‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78

ele1தலைக்குமேல்  இருளில் வௌவால்கள் சிறகடித்துச் சுழன்றுகொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அங்கே போர் தொடங்கிய பின்னர் அவ்வாறு வௌவால்கள் களத்தில் எழுந்து சுழன்றதை அவன் உணர்ந்ததில்லை. எங்கும் குமட்டலெடுக்கச் செய்யும் உப்புவாடை நிறைந்திருந்தது. வியர்வையும் குருதியும் கலந்தது. காற்றில் அசைவே இல்லை. எப்போதும் இரவில் குருக்ஷேத்ரத்தை நிறைத்திருக்கும் வலிமுனகல்களும் அழுகைகளும் இல்லை. இருளுக்குள் படைப்பெருக்கு முற்றாக அடங்கி துயில்கொண்டிருந்தது.

பாண்டவப் படைகளின் நடுவே சிறு மரப்பெட்டி மீது கால்களை விரித்து கைகளை இருபுறமும் ஏவலர்களிடம் அளித்து அமர்ந்திருந்தான். ஏவலர்கள் அவன் உடலில் குருதிப் பிசினுடன் சேர்ந்து இறுகி ஒட்டியிருந்த தோல்பட்டிகளை அவிழ்த்து மெல்ல கவசங்களை விடுவித்தனர். கவசங்கள் ஆடைகளுடன் ஒட்டியிருந்தன. ஆடைகளை அம்புமுனைகள் தசைகளுடன் சேர்த்து தைத்திருந்தன. கவசங்களை கழற்றுவதில் அதற்குள் நன்கு தேர்ந்துவிட்டிருந்த ஏவலர் முதலில் அம்பு பதிந்திருந்த இடங்களைச் சுற்றி ஆடைகளைக் கிழித்து கவசங்களை அப்பால் எடுத்து வைத்தனர். கந்தகமருந்துடன் கலந்து உருக்கிய தேன்மெழுகில் முக்கி எடுத்த மரவுரியை வலக்கையில் வைத்துக்கொண்டு இடக்கையால் அம்பு முனைகளை தசையிலிருந்து பிடுங்கி எடுத்தனர். குருதி சற்றே வரவிட்டு இருமுறை மரவுரியால் துடைத்தபின் மெழுகுடன் சேர்த்து புண்ணின் மேல் வைத்து துணியால் சுற்றி கட்டினர்.

அவன் உடலெங்கும் குருதி உலர்ந்து பொருக்கோடியிருந்தது. மரவுரியை தைலம் கலந்த நீரில் முக்கி அவன் உடலை அழுத்தித் துடைத்தனர் மருத்துவ ஏவலர். அவன் கையுறைகளை வாளால் கிழித்து அகற்றினர். உலர்ந்த புண்ணிலிருந்து அகல்வதுபோல் குருதியுடன் பொருக்கு பிரிந்து தோலுறைகள் அகல அவன் கைகள் வெளுத்து சுருங்கி தெரிந்தன. காலில் அணிந்திருந்த இரும்புக்குறடுகளை இரு ஏவலர் கழற்றினர். பின்னர் அக்குறடுகளை அருகிருந்த மரவுரியால் அழுந்தத் துடைத்து குருதிப் பொருக்குகளை நீக்கி நறுமணச் சுண்ணத்தால் கால்களைத் துடைத்து பின்னர் மீண்டும் குறடுகளை அணிவித்தனர். ஒவ்வொரு கவசத்தை கழற்றுகையிலும் அவன் வலியுடன் முகம் சுளித்தான். அம்புகள் பிடுங்கப்படும்போது மெல்ல முனகினான்.

அவன் உடலைத் துடைத்தபின் கவசங்களை மரவுரியால் துடைத்து உடைந்திருந்த பகுதிகளை அகற்றி புதியன சேர்த்து மீண்டும் அவனுக்கு அணிவித்தனர். தோல்பட்டிகளை இறுக்கி முடிச்சுகளைப் போட்டு கவசங்களை உரிய இடங்களில் பொருத்தினர். கவசங்கள் தசைகளின்மீது வலுவுடன் அறையாமலிருக்கும் பொருட்டு உள்ளே அழுத்தப்பட்டு தகடுகளாக மாறிய மரவுரிச் சுருள்களை உரிய இடங்களில் வைத்து இறுக்கினர். பின்னர் தலைமை ஏவலன் சற்றே விலகி தலைவணங்க திருஷ்டத்யும்னன் எழுந்து நின்று இரு கைகளையும் விரித்தான். புதிய கையுறைகளை அவன் கைகளில் அணிவித்தனர். விரல்களை விரித்து நீட்டி அவற்றை நோக்கியபின் அவன் அருகே தன் தேர் ஒருங்கிக்கொண்டிருப்பதை பார்த்தான். அதன் ஓசை அத்தனை நேரம் கேட்டுக்கொண்டிருந்தது, அவன் அதை ஓடும் தேரின் ஒலியென எண்ணிக்கொண்டிருந்தான்.

