ஓலைச்சிலுவை [சிறுகதை] – 3

நீட்சி

[ 3 ]

அத்தகைய மாமனிதனால் தீண்டப்பட்டும்கூட என் ஆன்மா விழித்தெழாமலேயே இருந்தது. என் எட்டாவது வயதில் அவரிடமிருந்து நான் ஏசுவின் சொல்லைப் பெற்றேன். ஆனால் அது என் பெயரை மட்டுமே மாற்றியது. உள்ளுக்குள் நான் புரளவேயில்லை. மண்ணில் சாமர்வெல்லின் கால்கள் பட்டுச்செல்லும் ஒவ்வொரு தடத்தையும் ஓராயிரம்முறை சென்று முத்தமிடும் நாய்போல இருந்தது என் மனம். அனால் அவர் எனக்கு கொடுத்த பைபிள் வெறும் சொற்களாகவே இருந்தது.

என்னை மிஷன்பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பில் கொண்டுசென்று சேர்த்தார் சாமர்வெல். அதற்குமுன்னால் நான்கு மாதம் அவரே எனக்கு ஒவ்வொருநாளும் கணக்கும் தமிழும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்தார். நான் வகுப்பில் முதல் மாணவனானேன். எப்போதும் எந்த வகுப்பிலும் நான் முதலிடத்தில் இருந்தேன். கூடவே ஆஸ்பத்திரி ஊழியனாகவும் இருந்தேன். காலை ஏழுமணிமுதல் ஒன்பதுவரை நான் சாமர்வெல்லின் தனிப்பட்ட பணிவிடைகளைச் செய்தேன். மாலை நான்கு மணிமுதல் நள்ளிரவு வரை ஆஸ்பத்திரியில் பணியாற்றினேன். என் அக்காக்கள் இருவரும் மதம் மாறி லண்டன்மிஷன் ஆஸ்பத்திரிகளில் வேலைக்குச் சென்றார்கள். ஒருவருடம் கழித்து என் அம்மாவும் மதம் மாறினாள்.

எங்கள் சிறு வீட்டைப் பிரித்து கொஞ்சம் வசதியாகக் கட்டிக்கொண்டோம். அம்மா சிறிய தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி கையாலேயே உருட்டி தைக்க ஆரம்பித்திருந்தாள். தங்கைகள் அருகே பள்ளியில் படித்தார்கள். ஒருமுறை இரவில் புன்னைக்காய் எண்ணை விளக்கு ஒளியில் எனக்குச் சூடான சோறு பரிமாறும்போது அம்மா பேச்சுநடுவே ‘சாயிப்பு குடுத்த சீவனாக்கும் மக்கா இது’ என்றாள். அன்று குழந்தைகளுடன் சாகத்தான் அவள் போகிறாள் என்று சாகிப் ஊகித்திருக்காவிட்டால் இன்று அத்தனைபேரும் மண்ணாகிவிட்டிருப்பார்கள் அல்லவா? ‘கர்த்தரின் பேரல்லோ இப்ப சோறாட்டும் மீனாட்டும் நம்ம தட்டிலே இருக்கு’ என்று சொன்னாள். நான் அம்மாவை ஏறிட்டுப்பார்க்காமல் ‘அப்ப சோறுக்காக மட்டும்தானா?’ என்று கேட்டேன். அம்மா கண்களில் கண்ணீர் தீபோல எரிய ‘ஆமலே, சோறுக்காகத்தான். கர்த்தர் எனக்கு சோறும் கறியும்தான்லே. அதை எங்க போயிச் சொல்லவும் எனக்கு வெக்கம் இல்ல’என்றாள்.

அந்த வரியை நான் பிடித்துக்கொண்டேன். எந்த ஒரு விவாதத்திலும் அந்த வரியைச் சொல்வேன். அது எல்லா தர்க்கங்களையும் இல்லாமலாக்கிவிடும். ’ஆம் சோறுக்காகவேதான். கர்த்தர் எனக்கும் என் குலத்துக்கும் சோறுதான். பசித்தவனுக்கு அவர் சோறுதான்’ ஆனால் என்னை அது உள்ளூர அவமதித்தது. என்னுடைய அறை மாடிப்படிக்கு அடியில் இருந்தது. அந்த சிறிய கட்டிலில் தனியாக நான் படுத்திருக்கும்போது தலைக்குமேல் மாட்டப்பட்ட ஏசுவின் படத்தையே பார்த்துக்கொண்டிருப்பேன் ‘கர்த்தரே உமது சிலுவையை எனக்கு தாரும். உமது ரத்தத்தில் ஒரு துளியை எனக்கு தாரும்’ என்று கேட்டுக்கொள்வேன். ஆனால் அந்த படம் என்னை பார்க்காமல் காலியான கண்களுடன் இருக்கும்.

எனக்குள் இருந்த எவரும் அறியாத அந்த ஆழத்தை கண்டுகொண்டவர் சாமர்வெல் மட்டும்தான். ஒருமுறை என் அறைக்குள் எதற்காகவோ எட்டிப்பார்த்தவர் அந்த படத்தைப் பார்த்துவிட்டு சட்டென்று திரும்பிச் சென்றுவிட்டார்.நாலைந்து நாட்களுக்குப் பின்னர் ஒரு அனாதைப்பிணத்தை நாங்களிருவரும் அடக்கம் செய்துவிட்டு அதே முந்திரித்தோப்பு வழியாக வந்தோம். ஒரு மரக்கிளையில் அமர்ந்துகொண்டு என்னிடம் ‘நீ ஜெபிக்கிறாயா?’ என்று கேட்டார். நான் அவரிடம் பொய் சொல்லமுடியாதென்பதனால் தலைகுனிந்து நின்றேன். ‘நீ உன் விசுவாசத்தை காத்துக்கொள்கிறாயா?’ என்று அவர் மேலும் கேட்டார். நான் ஒன்றுமே சொல்லவில்லை

