மயில்கழுத்து [சிறுகதை]-1

’நீலமா? நீலம்னா சொல்றேள்?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஆமா, ஏன் கேக்கறேள்?’ என்று சன்னல்பக்கமிருந்து முகத்தைத் திருப்பி பஸ்சுக்கு வெளியெ ஓடும் வெளிக்காட்சிகளின் ஒளிநிழலாட்டத்தால் காலவெளியில் விரைவதுபோல தோற்றமளித்த முகத்துடன் ராமன் கேட்டார். ‘ஒண்ணுமில்லே. சும்மாதான்’. ராமன் கூர்ந்து பார்த்து ‘பரவால்ல சொல்லுங்கோ, நான் ஒண்ணும் தப்பா நெனைச்சுக்கப்போறதில்லே’ என்றபின் புன்னகை செய்தார். அவரது அழகிய சிறிய பற்களின் வரிசை,  சிரிப்புக்கு எப்போதும் ஒரு பெண்மையை அளிக்கும். அத்துடன் அவரிடம் எப்போதுமே ஒரு நாணம் உண்டு. ’காலாலே தரையிலே கோலம்போடாத கொறை’ என்று ஒருமுறை கிருஷ்ணன் பாலசுப்ரமணியத்திடம் சொல்லிச் சிரித்திருக்கிறார்.

’நீங்க ஒண்ணையுமே தப்பா நெனைக்கமாட்டேள்னு தெரியாதா என்ன?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டியா சொல்றேள்? எங்காத்துலே என்னை சரியான சூனிப்பயல்ன்னுல்ல சொல்வா’ என்று ராமன் சிரித்தார்.’காபி ஸ்டிராங்கா இல்லேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்குவேள்… மத்தபடி மனுஷனோட இருட்டைப்பத்தியும் தீமையப்பத்தியும் உங்களுக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது…’

ராமன் புருவத்தை தூக்கி ‘அப்டியா?’ என்றார். ‘உங்க கதைகளை வாசித்த வரை பெரிய தீமையோட சித்திரம்னு ஒண்ணு வரவே இல்லை…’ . ராமன் ‘ஓகோ’ என்றபின் யோசித்து ‘கெட்டவா சிலர் இருக்காளே’ என்றார். ‘இருக்காங்க. ஆனா அவங்களும் வாழ்க்கையிலே மாட்டிண்டிருக்கிற சாதாரண மனுஷங்கதான்… பொறாமைப்படுறாங்க, பொருமறாங்க. முடிஞ்சவரைக்கும் மத்தவா கையிலே இருக்கிறத பிடுங்கிண்டுட முயற்சி பண்றாங்க… அதெல்லாம் பண்ணல்லேன்னா அப்றம் எப்டி மனுஷங்க?’

ராமன் மனக்குழப்பமடைந்தவர் போல கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு உள்ளங்கை எப்போதுமே வேர்க்கும். பெண்களைப்போல மூக்குநுனியும் புருவமும் வேர்க்கும். கையில் வெள்ளை நிறமான கைக்குட்டையை எப்போதுமே வைத்திருப்பார். அதைக்கொண்டு முகத்தை துடைத்துவிட்டு ‘இல்லே, அதுக்குமேலேயும் மனுஷன்கிட்ட தீமை இருக்குன்னா நெனைக்கிறேள்’ என்றார்.

பாலசுப்ரமணியன் ’மனுஷனோட தீமைக்கு அளவே கெடையாது. அது மனுஷனை விட பலமடங்கு பெரிசு. வாழ்க்கைக்காக மனுஷன் தீமையப் பண்றதில்லை, தீமைக்காகத்தான் மனுஷன் வாழறான். அவன் மனசுக்குள்ளே இருந்து ஆர்ட்டீசியன் ஊத்து மாதிரி தீமை பொங்கி வெளியே வர்ர சொகமிருக்கே அதுதான் மனுஷ வாழ்க்கையிலே மத்த எல்லாத்தையும் விட பெரிய இன்பம். அதுக்காகத்தான் அவன் யுத்தங்கள செஞ்சான். கோடிகோடியா கொன்னு குவிச்சான். சித்திரவதைகள கண்டு பிடிச்சான். அடிமை முறைகள உண்டுபண்ணினான்…அதுக்காகத்தான் அவன் கான்சண்டிரேஷன் காம்புகளிலே சகமனுஷனைப் போட்டுப் பொசுக்கி எடுத்தான்…’

‘எங்கியோ வெளிநாட்டுலே–’ என்று ராமன் ஆரம்பித்ததும் பாலசுப்ரமணியன் வேகமாக இடைமறித்து ‘இங்க நம்மூர்லே என்னென்ன பண்ணியிருக்காங்க. பத்மநாபபுரத்திலே அரண்மனையிலே இருக்கிற சித்திரவதைக்கருவிகளை பாத்திருக்கேளா?’ என்றார். அவரது முகம் சிவந்து கணகணவென்றிருப்பதைப் பார்த்து கொஞ்சம் மிரண்டது போல ராமன் பார்வையை விலக்கிக் கொண்டார். பிறகு ‘அங்கங்க நடக்கலாம். இல்லேங்கலே’ என்றார்.’கும்பகோணத்திலயும் பாபனாசத்திலேயும் உங்க கண்ணு முன்னாடி நடந்தாத்தான் உங்களுக்கு பிரச்சினை. இல்லாட்டி ஒண்ணுமில்லை இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டி இல்லே..’ என்று தஞ்சாவூர்த்தனமாக ராமன் இழுக்க ‘அதான்’ என்று பாலசுப்ரமணியன் அழுத்தினார். ராமன் மீண்டும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கைக்குட்டையை கைக்குள் வைத்து பிசைந்துகொண்டார்.

பிறகு கொஞ்சநேரம் இருவரும் அமைதியாகவே பயணம் செய்தார்கள். பஸ் கோயில்பட்டி நிலையத்தில் நின்று ஆளிறக்கி ஏற்றி மேலே சென்றது. ‘கி.ரா இங்கல்ல இருக்காரு?’ என்றார் ராமன். ‘ஆமா..’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் ‘அவருகூட போயி ஒருவாட்டி விளாத்திக்குளம் சுவாமிகள பாக்கணும்’ என்றார். ‘எங்கிட்டயும் சொல்லியிருக்காரு’ ‘ஒரு கார்டு போட்டா நம்மகூட வந்திருப்பாரா? அவருக்கும் மியூசிக்னா பைத்தியம் இல்ல?’ ‘இப்ப பருத்திநடவு மாசம். ஊரவிட்டே கெளம்ப மாட்டாரு. இந்த மாசம் முடிஞ்சா மூணுமாசம் வேலையே கெடையாது. உலகத்திலே ஜனங்கள்லாம் எதுக்கு வேலை பாக்கிறாங்கன்னு ஆச்சரியப்பட்டுட்டே இருப்பாரு..’ . ராமன் சிரித்தார். இறுக்கம் மெல்லக் குறைந்தது.

பாலசுப்ரமணியன் ‘பொதுவா நீலம், ஊதால்லாம் மன இறுக்கம் உள்ளவங்களுக்கு புடிச்ச நெறம். மனுஷனோட தீமைய கவனிக்கிறவங்களுக்குண்டான நெறம். நீங்க சொன்னது வித்தியாசமா இருந்தது’ என்றார். ‘தீமை இல்லாம இலக்கியம் இல்லியா பாலு?’ என்றார் ராமன் மெல்லிய பெண்குரலில். ‘ இருக்கு…ஆனா கிளாசிக் இருக்குமான்னு நேக்கு டவுட்டா இருக்கு… எல்லா எபிக்சிலேயும் தீமைதானே அளவிலே ஓங்கி இருக்கு. உன்னதத்திலே நன்மை மேலே இருக்குன்னாலும்..’ ராமன் மூச்சு திணறுபவர் போல ’நான் எழுதறேன்…தீமையே இல்லாம நல்லதை வச்சு நான் கிளாசிக்கு எழுதறேன்’ என்றார். பெரிய எடையை தூக்கி வைத்தவர் போல திணறி உள்ளங்கைக்குள் இருந்த கைக்குட்டையை விரித்து முகத்தை துடைத்துக்கொண்டார். முகத்தை அதில் ஒளித்துக்கொள்ள ஆசைப்படுபவர் போலிருந்தார்.

