‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52

பகுதி எட்டு : விண்நோக்கு – 2

முக்தவனத்தை அவர்கள் அடையும்போது பகல் அணைந்து அந்தி எழத்தொடங்கிவிட்டிருந்தது. பகல் முழுக்க வளைந்த பிரம்புக்கூரைக்குக் கீழே அசைந்தாடிய மஞ்சத்தில் உஜ்வலன் துயிலிலேயே இருந்தான். சுகோத்ரன் அவனருகே நீர்ப்பரப்பை நோக்கியபடி அமர்ந்திருந்தான். படகோட்டிகளின் கரிய முதுகுகள் வெயிலில் நெய்ப்பாறை என மின்னின. அவர்களின் மூச்சொலி சீராக எழுந்தது. படகின் விலாவில் அறைந்த அலைகளின் ஓசையுடன் அது இணைந்தது. அவ்வப்போது வெண்பறவைகள் வந்து பாய்மரக் கயிறுகளின் மேல் அமர்ந்து காற்றுக்கு வெவ்வேறு வகையாக சிறகு கலைத்து அடுக்கி சமன்கொண்டு பின் உந்தி எழுந்து பறந்தன.

படகு கரையணையும்போதுதான் உஜ்வலன் விழித்துக்கொண்டான். “எந்த இடம்?” என்றான். சுகோத்ரன் “முக்தவனம்” என்றான். “வந்துவிட்டதா?” என அவன் எழுந்தான். “நீர்ப்பயணம் மிக விரைவானது. நீர் மண்ணில் குறுக்குவழியை கண்டடைந்து வைத்திருக்கிறது” என எழுந்து கரையை நோக்கியபடி சோம்பல் முறித்தான். “நீங்கள் துயில்கொள்ளவில்லையா?” என்றான். “இல்லை” என்றான் சுகோத்ரன். “நாம் மிகவும் பிந்தி வந்திருக்கிறோம். நாளை காலை இங்கே நீர்க்கடன் நிகழ்கிறது எனில் இன்றிரவு இங்கே எவருக்கும் துயில் இருக்காது. ஆகவேதான் நான் மெய்மறந்து துயின்றேன்” என்றான் உஜ்வலன்.

படகுத்துறையிலிருந்து கொடியசைவால் ஆணை எழுந்ததும் அவர்களின் படகு கரையணைந்தது. சுகோத்ரன் அவன் படகிலிருந்து இறங்கியதும் அவனை எதிர்பார்த்து நின்றிருந்த யுயுத்ஸு விரைந்த காலடிகளுடன் அணுகி தாழ்ந்த குரலில் “நாளைக் காலை சடங்குகள் தொடங்குகின்றன. இக்கணம் வரை மெய்யாகவே சடங்குகள் தொடங்குமா என்று தெரிந்திருக்கவில்லை. இன்றிரவுதான் அனைத்தும் முடிவாகும். இன்னமும்கூட சிலரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றான். “வருக. உங்களுக்கான ஒருக்கங்கள் அனைத்தும் சித்தமாகியிருக்கின்றன!”

உஜ்வலன் “இத்தனை பெரிய இடமா?” என வியந்தான். “நான் நீர்க்கடன் என்னும்போது ஒரு மிகச் சிறிய நிகழ்வு என கருதினேன்.” யுயுத்ஸு அவனை நோக்கி புன்னகை செய்து “பொதுவாக அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் எந்நிகழ்வும் பெரிதாகிவிடுகிறது” என்றான். “இன்று இப்பொழுதுவரை நிகழ்வனவற்றைக்கொண்டு நோக்கினால் மெய்யாகவே இங்கே நாளை காலை நீர்க்கடன் நடக்குமா என்றே ஐயுறுகிறேன்” என்றான். சுகோத்ரன் “நடக்கும்” என்றான். யுயுத்ஸு திகைப்புடன் திரும்பி நோக்கி உடனே நகைத்து “ஆம், நீ நிமித்தநூல் கற்றவன் அல்லவா?” என்றான். “உன் தந்தை மட்டுமே ஷத்ரியகுடியில் நிமித்தநூல் கற்றவர் என்பார்கள். நீ கற்கச் சென்றதை இங்கே அனைவருமே மறந்துவிட்டிருக்கின்றனர்.”