புண்பட்டிருந்த புரவிகள் அகற்றப்பட்டு புதிய புரவிகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் உடலில் தோல்பட்டைகளும் நுகமும் உரிய முறையில் பொருந்தியிருக்கிறதா என்று பாகன் இழுத்தும் அசைத்தும் நோக்கிக்கொண்டிருந்தான். இரு ஏவலர்கள் சகடங்களை ஆய்ந்து அச்சாணி உரிய முறையில் சுழல்கிறதா என்று நோக்கினார்கள். இறுகிய சகடம் தேரில் அசைவுகளை மிகுதியாக்கும். இறுக்கமற்ற சகடம் பள்ளங்களில் தேரை நிலைகுலையச் செய்யும். இரண்டுக்கும் நடுவில் ஓரிடம் அவர்கள் உள்ளத்தில் இருந்தது. ஒவ்வொரு முறை தேரை சீரமைக்கையிலும் மீண்டும் மீண்டும் இறுக்கி அதை ஒருக்கிக்கொண்டே இருப்பது தேர்வலர்கள் வழக்கம். போருக்கு எழும் வீரர் தேர்த்தட்டில் அமர்ந்த பின்னரும், அமரத்தில் ஏறி அமர்ந்து பாகன் கிளம்பலாமா என்று கேட்ட பின்னரும் அவர்கள் சகடத்தையும் அச்சையும் சீர்நோக்கிக்கொண்டிருப்பார்கள். ஒருகணம் இன்னும் ஒருகணம் என்று தேர்ப்பாகனிடம் கோருவார்கள்.

திருஷ்டத்யும்னனை நோக்கி புரவியில் வந்திறங்கிய சாத்யகி “நாம் இன்று வெறும் நாற்களச்சூழ்கைதான் அமைக்கப்போகிறோமா?” என்று கேட்டான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்று உரைத்து திரும்பிப்பார்த்தான். அருகே நின்ற ஏவலன் குறிப்பை உணர்ந்து தன் கையிலிருந்த அம்பை நீட்டினான். அதை தலைகீழாகப் பிடித்து தரையில் கோடுகளை வரைந்து சூழ்கையை சாத்யகிக்கு காட்டினான் திருஷ்டத்யும்னன். சாத்யகி குனிந்து சற்று கூர்ந்து நோக்கியபின் தலையசைத்தான். பொழுது சற்று ஒளிகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது. இருமுறை கௌரவப் படைகளிலிருந்து முரசொலி எழுந்தது. “அவர்கள் தங்கள் படைகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்… எப்பொழுது வேண்டுமென்றாலும் கௌரவப் படை எழுந்து வந்து நம்மை தாக்கக்கூடும்” என்று சாத்யகி சொன்னான்.

“நமது படைகள் ஒருங்கிவிட்டனவா?” என்றான் திருஷ்டத்யும்னன். “பெரும்பாலானவர்கள் இன்னும் துயிலெழவில்லை. உண்மையில் இது போர்க்களம் என்றே தோன்றவில்லை. நேற்று பகலிலிருந்து களம்பட்ட அனைவர் உடல்களும் சிதறி பரந்து கிடக்கின்றன. இன்றைய போர் அவ்வுடல்களின்மீது நின்றே நிகழ்த்தப்படவுள்ளது” என்ற சாத்யகி கோணலாக நகைத்து “பிணங்களின்மேல் காபாலிகர் நடனமிடுவார்கள் எனக் கேட்டிருக்கிறேன். போர்கள் நிகழ்ந்தனவா என கேட்டுப்பார்க்க வேண்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் “நாம் ஒருங்கியிருக்கவேண்டும். எக்கணமும் அவர்கள் நம்மை தாக்கக்கூடும். நேற்று அவர்கள் நமக்கு பேரிழப்பை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் உளம் சோர்ந்திருப்போம் என்று கருதி அச்சோர்வைக்கொண்டு வெல்ல திட்டமிடுவார்கள். இன்னும் அரைநாழிகைக்குள் நமது படைகள் அனைவரும் எழுந்தாகவேண்டும்” என்றான். சாத்யகி “பலமுறை போர்முரசு ஒலித்தாகிவிட்டது. நூற்றுவர்வரை படைகளை எழுப்பும்பொருட்டு ஆணைகளை கொண்டு சேர்த்துவிட்டேன். ஆனால் எவர் துயில்கிறார்கள், எவர் இறந்திருக்கிறார்கள் என்றுகூட பிரித்தறிய முடியாத இந்தக் களத்தில் எப்படி படைகளை எழுப்புவது?” என்றான்.

