‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37

ele1அஸ்வத்தாமன் அவை நிறைந்துகொண்டிருப்பதை பார்த்தபடி அறிவிப்புமேடை அருகே நின்றான். அவையினர் கலைந்த பேச்சொலிகளுடன், தயக்கமான உடலசைவுகளுடன் இருந்தார்கள். கிருபரும் சுபலரும் பேசியபடி வந்தமர்ந்தனர். சகுனி தனியாக வந்து தன் பீடத்திலமர்ந்து அலுப்புடன் விழிகளை மூடிக்கொண்டார். அவர் அருகே வந்து குனிந்து ஏதோ கேட்ட மைந்தன் உலூகனிடம் சலிப்புடன் ஏதோ சொல்லி கையசைத்தார். அவன் வணங்கி விலகி அப்பால் அமர்ந்தான். ஜயத்ரதனும் பூரிசிரவஸும் வந்தனர். பூரிசிரவஸ் அஸ்வத்தாமனின் அருகே வந்து தலைவணங்கினான்.

அஸ்வத்தாமன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு பூரிசிரவஸிடம் “அங்கர் வரவில்லையா?” என்றான். துர்மதன் “களத்திலிருந்து அவர் நேரடியாகவே தன் குடிலுக்கு சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்துசென்று பார்த்துவரச் சொல்லி துச்சகனை அனுப்பினேன். அவன் திரும்பி வந்து அவர் வரப்போவதில்லை என்று சொன்னான்” என்றான். பூரிசிரவஸ் “அவருக்கும் அரசருக்கும் இன்று களம்முடிந்து திரும்புகையில் சிறுபூசல் நிகழ்ந்தது என்றார்கள்” என்றான். அஸ்வத்தாமன் ஆர்வமில்லாமல் “ஆம், அதைப்பற்றி இங்கு அனைவருக்குமே தெரிந்திருக்கிறது” என்றான். பூரிசிரவஸ் “நான் அதை கேட்டபோது வியப்படைந்தேன்” என்றான்.

அஸ்வத்தாமன் சற்றுத் தயங்கி “அவர் செய்ததை என்னால் புரிந்துகொள்ள இயல்கிறது. இன்று களத்தில் எழுந்த அர்ஜுனன் மிகவும் களைத்திருந்தான். அவனால் காண்டீபத்தை ஏந்தவே முடியவில்லை” என்றான். “ஆனால் இன்று அவர் சம்சப்தர்களை கொன்றார். பகதத்தர் அவரால் களம்பட்டார்” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் அர்ஜுனனுக்கு எதிரீடே அல்ல. அவனுடைய மெய்யான எதிரிகள் இன்று அங்கரும் தந்தையும்தான். அவர்கள்முன் அவன் நின்றுபொருதியிருக்க இயலாது. அங்கர் மட்டுமல்ல தந்தையும்கூட அவனை விட்டுவிலகியே சென்றார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், அதையும் சொன்னார்கள்” என்று சொன்ன பூரிசிரவஸ் “தங்கள் தந்தையும் இன்னும் அவை புகவில்லை” என்றான். “அவரிடம் பேசினேன். அவரும் உளம் சோர்ந்திருக்கிறார்” என்றான்.

வெளியே வாழ்த்தொலி கேட்டது. சல்யரும் துரோணரும் ஒருசொல்லும் பேசாமல் உள்ளே வந்தனர். அவையிலிருந்தோர் எழுந்து வாழ்த்தினர். துரோணர் தன் பீடத்திலமர்ந்ததும் சல்யர் அஸ்வத்தாமனின் அருகே வந்து “அவைபுக தனக்கு எண்ணமில்லை என்றார். அவர் வந்தாகவேண்டும் என்று கூட்டிவந்தேன்” என்றார். “நன்று, அவரும் இல்லையேல் இதை அவையென்றே சொல்ல முடியாது” என்றான் அஸ்வத்தாமன். வெளியே வாழ்த்தொலிகளும் கொம்போசையும் கேட்டன. உள்ளிருந்தவர்கள் பேச்சை நிறுத்தி எழுந்து நின்றார்கள். துச்சாதனன் உள்ளே வந்து தலைவணங்கி அரசர் வருவதை அறிவித்தான். தொடர்ந்து துச்சலனும் துச்சகனும் இருபுறமும் வர துரியோதனன் அவைநுழைந்தான். சுபாகு அவனுக்குப் பின்னால் வந்தான்.

