ஓலைச்சிலுவை [சிறுகதை] – 2

தொடர்ச்சி

2

என்னை மதம் மாற்றியவர் நெய்யூரின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் தியோடர் ஹோவர்ட் சாமர்வெல். [Dr.Theodore Howard Somervell] ஊரில் அவரை சாமுவல் என்று சொன்னார்கள். நான் அவரது வரலாற்றை தெரிந்துகொண்டது மேலும் நான்கு வருடங்கள் கழித்துதான். அவர் தன்னைப்பற்றிச் சொல்லக்கூடியவரல்ல. செயலே உருவான மனிதர். மிகக்குறைவாகப் பேசக்கூடியவர். எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பார். பைபிள் தவிர வேறொன்றும் வாசிக்காத வெள்ளைகாரர்கள் போல அல்ல. அவருக்கு ஷேக்ஸ்பியர் மேல் தணியாத மோகம் இருந்தது. அவரது மேஜைமேல் எப்போதும் ஷேக்ஸ்பியரின் தோல் அட்டை போட்ட பெரிய தொகைநூல் இருக்கும். பேச்சில் ஷேக்ஸ்பியர் வரிகள் சாதாரணமாக வரும்.

சென்னையில் இருந்து நேரடியாக புத்தகங்களை வரவழைத்து வாசிப்பார். வெள்ளிதோறும் நாகர்கோயில் சென்று அதை பெற்றுவருவார். அவரது சொந்த நூலகம் மிகவும் பெரியது. அதில் டிக்கன்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட் என ஒருவரிசை. டபிள்யூ டபிள்யூ ஜேக்கப்ஸ், மேரி கெரெல்லி என இன்னொரு வரிசை. அவற்றில் கணிசமானவற்றை நான் பின்னர் வாசித்திருக்கிறேன். அந்த நூல்கள் அனைத்தும் அவருக்குப் பின்னர் ஸ்காட் கிறித்தவக்கல்லூரி நூலகத்துக்குச் சென்றன.

சாமர்வெல்லுக்கு இசை ஆர்வம் உண்டு. என்ன காரணத்தாலோ இந்திய இசை அவர் காதுக்குள் நுழையவே இல்லை. ஆனால் மேலையிசையிலும் காஸ்பல் இசையிலும் பெரும் பித்து உண்டு. அவரிடம் கன்னங்கரிய ஊமத்தை மலர்போன்ற கிராமபோன் கருவி ஒன்றிருந்தது. அவருக்கு இசைத்தோழராக நாகர்கோயில் ஸ்காட் கல்லூரி முதல்வர் ராபின்ஸன்துரை இருந்தார். இசைத்தட்டுக்களுடன் அவர் ஞாயிறு மதியம் வருவார். இரவாவது வரை அவற்றை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டுக்கொண்டு கையில் ஒரு பிராந்திக் கோப்பையுடன் கனவில் போல அமர்ந்திருப்பார்ர்கள். சாமர்வெல் பியானோவும் ஓபோவும் வாசிப்பார்.

சாமர்வெல் இங்கிலாந்தில் வெஸ்ட்மோர்லேண்டில் கெண்டால் என்ற ஊரில் பிறந்தார். அதை அவரது ஃபைலில் பார்த்தேன். அவருடைய பெற்றோர் செருப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்தார்கள். அதை ஒருமுறை அவரே சொன்னார். நாகர்கோயிலைச்சேர்ந்த நாகராஜ அய்யர் என்பவர் விரைவீக்க அறுவைசிகிழ்ச்சைக்காக வந்து படுத்திருந்தார். அவனருகே செருப்பு தைக்கும் செம்மான் ஒருவனை படுக்கவைத்துவிட்டார்கள் என்று புகார் சொன்னபோது ‘நான் ஒரு செருப்பு தைக்கிறவன் தெரியுமா அய்ரே’ என்றார். ‘பொய் சொல்லாதீங்க சாயிப்பே’ என்றார் அய்யர். ‘இல்லே..எங்க குடும்பம் செருப்பு தைச்சு விக்கிற ஆலை வச்சிருந்தாங்க’ என்றார். அய்யர் ‘ஆலைதானே?’ என்று சொல்லி உடனே கண்ணை மூடிக்கொண்டார்

