‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49

பகுதி ஐந்து : விரிசிறகு – 13

பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை நோக்கும்பொருட்டு இருபுறமும் நின்றிருந்த மக்கள் முண்டியடித்தனர். அத்தனை கட்டுப்பாடுகளும் அழிய சாலை மழைவிழும் ஓடைநீர் என கொந்தளித்தது. அதன் நடுவே அவளுடைய தேர் சுழன்றும் அமைந்தும் சென்றது. வாழ்த்தொலிகளின் அதிர்வு தன் பற்களை கூசவைப்பதுபோல் உணர்ந்து சம்வகை வாயை இறுக்கிக்கொண்டாள். அவள் விழிகள் கூசி நிறைந்து நீர்வழிந்து உலர்ந்து மீண்டும் கலங்கின.

பேரரசியின் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டையை முதலில் நோக்கியபோது அவள் விழிகளில் எந்த மாறுதலும் தென்படவில்லை. தேர் மாற்றிக்கொண்டபோது, கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோது, கோட்டைக்குள் கிழக்கு உள்முற்றத்தில் பெருகிநிறைந்திருந்த மக்கள்திரளை நோக்கியபோது அவள் முகம் உறைந்ததுபோல் இருந்தது. உவகையென்றோ நெகிழ்வென்றோ கசப்பென்றோ ஏதுமில்லை. எதையும் நினைவுகூர்பவளாகவோ எதிர்பார்ப்பவளாகவோ தோன்றவில்லை. கற்சிலை முகம். தெய்வங்களுக்குரியது கல்முகமே.

சம்வகை விழிகளால் துழாவிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒற்றர்கள் சார்வாகர்களின் ஒரு குழு நகருக்குள் நுழைந்துவிட்டிருக்கும் செய்தியை அளித்திருந்தனர். அவர்கள் நகருக்கு வெளியே இடுகாட்டில் தங்கியிருந்தனர். முதலில் அவர்களில் ஒருவரே தோன்றினார். மேலும் எழுவர் பின்னர் வந்தனர். சுடுகாட்டின் பெருச்சாளிகளையே அவர்கள் உணவாக்கினர். பெருச்சாளித்தோலையே ஆடையென அணிந்தனர். கையிலேந்திய ஞானக்கோல் அன்றி துணையின்றி இருந்தனர். இரவும் பகலும் இன்றி சிவமூலிகையின் புகையில் மெய்மறந்து அகமழிந்து விழிசிவந்து அமர்ந்திருந்தனர்.

அவர்கள் நகர்நுழைய ஒப்புதல் இல்லை. ராஜசூயம் போன்ற பெருவேள்விகளின்போது மட்டுமே ஞானத்தின் தரப்பினரும் உள்ளே வர அழைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை எவரும் தடுக்கவும் முடியாது. மக்கள் அவர்களை அஞ்சினர் என்பதொன்றே அவர்களை தடுத்தது. அவர்களைக் கண்டதும் அனைவரும் விலகி வழிவிட்டனர். எந்தப் பெருந்திரளிலும் அவர்கள் தன்னந்தனியர்களாகவே நடந்தனர். அவள் அவர்களில் எவரேனும் விழிக்கு தென்படுகிறார்களா என்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவர் எக்கணமும் அங்கே தோன்றக்கூடும். ஏதேனும் ஒன்றை சொல்லக்கூடும். அந்த நாளின் மங்கலங்களை அழிக்கும் ஒரு சொல்லை. அவர்களின் தோற்றமே மங்கலங்களை சிதைப்பது. அவர்கள் வாழ்வது அதற்காகவே.

