‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86

ele1துரோணர் வீழ்ந்ததும் படைகள் எழுப்பிய வாழ்த்தொலி பொய்யென்று ஒலித்தது. முழவேந்தியவர்களும் கொம்பூதியவர்களும் எழுதிவைத்து படிப்பவர்கள்போல் கூவினர். ஆனால் அவ்வோசை செவிகளில் விழ விழ அவர்களின் வெறி மிகுந்தது. “வீழ்ந்தார் எரிவில்லவர்! மண்பட்டார் திரிபந்தணர்!” என வசைச்சொற்களும் எழத்தொடங்கின. ஆனால் யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் அந்த வாழ்த்தொலிகள் சோர்வுறச்செய்தன. அவ்வொலியால் அள்ளிக்குவிக்கப்பட்டவர்கள்போல் அவர்கள் படைகளுக்குப் பின்புறம் ஒருங்கிணைந்தார்கள். அர்ஜுனனின் தேரை நோக்கி யுதிஷ்டிரர் வந்து இறங்கினார். சகதேவனும் நகுலனும் வந்திறங்கினர்.

ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. தேர்த்தட்டில் வில்லை மடியில் வைத்து தலைகுனிந்து அர்ஜுனன் அமர்ந்திருந்தான். யுதிஷ்டிரர் “என்ன இது? வசைகூவுகிறார்கள்!” என முனகிக்கொண்டார். பின்னர் “வசையினூடாக வெறுப்பை திரட்டிக்கொள்கிறார்கள். வெறுக்காமல் இத்தருணத்தை கடந்துசெல்ல முடியாதுபோலும்” என்றார். இளைய யாதவர் இறங்கி புரவிகளின் நெகிழ்ந்திருந்த கடிவாளங்களையும் நுகக்கட்டுகளையும் சீர்படுத்தினார். சகடத்தை சுற்றிப்பார்த்து அச்சாணியை கையால் அறைந்து இறுக்கினார். நகுலன் இடையில் கைவைத்து நின்று சுற்றிலும் சிதறிக் கிடந்த பாண்டவப்படை கொடிகளை ஆட்டி கூச்சலிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தான். பின்னர் புரவிமேல் ஏறி அகன்று சென்று படைகளை ஒருங்கிணைக்க முயன்றான். இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதி ஆணைகளை இட்டான்.

அர்ஜுனன்தான் முதல்முதலாக அந்த ஓசையை கேட்டான். அவன் திடுக்கிட்டு திரும்பிநோக்கி “அஸ்வத்தாமர் எழுகிறார்!” என்றான். சூழ ஒலித்துக்கொண்டிருந்த வாழ்த்தொலிகள் கூச்சல்கள் நடுவே அந்த ஓசையை மற்றவர்கள் கேட்கவில்லை. யுதிஷ்டிரர் சற்று அப்பால் புரவியில் நின்றுகொண்டிருந்த நகுலனை நோக்கி “வா இங்கே” என்று கூவினார். தேவையற்ற சீற்றத்துடன் “விரைந்து வா!” என்று கைகாட்டினார். இளைய யாதவர் புரவிகளை மெல்ல தட்டியபடி நின்றார். சகதேவன் மட்டுமே அர்ஜுனன் சொன்னதை கேட்டான். “நான் அவரைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன், மூத்தவரே” என்றான். அர்ஜுனன் “அவர் இப்போரில் இதுவரை முழுதுளத்துடன் கலந்துகொள்ளவில்லை. நாம் அறிந்த அவருடைய அம்புகள் ஆற்றல்மிக்கவை. நாமறியா அம்புகள் அவரிடமுண்டு” என்றார்.

நகுலன் வந்திறங்க யுதிஷ்டிரர் “அறிவிலி, உன்னிடம் நான் மைந்தரைச் சென்று பார்க்கச் சொன்னேன்” என்றார். “அங்கிருந்துதான் வந்தேன்” என்றான் நகுலன். மேலும் சீற்றத்துடன் “இத்தனை பொழுது அங்கே என்ன செய்தாய்?” என்றார் யுதிஷ்டிரர். நகுலன் “மைந்தரின் அனல்புண்ணுக்கு மருத்துவம் செய்யப்படுகிறது. அவர்கள் நினைவழிந்திருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் பற்களைக் கடித்து “உம்” என்றபின் எதையோ உதறுவதுபோல தலையை அசைத்தார். நகுலன் “அவர்களின் தோல்கள் முற்றாக வெந்துவிட்டன. நினைவழிந்திருப்பது மிகுதியாக அகிபீனா அளிக்கப்பட்டமையால். அது நன்று, நினைவிருந்தால் அந்த வலியை தாளமுடியாது என்றார்கள் மருத்துவர்கள்” என்றான்.

