‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25

ele1துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன் கால்களை சேற்றிலென சிக்க வைத்தது. உடலின் அத்தனை தசைகளும் நனைந்த ஆடைகள் என எலும்புகள் மேல் தொங்கிக்கிடந்தன. உள்ளமும் ஒரு நனைந்த மென்பட்டாடை என படிந்திருந்தது. நாக்கு உலர்ந்த மென்தளிர் என வாய்க்குள் ஒட்டியிருந்தது. ஒரு சொல்லை எடுப்பதென்றால்கூட முழுதுடலாலும் உந்தி ஊறச்செய்து நாவுக்குக் கொண்டுவந்தாகவேண்டும். நா அச்சொல்லை தன்னதென்று ஏற்கவேண்டும். அச்சொல் நாவை பற்றவைக்கவேண்டும்.

கர்ணனும் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. சீரான காலடிகளுடன் அவன் நடந்துகொண்டிருந்தான். அவனுக்குரிய வழக்கமான நடை அல்ல அது என்பதனால் துச்சாதனன் உடன் செல்ல முடிந்தது. அவர்களைச் சூழ்ந்து கௌரவப் படைகள் கொண்டாட்டமிட்டுக் கொண்டிருந்தன. கேடயங்களிலும் தலைக்கவசங்களிலும் அடித்துத் தாளமிட்டபடி நெருப்பைச் சுற்றி படைவீரர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். நிழல்கள் எழுந்து வானிலாடின. துச்சாதனன் பெருமூச்சுவிட்டான். கர்ணன் நின்று அந்தச் செந்நிற அலைகளை நோக்கினான். பின்னர் விண்ணிலெழுந்திருந்த மீன்களை பார்த்தான். மீண்டும் திரும்பும்போதுதான் அவன் துச்சாதனனை பார்த்தான். “நீ சென்று ஓய்வெடு, இளையோனே” என்றான்.

“இல்லை, தங்களை குடில்வரை கொண்டுசென்று ஆக்குகிறேன்” என்றான் துச்சாதனன். “வா” என்றபடி கர்ணன் நடந்தான். இம்முறை அவன் நடை விசைகொண்டிருந்தது. “மூத்தவரே” என்று துச்சாதனன் மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்” என்றான் கர்ணன். “இன்று களத்தில் உங்கள் கையிலிருந்தது பாதாளநாகம் என்றனர். மணிகர்ணன் என்னும் பாதாளநாகமே உங்கள் கையில் எழுந்து நடனமிட்டது என்றும் நாகங்களே உங்கள் அம்புகளாகச் சென்று பாண்டவர்களை வென்றது என்றும் சொல்கின்றனர்” என்றான். கர்ணன் புன்னகையுடன் அவன் தோளில் தட்டினான். “நான் உங்கள் போரை பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்வதில் மெய்யுள்ளது என்றே எனக்கும் படுகிறது” என்றான் துச்சாதனன்.

“பிறகென்ன?” என்றான் கர்ணன். “அதை நீங்களும் சொல்லவேண்டும். உண்மையிலேயே உங்கள் ஆவமும் வில்லும் நாகங்களா என்ன?” என்றான் துச்சாதனன். “இளையோனே, இந்த மண்ணில் எதுவும் புதிதாக நிகழ இயலாது என்று உணர்க! இங்கு நிகழும் எந்தப் போரும் முன்பு நிகழ்ந்த போரின் நீட்சிகளே. ஏனென்றால் இங்கு நிகழும் அத்தனை வேள்விகளும் முன்பு நிகழ்ந்த வேள்விகளின் எச்சங்கள்தான்” என்று கர்ணன் சொன்னான். “நாகர்கள் இங்கே வெல்லப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் வஞ்சத்தால் வெல்லப்பட்டார்கள். பின்னர் ஒருங்கிணைவால் வெல்லப்பட்டார்கள். இறுதியாக மெய்யறிவால் வெல்லப்பட்டார்கள். வரலாற்றில் எப்போதுமே வெற்றி அம்மூன்று நிலைகளில் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது.”

“ஆம், நாகர்களின் வஞ்சத்தைப் பற்றி நான் அறிவேன்” என்றான் துச்சாதனன். மேலும் அவன் சொல்லத் துடித்தான். ஆனால் முதற்சொல் எழுந்ததுமே சொல்லவேண்டாம் என்னும் எண்ணத்தை அடைந்தான். அதை உணர்ந்த கர்ணன் “சொல்” என்றான். துச்சாதனன் நிலையழிந்து “எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, மூத்தவரே. நான் எவரிடமும் எதையும் பகிர்ந்து அறியேன்” என்றான். “சொல்” என கர்ணன் மீண்டும் சொன்னான். “நான் இன்று காலை ஒரு கனவு கண்டேன்… சில நாட்களாகவே துயில் நீப்பு. நீங்கள் வருகிறீர்களா என்னும் பதற்றத்தில் நேற்றெல்லாம் அமரக்கூட இல்லை. களைப்பில் விழித்திருக்கையிலேயே எனக்கு கனவுகள் வந்துசெல்கின்றன.”

