கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

anb11
அன்புராஜ்

அந்தியூர் அருகேயுள்ள கழுதைப்பாளி மலையடிவார கிராமத்தில் நண்பர்கள் 12 பேர்களுடன் திரு. அன்புராஜை சந்தித்தோம். இவரை பற்றி 25-11-2018 அன்று தீ கதிரில் வந்திருந்த ஒரு செய்தித்தொகுப்பை அனைவரும் படித்திருத்தோம். வீரப்பனுடன் இணைந்து 9 வனவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் 1997 முதல் 2016 வரை 19 ஆண்டுகள் 9 மாதங்கள் தொடர்ந்து 9 பகுதிகளாக தமிழக மற்றும் கர்நாடக சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையானவர். 7ம் வகுப்பு படித்திருந்த 42 வயதுடைய அன்புராஜ் சிறையிலேயே ஒரு பட்டயப்படிப்பும் ஒரு முடிக்காத பட்டப்படிப்பும் படித்திருக்கிறார், ஒரு நாடக கலைஞராக உருவானார், சக சிறைவாசியை திருமணம் செய்துகொண்டு, தற்போது மனைவி குழந்தைகளுடன் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவருகிறார். வயதுக்கு மீறிய இளமையுடன் காணப்படும் அன்புராஜ் ஒரு வெளிப்படையான உற்சாகமான உரையாடல்காரர். தேன் வியாபாரம், கடலை எண்ணையை பிழிந்து விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை செய்து வருகிறார்.

கிருஷ்ணன்

anb1

வீரப்பன் பால் ஈர்க்கப்பட்டதற்கு ஒரு சாகச உணர்வு தான் காரணமா ?

அல்ல, வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக எங்கள் கிராமங்களில் முகாமிடும் போலீசார் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். கிராம மக்கள் மேய்த்துக் கொண்டிருக்கும் சில ஆட்டுக்குட்டிகளையும் மாட்டு கன்றுகளையும் அராஜகமாக கவர்ந்து சென்று சமைத்து உண்டு விடுவார்கள். எங்கள் ஊர் ஆரம்பப்பள்ளி நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெளியேற்றிவிட்டு அங்கு தங்கிக் கொள்வார்கள், ஊரில் முக்கியமானவர்களை தேடிப்பிடித்து அனைவர் முன்னிலையிலும் அடித்து துன்புறுத்துவார்கள், அச்சத்தை விளைவிக்க வேண்டும் என்றும் சுயமரியாதையை குன்ற செய்ய வேண்டுமென்றும் ஒரு நோக்கம் அவர்களிடம் இருந்தது. நான் ஒருமுறை எங்கள் கிராமத்தில் மிகவும் மதிக்கப்பட்ட தலைவரை பலர் முன்னிலையில் அறைந்து காலால் மிதித்து அவரை சிறுமைப்படுத்தியதை பார்த்தேன். இதுபோன்ற சம்பவங்களை பார்த்துக்கொண்டே இருந்த நான் எதிர் எல்லைக்கு செல்ல முடிவெடுத்தேன், இந்த சமயத்தில் தான் வீரப்பனை சந்தர்ப்பவசமாக காட்டில் சந்தித்ததும் ரேஷன் பொருட்களை வாங்கி கொடுத்ததும் பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் பின்னாலேயே சுமார் 3 ஆண்டுகள் சென்று விட்டதும் நடந்தது.

அது போக நான் ஒரு இயற்கை விரும்பி, எனது பாட்டியுடன் சிறுவயதில் இருந்தே அருகில் காடுகளுக்குள் செல்வேன், பின்பு தனியாகவும். எனது பாட்டி எனக்கு மரங்களையும் பறவைகளையும் விலங்குகளையும் அறிமுகப்படுத்தினார். ஒரு உச்சிப் பாறையில் அமர்ந்து காட்டை ரசித்துக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமானது. காட்டின் வசீகரம் கூட என்னை உள் இழுத்திருக்கலாம்.

 வீரப்பனுடன் இருந்த காட்டு அனுபவம் எப்படி இருந்தது ?

நான் இணைந்தபோது 1994இல் 18 பேர் குழுவில் இருந்தோம். சேத்துக்குளி கோவிந்தன் தான் அசலான அதிகாரம் படைத்தவர். கூர்மையான அவதானிப்புடையவர், ஆட்களை எடைபோடுவதில் வல்லவர், ஆயுதப் பயிற்சி அளிப்பவர். அவர் தான் எனக்கு சுமார் 50 பறவைகளின் சப்தங்களை எழுப்ப கற்றுக் கொடுத்தார், தற்போது சுமார் 10 நினைவில் உள்ளது. (தாமரைக்கரையில் மணிப்புறாவை போலவே சப்தம் எழுப்பி எங்கள் முன் உடனடி பதில் பெற்றார் https://youtu.be/-W6KSm0poJ0 ).

ஒவ்வொருவரும் ஆயுதம் உட்பட சுமார் 40 கிலோ எடையை சுமக்க வேண்டும். நான் இருந்த சமயம் எங்களுடன் ஒரு தம்பதியும் இருந்தனர். பழங்குடிகளிடம் இருந்து சேத்துக்குளியும் வீரப்பனும் காட்டில் வேட்டையாடுவது மற்றும் எஞ்சி வாழ்வது எப்படி எனக்கற்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு 25 ஆண்டு கால அனுபவம் இருந்தது. காட்டின் பருவநிலை, புவியமைப்புகள் ஆகியவைகள் வரைபட உதவியின்றி மனப்பாடமாகவே அவர்களுக்கு தெரியும். பெரும்பாலும் ஓரிரு நாட்கள் தான் ஒரு இடத்தில் டென்ட் அமைத்து தங்குவோம், அரிதாக 15 நாட்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறோம். எனக்கு 303 மற்றும் ஏ கே 47 ஐ இயக்கத் தெரியும். சேத்துக்குளி கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து நாங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டே இருப்போம், சேத்துக் குளியின் இலக்கு தவறி இதுவரை நான் பார்த்ததில்லை.

வேட்டையாடுவதில் நாங்கள் பழங்குடியை விட சிறப்பாக இயங்குபவர்கள். வேட்டை நிலத்தின் காற்று வீசும் திசையே வேட்டையை தீர்மானிக்கிறது. எதிர்காற்றில் வேட்டையாட இயலாது. ஆனால் சில பகுதியில் மென்மையாக சுழலும் தன்மையுடன் காற்று வீசும் அங்கு வேட்டை சாத்தியமே இல்லை. அரிதாக பழங்குடிகள் சிலர் வேட்டையாடுவார்கள். அங்கு அதிக அளவில் பிள்ளை வகை மான்கள் காணப்படும். காற்றில் இரு அடுக்குகள் உள்ளது கீழடுக்கில் சுழலும் காற்று கீழே தான் அமைந்திருக்கும், அது மேல் அடுக்கு காற்றுடன் கலக்காது. எனவே முந்தைய நாள் இரவே நாங்கள் மர உச்சியில் பரண் அமைத்து இரவுக்காக காத்திருப்போம். காட்டில் வாசனை போக ஓசையும் அசைவுகளும் முக்கியமானது. இயற்கையற்ற அசைவுகளையும் ஓசையையும் விலங்குகள் ஒரு பார்வை வீச்சில் கண்டுவிடும். எனவே எங்கள் ஆயுதத்தின் முனையில் தேன்மெழுகை தடவி மின்மினியை பிடித்து ஒட்டி விடுவோம். திரும்பும் அசைவை கவனிக்கும் விலங்கு அது மின்மினி என ஏமாந்துவிடும், ஓடிச்செல்லாது. நாங்கள் அடித்துவிடுவோம். இந்த முறை வீரப்பனால் கண்டுபிடிக்கபட்டது. இது அப்பகுதி வாழ் பழங்குடிகளுக்குத் தெரியாது.

நானும் வீரப்பன் சமூகத்தை சேர்ந்த வன்னியர் என்றாலும் எனக்கு சில மருத்துவ முறைகளைக் கற்றுத்தரவே இல்லை. சேத்துக்குளி மருத்துவ தாவரங்களை சேகரித்துக் கொண்டே இருப்பார். குறுமிளகை கருங்குரங்கின் பித்தப்பையில் இட்டு நிழலில் உலர்த்தி வைத்திருப்பார், சாதாரண காய்ச்சலுக்கு ஓரிரு குறுமிளகுகளை கொடுப்பார் சில மணிகளில் வேர்த்து காய்ச்சல் அகன்றுவிடும். ஒருமுறை என்னை தேள் கொட்டி விட்டது சேத்துக்குளி காயத்தின் மீது ஒரு பச்சிலையை பிழிந்து விட்டு கரடியின் பித்தபையில் இட்டு வைத்திருந்த பச்சரிசி பருக்கைகளை உண்ண கொடுத்தார். கடிபட்ட இடத்தில் மஞ்சளாக திரவம் வெளியேறியது, ஓரிரு நிமிடங்களில் வலி அகன்று பயணத்திற்கு தயாரானேன்.

