கோவை கட்டண உரை
கோவையில் இன்று உரையாற்றுகிறேன். கட்டண உரை. இருப்பிடங்கள் முன்னரே நிறைந்துவிட்டன என்பதனால் அறிவிப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே பணம் கட்டாதவர்களுக்கு நுழைவொப்புதல் இல்லை
ஏற்கனவே ஆற்றிய இரு உரைகளின் தொடர்ச்சிதான். இந்த உரைகளை நன்கு சிந்தித்து தெளிவடைந்தவற்றை முன்வைக்கும் உரைகள் எனச் சொல்லமாட்டேன். சிலவற்றைச் சொல்லி நானே அறிந்துகொள்ளும் உரைகள் என்பேன். எல்லாச் சிந்தனைகளையும்போல இவை வெவ்வேறு சிந்தனைமுறைகளில் இருந்து எடுத்துக்கொண்ட சரடுகளை தன்னறிதலின் வழியாக முடைந்து ஒன்றை உருவாக்கும் முயற்சி மட்டுமே.
இந்த உரைகள் நம் பண்பாட்டு கட்டமைப்பு, நம் உள்ளம் ஆகியவை சென்ற இருநூறாண்டுகளில் உருவாகி வந்ததைப்பற்றிய ஆய்வுகள். சமூகவியல், மானுடவியல், அரசியல்கோட்பாடு போன்ற அறிவுத்துறைகளை சார்ந்த புறவயமான முறைமைகொண்ட ஆய்வுகள் அல்ல. இலக்கியம் சார்ந்த உள்ளுணர்வின் அடிப்படையிலான அணுகுமுறை என்னுடையது. ஆகவே இலக்கியப் படைப்புகளில் இருந்தே இந்த ஆய்வு நிகழும்.
இவற்றை உரையென நிகழ்த்துவது இவற்றில் எழும் மையமான ஐயங்கள், குழப்பங்களுடன் இவற்றை அணுகியறிந்து என்னுடன் உரையாடும் சிலரை திரட்டிக்கொள்வதற்காகத்தான்
ஜெ