகிவிடும். அமைச்சுநிலையில் இருந்து முறையான ஆணை எழவேண்டும். அதன் பின்னரே அது முரசுகளில் எழும்…” சுதமன் தலையசைத்தார். வித்யோதன் “சற்று முன்னர் இளைய அரசர்கள் அரியணையை நோக்க வந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதை கேட்டேன். நாளை காலையிலேயே இங்கே பெருங்கொடையாட்டு தொடங்கிவிடும்… கருவூலத்தைத் திறந்து பொன் அனைத்தையும் அள்ளி அளிப்பார் அரசர்” என்றான்.

சுதமன் “ஆம்” என்றார். அவர் விழிகள் அரியணைகளிலேயே நிலைகொண்டிருந்தன. வித்யோதன் குரல் தாழ்த்தி “ஆனால் இவ்வண்ணம் முழுச் செல்வத்தையும் அளித்தாகவேண்டும் என்பதனாலேயே பெரும்பகுதிச் செல்வங்களை ஆங்காங்கே நிறுத்திவைத்துவிட்டுத்தான் நால்வரும் நகர்புகுந்தார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டேன். அவ்வண்ணமே இருக்கமுடியும். கருவூலம் ஒழிந்த பின் எதிரிகள் படைகொண்டுவந்தால் அதை எவ்வண்ணம் எதிர்கொள்வது?” என்றான்.

சுதமன் அப்பேச்சை தவிர்க்க விழைந்தார். “மணிமுடி எங்கே?” என்றார். “அது கருவூலத்தின் இரும்பறைகளுக்குள்ளேயே மெருகூட்டப்படுகிறது” என்றான் வித்யோதன். “நன்று, நான் அதையும் ஒருமுறை நோக்கவேண்டும்” என்றபின் சுதமன் திரும்பி அவைக்கூடத்தை பார்த்தார். அத்தனை இருக்கைகளும் பழுது நீக்கப்பட்டிருந்தன. அவற்றில் அமர்ந்திருக்கும் பாரதவர்ஷத்தின் அரசர்களை அவர் கண்டார். திரும்பி நோக்கியபோது அரியணையில் அமர்ந்திருக்கும் யுதிஷ்டிரனையும் திரௌபதியையும் கண்டார்.

“காலையில் பெருங்கொடை தொடங்கினால் கருவூலம் முற்றொழிவதுவரை கொடை நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது நெறி… எத்தனை நாட்களாயினும்” என்றான் வித்யோதன். “ஆனால் இங்கே மக்கள் கொந்தளிப்பதை நோக்கினால் ஒரு பகலுக்குள்ளேயே கருவூலம் ஒழிந்துவிடும்… அரசகுடியினர் ஐவரும் அரசியும் முனிவருக்கும் அந்தணருக்கும் பாணருக்கும் புலவருக்கும் கொடையளிக்கிறார்கள்… எளியோருக்கு அரசமுத்திரை பதித்த பொன்னை அமைச்சர்கள் வழங்குவார்கள். கொடையளிப்பதற்கென்றே முதிய அந்தணர் நூற்றுவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.”

வித்யோதன் அந்த அவைக்கூடத்தில் இருந்து அவன் அறிந்த அனைத்தையும் சொல்லும் விழைவுகொண்டிருந்தான். சுதமன் அவனிடம் கையசைவால் விடைபெற்று கருவூலம் நோக்கி சென்றார். மேலும் சொல்லும் விழைவு ததும்பிய உடலுடன் வித்யோதன் அவருடன் சற்றுதூரம் வந்தான். அவன் அகன்று சென்றதும் சுதமன் சலிப்புடன் தலையசைத்தார். உள்ளத்தை உணராமல் வெளியே ஒலிக்கும் மொழிபோல எரிச்சலூட்டுவது வேறில்லை. அவர் கருவூலம் நோக்கிய பாதையில் தனியாக நடக்கையில் தன் அகம் விந்தையான இனிமை ஒன்றில் திளைப்பதை உணர்ந்தார்.