திருஷ்டத்யும்னன் சலிப்புடன் தலையை அசைத்து “போர் நிகழட்டும். சகடங்களும் புரவிக்குளம்புகளும் கால்களும் மிதித்துச் செல்லும்போது தங்களை உயிருடன் இருப்பதாக உணர்பவர்கள் எழுந்துகொள்வார்கள்” என்றான். பின்னர் சிரித்து “பிறிதொன்றையும் செய்வதற்கில்லை… எழுந்து சாவதா கிடந்தே சாவதா என அவர்கள் முடிவெடுக்கட்டும்” என்றான். சாத்யகி “இன்று நீங்கள் ஆற்றப்போவதென்ன என்று பாண்டவப் படையே காத்திருக்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் முகம் மாறினான். “பிறவிப்பொறுப்பு…” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “பிறப்பிலேயே பெரும்பாலும் வாழ்க்கை முடிந்துவிடுகிறது அனைவருக்கும்” என்றான். சாத்யகி “நான் என் வாழ்க்கையை தெரிவுசெய்தேன்” என்றான். திருஷ்டத்யும்னன் அவனை கூர்ந்து நோக்கி “என்ன வேறுபாடு?” என்றான். சாத்யகி திகைப்புடன் நோக்கினான். “நாம் நம்மை படைக்க பலிபீடங்களை கொண்டிருக்கிறோம். எனக்கு அது தந்தையால் அளிக்கப்பட்டது. நீர் அதை ஈட்டிக்கொண்டீர்.”

சாத்யகி “ஆம்” என்றான். தலையசைத்து “எண்ணிப்பார்க்கலாகாது” என்று சொல்லி தலைவணங்கிவிட்டு கிளம்பிச் செல்ல திருஷ்டத்யும்னன் பாகனிடம் “என் தேரை போர்முனைக்கு கொண்டு செல்க!” என்று ஆணையிட்டபின் திரும்பிப்பார்த்து ஏவலரிடம் புரவிக்காக கைகாட்டினான். ஏவலர் அவனருகே கொண்டுசென்ற புரவியில் ஏறிக்கொண்டு படைகளினூடாகச் சென்றான். பாண்டவப் படை பெரும்பகுதி நிலம்படிந்து கிடப்பதை கண்டான். ஆங்காங்கே சிலர் எழுந்து அமர்ந்து சூழ்ந்திருந்த இளவெயிலில் கண்கள் கூச முகம் பொத்தி குனிந்திருந்தனர். அவர்களின் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. அதை கைகளால் துடைத்தபோது உறைந்த குருதி கரைந்து அது புதுச்சோரி என தெரிந்தது. சிலர் குளம்படி ஓசையைக் கேட்டு உடல் விதிர்க்க திகைத்து நோக்கினர். எவரும் உளநிலை தெளிவுடன் இல்லை என்பதை அவன் உணர்ந்தான். படைகளினூடாகச் சென்று யுதிஷ்டிரரின் நிலையை அடைந்தபோது அங்கு நகுலனும் சகதேவனும் நின்றிருப்பதை கண்டான். யுதிஷ்டிரர் தேர் மறைவில் கவசங்களை அணிந்துகொண்டிருந்தார்.

