‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42

ele1அவையில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். அந்த ஓசை ஒரு மந்தணப்பேச்சுபோல ஒலித்துக்கொண்டிருக்க அஸ்வத்தாமன் தன் படைசூழ்கையை தோல்சுருளில் இறுதியாக வரைந்துகொண்டிருந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “பணிமுடியவில்லையா?” என்றான். “இல்லை, நான் இன்று எட்டு வெவ்வேறு சூழ்கைகளை வகுத்துவிட்டேன். எதுவுமே சரியாக அமையவில்லை. திரும்பத் திரும்ப பிழைகளையே காண்கிறேன்” என்றான் அஸ்வத்தாமன். “வழக்கமாக ஒரே கணத்தில் ஒரு சூழ்கையை முடிவுசெய்வீர்களே?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நான் எண்ணிப்பார்ப்பதே இல்லை. படையிலிருந்தே அதை பெறுவேன். இன்று ஒன்றுமே தோன்றவில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

பூரிசிரவஸ் “வழக்கமாக படைகளைப் பார்த்தபடி காவல்மாடத்தில் நின்றிருப்பீர்கள்” என்றான். “ஆம்” என்று மட்டும் அஸ்வத்தாமன் சொன்னான். “இன்று நானும் படைகளை பார்க்க விரும்பவில்லை. படைகள் மாபெரும் குவியாடிபோல என் உணர்ச்சிகளை பல்லாயிரம் மடங்காக பெருக்கிக் காட்டுபவை. உவகையை, சோர்வை, சலிப்பை. இன்று நான் என் உணர்ச்சிகளை பெருக்கிக்கொள்ள விழையவில்லை.” அஸ்வத்தாமன் அதற்கு மறுமொழி ஏதும் சொல்லாமல் தோல்சுருளில் வரைந்தான். “உச்” என ஓசையிட்டபடி தோல்சுருளைச் சுருட்டி அப்பால் வைத்தபின் “அனைவரும் வந்துவிட்டார்களா?” என்றான்.

பூரிசிரவஸ் “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். அவன் மேலும் பேச விழைந்தான். “நான் உணர்வதென்ன என்று தெரியவில்லை, பாஞ்சாலரே. எனக்கு எந்தக் குற்றவுணர்ச்சியுமில்லை. என் மைந்தரின் இறப்புக்குப் பின்னர் நான் எதையும் பொருட்டெனக் கருதவில்லை. சொல்லப்போனால் என் அகம் விந்தையான நிறைவையே அடைகிறது” என்றான். “ஆனால் படைகள் சோர்வும் சலிப்பும் கொண்டிருக்கின்றன. போர்முடிவை அறிவித்து முரசொலித்ததும் எந்த வெற்றிக்குரலும் எழவில்லை. என் செவிகள் அடைத்துக்கொண்டதுபோல் உணர்ந்தேன். அத்தனை அமைதியாக நம் படைகள் இதுவரை கலைந்ததில்லை.”

“சிலர் வேண்டுமென்றே வாழ்த்தொலிகளை எழுப்ப முயன்றனர். ஆனால் படை எதிரொலிக்கவில்லை. அவை தேய்ந்து மறைந்தன. அவ்வொலியை எழுப்பியவர்கள் உடல்களுக்குள் மூழ்கி தங்களை ஒளித்துக்கொண்டார்கள். இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று நான் திகைத்தேன். வரும் வழியெங்கும் பார்த்தேன். அத்தனைபேரும் துயர்கொண்டிருக்கிறார்கள். பலர் விம்மி அழுகிறார்கள். அனைவரும் நேராக குடி நோக்கியே செல்கிறார்கள்.” அஸ்வத்தாமன் “அவர்களின் இளவரசன் அல்லவா?” என்றான். “ஆம், ஆனால் இங்கே நூற்றுக்கணக்கில் இளவரசர்கள் இறந்திருக்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். அஸ்வத்தாமன் ஒன்றும் சொல்லவில்லை. “அத்தனைபேருக்கும் கணக்குகள் இருக்கின்றன” என்று பூரிசிரவஸ் தலையை அசைத்துக்கொண்டான்.