சாமர்வெல் கொஞ்சம் கோபம் கொண்டார். ‘ உன் ரூமிலே கர்த்தர் படம் தூசி படிஞ்சு இருக்கு… உன் நரகத்திலே இருந்து கர்த்தர் உன்னை கைநீட்டி தூக்கியிருக்காரே. நீ உண்ணும் சோறும் நீ இருக்கும் கூரையுமா அவருக்க கிருபை வந்து சூழ்ந்திருக்கே. இன்னும் என்ன வேணும் உனக்கு?’ என்று கேட்டார். நான் தலைகுனிந்து நின்று கண்ணீர் விட்டேன். ‘கண்ணீர் எதுக்கு…சொல்லு’என்றார். நான் பேசாமல் நின்றிருந்தேன். அவர் கொஞ்சநேரம் எதிர்பார்த்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

நான் மறுநாள் அவருக்குச் சேவைசெய்ய சென்றபோது அங்கே ஞானதாஸ் இருந்தான். ‘இண்ணைக்கு முதல் நீ வாண்ணு சாயிப்பு விளிச்சாரு…நீ இனிமே ஆஸ்பத்திரியிலே சோலிசெய்தா மதியாம்’ என்றார். நான் உடம்பு பதற அங்கேயே நின்றேன். கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. ஆனால் நின்ற இடத்தில் இருந்து நான் அசையவில்லை. கொஞ்சநேரம் கழித்து ஆஸ்பத்திரியில் அறுவை சிகிழ்ச்சை முடிந்து வேகமாக வந்த சாமர்வெல் என்னைப்பாத்தார்.பேசாமல் உள்ளே சென்றார். அவர் மீண்டும் வெளியே கிளம்பும்போதும் நான் அங்கேயே நின்றேன்.

மீண்டும் மதியம் சாப்பிட வரும்போது அங்கேயே வெயிலில் நின்றுகொண்டிருந்தேன். தூரத்திலேயே நான் வெயிலில் நிற்பதை அவர் கண்டார். அங்கிருந்தே ‘மேலே ஏறு, மேலே ஏறு’ என்று கூவிக்கொண்டே வந்தார். என்னருகே வந்ததும் அனிச்சையாக அவரது கைக்குட்டையை என் தலையிலே போட்டு என்னை அணைத்துக்கொண்டு மேலே வராந்தாவில் கொண்டு சென்றார். பெருத்த கேவல்களுடன் நான் கதறி அழ ஆரம்பித்தேன். ‘சரி சரி…நாளைக்கு நீ வா’ என்று சொன்னார். அதன் பின்னரும் நான் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தேன். சாமர்வெல் எனக்கு ஒரு பெரிய எனாமல் கோப்பை நிறைய பருத்திப்பாலுடன் வந்து ‘குடிச்சுக்கோ’ என்றார்.

அடுத்த ஞாயிறன்று நாங்கள் இருவரும் சர்ச்சில் இருந்து சேர்ந்து திரும்பினோம். சாமர்வெல் என்னிடம் ஏதும் கேட்பார் என நான் நினைக்கவில்லை. கேட்கக்கூடாதென அவர் நினைத்துவிட்டால் கேட்க மாட்டார்.நான் அவர் கையை பிடித்து இழுத்ததும் நின்றார். சடசடவென்று நானே பேச ஆரம்பித்தேன். ‘டாக்டர் கிறிஸ்து எனக்கு சோறும் துணியும் வீடும் தந்திருக்காரு. ஆனா இதுக்காக நான் அவருக்கு நன்றிதான் சொல்லமுடியுது. என்னால விசுவாசிக்க முடியல்லை…சோறு எனக்க வயித்துக்குத்தான் போவுது டாக்டர். எனக்க ஆன்மாவுக்கு போகேல்ல’ நான் என்ன சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ‘நீங்கதான் எனக்க கிறிஸ்து. நான் கிறிஸ்துவ விசுவாசிக்கேல்ல. நான் உங்கள விசுவாசிக்கிறேன். உங்களுக்கு எனக்க ஆன்மாவ குடுத்திடறேன்’

அதன்பின் என்னால் பேசமுடியவில்லை. அழுதபடியே ஓடிச்சென்றேன். சாமர்வெல் அங்கேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டார். மறுநாள் எனக்கு அவர் ஒரு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் ‘நீ சொன்னதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். உனக்கு வேண்டிய கிறிஸ்து இன்னும் பெரியவர். கிறிஸ்து நாம் அறியும் அளவுக்கு சிறியவர் அல்ல. அவர் முடிவில்லாதவர். அவரை நான் உனக்கு சரியாக அறிமுகம் செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கான தகுதி எனக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிறிஸ்து உன்னருகே வரவேண்டும் என்று நான் தினமும் ஜெபிப்பேன்’என்று எழுதியிருந்தார்.

அந்த குறிப்பை கைநடுங்க நெடுநேரம் வைத்திருந்தேன். எழுந்து ஓடிப்போய் அவர் கால்களில் விழுந்து ‘நான் விசுவாசிக்கிறேன்..முழுமனசோட விசுவாசிக்கிறேன்’ என்று கூக்குரலிடவேண்டும் என்று மனம் பொங்கியது. ஆனால் அவரிடம் என்னால் பொய் சொல்லமுடியாது. அவரிடம் யாருமே பொய்சொல்லமுடியாது. அவரது கண்களின் நேர்மையைப்போல அன்று நெய்யூரில் அஞ்சப்பட்ட பிறிதொன்று இருக்கவில்லை.