சகதேவன் “இப்போது தெளிவாகக் கேட்கிறது!” என்றான். யுதிஷ்டிரர் விழிகளைச் சுருக்கி “என்ன?” என்றார். “அஸ்வத்தாமரின் படைகள் எழும் ஓசை…” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் அச்சத்துடன் திரும்பி “யாதவனே, அவனிடம் இவ்வுலகையே அழித்துவிடும் ஆற்றல்கொண்ட அம்புகள் உள்ளன என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், உள்ளன” என்றார். “யாதவனே, என் இளையவனுக்கு நீயே காவல்!” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் “என் செயலுக்கு எதிர்வினையாக வரும் எதையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும், அதற்கு நான் ஒருக்கமே” என்றான். யுதிஷ்டிரர் பரபரப்புடன் “எண்ணினால் பீமனும் பெரும்பிழை செய்திருக்கிறான். அவன் தனியாகச் சென்று சிக்கிக்கொள்ளப் போகிறான். நகுலா, அவன் உடனே இங்கு வந்தாகவேண்டும். முழவு ஒலிக்கட்டும்” என்றார்.

நகுலன் தலைவணங்கி விலக சகதேவனிடம் “நாம் ஐவரும் ஓரிடத்தில் இருக்கவேண்டும். நம்மை அவன் தனித்தனியாக எதிர்கொள்ளக் கூடாது. நாம் இளைய யாதவன் விழிதொடும் தொலைவில் இருக்கவேண்டும்” என்றார். “எங்கே பாஞ்சாலன்? அவனை நாம் காக்கவேண்டும். அஸ்வத்தாமனின் வஞ்சம் அவன்மேல்தான் முதலில் எழும்… நகுலனிடம் அவனையும் உடனே இங்கு வரச்சொல்லி முழவொலிக்க ஆணையிடுக!” ஓர் ஏவலன் தலைவணங்கி நகுலனை நோக்கி ஓட யுதிஷ்டிரர் “நாம் நம் பிழைக்கு விலையளிக்கப்போகிறோம். தெய்வங்கள் நம்மை விடப்போவதில்லை… மூதாதையர் நம்மை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றார். “என்ன பிழை செய்தோம்?” என்று சகதேவன் பற்களைக் கடித்தபடி கேட்டான். “பிழைசெய்யாமலா இங்கே வந்து எலிகளைப்போல் ஒளிந்திருக்கிறோம்? நெஞ்சுவிரித்து நாம் ஏன் களத்தில் நிற்கவில்லை? எவரை அஞ்சுகிறோம்?” என்றார் யுதிஷ்டிரர்.

சகதேவன் உரத்தகுரலில் “முதன்மைப்பிழை ஆற்றியவர் நீங்கள்” என்றான். யுதிஷ்டிரர் ஒருகணம் அவனை நோக்கிவிட்டு “அதை நான் எண்ணியிருக்கவில்லை என நினைத்தாயா? ஆம், நீங்கள் இயற்றியவை பிழைகள். நான் ஆற்றியது பழி. என் குடிகளும் கொடிவழிகளும்கூட ஈடுசெய்யவேண்டியது. பிறவி பல கடந்து நான் விண்ணுலகு செல்வதற்கு முன் நிகர்செய்தாக வேண்டியது. அதை எண்ணி இனி துயருறுவதில்லை என்று நான் எண்ணிவிட்டேன்” என்றபின் இளைய யாதவரிடம் “யாதவனே, இக்களத்தில் போருக்கு வந்தபோது என்னை இப்புவியிலேயே அறமறிந்து ஒழுகுபவன் என எண்ணிக்கொண்டிருந்தேன். இந்நிலத்தில் என் தேர் சகடம் தொடாது நீந்துவதுபோலவே உணர்ந்தேன். இன்று சற்றுமுன் தேரில்வருகையில் மண்ணின் ஒவ்வொரு பள்ளமும் கல்லும் தடையும் என் உடலை அறைந்து திடுக்கிட வைத்தன. என் சகடங்கள் நிலத்தில் உருளத்தொடங்கிவிட்டன” என்றார்.