“ஆம்” என்று கர்ணன் சொன்னான். “இப்போது களத்தில் நின்றிருக்கும் அத்தனைபேரும் அப்படித்தான் இருப்பார்கள். இப்போர் நனவிலும் கனவிலுமாகவே நிகழும்…” சிரித்து “செல்லச் செல்ல முழுக் கனவென்றே ஆகும். தெய்வங்களும் பேய்களும் நாகங்களும் விளையாடும் வெளியில் நிகழும்” என்றான். துச்சாதனன் “என் கனவில் இதுவரை நான் காணாத தெய்வமொன்றை கண்டேன். பின்னர் உணர்ந்தேன், அவள் மூத்தவள் என” என்றான். கர்ணன் “தவ்வை அரக்கர்களின் களியாட்டுத்தெய்வம். இன்று அவையில் சுசர்மர் அவளைப்பற்றி சொன்னார்” என்றான். “ஆம், ஆனால் அவளை அவர்கள் நாட்டப்பட்ட கல்லாக மட்டுமே வழிபடுகிறார்கள். முழுதுருவில் நான் கண்டதேயில்லை” என்றான் துச்சாதனன். “அரிதாகவே அவள் முழுதுருவை வரைகிறார்கள்” என்றான் கர்ணன். “அவ்வன்னையின் கையிலிருந்து நானும் அவர்கள் சொன்ன அந்த அமுதை உண்டேன்” என்றான் துச்சாதனன்.

கர்ணன் வெறுமனே நோக்கினான். “அதற்கு என்ன பொருள் என எனக்குத் தெரியவில்லை. எதுவானாலும் ஆகுக மூத்தவரே, தெய்வங்களை நோக்கத் தொடங்குவது ஒருவன் இங்கிருந்து செல்லும் தருவாய் அணுகிவிட்டது என்பதற்கான சான்று என்பார்கள். எனக்கும் அவ்வாறே என தோன்றுகிறது. அதில் எனக்கு மாற்று விழைவும் இல்லை. இப்போரிலிருந்து உயிருடன் மீளமாட்டேன் என்பது நான் எனக்கே சொல்லிக்கொண்ட வஞ்சம். இப்போர் வென்று என் மூத்தவர் மீளும்வரை மட்டுமே உடனிருப்பேன். குருக்ஷேத்ரத்திலிருந்து அவர் கிளம்பும்போது நான் இங்கேயே விழுந்திருப்பேன்.”

“ஏனென்றால் அதுவே முறை” என்று துச்சாதனன் தொடர்ந்தான். “இனிவரும் தலைமுறைகளிலும் அஸ்தினபுரியின் அவை பேசப்படும். அங்கே குலமகள் சிறுமைசெய்யப்பட்டதை சூதர்கள் பாடிப்பெருக்குவார்கள். அதை கேட்கும் நம் குலக்கொடியினர் அவர்களுக்கு அறம் காப்பென எழுந்து வரும் என உணரவேண்டும். நான் கிளம்பும்போது அசலையிடம் அதைத்தான் சொல்லிவிட்டு வந்தேன்.” கர்ணன் “இது களத்திலெழும் சோர்வு. இத்தகைய உளநிலைகளை வெல்வதும் போரின் பகுதியே” என்றான். “இருக்கலாம். ஆனால் நான் சோர்வடையவில்லை. அன்னையைக் கண்டதை ஒரு நல்லூழ் என்றே நினைக்கிறேன்” என்றான் துச்சாதனன்.

“ஏனென்றால், நான் அன்று அவையில் திரௌபதியை சிறுமைசெய்து மீண்டு என் அறைக்குச் சென்று நீராடும்பொருட்டு ஆடைகளை கழற்றிக்கொண்டிருந்தபோது அவளை கண்டேன்” என்று அவன் தொடர்ந்தான். “நான் களைத்திருந்தேன். என் அறைக்குச் செல்கையில் நடக்கவே இயலவில்லை. என் உள்ளத்தில் வினாக்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்றன. ஏன் நான் அதை செய்தேன்? என் மூத்தவரின் ஆணைக்கு மாறாக நான் எதையும் எண்ணுபவன் அல்ல. என் அன்னையையோ மனைவியையோ அவ்வண்ணம் இழுத்துவந்து அவைச்சிறுமை செய்ய அவர் ஆணையிட்டிருந்தாலும் அதை செய்திருப்பேன் என்பதில் எனக்கு ஐயமே இருக்கவில்லை. ஆனால் அது மட்டும் அல்ல. பிறிதொன்றும் இருந்தது.”