கைதொழுதபடி தன் பீடத்தில் அமர்ந்த துரியோதனனின் அருகே சென்று குனிந்த துச்சாதனன் கர்ணன் வரவில்லை என்பதை அறிவித்தான். அவர்கள் பேசிக்கொள்வதை அவை செவிகூர்ந்து நோக்கியிருந்தது. துரியோதனன் தலையசைத்து அவை நிகழலாமென கைகாட்டினான். ஓர் அவையிலுள்ள பொதுவான உணர்வு அனைவரையும் அழுத்தி மூடுவதன் விந்தையை அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டான். பூரிசிரவஸ் “தொடங்கிவிடலாமே” என்றான். அஸ்வத்தாமன் முறையாக அவையறிவிப்பு செய்து “இன்று நாம் பெருவீரர்கள் சிலரை இழந்துவிட்டு அமர்ந்திருக்கிறோம். பகதத்தரும் சம்சப்தர்களும் நம் படையை தாங்கியிருந்தவர்கள். அவர்களின் மறைவு நமக்கு இழப்பு. நாளை போருக்கெழுகையில் அதை அனைவரும் உணர்வோம்” என்றான். இடைபுகுந்த துரியோதனன் “நிகழவிருப்பதைப்பற்றி பேசுவோம்” என்றான். அஸ்வத்தாமன் “ஆம், நான் நமது படைசூழ்கைபற்றி பேசவிருக்கிறேன்” என்றான்.

அஸ்வத்தாமன் மேலும் பேசுவதற்குள் பால்ஹிகனாகிய சலன் எழுந்து “நான் முதலில் கேட்க விரும்புவது ஒன்றுண்டு, இங்குள்ள அனைவரும் அதையே கேட்க விழைகிறார்கள். அதை பேசிவிட்டு நாம் மேலும் திட்டங்களிடுவோம்” என்றான். அவன் கேட்கவிருப்பதை உணர்ந்து அவை நிமிர்ந்தமைந்தது. சலன் உரக்க “இன்று இளைய பாண்டவரை நம் ஆசிரியரும் அங்கரும் மிக எளிதாக வென்றிருக்க முடியும். அவர்கள் இருவருமே அவரை ஒழிந்து விலகியதை நாம் அனைவருமே அறிவோம்” என்றான். துரியோதனன் எரிச்சலுடன் ஊடே புகுந்து “அதை பின்னர் பேசுவோம்” என்றான். “அதை பேசியபின் பிறவற்றை பேசினால் போதும்” என்று சோமதத்தர் உரத்த குரலில் சொன்னார். அவையினர் அதை எற்று முழக்கமாக ஒலித்தனர்.

துரியோதனன் சினத்துடன் சொல்லெடுக்க முயல சகுனி கைகாட்டி அவனை தடுத்தார். சலனை நோக்கி “சொல்க!” என்றார். சலன் “நான் கேட்பது அரசகுடியினர் அனைவரும் எண்ணும் வினாவே. இங்கே அறங்களை நோக்காது பொருதவேண்டியது நாங்கள் மட்டும்தானா? இந்தப் போரில் நாங்கள் எவரும் குருதி நோக்கவில்லை. சிபிநாட்டினர் பால்ஹிகர்களின் குருதியினர். ஆனால் அவர்கள் அங்கே எங்களுக்கு எதிராக நின்றிருக்கிறார்கள். என் கைகளால் நான் சைப்யர் பலரை கொன்றேன். இதோ மத்ரர் இருக்கிறார். அவருடைய தங்கை மைந்தர்கள் பாண்டவர்கள். அவர் நீக்கில்லாத விசையுடன்தான் அவர்களை தாக்கிக்கொண்டிருக்கிறார். நாங்கள் உடன்குருதியினரை கொல்ல எழும்போது நெறி நோக்கவில்லை. நாளை குடிப்பழி சேருமென்று அஞ்சவுமில்லை. ஆனால் ஆசிரியரும் அங்கரும் தங்களுக்கு பழிசேருமென்று அஞ்சினார்கள்” என்றான். அவையின் ஏற்பொலி சொல்லில்லா ஒலியலையாக எழுந்தது.

அவையை சூழ நோக்கி மேலும் உளவிசை பெற்று சலன் சொன்னான் “அங்கர் துணைவராது போனமையால்தான் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தர் கொல்லப்பட்டார்.” துரோணரை நோக்கியபடி “அவரை காக்க நமது படைகள் சென்றன. ஆனால் ஆசிரியரும் அங்கரும் அங்கே செல்லவில்லை. நான் கேட்பது ஒன்றே. அவர்கள் அர்ஜுனனை தாக்கவேண்டும் என அரசாணை விடப்பட்டதா? அவர்கள் அதை ஆற்றாது ஒழிந்தார்களா?” என்றான். அவன் நீட்டிய கையுடன் நிற்க, அவை சொல்லில்லாது காக்க, சிலகணங்களுக்குப் பின் துரியோதனன் “ஆம், அரசாணை விடப்பட்டது” என்றான். “அது மீறப்பட்டதா?” என்று சலன் கேட்டான். “ஆம், ஆனால் நாளை அர்ஜுனனை கொல்லவிருப்பதாக அங்கர் சொன்னார்” என்றான் துரியோதனன்.