சாமர்வெல் அபாரமான விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார். தினமும் ஆஸ்பத்திரிக்கும் சர்ச்சுக்கும் நடுவே உள்ள மைதானத்தில் அவர் பேட்மிண்டன் விளையாடுவார். அவருடன் விளையாடுவதற்காக வேறு வெள்ளைக்காரர்கள் நாகர்கோயிலில் இருந்து வருவார்கள். நான் பார்க்கும்போதே அவருக்கு ஐம்பதுவயது தாண்டிவிட்டிருந்தது. ஆனால் அவருடன் எவராலும் விளையாடி வெல்ல முடியாது. அவருக்கு எதிராக விளையாடுபவர்கள் ஒவ்வொருவராக களைத்து அமர்ந்துவிட மேலும் மேலும் புதியவர்களுடன் அவர் ஆடுவார். இருட்டில் பந்து தெரியாமலாகும்போது சட்டை வியர்வையில் ஒட்டியிருக்க வந்து இரும்பு நாற்காலியில் அமர்ந்துகொள்வார். நான் அவருக்கு வெல்லம் சேர்த்த சூடான பருத்திக்கொட்டைப்பாலை எனாமல் கோப்பையில் கொடுப்பேன்.

சாமர்வெல் மேல் எனக்கு அடங்காத கவனம் இருந்துகொண்டிருந்தது. அவரை புரிந்துகொள்ள அவருடன் இருந்த பத்து வருடமும் ஒவ்வொரு கணமும் முயன்று வந்தேன். அவரது ஃபைல்களை ஒருமுறை லண்டன்மிஷன் தலைமையகத்துக்குச் சென்றபோது ஒருவரிடம் கேட்டு ரகசியமாக வாசித்தேன். அவர் கேம்பிரிட்ஜின் கான்வில்- காயஸ் கல்லூரியில் மருத்துவம் பயின்றாவர். அதன்பின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஈடுபட்டார்.1915 முதல் 1918 வரை சாமர்வெல் பிரான்சில் பிரிட்டிஷ் இராணுவ வீரராகப் பணியாற்றினார். காப்டன் பதவியை அடைந்தபின் விருப்பப் பணி ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது.

தனது ராணுவ வாழ்க்கை பற்றி சாமர்வெல் ஒருபோதும் பேசியதில்லை, ஒரே ஒருமுறை மட்டும் அவர் ஓர் அனுபவத்தைச் சொன்னார். வார்டுக்குள் அவர் நுழைந்தபோது ஒரு கிழவர் ‘சாயிப்பே நான் சாவுறேன் சாகிப்பே…எனக்கு வலிதாங்கமுடியல்ல சாகிப்பே…வாங்க சாகிப்பே…இங்க வாங்க சாகிப்பே’ என்று கத்தினார். சாமர்வெல் ’இரு’ என்று கை காட்டினார். இன்னொரு மலையாள பள்ளிக்கூட வாத்தியாரின் கட்டை அவிழ்த்து பார்த்துக்கொண்டிருந்தார். கிழவர் மீண்டும் மீண்டும் ‘சாய்ப்பே ஓடி வாங்க சாயிப்பே’ உரக்கக் கத்தியபோது சாமர்வெல் சட்டென்று அருகே சென்று படீரென்று கன்னத்தில் ஓர் அறை வைத்தார். அவர் ஒரு மூத்த பிள்ளைவாள். அடிபட்டதும் அவர் அரண்டுபோய் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கண்களில் கண்ணீருடன் அமைதியானார். சாமர்வெல் எந்த கோபமும் தெரியாத முகத்துடன் புண்ணைப் பார்க்க ஆரம்பித்தார்.

தன் அறைக்கு திரும்பும் வழியில் சாமர்வெல் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். முதல் உலகப்போரில் நடந்த சம்பவம். பிரான்ஸில் சோம்மே என்ற ஊரில் ஒரு போர்முனை. எழுநூறுபேருக்குமேல் படுகாயம் அடைந்து ஒரு பெரிய கொட்டகைக்குள் கொண்டு வந்து போடப்பட்டிருந்தார்கள். அங்கே இருந்தது சாமர்வெல் உட்பட நான்கே நான்கு மருத்துவர்கள். இரவெல்லாம் வெறிபிடித்தது போல சாமர்வெல் வேலைசெய்துகொண்டிருந்தார். பின்னிரவில் களைத்து சோர்ந்து ஒரு வீரனின் படுக்கையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டார். அடுத்த படுக்கையில் இருகால்களும் சிதைந்த ஒருவன் கிடந்தான். அவனுடைய கண்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து எழுந்தார். அவன் கையை அசைத்து ‘பரவாயில்லை, ஓய்வெடுத்தபின் வாருங்கள்’ என்று சைகை செய்தான்.

