‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57

பதினொன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான கும்பகர் பெரிய மண் கலத்தின் வாயில் மெல்லிய ஆட்டுத்தோலை இழுத்துக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த உறுமியின்மீது மென்மையான மூங்கில் கழிகளை மெல்ல உரசி மயில் அகவும் ஒலியையும் நாகணவாய் புள்ளின் கூவலையும் எழுப்பி அதனுடன் இணைந்துகொண்ட தன் ஆழ்ந்த குரலில் கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்ட போர்க்களத்தின் இறுதிக் காட்சியை சொல்லில் வடிக்கலானார். சூதர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள ஒருவர் விட்ட சொல்லை பிறிதொருவர் எடுக்க ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் தகைமைகொண்ட சொற்கள் காட்சிகளென மாறி எழுந்தன.

கும்பகர் விழியிழந்தவர். அவருடைய இரு கண்களும் செங்குழிகளாக அவர் சொற்களுக்கேற்ப அசைந்தன. அவை வெளித்தெரியா சிலவற்றை எங்கோ நோக்குபவைபோல. “இரு குருதிக்குழிகளால் நோக்குகிறேன் இக்களத்தை. குருதியின் செவ்வொளி கொண்ட கண்களால். சூதரே, மாகதரே, இக்குருக்ஷேத்ரப் பெருங்களத்தை வேறெங்ஙனம் நோக்க இயலும்?” என்று அவர் சொன்னார். “எந்தையும் விழியிழந்தவர். பரசுராமரின் ஐங்குருதிக் குளத்தை அழகுறச் சொன்னவர் அவர். அவர் சொல்லி அமர்ந்த அந்தப் பாறையை ஐங்குருதிச்சொல் என இன்றும் தெற்கே வழிபடுகிறார்கள். பரசுராமரின் குருதிக்குளத்தை பாதாளதெய்வங்கள் கடைந்தபோது எழுந்த வெண்ணெய் அது என்கிறார்கள்.”

“குருதி கடைந்து நெய்யெடுக்கும் சூதர்களில் ஒருவன். குருதிநெய்யை வஹ்னிக்கு அளித்து தேவர்களை எழுப்புபவன். சொல்லில் எழும் தேவர்களை சொல்லனலில் அவியாக்கி வடவையை எழுப்புபவன். முக்கண்ணனின் முனிவெனத் திகழும் வடவை அமைந்த என் சொற்களை செவிகொள்க! இவை அத்தனை சொற்களையும் உரசி அனலெழச் செய்க! ஆம், அவ்வாறே ஆகுக!” கூடியிருந்த சூதர்கள் கைகளைத் தூக்கி சொல்பிரியா கார்வை என “ஆம், அவ்வாறே ஆகுக!” என ஏற்பொலி எழுப்பினர்.

சூதரே, மாகதரே, இங்குள்ள பருப்பொருட்கள் அனைத்தும், அவற்றை ஆளும் நெறிகள் அனைத்தும், அவற்றிலிருந்து எழும் உணர்வுகள், எண்ணங்கள், மெய்மைகளும் வெறுமைகளும் கூட சொல்லிலிருந்து எழுந்தவை. அவையனைத்தும் தங்கள் ஆடல் முடித்து மீண்டும் சொல்லுக்கே திரும்புகின்றன. ஒவ்வொரு சொல்லும் ஒரு புடவி. ஒவ்வொரு சொல்லும் ஒரு தனி தெய்வம். ஒவ்வொரு சொல்லும் ஒரு கடுவெளி. சொற்களை இணைக்கின்றது இசைவு. இசைவில் தன்னை வெளிப்படுத்துகிறது பிரம்மம். இசைவென்று ஆன ஒன்றை இங்கு வழுத்துக!

இங்கிருந்து சொல்லெடுக்கும் நான் குருக்ஷேத்ரப் பெருங்களத்தை ஊன்விழிகளால் பார்த்ததே இல்லை. பிறர் உரைக்கும் சொற்களைக்கொண்டு அவற்றை நான் வரைகிறேன். பார்த்துச் சொல்வது எல்லை கொண்டது. பாராதது முடிவிலாது விரிவது. சூதரே, நாம் இக்களத்தினை அகன்று நின்று பார்க்கிறோம். அங்குள்ள ஒவ்வொருவரிலும் கூடு பாய்ந்து அங்கே நிகழ்கிறோம். கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஆகிறோம். அச்சமும் வஞ்சமும் துயரமும் ஐயமும் வெறுமையும் என அனைத்து உணர்வுகளையும் அடைகிறோம்.