“அது நன்று” என்று இளைய யாதவர் புன்னகைசெய்தார். “அரசனின் தேர்ச்சகடங்கள் மண்ணில் மட்டும்தான் உருளவேண்டும்.” யுதிஷ்டிரர் “என் இளையோர் இப்பழியை சுமக்கவேண்டியதில்லை. அவர்களையும் பாஞ்சாலனையும் காத்துநிற்க! நீ எவர் என என் கனவில் அறிந்திருக்கிறேன். உன்னை அடிபணிந்தபின் எவரும் எதையும் அஞ்சவேண்டியதில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “என்னை காக்கும்பொருட்டு இனி உன்னிடம் அல்ல எந்த தெய்வத்திடமும் நான் கோரப்போவதில்லை. தெய்வ அருளுக்குரிய அனைத்துத் தகுதிகளையும் இழந்துவிட்டவன் நான். இக்களத்தில் அஸ்வத்தாமனின் அம்புகளால் எரித்தழிக்கப்படுவேன் என்றாலும் அதில் பிழையில்லை.” இளைய யாதவர் “நீங்கள் அவனால் எரித்தழிக்கப்பட மாட்டீர்கள், அரசே” என்றார். “ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே எரிபுகுந்து மீண்டவர்.”

யுதிஷ்டிரர் துயருடன் “தவம்பெற்று பேறடைந்தபின் மண்ணுக்கு வந்த எவரும் அப்பேறால் நலமடைந்ததில்லை. அது விண்ணுக்குச் செல்லும் பாதை மட்டுமே” என்றார். “எத்தனை முனிவர்களின் கதைகள்! ஆயினும் நான் மீண்டுவந்தேன். என் இளையோருக்காக.” இளைய யாதவர் வாய்விட்டு நகைத்து “ஒவ்வொருவரும் இங்கே ஒவ்வொருவரால் கட்டப்பட்டுள்ளார்கள்” என்றார். பின்னர் அர்ஜுனனை நோக்கி “பார்த்தா, ஒருவர் எதன்பொருட்டு அறம்பிழைப்பாரோ அதுவே அவரை புவியில் கட்டியிருக்கும் தளை என்றுணர்க!” என்றார். அர்ஜுனன் “நாம் களமெழவேண்டியதுதான். அவர் நம்மை அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றான். இளைய யாதவர் “அரசர் சொன்னதே சரி, இனி இன்றையபோரில் நாம் இணைந்து நின்றாகவேண்டும்” என்றார். அர்ஜுனன் “அதனால் என்ன பயன்?” என்றான். இளைய யாதவர் “ஒருவர் பொருட்டு காக்கப்பட்டாலும் நாமனைவரும் தப்பக்கூடும் அல்லவா?” என்றார்.

பீமன் புரவியில் வந்து இறங்கினான். அவன் களைத்துச் சலித்திருந்தான். யுதிஷ்டிரர் பரபரப்புடன் “மந்தா, நீ இளைய யாதவருடன் நின்றிரு. எதன்பொருட்டும் தனித்துச் செல்லாதே. அறைகூவல்கள் இழிவுபடுத்தல்கள் எவற்றையும் பொருட்டெனக் கருதவேண்டாம். இது என் ஆணை” என்றார். பீமன் மறுமொழி சொல்லாமல் அர்ஜுனனிடம் “வருகிறானா?” என்றான். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். பீமன் மேலும் பேசாமல் கைகளைத் தூக்கி அலுப்பறுத்தான். அவன் எலும்புகளின் ஓசை கேட்டது. “மந்தா, நான் சொன்னதை நீ செவிகொள்ளவில்லை” என்றார் யுதிஷ்டிரர். எதிர்பாராத எரிச்சலுடன் பீமன் “மூத்தவரே, பதுங்கி இருப்பதற்காக நான் படைக்கு வரவில்லை. உயிரை எண்ணிஎண்ணிப் போரிடவும் இல்லை” என்றான்.

