தம்மமும் தமிழும்

தம்மம் தோன்றிய வழி…

அன்புள்ள  ஜெ  ,

தத்துவத்தில  சிறிது  ஆர்வம் இருக்கும்  எவரும் , பெளத்தத்தின்  எதோ  ஒரு வடிவ  பிரதியை  படிக்காமல்  இருந்திருக்க  முடியாது . அதிலும்  ஓஷோ  போன்ற  ஆசிரியர்கள்  எவ்வகையிலேனும்  புத்தரை பல்வேறு  இடங்களில்  உபயோகித்த வண்ணம்  இருப்பதை  காணலாம்.  உங்களுக்கு “”மாலை நடையும்  பழம்பொறி” யும்  போல  ஓஷோவுக்கு  புத்தர்  ஒரு இனிய  நடை பயண  தோழன்.அவ்வகையில் ஓஷோவின்  ”தம்மபதம்”எனும் , புத்தரின்  ஞானத்தை  தனது  கேள்வி பதில்கள்  மூலம்  கையாண்டிருப்பார்.

உதாரணமாக ”’குருவே  விவேகம்  என்பது  என்ன’  என்கிற கேள்விக்கு , ‘உன் ஜீவிதத்தின்  சுவையே  விவேகம்”  என்று  பூடகமாக சொல்லி  அதை  விவரித்து  செல்வார், அதிலிருக்கும்  சவாலே  அந்த  பூடகத்தன்மை  தான்.

அடுத்ததாக, மிக முக்கியமாக  கருதப்பட வேண்டியவர்  ‘ராகுல்  சாங்கிருத்யாயன் ‘  அவரின்  ”பெளத்த  தத்துவ  இயல்”’  எனும் நூல் , தத்துவம் ,காலக்கணக்குகள், புத்தரின்  சமகால  ஞானிகள் , நாடுகள் , கொள்கையியல் ,   என அனைத்து  தரவுகளுடனும்  பேசும்  ஒரு நூல் , ஒருவகையில்  இது  ஒரு பெளத்த  மாணவருக்கான  நூல்  எனலாம் , அந்த அளவுக்கு  உள்ளடக்கம்  கொண்ட நூல் . ராகுலும்  கூட  இருநூறு  பக்க  புத்தகத்தில்  2 பக்கங்கள்  புத்தரின்  சரித்திரத்தை  சொல்லிவிட்டு , தத்துவத்துக்குள்  நுழைந்து  விடுகிறார்.

அதன் பின்,   கெளதம  நீலாம்பரன்  எழுதி ”முத்தாரம்”’  இதழில்  தொடராக வந்து, பின்பு  பெரிய  புத்தகமாகவும்  வெளிவந்த “புத்தர் பிரான்”  எனும் சற்றே  பெரிய நூல் , புத்தரின்  வாழ்க்கை  வரலாறு , போதனைகள் , மணிமேகலை , முதல்  கவிமணி  தேசிக விநாயகம்  பிள்ளை எழுதிய ”ஆசிய ஜோதி ”’ வரையிலான  பல்வேறு  படைப்புகளில், தமிழ்  இலக்கியத்தில்  புத்தரின்  இடம், என்று  மிக  நீண்ட  ஒரு தொகுப்பு  நூல்.

அடுத்ததாக, முக்கியாமான  நூலான  அம்பேதகரின்  ”’புத்தரும் அவரது  தம்மமும் ” { இன்னும்  படித்து முடிக்கவில்லை  என்பதால்  பின்னர்  எழுதுகிறேன் }இந்நிலையில் தான், எஸ் .ராமகிருஷ்ணன்  அவரது  தளத்தில்  விலாஸ்  சாரங்க்  பற்றி  எழுதி இருந்ததை  பார்த்தேன் , முக்கியமான  ஒரு  படைப்பாளி  தமிழில்  ஒரு  மொழிபெயர்ப்பு  கூட  இல்லை  என்று  குறிப்பிட்டு  இருந்தார் ,

சமீபத்தில் எழுத்தாளர்  காளிபிரசாத்  அவர்கள் ‘The Dhamma Man”  என்கிற  அவரது  நூலை  ”தம்மம்  தந்தவன்”’  என்கிற  பெயரில்  மொழிபெயர்த்து  இருந்தார் , மிகசுவாரஸ்யமான  ஒரு  குறு நாவலுக்கே  உண்டான  நடையுடன்  அமைந்த, ஒரு  புத்தகம் , எந்த  இடத்திலும்  ஒரு  தொய்வோ, சலிப்போ , இல்லாத  ஒரு தேர்ந்த  மொழிபெயர்ப்பு காளி பிரசாத்   தமிழின்  மிகத்தீவிர  வாசகர்  என்பதாலும் இது  சாத்தியப்பட்டிருக்கலாம் . இந்த  நாவல் {என்றே  சொல்லவேண்டும்}எந்தவித  நாடகீய  தருணத்திற்கும் , மெய் சிலிர்ப்பு  அனுபவத்திற்கும்  இடம் கொடாமல் , புத்தரின்  பிறப்பு , அலைக்கழிப்பு , அனுபவம் , மகா நிர்வாணம் , உடலியல்  ரீதியான  மரணம்  என  ஒரு  அழகிய  ஓடை  போல  ஒழுகி செல்கிறது ,

நாவலாசிரியர்  ‘சுதத்தா’  என்கிற  பெயரில்  புத்தர்  பிறப்பதற்கு  முன்பே  அரண்மனை  பணியாளாக  அங்கே  இருக்கிறார் , அவருடன்  சேர்ந்து  நாமும்  புத்தரின்  பிறப்பு முதல்  இறப்பு  வரை  கூடவே  பயணிக்கிறோம் .