இப்போர்க்களத்தில் இங்கு நிகழாத பல போர்களை நாம் நிகழ்த்துகிறோம். ஒன்றுக்கு மேல் ஒன்றென புடவிகளை அடுக்கி அடுக்கி மேல் செல்பவர்கள் நாமெல்லாம். நாம் சொன்னவை நம்முள் வளர்கின்றன. நம்மிலிருந்து எழுந்து பரந்து நம்மை சூழ்கின்றன. நம்மை அள்ளித்தூக்கி கொண்டுசென்று தங்கள் உலகை நமக்கு காட்டுகின்றன. எது நிகழ்ந்தது என நாம் அறிவதில்லை. எவரும் எது நிகழ்ந்ததென்று அறியப்போவதும் இல்லை. இங்கு நிகழ்ந்த போர் இங்கிருந்த முடிவிலா படைப்பெருக்கின் ஒவ்வொரு வீரனின் விழிக்கும் ஒவ்வொன்று. சூதரே, அவன் விழி காணும் ஒவ்வொரு கணத்திலும் அது ஒவ்வொன்று.

ஒருவராலும் காணப்படாத ஒரு போர் அங்கு நிகழ்ந்து முடிந்திருக்குமா? இருவர் கண்ட ஒரே போர் ஒன்று என்று எங்கு நிகழ்ந்திருக்கும்? இங்கிருந்து நம் சொல்லில் முளைத்துச் செல்லும் இப்போர் இனியெத்தனை வடிவங்கள் எடுக்கும்! அவ்வடிவங்களினூடாக என்றேனும் எவரேனும் இப்போரை வந்தணைய இயலுமா என்ன? எனில் இங்கு அமர்ந்து எப்போரை நாம் பாடுகிறோம்? ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் நிகழும் போரை அல்லவா சொல்லடுக்கி எழுப்புகிறோம்? இதை கேட்கும் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் குருக்ஷேத்ரக் களம் அமைக்கிறார்கள் அல்லவா?

போர் ஒழியா குருநிலம் வாழ்க! அழியாது நிலைகொள்க இந்த அறநிலம்! என்றும் ஒழியாது நிகழ்க இங்கு இந்தப் போர்! இம்மண்ணில், இக்குருதியில், இவ்வனலில் இங்கு எழுந்தவை என்றுமென உள்ளங்களில் தெளிக! வாளுழுது குருதிபாய்ச்சி பதம்வந்த புது மண்ணில் வேர் விட்டெழுக பூத்து கனியாகி விதைகொண்டு பெருகும் புதிய வேதச்சொல்! ஆம், அவ்வாறே ஆகுக!

கும்பகர் சொன்னார்: குருக்ஷேத்ரக் களத்தில் கர்ணன் அர்ஜுனனை எதிர்த்து போர்புரிந்து கொண்டிருந்தான். அக்காட்சியை மெல்ல மெல்ல களத்திலிருந்த ஒவ்வொருவரும் காணத்தொடங்கினர். படைக்கலம் தாழ்த்தி தேர்களில் திகைத்து நின்று அவர்கள் அவ்விருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவ்விருவரின் உடலிலும் அவர்கள் சொல்லில் அறிந்ததும் விழி நோக்கி தெரிந்ததுமாகிய அனைத்து மாவீரர்களும் எழுந்து வருவதை அவர்கள் கண்டனர். ஒருகணம் அர்ஜுனன் சரத்வானாக மாறி மழைத்துளிகளென அம்பு பெருக செய்தான். பரசுராமரென உருக்கொண்டு நின்று அவனை எதிர்த்தான் கர்ணன். உருவழிந்து உருக்கொண்டு அக்னிவேசர் என நின்றான் அர்ஜுனன். அங்கே கர்ணன் வில் பெருகும் பரத்வாஜர் என மாறினான். அர்ஜுனன் துரோணராக எழுந்தபோது கர்ணன் பீஷ்மர் என நின்றான். பின்னர் இந்திரனென அர்ஜுனன் ஒளிகொள்ள சூரியனென கர்ணன் கதிர்விரிந்தான்.