“நாளை கொல்லவிருப்பவர் இன்று ஏன் ஒழிந்தார்?” என்றான் சலன். “நான் கேட்கவிருப்பது அது மட்டுமே. ஏன் இன்று அவர் அர்ஜுனரை செல்லவிட்டார்? நெறிநோக்கி என்றீர்கள் என்றால் நாங்கள் மட்டும் ஏன் நெறிமீறவேண்டும்?” அஸ்வத்தாமன் “இன்று அர்ஜுனனின் உடல்நலம் குன்றியிருந்ததை நாம் அறிவோம்” என்றான். “அதைத்தான் நான் கேட்கிறேன். உடல்நலம் குன்றியவரைக் கொன்ற பழியை அங்கர் அஞ்சுகிறார். பழியஞ்சாது போரிடும் கடமை எங்களுக்கு மட்டும்தானா?” என்றான் சலன். அவையினர் எழுந்து நின்று கைநீட்டி கூச்சலிடத் தொடங்கினர். துரியோதனன் சீற்றதுடன் “இந்த அவையில் நாம் பூசலிடவா அமர்ந்திருக்கிறோம்?” என்றான். “நான் பூசலிடவில்லை. என் வினாவுக்கான விடை எழட்டும்” என்றான் சலன்.

அவையிலிருந்த அரசர்கள் “ஆம்! அதை அங்கரோ ஆசிரியரோ சொல்லட்டும்” என்று கூவினர். “எங்கள் இளமைந்தர் கொல்லப்பட்டனர். எந்த நெறிகளுக்கும் அடங்காமல் இங்கே கொலை நடந்தது” என்று சலன் கூவினான். துரோணர் எழுந்து கைகூப்பியபோது அவை மெல்ல அடங்கியது. துரோணர் கைகூப்பியபடி அவையில் இறுதி அரசனும் அமரும்வரை காத்துநின்றார். “நான் ஒப்புக்கொள்கிறேன், என்னால் இயலவில்லை” என்றார் துரோணர். “நேற்று இந்த அவையில் நான் வஞ்சினம் உரைத்தேன், எல்லா அறங்களையும் கைவிட்டு நான் போரிடுவேன் என்று. ஆனால் என் முன் என் முதன்மை மாணவன் நடுங்கும் கைகளுடன் வந்து நின்றிருந்தபோது என்னால் போரிட இயலவில்லை.” அவருடைய கூப்பிய கைகள் நடுங்கின. “அதை நெறி என பெருமைகொள்ளவில்லை. எனக்கு அது சிறப்பென எண்ணவுமில்லை. என்னால் இயலவில்லை. என் உள்ளம் பின்னடைந்தது. என் கைகள் தளர்ந்தன.”

“இந்த அவையில் நான் இனி நெறிநோக்குவதில்லை என்று சொன்னபோது ஏதோ தெய்வம் என்னருகே நின்றிருக்கிறது. அது என் சொல்லை அறைகூவல் என கொண்டிருக்கிறது” என்றார் துரோணர். “அதன்முன் முற்றாகவே தோற்றேன். எச்சமின்றி திரும்பி வந்திருக்கிறேன். என்னால் என் முதன்மை மாணவனை கொல்ல முடியாது. அவன் உடல்நலிந்து நடுங்கும் வில்லுடன் எதிரே நின்றபோது என்னை தந்தையென்றும் ஆசிரியர் என்றும் மட்டுமே உணர்ந்தேன்.” அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. உதடுகளை இறுக்கியபடி நின்றபின் மெல்ல மீண்டும் பீடத்தில் அமர்ந்தார்.

அவையினர் அவ்வுணர்வால் ஆட்பட்டு அமைதியாக இருக்க சலன் எழுந்து ஏளனத்துடன் “நன்று, ஆசிரியர் தெளிவாகவே சொல்லிவிட்டார். அரசனுக்களித்த சொல், வீரனின் கடமை அனைத்தையும்விட பெரிது அவருக்கு தன் மாணவன் மேல் உள்ள பற்று என்று. இனி அவரிடம் பேசுவதில் பயனில்லை. இனி அறியவேண்டியது ஒன்றே. அங்கர் என்ன செய்யப்போகிறார்? இன்று அவருடைய கைகள் தயங்கின, நாளை எழும் என்பதற்கு என்ன உறுதிப்பாடு?” என்றான். துரியோதனன் “நான் அவ்வுறுதியை அளிக்கிறேன். நாளை போரில் அவர் அர்ஜுனனை கொல்வார்” என்றான். அவையிலிருந்து ஏளன ஒலிகள் எழுந்தன. சலன் “உங்கள் சொல் மீறப்பட்டதைப்பற்றித்தான் பேசவே தொடங்கினோம். வெற்றிக்காக உடன்குருதியினரைக் கொன்ற இழிமக்களாகிய ஷத்ரியர்களுக்கு நெறிநின்று விண்ணுலகை நாடும் சூதர்மைந்தர் நேரில் வந்து என்ன மறுமொழி சொல்லவிருக்கிறார்?” என்றான்.