துச்சகன் உள்ளே வந்து தலைவணங்கினான். “அரசர் எழவில்லையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவர் அவையெழப்போவதில்லை. நேராக பாடிவீட்டுக்குச் சென்றார். மதுவருந்தத் தொடங்கினார். தன்னினைவே இல்லாது படுத்திருக்கிறார்” என்றான் துச்சகன். “அங்கர்?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “அவர் தன் பாடிவீட்டுக்குச் சென்றார். அவரும் மூக்குவார மதுதான் அருந்திக்கொண்டிருக்கிறார்.” அஸ்வத்தாமன் “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை” என்றபின் சலிப்புடன் அவையை நோக்கிவிட்டு “எங்கே காந்தாரர்?” என்றான். “வந்துகொண்டிருக்கிறார்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

சகுனியும் சலனும் சேர்ந்தே வந்தார்கள். சுபலர் சல்யர் தொடர வந்தார். கிருபரும் சோமதத்தரும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே வந்தார்கள். அரசர்கள் பெரும்பாலும் வந்துவிட்டிருப்பதை அஸ்வத்தாமன் கண்டான். “இனி எவருமில்லை. அவையை தொடங்கிவிடலாம்” என்றான். “ஆசிரியர் துரோணர் வரவில்லையே” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அவர் வரமாட்டார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “எனில் எதற்கு அவை?” என்றான் பூரிசிரவஸ். “நாம் நாளைய படைசூழ்கைக்கு அவையொப்புதல் கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான் அஸ்வத்தாமன். “அதை சுருக்கமாக முடித்து அவையை கலைப்போம். வேறென்ன செய்வது?”

ஜயத்ரதன் கிருதவர்மனுடன் தலையை ஆட்டி விசைகொண்டு பேசியபடி வந்தான். அத்திரளில் அவன் மட்டுமே மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தோன்றியது. கிருதவர்மன் அவன் பேச்சை உளம்கொள்ளாமல் சூழ்ந்திருந்த அரசர்களை நோக்கிக்கொண்டு வந்தான். அவர்கள் பிற அரசர்களுக்கு வணக்கம் தெரிவித்து முகமனுரைத்தபடி இருக்கைகளில் அமர்ந்தனர். அரசர்களில் ஒருவர் எழுந்து சென்று இன்னொருவரிடம் குனிந்து பேசிக்கொண்டிருந்தார். ஏவலர்கள் இன்னீரும் வாய்மணமும் பரிமாறியபடி சுற்றிவந்தனர். வெளியே படைகள் துயில்கொள்ள அறிவுறுத்தியபடி கொம்புகள் ஒன்றுதொட்டு இன்னொன்று என முழக்கமிட்டன.

சல்யர் கைகளை நீட்டி உடலை நெளித்து கோட்டாவி விட்டபின் திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி உரத்த குரலில் “அரசர் வரவில்லையா என்ன?” என்றார். துச்சகன் அவர் அருகே ஓடிச்சென்று மண்டியிட்டு விளக்கத் தொடங்கினான். அஸ்வத்தாமன் சகுனியை அணுகி நிலைமையை விளக்கினான். சகுனி “அவை தொடங்கட்டும்… அரசர் தேவையில்லை” என்றார். அஸ்வத்தாமன் பூரிசிரவஸிடன் தலையசைக்க அவன் மேடையிலேறி அவைத் தொடக்கத்துக்கான முறைமைச் சொற்களை உரைத்தான். அவையில் எந்த ஆர்வமும் எழவில்லை. பூரிசிரவஸ் “நாம் அறிந்தவரை பாண்டவப் படைகள் சோர்ந்துவிட்டிருக்கின்றன. யுதிஷ்டிரர் சோர்ந்து விழுந்துவிட்டார் என்கிறார்கள். உடல்நலிந்திருக்கும் பார்த்தர் உள்ளமும் ஒடுங்கிவிட்டார். நாளை போர்நிகழுமா என்பதே ஐயத்திற்குரியது” என்றான்.

அவையில் எதிர்வினை என ஏதும் எழவில்லை. “மெய், நமக்கும் சற்று சலிப்பு உள்ளது. நம் படைகள் விழையாத சிலவற்றை நாம் போர்சூழ்கையின் பொருட்டு செய்ய நேர்ந்துள்ளது. ஆனால் நாம் வென்றுகொண்டிருக்கிறோம். பெரும்பாலும் நாளையே போர் முடிந்துவிடும். நம் படைகள் இல்லம் திரும்பும். நாம் நம் நிலங்களை அடைவோம்… நாம் எண்ணிவந்தவை எல்லாம் நிறைவேறும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அவர்களின் உளச்சோர்வுதான் நாம் இலக்காக்கியது. அது நிகழ்ந்துள்ளது.”

“நாம் மேலும் உளச்சோர்வடைந்துள்ளோம்” என்று கிருதவர்மன் சொன்னான். “எங்கே அரசர்? எங்கே அங்கரும் துரோணரும்?” பூரிசிரவஸ் “அவர்களும் உளச்சோர்வடைந்துள்ளனர் என்பது மெய். அபிமன்யு நம் அரசரால் வளர்க்கப்பட்ட மைந்தன். அவரால் அத்துயரிலிருந்து எளிதில் வெளிவர இயலாது. ஆனால் அவர் நாளை புதிய விசையுடன் எழுவார். நாளை நாம் அடையப்போகும் வெற்றியை வகுக்கும் சூழ்கை அமைக்கப்பட்டுள்ளது. அதை அஸ்வத்தாமர் அவைமுன் வைப்பார்” என்றான். கிருதவர்மன் “அரசர் என்று அமர்ந்து அச்சூழ்கையை ஒப்பவிருப்பவர் யார்?” என்றான். “காந்தாரர் சகுனி அரசரின் மாதுலர். அவர் ஒப்புக்கொண்டால் போதும்” என்றான் பூரிசிரவஸ்.