மைந்தர்களின் போர் காண இருபுறமும் அவர்களின் தந்தையர் வந்து நின்றனர். மேற்கே சரிந்த வான் வளைவில் நீலஒளிவட்டமென அதிர்ந்தான் நாளவன். விளிம்புகள் வெண்ணிறக் கதிர்ச் சுடர்கள் பெருக சுழன்றான். கிழக்குச் சரிவில் முட்டி மோதி மேலெழுந்து வந்த கருமுகில்களுக்கு நடுவே எழுந்த ஏழு வண்ண வில்லென இந்திரன் தோன்றினான். வெயிலும் மழையும் அக்களத்தில் நிகழ்ந்தன. கிழக்கிலிருந்து இடியோசையும் மின்னலும் எழுந்தது. அருமணிகளை வீசியதுபோல் மழைக்கற்கள் வந்தறைந்து குருக்ஷேத்ரக் களத்தை துளிகொதிக்கச் செய்தன. மேற்கிலிருந்து நூறாயிரம் மடைகள் திறந்து ஒளியே வெள்ளமென பெருகிப் பாய்ந்ததுபோல் குருக்ஷேத்ரத்தை நிரப்பியது கதிரவனின் உருகுதல்.

அம்புப்படுக்கையில் பீஷ்மர் மெல்ல முனகினார். அருகணைந்த மருத்துவனிடம் “என்ன நிகழ்கிறது?” என்றார். “பிதாமகரே, உங்கள் உடலில் புண்கள் சீழ்கட்டாமல் மருந்துகொண்டு நிறுத்தியிருக்கிறோம். ஆயினும் உடலில் காய்ச்சல் கண்டிருக்கிறது. கைகால்களில் வீக்கமும் இணைவுகளில் நெறியும் கட்டியிருக்கிறது. தோல் சிவந்துள்ளது. உடலில் நீர் மிகலாகாதென்பதனால் மிகக் குறைவாகவே உங்களுக்கு நீருணவு அளித்துக்கொண்டிருக்கிறோம்” என்று அவன் சொன்னான். “ஆனால் உங்கள் உடல் ஆற்றல் குன்றாமலேயே இருக்கிறது.”

பீஷ்மர் சலிப்புடன் உதடுகளைச் சுளித்து “நான் கேட்பது களத்தில் என்ன நிகழ்கிறது என்று” என்றார். “அதை நாங்கள் அறியோம். களத்தை நோக்கவோ எண்ணவோ கூடாது என்பது எங்கள் நெறிகளில் தலையாயது” என்றான் அவன். பீஷ்மர் “களம் முனைப்புகொண்டிருக்கிறது” என முனகினார். “ஆனால் ஓசை அடங்கிவிட்டிருக்கிறது” என்றான் மருத்துவன். “ஓசையடங்குகையிலேயே போர் கூர் அடைகிறது” என்று பீஷ்மர் சொன்னார். “நீ அதை நோக்கி சொல்… என்ன நிகழ்கிறது? அங்கன் என்னவானான்?” மருத்துவன் உறுதியான குரலில் “என்னால் இயலாது, பிதாமகரே. எந்நிலையிலும் என் தொழிலின் நெறிகளை நான் கைவிடுவதில்லை” என்றான்.

பீஷ்மர் அவனை சலிப்புடன் நோக்கினார். பின்னர் “எனில் அவ்வோசைகள் எனக்கு நன்கு கேட்கும்படி செய். ஓசைகளே எனக்குப் போதுமானவை” என்றார். “அதை எவ்வண்ணம் செய்வது?” என்றான் மருத்துவன். பீஷ்மர் சுற்றும் நோக்கி “அந்த வேலை எடுத்து அருகே நாட்டு. அதன்மேல் அந்த விரிந்த யானத்தை கவிழ்த்து வை. அதன் உலோகப்பரப்பு ஒலிகளை வாங்கும். அதன்மேல் தொட்டுக்கொண்டிருக்கும்படி ஒரு உலோகக் குறுவேலை வைத்து அதன் மறுமுனையை என் வாயருகே கொண்டுவந்து காட்டு” என்றார். அவன் அவ்வண்ணமே செய்ததும் பீஷ்மர் அதனை தன் பற்களால் கவ்விக்கொண்டார். ஓசைகள் அவர் தலைக்குள் நிறைந்தன. விழிகளை மூடிக்கொண்டதும் அவை காட்சிகளாயின. அவர் களத்தை அருகில் இருந்து என நோக்கத் தொடங்கினார்.