புரவியிலிருந்து அவன் இறங்கியதும் சகதேவன் “உளவுச்செய்தி வந்துள்ளது. அவர்கள் நம்மை தாக்கவே எண்ணுகிறார்கள்” என்றான். “புலரி எழுந்துவிட்டது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அவர்களும் நம்மைப்போலவே நிலம்படிந்து துயின்றுகொண்டிருக்கிறார்கள். நம்மைப்போலவே தங்களது படைகளை முரசுகொட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறார்கள். இப்போது எவர் முதலில் எழுவார்கள் என்பதுதான் எவர் படைகொண்டு வருவார்கள் என்பதை முடிவு செய்கிறது.” யுதிஷ்டிரர் தேருக்குப் பின்னாலிருந்து புதிய கவசங்களுடன் வந்து “பாஞ்சாலனே, இன்றைய போர் உன்னுடையது. நேற்று உன் தந்தை களம்பட்டதற்கு இன்று நீ பழிநிகர் செய்தாகவேண்டும். இங்குள்ள அத்தனை படைவீரர்களும் அதை எதிர்பார்க்கிறார்கள். உன் குடிதெய்வங்களும் மூதாதையரும் விண்ணில் காத்திருக்கிறார்கள்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “ஆம், என் கடன் அது” என்றான். “துரோணர் படைமுகப்பில் எழுவாராயின் நமது வில்லவர் இருவர் உனக்கு துணை வருவார்கள். சாத்யகியையும் சுருதகீர்த்தியையும் நீ சேர்த்துக்கொள். அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கு. அவருக்கு படையுதவிக்கு வர இன்று அங்கு அங்கனும் அஸ்வத்தாமனும் மட்டுமே உள்ளனர். அங்கனை அர்ஜுனன் எதிர்கொள்ளட்டும். அஸ்வத்தாமனை மந்தன் எதிர்கொள்ளட்டும். இன்றைய நாளே துரோணர் களம்பட்டாகவேண்டும். இல்லையேல் இப்போர் முடிவுறவில்லை என்றே பொருள்” என்றார். திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான். அவன் வஞ்சினம் ஏதேனும் உரைப்பான் என்று எதிர்பார்த்தவர்போல் யுதிஷ்டிரர் முகம் நோக்கி நின்றார். அந்த அமைதியை உணர்ந்து திருஷ்டத்யும்னன் தலைதூக்கி “பழிநிகர் கொள்ளவே நான் பிறந்திருக்கிறேன், அரசே. நன்குணர்ந்திருக்கிறேன். இது என் நாள்” என்றான்.

“நமது படைகளை எழுப்பவேண்டும்” என்று சகதேவன் சொன்னான். யுதிஷ்டிரர் “ஏன்?” என்றார். “அரசே, அனைவரும் துயில்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சகதேவன். “வெயில் எழவிருக்கிறது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அவர்களை வெயிலே எழுப்பும்.” திருஷ்டத்யும்னன் “இளையவர் பீமசேனர் எழுந்துவிட்டாரா?” என்றான். “எழுந்துவிட்டார்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “அவன் தென்காட்டுக்குச் சென்று அகிபீனா உண்டு படுத்தான். ஆனால் அரைநாழிகைகூட துயில்கொள்ளவில்லை. நான் சென்று அவனிடம் பேசலாம் என்று எண்ணினேன்… வேண்டாம் என இவன் தடுத்துவிட்டான்” என்றார். திருஷ்டத்யும்னன் “அரசியிடம் செய்தி சொல்லப்பட்டதா?” என்றான். “ஆம், நேற்றே தூதன் சென்று உரைத்துவிட்டான்” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “நம் குடியில் களம்படும் மூன்றாவது மைந்தன் கடோத்கஜன். ஆனால் அன்னைக்கு அவனே முதல் பெயர்மைந்தன். செய்தி அறிந்தால் உளம்தாங்கமாட்டார்கள் என எண்ணினேன். ஆனால் ஒரு சொல்லும் உரைக்காமல் வெறித்த விழிகளுடன் கேட்டிருந்தார்கள், பின்னர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்கள் என்று தூதன் சொன்னான்” என்றார்.

“ஒன்றும் உரைக்கவில்லையா?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “அவன் களம்படுவான் என அன்னைக்குத் தெரிந்திருக்கும்… அவனுக்கு அரசகுருதியில் மணம்புரிந்து வைத்ததேகூட அதன்பொருட்டே என இப்போது தோன்றுகிறது” என்றார் யுதிஷ்டிரர். “நான் எண்ணிப்பார்த்தேன், கடோத்கஜன் இக்களத்தில் இவ்வாறு இறப்பதே நன்று. அக்குடி முற்றாக மாறிவிட்டது. அவர்களின் குடியின் இறுதி அரக்கர்கள் இக்களத்தில் மடிந்தவர்கள்… இன்று பாரதவர்ஷத்தின் மாவீரனாக சூதர்கள் பாட அவன் விண்ணேகினான்.” திருஷ்டத்யும்னன் சலிப்புடன் எழுந்துகொண்டு “நான் களத்திற்குச் செல்கிறேன்” என்றான். “உன் வஞ்சினம் வெல்க!” என்றார் யுதிஷ்டிரர். திருஷ்டத்யும்னன் தலைவணங்கி விடைபெற்றான்.