“நீ அறிவிலாது பேசுகிறாய். நீ இன்றிருக்கும் நிலை என்னவென்று அறிவாயா?” என்று யுதிஷ்டிரர் கூவினார். “நன்கறிவேன், நம் படைகளை அவன் முற்றழிப்பான் என்கிறார்கள். அவர்கள் நடுவே இறந்து கிடக்கவே விரும்புவேன். ஓடி ஒளிந்து உயிர்தப்புவதற்கல்ல” என்றான் பீமன். “மந்தா, இது வெறும் ஆணவம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “ஆணவமா? இனி என்ன ஆணவம் எஞ்சியிருக்கிறது? வெற்றுவிலங்குக்கு ஆணவம் உண்டா என்ன?” என்றான் பீமன். முகத்தில் புழுதி படிந்திருப்பதுபோல கையால் உரசித்துடைத்து காறித்துப்பினான். “அவன் என்னை கொல்வான் என்றால் எனக்கு உகந்ததை இயற்றுகிறான். நான் பிழையீடு செய்து விண்ணேகுவேன்” என்றான். “மந்தா, நீ உளம்தளர்ந்திருக்கிறாய்…” என்றார் யுதிஷ்டிரர்.

“ஆம், உள்ளம் என்று ஒன்று இத்தனை எடைகொண்டு என்னை அழுத்தியதே இல்லை” என்றான் பீமன். “நான் தூக்கி வளர்த்த கௌரவமைந்தரை கொன்றிருக்கிறேன். பிதாமகரின் தலையை அடித்து உடைத்திருக்கிறேன். அப்போது உள்ளூர அறிந்ததெல்லாம் ஒரு கல்லின் உணர்வின்மையை மட்டுமே. ஆனால் இன்று வெறும் தசைக்குவையாக உணர்கிறேன்.” மீண்டும் நிலத்தில் துப்பி “அந்த யானை என்னிடம் போருக்கு எழவில்லை. அது என்னை பார்க்கவே இல்லை. களத்தில் அஞ்சி நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தது” என்றான். சகதேவன் “அது களத்திற்கு வந்துவிட்டது” என்றான். பீமன் “அது மானுடர்மேல் நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தது. அதன் ஐயத்தை நான் உறுதிசெய்தேன்” என்றான். சகதேவன் குரல்தாழ்த்தி “நமக்கு வேறுவழியில்லை” என்றான். பீமன் வெடித்து உயர்ந்த குரலில் “எத்தனை வேறுவழிகளை நோக்கினோம்? சொல், எத்தனை வழிகளில் முயன்றோம்?” என்றான்.

யுதிஷ்டிரர் “அதை இப்போது சொல்கிறாயா? உன் முன்னால்தான் முடிவெடுக்கப்பட்டது, அப்போது சொல்லியிருக்கவேண்டும் நீ” என்றார். “அப்போதும் இப்போதும் அதை நான் செய்திருக்கக் கூடாதென்று சொல்லவில்லை. செய்யாவிட்டாலும் நான் இழிசெயல் செய்தவன். செய்தமையால் அதை உறுதிசெய்திருக்கிறேன். களம்பட்ட ஆசிரியர் எழுந்து வந்தால் நான் மட்டுமே விழிநோக்கி பேசமுடியும். ஆம் ஆசிரியரே, நான் பீமன். வெறும் விலங்கு. ஒருபோதும் பிறிதொன்றாக என்னை சொல்லிக்கொள்ளாதவன் என்பேன். ஆசிரியர் என் தலையைத் தொட்டு குழலை வருடி சொல்வார் ஆம், மைந்தா. இப்பிறவியில் இவ்வாறு ஆனாய். உன் பிழைகளை புழுவென இழிவிலங்கென நூறுமுறை பிறந்து ஈடுசெய்தபின் ஒருநாள் விடுதலைகொள்வாய் என” பீமன் குரல் இடறியது. “அவர் அறிவார் என்னை… அவர் எனக்கு கதைதொட்டு அளித்தார். அதைக்கொண்டு நான் இன்று அவரை கொன்றேன்.”

“நீ…” என சொல்லமுயன்ற யுதிஷ்டிரரை கையமர்த்தி பீமன் உரத்த குரலில் “அந்த யானைமேல் விழுந்ததும் அவர் மீதான அடிதான்!” என்றான். “நீ உளம் கலங்கியிருக்கிறாய்!” என்றார் யுதிஷ்டிரர். ‘யாதவனே, ஏதேனும் சொல்க! இதென்ன, ஒவ்வொருவரும் பித்தர்கள்போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்! உத்தரபாஞ்சாலனின் அம்புகளுக்கு முன் தலைகொண்டுசென்று வைப்பார்கள் போலிருக்கிறது இவர்களின் சொற்களைக் கேட்டால்” என்றார். தேரில் வந்திறங்கிய திருஷ்டத்யும்னன் “அரசே, உத்தரபாஞ்சாலர் நம்மைத் தேடி வந்துகொண்டிருக்கிறார். எதிர்ப்படும் படைகளை வில்லால் அறைந்து சிதறடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சற்றுநேரத்தில் அணுகிவிடுவார்” என்றபின் திரும்பி பீமனிடம் “நம் படைசூழ்கை என்ன?” என்றான். “சற்றுமுன் மூத்தவரே சொன்னார், சென்று தலைகொடுத்தல். அதுமட்டும்தான்” என்றான் பீமன்.