“மூத்தவரே, நான் அச்செயலில் ஆழத்தில் எங்கோ மகிழ்ந்தேன். மிக மிக ஆழத்தில். ஏன் என்று தெரியவில்லை. அந்த மகிழ்ச்சியை எண்ணவும் எனக்கு கூசுகிறது. அமிலம்போல் எரிக்கிறது என்னை. ஆனால் நான் மகிழ்ந்தேன்” என்றான் துச்சாதனன். “கையுறைகளை கழற்றிக்கொண்டிருக்கையில் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வண்ணம் அசைந்தது. திரும்பி நோக்கியபோது என் அறையிலிருந்து ஒருத்தி வெளியே செல்வதை கண்டேன். பேரழகி. முதற்கணமே அவள் மானுடப்பெண் அல்ல என புரிந்தது. யார் என நடுங்கும் குரலில் கேட்டேன். நில் நில் எனக் கூவியபடி பின்னால் சென்றேன். ஆனால் அவள் வெளியே சென்று மறைந்துவிட்டாள். என் குரலைக் கேட்டபடி ஏவலன் மட்டும் அங்கே வந்து நின்றிருந்தான்.”

“நான் செயலிழந்து அமர்ந்தேன். அந்நிகழ்வை எவரிடமும் சொல்லவில்லை. நூறுநூறுமுறை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன். அந்நிகழ்வின் பொருள் என்ன? அந்த தேவி எவர்? எவரிடமாவது கேட்கவேண்டுமென நினைப்பேன். அஞ்சி தவிர்ப்பேன். பின்னர் அதை திட்டமிட்டே மறந்தேன். இன்று அக்கையைக் கண்டபோது ஒன்றை உண்ர்ந்தேன், அவள்தான் அன்று என்னைவிட்டுச் சென்றவள். அன்று சென்றபோது அவள் பேரழகியாக இருந்தாள். இன்று கொடுந்தோற்றம் கொண்டிருந்தாள், ஆனால் அவள்தான். ஐயமே இல்லை. அவள் எனக்களித்த அமுதின் பொருள் என்ன? அந்த அமுது குளிர்ந்திருந்தது. முதற்சுவை கடும்கசப்பு. கடுமையால் கசப்பே இனிப்பென்றும் தோன்றுமே அப்படி அதை உணர்ந்தேன். அதன் பொருள் என்ன?”

கர்ணன் “நான் இத்தகைய உளஓட்டங்களை கூர்ந்து நோக்கி ஆராய்வதில்லை” என்று சொன்னான். “ஏனென்றால் புகையை நாழியால் முகக்கும் பணிக்கு நிகர் உள்ளப்பெருக்கை மதிப்பிடுவது என என்னிடம் ஒருமுறை பரசுராமர் சொன்னார். அன்று உதறிய வழக்கம் இது. என் உள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதை எப்போதேனும் உணர்வேன். துணுக்குற்று விழித்தெழுந்து அக்கணமே என்னை விலக்கிக்கொள்வேன்” என்றான் கர்ணன். பின்னர் நின்று “அங்கே சென்று அவர்களுடன் கலந்துகொள்வோம்” என்றான். அவன் கைசுட்டிய இடத்தை நோக்கிய துச்சாதனன் “எளிய வேல்படைவீரர்கள்… அனைவருமே முழுக் களிமயக்கில் இருக்கிறார்கள்” என்றான். “அது நன்று. நாமும் களிமயக்கடைவோம். கொதிக்கும் சித்தத்தை மதுவிட்டு நனைக்காமல் இனி குடிலுக்குச் சென்று துயில முடியாது” என்றான் கர்ணன்.