ஒரு முறை ஒரு மாடுமேய்க்கும் இளைஞனை பாம்பு கடித்துவிட்டது, நங்கள் அவ்வழியாக மறைவாக சென்றுகொண்டிருந்தோம். சேத்துக்குளி என்னை கூட்டிக்கொண்டு அவனருகே சென்றார், அவனின் நண்பர்கள் பதட்டத்துடன் இருந்தனர், அவன் மயங்கிக் கிடந்தான். காயத்தை பார்த்த சேத்துக் குளி பற்தடம் மேலும் கீழும் இருந்ததை கண்டு அதன் வகையை அறிந்துவிட்டார். கொத்துமல்லி போல காணப்பட்ட ஒரு தாவரத்தை அவன் வாயில் திணித்து தண்ணீர் கொடுத்தார், லேசாக மயக்கம் தெளிந்து அதை குடித்தான், மேலும் மேலும் குடித்துக்கொண்டே இருந்தான். பின்னர் என்னை நோக்கி இப்போது வேடிக்கையை பார் என்றார், அவன் காலில் இருந்து திரவம் முதலில் வெளியேறியது, பின்னர் மிகுதியாக ரத்தம் பீய்ச்சி அடித்தது. அவ்விளைஞன் பழைய மாதிரி எழுந்து நின்றான். எங்களிடம் விடைபெற்று தானாக நடந்து அவனது கிராமத்திற்குள் சென்றான்.

வீரப்பன் குழுவினர் உள் உணர்வு மிக்கவர்கள், சகுனங்களை நம்புபவர்கள். தனது குலதெய்வம் அனுதினமும் தங்களிடம் பேசுவதாகவும் நம்புகிறவர்கள். ஒரு தர்க்கவாதி ஆகிய நான் இதை ஏற்பதில்லை. தான் கண்ட கனவுகள் குறித்து சேத்துகுளியும் வீரப்பனும் நாள் முழுக்க பேசிக்கொண்டிருப்பார்கள். குழுவில் உள்ளவர்களுக்கு தங்களது கனவுகளைப் பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார்கள் நல்ல அல்லது கெட்ட அறிகுறி என கூறிக்கொண்டே இருப்பார்கள். சில சமயம் வியக்கத்தக்க வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தேறும்.

ஒரு முறை வீரப்பன் காட்டு எருதை வேட்டையாடுவதாக கனவு கண்டதாகவும் நெற்றியில் அடிபட்ட அந்த காட்டு எருது தன்னை நேராக பார்த்ததாகவும் தானும் ஒரு போதும் காட்டு எருதை சுட மாட்டேன் என்பதால் குடும்பத்துடன் திரும்பியதாகவும் பின்னர் எங்கள் கேம்பில் குண்டு பட்டு ரத்தம் ஒழுக மாதையன் முனகிக் கொண்டு இருந்ததாகவும் எப்படி இது ஆயிற்று என தான் கேட்க சுட்டுவிட்டு தெரியாதது போல் இப்படி கேட்கிறீர்களா என கேட்டதாகவும் கூறினார். இந்தக் கனவு ஒரு தீய சகுனம் என சொன்னார் பின்னர் மறுநாள் எங்களுக்கும் போலீஸாருக்கும் ஒரு நெருக்கமான மோதல் நிகழ்ந்தது மாதையனுக்கு வீரப்பனின் கனவில் வந்தது போலவே காலில் குண்டு பட்டது.

வீரப்பனிடம் ரேடார் போல இயங்கும் ஒரு ரேடியோ இருந்தது, நாங்கள் எங்கிருந்தாலும் 2 கிலோ மீட்டர் சுற்றுக்கு யாரேனும் வயர்லெஸ் கருவியுடன் வந்தால் அது காட்டிக்கொடுத்துவிடும், போலீசார் பேசுவதையும் கேட்கலாம். இன்றுவரை இது போலீசாருக்கு தெரியாது என எண்ணுகிறேன். ஆயுதங்களை காவல் நிலையத்தில் இருந்தும் போலீசாரிடம் இருந்தும் பிடுங்கிச் செல்வது தான், அதை தவிர்த்து வெளியில் கள்ளத்தனமாக எனக்குத் தெரிந்து ஆயுதங்கள் வாங்கியதில்லை. ஆனால் ரேஷன் தான் எங்களுக்கு பெரிய பாடு. ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வோம். ஒருமுறை தலையில் பட்டையாக நரைமுடியுடன் ஒரு இளைஞனை வீரப்பன் அணுகி பேச்சுக் கொடுத்தார், அவனை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவன் நம்பிக்கையானவன் எனவும் அவனிடம் ரூ 6000 கொடுத்து பொருட்களை வாங்கி வர சொல்லி சேத்துக்குளியிடம் கூறினார். சேத்துக்குளி அவனை நம்ப முடியாது எனவும் வேண்டுமானால் ரூ 2000 தருகிறேன் எனவும் அதை அனாமத்து கணக்கில் எழுதிக்கொள் எனவும் கூறி கொடுத்தார். மறுநாள் பொருட்களை பெற்றுவர குறித்த இடத்தில் அதிகாலை 3 மணிக்கே எழுந்து கிளம்பி 6 மணிக்கு சென்று மதியம் 3 வரை காத்திருந்து, பசியில் எங்கள் கேம்புக்கு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் வீரப்பனுக்கு உண்மை விளங்கியது, தகவலை வெளியிட்டு விடுவான் என அவன் குறித்து அச்சப்பட்டார். அதற்கு சேத்துக்குளி அவன் எதற்கும் லாயக்கற்றவன் ஒரு டீக்கடையை பிடித்து உட்கார்ந்து 2000 ரூபாய் தீரும்வரை அனைவருக்கும் செலவு செய்வான் எனக் கூறினார். பின்னர் சுமார் 6 மாதம் கழித்து அதே கிராமத்தை சேர்ந்த ஒருவனை சந்தித்தோம், அடையாளம் சொல்லி வெள்ளை நரைமுடிக்காரனை பற்றி கேட்டேன். அவன் 2 மாதங்களாக எவ்வித வேலைக்கும் செல்லாமல் ஒரு டீ கடையில் போவோர் வருவோருக்கு செலவுசெய்துகொண்டிருந்தான் என்றார்.

1996-இல் நாங்கள் கர்நாடகாவில் உள்ள எல்லா வழக்குகளையும் தமிழ் நாட்டுக்கு மாற்றும் பட்சத்திலும் 10 ஆண்டுகளில் விடுவிப்போம் என்கிற உறுதியை அளிக்கும் பட்சத்திலும் சரண் அடைகிறோம் என கலைஞருக்கு நக்கீரன் கோபால் மூலமாக வேண்டுகோள் விடுத்தோம். கலைஞர் ஒரு மேம்போக்கான உறுதியை ஒரு கேசட்டில் பதிவுசெய்து அனுப்பினார். கூடவே ரஜினியும் ஒரு கேசட் அனுப்பி இருந்தார் அதில் தான் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவதாகவும், ஆட்சியை பிடிக்கும் சாத்தியம் உண்டு எனவும் அப்போது சரண் அடைந்தால் இக்கோரிக்கையை ஏற்பேன் எனவும் கூறி இருந்தார். வீரப்பன் கொடுங்குற்ற வழக்குகள் இல்லாத 3 பேரை தேர்வு செய்தார் அப்படி சரண் அடைந்தோம். பின்னர் அரசு எந்த வாக்குறுதியையும் பேணவில்லை.