“மங்கலங்களுக்கு எதிர்நிற்பதே அவர்களின் செயல்பாடு. அதன்பொருட்டே தங்களை அவ்வண்ணம் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அமங்கலர் என்றே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்” என்றார் சுரேசர். “அதுவே அவர்களின் பணி. அவர்களின் கொள்கை. ஏனென்றால் எந்த மங்கலமும் நிலைபேறின் விளைவு, எந்த நிலைபேறும் அடித்தளத்தில் குருதி கொண்டது என அவர்களின் நூல்கள் சொல்கின்றன.” அவள் அதை தன்னுள் சொல்லிக்கொண்டே இருந்தாள். பின்னர் சுரேசரிடம் “அது மெய் என்று என் அகம் சொல்கிறது” என்றாள்.

“நன்று” என்று அவர் வெடித்து நகைத்தார். “இன்றுவரை பாரதவர்ஷத்தில் மாறாத ஒரு வரலாறு உள்ளது. இளமையில் எளியோருக்கு இரங்கி அரசை வெறுத்தவர்களே பின்னாளில் அரசின்பொருட்டு ஏழைகளை வெறுப்பவர்களாக ஆனார்கள். அரசாண்ட கொடுங்கோலர்களோ முடிதுறந்து கானேகிக் கனிந்தனர்.” அவள் சுரேசரிடம் வெறுத்தது அதைத்தான். அவரிடம் இரக்கமற்ற ஓர் இளிவரல் இருந்தது. கூரியது, துணித்துக் கடந்துசெல்கையிலும் குருதிபடியாத ஒளிகொண்டது.

உள்கோட்டை முற்றத்தில் சுரதன் தன் இளையோன் சுகதனுடன் அரசஉடை அணிந்து நின்றிருந்தான். அவனைச் சூழ்ந்து அணியுடையுடன் வீரர்கள் நின்றனர். அவர்கள் இருவரும் மலர்ந்த முகங்களுடன் இருப்பதை சம்வகை கண்டாள். பேரரசி சற்றே திரும்ப அவள் உதடசைவாக “சிந்துநாட்டு அரசர் ஜயத்ரதனின் மைந்தர்கள் சுரதனும் சுகதனும்” என்றாள். பேரரசி அச்சொற்களை புரிந்துகொண்டு விழிமலர மைந்தர்களை நோக்கினாள். முதல்முறையாக அவள் முகத்தில் புன்னகை எழுந்தது. அது கனிந்து மானுடத்தன்மை கொண்டது. அவள் உதடுகளில் ஒரு சொல் எழுந்து அமைந்தது. “மைந்தர்கள்” என்று அவள் சொன்னாள். மேலும் கனிந்து “இனியவர்கள்” என்றாள்.

பெருந்திரளிலும் பேரோசையிலும் உதட்டுமொழியே உதவுவது என்று அவளிடம் சுரேசர் பலமுறை சொல்லியிருந்தார். நெடுநாள் அவளால் அதை கற்க இயலவில்லை. ஓசையெழாதபோது அச்சொல் நாவை விட்டு வெளியே கிளம்பவில்லை என்று எப்போதுமே தோன்றியது. ஆனால் பின்னர் அதை கற்றேயாகவேண்டுமென்ற நிலை எழுந்தது. முயன்றபோது ஒரே நாளில் அதை உள்வாங்க முடிந்தது. அதன்பின் ஒன்றை அவள் உணர்ந்தாள், ஒலியிலாச் சொல் முற்றிலும் பிறிதொன்று. அது செய்திகளை மட்டுமே சொல்லமுடியும், உணர்வுகளை அல்ல. ஆகவே அதில் கரவுகளும் மடிப்புகளும் இல்லை. அது இலக்கு நோக்கிச் செல்லும் அம்பு, அதனால் வளைய இயலாது. அதன் சொற்கள் அனைத்துமே முனைமழுங்காமல், தேய்வுகொள்ளாமல் அன்று செய்தவை போலிருந்தன.