பாலசுப்ரமணியன் புன்னகையுடன் ‘எழுதுங்கோ’ என்று சொல்லி பேசாமலிருந்தார். அதன்பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பாலசுப்ரமணியன் தப்பாக ஏதாவது ஆயிற்றா என்று யோசனைசெய்தார். அப்படி ஒன்றும் சொல்லிவிட்டதாகத் தெரியவில்லை. ராமன் சட்டென்று முகத்தை உம்மென்று ஆக்கிக்கொண்டு பேசாமலிருப்பார். ஆனால் அதிகபட்சம் இருபது நிமிடங்கள்தான். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை அவரது உலகம் முழுமையாக மாறிவிடுகிறது. பழைய விஷயங்கள் எதையும் அவர் கையோடு எடுத்துக்கொள்வதில்லை.

கழுகுமலையில் பஸ்ஸில் இருந்து இறங்கும்போதுகூட ராமன் பேச்சுக்கு வரவில்லை என்பதை பாலசுப்ரமணியன் கவனித்தார். அது தன்னுடைய பேச்சினால் வந்த மௌனம் அல்ல என்று தெரிந்தது. பொறுமையாகக் காத்திருக்க முடிவெடுத்தார். மனிதர்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு பேசாமலிருப்பது அவருக்கும் மிகவும் பிடிக்கும். பஸ்நிலையத்திற்கு சாமிநாதன் வந்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அவர் அவ்வளவுதூரம் வந்தது பால சுப்ரமணியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘வாங்கோண்ணா…நல்லா இருக்கேளா? மூத்தவ இப்ப சரியாயிட்டாளா?’ என்றார் சாமிநாதன்.

‘சுப்பு அண்ணா வந்துட்டாராடா?’ என்றார் ராமன். ‘அவரு அப்பவே வந்து தீர்த்தம் எடுத்துக்க ஆரம்பிச்சாச்சு. ஊர்ல உள்ள வெட்டிப்பயக்க ஒரு பய விடாம சுத்தி உக்காந்துண்டிருக்கானுங்க. ஒரே பொகை வேற’ என்றார் சாமிநாதன். ‘எங்க இருக்காரு?’ ‘இங்க சேத்துப்பட்டி மிராசுதார் வீட்டிலே’ என்றார் சாமிநாதன். ‘வீட்டிலேயா?’ ராமன். சாமிநாதன் கொஞ்சம் சங்கடப்பட்டு ‘வீடுன்னா, அவருக்கு இங்கியும் ஒரு வீடு இருக்கு’ என்றார்.

‘ஓகோ…’ என்று ராமன் முகம்மலர்ந்தார். ’அதுக்கு ஏண்டா சங்கடப்படுறே? என்னமோ இவன் தப்பு பண்ணினமாதிரி…’ பாலசுப்ரமணியனிடம் திரும்பி ‘சாமிநாதன் சரியான ஆச்சாரம். ரொம்ப சங்கடப்படுவான்’ என்றார். ‘கீழத்த்தஞ்சை மண்ணு ஒட்டலைன்னு நெனைக்கிறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் உரக்கச்சிரித்தார்

ஒரு குதிரைவண்டிதான் வந்திருந்தது. அதில் ராமன் உற்சாகத்துடன் ஏறி வண்டிக்காரன் பின்னால் அமர்ந்துகொண்டார். ‘நான் எப்பவுமே இங்கதான் உக்காந்துக்கறது பாலு. சின்ன வயசிலே இருந்து இதிலே ஒரு பிடிவாதம். இங்க ஏதாவது வாண்டு ஏறி ஒக்காந்துட்டுதுன்னு வைங்கோ வண்டியே வேணாம்னு நடக்க ஆரமிச்சிருவேன். இதில என்ன இருக்குன்னு நினைக்கிறேள் என்ன?’

பாலசுப்ரமணியன் ‘இல்லை’ என்றார் ‘நினைக்கிறேள், அது தெரியும்…சின்னவயசு பழக்கம்னு வைங்கோ’ வண்டி கிளம்பியது. சாமிநாதன் பின்னால் தொத்திக்கொண்டு ‘அவாளுக்கு நஸ்டால்ஜியா ஜாஸ்தி. போனவாரம் கும்மோணம் வந்திருந்தா. என்னடாது அந்தக்காலத்திலே தெருவொரமெல்லாம் நாத்தமா அடிக்குமேன்னு ஏக்கமா சொல்றா’ என்றார் . பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார்

தெருவோரங்களில் கீற்றுச்சாய்ப்பு இறக்கி கள்ளிப்பெட்டி மேஜைகள் செய்து நெல்லைப்பகுதி திருவிழாக்களுக்கே உரிய கடலைமிட்டாய் , தேங்காய் மிட்டாய் அடுக்குகள். பைசாநகரத்து கோபுரம் போல இனிப்புச்சேவு பரப்பி வைத்திருந்தார்கள். பளீரிடும் சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்களில் சீனிக்குச்சி மிட்டாய்கள். பெரிய இரும்பு வாணலியை தரையில் குழி எடுத்து செங்கல் அடுக்கி கட்டப்பட்ட அடுப்புகள் மேல் வைத்து எண்ணை தளபுளக்க இனிப்புச்சேவு காரச்சேவு பொரித்து சல்லரிகளில் அள்ளி புனல்வடிவ துளைப்பாத்திரங்களில் போட்டார்கள்.

ராமன் குதூகலமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு திரும்பி, ‘திருவிழான்னாலே கிராமத்துக்கு ஒரு இது வந்திடுது, மணைக்கு வர்ர புதுப்பொண்ணு மாதிரி, இல்ல?’ என்றார் பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘இந்த ஊரு திருவிழாலே மிட்டாய் ஜாஸ்தி..’ என்றார். ’எங்கூரிலே விதவிதமா தாம்பூலத்துக்கான சமாச்சாரங்கள்தான் நெறைஞ்ருக்கும்..பாக்கிலேயே பத்துப்பண்ணிரண்டு வகை’

அக்ரஹாரம் முழுக்க தெரு நிறைத்து கோலம்போட்டிருந்தார்கள். நிறைய பிராமணப் பையன்கள் சட்டை போடாத உடம்பில் பட்டைபட்டையாக விபூதி குழைத்து பூசி பெரிய பலாச்சுளைக் காதுகளுடனும் எண்ணை ஒட்டிய தலைமயிருடனும் உரக்க சிரித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வாழைமட்டையை கொண்டுபோய் யார் பின்னாலாவது மடேரென்று அடித்து திடுக்கிடச் செய்வதுதான் விளையாட்டு. காவிப்பட்டை போடப்பட்ட வீடுகளின் சிமிண்ட் திண்ணைகளில் ஆங்காங்கே வயதான மாமிகள் அமர்ந்து கண்களைச் சுருக்கி தெருவைப் பார்த்தார்கள். வீடுகள் முழுக்க மாவிலை தோரணமும் மலர்ச்சரங்களும் தொங்கின. ஒரு கூடைக்காரி காலிக்கூடையுடன் எதிரே வந்தாள்.

அக்ரஹாரத்தைத் தாண்டி இடதுபக்கம் சென்ற தெருவின் எல்லையில் பெரிய பழைய வீட்டுக்கு முன்னால் நாலைந்து வண்டிகள் அவிழ்த்து போடப்பட்டிருந்தன. ஒரு கருப்பு பியூக் கார் வேப்பமரத்து இலைகளைப் பிரதிபலித்துக்கொண்டு நின்றது. ‘நல்லா தேச்ச திருவோடு மாதிரி இருக்குல்ல?’ என்றார் ராமன். பாலசுப்ரமணியன் புன்னகை செய்து ‘இதுக்கும் ஏதாவது பொம்புளை உவமை சொல்லுவீங்கன்னு நினைச்சேன்’ என்றார். சாமிநாதன் உரக்க சிரித்தார்.

அவிழ்த்துக்கட்டப்பட்டு வைக்கோல் மென்று கொண்டு நின்ற வண்டிமாடுகள் நிமிர்ந்து பார்த்து புதிய காளைகளை புஸ் என்று மூச்சு விட்டு வரவேற்றன. ராமன் வண்டியில் இருந்து குதித்து உற்சாகமாக ‘சாமிநாது, பெட்டியக் கொண்டாந்து உள்ள வைடா…நான் மேலே போறன்…நாயக்கர் மேலேதானே இருக்காரு?’ என்றபடி கட்டிடத்தின் பக்கவாட்டு படிகளில் ஓடி ஏறிச் சென்றார். பாலசுப்ரமணியன் இறங்கி தன் பெட்டியையும் ராமன் பெட்டியையும் கொண்டு சென்று வைக்கச் சொல்லிவிட்டு முகம் கழுவி துடைத்து மேலே சென்றார்

மேலே நடுக்கூடத்தில் பாய் விரித்து தலையணைகள் போட்டு ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தார்கள். நடுவே மதுரை சுப்பு அய்யர் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். அருகே கிட்டத்தட்ட அவரை உரிமைகொண்டாடி வைத்திருப்பது போல நாயக்கர் அமர்ந்து மீசையை கோதிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார். ராமன் சுப்பு அய்யரின் எதிரே சென்று அமர்ந்து செல்லம்கொஞ்சி பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.