ஒரு ஆபரேஷனில் சுமார் 10 வயது சிறுவனை வீரப்பன் கொன்றது எனக்கு மறுநாள் தெரியவந்தது. நான் அவரை கடுமையாக ஏசிவிட்டேன், பின்னர் சுமார் 3,4 நாட்கள் அவருடன் பேசவில்லை. பின்னர் சமாதானமடைதோம், ஆனால் அவருடன் தொடர்ந்து இருந்தது ஏன் என என்னால் கூற இயலவில்லை, அவர் எங்களது பாதுகாவலர் என்பது காரணமாக இருக்கலாம். பின்னர் அரசு அதிகாரி ஸ்ரீநிவாசன் கடத்தி கொல்லப் பட்டதும் என்னால் ஏற்க இயலவில்லை.

anb2

நீங்கள் வீரப்பனுடன் சென்றது உங்கள் தாய் தந்தையருக்கு எப்போது தெரியும், உங்கள் தம்பி , தங்கை இது குறித்து என்ன நினைத்தார்கள், பின்னர் உங்கள் குடும்பம் உங்களை காத்ததா?

முன்பே வீரப்பனுடன் தொடர்பில் இருந்தது அவர்களுக்கு தெரியாது. நான் என் வயதொத்த எனது சித்தப்பா பெரியப்பா மகன்கள் இருவருடன் சென்று சேர்ந்துவிட்டேன். அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த டபுள் மைன்ட் கோபால் என்பவன் வழியில் பார்த்துவிட்டான், அவன் மிகுதியாக மது அருந்தி நடந்தது மற்றும் நடக்காதது ஆகியவற்றை ஊரில் உளறிக்கொண்டு திரிபவன். வீரப்பன் அவனை அழைத்து மிரட்டி ரூ 500 அளித்து வெளியே சொன்னால் அவ்வளவுதான் என அனுப்பி வைத்தார். இது 6 மாதங்களுக்கு யாருக்கும் தெரியாது. எங்கள் பெற்றோர்கள் அந்தியூர் காவல்நிலையத்தில் ஆள் காணவில்லை என வழக்கு ஒன்றை கொடுத்து அது பதியப்பட்டது. பின்னர் போலீசாரும் நாங்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்பில்லை என்கிற கருத்தை எங்கள் குடும்பத்திற்கு தெரிவித்துவிட்டனர். எனது பெரியப்பா மகனுக்கு காரியம் செய்துவிட்டார். வேறொரு தகராறில் தற்செயலாக டபுள் மைன்ட் கோபால் போலீசாரால் கைதுசெய்யப்பட்டான், இத்தகவலை தான் அறிந்து வைத்திருந்ததால் தான் கைது செய்யப்பட்டான் என எண்ணிய அவன் இந்த தகவலை போலீசாரிடம் சொல்லிவிட்டான். அவ்வாறு தான் 6 மாதங்களுக்கு பின் போலீசாருக்கு அது தெரியும். எனது குடும்பத்திற்கு நான் உயிருடன் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம் வீரப்பனுடன் சேர்ந்த மனச்சோர்வு ஒருபுறம் ஒரேசமயத்தில். பின்னர் போலீசார் எனது தந்தையை கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்து பலநாட்கள் துன்புறுத்தினார்கள், உடனே எனது பெற்றோர் எனது தங்கைக்கு திருமணம் செய்து அருகில் உள்ள ஊருக்கு அனுப்பிவிட்டனர், எனது தம்பியும் தாயும் இன்னலுக்கு ஆளானார்கள். ஆனால் விரைவில் நான் வீரப்பனுடன் சென்றதற்கு எனது குடும்பத்திற்கும் தொடர்பில்லை என அறிந்துகொண்ட போலீசார் எனது குடும்பத்தை விட்டுவிட்டனர். பின் எனது தம்பிக்கு ராணுவத்தில் வேலைகிடைத்தது, எனக்கு வீரப்பனுடன் ஆன தொடர்பால் அவனுக்கு அவ்வேலை மறுக்கப்பட்டது.

நான் சரணடைந்து நீதிமன்றத்திற்கு காவல் நீட்டிப்புக்காக வரும் ஒவ்வொரு நாளும் எனது பெற்றோர் என்னை பார்க்க வருவார்கள், அடிக்கடி சிறையிலும் என்னைப் பார்ப்பார்கள். எனது தம்பிக்கும் தங்கைக்கும் கூட என் மீது அவ்வளவாக சினமில்லை. பின்னர் கர்நாடக சிறைக்கு மாற்றப்பட்டவுடன் சிரமம் எடுத்து என்னை காண வரவேண்டாம் என நான் கூறிவிட்டேன், அவ்வப்போது தான் அங்கு வருவார்கள். அன்று முதல் இன்று வரை என்னை எனது குடும்பம் கைவிடவே இல்லை. நான் இன்று இப்படி இருப்பதற்கு எனது குடும்பத்தின் அறுபடாத தொடர்பே காரணம்.

வீரப்பன் இதுவரை எத்தனை பேரை கொன்றிருப்பார் என கருதுகிறீர்கள் ?

30 ஆண்டுகளில் சுமார் 70 கும் மேல் இருக்கும்.

வீரப்பன் ஒரு நல்ல மனிதன் என்று சொல்ல முடியுமா?

நிச்சயமாக. இந்த சமூக சராசரி அளவுகோலின்படியும் நமது போலீசாருடன் ஒப்புநோக்குகையிலும் வீரப்பன் ஒரு நல்ல மனிதன் தான்.

வீரப்பன் நினைவிடம் கோரிக்கைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?

நான் வீரப்பன் ஒரு தொன்மம் ஆக்கப்படுவதை ஏற்கவில்லை, அது வீரப்பன் போன்ற ஆட்கள் உருவாகும் சூழலை மறக்கடித்துவிடும். போகவே அரசியல் தலைவர்களால் அவர் ஒரு தமிழ் தேசிய போராளியாக நிலை நிறுவப்படுவதையம் நான் ஏற்கவில்லை. அவருக்கு அவ்வாறான எண்ணமோ புரிதலோ இருந்ததில்லை.

சந்தனக்கட்டை வெட்டுதல், யானைகளை தந்தத்திற்காக கொல்வது ஆகியவை குறித்து ?

தனது ஆயுளில் மொத்தமாக சுமார் 15 லோடுகள் தான் வீரப்பன் சந்தன விற்பனை செய்திருப்பார், கீழிருந்து வரும் வனக்கொள்ளையர்கள் தான் அதிகமாக சந்தனமரத்தை வெட்டுவார்கள். அவர்கள் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யானைகளை அதிகம் கொல்வார்கள். வீரப்பனும் மிகுதியாக யானைகளை கொன்றிருப்பார், நான் இணைந்த சமயத்தில் அதையும் நிறுத்திக் கொண்டார். பழங்குடிகள் இதில் வீரப்பனுக்கோ அல்லது வெளியாட்களுக்கோ உதவுவதில்லை

anb4
அன்புராஜ் விடுதலையாகிறார்

தற்போது வீரப்பனின் இறப்புக்குப்பின் வனவிலங்குகளின் குறிப்பாக யானைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளதே ?

ஆம். ஆனால் இதற்கு வீரப்பனின் இறப்புமட்டுமே காரணமல்ல. குறிப்பாக கர்நாடகத்தில் இன்றும் சட்டபூர்வமாக தந்த அலங்காரப் பொருட்கள் விற்கப்படுகிறது, அங்கு அது போக இறந்த அரியவகை பறவைகளையும் ஏலத்தில் எடுத்து stuff செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். கேரளத்தில் சந்தன கலைப்பொருட்கள் சட்டபூர்வமாக விற்கப்படுகிறது. இந்த வியாபாரம் முதலில் மிகுதியாக நடந்துகொண்டிருந்தது இப்போது இது குறைவாக நடக்கிறது, இதுவும் காரணமாக இருக்கலாம்.

உங்கள் மீதுள்ள வழக்குகள் என்னென்ன ?

தமிழகத்தில் மூன்று வன ஊழியர் கடத்தல் வழக்குகள், கர்நாடகத்தில் 2 ஆள் கடத்தல் வழக்குகள். தமிழக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2011இல் விடுதலையானது, கர்நாடக வழக்குகளில் 9 வனவர்கள் கடத்தப்பட்ட குண்டல் டேம் வழக்கில் ஆயுள் பெற்றேன். என்னுடன் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள், இன்னொரு வழக்கு விடுதலையானது. வீரப்பன் தொடர்பாக 25 ஆண்டுகளில் சுமார் 2000 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 50 பேர் தண்டனைக்குள்ளானார்கள்.

காவல்துறையின் சித்ரவதை குறித்து ?