ele1அவர்கள் அனலைச் சூழ்ந்தமர்ந்து குடித்து நகையாடிக்கொண்டிருந்த குழுவை நோக்கி சென்றபோது ஒரு வீரன் களிமயக்கில் சரிந்த விழிகளுடன் “யார்? நெட்டையனா?” என்றான். இன்னொருவன் கர்ணனை உணர்ந்து பாய்ந்தெழுந்து “அரசே!” என்றான். “குடிக்கலாமென வந்தோம்… சற்றுநேரம் களியாடலாமென்று” என்றபடி கர்ணன் அமர்ந்தான். துச்சாதனன் தயங்கி நிற்க “அமர்க!” என்றான் கர்ணன். அவனை கைபற்றி இழுத்து அமரச்செய்தான். துச்சாதனன் நிலையழிந்தவனாக உடல் கோட்டி அமர்ந்தான். “என்னை நினைவிருக்கிறதா, அங்கநாட்டரசே? முன்பு மகதப்போரில் நீங்கள் எங்களுடன் மதுவாடினீர்” என்றான் ஒரு வீரன். “ஆ! நினைவுறுகிறேன். பூதநாதரே, நலம்தானே? இன்னுமா உயிருடன் இருக்கிறீர்?” என்றான் கர்ணன். “இந்தப் போரில் சென்றுவிடுவேன். செல்வதற்கு உகந்த போர்” என்றான் பூதநாதன்.

“செல்லும் போரை கொண்டாடும்பொருட்டு ஒரு மொந்தை!” என்றான் கர்ணன். படைவீரர்கள் வெடித்து நகைத்தார்கள். கர்ணன் தன்னிடம் அளிக்கப்பட்ட மொந்தையை துச்சாதனனிடம் அளித்தான். “குடி… இன்றிரவு நன்றாகத் துயில்வாய்.” துச்சாதனன் அதை தயக்கத்துடன் வாங்கிக்கொண்டான். கர்ணன் மூன்று மொந்தைக் கள்ளை அருந்தி ஏப்பம்விட்டு மீசையை நீவியபடி “நல்ல கள். குளிர்ந்தது” என்றான். “இது அங்கே அரக்கர்களிடமிருந்து வந்தது. அவர்கள் அக்கையை நிறுவி இதை அருந்துகிறார்கள்” என்றான் பூதநாதன். “அக்கை! அஹஹஹஹா! அக்கை!” என்று ஒருவன் தொடையிலறைந்து வெடித்துச் சிரித்தான். கர்ணன் ஏப்பங்கள் விட்டபடி “இவனுக்கு ஒரு சிக்கல்… இவன் மூத்தவளை பார்த்துவிட்டான்!” என்றான். “அவருமா! ஆஹாஹாஹா!” என அவன் நகைக்க பூதநாதன் “அரசே, இங்கே பலர் அவளை பார்த்திருக்கிறார்கள்” என்றான்.

“அவள் தோன்றுவதன் பொருளென்ன?” என்று கர்ணன் கேட்டான். “அவள் அனைவரையும் அள்ளிக் கொண்டு செல்லப் போகிறாள். வேறென்ன?” என்று ஒருவன் சொன்னான். கர்ணன் இன்னொரு மொந்தைக்கு கைநீட்டி “அது எவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவன் முன்னர் ஒருமுறை அவளை பார்த்திருக்கிறான். அன்று அவள் இவனிடமிருந்து கிளம்பிச்சென்றுகொண்டிருந்தாள்” என்றான். பூதநாதன் “மெய்யாகவா? அக்கை செல்வதுபோல் கனவு வரக்கூடாது. அத்தனை செல்வங்களும் உடன் செல்லும். செல்பவள் பேரழகியெனத் தெரிவாள்” என்றான். சற்றே மயக்கு ஏறியிருந்த துச்சாதனன் பாய்ந்து கையூன்றி முன்சென்று “ஆம், பேரழகி! அப்படித்தான் இருந்தாள்” என்றான்.

“அவளை மீண்டும் கண்டீர்களா? ஒருமுறை சென்றபின் அவள் காட்சி கொடுப்பதே இல்லையே?” என்றான் பூதநாதன். “வீரரே, நான் அவளை மீண்டும் கண்டேன். என்னை நோக்கி வந்து எனக்கு அமுதளித்துச்சென்றாள்.” பூதநாதன் “நன்று… அவள் உங்களுக்கு அருளியிருக்கிறாள். முன்பு நீங்கள் ஆற்றிய அறமின்மை ஒன்றின்பொருட்டு உங்கள்மேல் முனிந்தவள். இன்று உங்களுக்கு மீண்டும் அருளியிருக்கிறாள். நீங்கள் அவளால் மீட்கப்பட்டுவிட்டீர்கள்” என்றான். துச்சாதனன் உரத்த கேவலோசையுடன் அழுதான். கர்ணன் அவன் தோளைத்தட்டி “என்ன இது? அறிவிலி…” என்றான். “இல்லை… இல்லை” என துச்சாதனன் உடல்குலுங்க அழுது முகத்தை நிலம்நோக்கி தாழ்த்தினான்.