அதை கற்றுக்கொண்ட நாள் முதல் அவளைச் சூழ்ந்திருந்த உலகம் முற்றாக மாறியது. நெடுந்தொலைவில் சேடிப்பெண் பேசுவதை அவளால் அறியமுடிந்தது. காவல்மாடத்திலிருக்கும் படைவீரர்கள் சொல்லும் இழிசொற்கள் குருதித்தசைத் துண்டுகள் என வந்து முன்னால் விழுந்தன. அகன்று கூடி நின்றிருக்கும் மக்கள்திரளின் பேச்சொலி ஒற்றை முழக்கமாகவே எப்போதுமிருந்தது. அது தனித்தனியான பல்லாயிரம் உரையாடல்களாக உடைந்து பெருகி விரிந்தது. விழிகளால் சாலையில் செல்லும் தெய்வவடிவை நோக்கிக்கொண்டிருக்கும் அன்னை தன் இடைக்குழவியிடம் இன்சொல்தான் உரைக்கிறாள். இளம்பெண் எங்கோ நின்று நோக்கும் காதலனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். வசைச்சொற்கள், பழிச்சொற்கள், இளிவரல்கள்.

மானுடர் தனித்துச் சொல்லும் சொற்களை அவள் கேட்கலானாள். அவர்கள் துயருற்றிருக்கையிலும் இன்புற்றிருக்கையிலும் அரற்றினார்கள். நினைவுகளின் பெருக்கு சொற்களென உதடுகளில் கசிந்தது. காதலின் போதையில் பிதற்றினார்கள். அவர்களின் உள்ளத்திலிருந்து உதடுகளுக்கு அவர்களே அறியாத பாதை ஒன்றிருந்தது. அதை உணர்ந்தபின் அவள் மானுடரை விரும்பலானாள். “இன்னும் செல்லும் தொலைவு உண்டு. பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில், விலங்குகள் அசைபோடுவதில் எல்லாம் சொல்லெழத் தொடங்கும். நாய்வாலும் மான்செவியும் உன்னிடம் பேசத்தொடங்கும்” என்றார் சுரேசர்.

திரௌபதி மைந்தரின் பெயர்களை சொல்லிக்கொண்டிருப்பதை அருகே சென்றபடி அவள் பார்த்தாள். அஸ்தினபுரியின் மீட்டுக் கட்டிய சாலையினூடாகச் செல்கையில் பேரரசி புது விழிகள் கொண்டு நின்ற மாளிகைகளை பார்க்கிறாளா என்று சம்வகை நோக்கினாள். அவள் எதையுமே நோக்கவில்லை என்று தோன்றியது. மெய்யாகவே எவையும் அவள் கண்ணுக்குப் படவில்லையா என்ன? அவள் தன்னுள் மட்டுமே நோக்குபவளாக ஆகிவிட்டிருக்கிறாளா என்ன? மைந்தர்துயர் அவளை அவ்வண்ணம் ஆக்கிவிட்டிருக்கிறதா? அஸ்தினபுரியை அவள் வென்றெடுத்திருக்கிறாள். வஞ்சநிறைவு செய்து நகர்புகுந்திருக்கிறாள். இத்தருணம் காவியங்களால் பாடப்படவிருப்பது. முடிவற்று மீள நிகழ்த்தப்படவிருப்பது. இன்று அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் காலம் பல்லாயிரம் கைகள் நீட்டி பெற்றுக்கொள்ளவிருக்கிறது.

“அரசருக்குரிய இயல்பென்ன என்று கேட்கப்பட்டபோது முதுமன்னர் யயாதி சொன்ன சொல் ஒன்று உண்டு, யானைமேல் இயல்பாக இருத்தல்” என்று சுரேசர் ஒருமுறை சொன்னார். “அது எவருக்கும் இயல்வதல்ல என்றே நான் உணர்கிறேன். யானையின் மேலிருக்கையில் யானை என தன்னை ஆக்கிக்கொள்ளா மானுடர் அரிது. யானையை தானாக்கிக்கொள்வதை நோக்கி செல்லாதவருமில்லை. யானையென எளிய மானுடத்திரள் நடுவே செல்கையில் நிலத்தில் காலூன்றி எளியோன் என உணர்வதென்பது யோகியர் மட்டுமே அடையும் பெருநிலை. பிரம்மவடிவென்றும் ஊனுடலென்றும் ஒரே தருணத்தில் தன்னை உணர்தலுக்கு நிகரானது அது.”