மலைச்சரிவில் நோக்குமாடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் “சஞ்சயா, என்ன நிகழ்கிறது களத்தில்? கர்ணனும் அர்ஜுனனும் போரிடுகையில் எவர் நிலை ஓங்கியிருக்கிறது?” என்றார். சஞ்சயன் தன் தொலையாடியை குவித்தும் அகற்றியும் நோக்கிவிட்டு “அரசே, அங்கே இணையிணையென நிகழ்ந்துகொண்டிருக்கிறது போர். எவர் கை ஓங்குகிறது எவர் கை தாழ்கிறது என அவர்கள் இருவர் மட்டுமே அறியமுடியும். அது கணந்தோறும் மாறிக்கொண்டும் இருக்கிறது. பிறர் தங்கள் விழைவுகளையே அக்காட்சிமேல் ஏற்றிச் சொல்லமுடியும்” என்றான்.

திருதராஷ்டிரர் உறுமினார். அவர் சுபாகுவின் இறப்பை ஒரு சொல் எனக்கூட பொருட்படுத்தவில்லை என்பதை சஞ்சயன் கண்டிருந்தான். மைந்தர்களின் இறப்புக்கு அவர் பழகியிருந்தார். மைந்தர் மறையும் செய்திகள் வருகையில் முதலில் கடுந்துயர் கொண்டார். பின்னர் சீற்றமும் வெறியும் அடைந்தார். பின்னர் ஆழ்ந்த அகத்துயர் அடைந்து சொல்லிழந்தவரானார். பின்னர் அதிலிருந்து வெளியேறும் வாயில் ஒன்றை திறந்தார். அந்தப் போரை வெறுமொரு ஆடலாகக் கண்டார். தன்னை காலம் கடந்து எங்கோ நின்று கதையிலென அதை காண்பவனாக ஆக்கிக்கொண்டார். ஆடலின் வெறி மட்டுமே அவரை இயக்கியது. வெற்றியும் தோல்வியும் மட்டுமே அவர் அறிய விழைவதாக இருந்தது.

“ஆனால் ஒன்றுண்டு, அரசே. ஊழ் இளைய பாண்டவரை ஆதரிக்கிறது. நிமித்திகர் அதைக் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள்” என்று சஞ்சயன் சொன்னான். “இத்தனை தொலைவிலிருந்து நோக்குகையில் அங்கிருக்கும் ஒவ்வொருவரும் அங்கு நிகழ்வதென்ன என்று அறிந்திருக்கிறார்கள் என்றே உணர்கிறேன். இளைய பாண்டவர் வென்றுகொண்டிருக்கிறார். மைந்தன் தன் நெஞ்சிலேறி மிதிக்க அதில் மகிழ்ந்து கொண்டாடும் தந்தையைப்போல் கர்ணன் அந்த வெற்றியை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அந்த ஆடலை சொல்லின்றி, செயலின்றி நிகழ்த்திக்கொண்டு தேரின் அமரத்தில் அமர்ந்திருக்கிறார் இளைய யாதவர்.” திருதராஷ்டிரர் மீண்டும் உறுமினார்.

ஏகாக்ஷரிடம் காந்தாரி கேட்டாள். “என்ன நிகழ்கிறது? உத்தமரே, என் மைந்தன் கர்ணன் வெல்லப்போகிறான் அல்லவா?” ஏகாக்ஷர் களம் மீது கவடி நிரத்தி கலைத்து அடுக்கி ஒற்றை விழிதூக்கி நோக்கினார். “அங்கே எழுந்துகொண்டிருப்பது நான்காம் அனல். வடவை. ருத்ரவிழி. அதை வெல்ல எவராலும் இயலாது” என்றார். காந்தாரி “என் மைந்தன் எங்கும் வெல்வான்” என்றாள். ஏகாக்ஷர் “ஆனால் கவடி காட்டுவது மேலும் ஒன்று. அங்கே ஆழியும் வெண்சங்கும் ஏந்திய விண்ணோன் எழுந்துள்ளான். பதினொரு உருத்திரர்களும் வணங்கும் பெரியோன். அனலை அணைப்பது அவனுடைய பாற்கடல்” என்றார். காந்தாரி நீள்மூச்செறிந்தாள்.