அதன்பின் ஆறு வருடங்கள் நான் அவரிடம் வேலைபார்த்தேன். என் அக்காக்கள் திருமணமாகிச் சென்றார்கள். நான் பதினொன்றாம் வகுப்பு முடித்து ஸ்காட் கிறித்தவக்கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதும் நான் சாமர்வெல்டாக்டரின் உதவியாளராகத்தான் வேலைபார்த்தேன். நானே ஒரு நல்ல டாக்டர் என்று ஊரில் பேச்சிருந்தது. எங்குசென்றாலும் என்னிடம் மருந்து கேட்க ஆரம்பித்தார்கள். ஆகவே நான் கையில் எப்போதும் அவசியமான அடிப்படைமருந்துகளை வைத்திருந்தேன். சில இடங்களில் என்னிடம் நோயாளிகளுக்காக ஜெபம் செய்யும்படிக் கேட்பார்கள். நான் திறமையாக அதை நிகழ்த்துவேன். அந்த சொற்றொடர்களின் ஓசைநயமும் செயற்கையான உருக்கமும் எனக்கு நன்றாகவே பழகிவிட்டிருந்தன. ஆனால் ஒருபோதும் சாமர்வெல் முன்னால் அதைச்செய்வதில்லை

சாமர்வெல் மேலும் மேலும் நெய்யூர்க்காரராக ஆனார். அவரை பிறரிடமிருந்து வேறுபடுத்திய எல்லா அடையாளங்களும் இல்லாமலாகிக்கொண்டே இருந்தன. அவர் விளையாடுவதை விட்டார். அரைக்கால்சட்டை போடுவதை விட்டு காவிவேட்டியும் ஜிப்பாவும் போட ஆரம்பித்தார். கால்களில் சப்பாத்துகளுக்கு பதில் சாதாரண டயர்செருப்பு போட்டுக்கொண்டார். இலையில் மீன்குழம்பு விட்ட சோற்றை பிசைந்து கைகளால் உண்டார். தரையில் சப்பணமிட்டு சாதாரணமாக அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார். ஒவ்வொருநாளும் சாயங்காலங்களில் கையில் பைபிளும் பெரிய காக்கித்துணிப்பையுமாக கிராமங்கள் தோறும் ’ஊழிய’த்திற்காகச் சென்றார்.

அவரை இடைவழிகளில் பார்த்தால் நான்குபக்கமிருந்தும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் ஓடிக்கூடுவார்கள். அவர் ஒரு ஆளில்லாத இடத்தின் பாலத்தின் மேல் கொஞ்சநேரம் அமர்ந்தால்கூட வெல்லகக்ட்டியை மொய்க்கும் ஈக்கள் போல மக்கள் அவரைச்சுற்றி கூடிவிடுவார்கள். சாலையில் செல்பவர்களுக்கு அவர் நடுவே இருப்பதே தெரியாது. அத்தனை வருடம் அவர் தமிழ்பேசியும்கூட அவர் பேசுவது மக்களுக்கு கொஞ்சம்தான் புரியும். ஆனால் ஏசுவையே வழியில் கண்டதுபோல கைகளைக்கூப்பி கண்ணீர் விட்டுக்கொண்டு அவர் முன் அமர்ந்திருப்பார்கள். அவரது உடைகளையும் கால்களையும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள். அவர் நடந்துபோன இடத்தில் அவரது செருப்புத்தடத்தில் இருந்து மண்ணை எடுத்து முந்தியில் முடிந்துகொள்வார்கள்.

திரும்பும்போது அவர் சாலையிலிருந்து பக்கவாட்டில் நுழைந்து ஏதேனும் இருண்ட புதர்க்காட்டுக்குள் செல்வார். அவருக்கு பூச்சிகள் பாம்புகள் எதையும் பயமில்லை. ஏதோ ஒரு வயதில் அவர் அச்சம் என்பதையே முழுமையாகக் கடந்துவிட்டிருந்தார். இருள்நிறைந்த தோட்டத்திற்குள் இலையடர்வுக்குள் பாறையிலோ மரக்கிளையிலோ அமர்ந்து ஓபோவை இசைப்பார். அதை அப்போது ஏசுவன்றி எவருமே கேட்கமாட்டார்கள்.கரைந்து கரைந்து காலியானபின் எப்போதோ திரும்ப வந்து தன் அறையில் அவர் படுத்துக்கொள்வார்.

ஒருநாள் நான் ஆற்றருகே இடைவழி வழியாக ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு வரும்போது வழியோரத்தில் கரியன் என்ற கிராமத்துக்கிழவர் கைகளைக்கூப்பிக்கொண்டு குந்தி அமர்ந்திருப்பதை என் கைவிளக்கு ஒளியில் பார்த்தேன். மலம்கழிக்கிறார் என்றால் அவர் தோட்டத்தை பார்த்து திரும்பி இருகக்வேண்டியதில்லை. அரைக்கணம் கழித்தே தொலைவில் சாமர்வெல்லின் ஓபோவின் இன்னிசை காற்றில் கரைந்துகொண்டிருப்பது கேட்டது. நான் என் விளக்கை அணைத்துக்கொண்டு அப்படியே அவருக்கு அருகே அமர்ந்துகொண்டேன். இருளுக்குள் இருந்து பாடலாகவோ சொல்லாகவோ ஆகாத இசை வந்துகொண்டிருந்தது. இசை சிலசமயம்தான் தூய உணர்ச்சி மட்டுமாக ஆகும். வெறும் ஆன்மா மட்டுமாக காற்றில் நிற்கும். அந்த கல்வியறிவற்ற அரைநிர்வாணக்கிழவரும் நானும் எங்களையும் இந்த மானுடத்தையும் ஒட்டுமொத்தமாக பிணைத்திருக்கும் தூய்மையான ஒன்றால் கட்டுண்டு உடல்நீரெல்லாம் கண்ணீராக வழிய அங்கே அமர்ந்திருந்தோம்.

அது 1949. குமரிமாவட்டத்தை காலரா தாக்கியது. மழைமிகுந்த இந்த மாவட்டத்தில் காலரா எப்போதும் ஏதோ வடிவத்தில் இருந்துகொண்டிருந்தது. அதை இங்கே நீக்கம்பு என்பார்கள். நீர்க்கம்பம் என்ற சொல்லின் மரூஉ அது. கம்பம் என்றால் அதிகப்படியானது என்று பொருள். எப்போதும் முதலில் அது கொல்லங்கோடு கடற்கரையைத்தான் முதலில் தாக்கும். கடற்கரையில் இருந்து மீன் வழியாக உள்நாடுகளுக்கு பரவும். உள்நாட்டில் சாம்பவர், புலையர்களின் சேரிகளில் பரவிய இரண்டாம் நாளே பல உயிர்களை வாங்கிவிடும்.