கர்ணன் கைகாட்ட மேலும் மது வந்தது. “குடி… குடி இதை. நான் சொல்கிறேன்” என கர்ணன் அதை துச்சாதனனுக்கு நீட்டினான். அவன் இரு கைகளாலும் அதை வாங்கி இளங்குழவிபோல் அருந்தினான். ஏப்பம் விட்டபின் “என் அன்னை! என் குலமகள்!” என்றான். பூதநாதன் “கதைகளின்படி இரணியனின் துணைவி கியாதி, இராவணப்பிரபுவின் அரசி மண்டோதரி என பேரரக்கர் அனைவருக்கும் துணைவியென எழுந்தவள் அக்கையே” என்றான். துச்சாதனன் “என் குலமகள்… என் குலமகள் அசலை” என விசும்பினான். “ஒன்று செய்யலாம். இவருடைய முற்பிறப்பு நிலை என்ன என்று உசாவலாம். இங்கு அதற்கு ஒருவர் இருக்கிறார். சாதர் என்று பெயர். ஊரில் இவர் காளிகை அன்னையின் பூசகராக இருந்தார்.”

“அவரால் எழமுடியுமெனத் தோன்றவில்லை. அரசநாகத்தால் கடியுண்டவர்போல் நஞ்சேறிக் கிடக்கிறார்” என்று ஒருவன் சொன்னான். “அது நன்று… எழுப்புக!!” என்றான் பூதநாதன். இருவர் சாதரை உலுக்கி எழுப்ப அவர் எழுந்தமர்ந்து உரக்க ஏப்பம்விட்டு மீண்டும் கள்ளுக்காக கை நீட்டினார். “சாதரே, எழுக! அங்கநாட்டரசர் கர்ணன் வந்துள்ளார். உங்களிடம் சில வினாக்களை எழுப்புகிறார்” என்றான் பூதநாதன். “அவரை நான் அறிவேன். நாங்கள் இணைந்து வங்கப்போர்க்களத்தில் மதுவருந்தி…” என்றபின் கர்ணனைப் பார்த்து “வணங்குகிறேன், அரசே” என்றார் சாதர்.

“சாதரே, உங்களை நினைவுறுகிறேன். அன்று நீங்கள் இன்னொருவனிடம் பூசலிட்டீர்கள். அவன் பெயர் சம்பு” என்றான் கர்ணன். “ஆம், நல்லவன். இறந்துவிட்டான்” என்ற சாதர் “என்ன கேட்கவிருக்கிறீர்கள்?” என்றார். “இவன் கேட்கிறான். இவன் யார்? இவனை ஏன் அக்கை தொடர்கிறாள்?” என்று கர்ணன் கேட்டான். “என் குலமகள்… அவளை நான் தொடவே இல்லை” என்று துச்சாதனன் விசும்பி அழுதான். சாதர் “உசாவுகிறேன். என் தெய்வங்களை எழுப்புகிறேன்” என்றபின் கையூன்றி தவழ்ந்து நெருப்பருகே வந்தார். நன்கு அமர்ந்து நெருப்பொளியில் சிவந்து தெரிந்த தரையில் ஒரு களத்தை சுட்டுவிரலால் வரைந்தார். அதில் ஏழு கூழாங்கற்களை வைத்தார். மிக மெல்ல அவற்றை நகர்த்தினார். அச்செய்கையாலேயே மயக்குற்றவர்போல அதை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தார்.

பின்னர் “ஆம்” என்றார். “எவர்? எவர்?” என்றார். கர்ணன் துச்சாதனனின் ஒரு மயிரிழையைப் பறித்து அந்தக் களத்தில் வைத்தான். அவர் உடலில் ஒரு சிறிய விதிர்ப்பு கடந்துசென்றது. பின்னர் ஆழ்ந்த மூச்செறிதல்கள் வெளிப்பட்டன. குரல் பிறிதெங்கிருந்தோ என ஒலித்தது. “இவர் விண்ணிலிருந்து ஆளும் கலிதேவனின் கொடியாக அமைந்த காகம். தன் விழைவால் காகன் என்னும் அசுரன் எனப் பிறந்தார். மண்ணில் ஆயிரமாண்டுகாலம் அரசனாக ஆண்ட பின்னர் காகமென்று வடிவுகொண்டு காட்டில் வாழ்ந்தார்.”

