ச.துரை – நான்கு கவிதைகள்

[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்]

எங்களுடைய உவர் நிலத்தில்
வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள்
ஏழடி இருப்பாள் எனக்குத்தெரிய முக்கால் ஆண்டுகளாக
ஒரே இடத்தில் அலைபார்க்கிறாள்
காற்று வாங்குகிறாள், நீராடுகிறாள்
எப்போதாவது புரண்டுபடுப்பாள்
அப்போதெல்லாம் கடலும்
எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும்

*

மொத்தமாகப் பதுங்குழிகளில் வந்து விழுந்தார்கள்
“அப்பா நாம் ஏன்  பாம்பைப்போல
படுத்தபடியே நகர்கிறோம்?”
இறைவன் வானிலிருந்து
திராட்சிகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே
அவை புளிக்கும் திராட்சைகள்
உனக்குப் பிடிக்காதல்லவா?

*

தற்செயலாக நடந்ததுதான்
மூளையை அகற்றிவிட்டு தலையில்
ஆப்பிளை வைத்து தைத்துவிட்டேன்
வெகுசிறிய மாற்றம்தான்
அது பிரச்சினையில்லை
தற்போது அகற்றிய இந்த மூளையை
என்ன செய்வது என்பதில் ஆரம்பிக்கிறது குழப்பம்
ஒரு கஞ்சாத்தோட்டத்திற்குள் புதைத்துவிடலாம்
பேரல் நிரம்பிய எரிசாராயத்திற்குள் மிதக்கவிடலாம்
பிரேதபரிசோதனை அறைக்குள் தள்ளிவிடலாம்.
கூவம் ஆற்றில் வீசலாம்
தெருநாய்களுக்கு என்றெல்லாம் ஆப்பிள் சொன்னது
எனக்கு எதுவுமே சரிப்பட்டு வரவில்லை.
ஒருமுறை மூளையிடமே கேட்கலாமே
மீண்டும் ஆப்பிளை நீக்கி
தலையில் மூளையை வைத்தேன்
அது ஆப்பிளைத் தின்றுவிடு என்றது

*

கூடைக்குள் வைக்கப்படுகிற
ஆப்பிளைப்போலத்தான்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன்னைத் தொட்டிலுக்குள்
வைப்பேன் மகளே
நீ அத்தனை சிவப்பு
மொழி அத்தனை இனிப்பு
அம்மா உனக்கு அழகான குடுமி இடுவாள்
அது அப்படியே ஆப்பிளின்
காம்பைப்போல்  இருக்கும்

ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்
ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது
குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.
ச. துரை கவிதைகள்
இருளுக்குள் பாயும் தவளை. ச. துரை கவிதைகள் – கடலூர் சீனு
முந்தைய கட்டுரைஅஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக் – டி.ஏ.பாரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49