பாலசுப்ரமணியன் வாசலில் தயங்கி நின்றார்.அறைக்குள் விஸ்கி வாசனை நிறைந்திருந்தது. பாயில் பெரிய தாம்பாளம் நிறைய பலாக்காய் வற்றலும், நேந்திரன் வற்றலும், முந்திரிப்பருப்பும் குவிக்கப்பட்டிருந்தன. முதல் பார்வைக்கு ராமன் சுப்பு அய்யரின் தம்பி போல இருந்தார். அதேபோல முன்நெற்றியில் விழும் முடி. கொழுத்த கன்னங்கள் கொண்ட மீசையில்லாத முகம். ஆனால் ராமனிடமிருந்த பெண்மை அவரிடம் இல்லை. அவரது முகத்தில் ஒரு வினோதமான பளபளப்பு இருந்தது. காதுமடல்கள் தடித்து தொங்கியவை போலிருந்தன. எந்நேரமும் எவரையாவது நக்கல் செய்பவர் போல இருந்தார். வெற்றிலைபோட்டு புண் மாதிரி தெரிந்தது வாய். மாந்தளிர் நிற ஜிப்பா அணிந்து பட்டுவேட்டி கட்டியிருந்தார். மார்பில் இரு பித்தான்களை திறந்து போட்டு புலிநகம் பதித்த பதக்கச்சங்கிலி பாதி வெளியே தெரியச்செய்திருந்தார்.

‘இவருதாண்ணா நம்மாளு… பாலுன்னு சொல்வேனே.. நல்லா பேசுவார். பேசுறதே சங்கீதம் மாதிரி இருக்கும். பாக்கத்தான் இப்டி இருக்காரு. பிளேடு மாதிரி ஆளு. நேக்கெல்லாம் இவர பாக்கறச்சயே வயத்துக்குள்ள சில்லுன்னு இருக்கும்…கிழிச்சிருவார்’ என்றார் ராமன். சுப்பு அய்யர் ’வாங்கோ உக்காருங்கோ’ என்றார் . கை காட்டி ‘சாப்பிடுவேளா?’ என்றார். பாலசுப்ரமணியன் ’இதுவரை இல்லை’ என்றார். ‘அப்ப இப்ப ஆரம்பிக்கிறேளா?’ ‘இல்ல. அதுக்காக நான் வரலை’ சுப்பு அய்யர் அரைக்கணம் பார்த்துவிட்டு ‘அப்பசரி…டேய் ராமு, உங்காள எவனுமே கட்டாயப்படுத்த முடியாதுடா’ என்றார். பாலசுப்ரமணியன் அவரது கைவிரல்களைப் பார்த்ததும் கண்களை விலக்கிக் கொண்டார். விரல்கள் ஒன்றுக்குமேல் ஒன்று ஏறியவை போல குறுகி வளைந்திருந்தன.

‘சொன்னேனே…அண்ணா இப்ப இவன்கிட்ட இந்தியாவக்குடுங்கோ. நேருவ அமெரிக்காவுக்கு அனுப்பிடலாம்’ என்றார் ராமன். ‘அவர எதுக்குடா அங்க அனுப்பணும்? அங்க ஏற்கனவே பிரசங்கம் பண்ண ஏகப்பட்ட ஆட்கள் இருக்காங்க.பேசாம ரஷ்யாவுக்கெ அனுப்பறது. குருஷேவை பேசியே கொன்னுடுவார். உலகத்துக்கு விடிமோட்சம்’ ராமன் கிச்சுகிச்சுமூட்டப்பட்ட சின்னப்பையன்கள் போலச் சிரித்தார்.

பாலசுப்ரமணியன் சுப்பு அய்யரிடம் நெருக்கமாக உணர்ந்தவராக வந்து பாயில் அமர்ந்தார். சுப்பு அய்யர் ‘நீங்க கம்யூனிஸ்டு இல்லியே?’ என்றார். ‘இப்ப இல்லை’ என்றார் பாலசுப்ரமணியன். ‘டேய் ராமு உங்காளு ராஜாஜிக்கு தம்பி மாதிரின்னா இருக்கான். கணக்கா பேசறானே’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். சுப்பு அய்யரின் குரலில் வெற்றிலை போட்டுத்தடித்த நாக்கின் குழறல் இருந்தது.

’காபி சாப்பிடறேளா?’ என்றார் சுப்பு அய்யர். சாமிநாதன் ‘சொல்லிட்டேண்ணா…’ என்று வாசலில் நிற்க ‘அதாருது, டேய் சாமிநாது வாடா வாடா , தாயோளி குளூக்க ஒருகொடம் காவேரி தண்ணிய கொண்டாந்து தலையிலே கொட்டறது மாதிரி இருக்குடா உன்னை பாக்கறது. வாடா ஒக்காரு… ’ ‘இருக்கட்டும்ணா’ ‘என்னடா இருக்கட்டும்…ஒக்காருடா…நாயி, மெலிஞ்சு போய்ட்டியேடா..ஏண்டா? ‘வேலைண்ணா’ ‘என்னடா வேலை? நீ எப்படா ஸ்கூலுக்கு போனே?’ ராமன் ‘அந்தவேலைய சொல்லலை. அவன் இப்ப எம்.டி. ராமநாதன் பிளேட்டு நாலு வாங்கி வச்சு கேக்கறான்… கடும் உழைப்புன்னா’ என்றார் . சுப்பு அய்யர் வெடித்துச் சிரித்தார்.

‘நீங்க ராமநாதன் ரசிகர் இல்லியே?’ என்றார் சுப்பு அய்யர். ‘ஆமா’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஓ அப்டியா? நாங்க அவரைக் கொஞ்சம் கிண்டல் பண்ணுவோம். உங்களுக்கு வருத்தம் இருந்தா தாம்பூலம் போட்டுக்குங்கோ..கேக்கும்’ என்றார். காபி வந்தது. சுப்பு அய்யர் ‘இவரு ரங்கநாத நாயக்கர். கோயில்பட்டியிலே மில்லு வச்சிருக்காரு. மிராசுதார்.நம்ம ஆப்தர். சங்கீதத்தை தண்ணி ஊத்தி வளக்கிறார்…’ என்று சிரிக்க நாயக்கர் ‘போங்கண்ணா…’ என்று சிணுங்கினார்.

காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சுப்பு அய்யர் ’டேய் சாமிநாது, பாடுரா’ என்றார். ‘அண்ணா பாட்டாண்ணா…கொல்லாதீங்கோ’ ‘டேய் பாடுராண்ணா…’என்றவர் பாலசுப்ரமணியனிடம் ’நன்னா பாடுவான். பாவம் கச்சிதமா இருக்கும். சொல்லப்போனா நான் தமிழ் தெலுங்கு சாகித்தியத்துக்கு இவன் பாடித்தான் பாவம் என்னான்னு கத்துக்கறேன்…’

சாமிநாதன் ’என்ன பாட்டு பாடுறதுண்ணா?’ என்றார். ‘இது கழுகுமலைடா. தாயளி, ரெட்டிய விட்டுட்டு எவனை பாடினாலும் ஜோட்டாலேயே அடிப்பேன்…’ சாமிநாதன் தலைகுனிந்து பாயின் கோரையை லேசாக பிய்த்துவிட்டு மெல்ல ம்ம்ம் என்று ஆரம்பித்து கணீர் குரலில் பாட ஆரம்பித்தார்

வன்னத் தினை மாவைத் தெள்ளியே – உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே – உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே

சுப்பு அய்யர் உரக்க ‘பேஷ்’ என்று சொல்லி எம்பி அமர்ந்தார். அறைக்குள் அது வரை இருந்த ஏதோ ஒன்று வெளியேறியது. முற்றிலும் புதிய ஒன்று உள்ளே வந்து சூழ்ந்தது. தூயது, தானிருக்கும் இடத்தை முழுக்க தன்னுடையது மட்டுமே ஆக்குவது.