மெல்லிய புன்னகையுடன் யுயுத்ஸு தொடர்ந்தான் “உண்மையில் உன் பெயர் எவருக்குமே நினைவில் இல்லை. நிமித்தநூல் கற்கச் சென்றவனை ஷத்ரியர் நினைவுகூர விழையவில்லை போலும்.” சுகோத்ரன் “அது இயல்பு” என்றான். “ஏன்?” என்றான் யுயுத்ஸு. “ஷத்ரிய இயல்பை கைவிடாமல் நிமித்தநூலை கற்க இயலாது.” யுயுத்ஸு ஒரு கணத்திற்குப் பின் “ஷத்ரிய இயல்பை கைவிடாமல் எந்நூலையும் கற்க இயலாது, அரசியல் நூல்களைக் கூட” என்றான். “ஏன்?” என்றான் உஜ்வலன். “ஏனென்றால் கற்றல் வெல்லுதலுக்கு எதிரானது. அறிதல் ஆட்கொள்ளலுக்கு மாற்றானது” என்று யுயுத்ஸு சொன்னான். உஜ்வலன் “எண்ணிநோக்குவதற்குரியதே” என்றான். அவன் சொற்கள் உள்ளடங்க தலை எடைகொண்டதுபோலத் தழைந்தது.

“உண்மையில் உன் பெயர் என் எண்ணத்துக்கு எப்படி வந்தது தெரியுமா? நேற்று முன்னாள் அரசர் யுதிஷ்டிரன் அவையமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அபிமன்யுவின் கருவில் எஞ்சுவதே குருகுலத்தின் ஒரே குருதித்துளி என்றார். அதை இந்நீர்க்கடனில் எவ்வண்ணமோ அறிவிக்கவேண்டும் என்றார். என்ன விந்தை என்றால் எனக்கும் அதுவே இயல்பாக உடனே தோன்றியது. அவை கலைந்து குடிலுக்கு நடக்கும்போதுதான் நான் இயல்பாக உன்னை நினைவுகூர்ந்தேன். வியந்து நின்றுவிட்டேன். எப்படி உன்னை மறந்தேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். மீண்டும் அரசரின் குடில்நோக்கி சென்றேன். அரசே ஒருவன் உயிருடன் இருக்கிறான். நீங்கள் அவனை மறந்துவிட்டீர்கள் என்றேன். உடனே அவருக்கும் உன் பெயர் நினைவுக்கு வர அவர் முகம் பதற்றம் கொண்டது.”

“உன் தந்தை அவையிலிருந்தார். அவர்கூட உன்னை நினைவுகூரவில்லை. நான் சொல்லக்கேட்டதும் அவர் உன்னை நினைவுகூர்ந்து நிலைகுலைவதுபோலத் தெரிந்தது. நானே உன் பெயரைச் சொல்லவேண்டும் என்பதுபோல அவர்கள் சொல்லின்றி அமர்ந்திருந்தனர். நான் நம் மைந்தன் சுகோத்ரன் இன்னமும் நலமாக இருக்கிறான். குருகுலத்தின் எஞ்சும் குருதி அவன் அல்லவா என்றேன். ஆம் என்று அரசர் முனகினார். பீமசேனன் ஆம், அவனே. அவன் வரட்டும், அவன் இளவரசனாக முடிகொள்ளட்டும் என்றார். பார்த்தன் ஒன்றும் சொல்லவில்லை. உன் தந்தை தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.”

“என்ன முடிவெடுப்பது என தெரியாமல் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். இதில் முடிவெடுக்க என்ன உள்ளது, மைந்தன் அஸ்தினபுரியின் குருகுலத்தின் எஞ்சும் குருதி என்பதை எவர் மறுக்க இயலும் என்று நான் கேட்டேன். ஆனால் ஏதோ ஒன்று அனைவரையும் தடுத்தது.” உஜ்வலன் உரத்த குரலில் “அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டாலும் நாம் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை உறுதியாக பற்றிக்கொள்கிறோம்” என்றான். “இருக்கலாம். நானே ஒரு வழி சொன்னேன். விதுரரிடம் உசாவலாம் என்றேன். அனைவரும் உடனே அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆம், விதுரர் முடிவெடுக்கட்டும் என்றார்கள்.”