அப்போது அதற்கு மருந்து ஏதுமில்லை. மாங்கொட்டை, எட்டிக்காய் உட்பட பலவகையான கடும்கசப்பு பொருட்களை ஒன்றாகப்போட்டு காய்ச்சி ஒரு கஷாயம் செய்து குடிப்பார்கள். ஆனால் பயனேதுமிருக்காது. ஒட்டுமொத்தமாக ஊர்களே அழியாமலிருந்தமைக்குக் காரணம் ஊர்களின் அமைப்புதான். கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் ஊர்கள் என்றால் ஏழெட்டு கரைகளின் தொகுப்பு என்று பொருள். பள்ளமான இடங்களில் ஓடைகளும் நீர்நிலைகளும் வயல்களும் இருக்கும். அவற்றின் நடுவே உயரமான மேட்டுநிலத்தீவுகளில் குடியிருப்புகள். அவற்றையே கரைகள் என்பார்கள். இருப்பதிலேயே மேடான கரையில் கோயிலும் உயர்சாதியினரின் வீடுகளும் இருக்கும். இன்னொரு கரையில் நாடார்கள். இன்னொன்றில் ஆசாரிகளும் கொல்லர்களும் வண்ணார்களும். இன்னொன்றில் புலையர்,சாம்பவர் சேரிகள். ஒரு கரையில் காலரா வந்தால் அந்தக்கரையை முழுமையாகச் சூறையாடிவிட்டுச் செல்லும். அடுத்தகரைக்கு அது போவதற்கு நடுவே எப்படியும் ஒரு கிலோமீட்டர் தூரம் கடக்க வேண்டியிருக்கும் என்பதனால் மட்டுமே காலரா மட்டுப்பட்டது.

சேரிகள்தான் மிகநெரிசலானவை. ஒருவீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடைவெளியே இருக்காது. ஒரு கௌரவமான கோழிக்கூடைவிட சிறிய ஓலைக்குடில்கள். ஒருவர் வீட்டு தண்ணீர் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும். மீன்செள்ளுகளும் குப்பைகளும் எங்கும் குவிந்துகிடக்கும். கோழிகளும் ஆடுகளும் எருமைகளும் மனிதர்களுடன் சேர்ந்து அங்கே வாழ்வார்கள். அத்தனைபேருடைய மலமும் அந்த இடைவெளிகள் முழுக்க மழை ஈரத்தில் கலங்கி மண்ணுடன் சேர்ந்து ஊறிக்கிடக்கும். மலப்புழுக்களின் வாழ்க்கை. அங்கே காலரா வந்தால் பத்தே நாளில் அங்குவாழும் கிட்டத்தட்ட அத்தனைபேரும் செத்துக்கிடப்பார்கள்.

காலரா பரவுவதற்கான முக்கியமான காரணம் கிளாத்தி [Triacanthus Strigilifer] என்ற மீன்தான் என்று சாமர்வெல் கண்டுபிடித்தார். வைகாசி, ஆனி மாத முதல்மழைக்காலம் முடிந்து ஆடி தொடங்கியதும் இது கடலில் பெருமளவுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். ஆறுகள் கடலில் கொண்டு சென்று கொட்டும் சேற்றுப்பரப்பில் முட்டைபோடுவதற்காக இவை மிகப்பெரிய தேசங்கள் போல பெருகிவருகின்றன. அடர்த்தியான சேற்றில் திளைத்து அதிலுள்ள கழிவுகளை உண்கின்றன. அவற்றில் தோல்கிளாத்தி என்ற வகை பெருமளவில் கிடைக்கும். கருமையாக கிராஃபைட் பளபளப்புடன் அரசிலை வடிவில் பெரிய சிறகுகளுடன் இருக்கும்.

எழுபதுகளில் ரப்பர் வருவது வரைஆடிமாதம் குமரிமாவட்டத்தின் பஞ்சமாதம். வைகாசியில் நடவு வேலை முடிந்துவிடும். ஆனியில் முதல் களையெடுப்பும் முடிந்துவிட்டால் அதன்பின் ஆவணி பாதிவரை எந்தவேலையும் இருக்காது. வாழைகள் அப்போதுதான் இலைவிரித்திருக்கும். வைகாசியில் நட்ட மரச்சீனி வேரோடியிருக்காது. சித்திரையில் காய்ந்து கரிந்த காட்டுக்கிழங்குகள் மெல்ல இலைவிரிக்க ஆரம்பித்திருக்கும். எந்நேரமும் சிறுசாரல் இருந்துகொண்டிருப்பதனால் எந்த வயலுக்கும் நீர்பாய்ச்சும் வேலை இல்லை. எந்த காயும் காய்க்கும் பருவம் அல்ல. பனைகளில் ஊற்றே இருக்காது. ஆகவே எங்கும் பெரும் பட்டினி பரவியிருக்கும்.

அப்போது மலிவாகக் கிடைக்கும் கிளாத்தியை மக்கள் கூட்டம்கூட்டமாகச் சென்று வாங்குவார்கள். அரைக்கால் சக்கரத்துக்கு இருபது முப்பது கிளாத்தி கிடைக்கும். அதை வாங்கிவந்து கைக்குக்கிடைத்த காயுடனோ கிழங்குடனோ சேர்த்து வேகவைத்து உண்பார்கள். கிளாத்தியின் குடலிலும் இரைப்பையிலும்தான் காலரா கிருமிகள் இருக்கின்றன என்று சாமர்வெல் சொன்னார். ஆடிமாசத்தில் கட்டுக்கடங்காமல் பெருகும் ஈக்களால் அவை பரவுகின்றன. கிளாத்தியை உண்ணக்கூடாது என்று கிராமம் கிராமமாக சொல்ல லண்டன் மிஷன் சர்ச்சுகளுக்கு செய்தி போயிற்று. கிறிஸ்தவர்களுக்கு கிளாத்தி தடைசெய்யப்பட்ட உணவு என்று சர்ச்சில் சொன்னார்கள்.