“சூழ்கை என்ன?” என்று சல்யர் கேட்டார். அங்கிருந்த எவரும் அதில் எவ்வகையிலும் ஆர்வம் கொள்ளவில்லை என்று தெரிந்தது. அஸ்வத்தாமன் “சகடச்சூழ்கை…” என்றான். “அதுவே உகந்தது என்று படுகிறது. நம் தரப்பின் வீரர்கள் அனைவருக்கும் இணையான இடமளிப்பது. மேலும் நாளை பாண்டவர்களின் தரப்பில் எந்த எழுச்சியும் இருக்காது. நாம் எழுந்துசென்று தாக்கி அவர்களை சூழ்ந்துகொள்ள முடியும். அவர்களின் முகப்புவீரர்கள் அனைவரையுமே வண்டிக்குள் இழுத்து சிறைப்படுத்தலாம்…” சகுனி “முன்னரே வகுத்த சூழ்கையை அப்படியே மீண்டும் அமைத்திருக்கிறீர்கள்” என்றார். அஸ்வத்தாமன் “ஆம், நம்மிடம் பெரிய இழப்புகளேதுமில்லை. சூழ்கை அவ்வண்னமே அமையலாம்” என்றான்.

துச்சலன் அவைக்கு வெளியே வந்து நின்றான். “என்ன?” என்று வினவியபடி அஸ்வத்தாமன் திரும்பி நோக்கினான். “ஒரு முனிவர்… அவைக்குள் வந்து அரசரிடம் பேசவேண்டும் என்கிறார். எச்சொல்லும் செவிகொள்ள மறுக்கிறார்” என்றான் துச்சலன். “முனிவரா? இது போரவை. நாம் சூழ்கை வகுத்துக்கொண்டிருக்கிறோம்” என்றான் அஸ்வத்தாமன். கிருபர் “முனிவர்கள் போர்க்களத்திற்கு வருவதில்லையே. யார்?” என்றபடி எழுந்தார். துச்சலனை உந்திக் கடந்து ஓங்கிய உருவம் கொண்ட முதிய முனிவர் உள்ளே வந்தார். நரைத்த தாடியும் குழல்கற்றைகளும் சடைத்திரிகள் கலந்து தொங்கின. புலித்தோலை தோளுக்குக் குறுக்காக அணிந்திருந்தார். உரத்த குரலில் அவையை நோக்கி “இங்கே அஸ்தினபுரியின் அரசன் இல்லையா? என் பெயர் பிருஹத்காயன்… நான் சிந்துவின் முன்னாள் அரசன். ஜயத்ரதனின் தந்தை” என்றார்.

அதுவரை அப்பால் திரும்பி ஏதோ பேசிக்கொண்டிருந்த ஜயத்ரதன் திகைப்புடன் எழுந்து “தந்தையே!” என்றான். ஓடிவந்து அவர் அருகே குனிந்து கால்களைத் தொட்டு வணங்கி “தந்தையே, தாங்களா?” என்றான். அவர் அவன் தலையைத் தொட்ட பின் “நானே என்னை முறைப்படி அறிமுகம் செய்துகொள்கிறேன். ஏழு நதிகளால் பேணப்படும் சிந்துநிலத்தின் அரசகுடியில் பிறந்தவன் நான். எங்கள் தொல்மூதாதை பிரகதிஷு. அவர் மைந்தர் பிரகத்ரதர். அவருக்குப் பிறந்தவர் உபபிரகதிஷு. அவர் புதல்வர் பிரகத்தனு. அவருடைய மூத்த மைந்தர் பிருகத்பாகு. அவருக்குப் பின் அரியணை அமர்ந்த என் பெயர் பிருஹத்காயன். மைந்தனுக்கு அரியணையை அளித்துவிட்டு கானேகினேன்” என்றார்.

சகுனி எழுந்து “அரசர் இங்கே அவையில் இல்லை. அரசரின் மாதுலனாகிய நான் காந்தாரநாட்டினன். சுபலரின் மைந்தன். என் பெயர் சகுனி. தங்களை அவையமர்ந்து எங்களை வாழ்த்தும்படி தலைவணங்கி கோருகிறேன்” என்றார். “நான் வாழ்த்துகூற இங்கே வரவில்லை. இங்கே போர் நிகழும் செய்தியை நான் அறிந்திருந்தேன். மிக அருகிலேதான் என் தவச்சாலை. இன்று சற்றுமுன் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது, என் மைந்தனைக் கொல்ல அர்ஜுனன் வஞ்சினம் உரைத்திருப்பதாக… அக்கணமே கிளம்பி இங்கே வந்தேன்…” என்றார்.