“விதுரரிடம் நானே உசாவினேன். நீ வந்தாகவேண்டும் என்று அவர் சொன்னார். உனக்கு முறையான செய்தி அறிவிக்கப்படவில்லை என்பதையே அவர் அப்போதுதான் அறிந்தார். அவன் கல்விநிலைக்குச் சென்றமையால் அழைப்பு அளிப்பது குறித்த குழப்பம் வந்திருக்கலாம் என்றேன். கல்விநிலைக்கு அனுப்புவதில் இருமுறை உண்டு. குடித்தொடர்பும் குலநீட்சியும் முற்றறுத்து மைந்தனை ஒரு குருநிலைக்கு கொடையளித்தல் உண்டு. அது அதர்வவேத குருநிலைகள் கோரும் வழக்கம். அவர்களை மீண்டும் அழைக்கமுடியாது. வழக்கமாக கல்விநிலைகளுக்கு அனுப்புகையில் பூணூல் மாற்றி திரும்ப அழைத்துக்கொள்வதே நெறி. அவன் அவ்வண்ணம் மாணவனாகவே அனுப்பப்பட்டான். அவன் இக்குடிக்கும் குலத்திற்கும் உரியவன். அவன் வந்தாகவேண்டும் என்றார்.”

“நான் வந்தாகவேண்டும்” என்றான் சுகோத்ரன். “நீர்க்கடன் முடிக்க நீ இருப்பது இன்றியமையாதது… ஒருவேளை அதன்பொருட்டே உன்னை தெய்வங்கள் விட்டுவைத்துள்ளன போலும்” என்றான் யுயுத்ஸு. “வருக!” என அழைத்துச்சென்றான். செல்லும் வழியில் அங்கே நிகழந்தனவற்றை சொல்லிக்கொண்டே வந்தான். “இங்கே எவருமே இயல்பான உளநிலையில் இல்லை. அனைவரும் பித்தர்கள். அனைவரும் நோயுற்றவர்கள்” என்றான். “நோய் தொடங்கியது நெடுநாட்களுக்கு முன்னரே. அது இப்போதுதான் தெரிகிறது.” சுகோத்ரன் “எவருக்கும் முற்றிலும் தெரியாத ஊழ் என ஏதுமில்லை. அதுவே நிமித்தநூலின் அடிப்படை. ஊழ்க்கணிப்பு செய்யும்போது கேட்பவரின் உள்ளிருந்து அதை ஏற்றுக்கொள்ளும் ஒரு நுண்புலன் உள்ளது. அதை நோக்கியே நிமித்திகன் பேசுகிறான்” என்றான்.

அவர்களுக்காக காத்து நின்றிருந்த சிறிய தேரில் சுகோத்ரன் ஏறிக்கொண்டான். உஜ்வலன் அருகே ஏறி அமர்ந்தான். “அருகே தெரிகிறது குடில்நிரை. ஆயினும் நீங்கள் தேரில்தான் சென்றாகவேண்டும். அதுவே முறை” என்றான். யுயுத்ஸு “நான் புரவியில் உடன் வருகிறேன்” என்றபின் செல்க என தேர்ப்பாகனுக்கு கைகாட்டினான். தேர் கிளம்பி மரப்பலகை பரப்பப்பட்ட பாதையில் ஓசையுடன் சென்றது. குடில்தொகைகளிலிருந்து ஓசையும் புகைமணமும் எழத்தொடங்கின. உஜ்வலன் “அடுமனைப்புகையுடன் வேள்விப்புகை கலக்கும் சிற்றூர் என ஏதோ காவியத்தில் படித்த நினைவு” என்றான்.

சற்று அப்பால் கங்கை நோக்கி விழும் சிற்றோடை ஒன்றை அருவியாக்கி அதில் சுழலுருளையை அமைத்திருந்தனர். அது ஒன்றையே சொல்லிக்கொண்டு சுழல அதில் இணைக்கப்பட்ட கழுக்கோல்கள் தங்களைத் தாங்களே சுற்றிக்கொண்டு கிளம்பி அருகிருந்த குடிலுக்குள் சென்றன. “மாவரைக்கும் பொறி” என்று உஜ்வலன் சொன்னான். “மாளவத்தில் இவ்வாறு நான் கண்டதில்லை.” குடிலுக்குள் எடைமிக்க குழவிகள் சுழலும் ஒலி கேட்டது. “ஓர் மானுட உள்ளம், ஓயாத எண்ணச் சுழலோட்டம்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் அவன் பேச்சை கேட்டதுபோல் காட்டாமல் குடில்களின்மேல் பறந்த கொடிகளைப் பார்த்துக்கொண்டு சென்றான்.