நான் மூன்று பேர்களுடன் சரண் அடைந்த உடன் நீதிமன்றத்தில் மனுச்செய்து போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறேன் என பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். மாதேஸ்வரன் மலையில் சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள சித்திரவதை கேந்திரமான “ஒர்க் ஷாப்” என்னும் ஒரு சித்திரவதைக் கூடம் உள்ளது, சோளகர் தொட்டி நாவலில் அதை படிக்கலாம். அதற்குத்தான் அழைத்துச் செல்லப்பட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆடைகள் இன்றி ஏற்கனவே அதே நிலையில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடுவில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கு துன்புறுத்தல்கள் மனிதத்தன்மையற்ற முறையில் இருக்கும். ஆட்களை தலைகீழாக நெடுநேரம் தொங்கவிட்டு நகங்களையும் பற்களையும் ஒவ்வொன்றாக கட்டிங் பிளயரால் பிடுங்கிவிடுவார்கள், மகளுடன் தந்தையை, சகோதரியுடன் சகோதரனை, தாயுடன் மகனை சக கைதிகள் 20 பேர் முன்பு வற்புறுத்தி உறவு கொள்ள வைத்தார்கள். கைகளிலும் கால்களிலும் பாலுறுப்புகளிலும் வயர்களை பொருத்தி மின்சாரத்தை பாய்ச்சுவர்கள், படிப்படியாக தீவிரப் படுத்துவார்கள், என்னையும் அவ்வாறு செய்தார்கள். அப்பொழுது உடல் கை கால்கள் எல்லாம் எதிர்திசையில் வளைந்து விடும், உடல் சீராவதற்கு பல மணி நேரம் பிடிக்கும். நீர் மட்டும் தான் கொடுப்பார்கள் அங்கேயே அந்த அறைக்குள்ளேயே நிர்வாணமாக இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்போதும் எனது இரு கணுக்கால்களிலும் அழுத்தமான வட்டமாக தழும்புகள் உள்ளது, அவை ஒர்க் ஷாப்பில் நான் பெற்றது. அந்த அறை எப்பொழுதும் ஒரு கெடு நாற்றம் மிக்க அறையாக இருக்கும். அறைக்கு வெளியேயும் பழங்குடிகளை கைதுசெய்து அமர்த்தியிருப்பார்கள். இதை அனுபவித்த ஒருவனால் சிறையில் துன்புறுத்தப்படுவது என்பது ஒப்புநோக்க இலகுவானதுதான். அதனாலேயே எனக்கு அதிக தாங்கும் திறன் இருந்தது காயம் மற்றும் வலி குறித்து பெரிய அச்சங்கள் எதுவும் எனக்கு தமிழக மற்றும் கர்நாடக சிறைகளில் இல்லை.

சிறையில் நீங்கள் உங்கள் சுயமதிப்பை விட்டுத்தரவே இல்லையா ?

ஆம், அவ்வாறு தான் எண்ணுகிறேன். முதன் முதலில் சிறையில் காலடி எடுத்துவைத்த உடனேயே எனது ஆடைகளை களைய சொன்னார்கள், விதிகளுக்கு கட்டுப்பட்டு நான் அதை செய்தேன், ஆனால் பலமுறை அமர்ந்து எழ சொன்னார்கள், நான் மறுத்துவிட்டேன் அடி பட்டேன். சிறையில் இருந்து நான் வெளிவரும் வரை பல முறை ஆடைகளை களைய மிரட்டப்பட்டேன், தாக்கப்பட்டேன் ஒருமுறை கூட நான் அதற்கு உடன்படவில்லை. ஒவ்வொருமுறையும் பலவந்தமாகவே எனது ஆடைகள் உரிக்கப்பட்டன.

உங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என எண்ணுகிறீர்களா?

அவ்வாறு நான் நினைக்கவில்லை, ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளேன் ஆகவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது ஆனால் கால அளவு சற்று அதிகம் என எண்ணுகிறேன்.

an6
அன்புராஜ் மகனுடன்

நீங்கள் சிறையில் இருந்தபோது சிறைவாசிகளின் வகைப்பாடுகள் குறித்து ?

சேலம் சிறையில் கேரளத்து சாக்கோ என்கிற சிறைவாசியைச் சந்தித்தேன், குழந்தைகளை வன்புணர்வு செய்து சுவற்றில் அடித்துக் கொன்றுவிடுவான். அவனுக்கு அதுகுறித்துக் குற்றபோதமே இல்லை, வழக்கறிஞர் வைக்காமல் தானே தனது வழக்கைத் திறமையாக நடத்துவான், அச்சமயம் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் அங்குவந்து அவன் நடத்தும் வழக்கைக் குறிப்பு எடுத்துக் கொள்வார்கள். சாக்கோ என்னிடம் தனக்கு சேலத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தண்டனை தான் கிடைக்கும் என்றும் இறுதியில் உச்சநீதிமன்றத்தில் தான் விடுவிக்கப்படுவேன் எனவும் உறுதிபடக் கூறினான். ஒரு அலட்சிய பாவம் அவனில் இருந்தது. பின்னர் அவன் சொன்னது போலவே நடந்தது.

அதே போல கணேஷ் (எ ) வெங்கடேஷ் என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட கைதி ஒருவன் இருந்தான், தனிமைச் சிறையில் அடைக்கவேண்டும் என்றால் உரிய காரணம் கூறவேண்டும் அதனால் என்னை அவ்வப்போது மனநலம் குன்றியவர்கள் சிறையில் அடைப்பார்கள். கைதிகளுக்கு மூளை தணிப்பு மாத்திரைகளை வழங்கி அவர்களை நித்தம் உறங்க வைப்பார்கள். கைதிகள் அங்கேயே மல மூத்திரம் கழித்துவிடுவார்கள் ஆகவே எப்பொழுதும் அந்த அறை…. துர்நாற்றத்துடனேயே இருக்கும். அங்கு தான் அவனைச் சந்தித்தேன், என்னுடன் மிகுந்த பிரியமுடன் இருந்தான் தனது பங்கு காலை உணவை எனக்கு தந்து வற்புறுத்தி ஊட்டிவிடுவான். ஒருமுறை ஒரு அதிகாரி என்னை அவன் முன் அடித்துவிட்டார், மறுநாள் அவனது மலத்தை கரைத்து தட்டில் வைத்திருந்தான் அவர் சுற்று வரும்போது அவர் முகத்தில் ஊற்றிவிட்டான். குளிர்காலத்தில் எங்கள் அறையில் ஒரு இடத்தில் சன்னல் வழியாக வெளிச்சம் முக்கோணமாக விழும், வெப்பம் கொள்வதற்காக முறைவைத்து மூன்று மூன்று பேராக அங்கு நின்று கொள்வோம். அன்று அவன் வரவில்லை, நான் சென்று பார்த்தபொழுது குனிந்துகொண்டு கைகளை தலைமீது முழங்கை மடித்து வைத்து மூலையில் அமர்ந்திருந்தான். நான் சென்று எழுப்பியபோது சரிந்து விழுந்தான், முதல் நாள் இரவே இறந்திருந்ததால் அவனது கண்களை எறும்புகள் தின்றிருந்தன, கண்ணிருக்கும் இடத்தில் நீரும் ரத்தமும் வழிந்துகொண்டிருந்தது. அந்த நட்பை என்னால் மறக்க முடியாது, இந்த இறப்பு என்னை வெகுவாக பாதித்தது.

கர்நாடகாவில் ஒருமுறை சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன் அப்போது நான் சாதாரண உடை அணிந்து இருந்தேன். அருகில் ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார் காவலர்களை அவர் கவனிக்கவில்லை. குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் நீட்டினார் நான் இரு கைகளையும் நீட்டும் பொழுதுதான் எனது கை விலங்கு அவருக்குப் புலப்பட்டது, உடனே குழந்தையைத் திரும்ப எடுத்துக் கொண்டார். இது நீண்ட நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் அவமானகரமான சம்பவம்.