சகுனி எழுந்து கையமர்த்தி “நாம் இனி இதை பேசுவதில் பொருளில்லை” என்றார். சலன் மேலும் ஏதோ சொல்ல முனைய “அமர்க!” என்றார் சகுனி. அந்த ஆணைக்கு கட்டுப்பட்டவர்களாக அவையினர் அமைந்தனர். போர்க்களத்தில் ஒலித்துக்கொண்டே இருந்த அவருடைய ஆணைகளுக்குக் கட்டுப்பட்ட அறியாப் பழக்கமே அது என அஸ்வத்தாமன் எண்ணினான். சகுனி “நாம் நாளைக்கான படைசூழ்கையை வகுக்கும்பொருட்டு இங்கே வந்துள்ளோம். அது நிகழ்க!” என்றார். துரியோதனன் “ஆம், அதை அஸ்வத்தாமர் அறிவிக்கட்டும்” என்றான். அஸ்வத்தாமன் அவை நோக்கி திரும்பியபோது துரோணர் நடுங்கும் உடலுடன் எழுந்து நிற்பதை கண்டான். அவர் நோயுற்றவர் போலிருந்தார். முகம் வெளிர்த்து உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன. “நான் ஒன்று சொல்லவேண்டும்…” என்றார்.

“நீங்கள் நலம் குன்றியிருக்கிறீர்கள் ஆசிரியரே, அமர்க! ஓய்வெடுங்கள். நாளை பேசுவோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இல்லை, இந்த அவைக்கு இப்போதே இதை நான் சொல்லியாகவேண்டும்” என்று துரோணர் சொன்னார். “இதை சொன்னாலொழிய என்னால் துயில்கொள்ள இயலாது.” அஸ்வத்தாமன் நிலையழிந்து சுற்றிலும் நோக்கினான். “அவையோரே, நேற்று சம்சப்தர்கள் தங்கள் குடிவழக்கப்படி குலதெய்வங்களின் முன் ஒரு வஞ்சினம் உரைத்துவிட்டு களம்புகுந்தனர், அர்ஜுனனை கொல்லாமல் உயிருடன் களம் மீள்வதில்லை என்று.” அவர் மூச்சிளைத்தார். அவர் சொல்லப்போவதென்ன என்று உணர்ந்து அஸ்வத்தாமன் “தந்தையே…” என அழைக்க அவனை கையமர்த்திவிட்டு துரோணர் சொன்னார்.

“நான் இந்த அவையில் அவ்வஞ்சினத்தை உரைக்கிறேன். நாளை நான் அர்ஜுனனை கொல்லும்பொருட்டே போர்புரிவேன். பாண்டவர் ஐவரையும் கொல்லவே முயல்வேன். பாண்டவ மைந்தரும் என் இலக்கே. என் போர் அக்கொலைகளின் பொருட்டு மட்டுமே.” அவருடைய முதிய குரல் நடுக்குடன் ஓங்கியது. “நாளை களத்திலிருந்து மீள்கையில் பாண்டவர்களோ அவர்களின் மைந்தர்களோ என்னால் கொல்லப்பட்டிருப்பார்கள். என் கையில் பாண்டவக் குருதி படியாமல் களம் மீளமாட்டேன். அவ்வாறு நிகழாவிட்டால் அந்திமுரசு ஒலிக்கும் கணம் என் அம்பால் கழுத்தறுத்து உயிர்விடுவேன். இது என் மூதாதையர் மேல் ஆணை. ஆசிரியர்கள் மேலும், குடித்தெய்வங்கள் மேலும் ஆணை!”