சாமர்வெல் அங்கேயே மனம் பொங்கி கண்ணீர் மல்கிவிட்டார்.அந்த மாபெரும் ஆஸ்பத்திரி வார்டில் கிடந்தவர்களில் பாதிப்பேர் ஒருமணி நேரத்தில் மருத்துவ உதவிகிடைக்காவிட்டால் சாகக்கூடியவர்கள். கட்டில்களில் இருந்து வழிந்த குருதி உண்மையிலேயே ஓரமாக ஓடைபோல வழிந்துகொண்டிருந்தது. ஆனால் ஒருவர் கூட தன்னை வரிசையை மீறி வந்து கவனிக்கவேண்டும் என்று கோரவில்லை. ஒருவர் கூட கெஞ்சவில்லை. ‘எத்தனை மகத்தானவன் மனிதன்! கடவுளின் படைப்பில் இந்த ஓர் உயிருக்கு மட்டும் எவ்வளவு ஆன்ம வல்லமை சாத்தியமாகிறது! அவன் போக்க்கூடிய தூரம் எவ்வளவு அதிகம். அவனால் கொஞ்சம் கைநீட்டினால் மனிதகுமாரனின் கால்களை தொட்டு விடமுடியுமே… இங்கே சிதைந்து கிடக்கும் அத்தனைபேருமே அதற்கான வாய்ப்புள்ளவர்கள் அல்லவா? அவர்களை வெறும் சதைப்பிண்டங்கள் போல சிதைத்து எறிந்து எந்த அரசை வெல்லப்போகிறார்கள்? எந்த வெற்றியை கொண்டாடப்போகிறார்கள் ’ ஒருபோதும் இனிமேல் போரில் ஈடுபடுவதில்லை என்று சாமர்வெல் முடிவுசெய்தது அன்றுதான்.

அன்று மாலை கையில் தன் ஓபோ புல்லாங்குழலுடன் அந்த பிள்ளைவாளுக்கு அருகே சென்று அமர்ந்துகொண்டார் சாமர்வெல். அவரைக்கண்டதும் பிள்ளைவாள் பதறி எழுந்தமர்ந்து நடுங்கக் கைகூப்பினார். சாமர்வெல் அந்த ஓபோவை மெல்ல வாசிக்க ஆரம்பித்தார். நான் சென்று வாசலில் நின்று கேட்டேன். எதையோ மன்றாடுவது போலவோ எதற்கோ நன்றி சொல்வது போலவோ நெளிந்து வளைந்து வழிந்தோடும் மேல்நாட்டு இசை. கைகூப்பியபடி கண்களில் கண்ணீர் கொட்ட பிள்ளைவாள் அமர்ந்திருந்தார். அந்த அறைமுழுக்க கண்ணுக்குத்தெரியாமல் நிறைந்திருந்த வலி சன்னல்கள் வழியாக வெளியே சென்றது. இனம்புரியாத மகத்துவம் ஒன்று அங்கே நிறைந்து நின்றது .அழியாதது, என்றும் எங்கும் மனிதனால் உடனடியாக அடையாளம் காணத்தக்கது. . இசை அங்கிருந்த அத்தனை வலிகளையும் ஒன்றாக்கி ஒரே மானுடவலியாக்கி அதை சாதித்ததா என்ன? அந்த அப்பால் மலையாளிப்பள்ளி ஆசிரியர் தலையணையில் முகம் புதைத்து அழுவதைக் கண்டேன்.

நான் முதன்முதலாக சாமர்வெல் அறைக்குள் நுழைந்தபோது அவரது அறைச்சுவரில் கண்ட புகைப்படம் இமயமலைமுகடுகளுடையது என பின்னர் அறிந்தேன். அதில் நடுவில் இருந்த சிகரத்தின் பெயர் எவெரெஸ்ட். அதில் ஏறச்சென்ற முன்னோடியான மலையேற்ற வீரர்களில் ஒருவர் சாமர்வெல். 1922ல் அவரும் அவரது நண்பர் ஜார்ஜ் மல்லோரியும் எவரெஸ்ட் சிகரத்தை வடக்குமூலை வழியாக ஏற முயன்றார்கள். 8000 மீட்டர் உயரம் வரை கடும் பனிப்பொழிவில் ஏறிச்சென்றார்கள். அன்றுவரை இமயத்தில் மனிதர்கள் ஏறியயதிலேயே அதிக உயரம் அதுதான். அதற்குமேல் செல்லமுடியாமல் காற்றழுத்த தாழ்வு அவர்களை தடுத்தது.