ele1புலரிவெயில் ஒளிகொண்டு மெல்ல நிமிர்ந்துகொண்டிருந்தது. நிழல்கள் குறுகி தங்கள் பொருட்களை நோக்கி சென்றுகொண்டிருந்தன. திருஷ்டத்யும்னன் தன் புரவியில் படைமுகப்பிற்கு வந்து நின்றான். எங்கும் பூத்திருந்த ஒளி அவனை உளமெழச் செய்தது. புலரிவெளிச்சத்தைப் பார்த்து நெடுநாட்களாயிற்று என்று எண்ணினான். ஒளி ஒரு நீர்மைபோல் முகில்களின் இடைவெளிகளினூடாக நீண்ட சட்டங்களாகி போர்க்களத்தில் விழுந்திருந்தது. களம் நிறைத்து படுத்திருந்த உடல்களின் ஆவி அதில் பொற்புகை என மெல்ல நெளிந்தது. பல்லாயிரம் சிறு பூச்சிகள் அவ்வொளியில் அனல்பொறிகளென சுடர்கொண்டு சுழன்றன. அருகிருந்த காடுகளிலிருந்து பறவைக்கூட்டங்கள் வானில் தங்களை விசிறிக்கொண்டு அலைகளாகச் சுழன்று பின் ஐயம் தணிந்து கீழிறங்கி விழுந்துகிடந்த உடல்கள் மேல் எழுந்து அமர்ந்து கொத்தி சிறகடித்து குரலெழுப்பி ஒளி துழாவி மீண்டும் வந்தமர்ந்தன.

இறப்பின் வெளிக்கு மேல் எரிந்து நின்றிருந்தது எனினும் ஒளி அவையனைத்திற்கும் அப்பாற்பட்ட பிறிதொன்றென்றே தோன்றியது. துஞ்சியும் துயின்றும் கிடந்திருந்த ஒவ்வொருவரையும் வானிலிருந்து வந்து தொட்டு எழுப்ப முயலும் கைகள். அங்கிருந்தோர் விழித்துக்கொண்டால் கனவின் அரைமயக்கில் அச்சாய்ந்த ஒளிப்பாதைகளினூடாக நடந்து விண்ணிலேறிவிட முடியும். எத்தனை தூயது ஒளி. நெருப்பு என்றும் தூயது என்கிறார்கள். நெருப்புக்கும் புகையுண்டு. கெடுமணமும் உண்டு. ஒளியே தூயது. மண்ணைக் கட்டும் எதுவும் ஒளிக்கு இல்லை. காலமில்லை, தொலைவில்லை. அது இங்குள்ளதே அல்ல. ஐம்பெரும்பருக்களுக்கும் அயலானது. அது விண்ணுக்குரியது. ஆனால் அது தொட்டாலொழிய இங்குள்ள எதற்கும் உருவில்லை, வண்ணம் இல்லை. இங்குள்ள அழகனைத்தும் ஒளியின் மாறுதோற்றங்களே. ஒளி நாம் அறிந்திருப்பது அல்ல. நாமறிவது ஒளியின் விழித்தோற்றத்தை மட்டுமே. விழியும் பருப்பொருளே. அங்கே விண்ணில் விழிகளுக்கு அப்பாற்பட்ட சிதாகாயத்தில் ஒளி பிறிதொன்று. அது பிரம்மம்.

அவன் தானிருக்கும் இடத்தையும் பொறுப்பையும் மறந்து அவ்வொளியின் வடிவங்களை பார்த்துக்கொண்டிருந்தான். முகில்களின் விளிம்புகள் கண் கூசும் அளவுக்கு வெண்ணிற எரி சூடியிருந்தன. காலை காலை என்று உள்ளம் கூத்திட்டது. காம்பில்யத்தின் தெருக்களில் புலரியில் எழும் ஒளியில் புரவிச் சாணமும் யானைப் பிண்டமும் எழுப்பும் மெல்லிய நீராவி அலையுறும். புரவியில் தெருக்களினூடாகச் செல்கையில் எங்கும் பசுஞ்சாணத்தின் மணமே நிறைந்திருக்கும். ஆலயமுகப்புகள், இல்லமுகப்புகள் எங்கும் சாணியைக் கரைத்து தெளித்திருப்பார்கள். ஆற்றை நோக்கி இறங்கும் சரிவில் கொட்டில்களிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட பசுக்கள் கூட்டம் கூட்டமாக இறங்கிச் சென்றுகொண்டிருக்கும். அவற்றைச் சூழ்ந்து பறக்கும் சிற்றுயிர்கள் மின்மினிகள் என வெயிலில் ஒளிவிடும்.