 

சுதமன் முன்பு கருவூலத்தின் நாட்செலவுப் பகுதியிலும் தொல்பொருட்களின் அறையிலும்தான் பணியாற்றியிருந்தார். அருஞ்செல்வப் பகுதிக்கு அடிக்கடி வந்ததில்லை. ஆயினும் காவலர் அவரை நன்கறிந்திருந்தனர். ஆகவே வெறும் தலையசைவுகளுடன் அவர் படிகளில் இறங்கிச் சென்றார். கருவூலத்தின் மையக்கூடத்தில் இடைவரை உயரமான எட்டு குவைகளாக பொற்காசுகளைப் போட்டு சூழ அமர்ந்து சிறிய பட்டுக் கிழிகளில் கட்டிக்கொண்டிருந்தார்கள். சுதமன் அவர்களை பார்த்தபடி நின்றார்.

அங்கிருந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த துணையமைச்சனான சூஷ்ணன் அவர் அருகே வந்து “கொடையளிக்கவேண்டிய பொருட்கள். அனைவருக்கும் சீராக கிடைப்பதற்காக இந்த ஒழுங்கை செய்திருக்கிறோம். குடியினர் ஒவ்வொருவருக்கும் ஏழு பொற்காசுகள், பதினெட்டு வெள்ளிக்காசுகள். குடித்தலைவர்களுக்கு பத்துமடங்கு” என்றான். “பாணர்களுக்கும் அந்தணர்களுக்கும் முனிவர்களுக்கும் கிழிகள் இல்லை. அவர்களுக்கு அளக்காது அளிக்கவேண்டும் என்பது நெறி. ஆகவே வெறும் கைகளால் பொன்னையும் வெள்ளியையும் குனிந்தே நோக்காமல் அள்ளி அள்ளி மும்முறை வழங்கவேண்டும்.”

சுதமன் அந்த பொற்குவைகளை நோக்கிக்கொண்டு நின்றார். “இவை பல நாடுகளிலிருந்து வந்தவை. நூற்றில் ஒருபங்குகூட அஸ்தினபுரியின் நாணயங்கள் இல்லை” என்று சூஷ்ணன் சொன்னான். “பொன்னும் வெள்ளியும் மட்டும்தானா?” என்றார் சுதமன். “இல்லை, அந்தணர் முனிவர் பாணர் புலவர் நால்வருக்கும் அளிக்கப்படும் பொன்னுடனும் வெள்ளியுடனும் அருமணிகளும் கலந்திருக்கும். அவற்றை அளவும் கணக்கும் பார்ப்பதில்லை.” சுதமன் “படைவீரர்களுக்கு?” என்றார். “மறவர் கொடைபெறுவது நெறி அல்ல. ஆகவே அவர்களுக்குரிய பொன் ஊதியமாக இன்றே வழங்கப்படுகிறது. ஏற்கெனவே அனைத்துப் படையினருக்கும் உரிய செல்வம் இங்கிருந்து சென்றுவிட்டது. இன்னமும்கூட செல்லவேண்டியிருக்கும்.”

சுதமன் “மணிமுடி எங்கு துலக்கப்படுகிறது?” என்றார். “தேவயானியின் மணிமுடி பழுதடைந்திருந்தது. அதை சீரமைக்கும் பணி சிலநாட்களுக்கு முன்னரே தொடங்கி நேற்று நிறைவடைந்தது. ஹஸ்தியின் மணிமுடியை ஒளிதுலக்கினர். அதுவும் முடிந்துவிட்டது. வருக!” என்று சூஷ்ணன் அவரை அழைத்துச் சென்றான். அவர்கள் கருவூலத்தின் இடைநாழிகளினூடாகச் சென்றனர். இடைநாழி முழுமையாக தூய்மைசெய்யப்பட்டு உரிய வெளிச்சம் கொண்டு இனிய பாதையாக மாறியிருந்தது.