“முன்பு விண்பேருருவன் இங்கே ராகவராமனாக அயோத்தியில் பிறந்து மிதிலையின் இளவரசியை மணந்து தந்தையின் சொல்கேட்டு கானேகி மந்தாகினி என்னும் ஆற்றின் கரையில் அவளுடன் தனித்திருந்தான். இனிய காற்றில் அவன் அவள் மடிமேல் தலைவைத்து துயின்றான். அப்போது காற்றில் ஆடை விலக சீதையின் இடத்தொடை வெளிப்பட்டது. தொடையின் அழகை மேலே மரக்கிளையில் இருந்து இடதுவிழியால் கண்ட காகாசுரன் கீழிறங்கி வந்து அந்த மென்தொடையை தன் கூரிய கரிய அலகால் கொத்தினான்.”

“தன் கணவனின் துயில் கலையலாகாது என்று அன்னை அதை பொறுத்துக்கொண்டாள். குருதி வழிந்து கன்னத்தை நனைக்க விழித்தெழுந்த ராமன் என்ன நிகழ்ந்தது என்று அறிந்து சினம்கொண்டான். காகத்தை நோக்கி அவன் சினந்தபோது அது இருள்விரிந்ததுபோல் எழுந்து பேருருக் காட்டியது. ராமன் அருகிருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அதை நோக்கி வீசினான். அது பெரும்புயலென பெருகி வருவதைக் கண்டு காகாசுரன் பறந்து தப்பினான். அந்த தர்ப்பபாசம் அவனை ஏழுலகங்களுக்கும் துரத்தியது. எங்கும் நிலைகொள்ளாமல் அவன் பறந்தான். அவன் வழிபட்ட குலதெய்வங்கள் அனைத்தும் அவனை கைவிட்டன. வேறுவழியில்லாமல் அவன் வந்து ராமனின் காலடியில் விழுந்து தன்னை காக்கும்படி கோரினான்.”

“அடியார்க்குநல்லானாகிய பெருமான் காகாசுரனின் பிழைபொறுத்து ஏற்றுக்கொண்டான். தன் தேவியின் காலடியில் மும்முறை வணங்கி அருள்பெறும்படி கோரினான். காகாசுரன் வணங்க அன்னை அவன் கழுத்தை தடவினாள். அவள் கையிலிருந்த குருதியின் ஈரம் பட்ட அந்த இடம் மட்டும் மென்வண்ணம் கொண்டது. அன்னையின் அழகை நோக்கிய அவன் ஒருகண் மட்டும் நோக்கிழந்தது. அன்றுமுதல் காகங்கள் கழுத்து வெளிறி, அரைநோக்கு கொண்டன” என்றார் சாதர். “காகன் மீண்டும் விண்ணேகி கலிதேவனின் துணைவனாக அமர்ந்தான். கலி மண்பிறக்க முடிவெடுத்தபோது தானும் உடன்வந்தான். அஸ்தினபுரியின் அரசன் என கலிதேவன் எழுந்தான். உடன் துச்சாதனன் என்னும் பேரில் காகன் பிறந்தான்.”

“அரசே, முற்பிறப்பில் செய்தவற்றையே மீண்டும் அவன் செய்தான். எப்பிழையும் ஏழுமுறை செய்யப்படும் என்று உணர்க! முதல்முறை அது பொறுத்தருளப்படும். பின்னர் அறிவுறுத்தப்படும். அதன்பின்னர் தண்டிக்கப்படும். ஏழுமுறை இயற்றப்பட்டு அதனூடாக ஏழுவகை அறிதல்களாக அது மாறும். ஏழாம்முறை விண்ணிலுறையும் தூய மெய்யறிவென்று தெளியும். அதனூடாக அப்பிழைசெய்பவன் வீடுபேறடைவான். பிழைகளனைத்தும் தவங்களே. பிழைகளினூடாகவே உயிர்கள் நிறைவடைந்து விண்மீள்கின்றன” என்றார் சாதர்.

துச்சாதனன் “என் குலமகள்! என் அரசி!” என விசும்பிக்கொண்டிருந்தான். கர்ணன் அவன் தோளை மெல்ல தட்டினான். பின்னர் எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன். நாளை போரில் எழுவோம்” என்றான். ஒற்றைக்கையால் துச்சாதனனின் எடைமிக்க பேருருவை சிறுகுழவி என தூக்கினான். அவனை நோக்கிக்கொண்டிருந்த சாதர் “நீங்கள் நாகர்” என்றார். துச்சாதனன் அரைவிழிப்பில் “ஆம், அவர் நாகபாசர். பாதாளனாகிய மணிகர்ணன் அவர் வில்லென்று நின்று நடமிடுகிறது” என்றான். சாதர் “நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும், அங்கரே” என்றார். அவர் விழிகள் நாகங்களுக்குரிய இமையா மணித்தன்மையை அடைந்துவிட்டிருந்தன. “சொல்க!” என்றான் கர்ணன். சாதரின் குரல் சீறலென மாறிவிட்டிருந்தது.