நாளும் புலரியில் எழுவதை அவன் தவிர்க்கக்கூடா நோன்பாகக் கொண்டிருந்தான். காம்பில்யத்தின் அரச குடியினர் எவரும் புலரியில் எழுவதில்லை. துருபதர் இரவு துயில்வதற்கு நெடுநேரமாகும். அவை கூடி அமைச்சர்களை அனுப்பிய பின்னர் அணுக்கர்களுடன் நாற்களமாட அமர்வார். இரவெல்லாம் அவருடன் அமர்பவர் அமைச்சரான பத்ரர். ஒவ்வொரு வெற்றியும் மேலும் வெல்வதற்கான வெறியையும் ஒவ்வொரு தோல்வியும் இன்னும் இன்னும் என வஞ்சத்தையும் உருவாக்கும். உடல் தளர்ந்து கைகளிலிருந்து காய்கள் நழுவுவது வரை ஆடிக்கொண்டிருப்பார். எனவே அவர் புலரியொளியை பார்ப்பதே இல்லை. திருஷ்டத்யும்னன் அரிதாகவே மது அருந்துவான். எனவே அவை கூடி முடிந்ததுமே துயின்று முதற்பறவை ஒலியிலேயே எழுந்துவிடுவான். எழுந்ததுமே முதல் எண்ணம் ஆற்றின் குளிர்நீரொழுக்குதான்.

காலைஒளி விரிந்த ஆற்றில் நீராடுவது அன்றைய நாள் முழுக்க உவகையை அளித்துவிடுகிறது என்று துரோணர் முதல்நாளிலேயே அவனிடம் சொன்னார். துரோணரின் குருநிலையில் முதல்ஒளி நோக்கி நீரள்ளி விட்டு அதர்வ வேதம் உரைத்து எழுகையில் அன்றைய கல்வி பெரும்பாலும் முடிந்திருக்கும். அதன் பின்னர் நூல்பயில்தலும் காடுகளுக்குள் உலாவுதலும் தோழர்களுடன் உரையாடுவதும் அவரவர் விருப்பப்படியே நிகழும். “புலரியில் எழும் தெய்வங்கள் மானுடரிடம் சொல்கின்றன, இங்குள்ள அனைத்தும் புதியவை என்று. நோக்கு விழிதொட்டு விலகும் கணத்திலேயே இங்கு ஒவ்வொன்றும் பழையதாகிக்கொண்டிருக்கிறது. மலர்கள் வாடத்தொடங்கிவிடுகின்றன பனித்துளிகள் உதிரத்தொடங்கிவிடுகின்றன. முகில்கள் எரிந்து எழுகின்றன. புதிய உலகு புதிய எண்ணங்களுடன் நம்முன் வருகிறது. புதிய கனவுகளை அளிக்கிறது. புலரியில் எழுபவன் ஒவ்வொரு நாளும் புதியவனாக பிறந்தெழுகிறான்.”

துரோணர் என்றும் கூரிய அம்பின் ஒளியைப் பார்த்தபடி கண்விழித்தார். அவருடைய மஞ்சத்திற்கு அருகே கூர்மின்னும் அம்பு வைக்கப்பட்டிருக்கும். அவன் முன்னரே சென்று குடில்வாயிலில் நின்றிருப்பான். அவர் மெல்லிய குரலில் தன் ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னபடி விழித்தெழுவார். கண்களைத் திறக்காமல் கைநீட்டி அந்த அம்பை எடுத்து கண்ணெதிரே கொண்டுவந்து விழிதிறந்து அதன் ஒளியை சிலகணங்கள் நோக்கி நுண்சொற்களால் அதை வாழ்த்தியபின் எழுந்து அவனை நோக்குவார். ஒருமுறை அவன் அதைப்பற்றி அவரிடம் கேட்டான். “படைக்கலத்தில் விழிதிறக்கிறீர்கள், ஆசிரியரே, நான் பிறிதெவரும் இவ்வாறு செய்வதை கேள்விப்பட்டதே இல்லை.” துரோணர் புன்னகையுடன் மலர்களை நோக்கி நடந்தபடி “பிறிதெதை நோக்கவேண்டும் என எண்ணுகிறாய்?” என்றார். “இந்த மலர்களை. இளந்தளிர்களை” என்று அவன் சொன்னான். “அந்தணர் சுடரொளியை நோக்குவர். துர்வாசர் மெல்லிய இறகுகளை முதலில் நோக்குவார்.”