சுரதனும் சுகதனும் மெய்யான உவகையுடன் இருப்பதாகவே அவளுக்குப் பட்டது. அவர்கள் பேசிக்கொள்வதை அவள் கேட்டாள். அவர்கள் இன்சொற்களையே சொன்னார்கள். சுரதன் அகஎழுச்சியுடன் “பேரரசி என்னை அறிந்திருக்கிறார். என் பெயர் அவருக்கு முன்னரே தெரிந்திருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டிருந்தான். சுகதன் “நான் அவர் தேரிறங்கியதுமே சென்று பேசுவேன்” என்றான். சுரதன் “அவ்வாறு செல்ல முறைமை இல்லை…” என்றான். “நான் அவர் மைந்தன்… எனக்கு எந்த முறைமையும் தேவையில்லை” என்றான் சுகதன். “எனில் நீ முன்னால் செல்… நான் உன்னைப் பிடிக்க வருபவன்போல தொடர்ந்து அவர் அருகே வந்துவிடுகிறேன்” என்றான் சுரதன்.

அவள் அவன் விழிகளை நோக்க விழைந்தாள். மேலும் அருகே சென்று, மேலும் ஆழமாக. அங்கே அந்தப் பித்து எஞ்சியிருக்கிறதா என்று. அது பேரரசியைக் கண்டதும் கரைந்தழிந்துவிட்டிருக்கக் கூடும். அவனுடைய உள்ளம் ஒரு சிறு நுரைக்குமிழி. அது அத்தனை பெரிய விசையை தாளாது. அவன் விழைந்ததே பேரரசியின் விழிகளுக்கு முன் திகழவேண்டும் என்பதாக இருக்கலாம். எளியோனாக ஆகிவிடக்கூடாதென்பதே அவனை அவ்வண்ணம் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவன் காணும் தந்தையுருவென்பது ஒரு மெய்மை. விழியற்ற தந்தையால் ஆட்டுவிக்கப்படுபவன் அவன் என்பது உண்மை. ஆனால் அவன் பித்தன். பித்து தன்னை மறைக்கவும் கற்றிருக்கக் கூடும்.

அஸ்தினபுரியின் காவல்கோட்டங்களில் முரசு முழங்கிக்கொண்டிருந்தது. ஆனால் பெருமுரசுகளின் இடியோசை நகரில் நிறைந்திருந்த பேரோசையில் குமிழிகளென உடைந்தழிந்தது. தலைக்குமேல் எழுந்த காவல்மாடத்தில் முரசுத்தோல்மேல் முழைக்கழிகள் ஓசையில்லாமல் துள்ளி நடமிடுவதை அவள் கண்டாள். அவற்றின் தோலதிர்வை மட்டுமே உணரமுடிந்தது. அரண்மனைக் கோட்டைக்குமேலிருந்து கொம்புகள் ஒலித்தன. குருவிகளின் அகவலோசை என. பாஞ்சாலத்து அரசியின் விற்கொடி எழுந்து பறக்கத் தொடங்கியது. தேர் உள்கோட்டையைக் கடந்து அரண்மனை முகப்பை அடைந்தது.