சித்திர துர்கா சிறையில் நான் 2 ஆண்டுகள் கடிதங்களை படிக்கும் சென்சார் ஆக இருதேன். அவை மிகக் கடினமான நாட்கள். தந்தை சிறையில் இருப்பதை குழந்தைகள் அறியமாட்டார்கள். தந்தையின் வெளிநாட்டு மேலாளருக்கு இப்படி 7 ஆண்டுகள் விடுப்பு கொடுக்காமல் இருப்பது நியாயமா என இறைஞ்சுவார்கள். தந்தைக்கு எப்போது வருவீர்கள் என அனுதினமும் எழுதுவார்கள், நேரில் வரும் தாய் அவர்களை அழைத்துக்கொண்டும் வரவியலாது. கற்பனையில் ஒரு கள்ளத்தொடர்பு கதையை நேற்று நேரில் கண்டது போல புனைந்து தனது மனைவிக்கு கடுமையான வசவுகளுடன் கடிதம் இடுவார்கள், இது மிகுதி. ஒருமுறை எனக்கு அறிமுகமான சுமார் 28 வயதான, பட்டதாரி, முன்னாள் சிறைவாசி, தனது தோழிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் விடுதலையானவுடன் வீட்டுக்குச் சென்றவுடன் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் வெளியே துரத்திவிட்டனர் எனவும், காசில்லாமல் மைசூர் பேருந்து நிலையத்தில் நிர்க்கதியான நிலையில் தவித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிறையில் அறிமுகமான சில பாலியல் தொழிலாளர்களை சந்தித்ததாகவும் அவர்கள் இருக்க இடமும் உணவும் ஒருமாதம் கொடுத்ததாகவும். வேலையில்லாத குற்ற உணர்வால் தானும் சிலநாட்கள் பாலியல் தொழில் செய்ததாகவும், சிறையில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி நடத்திய சாமியார் யார் வேண்டுமானாலும் விடுதலையானவுடன் தனது மடத்தில் வந்து தங்கலாம் எனக் கூறியது பின்னர் தான் நினைவு வந்ததாகவும் ஆகவே நான் அங்கே……… செல்கிறேன் அல்லது தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி இருந்தார். அவருக்கு ஒரே உறவு அந்தப் பெண் சிறைவாசிதான். ஆனால் அவர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றவர், அசல் முகவரியை அவர் அளித்திருக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் என்னால் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அந்த சித்திர துர்கா சாமியார் எனக்கு நன்கு அறிமுகமானவர். பின்னர் ஒருமுறை அந்த மடத்திற்குச் சென்று அவரைப் பற்றி விசாரித்தேன், அவ்வாறு யாரும் அங்கு வரவில்லை. அக்கடிதம் இப்போதும் என்னிடம் இருக்கிறது. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இது போன்ற கடிதங்கள் குறித்து நான் குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். இக்கதைகளை நான் நினைவு கூற விரும்பவில்லை, இந்த குறிப்பேட்டையும் நான் மீண்டும் படிக்க விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாகச் சிறைவாசிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புப் பிழையானது என எண்ணுகிறார்களா ?

ஒரு குறைவான சதவீதத்தினர் பிழையாகத் தண்டிக்கப்படுகிறார்கள், ஆனால் பொதுவாக தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனையின் கால அளவு அதிகம் என எண்ணுகிறார்கள். எனது நோக்கில் அதிக பட்சம் ஒருவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கலாம்.

ana
அன்புராஜ் இளமையில்

இந்த அரசு மற்றும் நீதித்துறை மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

என்னிடம் 10 லட்சமிருந்திருந்தால் நான் இவ்வளவு நீண்ட சிறைவாசம் அனுபவித்து இருப்பேனா என்பது கேள்விக்குறியே. இன்றைய அரசின்மீது எனக்குப் பெரிய அளவு நம்பிக்கை இல்லை, சதாசிவா ஆணையம் பரிந்துரைத்த பின்பும் உயர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியும் இன்னமும் உரிய இழப்பீடுகளை தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை. குற்றம் இழைத்த எந்த அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சில இடங்களில் வழங்கப்பட்ட சொற்ப இழப்பீட்டைக் கூட எந்த காவலர் கற்பழித்தாரோ, அவரே யாரை கற்பழித்தாரோ அப்பெண்ணுக்கே வழங்க வந்தார்,அப்பெண் வாங்க மறுத்துவிட்ட சம்பவமும் நிகழ்த்துள்ளது.

இந்திய நீதித்துறையின் நடைமுறைகளும், குற்றம் சாட்டப்பட்ட வரை தண்டிக்கும் முறைகளையும் மாற்றி அமைப்பதுடன், தீர்ப்புகளை விமர்சனத்துக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டும், அப்படிப்பட்ட சமூகம் தான் அறிவியல் பூர்வமான, மனித மாண்புகளை காப்பாற்றும் அமைப்பாக விளங்க முடியும்.
ஒருமுறை மைசூர் மாவட்டம் கொல்லேகால் நீதிமன்றத்தில் எனக்கு கொடுத்த குற்றப்பத்திரிக்கை நகலை நான் படித்து தெரிந்து கொள்ள வேண்டி ஒரு நகலை தமிழில் கேட்டேன், தமிழில் கொடுக்க இயலாது என்றார், என் மீது என்ன குற்றம் சுமர்த்தப்பட்டுள்ளது என்பதை நான் அறிய வேண்டாமா என்று கேட்டதிற்காக ஒரு பெண் மேஜிஸ்ட்ரேட் நான் வீரப்பனின் கூட்டாளி என்பதை அறிந்தவுடன் பேப்பர் வெயிட்டைத் தூக்கி என் மீது வீசினார், நான் நகர்ந்து கொண்டதால் காவலுக்கு வந்த உதவி ஆய்வாளர் மீது பட்டது. சட்டத்தின் அடிப்படையிலும் வாதத்தின் அடிப்படையிலும் நீதித்துறை இயங்குகிறது எனக் கூற இயலாது சூழலுக்குத் தக்க அல்லது நீதிபதியின் தன்மைக்கு தக்க தீர்ப்பு மாறுகிறது. ஆனாலும் ஒப்புநோக்க நீதித்துறை மீது எனக்கு சற்று நம்பிக்கை உள்ளது.

நீங்கள் எப்படி இடதுசாரி சிந்தனைக்கு ஆட்பட்டீர்கள் ?

எனது சேலம் சிறைவாசம் முக்கியமானது. 1999 இல் சேலம் சிறையில் இருக்கும்போது நெடுஞ்செழியன் என்கிற ஆசிரியரை சந்தித்தேன், அவர் சிறையில் இருக்கும் பள்ளியின் ஆசிரியர். சில சமயம் வெளியில் இருந்து புத்தகங்களையும் கொண்டுவந்து தருவார். அப்படித்தான் நான் முதன்முதலில் படித்த புத்தகம் ஸ்பார்ட்டகஸ். பட்டாம்பூச்சி சிறையில் தடைசெய்யப்பட்ட புத்தகம் என்பதால் அதை பல்வேறு பகுதிகளாக பிரித்து தந்தார், அதை முழுவதும் பலமுறை சிறையில் படித்திருக்கிறேன், நான் சோர்ந்து போகும் போதெல்லாம் அதைப்படித்து உயிர்ப்பு கொள்வேன்.

சென்னை மத்திய சிறை தவிர்த்து பிற சிறைகளில் கழிவறை வசதிகள் இல்லை, ஆகவே ஒவ்வொரு கைதிக்கும் ஒரு மல சட்டி அளிக்கப்படும், தினமும் அதை பயன்படுத்தி விட்டு அவரே அதை அப்புறப்படுத்த வேண்டும், இதை என்னால் ஏற்க இயலவில்லை. ஆகவே கழிவறை கட்டித்தர வேண்டி ஒரு போராட்டம் நடத்த முடிவு செய்தேன், நான் எனது மலச் சட்டியை உடைத்துவிட்டேன். ஒரு வாரத்திற்கு எனக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை வேறொரு மலச் சட்டியும் அளிக்கப்படவில்லை. தினமும் ஒரு மழைக் காகிதம் அளிக்கப்படும் அதில் கழித்துவிட்டு மலத்தை நானே கட்டி அப்புறப்படுத்தவேண்டும்.

பின்னர் நான் பிற சிறைவாசிகளிடம் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு பெற்றேன். சேலம் சிறை முழுவதும் ஒரே நேரத்தில் நாங்கள் அனைவரும் மலச்சட்டியை போட்டு உடைத்து விட்டோம், ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதன் பிறகு இந்த போராட்டம் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய சிறைகளில் கழிவறை இல்லாதது அப்பொழுதுதான் உயர்நீதிமன்றத்திற்கு தெரியவந்தது அந்தந்த மாவட்ட நீதிபதி நேரில் சென்று கழிவறையை உள்ளனவா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பணித்தனர். பின்னர் எல்லா சிறைகளிலும் கழிவறை கட்டித் தரவேண்டும் என ஆணையிடப்பட்டு தற்போது எங்கும் கழிவறைகள் உள்ளது.