கன்னத் தினிக்குயில் சத்தமே – கேட்கக்
கன்றுது பார் என்றன் சித்தமே – மயக்
கம்செய்யுதே காமப் பித்தமே

ஓரக்கண்ணில் அசைவு தெரிய பாலசுப்ரமணியன் திரும்பிப்பார்த்தார். பக்கவாட்டு அறைக்குள் இருந்து ஒரு பெண் ஒரு கண்ணாடிப்பிம்பம் வருவது போல அத்தனை அலுங்காமல் தோன்றி வந்தாள். நீலப்பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் அட்டிகையிலும் காதுகளில் தோடுகளிலும் மூக்கில் பேசரியிலும் ப்ளூஜாகர் வைரங்கள் மின்னுவது தெரிந்தது. அவள் வந்ததும் ஓரமாக சுவர் சாய்ந்து அமர்ந்ததும் எல்லாம் அழகிய நடனம் போலிருந்தது. ’தேடக் கிடையாத சொர்னமே – உயிர்ச் சித்திரமே மடவன்னமே’ என்ற வரியே காட்சியாக நிகழ்ந்தது போல.

பாடல் முடிந்ததும் சுப்பு அய்யர் திரும்பி பாலசுப்ரமணியனிடம் ‘என்ன அப்டியே வாய தெறந்து வச்சுண்டிருக்கே…பாத்திருக்கேல்ல?’ என்றார். அந்தப்பெண் முறுவலித்தாள். சுப்பு அய்யர் ‘இவதான் சந்திரா. பரதநாட்டியம் ஆடறா…’ பாலசுப்ரமணியன் மூச்சுத்திணறுவதைப்போல உணர்ந்தார். அவரால் அவளைத் திரும்பிப் பார்க்கமுடியவில்லை. ஒருகணம் அவளுடைய முகமும் மறுகணம் தன்னுடைய தோற்றமும் அவர் மனதில் மாறி மாறி எழுந்தன. இன்னும் நல்ல சட்டை போட்டிருக்கலாமோ. தலையைச் சீவிக்கொண்டிருக்கலாமோ?

சுப்பு அய்யர் சிரித்தபடி ‘நானும் கவனிச்சிருக்கேன், சந்திராவ முதல்ல பாத்தப்ப பேஸ்தடிக்காத ஒருத்தனைக்கூடப் பாத்ததில்லை…’ என்றார். சந்திரா பாலசுப்ரமணியனிடம் ‘உங்க பேரென்ன?’ என்றாள். அவள் குரல் கனமாக, சற்றுகரகரப்பாக இருந்தது. அந்த அழகுடன் கொஞ்சம்கூட இணையாதபடி. அந்த முரண்பாடு அவளை ஒரேகணத்தில் மானுடப்பெண்ணாக்கியது. பாலசுப்ரமணியன் அவளைப் பார்த்து ’பாலு, பாலசுப்ரமணியன்’ என்றார்

‘சந்திரா, இவரு இன்னைக்குத் தமிழிலே பெரிய ஆளு. ஒரு அசுர சக்தி. மூளைக்குள்ள பெருமாளோட சக்கரமே இருக்கறதா ராமன் சொல்றான்’ என்றார் சுப்பு அய்யர். அவள் ‘ஓ’ என்று சொல்லிச் சிரித்தாள். ‘இவளைப்பத்திக் கேள்விப்பட்டிருக்கேல்ல?’ பாலசுப்ரமணியன் ’ஆமா..ஆனா டான்ஸ் பார்த்ததில்லை. படங்களிலே பாத்ததோட சரி…’. பொன்மூங்கில் போல இறுக்கமான உடம்பு. நீளமான மெல்லிய கழுத்தில் பச்சைநரம்புகள் ஓடின. அழுத்தமான உதடுகள், பெரிய கண்கள். தலைமுடியை இரு நெற்றியோரங்களையும் மறைப்பது போல சீவி தளர்வாக பின்பக்கம் கட்டி விட்டிருந்தாள். அஸ்தமன சூரியன்போல பெரிய குங்குமப் பொட்டு.

’எங்கூடத்தான் வந்தா..’ என்றார் சுப்பு அய்யர். அந்த வரி ஓர் அறைபோல பாலசுப்ரமணியனை தாக்கியது. அவர் அரண்டதுபோல அவரது கைவிரல்களை அனிச்சையாக பார்த்துவிட்டு ராமனை பார்த்தார். ராமன் அசாதாரணமான ஒரு மௌனத்தில் இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது. பாலசுப்ரமணியன் தன் எண்ணங்களை மறைப்பதற்காக வழக்கமாகச் செய்வது போல தீவிரமாக ஒரு கேள்வியைக் கேட்டார் ‘நீங்க ஆந்திராப்பக்கம் தானே?’ ‘பூர்வீகம் குஜராத். பிறந்து வளர்ந்ததெல்லாம் பூனா…. பரதம் படிக்கணும்னு காஞ்சீபுரம் வந்தேன்’. சுப்பு அய்யர் ‘காஞ்சீபுரம் நல்லுச்சாமிப்பிள்ளைதான் குரு…’ என்றார். பாலசுப்ரமணியன் மையமாக ‘ஓகோ’ என்றார். ராமன் தரையையே பார்த்துக்கொண்டிருப்பதை பாலசுப்ரமணியன் ஓரக்கண்ணால் கவனித்தார்.

சந்திரா ‘இப்ப காபி சாப்பிட்டா எப்டி அப்றம் சாப்பிடறது?’ என்றாள். ‘காபிய எப்பவும் சாப்பிடலாம்…காலம்பற எழுந்துண்டதுமே காபியாலே வாய் கொப்பளிக்கிறது எங்கப்பாவோட பழக்கம்’ என்றார் சுப்பு அய்யர். ‘நீங்க மத்ததிலேன்னா கொப்பளிக்கிறேள்…’ என்றார் சாமிநாதன். ‘சந்திரா எண்ணி எண்ணி சாப்பிடுவாள். கால்ம்பற ரெண்டு இட்லி. மதியம் ஒரு சப்பாத்தில் கொஞ்சம் கீரை காய்கறிகள். ராத்திரி மறுபடி ரெண்டு இடியாப்பம் இல்லாட்டி இட்லி. ஒரு டம்ப்ளர் ஜூஸ்…அவ்ளவுதான்’ சுப்பு அய்யர் சொல்லியபடி பால சுப்ரமணியனைப்பார்த்து கண்ணடித்து ‘சும்மா சிக்குன்னு இருக்கா இல்ல?’ என்றார்

பாலசுப்ரமணியன் அதிர்ச்சியுடன் ஒருகணம் அவளைப்பார்த்துவிட்டு பார்வையை விலக்கிக்கொண்டார். அவள் சிரிப்பதை உணர்ந்தபின் மீண்டும் பார்த்தார். சுப்பு அய்யர் ‘அவ வயசு இப்ப என்னாங்கிறீர்?’ பாலசுப்ரமணியன் ‘தெரியலை’ என்றார். ’சொல்லுடீ இவளே’ என்று ஒரு தாளைச்சுருட்டி அவள் மேல் எறிந்தார். சந்திரா ‘என்ன சொல்றது?’ என்றபின் ‘ஐ யம் டைம்லெஸ் யூ நோ’ என்றாள். ‘வர்ர ஆவணியிலே இவளுக்கு முப்பத்தஞ்சாறது. பாத்தா இருவத்தஞ்சு சொல்ல முடியுமா?’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் புன்னகையுடன் அவளைப்பார்த்தார். முகத்தின் ஆழமான சிலகோடுகள் வயதைக் காட்டத்தான் செய்கின்றன என்று தோன்றியது.

‘உயர்தர ஒயினைப்போல நான் காலத்தை உண்டு இனிமையாகிறேன்’ என்று சந்திரா உயர்தர உச்சரிப்புள்ள ஆங்கிலத்தில் சொன்னாள். சுப்பு அய்யர் ஆங்கிலத்தில் ‘நம்முடைய ஐதீகத்தில் கால என்றால் கரியது என்று பொருள். மரணம் என்று பொருள். காலத்தை உண்டு சுருண்டு கிடப்பது நாகம். அதன் விஷத்துக்கு ஒரு துளியில் ஒரு உலகை அழிக்கும் வல்லமை உண்டு. ஆலகாலம் என்று அதற்கு பெயர்’ என்றார். அவர் அப்படி சட்டென்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தது பால சுப்ரமணியனுக்கு அதிர்ச்சி அளித்தது. சுப்பு அய்யரின் உச்சரிப்பு இந்திய அழுத்தங்களுடன் இருந்தாலும் சொற்றொடர் அமைப்பு துல்லியமாக இருந்தது.