நாகர்குலத்தின் களத்தில் அமைந்த அரவானின் தலை சொன்னது. “கூட்டரே, குலத்தோரே, நான் காண்பது அரவுகள் செறிந்த பெருங்களத்தை. மண்ணுக்கு அடியில் பெருநாகங்கள் படம்தூக்கி எழுகின்றன. அவற்றின் மூச்சுக்கள் களமெங்கும் எழுந்துகொண்டிருக்கின்றன. நாகபாசன் தன் அம்புகளுடன் களத்தில் நின்றிருக்கிறான். அவனுக்கு எதிர்நின்றிருக்கிறது இடிமின்னல்களின் அரசனின் பெரும்படை.”

குருக்ஷேத்ரப் பெருங்களத்தின் ஒவ்வொரு மூலையிலும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு படைவீரரும் தங்கள் உச்சத்தில் நின்று பொருதிக்கொண்டிருந்தனர். அத்தனை நாள் நிகழ்ந்த போரிலிருந்து அக்கணத்திற்கான விசையை அவர்கள் திரட்டிக்கொண்டிருப்பதுபோல. அங்கிருந்து முடிவிலாக் காலம் வரை ஒருவரிலிருந்து ஒருவரிடம் தொற்றிக்கொண்டு அந்தப் போர் சென்றுகொண்டே இருக்கும் என்பதுபோல. நிலமெனத் தாங்கி பிறவிக்களமென்றாகி உணவென்றும் இருந்த அன்னத்தின்மேல் நெளியும் புழுக்களைப்போல. அன்னம் ஒழிய ஒன்றையொன்று உண்டாலொழிய அவை உயிர்வாழ முடியாமலாகிவிட்டதுபோல.

போர்களில் பழகியவர்கள் அல்ல அவர்களில் பெரும்பாலானவர்கள். எளிய ஏவலரும் காவலருமென பணியாற்றியவர்கள். போர்களை அவர்கள் கற்பனை செய்து கொண்டதும் இல்லை. நேரில் கண்ட தருணத்திலேயே அஞ்சி உள்ளொதுங்கிக் கொண்டவர்கள். ஆனால் அவ்வாறு அச்சமும் விலக்கமும் கொள்கையிலேயே தங்கள் உள்ளிருந்து ஒன்று எழுந்து போரில் ஈடுபடுவதை, வஞ்சம் கொள்வதை, குருதிக் கூத்தாடுவதை கண்டுகொண்டிருந்தனர். ஒவ்வொருநாளும் பணி முடிந்த பின்னர் அமர்ந்து அவர்கள் போரைப்பற்றியே பேசினர். பேசிப்பேசி பெரிதாக்கிய போருடன் தாங்களும் வீங்கிப் பெருகினர். போரின் ஓசையில் துயின்றபோது கனவுகளில் உருமாறி நின்று போரிட்டனர்.

அவர்களும் போருக்கு எழவேண்டுமென்ற ஆணை அளிக்கப்பட்டபோது முதற்கணத் திகைப்புக்குப் பின் அச்சம் எழுந்து உடலை நடுங்க வைக்கையில் அதன் ஆழத்திலிருந்து கிளர்ச்சி ஒன்றெழுந்து முகங்களை விரியச்செய்தது. அச்சத்தை பகிர்ந்துகொள்பவர்கள்போல அவர்கள் அக்கிளர்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சலித்துக்கொள்பவர்கள்போல் உவகையை வெளிப்படுத்தினர். போரில் எழுந்து முதல் அம்பை தொடுத்ததும் அது உளம்சூடிச் சென்று தங்கள் எதிரியை கொன்று மீண்டது கண்டு மெய்ப்பு கொண்டனர். வேலேந்தி எதிரியின் மெல்லுடலுக்குள் செலுத்தியவர்கள் அக்கணத்தில் முதல் காமத்தை அறிந்தவர்கள்போல் உடல் திளைத்தனர்.