இந்த போராட்டத்தின்போது நான் கடுமையாக தாக்கப்பட்டேன், என்னை தனிமைச் சிறையில் தள்ளி மூன்று நாட்கள் கையையும் காலையும் கட்டி வைத்து எனது புட்டத்தில் பலமாக லத்தியால் அடித்தனர், நான் படுக்காமல் இருக்க தரையில் தண்ணீரை ஊற்றி விடுவார்கள். பின்பு ஒரு நாள் இடைவெளி விடுவார்கள் ரத்தம் கன்றி விடும், மீண்டும் அதே இடத்தில் அடிப்பார்கள் கன்றிப்போன இடத்தில் காயம் கிழிந்து ரத்தம் தெறிக்கும். இரண்டு நாட்களில் சீழ் பிடித்துவிட்டது. என் உடலிலிருந்து வரும் இந்த சீழ் வாடையை என்னாலேயே தாங்க முடியவில்லை, காலைக் கடன்களை கழிக்க இயலவில்லை, சிறை அதிகாரி என்னை பார்த்து போராட்டத்தை வாபஸ் பெறுகிறேன், நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன் என எழுதி கையெழுத்திடுமாறு கூறினார், அவ்வாறு செய்தால் மீண்டும் சாதாரண சிறைக்கு மாற்றி விடுவதாகவும் கூறினார். நாட்கள் செல்ல செல்ல எனது உறுதிப்பாடும் குறையத் தொடங்கியது, ஒவ்வொரு நாளும் மறுநாள் காலை அதிகாரி வரும்போது கையெழுத்து செய்துவிடலாம் என நினைப்பேன் ஆனால் மறுநாள் எனது உறுதிப்பாடு குறையாது தாக்குப்பிடித்து தலையை அசைத்து மாட்டேன் என கூறி விடுவேன். எனது தாக்குப் பிடிக்கும் எல்லையில் எம் எல் இயக்கத்தை சேர்ந்த சிவா என்பவர் சிறை அதிகாரிகளிடம் தகராறு செய்து தனிச் சிறையில் அடைக்கப்பட்ட என்னைப் பார்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்து பார்க்க வந்தார் நான் பாதி மயக்க நிலையில் பின்புறம் முழுவதும் சீழ் காயத்துடன் ஈரத்தில் குப்புறப் படுத்திருந்தேன், அவர் எனது தோளை தொட்டு “தோழர்” என்றார், அதுதான் ஒருவர் என்னை தோழர் என விளித்த முதல் முறை, அதுவே பொதுவுடமை சித்தாந்தம் என்னை தீண்டிய கணம். பின்னர் சில வருடங்கள் கழித்து சிவா என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

சேலத்தில் தான் தங்கவேல் என்கிற இடதுசாரி சிந்தாந்தவாதியை சந்தித்தேன், அவரும் கைதி தான். அவர் தான் எனக்கு மார்க்சியம், பொருள்முதல்வாதம், உபரி கோட்பாடு, வர்க்கபேதம் முதலியவற்றை கற்றுத்தந்தார். ஓயாமல் அவருடன் வாதித்துக் கொண்டே இருப்பேன். அங்குதான் டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்”, கார்க்கியின் “தாய் ” , கன்னி நிலம், கண் தெரியாத இசைஞன் போன்றவற்றையும் படித்தேன். இலக்கிய சுவையை அறிந்துகொண்டேன்.

an0

சிறை என்றாலே கடந்தகால நினைவுகள், இழப்புணர்வு, சுதந்திர ஏக்கம், குறுகிய இடப்புழக்கம் ?

ஆம். சேலம் மத்திய சிறையில் C P பிளாக் சிறை வெளிச்சம் புகா கதவால் மூடப்பட்டு, சுவற்றில் உயரமாக ஒரு சிறிய ஜன்னல் மட்டும் இருக்கும் இடம். சன் ஷேட் இருக்காது. மழைக் காலத்தில் நேராக மழை உள்ளே பெய்யும். சன் ஷேட் கட்டித்தரச் சொல்லி மனுக்கொடுத்தோம், நிதி இல்லாமல் இல்லை, வேண்டுமென்றே தான் அவ்வாறு வடிவமைத்திருக்கிறோம் என சிறை அதிகாரி் (IG) கூறிவிட்டனர். சிறைக்குள் தண்டனையாக சிலசமயம் அதில் அடைபட்டிருக்கிறேன். காலை வெளிச்சத்திற்காக காத்திருப்பேன், அது ஒரு நன்னம்பிக்கைத் தருணம். ஆனால் வெளிச்சம் வந்ததும் முதலில் தெரிவது ஒரு பட்டுப்போன மரம். அதை அகற்றுமாறு பலமுறை மன்றாடி இருக்கிறேன். இரவில் சரியாக 11 மணிக்கு ஒரு ஆட்காட்டிக்குருவியின் “டிட் டூய்” சப்தம் கேட்கும். உடனே சுதந்திரவெளியும் நினைவுகளும் என்னை வருத்தும். ஆரம்பத்தில் நான் சந்தித்த பெரிய சவாலே இந்த ஆட்காட்டி கத்துவதற்கு முன் தூங்குவது. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஓரிரு ஆண்டுகளில் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவேன். ஒரு வீட்டைக் காலி செய்துகொண்டு இன்னொன்றுக்கு போவது போலத்தான், பிரிவின் ஏக்கம் தொற்றிக் கொள்ளும். தமிழகத்தில் இடவசதி குறைவு, கர்நாடகத்தில் இடமும் சுதந்திரமும் சற்று அதிகம். எனது புத்தகங்களை வைப்பதற்கு எப்போதும் கதவிடுக்கிற்கு அருகே உள்ள இடத்தை நான் பிடித்துக் கொள்வேன்.

நாடகத்தின் மீது எப்படி ஆர்வம் வந்தது ?

என்னைக் கர்நாடக சிறைக்கு மாற்றியபோதே இனி கன்னடம் கற்காமல் வாழ முடியாது என எண்ணினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் கன்னடத்தை எழுதப்படிக்க கற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு ஆயுள் சிறை என தீர்ப்பானது. கர்நாடகத்தில் அது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள், இளமையை இங்கேயே கழிக்கவேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை, மைசூரு சிறையில் இருந்து தப்ப முடிவு செய்தேன். சிறைக்கு நான்கு மதில் சுவர்கள், இந்த நான்காவது சுவரை கடப்பதே கடினம், இதற்கான வாய்ப்புகளை நோக்கிக் கொண்டிருந்தேன், நான்காவது சுவரைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் போது ஒருவர் கடிகாரம் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார், ஆகவே அவர் சிறைவாசி அல்ல என தெரிந்துகொண்டேன். அவரை நெருங்கி விசாரித்தேன் அவர் தன்னை உலுக்கப்பா கட்டிமணி என கூறி தான் ஒரு நாடக ஆசிரியர் எனவும் சிறைக் கைதிகளை வைத்து உள்ளேயே நாடகம் போடப்போவதாகவும் சாத்தியமானால் வெளியே கூட கூட்டிப்போக முடியும் எனவும் கூறினார், விருப்பமா எனக் கேட்டார் எனது திட்டத்திற்கு இது உதவியாக இருக்கும் என்கிற உள்நோக்கத்தில் சரி என ஒப்புக்கொண்டேன், கலை என்னைத் தீண்டிய கணம் அது.

எங்கள் நாடக குழுவின் பெயர் “சங்கல்பா”. பைரப்பாவின் பர்வா மைசூரு சிறையில் தான் படித்தேன். அது என் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் “ரங்கவாணி” என்கிற நாடகக் கலை தொடர்பான பத்திரிக்கையையும் நான் ஏற்று நடத்தி வந்தேன். தற்போது அதற்கு சுமார் 4000 சந்தாதாரர்கள் உள்ளனர். நாடகம் போடச் செல்லும் இடங்களில் எல்லாம் நான் சந்தா பிடித்து விடுவேன் அதுபோக சிறையில் இருந்தும் கடிதம் எழுதி நிறைய சந்தாதாரர்களை பிடித்துள்ளேன்.

அதன்பிறகு நாடக வாழ்க்கை எவ்வாறு சென்றது?