அவ்வஞ்சினம் அவையை திகைக்கச் செய்தது. ஒவ்வொருவரும் நடுக்கு கொண்டனர். சல்யர் கைகளைத் தூக்கி “என்ன இது, ஆசிரியரே!” என்றார். சொல்லி முடித்ததுமே அவ்வுணர்வினூடாக பிறிதொருவராக மாறிய துரோணர் கையைக் காட்டி அவர்களை அடக்கிவிட்டு எழுந்து தன் சால்வையை தோளிலிட்டு அவையை நோக்கி திரும்பி வணங்கிவிட்டு வெளியே சென்றார். அவர் சென்று மறையும் காலடி ஓசை அணையும்வரை அவை திகைத்து அமர்ந்திருந்தது. துரியோதனன் பெருமூச்செறிந்து “அதுவும் நன்றே” என்று மீண்டும் பேச்சை தொடங்கினான். “அவ்வஞ்சினம் நம் அனைவருக்கும் உரியதாகுக! நாளை பாண்டவர்களில் ஒருவர் களம்படுவாரெனில் போர்முடிகிறது. அதற்கு மேல் அவர்களால் எழ இயலாது” என்றான்.

அஸ்வத்தாமன் தளர்ந்து நின்றான். “சொல்க!” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமனின் குரல் மேலெழவில்லை. துரியோதனன் “ஒன்று நான் உரைக்கிறேன் உத்தரபாஞ்சாலரே, நாளை போரில் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அங்கர் களம்நிற்பார். அர்ஜுனனுக்கு எதிராக அவருடைய எதிரில்லா அம்பு எழும். ஐயமே தேவையில்லை, நாளை பாண்டவர்களில் ஒருவரேனும் களம்படுவார். ஆசிரியருக்கு போர்க்களத்தில் எந்தச் சிறுமையும் நிகழாது. வெற்றியுடன் அவர் களத்திலிருந்து திரும்பி வருவார். இது என் சொல்” என்றான். அஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு மெல்ல மீண்டான். “எந்தை உளம்குலைந்திருக்கிறார். இப்படி அவரை பார்த்ததே இல்லை” என்றான்.

“நாம் நாளை நிகழ்த்தவிருப்பது நேர்ப்போர் அல்ல. பாண்டவர்களில் ஒருவரையேனும் கொல்வதே நமது இலக்கு. யானையின் துதிக்கையில் புண்படுவது போன்றது அது. அவர்கள் உளம்தளர்ந்தாகவேண்டும். நம்பிக்கையிழந்தாகவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். ஜயத்ரதன் “நமது இலக்கு அர்ஜுனன். அவன் இருக்கும் நிலையில் அது இயல்வதே என்று தோன்றுகிறது” என்றான். அஸ்வத்தாமன் “தந்தை தன் எல்லையை தானே மீறும்பொருட்டு இந்த அறைகூவலை தனக்கென விடுத்திருக்கிறார்” என்றான். துரியோதனன் “ஒவ்வொருநாளும் போரில் நாம் நம் எல்லைகளை கடக்கிறோம்” என்றான். அஸ்வத்தாமன் “தந்தையால் அதற்கு இன்றுவரை இயன்றதில்லை” என்றான்.

“நாம் நாளை பாண்டவர்களில் ஒருவரை கொல்லவிருக்கிறோம். அதை அறுதியாக முடிவுசெய்வோம். மேலே செல்க” என்று சகுனி உரத்த குரலில் சொல்ல அஸ்வத்தாமன் “அதற்கு மிக உகந்தது நான் வகுத்துள்ள இந்தப் படைசூழ்கை” என்றான். அஸ்வத்தாமன் “இது தாமரைச்சூழ்கை. நூற்றெட்டு இதழ்கள் கொண்ட மாமலராக இதை வடித்திருக்கிறேன். ஒவ்வொரு இதழும் ஒரு படைப்பிரிவு. அவையனைத்தும் மலரின் அடியில் அமைந்த புல்லிவட்டத்தால் ஒன்றென இணைக்கப்பட்டுள்ளன. பிற எங்கும் அவற்றுக்கிடையே இணைப்பில்லை. தங்கள் தன்விழைவுப்படி இயங்குபவை அவை. அவற்றை ஒன்றென செயல்படுத்தும் ஆணைகள் அனைத்தும் அந்தப் புல்லிமையத்திலிருந்தே எழ வேண்டும். அங்கு வழக்கம்போல காந்தாரர் நிலைகொள்ளட்டும்” என்றான்.