சம்வகை விழிகளைச் செலுத்தி சிந்துநாட்டு அரசி அங்கே நின்றிருப்பதை கண்டாள். சிந்துநாட்டு அரசி முதலில் தன் மைந்தர்களையே நோக்கினாள். அவர்கள் மெய்யான மகிழ்வுடன் வருவதைக் கண்டதும் அவள் கொண்ட உளக்குழப்பம் அழிய புன்னகை புரிந்தாள். அவர்கள் அருகணைந்ததும் சிந்துநாட்டு அரசியின் அணிச்சேடிகள் முன்னால் வந்து அவளை வாழ்த்தி மங்கலத்தாலம் காட்டி வரவேற்றனர். இசைச்சூதர் முழங்க சேடியர் வாழ்த்துரை எழுப்பினர். சிந்துநாட்டு அரசி சுடரேற்றிய பொன்னகல் விளக்குடன் முன்னால் வந்து புன்னகையுடன் அவளை வரவேற்றாள். “அஸ்தினபுரிக்கு பாரதவர்ஷத்தின் பேரரசியை வரவேற்கிறேன்” என்றாள். “இந்நாள் இனிவருவோர் சித்தத்தில் இனிதென என்றும் திகழ்க! தங்கள் வருகையால் திருவும் சொல்லும் பெருகி இந்நகர் பொலிவுறுக! அன்னை கொற்றவை என இங்கே அமைக! இங்குள்ளோர் தேவர்களென மகிழ்க!”

பேரரசி அச்சொற்களால் உளம்நெகிழ்வதை சம்வகை கண்டாள். அது அவளுக்கு உடனே உருவாக்கியது ஒரு சிறு ஏமாற்றத்தைத்தான். பேரரசி மெல்லுணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கையில் ஒரு மெல்லிய எரிச்சலை உருவாக்கினாள். ஆனால் அவள் அவ்வண்ணம் இருப்பது நிறைவையும் அளித்தது. அவள் எண்ணிய வடிவம் அது. நெகிழும் கொற்றவையை கோயிலில் அமைக்க முடியாது. அவள் விழிநீர்விடுவதைக் கண்டால் தன் உள்ளம் கசந்துவிடும் என்று தோன்றியது. அவ்வாறு நிகழலாகாது என அவள் வேண்டிக்கொண்டாள். ஆனால் அஞ்சுவதெல்லாம் நிகழும் என்று எங்கோ எவரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அஞ்சுவன எல்லாம் அகத்தே வாழ்வன, அவை அச்சமென எழுந்து தங்களை காட்டுகின்றன.

பேரரசியை சிந்துநாட்டு அரசி உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு கையில் நிறைநீர் பொற்குடமும் மறுகையில் ஏற்றிய பொன்னகலுமாக பேரரசி அஸ்தினபுரியின் அரண்மனைக்குள் நுழைவதை சம்வகை நோக்கி நின்றாள். மெல்ல அவள் உள்ளம் சலித்து தளர்ந்து மண்ணுடன் படிந்தது. எங்கேனும் படுத்து துயிலவேண்டும் என்று தோன்றியது.

 

சம்வகை விழித்துக்கொண்டபோது சுரேசரின் ஏவலன் அவளுக்காக காத்திருந்தான். அவள் ஆடைமாற்றி வந்ததும் வணங்கி “அமைச்சர் காணவிழைகிறார்” என்று அவன் சொன்னான். அவள் தன் கவசங்களை அணிந்துகொண்டு அரண்மனைக்குச் சென்றாள். அஸ்தினபுரியின் அரண்மனை மையக்கோட்டத்திற்கு வெளியே முந்தைய படைத்தலைவரின் மாளிகையை அவளுக்கு அளித்திருந்தார்கள். அங்கே ஏவலரும் பணிப்பெண்களுமாக அவள் தனித்து தங்கியிருந்தாள். பின்னிரவில் மட்டுமே அவள் அங்கே வந்தாள். புலரிக்கு முன்னரே கிளம்பிச் சென்றாள். அந்த மாளிகை அவள் உள்ளத்தில் எவ்வகையிலும் பதியவில்லை. ஆனால் அவள் கால்கள் அதை அறிந்திருந்தன. அவை அவ்விடத்தை பல பிறவிகளாக அறிந்திருக்கின்றன என அவள் எண்ணியதுண்டு.

