சகடம் -சிறுகதை விவாதம் – 4

நக

 ஒரு சிறுகதை விவாதம்

அன்புள்ள ஜெ,

நலம் விழைகிறேன்.

நண்பர் நாகபிரகாஷ் எழுதிய கடிதத்தை வாசித்தேன். முதலில் விமர்சனங்களால் அவர் ஏன் தன்னை இவ்வளவு சிக்கலாக்கி கொள்ள வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது. அவர் கருத்தை இரு விதத்தில் நான் நிராகரிக்கிறேன்.

ஒன்று நிங்கள் எனக்கு புதிய வாசகர் சந்திப்பில் சொன்னது நியாபம் வருகிறது என் கதையை படித்துவிட்டு ஒரு டால்ஸ்டாய் வாசகனக்கு நீ தரும் கதையா இது என்றீர்கள். இல்லையென்று மழுங்க மண்டையை ஆட்டினேன். அதிலிருந்து ஒன்று புரிந்துக்கொண்டேன் விமர்சனம் பெருகிறோமென்பதை விட அதே யாரிடமிருந்து வருகிறது என்பது மிக முக்கியமான ஒன்று. அவ்வாறு ஒரு நல்ல வாசக ஆளுமை இவர் கதையை விமர்சனம் செய்திருந்தால் கூட நீங்கள் எனக்கு முடித்துவைத்ததை தான் அவருக்கும் சொல்வேன் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளவும் மனம் தளர வேண்டாமென்றீர்கள். அந்த சந்திப்பிற்கு முந்தைய கடிதத்தில் சு.ரா எப்படி கடுமையாக விமர்சிப்பவர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், நித்யா ஒரு மேடையிலலேயே உங்கள் கட்டுரையை கிழித்தை சொன்னீர்கள் அதிலிருந்தே ஜெயமோகன் என்னும் ஆளுமை வெளி வந்துள்ளது என்பது ஊர் அறிந்தது. ஆகையால் விமர்சனங்களை கணக்கில் கொண்டு எழுதியதெல்லாம் மூட்டை கட்டி விட்டு படிக்கலாம் என யோசிப்பது சரியில்லை. எழுத எழுதவே பண்படுவோம் நீங்கள் எனக்கு சொன்னது.

இரண்டு சுமாரான கதைகள் பல கொண்டாடப்படுகிறது என அவர் கூறுவதை முற்றும் நிராகரிக்கிறேன். அது நமக்கு எந்த சூழலிலும் தேவையில்லை என்றே நினைக்கிறேன் நாம் எழுதுவது நமக்காக மட்டுமே இரண்டாம் நிலையிலேயே விமர்சனங்களை வைக்க வேண்டும். ஆனால் இலக்கியத்தில் ஒப்பிடுவதற்கு எந்த வித இடமுமில்லை முதலில் திருப்தி பெற வேண்டியது நாம் தான் அதன்பின் செவி சாயிக்க வேண்டியது நம் கதைக்கான விமர்சனத்தை மட்டுமே.

இக்கதையை பொருத்த வரை அவர் எடுத்த ஒரு வித்தியாசமான முயற்சி என்ற நான் நினைக்கிறேன். புதுமைபித்தன் முதல் அனைவரும் எடுத்துக்கொண்ட தீம் தான், எனக்கு உங்கள் பல்லக்கு கதை நியாபகம் வந்தது. ஆதலால் கதை கூறும் முறையிலும் அதனை எடுத்து செல்லும் விதத்திலும் ஒரு மாற்றத்தை வேண்டியிருக்கிறார் நாகபிரகாஷ். ஆனால் கதையின் மைய சரடிலிருந்து அப்பப்போ விலகயே சென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கதையின் மைய ஒட்டத்திலிருந்து விலகியே யோகாசனமும் திவாகரன் உடனான உரையாடலும் அமைகின்றன. அதை தவிர்த்து வாசிக்கையில் ஒரு நல்ல கதைக்கான முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன்.