நாகர்களிடம் ஒரு கதை உள்ளது. முன்பு இங்குள்ள அத்தனை நாகங்களும் வான்நிறைத்து பறந்துகொண்டிருந்தன. காசியபரின் குருதியில் தட்சனின் மகள்களில் பிறந்த மாநாகங்கள் அனைத்தும் பெருஞ்சிறகுகள் கொண்டிருந்தன. அவை முதலில் வருணனாலும் பின்னர் சூரியனாலும் இறுதியில் இந்திரனாலும் முற்றாக தோற்கடிக்கப்பட்டன. மேலும் மேலும் அவியூட்டி வருணனையும் சூரியனையும் இந்திரனையும் ஆற்றல்மிக்கவர்களாக ஆக்கினர் அந்தணர். நூற்றெட்டுமுறை விண்ணிலும் நூற்றெட்டுமுறை மண்ணிலும் நாகர்கள் வெல்லப்பட்டனர். அஞ்சி அஞ்சி நிலையொழிந்து அவை பின்வாங்கின. ஆகவேதான் மண்நாகங்கள் இன்றும் மழையையும் வெயிலையும் ஒழிகின்றன. இடியோசையை அஞ்சுகின்றன.

மூன்று தேவர்களிடமும் நாகங்கள் இறுதி எல்லை வரை என நின்று போரிட்டன. ஒருமுறை போரின் உச்சகணத்தில் அவை கண்டன வருணனே பிரம்மன் என. சூரியனே சிவன் என்றும் இந்திரனே விண்வடிவன் என்றும் அவை அறிந்தன. உளம்நடுங்கிச் சுருண்டு அவை இருளுக்குள் சென்று பதுங்கின. அங்கே ஆழங்களுக்குள் இருந்து ஆழங்களுக்குள் அவை சென்றன. தங்கள் உடலை நீரென நீட்டி பாதாளங்களுக்குச் சென்று பந்தெனச் சுருட்டி அமைந்தன. அவற்றின் சிறகுகள் உதிர்ந்தழிந்தன.

முன்பு அவை வானளந்த காலத்தில் இடியின் ஓசையில் பேசிக்கொண்டிருந்தன. பாதாள இருளில் ஒன்றுடன் ஒன்று உடலொட்டி ஒற்றைச்சுருளென ஆகிக் கிடந்தபோது ஒன்றோடொன்று மூச்சொலியில் பேசிக்கொண்டன. அப்பேச்சே அவற்றின் குரலென்று பின்னர் மாறியது. அவற்றின் நீண்டு பறக்கும் உடல் உருமாறி பதுங்கும் வடிவை அடைந்தது. வானில் இருக்கையில் அவற்றின் செவிகள் பருந்துக்குரியவையாக இருந்தன. பாதாளத்தில் அசைவே ஒலியுமென்பதனால் அச்செவிகள் மறைந்து விழிகளையே அவை செவிகளாகக் கொண்டன.

நாம் இனி எந்நிலையிலும் வெல்லவியலாது என்று மாநாகங்கள் ஒன்றோடொன்று சொல்லிக்கொண்டன. நாம் நம்மை ஆக்கிய தெய்வங்களால் கைவிடப்பட்டுள்ளோம். அவிபெற்று வளர்ந்து வருணனும் சூரியனும் இந்திரனும் மூன்று முதற்தெய்வங்களுக்கு நிகரென்று ஆகிவிட்டிருக்கிறார்கள். இனி நாம் மேலெழுவது இயல்வதல்ல. நாம் நம் அன்னையிடம் சென்று கேட்போம். தன் மைந்தர்களுக்கு அவள் சொல்வதென்ன என்று உசாவுவோம் என்றது முதிய நாகமான கார்க்கோடகன்.

மாநாகர்கள் கிளம்பி மேலும் மேலும் ஆழத்திற்குச் சென்று ஆழமும் ஆன வானிலெழுந்தனர். அங்கே மாமலைத்தொடர்களை சிறுசெதில்கள் எனக்கொண்டு விண்மீன் மினுக்குகளால் ஆன கரிய திசைப்பெருக்கென உடல்விரித்துக் கிடந்த அன்னை கத்ருவை அணுகின. இடியோசைகளும் மலர்வெடிக்கும் ஒலியென்றாகும் கடுவெளி அது. ஆனால் அன்னைக்கு மைந்தர்குரல் எண்ணமாக இருக்கையிலேயே சென்றடையும். அவர்களின் மன்றாட்டை அன்னை கேட்டாள்.