சுரேசர் தன் அறையில் இருந்தார். காலடியோசை கேட்டு திரும்பி நோக்கி புன்னகைத்து “வருக!” என்றார். அவள் வணங்கி முகமன் உரைத்து தலைக்கவசத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தாள். சுரேசர் புன்னகையுடன் “ஒரு பெரும்பணியை முடித்துவிட்டீர்கள்” என்றார். “நான் எனக்கான ஆணைகளை நிறைவேற்றினேன்” என்று அவள் சொன்னாள். “நீங்கள் ஓய்வெடுக்கச் சென்றிருப்பீர்கள் என எண்ணினேன்” என்றார் சுரேசர். “ஆம், அரண்மனைக்குள் செல்லலாகாது என முடிவெடுத்திருந்தேன். அப்பொறுப்பை சிந்துநாட்டு அரசியிடம் அளிப்பதே முறை எனத் தோன்றியது” என்றாள். “துணைக்கு சுஷமையும் இருக்கையில் நான் செய்வதொன்றுமில்லை.”

“ஆம், அனைத்தும் முறைப்படி முடிந்தன” என்று சுரேசர் சொன்னார். “பேரரசி அரண்மனையில் தன் பழைய அறையையே விரும்பினார். அதை நான் உணர்ந்திருந்தேன். அது ஒருக்கப்பட்டிருந்தது, என்றாலும் வேறு அறைகளையும் ஒருக்க ஆணையிட்டிருந்தேன். ஆனால் நானும் எதையும் சிந்துநாட்டு அரசியின் தெரிவை மீறி செய்ய முனையவில்லை. பேரரசி தன் அறைக்குள் சற்று முன்னர்தான் சென்றார். இப்போது அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்” என்றார் சுரேசர். “அவரது தனிப்பணிக்குரிய ஏவற்பெண்டுகள் உடன் வந்திருக்கிறார்கள். ஆகவே நாம் பெரிதாக இனி ஏதும் செய்வதற்கில்லை. நகரம் அவர்களை எவ்வண்ணம் எதிர்கொள்ளும் என்ற சிறு ஐயம் எனக்கிருந்தது. பொருந்தாத ஒன்றை நான் எதிர்பார்த்தேன். உங்கள் ஆட்சியே நகர்நுழைவை மங்கலம்மிக்கதாக நிகழ்த்தி முடித்தது.”

“என் கடமை” என்றாள் சம்வகை. “பேரரசியிடம் நான் ஓரிரு சொற்களே பேசினேன். அவர் களைத்திருந்தார்.” சுரேசர் “ஆம், அது பயணக்களைப்பு. இந்த இடத்திற்கு அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து கிளம்பி வரவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து, பாஞ்சாலத்தில் இருந்து கிளம்பி வந்திருக்கிறார்” என்றார். சம்வகை பெருமூச்சுவிட்டாள். “அந்தியில் அரசவை கூடவிருக்கிறது. அதில் பேரரசியை அரசர் முறைப்படி சந்திக்கிறார். நெடுநாளாகிறது அவர்கள் சந்தித்துக்கொண்டு” என்று சுரேசர் சொன்னார். “அதில் சிந்துநாட்டு இளவரசர்களை அரசர் சந்திக்கிறாரா?” என்று சம்வகை கேட்டாள். ”ஆம், அதை தவிர்க்கமுடியாது” என்றார் சுரேசர். “அவர்கள் சந்திப்பதே முறை.”