சந்திரா ‘எல்லா அமுதங்களும் மனிதனை கட்டிப்போடுபவை. விலக்க முடியாத ஈர்ப்புள்ளவை. ஆகவே அவையெல்லாமே விஷங்களும்கூட’ என்றாள். பாலசுப்ரமணியன் அவர்கள் இருவருக்குள் ஏதோ ஓடுவதை புரிந்துகொண்டார். இரு ஊசிமுனைகள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்கின்றன. சுப்பு அய்யர் சட்டென்று திரும்பி ராமனிடம் ‘என்னடா பண்றாய்? தூங்கிட்டியா?’ என்றார். ‘இல்லேண்ணா…நான் வந்து’ ‘நீ வந்தா என்ன வராட்டி என்ன? நாசமா போக…வந்ததிலே இருந்தே நானும் பாக்கறேன், செத்த சவம் மாதிரின்னா இருக்கே..’

பாலசுப்ரமணியன் அதிர்ந்து மீண்டும் அனிச்சையாக சந்திராவைப் பார்த்தார். அவள் சாதாரணமாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். நாயக்கர்கூட கொஞ்சம் அசௌகரியமாக ஆனது போல பட்டது. ராமன் ‘இல்லேண்ணா…நீங்க பேசிட்டிருந்தேள்…’ என்றார். ‘கேட்டையா பாலு, பாலுதானே உம்பேரு? சந்திராவோட ஆட்டம் என்னன்னு இவன்கிட்ட கேக்கணும்…என்னடா’ ராமன் ‘ஆமாண்ணா…’ என்று சொல்லி பலவீனமாக புன்னகை புரிந்தார். ‘அவரை தெரியுமா?’ என்றார் பாலசுப்ரமணியன் . சந்திரா ‘நல்லாவே தெரியுமே…கலாஷேத்ராவிலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். நெறைய பேசுவோம். சங்கீதம் பத்தி…’ புன்னகை புரிந்து ‘பாடணும்னுதான் ஆசை…முடியல்லை. முடிஞ்சது எழுதறதுதான். அதானெ எழுதறேன்னு சொல்லுவார்’ என்றாள்

ராமன் ‘கலாஷேத்ராவிலே மாயான்னு ஒரு பெல்ஜியம்பொண்ணு இருந்தா. அவ எங்க வீட்டுக்கு மேலேதான் குடியிருந்தா. அப்ப அவகூட போறச்ச இவளை அறிமுகம்…’ என்றார். பாலசுப்ரமணியன் சிக்கலான ஒரு கோலம் விரிவதை உணர்ந்தார். தாமரைக்குளத்தில் மலர்களுக்கும் மலர்நிழல்களுக்கும் அடியில் கொடிகள் தழுவிப்பின்னி உருவாக்கும் அடர்சிக்கல். ’டேய் சாமிநாது, போயி ஒரு வைன் பாட்டில் எடுத்தாடா’ என்றார் சுப்பு அய்யர்.

சாமிநாதன் நாயக்கரை பார்த்தார் ‘என்னடா?’ சுப்பு அய்யர் அதட்டினார். ‘இல்லேண்ணா…விஸ்கிக்குமேலே…அப்றம் இடியாப்பம் ரெடியா இருக்கு…’ ‘அது இருக்கட்டும்டா..’ ‘கச்சேரிக்கு நேரமாச்சுண்ணா’ ‘டேய்…என்ன அட்வைஸா? படவா’ ’சரிண்ணா’ என்று அவர் கீழே சென்றார். சுப்பு அய்யர் உரத்தகுரலில் ஓர் ஆங்கிலக்கவிதையை சொன்னார்

’உதட்டருகே ஒயின் வருகிறது
கண்ணிலே காதல் எழுகிறது
உண்மை என நாமறிவது அவ்வளவுதானே?
இதோ முதுமையும் மரணமும் வருவதற்குள்
கோப்பையை எடுத்துக்கொள்கிறேன்.
அதைப் பார்க்கிறேன்
மெல்ல பெருமூச்சு விடுகிறேன்1

பாலசுப்ரமணியனை நோக்கிக் கண்ணடித்து ‘என்ன பாட்டு தெரியறதா?’ என்றார் சுப்பு அய்யர். ‘இல்லே’ என்றார் பாலசுப்ரமணியன். ‘டபிள்யூ பி ஏட்ஸ்’ என்றார் சுப்பு அய்யர் ’எனக்கென்னமோ அவனைத்தான் புடிச்சிருக்கு. சும்மா தத்துவம் பித்துவம்னு பிராணனை வாங்கறதில்லை. நீட்டா மனசை மட்டும் எழுதிடறான். நல்ல சுகபாவம் உள்ள கவிதை…பழைய வயின் மாதிரி நாக்கிலேயே நிக்கும்’

ஒயின் வந்தது. ’பலே..சாமிநாது வெவரமானவன். என்ன இருந்தாலும் கும்மோணம்னா…’ என்றார் சுப்பு அய்யர் .’வயின் மட்டும் அதுக்கான கிண்ணத்திலேதான் குடிக்கணும்… வயின் நிறைஞ்ச கிண்ணம் ஒரு கன்னிகையோட சிவந்த ஒதடுமாதரி…’ அவர் அதைத் திறமையாக உடைத்து ரத்தம் வழிவதுபோலகோப்பைகளில் ஊற்றி உதட்டருகே எடுத்து மெல்ல முகர்ந்தபின்னர் புன்னகைசெய்தார். ‘நல்ல வயின்… என்ன சந்திரா, ஒரு கிளாஸ் எடுக்கறியா? ‘அவள் ஆங்கிலத்தில் ’வேண்டாம்’ என்றாள். ‘நல்ல ஒயின் மண்ணின் மாதவிடாய்குருதி போன்றது’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் அந்தச்சொற்களை தன்முன் நெளியும் வினோதமான புழுவைப்போல உணர்ந்தார். சுப்பு அய்யர் மெல்ல குடித்து ரசனையுடன் தலைசாய்த்தார். நாயக்கரும் எடுத்துக்கொண்டார்.

சட்டென்று ராமன் எழுந்து ‘அண்ணா நான் கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக்கறேன். கச்சேரிக்கு ஒக்காரணும். அவ்வளவு தூரம் பஸ்சிலே வந்தது’ என்றார். ‘சரிடா’ என்றார் சுப்பு அய்யர். பாலசுப்ரமணியன் எழுந்து ‘நானும் வர்ரேன்…’ என்று கூடவே வெளியே சென்றார். மாடிப்படி இறங்கும் போது இருமுறை ராமன் தயங்குவது போல இருந்தது. பாலசுப்ரமணியன் அலையும் எண்ணங்களில் இருந்து அந்த நுண் அசைவுகளால் கலைக்கப்பட்டார். ராமன் உடலுக்குள் என்னென்னவோ நிகழ்வது போல. கடைசிப்படியில் சட்டென்று நின்று திரும்பி ‘நீங்க வேணா அங்க ஒக்காந்து கொஞ்சம் பேசிண்டு வாங்கோ’ என்றார்

‘இல்ல, நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தேவலை’ என்றார் பாலசுப்ரமணியன். ராமனின் வேகம் அவரை ஆச்சரியப்பட செய்தது. மூச்சு திணறுபவர் போலிருந்தார். ராமன் ஒரு அடி எடுத்துவைத்துவிட்டு திரும்பி ‘இல்ல…போயி அவ இளிப்ப இன்னும் கொஞ்ச நேரம் பாக்கறது? மூஞ்சியிலேதான் வழியறதே’ என்றார். பாலசுப்ரமணியன் இப்போது அவரது வழக்கமான நிதானத்துக்கு திரும்பிவிட்டிருந்தார். உள்ளுக்குள் புன்னகை செய்தபடி ‘கொஞ்சம் வழிஞ்சாலும் தப்பில்லேன்னு தோணித்து. பரவால்ல.’ என்றார்

ராமன் வேகமாக உள்ளே சென்று திகைத்து நின்று, ‘எந்த ரூம்னு சொன்னான்?’ என்றார். ‘லெஃப்டுலே..அந்த சின்ன ரூம்’ ராமன் உள்ளே சென்று அப்படியே தரையில் படுத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் உள்ளே சென்று நின்று தன் ஜிப்பாவை கழட்டியபின் ஒரமாக சுருட்டிவைக்கப்பட்டிருந்த மெத்தையை பிரித்து போட்டு அமர்ந்துகொண்டார். ராமன் கண்ணைமூடிக்கொண்டிருந்தார். மாலை சரிந்துவிட்டதன் ஒலி மாற்றம் வெளியே கேட்க ஆரம்பித்தது. எல்லா குரல்களும் கொஞ்சம் உரக்க ஒலித்தன. சன்னலுக்கு வெளியே நின்ற மாமரம் சிலுசிலுத்துக்கொண்டிருந்தது.