“அம்பு ஒரு அகல்சுடர் அல்லவா?” என்றார் துரோணர். “அழகிய மலரிதழ். இளந்தளிரின் கூர் அம்புக்கு உண்டு. இறகின் மென்மையும் அம்பிலுண்டு.” அவன் அவரை நோக்கிக்கொண்டு நடந்தான். “அம்பு வெறும் படைக்கலம் அல்ல. அது ஒரு கருவியென இங்கே தோன்றியது. மானுடனைக் காத்தது, உணவூட்டியது, அவன் கையும் நாவும் கண்ணும் நகமும் பல்லும் ஆனது. அவன் குடிபெருகச் செய்தது. அவனுடன் உறக்கிலும் விழிப்பிலும் இருந்தது. அதை தவமென இயற்றினர் நம் முன்னோர். தவம் சென்றுபடியும் செயல் கலையாகிறது. கலை அழகை உருவாக்குகிறது. அழகின்பொருட்டு அது சுற்றிலும் தேடுகிறது. தொட்டுத்தொட்டு அனைத்து அழகுகளையும் அறிந்து அதை தான் நடிக்கிறது” என்று துரோணர் சொன்னார். “கலை முதிர்கையில் அது வேதமாகிறது. கலை என்பது நிகழ்வு. நிகழ்வின் நெறிகளை மட்டும் தொட்டுச் சேர்த்தால் அது சொல். சொல்லிச் சொல்லி கூர்கொண்ட சொல் வேதம்.”

குருக்ஷேத்ரக் களத்தில் ஒவ்வொரு நாளும் கருக்கிருளிலேயே எழுந்து அவைசூழ்ந்து களம் வந்து முதலொளியிலேயே படைக்கலம் எடுத்து வெற்றிமுழக்கமிட்டு போர்நிகழ்த்தத் தொடங்கினாலும் ஒரு நாளும் புலரியாடவில்லை. இக்களம் வந்தபின் இதுவே முதல் புலரி. அச்சொல் எழுந்ததுமே அவன் மெய்ப்பு கொண்டான். புலரி, முதற்புலரி. இனி ஒரு புலரி இல்லை எனில் இதன் மதிப்பு என்ன? அருமணிகள் புலரியின் சிறு துளிகள். இது அருமணிகளின் பெருங்கடல். அவன் மீண்டும் மீண்டும் மெய்ப்பு கொண்டான். வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் அங்கு நின்று நினைவுகூரமுடியும் எனத் தோன்றியது. அவன் உடல் குளிரில் நடுங்கியது. குளிர்தான், கொடிகள் எழுந்து பறக்க தென்காற்று வந்து அவனை தழுவிச் சுழன்றது. மணிகள் ஓசையிட்டன. குதிரைகள் கனைத்தன. காற்று மேலும் விசைகொண்டு கடந்துசெல்ல கவசங்களுக்குள் காதில் ஓசை சீறியது.

அக்கணம் கௌரவப் படைகளில் இருந்து அலை எழுவதுபோல் ஓசை புறப்பட்டது. வில்லையும் அம்பையும் கையிலெடுத்தபடி அவன் திரும்பி நோக்க கௌரவப் படையின் தென்கிழக்கு மூலையிலிருந்து மறுஎல்லை நோக்கி ஓர் அலை சுருண்டு செல்வதை கண்டான். படையினர் எழுந்தமர்ந்து ஓலமிட்டனர். தலையை பற்றிக்கொண்டு குனிந்தும் எழுந்தும் அவர்கள் தவிப்பதைக் கண்டு திகைத்து கண்கள்மேல் கை வைத்து நோக்குகூர்ந்தான். கொடுந்தெய்வமொன்றின் மூச்சுக்காற்று அவர்கள் மேல் பட்டதுபோல. அல்லது அனலெழுந்து பரவுகிறது. சகுனியின் போர்முரசு நடைமாறி வெறிகொண்டு ஒலிக்கத் தொடங்கியது. எழுந்தவர்கள் அவ்வொலியை கேட்டனர். ஒருவரோடொருவர் முட்டி மோதினர். பின்னர் தென்கிழக்கு மூலையிலிருந்து கௌரவப் படை நெளிந்து ஓர் அலையென்றாகி எழுந்துவந்து பாண்டவப் படையை தாக்கத் தொடங்கியது. நீண்ட ஆடை ஒன்றின் ஒரு மூலையைப் பற்றி இழுப்பதுபோல எனத் தோன்றியது.