அன்னையே, நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இனி இப்புடவிப் பெருநெசவில் எங்களுக்கு இடமே இல்லையா என்று நாகங்கள் கேட்டன. அன்னை கண்கனிந்து எழுந்தாள். மைந்தர்களே, உங்கள் சிறகுகள் உதிர்ந்து பாதாளம் எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டீர்கள் அல்லவா? அச்சிறகுகளை உண்ணுங்கள். அவை உங்கள் உடலில் நஞ்சு என ஊறிச்சேரும். இனி அதுவே உங்களை ஆற்றல்கொண்டவர்களாக்கும். உலகறிய விரிப்பவை சிறகுகள் ஆகின்றன. கரப்பவை நஞ்சாகின்றன.

ஒளிந்திருக்கும் வஞ்சம், மறைத்துக்கொண்ட சினம், அடக்கிக்கொண்ட விழைவு, ஒலியாகாத சொல், திரளாத எண்ணம், திரிபடைந்த தவம் அனைத்தும் நஞ்சே. மைந்தர்களே, ஒளிக்குரியது சிறகு. நஞ்சு இருளின் விசை. இரவுகளை ஆளுங்கள். ஆழங்களில் நிறையுங்கள். இப்புவியில் இனி கரந்துறையும் அனைத்தையும் உரிமைகொள்ளுங்கள். காத்திருக்கும் அனைத்திலும் சென்று குடியேறுங்கள். அடங்காத அனைத்திலும் ஆற்றலென்றாகுங்கள். நீங்களில்லாமல் புடவியில் எந்நெசவும் முழுமையடையாமலாகுக

அன்னையின் சொற்களுடன் நாகர்கள் திரும்பி வந்தனர். அதன்பின் அவர்கள் தங்கள் பாதாளத்தில் இருந்து ஏழுலகுக்கும் கரவுப்பாதைகளை அமைத்துக்கொண்டார்கள். மண்ணுக்கு எழுந்துவந்து இங்குள்ள மலைக்குடிகளில் தூயவர்களாகிய பெண்களைக் கவர்ந்து அவர்களின் கருக்களில் நாகர்குடிகளென எழுந்தனர். நாகர்கள் காடுகளின் இருளில் கரந்துவாழ்ந்தனர். பெருநகரங்களின் அடியில் அவர்களின் ஊடுபாதைகள் அமைந்தன. அரண்மனைகளின் அடித்தளங்கள் அவர்கள்மேல் அமைந்திருந்தன. கோட்டைகளும் காவல்களும் அவர்களை தடுக்காமலாயின. அவர்களை பெரும்படைகளும் அஞ்சின. இப்பாரதவர்ஷம் நோக்குக்கு ஷத்ரியர்களாலும் உணர்வுக்கு நாகர்களாலும் ஆளப்படுவதாகத் தெரியும் என்றனர் மூத்தோர்.

கர்ணன் அவர் சொற்களை கேட்டுக்கொண்டு நின்றான். பூதநாதன் துயில்கொண்டிருந்தான். தழல் அணைந்து கங்காக மாறிவிட்டிருந்தது. “நான் உடனிருப்பேன்” என்று சாதர் சொன்னார். “நான் என்றும் உடனிருக்கிறேன்.” கர்ணன் மேலும் சிலகணங்கள் அவரை நோக்கியபின் துச்சாதனனைத் தூக்கியபடி நடந்தான். அவன் தோளில் தொங்கியபடி துச்சாதனன் சொன்னான். “அன்னையின் இனிய மது! அன்னை!”

அவர்கள் செல்வதை படைவீரர் நோக்கி அமர்ந்திருந்தனர். சாதர் தன் தலைக்கவசத்தில் விரலோட்டி தாளமிட்டார். “தோழர்களே, தொல்லரக்கர் குடியினரே, அருந்துக நம் அன்னையின் இன்னமுதை. கரியது, குளிர்ந்தது, ஆற்றல் அளிப்பது. அருந்துக இதை! இது நம்மை அழியாதவர்களாக ஆக்கும். எண்ணுக, இடும்பர் குடி எழும்! இங்கு நம் குருதி நிலைகொண்டு வாழும்!” முன்னும் பின்னும் உடலசைத்து சன்னதம் கொண்டு குரலெழுப்பினார் “நான் இடும்பன்! தொல்லிடும்பர் குடியின் குடாரன்! என் சொற்கள் இவ்விருளில் பெருகியெழுக! ஆம், எழுக!”

முந்தைய கட்டுரைமொழியை பெயர்த்தல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதம் – 17