ராமன் பெருமூச்சு விட்டார். பாலசுப்ரமணியன் ஏதும் பேசவில்லை. ராமனால் பேசாமலிருக்க முடியாதென்று அவருக்கு தெரியும். எதையும் தக்கவைத்துக்கொள்பவரோ திட்டமிடுபவரோ அல்ல. அவர் பேச ஆரம்பிக்கும் வரை பேசாமலிருக்க வேண்டும் என பாலசுப்ரமணியன் முடிவுசெய்தார். ஒரு சின்ன உலுக்கல் போதும் ராமன் கொட்டித்தீர்ப்பார். ஆனால் அதுவரை கனத்து கனத்து நிற்கட்டுமே. அந்த வதையை அவருக்கு அளிப்பதைப்பற்றி பாலசுப்ரமணியன் மெல்லிய புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். ஆனால் சில கணங்களிலேயே பாவம் என்றும் பட்டது. எளிமையான அகம் கொண்ட பிறவிக்கலைஞன். எழுத்தையும் சங்கீதமாக்கியவன். அவரைச் சற்றும் சீண்டாமல் அவரது அந்த மனநிலையை சென்று தொடும் சொற்றொடரை பாலசுப்ரமணியன் உடனே கண்டுகொண்டார்.

‘என்ன உங்காளு இவ்ளவு நல்லா இங்கிலீஷ் பேசறார்?’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் புரண்டு படுத்து நம்பமுடியாத உற்சாகத்துடன் ‘பாத்தேளா, என்ன மாதிரி பேசறார்னு? எப்பவோ சட்டுனு இங்கிலீஷ்லே ஒரு ருசி வந்திட்டுது. வாசிக்க ஆரம்பிச்சார். இண்டு நியூஸ் வாசிச்சவர் ரெயினால்ட்ஸ் நாவல் வாசிச்சு அப்டியே எல்லாத்தையும் வாசிக்க ஆரம்பிச்சார். பிரிட்டிஷ் ரொமாண்டிக் கவிதைகள் மேலே அப்டி ஒரு ஈர்ப்பு. பேச ஆரம்பிச்சா பேசிண்டே இருப்பார்….தமிழிலே கூட நெறைய படிச்சிருக்கார். மௌனிய நன்னா தெரியும்….புதுமைப்பித்தந்தான் அவரோட ஃபேவரைட். மௌனி சும்மா கமகத்த வச்சு வெளையாடறாண்டா, பிள்ளைவாள்தான் அடிவயத்து தீய சங்கீதமாக்கினவன்னு சொல்லுவாரு. குபரா துக்கடாவுக்குத்தான் லாயக்கும்பார்’

‘நீங்க?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நான் என்னமோ நல்லா எழுதறதா சொல்றார். நான் சங்கீதம் பத்தி எழுதறதெல்லாம் சும்மா வேஷம்னு நெனைக்கிறர். என்னோட எடம் செக்ஸுதானாம். அதை எங்கிட்டே இருந்தே மறைக்கிறதுக்கு நான் சங்கீதத்த வச்சுண்டிருக்கேனாம். எல்லாம் தாசிகள் சாமி கும்புடறத மாதிரியாம்..’ ராமன் உரக்கச்சிரித்தார்.

’அப்டி இல்லே…அப்ஸ்டிராக்கை எழுதறது எல்லா நல்ல ரைட்டருக்கும் ஒரு சவாலா இருந்துண்டிருக்கும். அதுக்கு ஒவ்வொருத்தரும் ஒண்ணை வச்சுண்டிருப்பா. சிலபேர் இயற்கைய வர்ணிப்பா. சிலபேரு சமையலை வர்ணிப்பா. நீங்க இசைய சொல்றேள்…’ என்றார் பாலசுப்ரமணியன். ‘அப்டீங்கறீங்களோ?’ என்றார் ராமன் . அவருக்கு அது புரியவில்லை என்று பாலசுப்ரமணியன் நினைத்துக்கொண்டார்.

பேசுவதற்கான மனநிலையை ராமன் உருவாக்கிக்கொண்டார் என்று அவரது முகம் காட்டியது. எவ்வளவு எளிமையான மனிதர் என்று பாலசுப்ரமணியன் வியந்துக்கொண்டார். ‘சந்திரா என்ன பொடவ கட்டிண்டிருந்தா பாத்தேளா?’ என்றார் ராமன். பாலசுப்ரமணியன் ‘ம்ம்’ என்றார். ’மயில்கழுத்து நீலம். அதான் அவளுக்கு புடிச்ச நெறம். அவ கலருக்கு அது எடுப்பா இருக்குல்ல? டைமண்ட்னாகூட நீலம்தான். நீலத்திலே என்னமோ ஒரு மர்மம் இருந்துண்டே இருக்குன்னு சொல்லுவா. நீலத்த கொஞ்ச நேரம் பாத்துண்டே இருந்தா மனசு மயக்கம் அடைஞ்சிரும்னு ஒருவாட்டி சொன்னா. சரியான்னு பாக்கறதுக்காக ஒருநாளைக்கு நீலப்பட்டுப்பொடவைய எடுத்து வச்சு ராத்திரி லைட்டு போட்டு பாத்துண்டே இருந்தேன். என்னன்னே தெரியலை, திடீர்னு ரொம்ப பயந்துட்டேன்’

பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘நீங்க அவளப்பாத்து மயங்கிட்டீங்க தானே?’ என்றார் ராமன். ‘இல்லே’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நீங்க இதிலே மட்டும் ஒருமாதிரி பம்மறேள். உங்ககிட்ட இருக்கிற கம்பீரமே போய்டுது’ என்று ராமன் சிரித்தார். பாலசுப்ரமணியன் புன்னகை செய்தார். ‘நீங்க இல்லே, யார் அவளைப்பாத்தாலும் ஒருமாதிரி ஆயிடறாங்க. நான் எத்தனை பேரை பாத்திருக்கேன். அது அவளுக்கும் நல்லா தெரியும். நானே அவள பாத்த அன்னிக்கு கிறுக்கன் மாதிரி அவபின்னாடியே போய்ட்டிருந்தேன். இப்ப கூட அந்த நாள் நல்லா நெனைவிருக்கு. என்ன ஆச்சரியம்னா அந்த நாளிலே என்ன பாத்தேன் எங்க போனேன் ஒண்ணுமே நினைவில்லை. அவளோட முகமும் உடம்பும் மட்டும் தான் ஞாபகம் இருக்கு. அந்த நாளே அவளா ஆயிட்டுது….ஆச்சரியமா இல்ல?’

‘இதிலே எல்லாம் ஆச்சரியப்பட்டா முடியுமா?’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன்சட்டென்று எழுந்தமர்ந்து ‘ஒண்ணு சொல்றேனே பாலு. அவ சாதாரண மனுஷி இல்லை. அவளுக்குள்ள ஒண்ணு இருக்கு. அது விஸ்வாமித்திரரை வசியம் பண்ணின மேனகையோட அம்சம்னு நேக்கு தோணியிருக்கு. எப்டி சொல்றது… வார்த்தையே நிக்க மாட்டேங்குதே. ஒரு விஷயத்திலே இருந்து ஆரம்பிக்கிறேனே. இப்ப, அவ உங்க கிட்ட கட்டைக்கொரலிலே பேசினாளே. அது அவ நெஜக்கொரல் இல்லை’ அது பாலசுப்ரமணியனை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது.’அவ கொரல் ஒண்ணும் நல்லா இருக்காது. ஆனால் கட்டைக்கொரல் இல்லே. சாதாரணமான பொம்புளைக்குரல். வேணும்னேதான் முதல்ல பேசுறப்ப அப்டி பேசறா’

‘எதுக்கு?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘நானே அதை ஆயிரம் வாட்டி யோசனை பண்ணியிருக்கேன். அவளை பாத்தேல்ல. அழகு. கைகால்முகம் கழுத்து கன்னம்னு ஒரு கொறை இல்ல. பஞ்சலோகத்திலே அந்தக்காலத்திலே வடிச்சு வச்சிருப்பாங்களே…தஞ்சாவூர் அரண்மனையிலே அழகான சிவகாமி செலை சிலது இருக்கு. சின்னப்பொண்ணு மாதிரியும் இருக்கும், கொப்பும்கொலையுமாகவும் இருக்கும். அதேமாதிரி… அதைத்தான் ஆம்புள பாக்கறான் . அவன் மனசு பிரமிச்சுப்போயிடுது. அந்த மயக்கத்திலே இருக்கறச்ச அவ கட்டைக்குரலிலே சாதாரணமா பேச ஆரம்பிச்சிடறா. அவன் மனசிலே இருக்கற சொப்பனம் கலைஞ்சிடுது. அவன் சாதாரணமா பேச ஆரம்பிக்கிறான். அப்ப அவ ஒரு சகஜமான பிரியத்த உண்டு பண்ணிக்குவா.’