தர்ப்பைக்கற்றைகளும் பொற்குடங்களுமாக அந்தணர் குழு ஒன்று ஏவலர்களால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டது. “அவர்கள் எவர்?” என்று சுதமன் கேட்டார். “அவர்கள் இங்குள்ள தெய்வங்களுக்கு பூசனை செய்ய வந்தவர்கள். இக்கருவூலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் குடிகொள்கின்றன” என்றான் சூஷ்ணன். “நூற்றுக்கணக்கான தெய்வங்களா? நானறிந்து இங்கிருப்பவை மாமன்னர் ஹஸ்தி இந்தக் கருவூலத்தை கட்டியபோது நிறுவிய எட்டு திருமகள்கள், தேவகணத் தலைவனாகிய யானைமுகனும் குபேரனும் என பத்து தெய்வங்கள் மட்டுமே” என்றார்.

“அது பொதுவாக அறியப்பட்டது. இங்குள்ள தெய்வங்கள் எவை எவை என தொன்மையான சுவடிகளிலிருந்து படித்து எடுத்தார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் இங்கே சிறுதெய்வங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. படைகொண்டுசென்று எதிரிமன்னர்களின் முடிகளை கொண்டுவந்தபோது உடன்வந்த தெய்வங்கள், சில அருமணிகளுடன் வந்த சில தீயவிசைகளை ஆளும்பொருட்டு நிமித்திகர் நிலைநிறுத்திய தெய்வங்கள். சில அருமணிகளே தெய்வங்கள். கருவூலம் ஒழியும்போது அத்தெய்வங்கள் நிலையழிந்துவிடலாகாது என்றனர். ஆகவே முறையான பூசனைகளினூடாக அவர்களை நிலைக்கோள் அடையச்செய்கிறார்கள் அந்தணர்கள்.”

கருவூலத்தின் உள்ளறைகளில் இருந்து மணியோசையும் வேதச்சொல்லும் ஒலித்தன. “இப்போது வேதச்சொல்லுக்கும் அவிப்படையலுக்கும் ஆட்படும் தெய்வங்கள். இரவெழுந்த பின் குருதிகோரும் தெய்வங்களுக்குரிய பலிச்சடங்குகள் உண்டு” என்றான் சூஷ்ணன். “இங்கே ஒவ்வொன்றும் புதிதாக தோன்றிக்கொண்டிருக்கின்றன” என்றார் சுதமன். “இல்லை உத்தமரே, அவை கண்டடையப்படுகின்றன” என்று சூஷ்ணன் புன்னகைத்தான்.

கருவூலத்தின் உள்ளறையைத் திறந்து அவரை சூஷ்ணன் உள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. மெல்லிய காற்றுச் சுழற்சி இருந்தது. மணிமுடியிருக்கும் அறை ஆலயக் கருவறைபோல அமைக்கப்பட்டிருந்தது. அங்கே அணையா விளக்கு எரியும் என்பதை சுதமன் அறிந்திருந்தார். அறையின் நடுவே அரசமேடையில் ஹஸ்தியின் மணிமுடியும் தேவயானியின் மணிமுடியும் இரு பொற்பீடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குக் கீழே அருமணிகள் அனலென மின்னும் செங்கோல் பிறிதொரு பீடத்தில் இருந்தது. அருகே அரசரின் உடைவாள் பொன்னிறமான நாகம்போல் செதுக்குகள் செதிலென ஒளிர அமைந்திருந்தது. அதைச் சூழ்ந்து பலவகையான படைக்கலங்கள் வைக்கப்பட்டிருந்தன. இருபுறமும் ஏழு திரியிடப்பட்ட நிலைவிளக்குகள் எரிந்தன.

“இங்கே திருமகள் ஒழியலாகாது என ஆணை. ஒவ்வொருநாளும் இவற்றுக்கு கோயில்தெய்வங்களுக்கு நிகரான ஐம்பொருள் பூசனையும் படையலும் உண்டு” என்றான். “ஐம்பொருட்கள் என்னென்ன?” என்று சுதமன் கேட்டார். “தேவயானியின் முடிக்கு கொற்றவைக்குரிய கான்மங்கலங்கள் ஐந்து. ஹஸ்தியின் மணிமுடிக்கு காற்றுத்தேவனுக்குரிய ஐந்து நிலமங்கலங்கள்” என்றான் சூஷ்ணன்.