“இத்தனை விரைந்தா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். கைவீசி அவனைத் தவிர்த்து “அதற்குரிய வழிகள் எங்களுக்குள்ளன” என்று சொன்ன பிருஹத்காயர் “என் மைந்தனை நாளை அந்திக்குள் கொல்வேன் என்றும் இல்லையேல் அந்தியில் தன் அம்பால் தன் கழுத்தை வெட்டிக்கொண்டு களத்திலேயே வீழ்வேன் என்றும் அர்ஜுனன் வஞ்சினம் உரைத்திருக்கிறான்” என்றார். ஜயத்ரதன் “தந்தையே!” என்று கூவினான். “அது உண்மை. அதை அறியும் வழி எனக்குண்டு…” என்றார். சகுனி “முனிவரே, போர்க்களத்தில் வஞ்சினங்கள் இயல்பானவை” என்று சொல்லத் தொடங்க “ஆம், ஆனால் பாரதவர்ஷத்தின் முதன்மை வில்லவன் எடுத்த வஞ்சம் எளிதான ஒன்றல்ல. அவனுடன் இருப்பவன் இந்த யுகத்தின் தலைவன்” என்றார்.

சுபலர் “முனிவரே…” என சொல்லெடுக்க பிருஹத்காயர் அவரை கைநீட்டி நிறுத்தி “நான் முனிவன் அல்ல. தவம்புரியவே கானேகினேன். இவ்வுலகில் அனைத்தையும் கட்டவும் கடக்கவும் திறன்பெற்றேன். மாமுனிவர் செல்லாத இடங்களுக்கும் செல்லும் சொல்லும் பெற்றேன். ஆனால் மெய்மை என்னை அணுகவேயில்லை. ஏனென்றால் என்னை இப்புவியுடன் சேர்த்துக் கட்டியிருப்பது இவன்மேல் நான் கொண்டுள்ள பற்று. பத்தாண்டுகள் அதை அறுக்கப் போராடினேன். பின்னர் அறிந்தேன், நான் அதை இப்பிறவியில் அறுக்கவியலாது என்று. எனில் என்னை ஆளும் தெய்வம் அதுவே என உணர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் அதையே தவமெனக் கொண்டேன்” என்றார்.

“அர்ஜுனன் அல்ல, புடவியை சமைத்து காத்து அழித்தருளும் மூவருமே ஆயினும் என் மைந்தனைக் கொல்ல எவரையும் விடமாட்டேன். அச்செய்தியை அறிந்ததுமே கிளம்பி வந்தேன்” என்று பிருஹத்காயர் சொன்னார். “ஆம், அவன் நாளை சைந்தவரை கொல்லப்போவதில்லை” என்று சகுனி உரக்கச் சொன்னார். “அவரை கொல்வேன் என்றுதான் வஞ்சினம் உரைத்திருக்கிறான். அவர் போருக்கெழுந்தால் கொல்வேன் என்று அல்ல. நாளை சைந்தவர் போர்முனைக்கே செல்லப் போவதில்லை. கௌரவப் பெரும்படைக்கு நடுவே போர்முனையிலிருந்து மிகமிக விலகி கவசப்படைகள் சூழ்ந்த இடத்தில் இரும்புக்கூண்டுக்குள் கொடியோ அடையாளமோ இன்றி அமர்ந்திருக்கப் போகிறார். நாளை புலரி எழுந்து அந்தி அணைவதுவரை வெளியே வரப்போவதில்லை. அவரை எப்படி கொல்லப்போகிறான் என்று பார்ப்போம்.”

அவையினர் ஒருகணம் கழித்தே அதை முழுமையாக புரிந்துகொண்டார்கள். உரக்கக் கூச்சலிட்டபடி தங்கள் கைகளைத் தூக்கி வீசினர். சலன் எழுந்து “ஆம், இது அவனே வந்து சிக்கிக்கொண்ட பொறி. ஒருநாள், ஒருநாளை நாம் கடக்கமுடிந்தால் அம்பில்லாமல் அவனைக் கொல்லலாம். அவர்களை முழுமையாகவே வீழ்த்திவிடலாம்” என்றான். கிருதவர்மன் “வண்டிச்சூழ்கை அதற்கு மிக உகந்தது. அவர் அதற்கு நடுவே இருக்கட்டும். வண்டியின் முகப்பில் மட்டுமல்ல, நான்கு முனைகளிலும் முதன்மை வில்லவர் நிலைகொள்ளட்டும். எப்படி உள்ளே வருகிறான் என்று பார்ப்போம்…” என்றான். அவை களிவெறிகொண்டு ஆர்ப்பரித்தது.