திருஷ்டத்யும்னன் எரிச்சல் கொண்டு “தலைகொடுத்தல் என்னும் எண்ணம் வந்தாலே தலைகொடுத்ததுபோலத்தான். எனில் எவருக்காக இப்போர்? இத்தனை மானுடர் உயிரிழந்தது எதன்பொருட்டு? இவர்களுடையதும் அந்த அந்தண ஆசிரியனுக்கு நிகரான உயிர்தான். உடலில் உயிரை ஆள் நோக்கி அளந்து ஊற்றவில்லை தெய்வங்கள்” என்றான். பீமன் அமைதியிழந்தவனாக தலையை திருப்பிக்கொண்டான். குளம்போசை ஒலிக்க புரவியில் வந்திறங்கிய சாத்யகி “என்ன நிகழ்கிறது இங்கே? அரசே, நான் நெடுநேரமாக முரசொலியால் வினவிக்கொண்டிருக்கிறேன். நாம் படைமுகம் கொள்வதற்குரிய சூழ்கை என்ன? நம் படைகள் முற்றாகச் சிதறிப்பரந்துவிட்டிருக்கின்றன. இங்கே இன்றிருப்பவை சிறு சிறு வீரர்குழுக்கள். கௌரவர்களும் உளம்சோர்ந்திருப்பதனால் இப்போது நாம் எஞ்சியிருக்கிறோம்” என்றான்.

படபடப்புடன் கைகளை வீசியபடி “ஆனால் இது இவ்வண்ணமே தொடரவேண்டுமென்பதில்லை. எக்கணமும் அஸ்வத்தாமர் இங்கே வரலாம். அவருடைய சீற்றத்தையும் ஆற்றலையும் கண்டால் கௌரவப்படை எழும். எனில் நமக்கு முற்றழிவே” என்றான். “நமது படைகள் இருக்கும் உளநிலை அவர்களின் படைக்கலங்களுக்கு முன்னால் தலைகொண்டு சென்று வைத்து உயிர்விட சித்தம் கொண்டிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “தலைவர்களின் உளநிலையும் அதுவே” என்றான். சாத்யகி அவனை முற்றாகவே தவிர்த்து யுதிஷ்டிரரிடம் “அரசே, படைசூழ்கைக்கு ஆணையிடுக!” என்றான். யுதிஷ்டிரர் “நான் படைசூழ்கை வகுக்க வல்லவன் அல்ல…. என்னால் சொல்லக்கூடுவதொன்றே, என் இளையோர் இளைய யாதவரின் விழிநீழலில் நின்றிருக்கவேண்டும்” என்றார்.

சாத்யகி “இளையவரே, ஆணையிடுக!” என்றான். அர்ஜுனன் விழிதாழ்த்தி அமர்ந்திருக்க சாத்யகி இளைய யாதவரிடம் “அரசே, சொல்க! நான் செய்யவேண்டியதென்ன?” என்றான். சகதேவன் “அவர் ஒரு சொல்லும் உரைக்கப்போவதில்லை. இது நமது போர்” என்றான். பீமன் “நான் செல்கிறேன். இங்கு நின்றிருந்தால் என் நரம்புகள் உடைந்துவிடும்” என்றான். “மந்தா, நான் சொன்னதை நீ மறந்துவிட்டாய்!” என்றார் யுதிஷ்டிரர் “ஆம், மறந்துவிட்டேன். மூத்தவரே, அஸ்வத்தாமன் படைக்கலம் கொண்டுவந்தால் நான் என் தலையை அளிப்பேன். ஐயமே வேண்டாம். அவனுக்கு தலைக்கடன் கொண்டிருக்கிறேன்” என்றபின் கைகளை வீசியபடி நடந்து அகன்றான். “சகதேவா, அந்த அறிவிலியிடம் சென்று சொல்” என்று யுதிஷ்டிரர் கூவினார். சகதேவன் ஒன்றும் சொல்லாமல் வேறுதிசை நோக்கி நின்றிருக்க யுதிஷ்டிரர் தன் தலையில் ஓங்கி அறைந்துகொண்டு உரக்க கூச்சலிட்டார். “நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்? நான் சென்று உயிர்கொடுக்கிறேன். நான் சென்று அவன் முன் நெஞ்சுகாட்டுகிறேன். போதுமல்லவா?”