கர்நாடகத்தில் நாடகக்கலை வலுவானது. அன்றாடம் காய்ச்சிகள், கூலி தொழிலாளிகள் கூட நாடகம் பார்க்க வருவார்கள், சராசரியாக நுழைவுச் கட்டணம் ரூ 50 ல் இருந்து 150 வரை இருக்கும், செல்வந்தர்களின் ஆதரவும் அமோகமாக உண்டு. ஒரு நாடக நிகழ்விற்கு சராசரியாக 2 லட்சம் செலவாகும். ஒவ்வொரு சிறு நகரத்திலும் கூட மதிக்கத்தக்க 2, 3 நாடக அரங்குகள் இருக்கும். வெகு ஜன மக்கள் நாடகங்களின் பெயர்கள், அதன் ஆசிரியரின் பெயர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை தெரிந்து வைத்திருப்பார்கள். இது ஒரு சாதகமான அம்சம். நாடகக்கலை என்னை முழுவதுமாக ஆட்கொண்டது முழு ஈடுபாட்டுடன் இதில் நடித்தேன். 2006 முதல் 2016 வரை நாட்கள் உயிர்ப்புடன் விரைந்தோடியது உலுக்கப்பா கட்டிமணி பி வி காரந்தரின் நேர் மாணவர். ஒரு முறை எங்களது குழு பெங்களூரில் நாடகம் நிகழ்த்தியபோது வரவிருந்த காரந்தர் தவறிவிட்டார், ஆகவே அவரது உடலை நாடக அரங்கிற்கே கொண்டுவந்து அவர்முன் நாடகம் நிகழ்த்தப்பட்டது. குட்டிமணியின் வழிகாட்டுதலில் பிற சிறைவாசிகளுக்குப் பயிற்சி அளித்து சிறைக்குள் வெற்றிகரமாக ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் முன்பு நாடகங்களை நடத்தி பாராட்டை பெற்றோம். பெரிதும் கிரிஷ் கர்னாடின் “தல தண்ட” போன்ற நாடகங்கள், தேவனூரு மகாதேவ, சிவப்ரகாஷ், சம்பா, பகவான், கம்பர், நாடகங்கள். கர்னாட் போன்ற ஆளுமைகள் விருந்தினர்களாக வந்து எங்கள் நாடகங்களை கண்டுகளித்துள்ளனர். அப்போதே எனது இலக்கு புகழ்பெற்ற தில்லி நாடக விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதே. நான் கட்டிமணிக்கு உதவி இயக்குனர் நாடகங்களுக்கு பயிற்சி அளிப்பது எனது பிரதான வேலை, எனவே நான் வெகு சில முக்கிய வேடங்களே ஏற்றுள்ளேன்,

பெங்களூருவில் நாடகம் நடத்த அனுமதி வேண்டினேன், அப்போது சிறையில் ரேவன சித்தய்யா என்கிற சிறைத்துறை ஐ ஜி இருந்தார். கர்நாடகம் ஒப்புநோக்க தமிழகத்தைவிட மேம்பட்ட கலாச்சாரம் உடையது, அந்த அதிகாரியே அரசுடன் பேசி தனது பொறுப்பில் அனுமதி வாங்கினார். 40 பேர் சிறைவாசிகள் 150 காவலர்கள் காவலுடன் கைவிலங்கிட்டு மைசூரில் இருந்து பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டோம். இதற்குள் இது செய்தியானது, வெற்றிகரமாக நாங்கள் நாடகங்களை இட்டோம். எங்கள் குழுவில் ஒல்லியாக குள்ளமாக காணப்பட்ட இளைஞன் ஒருவனைப் பார்த்து நிருபர்கள் நீ குனிந்து தப்பினால் கூட யாருக்கும் தெரியாது, ஏன் நீ தப்பிக்க முயற்சி செய்யவில்லை என்று வினா எழுப்பினார், அவ்வாறு தப்பித்து விட்டால் நாளை எனது பாத்திரத்தை யார் நடிப்பது என அவன் திருப்பி கேட்டான், அக்கணம் சிறையில் இருந்து தப்பும் திட்டத்தை நான் கைவிட்டேன். இச்சம்பவம் நம்பிக்கையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் புரிய வைத்தது.

பின்பு கர்நாடகமெங்கும் நான் விடுதலையான 2016-வரை சுமார் 100 காட்சிகளை நடத்தியிருப்போம் கேரளா காசர்கோட்டிலும் நடத்தினோம். வேறு சிறைகளில் இருந்து நாடகத்திற்கு ஆள் எடுப்பது அவர்களை மைசூருக்கு மாற்றச் செய்வது, என நாட்கள் மிக உற்சாகமாக சென்றது. அப்படித் தான் எனது மனைவியை சந்தித்தேன். ஒவ்வொரு நாடக நிகழ்விற்கும் சுமார் 3 நாட்கள் பயணம் இருக்கும், 40 பேர்கள் கொண்ட எங்களது “சங்கல்பா” வேறு சிறைகளில் தங்க முன்பதிவு செய்வோம், விதிகளை மீறி கடற்கரைகளைக் கூட பார்த்து ஓடி விளையாடி இருக்கிறோம். தில்லி சென்று பிற கலைஞர்களுக்கு சரிசமமாக தேசிய நாடக விழாவில் நாடகம் நடத்தினோம், அது எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்.

an9
அன்புராஜ் வீரப்பனுடன்

உங்களுக்கு பிடித்த நாடகம்?

எனக்குக் கஸ்தூரி பாயை மிகவும் பிடிக்கும், மராட்டியிலும் கன்னடத்திலும் எழுத்தக்கூடிய சௌக்கலே வின் “கஸ்தூரிபா காந்தி” எனக்கு பிடிக்கும். அதில் நான் கறார் கூலியாக நடித்திருந்தேன். காந்தி தனது திட்டங்களை எல்லாம் கஸ்தூரிபா மீதே பரிசோதித்தார். கம்பாரின் “உளி நேரலு” இதில் ஒரு எஜமான் பாத்திரம், ஜெயந்த் காய்கனியின் “ஜொத்திக்கே ஹிரவாலு” ஆகியவைகளும் எனக்கு பிடித்தமானவை. தற்போது உள்வெளி என்கிற நாடகத்தை மைசூரு சிறையில் இயக்கி வருகிறேன், சுமார் 10 பேர் விடுதலை செய்யப்பட்ட வெளி ஆட்கள் மற்றும் சிறைவாசிகள். இன்னும் ஓரிரு மாதத்தில் அது மைசூரில் பொதுவில் அரங்கேறும்.

கலை ஒருவனை மாற்றுமா ?

நான் மாறியுள்ளேன், அது ஆட்களை மாற்றும் என எண்ணுகிறேன். எந்த சிறைவாசியையும் அணுகி அறிந்தால் அவர் மேல் ஒரு பரிதாபம் வரும், பெரும்பாலான கைதிகள் திட்டமிட்டு குற்றம் செய்திருந்தால் கூட அச்செயலை செய்யும் சமயத்தில் அவர்கள் பிரக்ஞையற்றே இருக்கிறார்கள். இந்த மனநிலை ஆய்வுக்கு உட்பட்டது. இதுபற்றி தான் தற்போது ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். மைசூரில் என்னுடன் ஒரு 25 வயதுடைய ஆயுள் கைதி துளு மொழி பேசும் கணேஷ் நாயக் இருந்தான். எப்போது விடுதலை ஆனாலும் பகையாளிகள் இருவரை தீர்த்துவிட்டு மீண்டும் சிறைக்கு வருவேன் என கூறிக்கொண்டு இருப்பான். அவனுக்கு ஷேக்ஸ்பியரின் மக்பெத்தில் ஒரு சிறு பாத்திரம் வழங்கப்பட்டது. நாடகத்தின் இறுதியில் லேடி மக்பெத் தனது கையிலுள்ள குருதியை எவ்வளவு கழுவினாலும் அகற்றமுடியவில்லை எனக் கூறுவார், செய்த குற்றத்திற்காக மனம் வெதும்பி ஒருநீண்ட வசனத்தை பேசுவார். இதை பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் நாயக் தனது பகைமையை கைவிடுவதாக அப்போதே மேடையில் கூறினான். தற்போது விடுவிக்கப்பட்டு எல்லோரையும் போல வாழ்ந்து வருகிறான்.

குற்றமிழைத்தல் மனம்திருந்துதல் பற்றி உங்கள் கருத்து என்ன?

எந்த ஒரு குற்றத்திற்கும் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் தான் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். எப்பொழுதும் குற்றம் அதன் மிக மோசமான வடிவில் இருந்து தான் ஆரம்பிக்கும், எனவே மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள் கூட அவருடைய அப்போதைய மனநிலையை வைத்து எடை போடக்கூடாது. பின்னர் அவரது நடத்தையை வைத்து அவர் எந்த அளவு மாறியுள்ளார் சீராக உள்ளார் என தான் நோக்க வேண்டும் என்பது எனது கருத்து. இப்படி அசலானவர்களை அடையாளம் காண சிறை அதிகாரிகளால் முடியும் என எண்ணுகிறேன்.