அவர்கள் உளம்சோர்ந்திருந்தனர். உளச்சோர்வு கொண்டவர்களின் ஆழம் விடுபட விழைகிறது. ஆகவே அதற்குரிய சிறிய வாய்ப்பையும் அது தவறவிடுவதில்லை என்று அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டான். அலையலையாக அவை எழுந்தமைந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது. அஸ்வத்தாமன் எழுந்து கைவிரித்து அவர்களை அமரச்செய்ய முயன்றான். சகுனி எழுந்து கைவீசியதும் அவை மெல்ல அடங்கியது. சகுனி “சலன் சொன்னது மெய். அவன் சிக்கிக்கொண்ட பொறி இது. அவன் ஆணவம் மிக்கவன். அவனை அவன் ஆணவத்தாலேயே அழிக்கவேண்டும் என தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன போலும்” என்றார்.

அஸ்வத்தாமன் “அவரால் நம் படைகளைக் கடந்துவந்து ஒருபோதும் சைந்தவரை அணுகமுடியாது. ஐயமே தேவையில்லை” என்றான். கிருதவர்மன் “பெருந்திறலும் அதற்கிணையான ஆணவமும் கொண்டவர்கள் தங்கள் ஆழத்திலிருக்கும் பற்று ஒன்றால்தான் அழியவேண்டும் என்பது ஊழ்நெறி. அவன் அழியவேண்டியது இவ்வண்ணமே” என்றான். அவையினர் கூச்சலிட்டுக் கொந்தளித்தனர். சல்யர் “அவன் உள்ளம் மைந்தன் மீதான பற்றால் பேதலித்திருக்கிறது… இல்லையேல் இப்படி ஒரு வஞ்சினத்தை உரைத்திருக்க மாட்டான். போரில் குறிப்பிட்ட ஒருவரைக் கொல்லாமல் மீளமாட்டேன் என அறிவிலியே வஞ்சினம் உரைப்பான். ஏனென்றால் போர்க்களத்தில் தனியொருவனைத் தேடுவது புல்வெளியில் தானியமணியைத் தேடுவதுபோல…” என்றார்.

“ஆம். போர் ஒரு நாற்களம். அங்கே எவர் எவரை சந்திக்கிறார் என்பதை எல்லா கணிப்புகளுக்கும் அப்பால் தெய்வங்களே முடிவெடுக்கின்றன” என்றார் கிருபர். “ஆகவேதான் ஐயுறுகிறேன், மெய்யாகவே அந்த வஞ்சினத்தை அவன் உரைத்தானா? அவை நடுவே உரைத்தால் மட்டுமே அது வஞ்சினம். உற்றார் நடுவே, மருத்துவநிலையில் சொல்லும் உணர்ச்சிச் சொற்களை அவ்வாறு சொல்லமுடியாது” என்றார் சல்யர். சகுனி “மத்ரரே, அவனைச் சூழ்ந்து எப்போதும் தெய்வங்கள் உள்ளன என்பார்கள். ஆகவே அவன் கனவில் உளறினாலும் அச்சொற்களுக்கு பொறுப்பேற்றாகவேண்டும்” என்றார். “அவன் பெருந்துயரில் இருந்திருக்கவேண்டும். முற்றாகவே உளமழிந்திருக்கவேண்டும். அவ்வஞ்சினம் வழியாக அவன் விசைமீண்டு வருவதென்றால் அதுவும் நன்றே என அவர்கள் எண்ணியிருக்கலாம்.”

அவையினர் கலைந்து பெருங்குரலில் பேசிக்கொண்டிருக்க ஜயத்ரதன் எழுந்து “அவையினர் பொறுத்தருள்க! தந்தை என்மேல் முனியாதொழிக!” என்றபோது திரையை இழுத்துச் சுருக்கியதுபோல் ஓசைகளடங்கி அவை அமைதிகொண்டது. “நான் போர்க்களத்திலிருந்து ஒளிந்துகொள்ள விழையவில்லை” என்று ஜயத்ரதன் சொன்னான். “நான் மறைந்திருக்கப் போவதில்லை. அவ்வாறு உயிர்பிழைத்து இழிபுகழ்பெற்று வாழ்வதைவிட மடிவதே மேல் என்றே என் அகம் சொல்கிறது. என்னை விட்டுவிடுங்கள். நான் அவன் முன் களத்தில் நிற்கிறேன்…” பிருஹத்காயர் “என்ன சொல்கிறாய், மூடா!” என்றபடி எழுந்து கையை ஓங்கியபடி அவனை நோக்கி வந்தார்.