சாத்யகி “நீங்கள் ஏன் உயிர்கொடுக்கவேண்டும்? இவன் செல்லட்டும்… நெறிமீறி ஆசிரியரின் தலையை அறுத்த இச்சிறுமையாளன் செல்லட்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் ஒருகணம் திகைத்து பின் சினவெறிகொண்டு கையை ஓங்கியபடி முன்னால் பாய்ந்தான். “வாயை மூடு! கீழ்மகனே, என்னடா சொன்னாய்? சிறுமையாளனா? எவன்? யோகத்திலமர்ந்திருந்த மலைமகனின் தலையை அறுத்த நீயா பேசுகிறாய்?” என்றான். “ஆம், அவன் தலையை அறுத்தேன். அவனால் கொல்லப்பட்ட என் பத்து மைந்தர் விண்ணுலகில் உளம் ஆறவேண்டும் என்பதற்காக… அவன் எனக்கு எவருமல்ல. நீ மடியிருத்தி சொல்லும் வில்லும் தந்த ஆசிரியனை தலையறுத்தவன்… உன்னால் அழியவிருக்கிறது இப்படை… இக்குலமே குருதிகொடுக்கப்போகிறது உன் பழிக்காக.”

திருஷ்டத்யும்னன் கூச்சலிட்டபோது தொண்டை உடைந்து குரல் அடைத்துக்கொண்டது. “ஆம், ஆசிரியனை கொன்றேன். அவர் மைந்தனையும் முடிந்தால் கொல்வேன். அன்றி அவன் தேரடியில் அம்புபட்டு விழுவேன். துளியும் எனக்கு வருத்தமில்லை. நான் எனக்கு உகந்ததையே செய்தேன். எந்தைக்காகவே நான் பிறந்தேன். இதோ எதன்பொருட்டு உத்தர பாஞ்சாலன் வருகிறானோ அதே உணர்வே எனக்கும்…” சாத்யகி “நீ ஆண்மகன் என்றால் அவரை எதிர்த்து கொன்றிருக்கவேண்டும். நெஞ்சில் அம்புபாய்ந்தவரின் தலையை வெட்டி பழிதீர்க்கிறாயா, கீழ்மகனே?” என்றான். சகதேவன் “போதும்… செவிகூசுகின்றது. நிறுத்துங்கள்” என்றான். யுதிஷ்டிரர் ‘யாதவனே, இவர்களின் சொற்களை நிறுத்துக… போதும் இந்தக்கீழ்மை” என்றார். இளைய யாதவரும் அர்ஜுனனும் அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை.

திருஷ்டத்யும்னன் “ஆம், நான் நெஞ்சில் அம்புபாய்ந்த முதியவரை கொன்றேன். நீ என்ன செய்தாய்? கையறுந்து ஊழ்கத்தில் அமர்ந்தவனை கொன்றாய்… உன் குடிக்கே உரிய கீழ்மையை செய்தாய்… நீ ஆணென்றால் எடு வில்லை. உன் குடியை ஷத்ரியர் எவ்வண்ணம் நடத்துவார்கள் என்று காட்டுகிறேன்” என்றான். யுதிஷ்டிரர் திரும்பி நகுலனிடம் “என்ன செய்கிறாய் அங்கே? அறிவிலி… நிறுத்து இவர்களை…” என்று கூச்சலிட்டார். சாத்யகி “உன் உள்ளத்து இருள் வெளிவந்துள்ளது. நீயா குலம் பற்றி பேசுகிறாய்? யாதவர்களின் ஆண்மையைப் பற்றி தெரிந்தாகவேண்டும் என்றால் உன் உடன்பிறந்தாளிடம் கேள். ஐந்து மடங்கு மறுமொழி சொல்வாள்…” என்றான். “அறிவிலி… வாயை மூடு!” என்று யுதிஷ்டிரர் கூவி நிற்கமுடியாமல் தேர்த்தட்டை பற்றிக்கொண்டார்.

