கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்

 

குற்றாலம்

 

 

பூத்த காடு தெய்வத்தின் நிழல் என்ற

குறிஞ்சிப்பாட்டை நினைத்து

உடல் தழுவிச்சூழும் குளிர்காற்றெனும்

பேருவத் தோழனைப் பிரிந்து

ஊரை நோக்கி

காட்டுபெண் புறப்படும்போது

தோழிகள் அஞ்சினர்

 

ஊர் இருந்தது கீழே

ஆதிக்கங்களுக்கும்

அச்சங்களுக்கும் அடியில்.

நடந்தது என்ன என்று

நாலுபேர் நான்குகதை

சொல்லும் இடம்.

வார்த்தைகள் உரசிக்கொண்டு

பொறிபறக்கும் இடம்.

விழிகளிலும் மொழிகளிலும்

அவநம்பிக்கை ஒளிதொழுகும் இடம்

எதுவும் எங்கும்

குற்றமாகக்கூடும் இடம்

எங்கும் எதிலும்

சிறை ஒளிந்திருக்கும் இடம்

 

 

கீழ்நோக்கி வீழ்வதன்றி

அங்கே சென்றுசேர வழியில்லை

விழுந்து விழுந்து

ஊர் நோக்கிச் செல்லும்போது

வானவில்லாக பறந்து உயரக்கூடுமோ?

கொலுசுமணிகளாக

சிதறிப் பரவக்கூடுமோ?

கருங்கல் கோட்டையில்

சிறையிருக்கலாகுமோ?

என்னாவள் இக்காட்டுப் பெண்

என்று தெரியாமல்

திகைத்து நின்றிருக்கிறது

குற்றாலம்

 

 

திரும்புதல்

 

மியூசியமருகேபூங்காவில்
பென்ஷன் வெயில்.
முன்னாள் மந்திரி முன்னாள் நீதிபதியிடம் சொன்னார்.

‘இந்த பூங்கா நான் கட்டியது.
இதோ கற்பலகையில் பெயர் .
இளஞ்சிவப்பு மலர்களுடன் இந்த பூமரம்.
நான் சமத்துவ புரியிலிருந்து கொண்டுவந்தது.
அங்கே நாடெங்கும் ந்கரமெங்கும் இந்தப்பூக்கள்தான்.
கொண்டுவரும்போது சிவப்பு.
ரத்த மலர்கள் என்றார்கள்.

தேவாலயங்கள் கோயில்கள் நிரம்பிய மண்ணின்
வெண்ணிறக்காற்றில் இவை நிறம்கரைந்தன.
காவியின் மண்ணில்
இன்று இவையும் காவி நிறம்.

 

 

 

 

விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா ஆவணப்படங்கள்
அடுத்த கட்டுரைமலேசியப் பயணம்,விருது