சகுனி “சைந்தவரே!” எனக் கூவி அவரை நிலைகொள்ளச் செய்தார். “உங்கள் அரண்மனை அல்ல இது. கௌரவப் பேரவை!” என்றார். பிருஹத்காயர் சீற்றத்துடன் தலையசைத்தபடி “அறிவிலி! வீணன்!” என்று பற்களைக் கடித்தார். “தந்தையே, ஒருபோதும் உங்கள் விழிமுன் வீரனாகவோ ஆண்மகனாகவோ நின்றிருந்ததில்லை நான். என்னை உங்கள் கைகளுக்குள் பொத்திப்பொத்தி வளர்த்தீர்கள். நோயாளியாக மட்டுமே என்னை கருதினீர்கள். ஒருவேளை என் இளமைக்கால வேண்டுதலை செவிகொண்டே தெய்வங்கள் இவ்வண்ணம் ஒரு சூழலை அமைத்தன போலும். நான் உங்கள் கண்முன் ஆண்மகன் என நின்றுகாட்டுகிறேன். வெல்லாதொழியலாம், களம்படலாம். ஆனால் பாரதவர்ஷத்தின் பெருவில்லவன் முன் இரு நாழிகைப் பொழுதேனும் நின்றுபொருதுவேன்” என்றான்.

“அறிவிலி! அறிவிலி!” என்று கூவியபடி பிருஹத்காயர் எழுந்து கையை ஓங்கியபடி ஜயத்ரதனை நோக்கி பாய்ந்தார். அவரை தடுக்க முயன்ற பூரிசிரவஸை தள்ளி வீழ்த்திவிட்டு மைந்தனை அணுகி அவனை அறையும்பொருட்டு கைதூக்கி பின் தளர்ந்து கைதாழ்த்திக்கொண்டார். சல்யர் எழுந்து அவரைப் பிடித்து அப்பால் விலக்கிச் சென்றார். ஜயத்ரதன் “நான் ஒளிந்துகொள்ள மாட்டேன். இவர்முன் சிறுமைகொள்ள மாட்டேன். நான் நின்றுபோரிடுவேன்… ஐயமே வேண்டியதில்லை…” என்றான். “எனில் உன்னை இங்கேயே நானே கொன்றுவீசுகிறேன். கிழ்மகனே, சிறுமையனே” என்று பிருஹத்காயர் கூச்சலிட்டார். அவரை பிடித்திருந்த சல்யரை உதறிவிட்டு தன் கையிலிருந்த பெரிய யோகக்கழியை தூக்கினார். அது ஒரு நாகமென்றாகியது. அதன் நாபறக்க விழிகள் ஒளிர்ந்தன.

சகுனி “முனிவரே, அமர்க!” என்று ஆணையிடும் குரலில் சொன்னார். “இவன் என் சொல்லை மீறுகிறான். என்னை இழிவுசெய்கிறான். என் சுட்டுவிரல் இவன். என் ஒரு துளி…” என்று பிருஹத்காயர் கூச்சலிட்டார். அவர் தலை நடுங்கிக்கொண்டிருக்க ஒரு கண்ணிலிருந்து நீர் வழிந்தது. “எனில் சென்று கொல்க…” என்றார் சகுனி. “மத்ரரே, அவரை விட்டுவிடுங்கள்… அவர் மைந்தனை கொல்லட்டும். ஏனென்றால் அவர் தன் கைகளால் மைந்தனைக் கொல்வார் என்றுதான் நிமித்தக்கூற்று எழுந்துள்ளது.” பிருஹத்காயர் தளர்ந்து பின்னடைந்து பீடத்தின் சாய்வுப்பரப்பை பற்றிக்கொண்டார். அவர் கையிலிருந்த யோகக்கழி கீழே விழுந்தது. அவர் முனகல்போல ஒலியெழுப்பினார். பின்னர் மெல்ல கால் தொய்ந்து அமர்ந்தார்.

“சைந்தவரே, இங்கே எவர் போரிடவேண்டும், எங்கே களம்நிற்கவேண்டும் என முடிவெடுக்க வேண்டியவன் நான்” என்று சகுனி சொன்னார். “போரில் மறைந்துகொள்ளுதலும் உத்தியே. போரிலிருந்து ஒளிந்தோடும்படி உங்களிடம் சொல்லவில்லை. கவசங்களுக்குள் மறைந்துகொள்ளவே ஆணையிடப்படுகிறது. நீங்கள் அஞ்சி மறைந்திருக்கவில்லை. உங்கள் படையின் தலைவனின் ஆணையைத்தான் தலைக்கொள்கிறீர்கள்.” ஜயத்ரதன் “ஆனால்…” என சொல்லெடுக்க “நீங்கள் அர்ஜுனன் மறைவுக்குப் பின் களமெழுக! உங்கள் கைகளால் பாண்டவர்களின் படைகளை கொன்று கூட்டுக! அதுவே வெற்றியென்றாகும். அறிக, அறுதிவெற்றியை அடைந்தவர்களே பேசப்படுகிறார்கள்” என்றார்.