“முதலில் இந்தக் கீழ்மகனின் இழிந்த நாவை நிறுத்த ஆணையிடுங்கள். உங்கள் சொற்களை அவன் ஒரு பொருட்டெனக் கருதுகிறானா என்று பாருங்கள். அதன்பின்னர் என்னிடம் நெறிபேசலாம்” என்று கூவியபடி சாத்யகி யுதிஷ்டிரரை நோக்கி அடிக்கச் செல்பவன்போல சென்றான். “நீங்கள் கேட்டு நிற்பது உங்கள் குடியை கீழ்மைசெய்பவனின் சொற்களை. ஆணிலிகளுக்குரிய நாணமின்மையுடன் நின்றிருக்கிறீர்கள். நான் உங்கள் அடிமை அல்ல. உங்களுக்காக பணிபுரிய வந்தவனும் அல்ல. உங்களுக்காக என் மைந்தரை இழந்தவன்.” யுதிஷ்டிரர் தலையைப் பற்றியபடி பின்னடைந்து உடைந்த தேரின் முகடொன்றில் அமர்ந்து முழங்கால்களில் முகம் வைத்துக்கொண்டார். திருஷ்டத்யும்னன் வாளை உருவி சாத்யகியை நோக்கி வீச அதை ஒழிந்து தன் வாளுறையால் அவன் வாளை அறைந்து தெறிக்கவிட்ட சாத்யகி “ஆணிலி என்றதும் உனக்கு சினம் வருகிறதா? இழிமகனே” என்றான்.

திருஷ்டத்யும்னன் கைகள் நடுங்க விழிகள் நீர்கொள்ள நின்று தவித்தான். சாத்யகி தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டான். “நீ ஆணென்றால் சென்று சொல் அஸ்வத்தாமனின் அம்புகளால் அழியவிருக்கும் பாண்டவப்படைகளிடம், நீ அவர்களுக்காக உயிர்கொடுப்பாய் என்று. நெஞ்சு விரித்துச் சென்று அவன் அம்புகள் முன் நின்று செத்து விழு… உன்னை சாவிலிருந்து காத்தமைக்காக நானும் வந்து அந்த அம்புகள் நடுவே விழுகிறேன்.” சாத்யகி நிலத்தில் ஓங்கித் துப்பினான். “நீ ஏன் துரோணரை கழுத்தறுத்தாய் என்று அறியாதோர் எவர் இங்கே? உன் தந்தைக்காகவா? தந்தைக்காக நீ கொண்ட உணர்ச்சிகளை விஞ்சியது உன் உள்ளம்கொண்ட சிறுமை. சொல் கீழ்மகனே, அவர் உன்னை தேர்க்காலில் கட்டி இழுக்காவிட்டால் நீ அவரை அவ்வண்ணம் வெட்டியிருப்பாயா? நீ ஆடிய அமலை உன் ஆணவத்திற்காக, உன் தந்தைக்காக அல்ல. இல்லை என்றால் சொல். உன் தந்தைமேல் ஆணையிட்டுச் சொல்!”

திருஷ்டத்யும்னன் தவித்து திணறி பின்னர் “நீ முதலில் செல்… யோகத்தில் அமைந்தவனை வெட்டிய பழிக்காக சென்று உன் மூதாதையர் முன் சங்கறுத்துவிழு” என்றான். அந்தத் தளர்வு சாத்யகியை மேலும் வெறிகொள்ளச் செய்தது. “ஆம், யோகத்திலமர்ந்தவனைத்தான் வெட்டினேன். மேலும் வெட்டுவேன். அவன் என் எதிரி…” என்றான். திருஷ்டத்யும்னன் எங்கோ எதையோ சென்று தொட்டு ஒருகணத்தில் ஆற்றல்கொண்டான். தாழ்ந்த அழுத்தமான குரலில் “நீ ஆணையிட்டுச் சொல், அவன் உன் எதிரி என்று. சொல், அவன் உன் எதிரியா? அவன் உனக்கு உன் மைந்தர்களைவிட அணுக்கமானவன். உன் அகம்பகிர்ந்துகொண்டவன்… இல்லை என்றால் சொல்” என்றான். கையை நீட்டியபடி முன்னால் சென்று “அவனை நீ ஏன் கொன்றாய் என உள்ளம் தொட்டுச் சொல். சொல் கீழ்மகனே, உன் தெய்வங்களை எண்ணி ஆணையிட்டுச் சொல்!”