ஆனால் கிளாத்தியை உண்ணுவதிலிருந்து எவரையும் தடுக்க முடியவில்லை. அதி தீவிர கிறிஸ்தவர்களைத் தவிர பிறர் ரகசியமாகச் சாப்பிட்டார்கள். கிளாத்தியின் தோலையும் குடலையும் குழிதோண்டி புதையுங்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம். சாமர்வெல் அதற்காக சர்ச்சுகள் தோறும் சென்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு குழுவை உருவாக்கினார். சர்ச்சுகளுக்கு வராத இந்துக்களும் முஸ்லீம்களும் வாழும் இடங்களுக்கு வீடு வீடாகச் சென்று அதை மக்களுக்கு எடுத்து சொன்னோம்.

அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. மிகப்பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து விட்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் பிரச்சாரத்தைச் சொல்லச்சொல்ல அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குள் சென்றவை மட்டுமே. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பசித்து பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமலாகிவிட்ட மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை.

பத்துநாட்களில் அத்தனைபேரும் நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆனால் சாமர்வெல் ஒருபோதும் சோர்வு கொள்வதில்லை. அவரது நம்பிக்கை என்பது முழுக்க முழுக்க அவரது ஆன்மா மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர் ஒவ்வொரு நாளும் இரவில் கையில் ஒரு மணியுடனும் பைபிளுடனும் கிளம்பி கிராமங்கள் தோறும் சென்றார். அவருக்கு முன்னால் ஒரு பையன் சுரைக்காய் கண்ணாடி போட்ட பானீஸ்விளக்கை எடுத்துச்செல்வான். வழியெங்கும் மணியை அடித்துக்கொண்டிருப்பார். ஆட்கள் எட்டிப்பார்க்கும்போது அவர் ’கிளாத்தி பாவத்திலே செஞ்ச மீனு. கிளாத்தி சாப்பிடாதீங்கோ. தெரியாமக் கிளாத்தி சாப்பிட்டா அந்த கொடலை ஆழமா புதைச்சிருங்கோ…’ என்று கூவுவார். நான் பின்னால் சென்றபடி அதை மேலும் உரக்க சொல்லுவேன்.

குடில்களின் முற்றங்களிலும் வீட்டு வாசல்களிலும் நின்று சாமர்வெல் ‘அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி கிறிஸ்துபேராலே சொல்லுது, கிளாத்தி சாப்பிடாதீங்கோ. வெந்நி குடியுங்கோ. ஆராவது சாப்பிட்டா கிளாத்தி தோலே புதைச்சிருங்கோ… அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி உங்களே கையெடுத்து கும்புடுது…கிளாத்தி சாப்பிடாதீங்கோ ’ என்று மன்றாடுவார். அவரை கண்டதுமே கிராமத்து பெண்கள் வந்து அவர்முன் மண்டியிடுவார்கள். இந்துக்கள் கூட அவரை கும்பிட்டபடி அவர் கடந்துசெல்வது வரை நிற்பார்கள். ஆனால் அவர் சொல்வதை எவருமே கேட்கவில்லை.

ஆடிமாதம் பாதியில் மரண எண்ணிக்கை பிரம்மாண்டமாக ஆகியது. எங்கள் ஆஸ்பத்திரி முன்பு வைக்க இடமில்லாமல் பிணங்கள். வார்டுகளிலெல்லாம் தரையிலும் வராந்தாக்களிலும் கட்டில்களுக்கு இடையிலும் எங்கும் நோயாளிகள். சாமர்வெல் ஊரில் உள்ள அத்தனை பெருவட்டர்களுக்கும் கரைநாயர்களுக்கும் செய்தியனுப்பி குலைகுலையாக இளநீர்களை கொண்டு வந்து குவித்திருந்தார். இளநீரை குருதியில் செலுத்துவது மட்டுமே ஒரே சிகிழ்ச்சையாக இருந்தது. கையில் இருந்த ஏதாவது பாக்டீரியக்கொல்லியை கொடுப்போம்.

ஆனால் வந்தவர்களில் கொஞ்சமேனும் ஆரோக்கியம் உடையவர்கள் சிலரே. பஞ்சமாசத்தில் கண்டதையும் தின்று ஏற்கனவே பலமுறை வயிற்றோட்டமாகி மெலிந்து உலர்ந்தவர்கள்தான் அதிகம். குழந்தைகளும் முதியவர்களும் ஒரேநாளில் இறந்தார்கள். அதைவிட பரிதாபமாக இருந்தவர்கள் அன்னையர். கைக்கு கிடைத்தவற்றை எல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு பட்டினிகிடந்து பேயுருவம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள்தான் கடைசியாக செத்தார்கள். அழுதுகொண்டு நிற்கும் பிள்ளைளைப்பார்க்கையில் அவர்களின் உயிர் பலமடங்கு ஆவேசத்துடன் உடற்கூட்டை பிடித்துக்கொண்டது என்று தோன்றியது.

அதிகாலைமுதல் மாலை வரை சாமர்வெல் ஆஸ்பத்திரியில்தான் இருப்பார். அங்கேயே சாப்பிடுவார். இருட்டியதும் அவர் விளக்குடனும் மணியுடனும் கிராமங்களுக்குச் செல்வார். மரணம் குளிர்ந்து விரைத்துக்கிடந்த சந்துகள், இருண்ட குடிசை வீடுகள் தோறும் அலைவார். மரணங்கள் அதிகரித்ததும் புதிய பொறுப்பு வந்து சேர்ந்தது. பெரும்பாலான இடங்களில் நோயாளிகளையும் சடலங்களையும் அப்படியே விட்டுவிட்டு மக்கள் கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார்கள். பல இடங்களில் குடிசைகளுக்குள் சடலங்கள் கிடந்து அழுகின. அவற்றை நாய்நரிகள் தின்று நீர்நிலைகளில் போட்டுவிட்டால் மரணம் பலமடங்காகிவிடும் என்று சாமர்வெல் சொன்னார். ஒவ்வொரு சடலத்தையும் கண்டுபிடித்து அடக்கம்செய்தாகவேண்டும் என்றார்.