“நீங்கள் இளவரசர். இங்கு வந்து நீங்கள் இறங்கும்போது முரசுகளும் கொம்புகளும் முழங்கியிருக்கவேண்டும்” என்றான் உஜ்வலன். “இது நீர்க்கடன் செய்யும் இடம், நகரல்ல” என்றான் சுகோத்ரன். “அது பொருட்டல்ல. யுதிஷ்டிரன் அவ்வண்ணம் முரசும் கொம்பும் இன்றி வந்திறங்குவாரா என்ன?” என்று உஜ்வலன் கேட்டான். “அரசர்கள் முறைமைகளால் உருவாக்கப்படுகிறார்கள். அதை மறக்கவேண்டியதில்லை.” சுகோத்ரன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் இவர் வந்தது நன்று… இவர் உங்களுக்கு தந்தை முறை கொண்டவர். இவர் வரவேற்றதனால் முறைமை ஓரளவு காக்கப்பட்டது என்று கொள்ளலாம்” என்று உஜ்வலன் சொன்னான்.

நீர்க்கடனுக்கான ஒருக்கங்கள் ஏறத்தாழ முடிந்துவிட்டிருந்தன. அந்திப்பொழுது ஆகி விட்டிருந்தமையால் பல்லாயிரம் நெய்விளக்குகளும் பந்தங்களும் எரிந்தன. கங்கையின் படித்துறை செஞ்சுடர் சரடுகளால் ஆனதாக இருந்தது. உஜ்வலன் அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். “விண்மீன்களைப்போல!” என்றான். “விண்மீன்கள் நீத்தாரின் விழிகள் என்பார்கள்… முடிவிலாக் கோடி. அத்தனைபேர் இங்கே மண்ணில் போரிட்டு மடிந்திருக்கிறார்கள்.” அவன் உரக்க நகைத்து “மண்ணின் துகள்களின் எண்ணிக்கையைவிட அது மிகுதி என்று படுகிறது” என்றான். சுகோத்ரன் புன்னகைத்தான்.

சுகோத்ரன் புன்னகைப்பதை உணர்ந்து திரும்பி நோக்கிய உஜ்வலன் “நான் மண் நாடுவதில் பொருளில்லை என்று சொல்லவில்லை. எதிலும் பொருளுண்டு. மண் ஆழ்ந்த பொருள் உடையது. இல்லையென்றால் இத்தனைபேர் அதற்காகப் பொருதி மடிந்திருக்க மாட்டார்கள்” என்றான். “உலகியலைத் துறக்க முயல்பவர்கள் எவருமே முழுமையாக வென்றதில்லை என்றுதான் நிமித்தநூல்கள் சொல்கின்றன. ஏனென்றால் மானுட உடல் அன்னத்தாலும் அனலாலும் ஆனது.”

அவனுக்கான குடில்வாயிலில் சகதேவன் நின்றிருந்தான். அவனை எதிர்பார்த்துத்தான் அவன் நின்றிருக்கிறான் என தெரிந்தது. ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏவலனிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு குளம்போசை கேட்டு இயல்பாகத் திரும்புவதுபோல சுகோத்ரனை நோக்கி விழிகளை விரித்தான். சுகோத்ரனால் முதலில் அவனை அடையாளம் காண முடியவில்லை. அடையாளம் கண்டுகொண்டதும் அவன் உள்ளம் படபடத்தது. வண்டியிலிருந்து அருகே சென்று தந்தையின் காலடிகளைத் தொட்டு வணங்கினான். சகதேவன் முகம் ஒவ்வாமைகொண்டு சுளித்திருப்பதுபோல தோன்றியது. “நீடுவாழ்க! சிறப்புறுக!” என வாழ்த்தி திரும்பி உஜ்வலனை நோக்கி “இவர் யார்?” என்றான். “என் சாலைத்தோழர். மாளவத்து அந்தணர். கௌண்டின்ய குலத்து உஜ்வலன்” என்றான் சுகோத்ரன்.

“மாளவம் இப்போரில் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது” என்றான் சகதேவன். அவன் ஏன் அதைச் சொன்னான் என எண்ணி, பின் அவன் நிலைகுலைந்திருப்பதை சுகோத்ரன் உணர்ந்தான். நிலைகுலைகையில் மானுடர் தங்கள் மெய்யான இயல்புகளில் ஒன்றை பொய்யான நடிப்பினூடாக வெளிப்படுத்துகிறார்கள். உஜ்வலன் “ஆம், அஸ்தினபுரி வென்றது” என்றான். அச்சொற்களில் இருந்த கூர்மை சகதேவனை தைக்க அவன் உஜ்வலனை கூர்ந்து நோக்கி “நீங்கள் நிமித்தநூல் கற்பது ஏன், அந்தணரே?” என்றான். “எங்கள் குடியில் நிமித்தநூல் பயில்வது அமைச்சர்பணிக்கு இன்றியமையாதது என கருதப்படுகிறது” என்றான் உஜ்வலன்.

