சென்னையில் வாழ்தல் – கடிதம்

சென்னையில் வாழ்தல்

சென்னையில் வாழ்தல்- கடிதம்

அன்புள்ள ஜெ

சென்னையில் வாழ்தல் பற்றிய பதிவுகளை வாசித்தேன் .

சென்னையில் தற்போது வாழ்ந்தாலும் பள்ளிப்பருவத்தில் தமிழகத்தின் பிற சிற்றூர்களில் (தந்தைக்கு மாற்றல் உள்ள வேலை) நிசசயம் மனதிற்கு இனியதுதான். ஆனால் எல்லோருக்கும் எப்போதும் இது சாத்தியம் கிடையாது என்பதுதான் உண்மை.  ஒருவருக்கான தொழில் அவர் சொந்த ஊரிலேயே அமைந்ததென்றால் அவர்கள் அதை தாராளமாக அனுபவித்துக்கொள்ளலாம் . மற்றவர்களுக்கு (குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு சென்னையில் வசிக்க வேண்டியதற்கு தொழில், பிற தேடல்கள் , திருமணமாகிப் புகுந்த இடம் , சென்னை மீது ஆர்வம் எனப்  பல காரணிகள் உண்டு.வறண்ட மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சென்னை பசுமையாகத்தெரியலாம்.

சென்னை வெறுப்பாளர்களிடம் பேசிப்பார்த்தால் சில விஷயங்கள் வெளி வரும்

 

“நம்மூர்ல நமக்கு எம்புட்டு மரியாதை ”  என்பது போன்ற ராஜாங்க ஈர்ப்புகள்.

 

“நம்ம ஊர் டாக்டர் பாத்தாதான் நமக்கு சரிப்பட்டு வரும்”, “நம்ம செங்கழனி அம்மன தெனமும் பார்த்து கும்பிட்டாதான் மனசுக்கு நிம்மதி”, போன்ற நம்பிக்கைகள்.

சில பேர் பெற்ற பிள்ளைகளை விடவும் சொந்த ஊர் நட்புகள் மற்றும் கட்டிய வீட்டின் மேல் அதீத பாசம் வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
மும்பையின் நெரிசல்  மிகுந்த வாழ்க்கை  முறையைப் பார்க்க நேரிடும் சென்னைவாசிக்கு ஒப்பீட்டளவில் சென்னை சொர்க்கமாய்த் தெரியும்.
யாருக்கெல்லாம்  எல்லா விஷயங்களிலும் மனதிற்குப் பிடித்த வாழும் சூழல் எப்போதும் கிடைக்குமென்றால் அவர்கள்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் . அது இல்லாதவர்களுக்கு இருப்பதில் இருந்து மனதிற்கு இனியத்தைக் கண்டடையும் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு சில நாட்கள் இருந்து விட்டு ஓட்டம் பிடிப்பது உதவாது. மாற்றங்களுக்கும், விட்டுக்கொடுத்தல்களுக்கும்  மனதை தயார் படுத்திக்கொள்வது ஒன்றே வழி.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்

அன்புள்ள ஜெ
நான் சென்னையை விரும்புபவர்களில் ஒருவன்
சென்னையில்தான் நான் இரண்டு விஷயங்களில் இருந்து விடுபட்டேன். என்னை எவரும் இருபத்துநான்கு மணிநேரமும் வேவு பார்க்கவில்லை.  போட்டுக்கொடுக்கவில்லை. நான் என்னுடைய சொந்த வாழ்க்கையை இஷ்டப்படி வாழமுடிந்தது. இங்கே இருக்கும் இந்த சுதந்திரம் தமிழகத்தில் வேறு எங்கேயும் இல்லை. பெண்கள் சென்னையை விரும்புவது இதனால்தான்
இன்னொன்றூ இங்கேதான் சாதி நேரடியாக வந்து மூஞ்சியில் அறைவதில்லை. பார்த்த பத்தாம்நிமிடமே தம்பி என்ன ஆளுங்க என்று எவரும் கேட்பதில்லை
சென்னைதான் ஒரு நவீன  மனுஷனுக்கு வாழ்வதற்கு மிகமிக வசதியான ஊர்
செல்வா
முந்தைய கட்டுரைஎவ்வாறோ அவ்வாறே!
அடுத்த கட்டுரைசிலைகளை நிறுவுதல்