கடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்

கடலுக்கு அப்பால் வாங்க

ப.சிங்காரம் தமிழ்விக்கி

அன்பின் ஜெ,

 

கல்லூரியில் படிக்கும்போது ஏதோ நாம் பெரிய புரட்சி செய்யபோகிறோம் என்னும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்… அதுவும் நான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில்தான் அஜய் தேவ்கன் நடித்த பகத் சிங் திரைப்படம் வந்து, காந்திக்கு எதிரான மனநிலையில் தூபம் போட்டது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு ரங்தே பசந்தி.. அதே உணர்ச்சி கொந்தளிப்பு, போராட்ட மனநிலை. அப்போதெல்லாம் பகத் சிங்கும், நேதாஜியும் சுதந்திரம் வாங்கித்தந்து நாட்டின் தலைவர்களாயிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும் என்னும் எண்ணம். இந்த காந்திதான் நாட்டை உருப்படாமல் ஆக்கிவிட்டார் என்னும் மனநிலை.

 

இந்த காந்தி வெறுப்பு மறைந்து, நிதரிசனம் என்னை அறைய சிலபல ஆண்டுகளும் புத்தகங்களும் தேவைப்பட்டன. அவற்றில் அண்ணா ஹசாரே அவர்களின் போராட்டமும் என் ஆசானாக நான் கருதும் உங்கள் பதிவுகளும், நூல்களும் முக்கிய பங்காற்றின. இந்த புரிதலை இன்னும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்தது ப.சிங்காரம் அவர்கள் எழுதிய கடலுக்கு அப்பால் என்னும் நாவல்.

 

இன்றைய இலக்கிய உலகில், ப.சிங்காரம் அவர்களுக்கு தனியாக அறிமுகம் எதுவும் தேவை இல்லை. என்றாலும், இரண்டே புத்தகங்கள் எழுதியிருந்தாலும் திருக்குறளின் இரண்டடி போல இரண்டும் பொக்கிஷங்கள். அவரின் வார்த்தைகளிலேயே, அந்த இரண்டு பொக்கிஷங்களை பதிப்பிக்க எவ்வளவு பாடுபட்டார் என்பதை சொல்லியிருக்கிறார். உயிருடனிருந்தபோது நாம் கொண்டாடாமல் விட்டு, நாமே அழித்த ஒரு சிறந்த  கதைசொல்லிதான் ப.சிங்காரம் அவர்கள். புலம்பெயர் எழுத்தாளர்களில் அவரே முன்னோடி.

 

புலம்பெயர் தமிழனான செல்லையாவின் சுதந்திர போராட்டமும், காதல் போராட்டமுமே இந்த கதை.

 

செல்லையா தன்னுடைய முதலாளியும் வட்டிக்கடைக்காரருமான வானாயீனாவின் மகள் மரகதத்தை விரும்புகிறான். அவளுக்கும் இவன்மேல் கொள்ளை பிரியம். வானாயீனாவுக்கு தொழில் தெரிந்த தன நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவன் மகளை மணப்பதில் ஒப்புதல்.  அவர் மனைவி காமாட்சிக்கோ செல்லையாபோல ஒரு நல்ல மனிதன் மகளை மணப்பதில் மகிழ்ச்சி. இந்த சூழலில் செல்லையா நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்கிறான். நேதாஜியின் மறைவுக்கு பிறகு இந்திய தேசிய ராணுவத்தினர் அனைவரும் தங்களின் பழைய வாழ்க்கைக்கு வருவதை இந்த புத்தகம் சித்தரிக்கிறது.

 

வானாயீனா செல்லையாவை தன்னுடைய வியாபாரத்தை பெருக்கும் ஒருவனாகவே பார்க்கிறார். அதனால் பழைய வாழ்க்கைக்கு திரும்பும்போது செல்லையாவும் மரகதமும் தங்கள் காதலை இழக்கின்றனர். அவருக்கு அனைத்தும் வியாபாரமாகவே தெரிகிறது. மகளுக்கு நாகலிங்கத்தை திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவரின் வாக்கியமாக “மரகதம் ஊர்ல அவுக ஆத்தாளோட இருந்திட்டு போகுது, அதுவும் இங்கின இருந்தாக்க நாகலிங்கம் பயலுக்கு தொழில்ல புத்தி போகாது”. இவருக்கு பணமும் தொழிலும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே “இது பொட்டச்சி தொழிலு. ஒனக்கு இது ஒத்து வராது” என சொல்லும்போது செல்லையாவுடன் நாமும் இவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்றே மனம் சொல்கிறது.