“ஆம், நிமித்தநூல் ஆட்சிநூலுக்கு இன்னொரு பக்கம் என்பார்கள்” என்றான் சகதேவன். “அந்தணருக்கும் பிறருக்கும் நிமித்தநூலின் பயன்கள் வேறு” என்றான் உஜ்வலன். “அந்தணர் நிமித்தநூலை படைக்கலமாகக் கொள்பவர்கள். பிறர் அதன் படைக்கலமாக தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.” சகதேவன் அவனிடம் மேலும் பேச விழையவில்லை. சுகோத்ரனிடம் “நீ இங்கே ஓய்வெடுக்கலாம்… முடிந்தால் பின்னிரவில் வந்து மூத்தவரைக் கண்டு வாழ்த்து பெற்றுக்கொள்… அவரும் உன்னைப் பார்க்க விழையக்கூடும்” என்றான்.

“நாங்கள் ஓய்வெடுக்க விழையவில்லை. உடனே வந்து அவரைப் பார்க்க எண்ணுகிறோம்” என்றான் உஜ்வலன். “ஏனென்றால் சில முடிவுகளை முன்னரே எடுக்க நாம் அவருக்கு பொழுதளிக்க வேண்டும்.” சகதேவன் “என்ன?” என்றான். உஜ்வலன் அவனை நேர்விழிகளால் நோக்கி “அஸ்தினபுரியின் குருகுலத்துக் குருதிவழியில் எஞ்சியிருக்கும் ஒரே இளவரசர் அஸ்தினபுரியின் எதிர்கால அரசரைப் பார்ப்பதற்கு உரிய பொழுது என்றும் சில உண்டு. நாளை காலை நாமகள்பொழுது முதல் நீர்க்கடனுக்காக கணிக்கப்பட்டுள்ளது. நீர்க்கடன் அன்றி பிறவற்றை எண்ணக்கூடாது” என்றான்.

சகதேவன் உஜ்வலனை சில கணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “உங்கள் விருப்பப்படி நடக்கட்டும், உத்தமரே. இதில் நான் கூறவேண்டியது என ஏதுமில்லை” என்றபின் திரும்பிச் சென்றான். யுயுத்ஸு “இவர் நன்கு பேசுகிறார். அஸ்தினபுரிக்கே இவர் அமைச்சராகலாம்” என்றான். “நான் மாளவத்தின் தலைமை அமைச்சனாக ஆகப்போகிறவன்… அஸ்தினபுரி வாழும். ஆனால் மாளவமும் மகதமும் உடன் வாழும். அதை மறக்கவேண்டாம்” என்றான் உஜ்வலன். யுயுத்ஸு “இல்லை, நான் மறுத்து எதையும் சொல்லவில்லை” என்றான். உஜ்வலன் “நான் இவருடைய தோழராக இங்கே வந்தேன். அதை மட்டுமே இயற்றுகிறேன். அஸ்தினபுரியிலோ குருகுலத்திலோ எனக்கு ஆர்வமில்லை” என்றான்.

அவர்கள் நீராடி ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் உஜ்வலன் பேசிக்கொண்டே இருந்தான். “நாம் முடிவெடுக்கவேண்டிய நேரம் இது. அவர்கள் எப்படி உங்களை மறந்தார்கள்? நாம் எண்ண விழையாத ஒன்றையே மறக்கிறோம். நம் மறதியில் எப்போதுமே இருப்பது ஒவ்வாமை, அச்சம், துயரம் மூன்றும்தான். அவ்வண்ணம் அவர்கள் உங்களை ஒதுக்க எந்த அடிப்படையும் இங்கில்லை… நீங்கள் அரசகுடிப் பெண்ணுக்கு மைந்தராகப் பிறந்தீர்கள். பாண்டவர் குடியின் குருதிகொண்டவர். இதை எவரேனும் மறுக்கமுடியுமா?” சுகோத்ரன் அவன் சொற்களினூடாக அங்கே தன்னை நிகழவிட்டான்.

உஜ்வலனே ஏவலனிடம் “நாங்கள் மாமன்னர் யுதிஷ்டிரனை சந்திக்க விழைகிறோம். உகந்த பொழுதைக் கேட்டு வா” என்று ஆணையிட்டான். “இப்போதா?” என்று சுகோத்ரன் தயங்க “இனி பிந்தவேண்டியதில்லை” என்றான் உஜ்வலன்.