முதலில் அவர்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் பயணம்செய்தார்கள். ஆகவே ஆக்ஸிஜனுடன் அதே வருடம் இன்னொரு முறை எவரெஸ்டில் ஏற முயன்றார்கள். இடுப்பளவு பனியில் பனிக்கோடரியால் வெட்டிய தடங்களில் மிதித்து ஏறிச்சென்றார்கள். தலைக்குமேலே ஓரு பிரம்மாண்டமான உறுமல் ஒலியை சாமர்வெல் கேட்டார். அப்போது அவரை அறியாமலேயே ’ஆமென்’ என்று சொன்னாராம். அவரது தலைக்குமேல் இருந்த ஒரு பனிமலை அபப்டியே பெயர்ந்து ராட்சத அருவிபோல கீழே வந்தது. அவருக்கு மேலே இருந்த ஒரு பனிபாறை நீட்டல் அந்த பனிவெள்ளத்தை இரண்டாக பிளந்தது. அந்த பிளவில் சாமர்வெல் நிற்க இருபக்கமும் இருந்தவர்களை அந்த பனிவீழ்ச்சி அள்ளிக்கொண்டு அதலபாதாளத்தில் இறங்கிச் சென்று மறைந்தது. சிலநிமிடங்களுக்குள் அந்த நிலமே அடையாளம் காணமுடியாத இன்னொன்றாக ஆகியது.

அந்த பேரொலி அடங்கியதும் சாமர்வெல் தனிமையில் வெண்பனியில் நின்று நடுநடுங்கினார். அதற்குமேல் ஓர் அடி எடுத்து வைக்க முடியவில்லை. அங்கேயே நெடுநேரம் அமர்ந்திருந்தார். அந்த வழியை தேர்ந்தெடுத்ததே அவர்தான். நண்பர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்பது அவரும் கூடவே குதிப்பதுதான். குதிக்க முடிவெடுத்து எழுந்தவர் திரும்பும்போது மேலே தெரிந்த அந்த பனிப்பாறை நீட்டலை கண்டார். கால்வரை நீண்ட வெண்ணிறமான அங்கிக்குள் இருந்து ஒரு கை ஆசியுடன் எழுந்தது போல அவர் தலைக்குமேல் அது நின்றது. ‘ஏசுவே, என் மீட்பரே!’ என என்று மார்பில் கைவைத்து விம்மினார்

மலையிறங்கி டெராடூன் வந்த சாமர்வெல் இந்தியா முழுக்க அலைந்து திரிந்தார். ஒவ்வொரு நாளும் இரவில் தன் அறையை சாத்திவிட்டு முழந்தாளிட்டு கண்ணீருடன் மணிக்கணக்காக ஜெபம் செய்தார். ‘என் தேவனே நீர் உத்தேசித்தது என்ன? உமது ஆக்கினை என்ன தேவனே?’ என்று மன்றாடினார். எதன்பொருட்டோ தான் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அவர் நினைத்தார். ஒவ்வொரு ஊரிலும் நின்று ‘என்னுடைய மண்ணை எனக்கு காட்டியருளும் தேவனே’ என்று கண்ணீர் விட்டார்.

1925ல் ஒருநாள் அவர் கல்கத்தாவில் விடுதி அறை ஒன்றில் ஜெபம்செய்துகொண்டிருந்தபோது வேலையாள் ஒரு கடிதத்தை கொண்டுவந்து கொடுத்தான். அவருடன் ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் லண்டன் மிஷன் பணியாளராக நாகர்கோயிலில் இருந்தார். அவர் எழுதிய கடிதம் அது. அதை ஓர் அழைப்பாக எடுத்துக்கொண்டு சாமர்வெல் அவரைப்பார்ப்பதற்காக திருவிதாங்கூருக்கு வந்தார். நெய்யூரில் சர்ச்சுக்குச்செல்லும் வழியில் முந்தையநாள் மழையில் ஒரு பள்ளம் உருவாகியிருந்தமையால் குறுக்கு வழியில் ஏறிச் சென்றனர். அங்கே மிகச்சிறிய மிஷன் ஆஸ்பத்திரி ஒன்று அன்று இருந்தது .சாமர்வெல் அங்கே திருவிழா போல கூட்டம் கூடியிருப்பதைக் கண்டார். என்ன என்று விசாரித்தபோது அது மருந்து வாங்க வந்த நோயாளிகளின் கூட்டம் என்று சொன்னார்கள். அங்கே அன்று ஒரே ஒரு மருத்துவரும் ஒரே ஒரு கம்பவுண்டரும் மட்டுமே இருந்தார்கள். ஒவ்வொருநாளும் மூவாயிரம்பேர் அங்கே மருத்துவத்துக்கு வந்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு கார்பனேட் மிக்சர் மட்டுமே மருந்தாக கொடுக்கப்பட்டது.