“அனைத்து இதழ்களும் ஆற்றலால் நிகரானவை. பெருவீரர்களால் ஆன இதழ்கள் உள்ளே அமைக எண்ணிக்கையில் அவர்களின் படை சிறியது. வெளியே எண்ணிக்கை மிகுந்த காலாள்படைகள் அமையட்டும். அவை ஒன்றன்மேல் ஒன்றெனப் படிந்து பொதியக்கூடியவை” என்று அஸ்வத்தாமன் தொடர்ந்து சொன்னான். தோற்சுருளை சுபாகுவிடம் அளிக்க அவன் அதை விரித்து கையால் நீவி கூர்ந்து நோக்கினான். “அரசே, தாமரை மலர் வண்டை ஈர்த்து இதழ்களால் கவ்விப்பொதிந்து சிறைபிடிக்கும் பொறி. மலர்ப்பொறி என அதை கவிஞர் பாடுகிறார்கள். எதிரியின் முதன்மை வீரனையோ அவன் படையையோ தனித்துக் கவ்வி எடுப்பதுபோன்றது” என்றான் அஸ்வத்தாமன். சுபலர் “சகடச்சூழ்கையின் இன்னொரு வடிவமா?” என்றார். “சகடச்சூழ்கை ஒரு வாயிலும் வெளிவரமுடியாது சுழற்றி மயக்கும் ஊடுவழிப் பின்னல் கொண்டது. அது கோட்டைக்காவலுக்குரியது. இது வட்டமல்ல. இதழ்களின் அடுக்கு வட்டமாக அமையலாம். ஆனால் ஒவ்வொரு இதழும் இணைந்தும் விலகியும் நீண்டும் குவிந்தும் போரிடலாம்” என்றான் அஸ்வத்தாமன்.

“கரபுஷ்பம் என இன்னொரு படைசூழ்கை உண்டு” என அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “ஐந்து படைகளால் ஆனது. ஐந்து விரல்களைப்போல அது குவிந்துசென்று மலர்கொய்வதுபோல் எதிரியின் முதன்மைப் படைவீரனை கவ்வி கொண்டுவரும். அதையே நான் முதலில் எண்ணினேன். ஆனால் நம்மிடமிருக்கும் மாவீரர்களின் எண்ணிக்கையை நோக்கியபோது இந்த தாமரைச்சூழ்கையே உகந்தது என்று பட்டது.” சுபாகு படைசூழ்கையை பார்த்துவிட்டு துரியோதனனிடம் தோற்சுருளை அளித்தான். துரியோதனன் அதை கையில் வாங்கி முகவாயை வருடியபடி கூர்ந்து பார்த்தான். “அரசே, தேன் நாடி வண்டுகள் தாமரைக்குள் வருகின்றன. மையத்திலுள்ள மகரந்தத் தாள்களுக்கு அடியில் வந்தாலொழிய அவற்றால் தேனருந்த இயலாது. அங்கிருந்து அவை எளிதில் பறந்தெழ இயலாமல் தேனும் பூம்பொடியும் தடுக்கும். இதழ்கள் ஒன்றுடன் ஒன்றுகூடி குவிந்து வண்டை சிறைப்படுத்தும். நாம் வகுக்கும் சூழ்கையில் அர்ஜுனன் அல்லது பீமன் விழ வேண்டும்.”

அவை அஸ்வத்தாமன் சொல்வதை கூர்ந்து கேட்டிருந்தது. “நாளை ஒருவேளை அர்ஜுனன் களத்திலெழுந்தால் அவர்களுக்கிருக்கும் ஒரே இலக்கு அங்கநாட்டரசராகவே இருக்க இயலும். ஏனெனில் இன்று அர்ஜுனன் அங்கரின் அம்புகளுக்கு முன் நிலையழிந்து களம்பட்டு உயிர் மீண்டு வந்திருக்கிறான். பாண்டவப் படைகள் அர்ஜுனனை நம்பியே இதுகாறும் போரிட்டுள்ளன. பீஷ்மரை வென்ற பெருவீரனெனும் ஒளியுடன் அவன் இதுவரை களம் புகுந்திருக்கிறான். இன்று அவன் களத்தில் வீழ்ந்தமையால் பாண்டவப் படையின் நம்பிக்கை குறைந்திருக்கும். அந்நம்பிக்கையை மீட்டெடுப்பதே அவர்களுக்கு இப்போது முதன்மை அறைகூவல். ஆகவே முழு விசையையும் திரட்டி அங்கநாட்டரசரை அறைந்து ஒருமுறையேனும் பின்னடையச் செய்யாமல் நாளைய போரை அவர்கள் முடிக்க இயலாது. அர்ஜுனன் எழாவிட்டால் பீமன் அந்த அறைகூவலை ஏற்றாகவேண்டும். அங்கரே நமது பொறியின் மையம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“நமது படைசூழ்கை களத்திலெழுந்த பின் சற்று நேரத்தில் தாமரையின் இதழ்கள் விரிந்து விரிந்து அகல துணையேதுமின்றி களம் நடுவே அங்கர் நிற்பார். அவருடைய பொற்தேர் தாமரையின் மகரந்தபீடம் எனத் துலங்கும். அதை நோக்கி அக்கருவண்டு நாணொலி ரீங்கரிக்க வந்து சேரும். நாம் சூழ்ந்து கவ்வி அவனை சிறைப்படுத்துவோம். களத்தில் அவனை கொன்று வீழ்த்துவோம்” என்றான் அஸ்வத்தாமன். அவையெங்கும் பெருமூச்சுகள் எழுந்தன. “ஒருவேளை நாளை அர்ஜுனன் களமெழவில்லையென்றால் பீமனை வீழ்த்துவோம்” என்று அஸ்வத்தாமன் மேலும் உரக்கச் சொன்னான். சல்யர் “அர்ஜுனன் மருத்துவநிலையில் கிடக்க பீமனும் களத்தில் வீழ்ந்தானெனில் நாளையுடன் போர் முடிகிறது” என்றார்.

