மீட்சி -ஒரு சிறுகதை

 

நண்பர் தாமரைக்கண்னன் எழுதிய முதல் சிறுகதை ‘ மீட்சி’. முதல்சிறுகதை என்றவகையில் செறிவுடனும் நுண்மையுடனும் அமைந்திருக்கிறது. இனிய வாசிப்பனுபவமாகவும் அமைந்துள்ளது.

 

ஆனால் இக்கதையில் நான் காணும் சில போதாமைகள் உள்ளன. அவற்றை என் பார்வைகள் எனக் கொள்ளலாம். விவாதக்குறிப்பாகவே இதை எழுதுகிறேன்

 

அ. .ஒரு நவீன இலக்கியப்படைப்பு மரபான மொழிநடையை கைக்கொள்வது, மரபான மொழிபின் பகுதியாக அல்ல. அது ஒரு மறுஆக்கமாக அமையவேண்டும். மரபான மொழிநடையை அது எடுத்துக்கொண்டு நவீனமாக்கவேண்டும். மரபான மொழிநடையை அப்படியே கையாளுவது நவீன இலக்கியம் அல்ல. ஆகவே மரபான உவமைகள், மரபான படிமங்கள், மரபான சொல்லாட்சிகள் தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் என்றால் அவை புதியபொருளில் பயின்றுவரவேண்டும்.

 

ஆ.ஒரு நவீன இலக்கியம் என்பது இதுவரையிலான இலக்கியமரபின் இயல்பான நீட்சி அல்ல. அதன்மீதான விமர்சனத்துடன் திரும்பி நின்று அதை நோக்குவது. நவீன என்னும் முன்னொட்டு அதையே குறிப்பிடுகிறது. இவ்வேறுபாடே நாவலை மரபான காவியங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. [நாவல் என்னும் நூலிலும் பிறகட்டுரைகளிலும் விரிவாக இதை எழுதியிருக்கிறேன்] ஆகவே விமர்சனம், முரண்படுதல், மாற்று உருவாக்கம் ஆகியவையே நவீன இலக்கியத்தின் வழிமுறைகள். இதில் ஒரு ‘துடுக்கு’ உள்ளது. ஒரு மீறல். நவீன இலக்கிய ஆசிரியன் என்னும் இடம் அந்த மீறல்கொண்டவர்களுக்குரியது. மரபான இலக்கியங்களோ கருக்களோ நவீன இலக்கியத்தில் எழுகையில் மரபான வாசகர்கள் ஒவ்வாமைகொள்வது இதனால்தான். நவீன இலக்கியம் அது அளிக்கும் சீண்டல், நிலைகுலைவு வழியாகவே தன்னைத் தொடர்புறுத்துகிறது.

 

இ. இந்த முரண்படுதல், மீறல், விமர்சனம் ஆகியவை மரபின்மீதான அறம்சார்ந்த, தத்துவம்சார்ந்த, தரிசனம் சார்ந்த அல்லது குறைந்தது நடைமுறை வாழ்வு சார்ந்த ஆசிரியரின் நிலைபாட்டிலிருந்து எழவேண்டும்

 

ஈ. வெளிப்படையாக அல்லாமல் மிகநுட்பமாகவும் ஒட்டுமொத்தமாகவும் இந்த மறுஆக்கத்தை நவீன இலக்கியப்படைப்பு நிகழ்த்தலாம். ஆனால் மரபான பார்வையின் இயல்பான  நீட்சியோ, விளக்கமோ, புதியகோணமோ மட்டும் நிகழ்வது நவீன இலக்கியமல்ல.

மீட்சி – தாமரைக்கண்ணன் சிறுகதை

முந்தைய கட்டுரைநவீன் -நேர்காணல்
அடுத்த கட்டுரைபான்ஸாய்க் கடல்