“சிந்துநாட்டரசியின் கோரிக்கையை இன்னமும் முறைப்படி நாம் அரசர்முன் வைக்கவில்லை” என்றாள் சம்வகை. “ஒருவேளை துணிந்து சிந்துநாட்டரசியோ அல்லது அந்த இளவரசர்களோ அதைப்பற்றி அவையில் பேசுவார்களென்றால்…” சுரேசர் இடைமறித்து “அதைப்பற்றிப் பேசத்தான் நான் உங்களை அழைத்தேன்” என்றார். “சிந்துநாட்டரசிக்கு பேரரசி சொல்லளித்துவிட்டார்.” சம்வகை திகைப்புடன் “எதைப்பற்றி?” என்றாள். “சிந்துநாட்டை அஸ்தினபுரியின் படைகள் கைப்பற்றி ஜயத்ரதனின் முடியை சுரதனுக்கு அளிப்பார்கள்” என்றார் சுரேசர். சம்வகை சொல்லவிந்துவிட்டாள். “எப்போது?” என முனகலாகக் கேட்டாள்.

“பேரரசி அரண்மனைக்குள் புகுந்து அகத்தளத்திற்குச் சென்றபோதே அச்சொல் பெறப்பட்டுவிட்டது” என்று சுரேசர் சொன்னார். “மூதரசி காந்தாரியின் அகத்தளத்தை அப்படியே பேணவேண்டுமென ஆணையிட்டிருந்தேன். அரசியின் இருப்பென அங்கே ஓர் அகல் எப்போதும் எரிந்துகொண்டிருக்கட்டும் என்று நிமித்திகர் சிந்துநாட்டு அரசியிடம் சொன்னார்கள். அரசி அவ்வண்ணம் அங்கே ஒரு நெய்விளக்கை ஏற்றினார். பின்னர் அவர் தன் கனவில் அது ஒரு நீலப் பட்டால் மூடப்பட்டிருப்பதாகக் கண்டார். ஆகவே அந்த அகல்சுடர் நீலப் பட்டால் சுற்றப்பட்டுள்ளது. அங்கே நின்றிருக்கையில் அச்சொல் அளிக்கப்பட்டது.”

சம்வகை பேசாமல் நோக்கி அமர்ந்திருந்தாள். “சிந்துநாட்டரசி பேரரசி திரௌபதியை அங்கே அழைத்துச்சென்றார். அச்சுடருக்கு மலரிட்டு வணங்கிவிட்டு அரண்மனைக்குள் குடியேறுவதே முறை என்று அவர் சொன்னார். பாஞ்சாலத்துப் பேரரசி அங்கே நுழைந்தபோது உணர்வுருகிய நிலையில் இருந்தார். அவரால் காலெடுத்து வைத்து உள்ளே நுழைய முடியவில்லை. மலரிட்டு வணங்கியபோது அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் சிந்துநாட்டு இளவரசர்களுடன் வெளியே நின்றிருந்தேன். அறையிலிருந்து வெளியே வந்தபோது பேரரசியின் முகம் அனல்கொண்டதுபோலிருந்தது.”

“எதிர்பாராத தருணத்தில் சிந்துநாட்டு இளையோன் அந்த இடத்தின் உணர்வுநிலையை பொருட்படுத்தாமல் பாஞ்சாலத்துப் பேரரசியின் அருகே சென்று அவரது ஆடைமுனையை பற்றிக்கொண்டு அன்னையே நான் சிந்துநாட்டு இளவரசனாகிய சுகதன் என்றார். பேரரசி முகம் மலர்ந்து அவரை இழுத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார். அவர் விழிகளில் நீர்த்துளிகளைக் கண்டேன். உதடுகள் விம்முவதுபோல குவிவதைக் கண்டேன். அவர் தோளையும் கைகளையும் வருடியபடி நான் உன்னை இளமைந்தனாகக் கண்டதுண்டு என்றார். ஆம், நானும் உங்களை இளமைந்தனாகக் கண்டேன் என்று அவர் சொன்னார். பேரரசி நகைத்துவிட்டார். எப்படி என்றார். நீங்கள் என்னை கண்டால் நானும் கண்டிருப்பேன் அல்லவா என்றார். நானே புன்னகைத்துவிட்டேன்.”