பூரிசிரவஸ் “நாளை அவர்கள் கைமலர் சூழ்கையை அமைக்கக்கூடும்” என்றான். “ஏன்?” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் “ஏனென்றால் அஸ்வத்தாமரின் உள்ளத்தில் முதலாவதாக அதுவே எழுந்தது. நம் உள்ளங்கள் அணுக்கமானவை. போரில் ஒருவரை ஒருவர் நோக்கி, ஒவ்வொரு எண்ணமும் சொல்லும் கருதி, கலந்து போரிட்டு ஒருவராகவே ஆகிவிட்டிருக்கிறோம்” என்றான். துரியோதனன் சிலகணங்களுக்குப் பின் “ஆம், அங்கே சூழ்கை அமைப்பவர் தட்சிணபாஞ்சாலர். இவரும் அவரும் ஒருவரை ஒருவர் நாளும் எண்ணி தவம்செய்பவர்கள்” என்றான். அஸ்வத்தாமன் அப்பேச்சை விழையாமல் “அவ்வாறு நிகழலாம். மலர்சூழ்கையை வெல்ல முதன்மை வடிவம் கைமலர்சூழ்கையே. மலர்கொய்ய வரும் கையை சூழ்ந்து கவ்விக்கொள்வோம். தொடும் விரலை வெட்டி எடுப்போம். மென்மலர் இதழ்களின் கூர்மையென்ன என அவர்கள் அறிக” என்றான்.

“ஆம், இதை நிகழ்த்துவோம்! இது நிகழும்!” என்று ஜயத்ரதன் சொன்னான். “உள்ளே சிக்கிக்கொண்டவர் முழு உயிர்விசையுடனும் போரிட வாய்ப்புள்ளது” என்று சுபலர் சொன்னார். “சிக்கிவிட்டோம் என உணர்ந்த கணமே படைசூழ்கையின் ஏதேனும் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு வெளிவருவதே அவர் எவராயினும் செய்யக்கூடுவது. ஆனால் தாமரைச் சூழ்கையின் இதழ்களை உடைப்பது இயல்வதே அல்ல. அதன் ஒவ்வொரு படைப்பிரிவுக்கு மேலும் பிறிதொரு படைப்பிரிவு வந்து அமைந்துள்ளது. எந்தப் பக்கத்தை தாக்கினாலும் எப்படியும் ஏழு படைப்பிரிவுகளை வென்று மறுபக்கம் செல்லவேண்டும். அதற்குள் நாம் அவரை வென்றுவிடமுடியும்” என்று அஸ்வத்தாமன் அவருக்கு விளக்கம் அளித்தான்.

“மெய்யாகவே எனக்குத் தெரியவில்லை” என தோற்சுருளை நோக்கியபடி துரியோதனன் கேட்டான் “தாமரைச்சூழ்கையை உடைப்பது எப்படி?” அஸ்வத்தாமன் “அரசே, படைசூழ்கைக் கலையை கற்றவர்கள் அறிவார்கள், தாமரைச்சூழ்கையிலிருந்து வெளிவர இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, அதன் கூம்பு முனையின் மையப்புள்ளியை மிகச் சரியாக அறிந்து அங்கே தாக்குவது. அதை முட்டித்திறந்து வெளிவர முடியும். அந்த முனையில் மட்டும் தாமரை சூழ்கை ஆற்றலற்றது. அதைவிட எளிய பிறிதொரு வழி உண்டு. அதன் புல்லிவட்டம் எப்போதும் அனைத்து இதழ்களும் ஒன்றிணைந்ததாக இருக்கும். அங்கு முதன்மை படைக்கலன்களோ அன்றி பெருவீரர்களோ இருக்க வாய்ப்பில்லை. அங்கே படைகள் ஒற்றை உருவென்று திரள்வதும் அரிது. அங்கு சென்று தாக்குவோன் அவ்வழியினூடாக பின்புறம் சென்று அனைத்துப் படைகளையும் வட்டமிட்டு வளைத்து தன் படைகளுக்கு திரும்பிவிடமுடியும். தாமரைச்சூழ்கையின் அனைத்துப் படைகளும் தங்கள் பெருவீரர்களை அப்போது உள்பக்கமாக திருப்பியிருப்பதனால் எந்தப் படையும் அதனை எளிதில் தடுத்துவிட முடியாது” என்றான் அஸ்வத்தாமன்.