மரணங்கள் அதிகரித்தபோது நான் நடக்கும் என்று எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை. எங்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிலேயே இரண்டுபேர் காலரா வந்து இறந்தார்கள். மறுநாள் ஆஸ்பத்திரியை கூட்டவோ பெருக்கவோகூட ஆளிருக்காது என்றே நான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொருநாளும் ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் ஆஸ்பத்திரி வேலையாட்களுக்காக சமைப்பதற்கு சர்ச்சுக்கு முன்னால் முற்றத்தில் பெரிய கொட்டகையே போடவேண்டியிருந்தது. அந்த நெருக்கடி நேரத்தில் விசுவாசம் மட்டுமே காவல் என்றானபோது கண்ணெதிரே மனிதகுமாரன் வந்ததுபோல் தோன்றினார் சாமர்வெல். அவரது சொல் தேவ வசனமாகவே பார்க்கப்பட்டது. அவருடன் இருப்பதற்கென்றே தேடிவந்தார்கள்.

இரவில் சாமர்வெல் கையில் மணியுடனும் பைபிளுடனும் சடலங்களைத் தேடிச் செல்லும்போது அவருடன் நூற்றுக்கணக்கானவர்கள் கூடவே சென்றார்கள். இருபக்கமும் புதர்களிலும் ஓடைகளிலும் எல்லாம் மரணம் ஒளிந்திருந்து குளிர்ந்த கண்களால் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை எழுந்தது. எப்போதோ ஒருகட்டத்தில் அவர்கள் பாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட கிறிஸ்தவ பாடல்கள்தான். இருகைகளையும் கூப்பியபடி கைகளை காற்றில் வீசியபடி உரத்த குரலில் சேர்ந்து பாடிக்கொண்டு செல்லும் அவர்களின் குரல்களும் நிழல்களும் கிராமத்தை கடந்து செல்வதை தூரத்தில் இருந்து கண்டவர்களும் கைகூப்பினார்கள்.

‘என் ஏசுவே, நேசனே, இதய வாசனே
என் தேவனே, வாருமே, எந்த நாளுமே’

எளிமையான மெட்டுக்களில் அமைந்த நாலைந்து பாடல்கள்தான். கிராமத்துக்குள் சென்றதும் பாடியபடியே ஒவ்வொரு வீடாகச் சென்று நிற்பார்கள். வீட்டில் ஆளிருந்தால் அவர்கள் தங்கள் வீட்டுமுன் ஒரு விளக்கை கொளுத்தி வைத்துக்கொண்டு நிற்கவேண்டும். சாமர்வெல்லின் பஜனைக்குழுவைக்காண வீட்டில் இருக்கும் அத்தனைபேரும் வந்து முற்றத்தில் நிற்பார்கள்.சாமர்வெல் தன் கையில் வைத்திருக்கும் சிறிய மரச்சிலுவையால் அவர்களின் தலையை தொட்டு ஆசீர்வாதம் செய்வார். காலரா பற்றிய அவரது உபதேசத்தைச் செய்வார்.

விளக்கில்லா வீடுகளுக்குள் நாங்கள் கைவிளக்குடன் உள்ளே சென்று பார்ப்போம். உள்ளே பிணமிருந்தால் முன்னரே தெரியுமளவுக்கு தேறிவிட்டிருந்தோம். எலிகளின் ஒலி கேட்கும். அசாதாரணமான ஒரு நாற்றம் இருக்கும். அழுக ஆரம்பிக்காத பிணமேகூட வாய்திறந்து அந்த நாற்றத்தை அனுப்ப ஆரம்பித்திருக்கும். இரைப்பையில் இருந்து கிளம்பும் மீத்தேன் நாற்றம் அது என சாமர்வெல் சொன்னார். கெட்டித்துணியை இரு மூங்கில்களில் கட்டி உருவாக்கிய தூளி ஸ்டிரெச்சரில் பிணத்தை ஒரு குச்சியால் நெம்பி உருட்டி ஏற்றுவோம். அதைச்சுமந்தபடி இருவர் கிளம்பிச்செல்ல இருவர் அவர்களுக்கு விளக்குடனும் கம்புடனும் கூடச்செல்வார்கள்.

கடைசியில் சிலசமயம் சாமர்வெல்லும் அவரது துணையாக நானும் மட்டுமே இருப்போம். அதேபோல மணியை அடித்துப்பாடியபடி சாமர்வெல் சென்றுகொண்டிருப்பார். இத்தனை மக்களும் கூடவே வராமல் போனாலும் அவர் செல்வார். அவர் எப்போதுமே தனியாகத்தான் இருந்தார். அவருடன் அவர் கண்ணுக்கு படும் துணையாக மனிதகுமாரன் இருந்திருக்கலாம்.

கடைசியாக கிருஷ்ணன் கோயிலுக்கு முன்னால் உள்ள வீடுகளுக்குச் சென்றோம். பெரிய ஓட்டு வீடுகள். வழக்கத்தைவிட அதிகமாகவே அங்கே பலிகள். வீடுகளுக்கு முன்னால் குத்துவிளக்கு ஏற்றி வைத்து குடும்பத்தினர் காத்திருந்தார்கள். சாமர்வெல் ஒவ்வொருவீட்டு முன்னாலும் நின்று உரக்க ஜெபம் செய்து ஒவ்வொருவரையும் சிலுவையால் ஆசீர்வாதம் செய்தபின் காலரா பற்றி சொன்னார். ஆஸ்பத்திரிக்கு அரிசியும் தேங்காயும் இளநீரும் கொண்டுவந்து கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார்.