விளக்கமுடியாத ஒரு வசீகரத்தால் இழுக்கப்பட்டு சாமர்வெல் அந்த ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றார். அப்போது ஒரு மூன்று வயதான, இடுப்பில் ஒரு கந்தல் மட்டும் அணிந்த கரிய பெண்குழந்தை ஓடிவந்து அவரிடம் ஒரு சிறிய சிலுவையைக் கொடுத்துவிட்டுச்சென்றது ‘என் தேவனே!’ என்று வீரிட்டபடி அங்கேயே அமர்ந்துகொண்டார் சாமர்வெல். இரு பனையோலைகளை இணைத்து உருவாக்கப்பட்ட அந்த எளிய சிலுவையை நெற்றிமேல் அணைத்துக்கொண்டு ‘உங்கள் ஆக்கினை என் தேவனே…உங்கள் சித்தப்படி என் ஆவியை இங்கே வைக்கிறேன் ஏசுவே’ என்று நெஞ்சுக்குள் வீரிட்டார்

அன்று விடியும்வரை அங்கிருந்து மருந்துகொடுத்தார். மறுவாரம் லண்டனுக்குக் கிளம்பிச்சென்றார். அவருக்கு அன்று அங்கே மிகப்பெரிய தொழிற்சாலைகளும் வீடுகளும் பண்ணைகளும் இருந்தன. அனைத்தையும் விற்று மொத்தப்பணத்துடன் இந்தியா திரும்பினார்.அன்று லண்டனிலேயே பரபரப்பான பேச்சாக இருந்தது. பிரிட்டிஷ் அரசின் மகத்தான மருத்துவர்களில் ஒருவர் பேரரசின் வரைபடத்தில் எதிலும் இல்லாத ஒர் ஊருக்குச் செல்கிறார். அவரிடம் மனிதகுமாரன் வந்து சொன்ன புனித ஆணையை ஏற்று கிளம்புகிறார் !

சாமர்வெல் நான்காண்டுகளில் நெய்யூரில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார். 1838 ல் திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாளின் நன்கொடையுடன் ஆர்ச்பால்ட் ராம்ஸே நிறுவிய மருத்துவமனை அது. அடுத்துவந்த சார்ல்ஸ் கால்டர் லேய்ச் வீடுகள் தோறும் சென்று அரிசியும் தேங்காயும் நன்கொடையாகப்பெற்று அதன் கட்டிடங்களை எழுப்பினார்.சாமர்வெல்லின் காலத்தில் பேராலமரமாக அந்த மருத்துவமனை எழுந்தது. சூரியன் அணையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்த லண்டன்மிஷன் ஆஸ்பத்திரிகளில் அதுவே மிகப்பெரியது.

சாதாரணமான இளைஞர்களிலிருந்து மிகச்சிறந்த மருத்துவப்பணியாளர்களை உருவாக்கி எடுத்தார் சாமர்வெல் . உள்ளூரின் எளிய பொருட்ளை எப்படி மிகச்சிறந்த மருந்துகளாக ஆக்க முடியும் என்று கண்டுகொண்டார். சிவகாசிப்பக்கமிருந்து கொண்டுவந்த கந்தக மண்ணை காய்ச்சி நீரெடுத்து அதில் இருந்து உருவாக்கிய கலவையால் சொறிசிரங்குகளை குணப்படுத்தினார். சீனாக்காரத்தைக்கொண்டு எளிய புண்களுக்கு முறிமருந்தை உருவாக்கினார்.

சாமர்வெல் அவரது சொந்த முயற்சியால் உருவாக்கிய அறுவைசிகிழ்ச்சைமுறைகளை கண்டு கற்க உலகமெங்கும் இருந்து நிபுணர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இளநீரை நேரடியாக குருதியில் செலுத்தமுடியும் என்றும், மாவுக்கட்டு போடுவதற்கு கரையான்புற்று உடைத்து எடுத்த மண்ணே சிறந்தது என்றும் அவர்கள் கற்றார்கள். எருமைவால்முடியால் காயங்களுக்குத் தையல் போடவும், அசையும் தசைகளுக்கு தசையோட்டத்தின் பாணியை கண்டு தையல்போடவும் கற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் கற்றுச்செல்லாத ஒன்று அவரிடம் இருந்தது. மருத்துவனை தெய்வமாக ஆக்கும் ஒன்று, சிறுகுழந்தைகளின் நினைவில்கூட முக்கால்நூற்றாண்டுக்கும் மேலாக அவரை நிலைநாட்டிய ஒன்று.

[மேலும்]

முந்தைய கட்டுரைஓலைச்சிலுவை [சிறுகதை] – 1
அடுத்த கட்டுரைஓலைச்சிலுவை [சிறுகதை] – 3