“இல்லை, இது வெறும்பசப்பு… நான் இதற்கு உடன்படமாட்டேன்” என்றான் ஜயத்ரதன். “நான் களம்நிற்பேன். பொருதுவேன்.” சகுனி “நீங்கள் களம்நின்றால் உறுதியாகவே உயிர்விடுவீர். சூதர்பாடலில் எவ்வண்ணம் வாழ்வீர் என எண்ணுக! நட்புக்கு வஞ்சமிழைத்தமையால், சொல்திறம்பியமையால் கொல்லப்பட்டவர் என… மெய்யல்லவா?” என்றார். ஜயத்ரதன் “நான் என்ன செய்ய முடியும்? நான் அபிமன்யு கொல்லப்பட்டதை இப்போதுகூட ஏற்கவில்லை. நான் அப்போது அதை அறியவே இல்லை. ஆனால் என் படைத்தலைவரின் ஆணைக்கு களத்தில் நான் கட்டுப்பட்டாக வேண்டும்” என்றான். சகுனி “ஆம், ஆனால் அதை எவர் எதிர்காலத்திடம் சொல்வது? அவன் இறந்து நீங்கள் இருந்தாகவேண்டும். அவன் கையால் கொல்லப்பட்டால் அவன் எண்ணுவதே உண்மையென நிலைகொள்ளும்” என்றார்.

ஜயத்ரதன் சோர்ந்தவனாக அமர்ந்தான். “நான் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல” என்றபோது அவன் குரல் உடைந்தது. “நான் அபிமன்யுவை கொல்லத் துணைபோகவில்லை. உள்ளே நிகழ்ந்த எதுவும் எனக்குத் தெரியாது. தெரிந்ததும் உங்களிடம் கண்டித்தேன். அத்தனைபேரிடமும் என் எண்ணத்தை சொன்னேன்…” அவன் விழிகள் நீர் நிறைந்து வழிந்தன. “நான் என்னை வேண்டுமென்றே நகையாட்டும் சொற்பெருக்கும் கொண்டவனாக ஆக்கிக் ண்டேன். எப்படியேனும் இந்த நாளை கடந்துசென்றுவிட்டால் போதும் என எண்ணினேன். இன்றிரவு என்னால் துயில்கொள்ள முடியாதென்றே நம்பினேன்…” அவன் மேலும் சொல்லெடுக்க முயன்று பின் விழிநீர் பொழிய விசும்பி அழத்தொடங்கினான்.

பிருஹத்காயர் “நிறுத்து, கீழ்மகனே. நீ என்ன பேடியா? களிமகன்போல் அழுகிறாய்!” என்றார். வெறுப்பும் கசப்புமாக ஜயத்ரதனை நோக்கி “நீ பிரகதிஷுவின் குருதி… அதை மறக்காதே” என்றார். ஜயத்ரதன் விழிகளைத் துடைத்து “ஒருநோக்கில் அர்ஜுனன் சொல்வது சரியே. என்னை அரசன் என நடத்தவேண்டும் என்று சொன்னவன் அவன். அரசனுக்குரிய அனைத்து முறைமைகளையும் எனக்கு அளித்தவர் யுதிஷ்டிரர். அவர்களின் மைந்தனை நாம் வேட்டைவிலங்கைப்போல சூழ்ந்துகொண்டு கொன்றோம். அதற்காக நான் கொல்லப்படுவேன் என்றால் அது முறையே. அதுவே நிகழ்க!” என்றான். சகுனி “ஆனால் அவனைக் கொன்றது உங்கள் கீழ்மையால் என்பதே சொல்லில் நிலைகொள்ளும்” என்றார். ஜயத்ரதன் கைகளை விரித்து தலையை அசைத்தான்.

“ஒன்றே வழி… என் ஆணைப்படி பகலந்திவரை பாதுகாப்பில் இருந்துகொள்ளுங்கள். அந்தியில் அவன் தன் வஞ்சினத்தை நிறைவேற்றியபின் வெளியே வருக! அதன்பின் அவன் உடன்பிறந்தாரை அணுகி நிகழ்ந்ததை சொல்லவேண்டுமென்றால்கூட அதுவும் இயல்வதே” என்றார் சகுனி. “வென்றால் மட்டுமே உங்களுக்கு மீட்பு. வீழ்ந்தால் தலைமுறைகளாக தொடரும் இழிபெயர். பிரகதிஷுவின் குடிக்கு, பிருஹத்காயரின் குருதிக்கு கீழ்ச்சொல்லே எஞ்சும்… எண்ணுக!” ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பிருஹத்காயர் “நான் சொல்கிறேன். அவன் ஆணையை நிறைவேற்றுவான்” என்றார். சகுனி “முனிவரே” என்று சொல்ல “அவன் என் ஆணையை மீறமாட்டான். அவன் மறைந்திருப்பான்” என்றார்.