ராமன் அதே வேகத்துடன் தொடர்ந்தார் ‘ஆனா அது மட்டும் இல்ல பாலு. அந்த கொரல் அப்டி இருக்கிறது நம்மள படுத்திண்டே இருக்கு. இப்ப மச்சம்லாம் அப்டித்தான், பாருங்க, ஒரு நல்ல சருமத்திலே மச்சத்தை பாத்த முதல் கணம் நமக்கு ஒரு சுளிப்புதான் வருது. அது ஒரு கறைதானே. ஆனா அதில நம்ம மனசு பதிஞ்சிடுது. முத்துச்சிப்பிக்குள்ள மணலு மாட்டிண்டா முத்து அதை நெரடி நெரடிபபத்து ஒண்ணும்பண்ண முடியாம முத்தா ஆக்கிருதுல்ல? அதே மாதிரித்தான் மச்சத்தையும் பாத்துப் பாத்து அழகா ஆக்கிண்டுடுவோம். அதே மாதிரித்தான் இவ கொரலும்…நீங்க இப்ப அவ கொரலை மட்டும்தானே நினைச்சுண்டிருகறேள்?’

பாலசுப்ரமணியன் பிரமித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஆமான்னு சொல்லேன். என்ன இப்ப’ என்று ரகசியமான குதூகலத்துடன் கேட்டார் ராமன். ‘சரீன்னு வச்சுக்குங்க’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன் சட்டென்று அந்தரங்கமாக ஆகி ‘ டேய், ஒனக்கும் குஞ்சுன்னு ஒண்ணு இருக்கு. ஒத்துண்டா ஒண்ணும் கொறைஞ்சிர மாட்டே ’ என்றார் . சிரித்துக்கொண்டு. ’அவ எதுக்கு என்னை கவர நெனைக்கணும்?’ என்றார் பாலசுப்ரமணியன். ’உன்னை மட்டுமில்லே. உலகத்திலே இருக்கிற எல்லா ஆண்களையும் அப்டித்தான் கவரணும்னு நெனைப்பா. அவளோட மனசு அப்டி. எதுக்குன்னா காந்தம் ஏன் இழுக்குதுன்னு கேக்கிறாப்ல. அதோட நேச்சர் அதானே…’

‘அது எல்லா பொண்ணுகளிட்டேயும் உண்டு. சின்னப் பொண்கொழந்தைங்க கூட அட்ராக்ட் பண்ண முயற்சிபண்ணும். என்னன்னு தெரியாமலே அப்டி செஞ்சிட்டிருக்கும்’ பாலசுப்ரமணியன் சொன்னார். ‘இது அப்டி இல்லே. இவளுக்கு ஜெயிச்சாகணும். ஒலகத்து ஆம்பிளைகளை முழுக்க ஜெயிச்சாகனும். ஆனாபணமும் அதிகாரமும் வச்சிண்டிருக்கவன்லாம் அவளுக்கு ஒருபொருட்டே கெடையாது. அவளுக்கு வேண்டியது கலைய மனசிலே வச்சிண்டிருக்கவன். அவ எத்தனை தாவினாலும் தொட முடியாத ஒண்ணை எங்கியோ நின்னு வச்சு வெளையாடிண்டிருக்கிறவன்…’

‘ஏன் அவளும் கலையிலேதானே இருக்கா?’. ‘இந்தாபாரு பாலு, அவ பெரிய இவ. எங்கயும் போவா. எவர்கிட்டயும் பேசுவா. இங்கிலீஷ் பயங்கரமா பேசறா. கன்னாபின்னான்னு வாசிக்கறா. அதனால அவ போறதூரம் அதிகம். ருக்மிணு தேவி அருண்டேல விட மேலே போயிடுவா…ஆனா அவளால ஒருநாளைக்கும் உண்மையான கலைய நெருங்க முடியாது. வெளக்கு போட்டு பளபளன்னு துடைச்சு எடுத்து வெல்வெட்டில வச்சா கண்ணாடிக்கல்லு வைரம் மாதரித்தான் இருக்கும். ஆனா வைரம்னா அது நீரோட்டம் இல்லியா. நல்ல நீரோட்டம் காட்டுக்குள்ள ரகசியமா ஓடிண்டிருக்கிற ஓடை மாதிரின்னா…அவளுக்கு தெரியும் அவளால கலைய தொட முடியாதுன்னு…’

‘ஏன்?’ என்றார் பாலசுப்ரமணியம். ‘மடையா, அவமனசிலே ஈரம் இல்ல. அவ மனசுங்கிறது ஒரு தீட்டினகத்தி. அவ்ளவு கூர்மை, அவ்ளவு பளபளப்பு. ஆனா கலையிலே அந்த கத்திய வச்சுண்டிருக்கற அவளை வாழத்தண்ட வச்சுண்டிருக்கிற கோந்தை ஜெயிச்சுட்டு போய்டுது.நீ அலர்மேல்வள்ளி ஆட்டத்தை பாத்திருக்கேல்ல?’ ‘பாத்திருக்கேன்’ ‘அவளப்பாரு. அவளுக்கு ஒரு எழவும் தெரியாது. சுத்த மண்டு. பாக்கவும் டொங்கிடின்னு இருக்கா…மேடையிலே நின்னான்னா அந்த மாதவிதான் கண்ணுக்கு வாறா…’

பாலசுப்ரமணியம் பார்த்துக்கொண்டே இருந்தார் ‘என்ன நெனைப்பு? கலைன்னா என்ன சும்மாவா? டேய் எல்லா காலத்திலயும் பத்துபேரு கலைகலைம்பான். பத்துபேர ஆகா ஆகாம்ன்னு சொல்லும் கூட்டம். ஆனா கலை வேற எங்கியோ அதுபாட்டுக்கு இருந்துண்டிருக்கும்…வேற யாருக்கும் தெரியாட்டியும் அவளுக்கு தெரியும் அவ என்னன்னு. அதான்.’ ராமன் சட்டென்று சிரித்து கைக்குட்டையால் மோவாயை துடைத்தார். ‘பாடகர்கள புடிச்சு முழுங்கினா பாட்டு வரும்னு ஏதோ பூதம் டிரை பண்ணுச்சாமே…என்ன’ என்றார். பின் முகம் இறுகி ’இவளுக்கு எல்லாரையும் ஜெயிச்சாகணும். ஜெயிச்சு நம்ம மேலே ஒக்காரணும். சிவன் மார்பிலே கால வச்சுண்டு காளி நின்னுண்டிருப்பாளே அதே மாதிரி…’

‘இப்ப சுப்பு அய்யர் மேலே காலை வச்சுண்டிருக்காளா?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘வைக்க ஆசப்படறா. ஆனா அண்ணா வேற மாதிரி. அவருக்குள்ள வேற ஒரு கடல் இருக்கு. அந்தக்கடலிலே அடிக்கற அலையோட ஒண்ணு ரெண்டு துளியத்தான் கச்சேரிலே நீயும் நானும் கேக்கறோம். அதைப்பாத்துட்டு அவர நெருங்கமுடியாது. அவரு குடிச்சு கெட்டவார்த்த சொல்லி ஆட்டம்போட்டு ஒக்காந்திட்டிருக்கார். இவளுக்கும் குடிய பழக்கி விடுவார்…அதுக்குமேலே அவர யாராலயும் நெருங்க முடியாது. எவ்ளவு ஒட்டினாலும் அவருகிட்ட யாருமெ ஒட்ட முடியாது. அவருக்கு அன்பு,காதல் ஒரு இழவும் கெடையாது. அவரு இருக்கறது அந்தகடலுக்குள்ள ஒரு தீவிலே. அங்க எவனாலயும் போய்க்கிட முடியாது’

’ஆனா ஒண்ணும் சொல்லவும் முடியாது’ என்றார் ராமன் சற்று கழித்து. ‘அம்மணி அப்டிப்பட்டவ. அவளோட வேகமும் அப்டி. அவ யாரு எதுவரைன்னு சொல்லமுடியாது’ ‘அம்மணி யாரு?’ ‘அவதான்…நான் அப்டித்தான் அவள சொல்றது…’ ஓகோ’ என்றார் பாலசுப்ரமணியன். அவர் மனதில் இயல்பாக எழுந்த கேள்வியை யோசிக்காமல் கேட்டுவிட்டார். ’அப்ப உங்க மனசிலேயும் காலை வச்சாளா?’ என்றார்.