 

யுதிஷ்டிரனின் ஏவலன் வந்து பொழுதை அறிவித்தபோது சுகோத்ரன் ஆடைமாற்றிவிட்டிருந்தான். இன்நீர் வந்திருந்தது. உஜ்வலன் அதை ஓசையுடன் அருந்தினான். சுகோத்ரன் தன் மேலாடையைச் சீரமைத்தபடி கிளம்பினான். உஜ்வலன் வாயைக் கழுவியபின் உடன் வந்தான். அவன் புத்தெழுச்சி கொண்டதுபோல தோன்றியது. “நான் நன்கு துயின்றுவிட்டேன்… நீண்ட துயில்… இனி நீண்ட பகலுக்கும் நான் ஒருக்கமே” என்றான்.

அவனுடைய குரல் சுகோத்ரனை அழைத்துச்சென்றது. “எப்போதும் உங்கள் உள்ளம் என்ன என்று எனக்கு புரிந்ததே இல்லை. நான் ஒரு மலையோடை போலவும் நீங்கள் பாறை போலவும் எனக்குப் படும். உங்களைச் சூழ்ந்து கொந்தளித்து அலைகொண்டபடியே இருக்கிறேன்… ஆனால் உங்கள் சொற்களில் சிலவற்றை உண்மையில் என் சொற்களிலிருந்தே கண்டடைகிறீர்கள். காற்றில் விழும் ஆலம்பழ மழையில் ஒன்றிரண்டை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். நான் மிகையாகப் பேசுவது அதற்காகவே” என்றான்.

அவர்கள் செல்வதற்காக தேர் ஒருங்கியிருந்தது. “இப்போது உங்கள் உள்ளம் என் சொற்கள் வழியாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இல்லையா? மெய் கூறுக!” என்றான் உஜ்வலன். “ஆம்” என்றான் சுகோத்ரன். சிரித்தபடி “ஆம் என நானும் அறிவேன்… நீங்கள் என் சொற்களில் எவற்றை உங்கள் சொற்களென அறிகிறீர்கள் என்பதை மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை… நன்று. அதற்கும் ஒரு வழி இருக்கும்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் பெருமூச்சுடன் “நான் அதற்கு எதையும் நம்பியிருக்கவில்லை. நம் ஊழ் எதிர்காலத்திலிருந்து ஊறிப்பெருகி வந்து நம்மை அறையும் ஒரு பேரலை. நான் அத்திசை நோக்கி செவிகூர்கிறேன்” என்றான்.

“அதுவும் நிமித்தநூலில் உள்ள வரிதான்” என்று உஜ்வலன் சொன்னான். “நிமித்தநூலில் எப்பொருளும் இல்லை. நான் கற்று அறிந்தது அது மட்டுமே… நாம் நம் விழைவுகளை அதன்மேல் ஏற்றிக்கொள்கிறோம்” என்றான். “அதை என்னால் நூறுமுறை சொல்லமுடியும். நிகழ்காலத்தை முடிவுசெய்ய எதிர்காலத்தை எதிர்பார்ப்பதில் எப்பொருளும் இல்லை. அது கற்பனை. இறந்தகாலமே மெய். நம்மால் எண்ணியோ பேசியோ மாற்றிவிடமுடியாத புறம் அது. அதன் நெறிகளை மட்டுமே கருதுக! அதையே அறிந்தோர் செய்வார்கள்.”

அவர்கள் யுதிஷ்டிரனின் குடிலை அடைந்தபோது வாயிலில் யுயுத்ஸு அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவர்களை வந்து எதிர்கொண்டு “மூத்தவர் காத்திருக்கிறார். நீர்க்கடனுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன… அவர் சற்று பதற்றத்தில் இருக்கிறார். யாதவ அரசிக்கு ஏதோ ஆகிவிட்டிருக்கிறது. அது என்னவென்று அறிந்துவர மூத்தவர் அர்ஜுனன் நேரில் சென்றிருக்கிறார். என்ன நிகழவிருக்கிறதென்று எவருக்கும் தெரியவில்லை… சுருக்கமாகவே பேசிக்கொள்ளுங்கள்” என்றான். சுகோத்ரன் “ஆம்” என்றான். “நான் பேசுகிறேன்” என்று உஜ்வலன் சொன்னான். “சுருக்கமாகப் பேசுவது என் வழக்கம்… பேசிப்பேசி நான் சுருக்கிக்கொள்கிறேன்.”