“அத்தருணத்தில் மூத்த இளவரசராகிய சுரதன் முன்னகர்ந்து அன்னையே, எங்கள் நிலத்தை எதிரிகள் கைப்பற்றிக்கொண்டுவிட்டார்கள். எங்கள் தந்தைக்குக் கீழே கோல்கொண்டிருந்த சிற்றரசர் வஜ்ரபாகுவால் நாங்கள் நிலம்விட்டு துரத்தப்பட்டோம்… நாடிலியாக உங்களை நம்பி வந்தோம்” என்றார். பேரரசியின் விழிகள் ஒருகணம் சற்றே மாறின. “அவனைக் கொன்று சிந்துநாட்டு முழு நிலமும் உனக்கு அளிக்கப்படும். உன் கோலுக்கு எதிராக எவரும் ஒரு சொல்லும் உரைக்கமாட்டார்கள்” என்றார். பதைப்புடன் மைந்தனை பேசாமல் தடுக்கமுயன்ற சிந்துநாட்டரசி அச்சொற்களைக் கேட்டு திகைத்து நெஞ்சை பற்றிக்கொண்டார்.”

“பேரரசியின் கால்களைத் தொட்டு சுரதன் வாழ்த்து பெற்றார். அவர் தலைதொட்டு வாழ்த்தியபின் தோளைப் பற்றிக்கொண்டு இன்மொழி சொன்னார். இளையவரைத் தழுவி தன் அறைக்கு அழைத்துச்சென்றார். சிந்துநாட்டரசி விழிநீர் பொழிய அமர்ந்துவிட்டார். சுரதன் என்னை நோக்கி பிறிதொரு ஆணை தேவையா என்றார். இல்லை, அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன என்றேன். சுரதன் புன்னகையுடன் அறைநீங்கினார். நான் இங்கே வந்தேன். உங்களை அழைத்துவர ஏவலனை அனுப்பினேன்.”

சம்வகை பெருமூச்சுவிட்டாள். “பாரதவர்ஷத்தில் இனி என்றும் மறுசொல் என ஒன்று திகழப்போவதில்லை” என்றார் சுரேசர். “உண்மையில் வஜ்ரபாகுவின் அமைச்சர் இங்கே நேற்றே வந்து தங்கியிருக்கிறார். அந்தணர், அனைத்தும் அறிந்தவர். நான் இங்கே வருவதற்கு முன் அவர் இங்கே வந்துவிட்டார். என்னிடம் வஜ்ரபாகுவின் உயிரை மட்டும் விட்டுவிடமுடியுமா என்றார். முடியாது, அவர் அடிபணிந்தாலும் தலைதுணிக்கப்படும். இங்கே அரசியின் சொல் வேறு தெய்வ ஆணை வேறு இல்லை என்றேன். நான் என்ன செய்வது என்றார். வஜ்ரபாகு அங்கிருந்து தப்பி ஓடட்டும். எவ்வண்ணமேனும் இங்கே நகர்புகுந்து அரசியின் கால்களில் விழுந்து அளி இரக்கட்டும். அரசி சொல்மாற்றுவார் என்றால் அவர் உயிர்நிலைக்கும். அன்றி பாரதவர்ஷத்திலோ வெளியிலோ எங்கும் அவர் வாழமுடியாது என்றேன். ஆவன செய்கிறேன் என சற்றுமுன் கிளம்பிச்சென்றார்.”

சம்வகை ஒன்றும் சொல்லாமலிருந்தாள். “சொல்க!” என்றார் சுரேசர். “சுரதன் நிலையுள்ளம் கொண்டவர் அல்ல” என்று சம்வகை சொன்னாள். “ஆம், ஆனால் நச்சுவண்டுகளால் யானைக்கு தீங்கில்லை” என்று சொல்லி சுரேசர் சிரித்தார்.

முந்தைய கட்டுரைமுழுமகாபாரதம் நிறைவு
அடுத்த கட்டுரைஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்