மேலும் பல நல்ல படைப்புகள் நாகப்பிரகாஷிடமிருந்து விரைவில் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

ஜெ

சகடம் கதை பற்றி…

முதல் வாசிப்பு:

அமுதனின் பார்வையில் கதை தொடங்குகிறது.  அங்கங்கே  அவன் பங்கு பெறாத காட்சிகள் கதைச்சொல்லியின் பார்வையில் வருகின்றன. கதையில் இறுதியில் கதைச்சொல்லியின் பார்வையில்  ஒரு flashback காட்சி. ஒரு தருணத்தில், ஒரு வாசகத்தில் கதை முடிகிறது.

முதல் வாசிப்பில், அந்த நினைவு அமுதனின் பார்வையில் விரிவதில்லை என்பதை கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் இந்த கதையை எளிதில் கடந்து சென்றிருப்பேனோ என்னவோ!

நாயை ஒருவர் அடிப்பதில் இருந்து, தன்னைதானே ஒருவர் வருத்திக்கொள்வது (தீவிர யோகா)  வரை மற்றவர்களின் செயல்கள், காட்சிகள் மற்றும் அதற்கு தனது மனதின் எதிர்வினைகள் பற்றி அமுதன் கூறி வருகிறான். ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடும் என நான் உருவகிக்கும் சிறுவனின் அவதானிப்புகள் கொஞ்சம் பெரிய மனுஷ தனமாக இருக்கின்றன. கூர்ந்து நோக்கும் தன்மை உடைவனாகவும் இருக்கிறான். (கடையின் அமைப்பு போன்றவற்றை நுனுக்கமாகவே கவனிக்கிறான்). இப்படி இருப்பவன், ஏன் கடைசியில் தனது தாயை பற்றி பேசி முடிக்கிறான்?? வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த முதல் கேள்வி இதுதான்.

எண்ணங்கள்:

ஒரு நல்ல சிறுகதை, கதை முடிந்த பின்பும், வாசகனின் மனதில் நிகழ்ந்துகொண்டிருப்பது. கதையப்பற்றி, கதை மாந்தரின் வாழ்க்கையை பற்றி வாசகனை யோசிக்க வைப்பது.

இந்த கதையின் முடிவு, அதிர்ச்சி அளித்தாலும், அதிர்ச்சி அளிக்க வேண்டுமென வலிந்து திணிக்கப்படவில்லை.

கதை நிகழ்வதே அங்கு தான். அதுவரை அமுதன் பற்றி, பரமேஸ்வரன் பற்றி நாம்முள் எழுந்த பிம்பங்கள் அனைத்தும் உடைந்து, அனைத்தையும் புதிதாக பார்க்க நேர்கிறது. பல கேள்விகளுடன். இரண்டு நாட்களாக இந்த கேள்விகள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது, தோண்றிய சில எண்ணங்கள்:

1) அவனது அம்மா எங்கே? உயிரோடு இருக்கிறாளா?

பரமேஸ்வரனின் வீட்டில், அவனது நிலையை புரிந்துக்கொள்ளும் வயதில் யாரும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? அவனது மனைவி இருந்தால், அவளுக்கு புரியாதா என்ன?

கிடைக்காமல் கிடைத்த ஐந்து ரூபயை ஏன் செலவழித்து அமுதனை கடைக்கு கூட்டிச்செல்ல வேண்டும்? வீட்டில் அவனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையா?

2) நாயை ஒருவன் உதைப்பதை பார்த்து அமுதன் ஏன் தலையை அடைத்து, கண்களை மூடிக்கொள்கிறான்? Was he abused? Did he see others get abused? Is his father abusive?

3) அம்மா மயங்கி விழுந்தவுடன் ஏன் அங்கிருந்து ஓடிவிட வேண்டுமென எண்ணுகிறான்? பரமேஸ்வரன் மேல் ஏன் கோவம் கொள்கிறான்?