பாண்டவப் படையின் முகப்பில் மிகச் சிலரே எழுந்து நின்றிருந்தனர். பலர் படைக்களத்தில் அமர்ந்திருந்தனர். கௌரவப் படை வந்து அறைந்து எழுந்தவர்களின் தலைகளை கொய்தெடுத்தது. மிதிபட்டு அலறியவர்களை வேல்களால் குத்தி சுழற்றியிட்டனர். திருஷ்டத்யும்னன் தன் இடது கால் துடித்துக்கொண்டிருக்க வில்லை இறுகப் பற்றியபடி பாண்டவப் படையை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களை எழுப்புவதற்கு எந்த வழியுமில்லை. பிறிதொன்று அங்கு நிகழவேண்டும். விண்ணிலிருந்து அவர்கள் அனைவர் கனவுக்குள்ளும் சென்று முழங்கும் முரசொலியுடன் தெய்வமொன்று எழவேண்டும். தன் விழிகள் கற்பனையை நனவெனக் காட்டுகின்றனவா என்று ஐயுறும்படி பாண்டவப் படை பின்வாங்கி சுருண்டு பின்னர் ஓர் அலைவளைவென்றாகி எழுந்து வந்து கௌரவப் படையை எதிர்கொள்வதை கண்டான்.

பல்லாயிரம் படைவீரர்கள் களத்தில் விழுந்து துயின்றுகொண்டிருந்த நிலையிலிருந்தே வேல்களையும் வாள்களையும் விற்களையும் எடுத்தபடி களம் புகுந்தனர். தேர்களிலும் புரவிகளிலும் ஏறிக்கொண்டனர். யானைகளையும் அத்திரிகளையும் பற்றி வழிநடத்தினர். எந்த ஆணையுமிலாது பாண்டவப் படை முந்தைய நாள் போர் முடியும்போதிருந்த அதே சூழ்கையை தான் அடைவதை அவன் கண்டான். அச்சூழ்கை ஒரு நுண்வடிவென அவர்களுக்குள் இருந்தது போலும். அச்சூழ்கையிலேயே அவர்கள் துயில்கொண்டிருந்தார்கள். அவர்கள் உலவிய அக்கனவுகளிலும் அச்சூழ்கை இருந்தது. விழித்து எழுந்த கணமே மறுஎண்ணமின்றி அச்சூழ்கையில் தங்களிடத்தில் சென்று அமைந்தனர்.

திருஷ்டத்யும்னன் தன் கையை உயர்த்தி “தாக்குங்கள்! எழுந்து போரிடுங்கள்! பின்னடைய வேண்டாம்! ஒருகணமும் தயங்க வேண்டாம்! வெற்றி நம்முடையதே! வெற்றிவேல்! வீரவேல்!” என்று ஆணையிட்டபடி பாண்டவப் படைகளின் முகப்பில் நின்று கௌரவர்களை எதிர்கொண்டான். இரு படைகளும் ஊடுகலந்து போரிடத் தொடங்கியபோது சில கணங்களிலேயே அந்தப் போர் முந்தையநாள் அந்தியில் நிகழ்ந்ததன் நீட்சி என்று தோன்றியது. நடுவே ஓர் இரவு கடந்து சென்றதே மறந்துவிட்டதுபோல.

படைமுகப்பில் துரோணரின் தேர் எழுந்து அணுகுவதை திருஷ்டத்யும்னன் கண்டான். எதிரே இருந்து எழுந்த காலை ஒளியில் அவருடைய தாடி அனல்விழுதுகளென சுடர்ந்து நெளிந்தது. அவருடைய கவசங்களில் செம்மை தளும்பியது. அவர் தொடுத்த அம்புகள் மின்னி மின்னி எழுந்து வந்து பாண்டவப் படைகளை அறைந்தன. அவன் தன்னை மறந்து அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவருடைய பறந்து சுழன்ற கைகளை. விழிதாழ்த்தி அவர் கால்களை பார்த்தான். பின்னந்தியில் அவர் துயில்கொள்கையில் அக்கால்களை அவன் மெல்ல வருடிக்கொண்டிருப்பான். அழுத்துவது அவருக்கு பிடிக்காது. மெல்லிறகால் என நீவிவிடவேண்டும். அவன் உள்ளத்தால் அக்கால்களை வருடினான். பின்னர் தன் வில்லைக் குலைத்து நாணேற்றி முதல் அம்பை அவரை நோக்கி தொடுத்தான்.

முந்தைய கட்டுரைதி.க.சியும் ஒரு கடிதமும்
அடுத்த கட்டுரைநாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்