அவர்கள் குடிலுக்குள் நுழைந்தார்கள். உள்ளே யுதிஷ்டிரன் மட்டும் தரையிலிட்ட பாயில் அமர்ந்திருந்தார். சிறிய மூங்கில்மேடையில் சுவடியை வைத்து படித்துக்கொண்டிருந்தார். ஏழு நெய்த்திரி இட்ட விளக்கு மலர்க்கொத்துபோல் அசைவிலாச் சுடர்களுடன் நின்றிருந்தது. அவர் நிமிர்ந்து நோக்கியபோது சுகோத்ரனை அடையாளம் காணவில்லை. அவருக்கு வருகையை அறிவித்திருந்தபோதும் உள்ளம் அதை தொடவில்லை. யுயுத்ஸு முன்னால் சென்று “இளைய பாண்டவர் சகதேவனின் மைந்தர் சுகோத்ரன் வந்துள்ளார். அவருடைய சாலைமாணாக்கரான உஜ்வலன் உடனிருக்கிறார்” என அறிமுகம் செய்தான்.

யுதிஷ்டிரன் புன்னகையுடன் சுகோத்ரனை நோக்கி வருக என கைகாட்டினார். அவர்கள் அருகே சென்றனர். சுகோத்ரன் குனிந்து யுதிஷ்டிரனின் கால்களைத் தொட்டு வணங்கினான். யுதிஷ்டிரன் “நீளாயுள் கொள்க! நிறைவுறுக!” என வாழ்த்தினார். உஜ்வலனை வணங்கி “உத்தமரே, இங்கே தங்கள் வருகை சிறப்புறுக!” என்றார். உஜ்வலன் அவரை கை தூக்கி வாழ்த்தினான். “இன்று மாலைதான் வந்து இறங்கினார்கள், மூத்தவரே. இரவு கடந்ததும் நீர்க்கடனுக்குரிய நேரம் உருவாகிவிடும் என்பதனால் இப்போதே வந்திருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு.

யுதிஷ்டிரன் சற்றே சலிப்புடன் “இன்றுவரை இந்நிகழ்ச்சி நடைபெறுமா என்ற ஐயம் நீடிக்கிறது. தடைகள் எழுந்தபடியே உள்ளன… கணித்தளிக்கும்படி உன் தந்தையிடம் கேட்டேன். அவனால் அவனுடைய ஊழை கணிக்கவியலாது என்றான்” என்றார் யுதிஷ்டிரன். “நீ கணிக்க முடியுமா பார்” என்று சுகோத்ரனிடம் சொன்னார். சுகோத்ரன் “இது என் ஊழும்கூட” என்றான். யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். உஜ்வலன் “அவருடைய ஊழை முடிவுசெய்யவேண்டிய தருணம் இது… அரசே, சுகோத்ரன் நாளை தன் மூதாதையருக்கும் உடன்பிறந்தாருக்கும் நீர்க்கடன் செய்யவிருக்கிறாரா?” என்றான். “ஆம், செய்யவேண்டியதுதான்… அதற்காகவே அவன் அழைக்கப்பட்டான்” என்றார் யுதிஷ்டிரன்.

“எனில் எவ்வண்ணம்? அஸ்தினபுரியின் இளவரசனாக கங்கணம் அணிந்துகொண்டா?” என்று உஜ்வலன் கேட்டான். “அதெப்படி? அவன் இன்னமும் தன் கல்விநிலையின் புரிநூலை கழற்றவில்லையே” என்றார் யுதிஷ்டிரன். “அதை கழற்றிவீசலாம். அவர் ஷத்ரியர்… அவருக்கு அப்படி நெறியெல்லாம் இல்லை” என்றான் உஜ்வலன். “அஸ்தினபுரியின் எஞ்சிய ஒரே இளவரசன் என்னும் நிலையில் அவருக்கு உரிமையுள்ளது அந்தக் கங்கணம்.” யுதிஷ்டிரன் விழிகள் மாறுபட உஜ்வலனை நோக்கி “இதைச் சொல்லவா வந்தீர்கள்?” என்றார். “ஆம், இது என் கடமை என்றே வந்தேன்” என்றான் உஜ்வலன்.

யுதிஷ்டிரன் சுகோத்ரனிடம் “நீ கல்விநிலைக்குச் செல்கையில் துறந்துசென்றாய் என எண்ணிக்கொண்டேன். இல்லை எனில் நீயே அம்முடிவை எடுக்கலாம். எனக்கு மாற்றுச்சொல் இல்லை” என்றார். சுகோத்ரன் சில கணங்கள் எண்ணிவிட்டு “நான் நாளை அந்த முடிவை சொல்கிறேன், தந்தையே” என்றான். “நாளை காலைக்குள் சொல்” என்றார் யுதிஷ்டிரன். சுகோத்ரன் தலைவணங்கி “ஆம்” என்றான். உஜ்வலன் “நாங்கள் வெளியே சென்று கலந்தாடி உடனே கூட வந்து சொல்லமுடியும்” என்றான். “இல்லை, பொழுதிருக்கிறது” என்றார் யுதிஷ்டிரன்.