கேள்விகளை மனதில் இருத்தி, இரண்டாம் வாசிப்பு:

இதில் முதல் வாசிப்பின் கேள்விகள் கூர் கொள்ள வில்லை. இந்த கேள்விகள் குறித்து முதல் வாசிப்பில் தவறவிட்ட தகவல்கள் / குறியீடுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இரண்டாம் வாசிப்பில், பிரதானமாக வந்தது, பரமேஸ்வரனின் கை. கொஞ்சம் பருமனானவர். மெல்லிய கைகள் கொண்டவர். ஆனால் பலமற்றவர்.

//அந்தக் கைகள் நெகிழ்வாக விரிந்து வருவதை உணர்ந்தார். ஒருவேளை இப்படிக் கைகள் முயன்றபோது நீண்டிருந்தால் பணத்தைத் தொட்டுவிட்டிருக்கலாம் என்று தோன்றியது. //

இது பரமேஸ்வரனின் கைகளாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது.

தந்தையின் பலமற்ற கைகளை பார்த்த அமுதனை, திவாகரனின் திடமான கைகள் ஈர்க்கின்றன. அதற்கான காரணத்தையும் கடைசி காட்சியில் சொல்லிவிடுகிறார் கதைச்சொல்லி.

பரமேஸ்வரனின் பாத்திரம், இந்த வாசிப்பில் உருவாகி வந்தது.

விமர்சனம் / அவதானிப்பு: 

கதையை இப்படி எழுதியிருக்கலாம் என கூறுவது சரியல்ல என எண்ணுகிறேன். எழுதிய கதையை அப்படியே ஏற்றுக்கொண்டு எனது எண்ணங்கள் மட்டும்:

1) சிறுகதையின் ஒருமை (unity) 

இந்த கதையில் ஒருமை இருப்பதாக எண்ணி வாசிக்கும் பொழுது, தொடக்க பகுதியில் நாயின் பார்வையில் இவ்வாறு தெரியும் என அமுதன் எண்ணுவதாக புரிந்துக்கொண்டு, அந்த வர்ணனையை அமுதனின் கதாபாத்திரத்துடன்

இணைத்துக்கொள்கிறேன். இது மட்டுமல்ல, கதையில் வரும் அதீத தகவல்கள் அனைத்துமே அமுதனின் பார்வையில் தான். அதை கொண்டு அவனை உருவகிக்கிறேன்.

//சுவரை ஒட்டி வைத்திருக்கும் அலமாரி. வெளியிலிருந்து கைநீட்டினாலும் எட்டாது. இருந்தாலும் பூட்டப்பட்டிருக்கும்.//

சிறுவன் இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம்.

ஆனால் கடைசியில் அம்மாவை தூக்கிச்செல்லும் பொழுது, இவன் வீட்டிற்கு கொண்டி போட்டுவிட்டு தான் செல்கிறான்.

ஆக, இந்த உபரி தகவல்களின் ஊடே அமுதனை புரிந்துக்கொள்ளளாம்.

ஆசிரியரின் எண்ணம் அதுவாக இல்லை என்றால், அந்த பகுதிகள் கதையில் வர வேண்டிய அவசியத்தை அவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

1a. நான் அடைந்த கேள்விகள், என்னுள் அடைந்தவை. ஆசிரியர் முன்வைக்க விரும்பும் கேள்வியை குறித்து கதை நகர்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். அந்த கேள்வியை நோக்கி செல்ல, இவ்வளவு துணை பாதைகள் அவசியம் என அவர் எண்ணினால், தவறேதும் இல்லை.

ஆனால், அதை தாண்டி, கதைபோக்கிற்கு அவசியமற்றதாக இருப்பதை கண்டிப்புடன் நீக்க வேண்டியதும் ஆசிரியனின் கடமை.