சுதமன் அந்த மணிமுடிகளை நோக்கியபடி நின்றார். “நாளை அந்தியில் அவை கூடவிருக்கிறது என்றார்கள்… இன்று வேள்விக்கு நாள்குறிக்கும் சடங்கு மேலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது… அந்தணர் அவைகூடி வகுத்தவற்றை அவர்கள் அரசருக்கு அறிவிக்கிறார்கள்… நாளை அரசி திரௌபதி தன் நீள்குழல் முடிந்து அரியணையில் அமர்கிறார். யுதிஷ்டிரன் வஞ்சம் முடித்து கோலேந்துகிறார். இந்நகரில் அறுதிவெற்றி ஒன்று நிகழ்ந்துள்ளது. அறுதிவெற்றியை திருமகள் விரும்புகிறாள் என்பார்கள். இனி இங்கே செல்வம் கொழிக்கும். செல்வமிருக்கும் இடத்தில் கலைகளும் சொல்லும் பெருகும்.”

ஒவ்வொருவரும் சற்றே நிலையழிந்திருப்பதாக சுதமன் எண்ணினார். அவரும்கூட அவ்வண்ணமே இருக்கக்கூடும். அவர் பெருமூச்சுவிட்டார். “பேரரசி குந்தி இங்கில்லை என்பதை நேற்று பலரும் பேசிக்கொண்டனர். அவர்கள் தன் முதிரா இளமையில் விழைந்தது, இன்று அது நிகழ்கையில் எங்கோ இருக்கிறார்.” சூஷ்ணன் அவருடைய எதிர்வினையை எதிர்பார்த்தான். அது எழாதபோது “அப்படிப் பார்த்தால் மூத்தவர் என இங்கே எவருமில்லை. இங்குள்ள எல்லா விழிகளும் புதியவை” என்றான்.

சுதமன் “நான் கிளம்புகிறேன்” என்றார். “நீங்கள் பேரமைச்சர் சுரேசரிடம் சொல்லலாம், இங்கே அனைத்தும் முறையாகவே உள்ளன. எதிலும் குறைவில்லை. ஆணைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று சூஷ்ணன் சொன்னான். சுதமன் நடந்தபோது அவன் வெளியேவந்து அறைக்கதவை மூடினான். அதன் ஓசை சங்கொலிபோல எழுந்தது.

அவருடன் வந்தபடி “நீடுகாலம் நோன்பிருந்தவற்றை அடையும்போது மானுடர் நிறைவடைவதில்லை என்று நேற்று ஒரு புலவர் பாடினார். ஏனென்றால் அடையும் எதுவும் இழந்தவற்றுக்கு நிகராவதில்லை என்றார். எனக்கு அது மெய் என்று சில தருணங்களில் தோன்றுகிறது. இவர்கள் அடைந்திருப்பவை எல்லாமே தங்கள் மைந்தரின் குருதியை அளித்து அல்லவா?” என்றான் சூஷ்ணன்.

சுதமன் திரும்பி நோக்கினார். சூஷ்ணன் மெய்யாகச் சொல்ல விழைந்தது அதுவே என்று தெரிந்தது. அதை மறைக்கும்பொருட்டே வேறு சிலவற்றை சொல்லிக்கொண்டிருந்திருக்கிறான். அவர் சம்வகையின் சொற்களை நினைவுகூர்ந்தார். “நான் நகரை ஒருமுறை சுற்றிவந்து அனைத்து ஆலயங்களையும் பார்வையிடவேண்டும் என்று சுரேசரின் ஆணை” என்றார். “ஆம், அத்தனை தெய்வங்களும் நிறை செய்யப்படவேண்டும். இது தெய்வங்கள் அனைத்தும் விழிதிறந்து எழும் பொழுது” என்றான் சூஷ்ணன்.

முந்தைய கட்டுரைஊழும் பொறியியலும்
அடுத்த கட்டுரைசரியாகச் சொல்லப்பட்ட கதைகள்- காளீஸ்வரன்