 

காமாட்சி ஊரை சுற்றிப்பார்க்க வந்து போரின் காரணமாக அங்கே மாட்டிக்கொள்கிறாள். மகள் பக்கமும் நிற்கமுடியாமல் கணவரையும் எதிர்க்க முடியாமல் திணறும்போதும், மகளுக்காக கண்ணீர் விடும்போதும் செல்லையாவிடம் பாசம் காட்டும்போதும், மன்னிப்புக் கேட்கும்போதும் தாயின் மனதை மிகச்சிறப்பாக உணர்த்துகிறாள். தன மகன் உயிரோடு இருந்தால் அவனும் பட்டாளத்துக்குத்தான் போயிருப்பான் என கணவனிடம் கூறும்போதும், செல்லையா ஜப்பானியரை கொன்றது சரியே என வாதிடும்போதும் புதிய காமாட்சியாக வானாயீனா செட்டியாருக்கே தெரிகிறாள்.

 

இதில் மாணிக்கம் இரண்டு இராமாயண கதைகளை சொல்கிறான். ஒன்று கனகவல்லி ராமாயணம் மற்றொன்று மின்லிங் ராமாயணம். இரண்டிலும் ஜப்பானிய மேஜர் இச்சியாமா வருகிறான். போரின் பின்விளைவுகளில் ஒன்றான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை மிகவும் சாதாரணமாக கதையின் ஓட்டத்தில் மாணிக்கம் சொல்கிறான். இராமாயண சீதைக்கும் இந்த சீதைகளுக்குமான ஒப்பீடு நம்மை கலங்கடிக்கிறது. பெண்தெய்வங்களை நாம் வணங்கத்தான் முடியுமே தவிர திருமணம் செய்துகொள்ள முடியாதென்பதை செல்லையாவிற்கு அறிவுறுத்தும் இடம், இலக்கியத்தின்மூலம் மாணிக்கம் எவ்வாறு வாழ்க்கையை, வாழ்க்கையின் தரிசனத்தை புரிந்துகொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக காட்டுகிறது.

 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மரகதம் உண்டு. ஆனால் அவள் நேரில் வரும்போது கண்டுகொள்ளும் ஊழின் தருணம் வாய்ப்பதென்பது நம் எவரின் கையிலும் இல்லை. தன்னுடைய பெற்றோரை விடமுடியாமல், செல்லையாவை நினைத்து காதலில் உருகுவதும், பிரிவின்போது அவன் பெயரிட்ட கைக்குட்டையை பரிசாக கொடுப்பதும் பிறக்கும் பெண்ணிற்கு மரகதம் என்று பெயரிட்டு மடியில் அமர்த்தி கொஞ்ச சொல்வதும், எக்காலத்திலும் பெண்கள் காதலனை, மனதில் அமர்ந்தவனை மறக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக்குகிறது.

 

கதையின் நாயகனாகிய செல்லையாவிற்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள், தர்மசங்கடங்கள்!! பழைய வாழ்க்கைக்கு திரும்பமுயலும்போது, முதலாளியின் கோபம், அதனால் காதலியின் பிரிவு. போராட்டத்தின் தலைவர் மறைந்ததால் புதிய வழிகளனைத்தும் மூடிக்கொள்ள முதலாளியிடம் செல்ல தயக்கம். கர்னல் கரிமுடீனிடம் தளவாடங்களுக்காக பேரம் பேசும்போது அவன் காட்டும் நெஞ்சுரம் நம்மை மலைக்கவைக்கிறது. பிறகு சிம்பாங் திகா பாலத்தை கைப்பற்றும் தைரியம், போர்வெறி முதலியன நம்மை அப்படியே கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. அவன் மரகதத்திடம் பேசும் பகுதியை எவ்வளவுமுறை படித்தேன் என்று எனக்கே  தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் கண்கள் கலங்கின.