//எனக்கு கொஞ்சுவதற்கு எங்கள் தெரு வழியே போகிற நாய்க்குட்டிகளும் பூனைகளும் தேவைப்படுவது போலவே அம்மாவுக்கு நான் வேண்டும்.//

கதையில் உருவாகிவரும் அமுதனின் கதாபாத்திரத்திற்கும் இந்த வரிக்கும் சம்பந்தம் இல்லை. வாசகனாக, அதையும் உள்ளிழுத்து அமுதனை உருவகிக்க வேண்டியுள்ளது.

இது, ஆசிரியரின் குரலா, ஆசிரியரின் அவதானிப்பா, அல்லது நிஜமாகவே அமுதனின் எண்ணமா?

அம்மா, பாசம், கொஞ்சுதல் போன்றவற்றை இவ்வளவு லௌகீகமாக அந்த வயதிலேயே அவன் பார்க்கிறான் என்றால், அவன் எதையெல்லாம் கடந்து வந்திருப்பான்?!

இதை எத்தனிக்காமல், அமுதனின் குரலாக இல்லாமல், அழகியலுக்காக / தத்துவமாக ஆசிரியர், அவரின் எண்ணமாக இதை அங்கு எழுதியிருப்பார் என்றால், அது கதைக்கு செய்யும் அவமதிப்பு.

முடிவு செய்ய வேண்டியது ஆசிரியர் மட்டுமே.

வாசகனாக, இதில் உள்ள அனைத்து தகவல்களும் ஒரே முடிச்சை நோக்கி என்றுக்கொண்டால், பரமேஸ்வரனின் குணங்களையும், அமுதனின் செயல்களையும் இனைக்கும் வாசக இடைவெளி, அடிகோடிட்டோ, குறிப்புணர்த்தியோ கூட பேசப்படவில்லை. அவர்களிடையே ஒரு விலக்கம் இருப்பதாக தோன்றினாலும், கடையில் நடப்பதை அவன் அப்பாவிடம் கூறுகிறான். வாசகனாக, என்னால், கதையை ஒரு புள்ளியில் ஒன்றுதிரட்ட இயலவில்லை. (சிறுகதைக்கு அது அவசியமல்லவா?).

அது, வாசகனின் பிரச்சனை, நான் கூற வேண்டிய அனைத்தும் கதையில் ஏற்கனவே உள்ளது என்று திடமாக சொல்ல இயலுமா என ஆசிரியர் முடிவு செய்யட்டும்.

2) மொழிப்பிரச்சனைகள்:

பல இடங்களில், மொழி சரியாக கையாளப்படவில்லை.

அ) என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் ‘யோகா’ என்றார். என் முகத்தில் ஆச்சர்யத்தை கவனித்திருப்பார். ஏதேனும் நான் சொல்வேன் என்று காத்திருந்தார். அமைதியாக அவரை கவனித்தேன்.

எதிர்மறை.

ஆ) எனக்கும் அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது. இப்போதுதான் நான். சில வாரங்களாக மட்டுமே.

எனக்கு அர்த்தம் ஏதும் தராத பாதி வாக்கியங்கள்.

இ) அவரோடு எனக்குத் தெரிந்த ஆசனங்கள் குறித்துப் பேசினேன். செய்து காட்டுகிறேன்.

கால பிரச்சனை.

ஈ) அவர் சட்டையில் வேர்வையும் உடலின் உப்பு வாடையும். அமுதன் ஆம்புலன்ஸ்காரரின் முதுகுப்பக்கம் நின்று தன் அம்மாவைத் தொடுவது போல இறங்கும்போதும் மேலே வந்து வீசியது.

நவீன எழுத்துமுறையோ?

உ) எப்போது கடன் வாங்கினோம் என்பது வீட்டில் எல்லாருக்கும் நினைவில் இருந்தது. அவர்கள் வந்து சேர்ந்த நேரத்தில் பரமேஸ்வரன் அன்றைய தினத்தை எப்படிச் சமாளிப்பது என்கிற குழப்பத்தில் கருந்தேனீர்க் குவளையை கையில் வாங்கியிருந்தார்.