கொன்று கொன்று மேலெழுகையில் பல மடங்கு மேலும் மேலும் கொன்று கொன்று மேலெழும் உளமொன்று தங்களுக்குள் எழுந்திருப்பதைக் கண்டு தாங்கள் தங்களை எண்ணியதைவிட பேருருவர்கள் என்று எண்ணி தருக்கினர். போர் தங்களை விராட உருவம் கொள்ளச்செய்கிறது. ஒருவரோடொருவர் தொடுத்துக்கொண்டு களமெங்கும் பரவச் செய்கிறது. களத்திலிருந்த படைவீரர் அனைவரும் தன் உடலென்று ஆகி விண்ணளாவ தலைநிமிர்ந்து கை சுழற்றிச் செல்ல இயல்கிறது. முதல்நாள் போர் முடிந்து திரும்புகையிலேயே அவ்வுடலுக்குள் அவர்கள் மீண்டும் பிறந்து எழுந்துவிட்டிருந்தனர். விழிகள் கூர்கொள்ள சொல்லடங்கி அவர்கள் அழுத்தம் மிக்கவர்களாக ஆயினர். நிலம்பதிந்த கால் அழுந்த எடைமிக்கவர்கள் ஆகிவிட்டதுபோல் மயங்கினர்.

போர்க்களத்தின் எல்லையில் கிருபரும் சாத்யகியும் பொருதிக்கொண்டிருந்தனர். அஸ்வத்தாமனும் திருஷ்டத்யும்னனும் அனல் கொண்டு போரிட்டனர். பீமனும் துரியோதனனும் எழுந்தும் பின்னடைந்தும் மீண்டெழுந்தும் போரிட்டுக்கொண்டிருந்தனர். கர்ணனும் அர்ஜுனனும் பிறரில்லா வெளியொன்றில் ஒருவரையொருவர் அம்புகளால் தாக்கி ஒருவரையொருவர் வென்று மீண்டும் வென்று சென்றுகொண்டிருந்தனர். இருவரின் தேர்களும் காதல் கொண்ட இரு வண்டுகள்போல் ஒன்றையொன்று சுற்றி வந்தன. அர்ஜுனனின் வெள்ளித்தேர் கர்ணனின் பொற்தேருடன் ஒரு விழிதுலங்கா மென்சரடால் இணைக்கப்பட்டிருந்ததுபோல் தோன்றியது.

சல்யர் இறங்கிச்சென்ற பின் கர்ணனின் குடிமைந்தன் சபரன் பாகனென ஏறி நின்று தேரை செலுத்தினான். கர்ணனிடமிருந்து தேர்க்கலையை கற்றவன் அவன். குருதியில் அதிரதனின் சவுக்கு இருந்தது. சல்யருக்கு நிகராகவே அவனால் தேரை ஓட்ட இயன்றது. தந்தைக்கு மைந்தனே மிகச் சிறந்த பாகன் என்று அக்களத்தில் அவன் காட்டினான் . கர்ணன் பஞ்சராத்திர அஸ்திரத்தால் அர்ஜுனனை அறைந்தான். வைஸ்வாநர அஸ்திரத்தால் அதை அர்ஜுனன் தடுத்தான். அம்புகளால் கிழிபட்டு அவர்களைச் சூழ்ந்திருந்த வெளி அதிர்வதையே விழிகளால் பார்க்க முடிந்தது. கர்ணனின் அம்புகளுக்கு நிகரான அம்பு அர்ஜுனனின் அம்பறாத்தூணியிலிருந்து தானே உந்தி எழுந்தது. அர்ஜுனனின் அம்பை சந்தித்த கர்ணனின் அம்பு அதை முன்னரே அறிந்திருந்தது.

எங்கோ எழுந்த முரசு பீமனால் சுபாகு கொல்லப்பட்டதை அறிவித்தது. செய்தியறிந்த துரியோதனன் ஒருகணம் திகைத்தான். வெறிகொண்டு தேர்த்தட்டை ஓங்கி உதைத்தான். “செல்க! செல்க!” என ஏவியபடி சீற்றத்துடன் படைகளை ஊடுருவிச்சென்று பீமனை சந்தித்தான். சுபாகுவின் குருதியை உடலெங்கும் பூசிக்கொண்டு அமலையாடி வந்த பீமனைக் கண்டு பிளிறியபடி கதையுடன் பாய்ந்தான் துரியோதனன். பீமனும் தன் கதையை தூக்கிக்கொண்டு நிலத்தில் பாய்ந்து துரியோதனனை எதிர்த்தான். “உன் இளையோனின் குருதி இது. உன் குருதி அதில் கலக்கட்டும்… எழுக, இழிமகனே!” என பீமன் கூச்சலிட்டான். மத்தகம் முட்டும் வேழங்கள் என அவர்கள் கதை பொருதிக்கொண்டார்கள்.