இந்த  நாவல்  முழுவதும்  அன்றாட நிகழ்வுகளில்  புழங்கி , அங்கே  தம்மத்தை  நாட்டுவதிலேயே  புத்தர் {அல்லது  நாவலாசிரியர்} ஆர்வம்  கொண்டிருக்கிறார், உதாரணமாக , பல்வேறு  நகர்களில்  அலைந்து  திரியும், புத்தர்  சந்திப்பதும்  உரையாடுவதும் , மறுப்பதும் , சடங்கு  சம்பிரதாயங்களில்  மூழ்கிய  துறவியருடனும், யோகியருடனும் , வேத விற்பன்னர் களுடனும். அவர்களை  நம்பும்  சாமானியருடனும்  தான் . பொதுவாக  நாம்  பார்த்த  புத்தர்  வேத  சபைகளிலும் , அரசசபைகளிலும்  தான்  தன்  மெய்மையயை  போதிக்கிறார்  இங்கே , நாய், காராம்பசு , என அன்றாடங்களுடன்  உரையாடுகிறார்

புத்தரின்  மகன்  ராகுலனின்  கதையை  சொல்லி  அதை  இன்றைய  காந்தியின்  வாழ்க்கையுடன்  ஒப்பிடுகையில் ,  ”ராஜகிருஹத்திலிருந்து கபிலவஸ்துவிற்கு  சென்ற  புத்தரின் நீண்ட பயணத்தை , மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையுடன்  ஒப்பிட்டு ஒரு  சித்திரத்தை  எழுப்பிக்கொள்ளலாம் , காந்தியை புத்தருடன்  ஒப்பிட்டுக்கொள்ள  பல விஷயங்கள் பொருந்தி வருகின்றன , இருவருமே  அஹிம்சையை  கடைபிடித்தனர் , தனிப்படட  வாழ்விலும்  இணையான  தருணங்கள்  இருக்கவே  செய்கின்றன. புத்தர் யசோதரையை  நடத்திய  விதமும் , காந்திஜி  கஸ்துரிபாயை  நடத்திய விதமும்  ஒரு உதாரணம் . இவ்விரு நிகழ்வுகளிலும், மனைவிகள்  மானுடர்களாகவும் , கணவர்கள்  அதி மானுடர்களாகவும்  இருக்கின்றனர் . புத்தர் ராகுலனை  நடத்திய விதமும் , காந்தி தன்  மைந்தர்களை  நடத்தியவிதமும்  ஒப்பு நோக்க ஒன்றே .  ஆழ்ந்த  வேர்களும் பரந்து விரிந்த கிளைகளும் கொண்ட ஆலமரம் காண்பதற்கு  பிரமாண்டமானதாக  இருந்தாலும் ,அதனடியில் வேறு மரங்கள் துளிர்ப்பதில்லை. சிறந்த மனிதர்களும்  அவ்வண்ணமே தன்  கொள்கைகளுக்கு முன்னர்     மற்ற  உயிர்களை  துச்சமாக  நினைக்கும் கொடுங்கோன்மையாளராகவே இருக்கின்றனர்”- என்கிறார்

நாவலின் பல்வேறு இடங்களில்  ஒரு  இலக்கியத்தரமான  மொழிபெயர்ப்பு மிக அழகாக  நிகழ்ந்துள்ளது , உதாரணமாக , மாரனுக்கும் புத்தருக்குமான  சம்பாஷணை , உபநிஷத்துக்களின் பாடல்கள், ஸ்ருஷ்டி கீதம், பிம்பிசாரனின் கதை, புத்தரின் இறுதி நாட்கள், என  பல  இடங்கள்.

காளிபிரசாத், விலாஸ் சாரங்கின்  “An Interview with M Chakko”  என்கிற கதையை  மொழி பெயர்த்தாலும்  சிறப்பாகவே  செய்வார்  என்று  படுகிறது :):):)

எல்லாவகையிலும்  ‘தம்மம்’  என்பதை  புரிந்துகொள்ள  மிகசிறந்த  படைப்பு. வாழ்த்துக்கள்.

அன்புடன்

செளந்தர்.G

தம்மம் தோன்றிய வழி…
தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங். தமிழில் காளிப்பிரசாத்
தம்மம் தந்தவன் நாவலை வாங்க
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-28
அடுத்த கட்டுரைஎழுத்தாளன்,சாமானியன் -கடிதங்கள்