இதில் முதல் வரி சொல்ல வருவது என்ன? அவ்வளவு அடர்த்தியான வரிக்கான அவசியம் என்ன?

ஊ) அவனை பேருந்திலும் ஏற்றிவிட்ட பின்னர் பேருந்து போன திசையிலேயே நடக்கத் தொடங்கினார்.

எதற்கு லும்!

எ) மிச்சமிருந்த சில்லரையைப் தேடி எடுத்துக்கொண்டு பையில் பெட்டிகள்

ஒற்று.

அன்பு நாகபிரகாஷ், அனைவருக்கும் புரியவோ, அனைவரும் ஏற்கவோ கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

கலையில் உச்சம் நோக்கி பயணிக்கிறோமா என்று மட்டும் நோக்கவும். உச்சம் தொட்டவர்களை வாசித்து, உச்சம் என்றால் என்ன என்பதையும் நீங்களே வகுத்துக்கொள்ளவும்.

விமர்சகர்கள் ஏற்க்கவில்லை என எழுத்தை மூட்டை கட்டி வைப்பது தவறான முடிவு.

எழுதுங்கள். உங்களுள் உள்ள விமர்சகனை முதலில் திருப்தி படுத்துங்கள். உங்களை கராரான விமர்சகனாக வளர்த்துக்கொள்ளுங்கள். அவனது எண்ணம் மட்டுமே பொருட்படுத்தபட வேண்டியது.

அன்புடன்,

லாஓசி.

அன்புள்ள ஜெ…

சகடம் கதை வாசித்தேன்,..

கதை எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதை எழுதிவரின் முயற்சி நேர்மையானது என தோன்றுவதால் என் பார்வையை பகிர விழைகிறேன்..

கதையின் நல்ல விஷயங்கள் சில உள்ளன.. நல்ல வாக்கியங்கள்.. பூடகத்தன்மை.. நடை.. சில விஷயங்களை வாசகனின் யோசிப்புக்கு கொடுத்து விடும் எழுத்து என வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன

ஆனால் கதை என்ற அம்சம் கைகூடவில்லை என்றே தோன்றுகிறது

பிரத்யேகமான அனுபவம் , பிரத்யேகமான தரிசனம் , கவரும் வாக்கிய அமைப்புகள் என எதுவும் இல்லாமல் , ஒரு சராசரி அனுபவத்தை , ஒரு சராசரியான பார்வையில் சொல்லும் பிரதியாக இருக்கிறது

சராசரி சம்பவத்தை எழுதக்கூடாதா என்றால் அப்படி அல்ல… எழுதலாம்.. அன்றாட சம்பவங்களை வைத்து அசோகமித்திரன் எத்தனையோ நல்ல கதைகள் தந்து இருக்கிறார்…

சாதாரண விஷயத்தில் அசாதாரண தரிசனங்களை காணும் சிறந்த கதைகள் இருக்கின்றன.. அசாதாரண விஷ்யங்களை சாதாரணமாக காணும் பாத்திரங்களை சித்திரிக்கும் கதைகளும் உள்ளன.. ஆனால் சாதாரணமான ஒன்றை , சாதாரணமாக சொல்வதற்கு சிறுகதை தேவையே இல்லையே

சகடம் கதையின் பாராட்டப்பட வாற்ன்ஷயம் ,  திருகல் மொழி இல்லை என்பது… ஆனால் திருகல் நடை தேவையற்றதாக தோன்றுகிறது…

இப்படி ஒரு நடையில் எழுதிப்பார்ப்போமே என்ற ஆர்வம் தெரிகிறதே தவிர அதன் மூலம் வாசகனுக்கு கிட்டுவது எதுவும் இல்லை