கர்ணனின் அம்புகளின் ஆற்றல் மிகுந்து வருவதை இளைய யாதவர் கண்டார். கந்தர்வாஸ்திரங்கள் நூற்றுக்கணக்கான வெண்மலர்கள் என வெடித்தன. கின்னராஸ்திரங்கள் செவிநிறைக்கும் முழக்கத்தை எழுப்பின. அர்ஜுனன் தோள்தளர்ந்த கணத்தில் இளைய யாதவர் தேரை பின்னிழுத்து படைகளுக்குள் மறைத்தார். கவசப்படை எழுந்து வந்து அர்ஜுனனை மறைக்க கர்ணன் ஏளனத்துடன் “நில்… ஆணிலியே, நின்று பொருது… ஏன் ஒளிந்தோடுகிறாய்?” என்று கூவினான். கவசப்படையின் கதவு திறந்து மறுபக்கமிருந்து கோசலத்தின் இளையமன்னன் விசோகன் நாணொலி எழுப்பியபடி கர்ணனை நோக்கி வந்தான். “என்னுடன் பொருது! பொருது என்னுடன், சூதனே” என்று கூவியபடி அவன் கர்ணனை எதிர்கொண்டான்.

“விலகிச்செல், சிறியோனே. இது உனது போரல்ல” என்று கர்ணன் கூவினான். “ஆம், எனது போரல்ல இது என்று அறிவேன். இனி இக்களத்திலிருந்து புகழையன்றி பிறிதொன்றை ஈட்டி திரும்பிச்செல்ல இயலாதென்று அறிந்திருக்கிறேன். அங்கனே, இப்போரில் உன் அம்பினால் நான் களம்பட்டேன் எனில் நீயும் பார்த்தனும் பொருதும் கதையைப் பாடும் ஒவ்வொரு சூதர் நாவிலும் நின்றிருப்பேன். அதுவே என் வீடுபேறு” என்றான் விசோகன். அவன் கவசங்களை அறைந்து உடைத்து “உன்னை கொல்லும் எண்ணம் எனக்கில்லை… விலகுக!” என்றபின் கர்ணன் திரும்பி அர்ஜுனனை மறைத்து அரணெழுப்பிய கவசப்படையை நோக்கி மதங்காஸ்திரத்தை ஏவினான்.

ஒன்று நூறென பெருகிச்சென்று உலோகப்பரப்புகளை அறைந்து சிதறடித்தது அந்த அம்பு. அதைத் தொடர்ந்து எழுந்த மாருதாஸ்திரம் புயல் காற்றுபோல் அப்பகுதியை அள்ளிச் சுழற்றியது. விசோகன் தன் பெரிய அம்புகளால் கர்ணனின் தேரை அறைந்தான். “என்னுடன் பொருது… கீழ்மகனே, பொருது என்னுடன்” என்று கண்ணீர் வழியக் கூவினான். கர்ணன் உதடுகளைச் சுழித்தபடி திரும்பி அவன் தேர்ப்புரவிகளில் ஒன்றின் கழுத்தை அறுத்தான். சலிக்காது அம்புகள் தொடுத்தபடி அவன் முன்னெழுந்து வர “விலகு, அறிவிலி” என்று கர்ணன் கூவினான். விசோகனின் அம்பு ஒன்று வந்து கர்ணனின் கவசத்தை அறைந்து ஓசை எழுப்பியது.

கணம் துடித்த சினத்தால் கர்ணன் திரும்பி கட்காஸ்திரத்தை எடுத்து ஒரே வீச்சில் விசோகனின் கழுத்தை அறுத்து அப்பாலிட்டான். கையில் எடுத்த அம்புடன் நின்று தடுமாறி தேர்த்தட்டில் விழுந்து விசோகன் துடித்து உயிர் துறந்தான். அவனை ஒருமுறைகூட திரும்பி நோக்காமல் உடைந்து அகன்ற கவசப்படையினூடாகக் கடந்து பாண்டவப் படைக்குள் நுழைந்து கர்ணன் அறைகூவினான். “எங்கே பார்த்தன்? எங்கே உங்கள் வில்விஜயன்? ஆண்மைகொண்டவன் எனில் இக்கணமே இங்கு எழுக… இன்றே இந்த ஆடல் முடிவடைக…”

முந்தைய கட்டுரைகோடைநாளில்…
அடுத்த கட்டுரைராகுல்,மோடி -கடிதங்கள்