“அர்ஜுனனுக்கு இப்படைசூழ்கை நன்கு தெரிந்திருக்கும்” என்றான் ஜயத்ரதன். “வாய்ப்புள்ளது. ஆனால் அவன் என்ன செய்யமுடியுமென்பதை நாம் முன்னரே அறிந்திருப்பதனால் அதையும் தடுத்துவிடமுடியும். தாமரைச்சூழ்கையின் சிறப்பியல்பே உள்ளே சிக்கிக்கொண்ட ஒரு வீரனை குவியும் இதழ்களென எழுந்து நூற்றெட்டு படைப்பிரிவுகளும் ஒன்றாகச் சேர்ந்து அழுத்துவதுதான். அரசே, ஒருவனைச் சூழ்ந்து கௌரவப் பெரும்படையும் அனைத்து மாவீரர்களும் வில்லுடன் நிலைகொள்வார்கள். அவன் எவ்வகையிலும் தப்ப இயலாது” என்றான் அஸ்வத்தாமன்.

துரியோதனன் “இப்படைசூழ்கையை அவை ஏற்கிறதா?” என்றான். கிருபர் “என் சொல் ஒன்று எஞ்சியிருக்கட்டும். நான் இதை சொல்லியாகவேண்டும். இங்கே துரோணர் இல்லாமையால் அவருடைய அகக்குரலென நான் பேசுகிறேன்” என்றார். “அரசே, அவையோரே, போர் என்பது எல்லா வழிகளிலும் நிகழ்வது. ஆனால் ஒருவனை பொறிவைத்து சூழ்கை அமைப்பது எவ்வகையிலும் உகந்தது அல்ல. அஸ்தினபுரிக்கு பெருமைசேர்ப்பதும் அல்ல.” அவையினர் எவரும் மறுமொழி சொல்லவில்லை. துரியோதனன் “இனி வெற்றி ஒன்றே எனக்கு பெருமைசேர்ப்பது, ஆசிரியரே” என்றான்.

பின்னர் அவையை நோக்கி “மறுசொல் உள்ளதா? அரசர்கள் எவரேனும் எதிர் சொல்கிறீர்களா?” என்றான். அவை அமைதியாக இருந்தது. “எனில் நாளை நம் சூழ்கை தாமரைவடிவிலேயே அமையட்டும். நாம் வெல்வோம்!” என்றான். “வெல்க கௌரவர்! வெல்க அமுதகலக்கொடி! வெல்க துரியோதனர்!” என அவை வாழ்த்தொலித்தது. எழுந்து கைகூப்பி அவையை வணங்கிய பின் துரியோதனன் அவைநீங்கினான்.

அஸ்வத்தாமன் பெருமூச்சுடன் தன் பீடத்தில் அமர்ந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “நாம் இப்போதே சூழ்கைக்கான பணிகளை தொடங்கியாகவேண்டும்” என்றான். அஸ்வத்தாமன் சோர்வுடன் “ஆம்” என்றான். “ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஆசிரியர் அவ்வண்ணம் சொன்னது ஒருகணத்தில் என் ஆர்வம் அனைத்தையும் அணைத்துவிட்டது” என்றான் அஸ்வத்தாமன். “ஆனால் அவர் மிக எளிய போர்நெறியை மட்டும்தான் சொன்னார். அவர் அதை சொல்லவில்லை என ஆகக்கூடாதென்று எண்ணியதுபோல் தெரிந்தது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் என் உள்ளம் அந்தப் புள்ளியில் அனைத்து விசையையும் இழந்தது.”

பூரிசிரவஸ் “உங்களுக்குள் நீங்களே ஐயமும் தயக்கமும் கொண்டிருக்கலாம். அச்சொல்லை ஒரு நிமித்தமாக எண்ணுகிறீர்கள்” என்றான். “இருக்கலாம்” என்றான் அஸ்வத்தாமன். “இது உங்கள் தந்தையின் உயிர்காக்கப்போகும் சூழ்கை. இதை நாம் பழுதற அமைத்தாகவேண்டும். எழுக!” என்று அஸ்வத்தாமனின் கையை பற்றினான் பூரிசிரவஸ். அஸ்வத்தாமன் நீள்மூச்சுடன் எழுந்துகொண்டான்.

முந்தைய கட்டுரைஉரையாடும் காந்தி – உரையாடல், சென்னை
அடுத்த கட்டுரைநித்யாவின் பெயர்