 

இவற்றினூடாகத்தான்,கதையின் ஆசிரியர் இந்திய தேசிய ராணுவத்தினை, அதன் பற்றாக்குறைகளை, சீன-ஜப்பானிய உறவை, தமிழர்களை, பலகோணங்களில் பலருடைய பார்வையில் வெளிப்படுத்தப்படுகிறார். நேதாஜியின் மறைவு பல குழப்பங்களை உண்டாக்கி இந்திய தேசிய ராணுவத்தையே கலைத்துவிடுகிறது. போர் முடிந்தபின், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கின்றனர். ஒருபக்கம் பழிவாங்கும் ஆங்கிலேய பட்டாளம், , மறுபக்கம் உலக அளவில் துப்பாக்கியை தாழ்த்திவிட்டாலும் உரிய கட்டளைகள் வராமல் தடுமாறும் ஜப்பானிய படைகள்… இருவரிடமும் தப்பித்து “சட்டை மாற்றும்” இந்திய தேசிய ராணுவவீரர்கள், அவர்களில் பலரை ஏற்கும் தோட்டவேலையாட்கள் என பரவுகிறது.

 

இந்த கதையின் அடியில் ஓடும் மென்சோகம் அனைவரும் தமிழகம் திரும்ப எண்ணுவதே. இன்ஸ்பெக்டர் குப்புசாமியின் பாட்டியின் “ஆத்த கண்டியா, அழகர கண்டியா” என்னும் வசவின் மூலமாக அனைத்தையுமே உணர்த்துகிறார். வானாயீனா குடும்பம் தினமும் கப்பலுக்காக விசாரிப்பதும் காத்திருப்பவர்களின் எண்ண ஓட்டங்களும், மனதை பிசைந்து கலங்கடிக்கின்றன.

 

போராட்டம் நீர்த்துப்போனபின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பலரின் நிலைமையை சிறப்பாக உணர்த்துகிறது. ப.சிங்காரம் அவர்களின் வார்த்தைகள் மற்றொரு நாவலான புயலிலே ஒரு தோணியின் முன்னுரையில் உள்ளது. அதில் கூறுவதுபோல இந்த கதாபாத்திரங்கள் அவர் நேரில் பார்த்து வடித்தவை என உணரலாம். நெல்சன் ஆஸ்திரேலியா படிக்க செல்கிறான், மேஜர் சபுராவை சுடும் ராஜதுரை மதுவுக்கு அடிமையாகிறான், கே.கே.ரேசன் பாங்காக் நகரில் காலம்தள்ளுகிறான், இவர்களுடன் செல்லையா காதலை தொலைத்துவிட்டு நிற்கிறான்.

 

இறுதியாக நேதாஜியின்  அல்லது பகத் சிங்கின் தேசபக்தியினை கடுகளவுகூட விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது. அவர்களைப்பற்றி குறைவான அல்லது தவறான மதிப்பீடுகளை கொண்டவனல்லை நான். ஆனால், அவர்களின் வழி இந்திய சுதந்திரத்திற்கானது அல்ல என்பது குறித்து எனக்கு வேறு கருத்து இல்லை. நேதாஜியோ பகத் சிங்கோ இந்தியாவின் சுதந்திரத்தை வாங்கியிருந்தால், பெரும்பாலும் ராணுவ ஆட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ மட்டுமே இந்தியாவில் இருந்திருக்கும். நேதாஜியின் வழியாக இந்தியா இங்கிலாந்துக்கு பதிலாக ஜப்பானுக்கு அடிமைசேவகம் புரிந்திருக்கும். ஆனால், இந்திய தேசிய ராணுவம் நேதாஜியின் மறைவுக்கு பின்னர் சிதறுவது போல நேதாஜி சுதந்திரம் வாங்கியிருந்தால் இந்திய தேசமே சிதறிப்போயிருக்கும். முதிரா இலட்சியவாதமே இவற்றில் தெள்ளென தெரிவது. ஆயுதம் மூலம் பெறும் எந்த உரிமையும் நிலைத்து நிற்க முடிவதில்லை.

 

காந்திய வழியாக பெற்ற சுதந்திரமே நமக்கு இப்போதுள்ள ஜனநாயக அரசாங்கத்தை அமைத்து, பல்வேறு உரிமைகளை அளித்து நாடு இப்போதுள்ள நிலையினை அடைய உதவியது.

 

இந்த வரலாற்று தரிசனமே எனக்கு இந்த புத்தகம் மூலமாக கிடைத்தது.

 

அன்புடன்,

கோ வீரராகவன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31
அடுத்த கட்டுரைவெண்முரசு புதுவை கூடுகை-31