சகுனி “ஆம், இதுவே நம் திட்டம். நாளை களத்தில் அர்ஜுனனிடமிருந்து சைந்தவரை காப்பாற்றுவதே நம் படைகளின் முழு இலக்கு” என்றார். பிருஹத்காயரிடம் “நிறைவுகொள்க, சைந்தவரே! உங்கள் மைந்தர் வெல்வார். உங்கள் ஊழையும் நீங்கள் கடந்துசெல்வீர்கள்” என்றார். பிருஹத்காயர் எழுந்து தன் யோகக்கழியை எடுத்துக்கொண்டு “என் மைந்தனுக்கு கௌரவக்கோல் காவல்… அப்பொறுப்பிலிருந்து அது விலகுமென்றால் நான் அதன் முதன்மை எதிரி. நான் அறங்கள் அற்றவன். தெய்வங்களும் அற்றவன். என் மைந்தனன்றி இப்புவியில் எனக்கு ஏதுமில்லை. அதை சொல்லிவிட்டுச் செல்லவே வந்தேன். சொல்க உங்கள் அரசனிடம்!” என்றபின் வாசலை அணுகி அங்கே நின்றார். திரும்பி உரத்த குரலில் சொன்னார்.

“நான் இங்குதான் இருப்பேன், என் மைந்தனின் அருகிலேயே. என் நோக்கிலேயே அவன் இருக்கவேண்டும். அந்திக்குப் பின்னர் அர்ஜுனனின் இறப்புச்செய்தி செவியை வந்தடைந்த பிறகுதான் நான் கிளம்புவேன். எனக்கு அவனருகே ஒரு பாடிவீடு அமையுங்கள்.” சகுனி “ஆணையிடுகிறேன்” என்றார். “அர்ஜுனனை நான் குறைத்து எண்ணவில்லை. இவ்வாறு நாம் செய்யக்கூடுமென எண்ணாதவன் அல்ல அவன். அவன் செய்யப்போவதென்ன என்று நான் அறிந்துகொண்டுதான் இருப்பேன். நாளைய ஆடல் எனக்கும் அவனுக்கும் நடுவிலேயே. ஒருவேளை இத்தனை ஆண்டுகளில் நான் தவம்செய்து ஈட்டிய அனைத்தும் இத்தருணத்திற்காகவேதான் போலும்.”

தலைவணங்கி அவர் செல்வதை அவையினர் பார்த்து அமர்ந்திருந்தார்கள். பூரிசிரவஸ் அஸ்வத்தாமனிடம் “ஒரு கொடுந்தெய்வம் நீங்கிச்செல்வதுபோல” என்றான். “இப்புடவி என்னும் வேலின் கூர் என தெய்வத்தை வணங்குகின்றது அசுரவேதம். ஒன்று கூர்கொள்கையில் அது தெய்வமாகிறது” என்றான் அஸ்வத்தாமன். “அவை நிறைவுகொள்க!” என்று சகுனி கைகாட்டினார். துச்சலன் அவைநிறைவை அறிவித்தான். சகுனி “நாளைய சூழ்கையை முழுதமையுங்கள், உத்தரபாஞ்சாலரே” என அஸ்வத்தாமனிடம் சொல்லிவிட்டு கிருபரையும் சல்யரையும் வணங்கிவிட்டு தானும் கிளம்பினார்.

அவைகூடும்போதிருந்த உணர்வுகள் முழுமையாகவே மாறி கொந்தளிக்கும் உணர்ச்சிகளுடன் அவை கலையத் தொடங்கியது. ஜயத்ரதன் அருகே சென்ற கிருதவர்மன் அவன் தோளைத் தொட்டு தூக்கி அழைத்துச்சென்றான். பூரிசிரவஸ் அஸ்வத்தாமன் அருகே வந்து “விந்தைதான்” என்றான். “இத்தனை ஆற்றலும் அறிவும் தவமும் கொண்டவர்களென்றாலும் அவர்கள் மைந்தர்பற்றால் முழுமையாக கட்டுண்டிருக்கிறார்கள்.”

“நீங்கள் விடுபட்டுவிட்டீர்களா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். விழிகளை விலக்கிக்கொண்டு பூரிசிரவஸ் “இல்லை” என்றான். “விந்தை இருப்பது அங்குதான். ஒவ்வொருநாளும் இங்கே பிறருடைய மைந்தர் பல்லாயிரவர் செத்துக்குவிகிறார்கள். நெறியும் அறிவும் தவமும் இருந்தும் தங்கள் மைந்தரைப்பற்றி மட்டுமே தந்தையர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

முந்தைய கட்டுரைகுழந்தைகளுக்கு புராணங்களை கற்றுக்கொடுக்கலாமா?
அடுத்த கட்டுரைபார்வதிபுரம் பாலம் – கடிதங்கள்