சாத்யகி சொல்லிழந்தான். திருஷ்டத்யும்னன் உளம் தளர்ந்து தோள் தொய்ந்து முழங்கால் வளைய விழப்போனான். பின் ஓங்கி நெஞ்சில் அறைந்து அழுகைக்குரலில் “அனைத்துப் பழிகளையும் நானே சுமக்கிறேன். ஆம், எவரும் என் பொருட்டு சாகவேண்டியதில்லை. நான் சென்று அவன் முன் நிற்கிறேன்” என்றான். அவன் விம்மியழத் தொடங்க யுதிஷ்டிரர் உடைந்தகுரலில் “நான் என்ன செய்யவேண்டும், யாதவனே?” என்றார். அர்ஜுனன் “முன்னரே சொல்லிவிட்டீர்கள் மூத்தவரே, நாம் யாதவரைச் சார்ந்தே நிற்போம். நமக்கு வேறுவழியில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், நாம் அவனை நம்பியே இங்கு நின்றிருக்கிறோம்” என்றார். “அவர் ஏந்திய அந்த மந்தர மலையே நமக்கும் குடையாகுக!”

சாத்யகி “அது என்ன ஓசை!” என்றான். “குதிரைக்கனைப்பு!” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “அது அஸ்வத்தாமனின் வில்லின் ஓசை. அதில் வடவைநெருப்பு குடியேறிவிட்டிருக்கிறது” என்றார். யுதிஷ்டிரர் “ஆம், நிமித்திகக் கூற்றின்படி இந்தக் களத்தில் வடநெருப்பின் கனைப்பொலி எழும்” என்றார். திருஷ்டத்யும்னன் ஒருகணத்தில் விசைகொண்டு எழுந்து குரலும் உடலசைவும் முற்றாக மாறுபட “நான் நமது படைகளை ஐவிரல்குவிகை சூழ்கையில் நிறுத்துகிறேன். நம்மால் செய்யக்கூடுவது இப்போது அது ஒன்றே. நமது அனைத்துப்படைகளும் இப்புள்ளியில் வந்து இணையட்டும். நம் முழுவல்லமையாலும் அவரை எதிர்ப்போம்” என்றான். சாத்யகி “அங்கரை சிகண்டியும் சுருதகீர்த்தியும் எதிர்த்து நின்றிருக்கிறார்கள். கிருதவர்மனை சுருதசேனன் எதிர்க்கிறான்… நான் சென்று துரியோதனனையும் இளையோரையும் நிறுத்துகிறேன். இளையவரே, அனைத்துவிசையாலும் ஆசிரியர் மைந்தரை எதிர்கொள்க!” என்று கூவியபடி தன் தேர் நோக்கி ஓடினான்.

இளைய யாதவர் புன்னகையுடன் அர்ஜுனனிடம் “நாம் கிளம்பலாம் அல்லவா?” என்றார். யுதிஷ்டிரர் “என்ன இது, யாதவனே? இவர்கள் கக்கிய இந்நஞ்சு எங்கிருந்தது?” என்றார். “அணுக்கமானவர்களிடையே திரள்வது, அன்புக்கு அடியில் தேங்கியிருப்பது” என்ற இளைய யாதவர் புரவிமேல் கைவைத்து அமரத்தில் பாய்ந்தேறிக்கொண்டு சவுக்கால் தொட்டார். புரவிகள் கனைத்தபடி முன்னெழுந்தன. “யாதவனே, மந்தன் உடனிருக்கட்டும்… அவன் நம்முடனே இருக்கட்டும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். இளைய யாதவர் புன்னகையுடன் “அவரைக் காக்கும் தெய்வங்கள் முற்றிலும் வேறு” என்றார். தேர் எழுந்து முன்னால் சென்றபோது அர்ஜுனன் “எதன்பொருட்டு இந்த உளநாடகம், யாதவரே!” என்றான். “உமிழ்வனவற்றை நாம் அகற்றிவிடுகிறோம்” என்றபின் வாய்விட்டு நகைத்து “தெய்வங்களுக்கு முன்னால்தான் மானுடர் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள்” என்றார்.

முந்தைய கட்டுரைகொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்
அடுத்த கட்டுரைஉச்சவழுவும் பிழையும்