தௌம்யரின் மாணவர்கள் இருவர் ஆணை கேட்க வெளியே வந்து நிற்பதாக ஏவலன் வந்து சொன்னான். யுதிஷ்டிரன் அவர்களை கையசைவால் உள்ளே அழைக்க சுகோத்ரனும் உஜ்வலனும் வணங்கி வெளியேறினர். வெளியே வந்ததுமே உஜ்வலன் “என்ன சொன்னீர்கள் என எண்ணித்தான் கூறினீர்களா? நாவில் உளம் அமையாத நீங்கள் கற்ற நிமித்தநூல்தான் என்ன?” என்று சீறினான். “நீங்கள் உறுதியாக ஏதும் சொல்லவில்லை என்பதே பிழையான ஒரு குறிப்பு. நாடு கைகொள்பவருக்கு முதலில் தேவை உறுதி…” என்றான்.

“நான் நாடு கைக்கொள்வேனா என்று சொல்லத் தெரியவில்லை” என்றான் சுகோத்ரன். “உங்கள் உள்ளம் நிமித்தநூலில் சிக்கிக் கிடக்கிறது. முதலில் அதை மறந்துவிடுங்கள்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் “என் இயல்பு அவ்வண்ணம் போலும்” என்றான். “இல்லை, அதில் நீங்கள் இறக்கிவிடப்பட்டிருக்கிறீர்கள். அது ஒரு சூழ்ச்சி என்றே எண்ணத்தோன்றுகிறது. எத்தனை நம்பிக்கையுடன் அரசர் ஆணையிடுகிறார், நாளை வரை பொழுதுள்ளது என்று. என்ன பொருள் அதற்கு? அவர் அறிந்திருக்கிறார், இதிலிருந்து மீள்வது எளிதல்ல என்று. ஷத்ரியரே, ஒன்று அறிக! மானுடன் தன் ஊழிலிருந்தும் உறவிலிருந்தும்கூட விடுபடலாம். தான் கற்றறிந்தவற்றிலிருந்து விடுபடுவது மிகமிகக் கடினம்…”

“ஏனென்றால் தானறிந்த கல்வி தான் அறிந்தது என்பதனாலேயே தன்னுடையதாகிவிடுகிறது. தன்னுடையது எதையும் நம்பிச் சூடிக்கொள்வதும் அதன்பொருட்டு நிலைகொள்வதும் மானுட இயல்பு. தான் அடைபட்ட கூண்டை தன் உடைமை என விலங்குகள் நினைக்கும் என்பார்கள்… மீறுக, வெளிவருக! அறிவென்பது கூண்டு. மெய்யறிவு என்பது அதிலிருந்து வெளியேறுவது” என்றான் உஜ்வலன். “வெளியேற ஒரே வழிதான். தன்னை கிழித்துக்கொண்டு அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளியே பாய்தல். கணநேரத்தில் வெடித்தெழுதல். அறிவின் கூண்டில் இருந்து அறிவைக்கொண்டு வெளியேறலாம் என எண்ணும் அறிவின்மைதான் அறிவு அளிக்கும் மாயைகளில் முதன்மையானது. அறிந்து அறிந்து எவரும் அறிவை கடக்க முடியாது. அறிவைக் கடத்தல் என்பது ஓர் அறிதல்நிலை அல்ல. அது ஒரு மீறல். ஓர் ஆதல். வேறேதும் அல்ல.”

குடில்வரை அவர்கள் பேசிக்கொண்டே சென்றார்கள். உஜ்வலனால் பேசாமலிருக்க முடியவில்லை. அடுத்தநாள் செய்யவேண்டியவை என்னென்ன என அவன் சொற்களாலேயே வகுத்துக்கொண்டிருந்தான். அவர்கள் குடிலை அடைந்தபோது அவன் பேசிக் களைத்திருந்தான். உணவு உண்டபின் உடனே படுத்து அவன் துயில்கொள்ளலானான். சுகோத்ரன் திண்ணையில் இருளை நோக்கியபடி மடிமேல் கைகோத்து அமர்ந்திருந்தான்.

முந்தைய கட்டுரைஎளிமையான படைப்புகள்
அடுத்த கட்டுரைராகுலும் யானைடாக்டரும்