ஆனாலும் விளையாட்டுத்தனமான முயற்சி என்று இல்லாமல் ஒரு தீவிரம் தெரிகிறது என்பது பாராட்டுக்குரியது.. இதே கதையை வேறு விதமாக எழுதிப்பார்ப்பது நல்ல பயிற்சியாக இருக்கும் என கருதுகிறேன்

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள ஜெ

நாகப்பிரகாஷின் கதையை வாசித்தேன். அவருடைய கடிதம்தான் எனக்கு மேலும் சுவாரசியமானதாகப் பட்டது. அவர் தன் கதையை பிறர் புரிந்துகொள்ளவில்லை என்கிறார். சுமாரான கதைகள் கொண்டாடப்படுகின்றன என்கிறார். என்ன எழுதுவது என்று பிரமிக்கிறார். இதெல்லாமே தொடக்ககால எழுத்துக்களின் இயல்பு என நினைக்கிறேன். கொஞ்சம் மூத்த எழுத்தாளர்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தி.ஜானகிராமன் கொட்டுமேளம் தொகுதிக்கு எழுதிய முன்னுரையை நினைவுபடுத்திக்கொள்கிறேன். இதை வெளியிடும் கலைஞன் மாசிலாமணிக்கு டெல்லிக்குளிரில் இருந்து நம்பிக்கையும் ஆறுதலும் சொல்கிறேன் என எழுதியிருப்பார்.

எழுத்து ஒரு தொடர்புறுத்தும் கலைதான். அதன் வடிவம் என்று நாம் சொல்வதெல்லாம் அது தொடர்புறுத்துவதைப் பற்றித்தான். எழுதப்பட்ட கதை அக்கலைஞனின் மனதிலே என்னவாக இருந்தது என்பது வாசகனுக்குப் பொருட்டே அல்ல. அவன் வாசிப்பது மொழியில் என்ன வந்திருக்கிறது என்றுதான். அவன் அதை அர்த்தம்கொள்வது அந்தச் சொற்களில் இருந்து ஒரு வாழ்க்கையைக் கற்பனைசெய்துகொண்டு. அந்தக் கற்பனையை அவன் தன் வாழ்க்கையைக்கொண்டே செய்கிறான். ஆகவே ஒரு கதை அதை வாசிக்கிறவனுக்கும் எழுதுபவனுக்கும் பொதுவான ஒரு இடத்தைத் தொட்டு காட்டுகிறதா என்பது முக்கியமானது.

அதேபோல படிமங்கள். அவை எல்லாம் ஏற்கனவே மரபிலே ஆழத்தில் இருக்கும். சூழலிலே இருக்கும். அந்தப்படிமத்தின் ஒருமுனையை எழுத்தாளன் தொட்டால் மறுமுனையை வாசகன் தொடவேண்டும். அப்படித் தொடவைப்பதற்குத்தான் கதை என்னும் கலை உபயோகமாகிறது. அது ரொம்ப பிரைவேட் ஆகவும் இருக்கக்கூடாது. அது ஆசிரியனால் மட்டுமே அறிந்ததாக இருந்தால் வாசகன் அதை உணரமாட்டான். ஆனால் சொல்லிச்சொல்லி பழகியதாக இருந்தால் வாசகனுக்கு சிலிர்ப்பு வராது. ரெண்டுக்கும் நடுவே ஓர் இடம் தேவைப்படுகிறது.

அதேபோல யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாசகன் அவன் ஏற்கனவே வாசித்த கதைகளின் பாதிப்பும் கொண்டிருக்கிறான். கதைகளை அவன் சம்பந்தப்படுத்திக்கொள்வான். அந்த பழைய அனுபவங்களுடைய நீட்சியாக அதேசமயம் புதிசாக ஒன்று நிகழவேண்டும். இதெல்லாம் கதையின் சவால். கதாசிரியன் அந்தச்சவாலை ஏற்றுக்கொள்ளவேண்டும். என்ன நிகழவில்லை என்பதை அவன் ஆராயவேண்டும். அதுவல்லாமல் நல்ல கதை புரியாமல் பேசுகிறார்கள் என்பதெல்லாம் வெறும் தற்காப்பு. அது எந்தவகையிலும் உதவாது