கடைசி வீட்டையும் தாண்டினோம். நான் நிற்கமுடியாதபடி களைத்திருந்தேன். இரவு இரண்டுமணி தாண்டியிருக்கும். இருபதுமைலாவது நடந்திருப்போம். உணவோ தண்ணீரோ உள்ளே சென்று ஏழு மணிநேரம் ஆகியிருந்தது. இனிமேல் மூன்றரை மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியும். திண்னைகளில் கிடைத்த இடத்தில் அப்படியே விழுந்து நான் தூங்குவேன். சிலசமயம் ஓலைப்பொட்டலங்களில் கட்டப்பட்டு பிணங்கள் அருகே வரிசையாக இருக்கும். பிணம் நடுவே விழித்தெழுவேன். ஆனால் நான் காலை ஆறுமணிக்கு எழுந்து ஈரச்சாக்கு போல கனக்கும் உடலையும் சுழலும் தலையையும் சுமந்தபடி வார்டுக்குச் சென்றால் அங்கே சாமர்வெல் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருப்பார்.

சாமர்வெல் நின்று ’ஒரு வீடு விட்டுப்போச்சு’ என்றார். நான் சலிப்புடன் ‘இல்லே…எல்லா வீடும் பாத்தாச்சு’ என்றேன். ‘எனக்கு எல்லா வீடும் தெரியும்… ஒரு வீடு விட்டுப்போச்சு’ என்று அவர் திரும்பி நடந்தார். வாழ்க்கையில் முதல்முறையாக நான் அவரை வெறுத்தேன். இந்த வெள்ளைக்கார கிறுக்கனுடன் வாழ்ந்தால் என் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் அழியும் என்று எண்ணினேன். திரும்பிச் செல்ல நினைத்து அதே இடத்தில் நின்றேன். ஆனால் சாமர்வெல் ஒருமுறை கூட திரும்பி பார்க்கவில்லை. யார் வருவதும் வராததும் அவருக்கு ஒன்றே.

நான் வேறுவழியில்லாமல் அவரைத் தொடர்ந்து சென்றேன். ஆம் நான்கு நாட்களுக்கு முன்னால் அந்த வீட்டுக்கு வந்திருந்தோம். அங்கே வாசலில் விளக்கு எரியவில்லை. தென்னை மரங்களுக்கு கீழே இருண்டு நின்றது சிறிய ஓட்டு வீடு. நான் பீதியடைந்தேன். அங்கே பிணம் இருக்குமென்றால் என்ன செய்வது? மீண்டும் அத்தனை தொலைவையும் நடந்து ஆட்களை அழைத்து வருவதா? அந்த பகுதியில் உள்ள நாயர்களை அழைப்பதா?

சாமர்வெல் வீட்டுமுற்றத்தில் நின்று மணியை அடித்து உரக்க பாட ஆரம்பித்தார். ‘என் ஏசுவுக்கு ஜெயமிருக்கே! தினமே- என் ஏசுவுக்கு ஜெயமிருக்கே.. ’ உள்ளே அசைவுகள் கேட்டன. யாரோ பேசுவது போல. யாரோ அழுவது போல. கதவு திறந்தது. ஒரு நடுவயது நாயர் பெண் எட்டிப்ப்பார்த்தாள். கலைந்த நரைத்த தலையுடன் வெள்ளை வேட்டி மேல்சட்டையுடன் அவள் ஒரு ஆவி போல தோற்றமளித்தாள்

‘பயமில்லை எனக்கே! இனிமேல் பயமில்லை எனக்கே’ சாமர்வெல் உரக்க பாடினார். பெண் ஒரு சிறு புன்னைக்காயெண்ணை விளக்குடன் வெளியே வந்தாள். அதை படிகளில் வைத்துக்கொண்டு கைகூப்பி நின்றாள். சாமர்வெல் அவளிடம் ‘வெள்ளம் சூடாக்கி குடி. மீன் தின்னாதே. கர்த்தர் துணயுண்டு. பயப்படாதே’ என்றார். அவள் ‘ஒந்நும் வேண்ட சாயிப்புசாமியே…நீக்கம்பு வந்நு என்னெயும் அவளெயும் கொண்டு போயால் மதி சாயிப்புசாமியே’ என்றாள். சொல்வதற்குள் அழுகை வந்து அவளை உலுக்கியது. குரல் உயர்ந்தது. அப்படியே படிகளில் அமர்ந்து தலையில் மடேர் மடேரென்று அறைந்துகொண்டு கதறி அலறி அழ ஆரம்பித்தாள். அவளையும் தங்கையையும் காலரா அவ்ந்து கொண்டுசெல்லும்படி ஆசீர்வதிக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

அந்த வீட்டில் இரண்டு சகோதரிகள் மட்டும்தான். ஆண்கள் இல்லை. மூத்தவளுக்கு பிள்ளைகள் இல்லை. இளையவளுக்கு மூன்று குழந்தைகள். மூன்றுநாள் இடைவெளியில் மூன்று குழந்தைகளுமே வரிசையாக காலராவால் செத்துப்போயிருந்தன. அவள் குழறி குமுறி சொல்லி முடிப்பது வரை சாமர்வெல் பொறுமையாக அவளை சமாதானம் செய்து கேட்டார். ‘சாமி வீட்டுக்குள்ளே வர்லாமா? என்றார். ‘அவள்க்கு எழுந்நேல்க்கான் வய்ய சாயிப்புசாமியே’ என்றாள் மூத்தவள்.