ராமன் சட்டென்று அமைதியானார். ஆழமான தத்தளிப்புகளுக்குள் அவர் செல்வது போல் இருந்தது. கேட்டிருக்கக் கூடாதோ என்று பாலசுப்ரமணியன் நினைத்துக்கொண்டார். அவரே தொடங்கட்டும் என்று காத்திருந்தார். ஆனால் ராமன்அப்படியே கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார். இமைகளுக்குள் கருவிழிகள் ஓடுவது தெரிந்தது. வெளியே விளக்குகள் போட்டு விட்டார்கள். ஒலிப்பெருக்கி சத்தம் கேட்க ஆரம்பித்தது. விளக்கொளி வேப்பமரத்தின் இலைகளை நிழல்வலையாக ஆக்கி அறைக்குள் அசையச்செய்தது

சாமிநாதன் வந்து நின்று ‘அண்ணா கெளம்பறேளா…நேரமாச்சு’ என்றார். ‘சுப்பு அண்ணா கெளம்பியாச்சாடா?’ என்றபடி ராமன்எழுந்தார். ‘நல்ல கதை. அவரு இந்நேரம் கோயிலிலேன்னா இருப்பாரு’. ராமன் எழுந்து சட்டையை கழற்றியபடி கவனமில்லாமல் கேட்பதுபோல ‘அவளும் உண்டோ?’ என்றார். அரைச்சிரிப்புடன் சாமிநாதன் பார்வை வந்து பாலசுப்ரமணியனை தொட்டுச்சென்றது. பாலசுப்ரமணியன் புன்னகைசெய்ய சாமிநாதனும் புன்னகை செய்தார். ‘என்னடா ஒரு இளிப்பு, பீயப்பாத்த பண்ணி மாதரி?’ என்று ராமன் எதிர்பாராமல் சீறினார். ‘என்னண்ணா நீங்க? எங்கியோ சீறவேண்டியத எங்கிட்ட சீறுறீங்க? பேசாம வாங்க. பாட்டுகேக்க வந்திருக்கேள். கேட்டுண்டு போங்கோ. அண்ணா இன்னைக்கு நல்ல ஃபாமிலே இருக்கார்’

ராமன் ‘அந்த தேவ்டியா மிண்டை கூட இருக்காளோல்லியோ, ஃபாமிலேதான் இருப்பாரு..’என்றவர் சட்டென்று தன் பையை எடுத்து ‘டேய் எனக்கொரு குதிரவண்டிய புடிரா. நான் கெளம்பறேன்’ என்றார். ‘என்ன இப்ப? இவளவுதூரம் வந்துட்டு போனா அண்ணா என்ன நெனைபபார்?’. ‘அவரப் போயி எருமயப் பண்ணச்சொல்லு…நான் போறேன்’ பாலசுப்ரமணியன் அதென்ன புதியவசவாக இருக்கிறதே என்று பாலசுப்ரமணியன் புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். சாமிநாதன் உரக்க ‘அண்ணா பைய வைங்கோ…வைங்கோ சொல்றேன்’ ‘டேய் தள்ளுரா’ ‘இப்ப வைக்கல்லே…  புடிச்சு இழுத்துண்டு போயிடுவேன்…நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கே தெரியும்..வைங்கோ அத’

ராமன் பையை வைத்தார். ‘பேசாம சட்டைய மாத்துங்கோ. குளிக்கறதுக்கு நேரமில்லை. கச்சேரி இப்ப ஆரம்பிச்சிரும்..’ என்ற சாமிநாதன் ‘கோயில் போறேளா?’ என்று பாலசுப்ரமனியனிடம் கேட்டார்.பாலசுப்ரமணியன் ‘அப்றமா போறமே..இப்ப ஒரே கூட்டமா இருக்குமே’ ராமன் பரிதாபமாக ‘டேய் நேக்கு தவிக்கறதுடா…நான் வரல்லை’ ‘நீங்க வரீங்க’ என்று உறுதியாகச் சொன்னார் சாமிநாதன். ‘அப்டிச்சொல்றயா?’ என்று தஞ்சாவூர்த்தனமாக இழுத்தார் பாலசுப்ரமணியன் . எழுந்து சட்டையைஎடுத்து ‘உச், சட்டையிலே ஒரே கரப்புருண்ட வாசம். சொன்னா கேக்க மாட்டா’ என்றார். சட்டையை மாட்டிக்கொண்டு ’மூஞ்சிய மட்டும் அலம்பிண்டு வரேன்’ என்று போனார்

‘அது மன்னார்குடிப்பக்கம் ஃபேமஸான வசவு. குடியானவங்க சொல்றது. அக்ரகாரத்திலே ரொம்ப லோக்ரேடு வசவே இதவிட சிக்கிரிஸ்டிராங்கா இருக்கும்’ என்றார் சாமிநாதன் ‘நீங்க சட்டை மாத்தலையா?’ ‘நான் அப்பவே மாத்திண்டேனே .சந்திரா இங்க இருக்கறது உங்களுக்கு தெரியாதோ?’ என்றார் பாலசுப்ரமனியன்.

‘இல்லண்ணா …தெரிஞ்சா இவர வரச்சொல்லியிருக்க மாட்டேன். ரொம்ப கஷ்டப்படுறார். ஆனால் நல்லா நாலஞ்சு அடிகிடைச்சு முறிஞ்சுபோனாக்கூட நல்லதுதான்…’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அப்டி போய்டாது. அவளப்பத்தி ஒரு நாவலாவது எழுதாம ஆறாது’ என்றார்

’நாய் மாதிரின்னா வாலச்சுழட்டிண்டு பின்னால அலைஞ்சர். அன்னைக்கு தலையிலே அடிச்சுக்காத ரைட்டர்ஸே இல்ல. கரிச்சான்குஞ்சு என்னைக்கூப்பிட்டு டேய் அவன் பிறவிரைட்டர்டா. அவனுக்கு வெக்கமும் பயமுமா ஆத்தாம கெடக்கு. துணிஞ்சு ஒரு நாலஞ்சு தாசிகளண்ட கூட்டிண்டு போ. தெளிஞ்சுட்டுதுன்னா இடுப்புக்குமேலே யோசிக்க ஆரம்பிப்பான்னார். என்ன சொல்றேள்?’ . பாலசுப்ரமணியன் உரக்கச்சிரித்தார். ‘என்னண்ணா சிரிக்கறேள்?’

‘இல்ல சாமிநாதன், இதயெல்லாம் சொல்றது கஷ்டம். இப்ப இது இடுப்புக்குக்கீழெ ஒரு தொளைக்கும் குச்சிக்குமான விஷயம்தான் அப்டீனா எதுக்கு இவ்ளவு சங்கீதம், இவ்ளவு கவிதை, இவ்ளவு கலை? மனுஷனுக்கு இது ஒரு மீடியம் மாதரி. இது வழியா அவன் எங்கியோ போறதுக்கு டிரை பண்றான். இது ராவணன் கோட்டையா மாறி சுத்திச்சுத்தி அடிக்குதே ஒழிய வழிகாட்டற மாதிரியும் தெரியல்லை. இவருக்கு செக்ஸ் பிரச்சினையே இல்லை. இது வரை இவரு எங்கிட்ட செக்ஸ் பத்தி ஒரு வார்த்தை பேசினதில்லை. பொம்பிளைங்களப்பத்திக்கூட ஒரு வார்த்தை பேசினதில்லை’

‘ஆச்சரியமா இருக்கே…அதைப்பத்தி மட்டும்னா பேசுவர்?’ ‘பேசுவார்…ஆனா பொம்பிளைங்களப்பத்தி இல்ல, அவங்களோட அழகப்பத்தி. திரும்பத்திரும்ப அழகுதான். அவரு செக்ஸுக்கு அடிமை கெடையாது. அழகுக்கு அடிமை. அவரு என்னதேடுறாருன்னு அவருக்கே தெரியாது. ஆனா தேடிண்டே இருக்காரு’ என்றார் பாலசுப்ரமணியன் . ‘ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா நீங்க சொன்னது சரிதான்…பித்துபிடிச்சு அலைவர். ஆனா அத்து மீறவும் மாட்டார். வரார்னு நெனைக்கறேன்’

[மேலும்] தொடர்ச்சி இங்கே

முந்தைய கட்டுரையானைடாக்டர், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமயில்கழுத்து [சிறுகதை] – 2