நாகப்பிரகாஷ் அவர்களின் கதை இன்றைக்குச் சிறுபத்திரிகைகளில் சாதாரணமாக எழுதப்படும் நுண்ணியதகவல்களாக சூழலைச் சொல்லும் ஒரு பாணியில் அமைந்திருந்தது. அந்த பழகிப்போனதன்மையால்தான் நாம் அதைக் கூர்ந்து கவனிக்காமல் வாசிக்கிறோம். மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து நாம் அடையும் கதை ஒரு சின்ன வாழ்க்கைச்சந்தர்ப்பம் மட்டுமே. இந்தக்கதையை ஏன் எழுதவேண்டும், இதன் தீம் என்ன என்றுதான் ஆசிரியன் முதலில் கேட்டுக்கொள்ளவேண்டும். பல்லாயிரம் கதைகள் எழுதப்பட்டுவிட்ட சூழலில் அந்தக்கதையை எழுத அதற்கான காரணம் ஆசிரியன் மனதிலிருக்கவேண்டும்

கார்த்திக்ராஜ்

அன்புள்ள ஜெ,

இன்றைய இறுதிக்கடிதத்தை பார்த்ததும் சற்றே மனதுக்குள் சிரித்தபடி எழுதுகிறேன். அண்ணன் கடலூர் சீனு தவிர பெரும்பாலான கடிதங்கள் எழுதியவர் பெயர்கள் எனக்கு புதியவை என்பதும் அவர்கள் கதையை அணுகும் விதமும் ஆர்வத்துடன் கவனிக்கிறேன்.

எப்படி ஒருவர் ஒரு சிறுகதையை வசிக்கக்கூடும் என்பதை, அக்கதையில் என்ன நான் முயன்றேன், என்ன நான் வெளிப்படுத்தினேன், ஏன், எப்படி, எவ்வகையான விஷயங்களை ஒரே பக்கத்திலோ கதையிலோ சொல்லலாம் சொல்லக்கூடாது, என்கிற விஷயங்களை சிந்தித்தபடி இருக்கிறேன்.

ஆனாலும் இக்கதையில் நான் உருவாக்க நினைத்த இணைப்பை இதுவரை எவரும் வாசித்திருக்கவில்லை (அது என் தரிசனம், அதை எழுத்திலாக்க இன்னும் கூர்மைப்படவேண்டும் என்றே உணர்கிறேன், மற்றபடி எதிர்மறையாக அல்ல), மற்றும் இருவர் தவறாக கதையை (அவசரத்திலாக) வாசித்ததையும் மீறி அவர்களின் நட்புணர்வு மெச்சுகிறேன். அங்குமே நான் இன்னும் சில கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பொதுவெளியில் வாசகர்கள் ஒரு படைப்பை அணுகும் விதத்திற்கு அறிந்த பெரும் எழுந்தாளரா புதியவனா, எப்படியான எண்ணத்தை அவன் பெயராலும், வாசிப்பின் தொடக்கத்திலும் உருவாக்குகிறான் என்பது முக்கியம் என்று தோன்றுகிறது.

இப்படிக் கூறும்போது முன்முடிவே இல்லாமல், வெகு நாளைய வாசக அனுபவத்தை கதையின் மேல் முதல் வாசிப்பிலேயே போட்டு வாசிக்காத நல்வாசகர்களைச் சேர்க்கவில்லை.

பெரும்பாலான கடிதங்களின் அக்கறைக்கும், உங்களுக்கும் என் அன்பு. இன்னும் கவனிக்கிறேன்.

பேரன்புடன்,

நாகபிரகாஷ்

[விவாதம் நிறைவு]

முந்தைய கட்டுரைநீத்தாரை அறிதல்
அடுத்த கட்டுரைவெள்ளையானை – கடிதம்