உள்ளே சென்றோம். அறைகள் எல்லாம் இருண்டு கிடந்தன. உள்ளறையில் தரையில் அந்தப்பெண் விழுந்து கிடந்தாள். காலடி ஓசை கேட்டு கண் திறந்து பார்த்தாள். கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. முகம் பைத்தியக்களையுடன் இருந்தது. சாமர்வெல் அவளையே பார்த்தார். அவள் அவரை கண்டுகொண்டது போல தோன்றவில்லை. நான் ’வெள்ளக்காரசாமியாக்கும் வந்திருக்கது‘ என்றேன்.அவள் ‘ஆ?’ என்றாள். ‘சாமி…சாயிப்புசாமி’. அவள் கண்களில் சட்டென்று அடையாளம் தெரிந்தது. ‘என்றே பொன்னு சாமியே’ என்று அலறியபடி அவள் அப்படியே வெறி கொண்டு பாய்ந்து சாமர்வெல் காலில் குப்புற விழுந்தாள். அவளுடைய நெற்றி தரையில் மடேரென அறைந்த ஒலி என் முதுகெலும்பை சொடுக்க வைத்தது.

சாமர்வெல் குனிந்து அவளை தூக்கி சுவரோடு சாய்த்து வைத்தார். அவள் உடல் ஜன்னி வந்தது போல நடுங்கிக்கொண்டிருந்தது. கைகள் கூப்பியபடி அதிர்ந்துகொண்டிருந்தன. தரையில் ஒருசிறிய மரத்தாலான பூஜையறை. சுவர்களில் சட்டமிட்ட கரிய புகைப்படங்களில் அவளுடைய மூதாதையர் உறைந்த பார்வையுடன் பார்த்து நின்றார்கள். புன்னைக்காயெண்ணையின் சிவந்த ஒளியில் அந்த அறையே ஒரு திரைச்சீலை ஓவியம் போல விரைத்தது. ’என்றே குட்டிகள் போயே சாமீ..எனிக்கு இனி ஜீவிதம் வேண்ட சாயிப்பு சாமீ’ என்று அவள் கதறினாள்

‘பிள்ளைகள் எங்கயும் போகல்லை’ என்று திடமாகச் சொன்னார் சாமர்வெல். சட்டென்று எழுந்து அந்த சுவரில் இருந்த வெண்ணையள்ளிய குழந்தை தோற்றம் கொண்ட குருவாயூரப்பனின் படத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தார். ’இந்தா இருக்கு உன் குழந்தை. இனி இதாக்கும் உன் குழந்தை…’ மலையாளத்தில் ‘நின்றே குட்டி…இனி இது நின்றே குட்டி’ என்றார்

அவள் அவரை புரியாதவள் போல பார்த்தாள். பின் அந்தப்படத்தைப் பார்த்தாள். திடீர் ஆவேச வெறியுடன் அந்த படத்தை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அந்த கண்னாடிச்சட்டமே உடைந்து தெறிக்கும் என்பது போல இறுக்கிக் கொண்டாள். சாமர்வெல் அவள் தலைமேல் கையை வைத்து விட்டு இறங்கி வெளியே சென்றார். என்னால் அவரை தொடர முடியவில்லை. என் கால்கள் தளர்ந்திருந்தன. படிகளிலும் வெளிவாசலிலும் நான் தடுக்கினேன்.

மணியை அடித்தபடி நிமிர்ந்த தலையுடன், திடமான கால்வைப்புகளுடன் சாமர்வெல் சென்று கொண்டிருந்தார். நான் தள்ளாடியும் தடுமாறியும் பின்னால் சென்றேன். கனத்த அடிபட்ட மெல்லிய சருமம் போல என் மனம் தாளமுடியாத வலியால் விம்மித்தெறித்தது. இருட்டு கனமாக ஆகி என்னை நடக்கமுடியாதபடி தடுத்தது. அப்போது என் எதிரே நான் அவரை கண்டேன். நீளமான வெண்ணிற அங்கி இருளில் மெல்ல அலைபாய்ந்தது. உலக துக்கம் முழுக்க நிறைந்த பேரழகுடன் விழிகள் என்னை பார்த்தன. நான் குளிர்ந்து உறைந்து ஒரு கற்பாறை போல நின்று விட்டேன்.

அவர் ஒரு ஓலைச்சிலுவையை என்னை நோக்கி நீட்டினார். காய்ந்த ஓலைச்சிலுவை. பிள்ளைகள் விளையாடுவதற்காகச் செய்து வீசியது. அவரது புன்னகையைக் கண்டு பரவசத்துடன் நான் செயலிழந்து நின்றென். ‘இது உனக்காக’ என்று அவர் சொன்னார். தேவாலய வாத்தியத்தின் இசையே குரலானது போல. நான் அதை வாங்குவதற்காக கைநீட்டி சென்றதும் கால்தள்ளாடி முன்னால் விழுந்தேன். அந்த ஓலைச்சிலுவையும் கீழே விழுந்தது. மண்ணில் இருந்து அதை பொறுக்கிக்கொண்டு நிமிர்ந்தேன். என் முன் அவர் இல்லை, ஆனால் அவர் இருந்ததன் மெல்லிய ஒளி மிச்சமிருந்தது

அப்போதுதான் நான் கண்டதென்ன என்று உணர்ந்தேன். அந்த ஓலைச்சிலுவையை என் நெற்றிமேல் சேர்த்து மாறிமாறி முட்டிக்கொண்டு,கண்ணீர் மர்பில் கொட்ட, உடம்பின் அத்தனை மயிர்க்கால்களும் சிலிர்த்து எழுந்து நிற்க, தரையில் மண்டியிட்டு என் உடலே வெடிக்கும் வேகத்துடன் எனக்குள் கூவினேன். ‘என் தேவனே! என் ஏசுவே ! என் மீட்பனே! என் ஐயா, இதோ உனக்கு நான்! உனக்கு நான் என் தேவனே’

தூரத்தில் சாமர்வெல் சென்றுகொண்டிருந்தார், எனக்கு வெகுதூரம் முன்னால்.

முந்தைய கட்டுரைஓலைச்சிலுவை [சிறுகதை] – 2
அடுத்த கட்டுரைகோணங்கி ஒரு கடிதம்