தூய கலை மாறும் பிரச்சாரக் கலை குறித்த உங்கள் கருத்து என்ன?

கலையின் அடிப்படை என்பது ஒருவனின் அகத்தில் ஏற்படும் விளைவுகளை பரிசீலிக்கவேண்டும், வெறும் புற எதார்த்தம் கலையாகாது.

உங்கள் நாடகங்கள் மற்றும் நடிகர்கள் குறித்து எதுவும் பதிவுகள், ஆவணங்கள் உள்ளனவா ?

கன்னட தினசரிகளில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளது. தற்போது கிரிஷ் காசரவள்ளி எங்களை பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கிறார், அடுத்தமாதம் தனது உதவியாளர்களுடன் இங்கு வருகிறார்.

தண்டனைக்காலம் முடியும் முன்பே எவ்வாறு மன்னிப்பு பெற்றீர்கள்\ ?

2013 வாக்கில் நான் அனைத்து கைதிகளின் சார்பில் பரோலில் பெங்களூர் சென்று முதலில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி அவர்களை சந்தித்தேன். சிறைக்கைதிகளில் படித்த ஒரு குழு இதைச் செய்ய என்னுடன் இருந்தது. அவர்தான் நீங்கள் ஒரு கையெழுத்து இயக்கம் எழுதவேண்டும் என்றும் அதில் தான் குறிப்பிடும் சுதந்திர போராட்ட தியாகியிடம் கையெழுத்து பெற வேண்டும் எனவும் பின்னர் என்னிடம் வாருங்கள் எனவும் கூறினார். அதன்படி நான் சுதந்திர போராட்ட தமிழ் தியாகி துரைசாமியிடம் முதல் கையெழுத்து பெற்று பின்பு யு ஆர் அனந்தமூர்த்தி, சந்திரசேகர கம்பார், கிரிஷ், கர்னாட் போன்றோரிடமும் கையெழுத்து பெற்று அரசுக்கு அனுப்பினோம் பின்பு இவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அனந்தமூர்த்தி தவிர்த்து ஞானபீடம் பெற்றிருந்த கம்பர், கர்னாட், சம்பா போன்றோர் நேரில் சென்று ஆளுநரை சந்தித்து எங்கள் விடுதலையை வற்புறுத்தினார்கள். இம்முயற்சியால் பின்பு சுமார் 300 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கைதியை விடுவிக்க வேண்டும் என்றால் அரசுக்கு சில விலக்குகள் இருந்தது. அது ஆயுத தடை சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றத்தில் தண்டிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் ஆயுத தடை சட்டத்தில் ஒரு ஆண்டு தண்டிக்கப்பட்டு இருந்தேன், அந்த பிரிவின் கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கலாம். அப்போதைய எனது சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் சத்யநாராய ராவ், அவர்தான் பரிசீலனை குழுவின் தலைவர் அவர் தவிர்த்து மேலும் 7 பேர் இருந்தார்கள். ஏற்கனவே குழுவில் இருந்த வழக்கறிஞர் ரோகிணி, பேரா நஞ்சராஜ் அர்ஸ், (இவர் தேவராஜ் அர்ஸின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் இடதுசாரி) ஆகியோர் எனக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். இது சம்பந்தமாக என்னிடம் Chowdry Vs State of Hariyana என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தது. அந்தத் தீர்ப்பின் படி ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றிருந்தால் மட்டும் தான் எனது மனு பரிசீலிக்கப்பட கூடாது எனக்கு அந்த பிரிவின் கீழ் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ்தான் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவே எனது மனு பரிசீலிப்பதற்கு தகுதியானது என ஒரு வக்கீல் நீதிமன்றத்தில் வாதிடுவது போல வாதிட்டேன். திரு.சத்யநாராயணா தான் ஒரு நாள் இது பற்றி சிந்தித்து அமைச்சரவைக்கு அனுப்பிவிடுவதாக சொன்னார், மறுநாள் என்னைச் சந்தித்து தான் சிந்தித்து படித்துப் பார்த்ததாகவும் உங்களது மனுவை நான் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துவிட்டதாகவும் கூறினார். அமைச்சரவை இதை ஏற்று ஆளுநருக்கு அனுப்பியது இதெல்லாம் 2 மாதங்களுக்குள் நடந்தது. கர்நாடகத்தில் சட்ட மேலவை இருப்பதால் அங்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் சொல்லுக்கு மதிப்பிருக்கிறது. 2016-ல் நான் விடுதலை பெற்றேன். டாக்டர் நஞ்சராஜ் அர்ஸ்-சுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன், நான் வேண்டியபடி சிறைக்கைதிகள் நலனுக்காக அவர் “அந்தகர்ணா ” என்கிற அறக்கட்டளையை துவங்கி நடத்திவருகிறார்.

anp

உங்கள் மனைவியின் கதை?

எனது மனைவி சென்னையில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் தனது 14 வயதில் சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டவர். ஓரிரு ஆண்டுகள் வீட்டு வேலை செய்த பின்பு அவரின் அவரின் பாதுகாவலர்கள் வெளிநாட்டில் சென்று வசிக்கப் போவதாகவும், எனவே அவரை பெங்களூரில் உள்ள தனது தோழியிடம் வீட்டு பணிக்காக விட்டு செல்வதாகவும் கூறி பெங்களூரில் விட்டு விட்டார்கள். பெங்களூரில் எனது மனைவியின் வாசம் சந்தேகத்திற்கு இடமாகவே இருந்தது, அவர் வயதொத்த சில பெண்களை அழைத்து வருவதும் சில நாட்கள் கழித்து அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறிக் கொண்டு கூட்டிச் செல்வதும், பின்பு அவர்கள் திரும்பி வராமல் இருந்ததும் அவருக்கு கடுமையான ஐயத்தை எழுப்பியது. பின்னர்தான் அவர்கள் ஆதரவற்ற பெண்களை அழைத்துவந்து மும்பையில் விற்றுவிடும் கூட்டத்தின் பிடியில் இருப்பதை உணர்ந்தார். தப்பிச் செல்ல முயன்றார், துரத்தி வந்த ஐந்து ரவுடிகளிடம் பிடிபட்டுக் கொண்டு வரப்பட்டார். என் மனைவி கத்தியால் கடுமையாக உடல்முழுவதும் தாக்கப் பட்டார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அதே கத்தியை பிடுங்கி ஒருவரை தொண்டை குழியில் குத்திவிட்டார் அதில் அவர் இறந்துவிட்டார். மேலும் இருவருக்கும் கடுமையான காயத்தை ஏற்படுத்தி விட்டார், பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்து பார்த்து எனது மனைவி இறந்து விட்டார் எனக் கருதி பிணவறையில் சேர்த்துவிட்டனர். அங்கு வந்து பார்த்த மருத்துவர் எனது மனைவி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்து அவரை மீட்டார். என் மனைவி கொலையை ஒப்புக்கொண்டார் அவருக்கு 17 வயதிற்கு கீழ் தான் இருந்தது அவருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் எலும்பு பரிசோதனையின் அடிப்படையில் அவர் பதினெட்டு வயதை கடந்து விட்டார் எனக்கணக்கிட்டு நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, அவர் சார்பாக இலவச சட்ட உதவி வக்கீல் தான் வழக்கு நடத்தினார். பெல்லாரி சிறையில் இருக்கும் பொழுதுதான் நாடகத்திற்காக எங்கள் சிறைக்கு அழைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை காலம் முடியும் முன்பே மன்னிப்பு கோர வேண்டும் என்றால் சமூகத்தில் வெளியிலிருந்து யாராவது அவரை ஏற்க வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி எனது பெற்றோரின் ஒப்புதலுடன் கொளத்தூரில் கொளத்தூர் மணி தலைமையில் பரோலில் வந்து திருமணம் செய்து கொண்டோம். திரும்பவும் சிறைக்கு வந்து தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். நான் விடுவிக்கப்பட்டதற்கு ஒரு வருடம் முன்பாக எனது மனைவி விடுதலையானார், அவர் 14 ஆண்டுகள் தான் தண்டனை அனுபவித்திருந்தார் .இப்போது இங்கு எனது வீட்டில் எனது பெற்றோருடன் ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இத்தனை வருடங்களாக உங்களை செலுத்திய, தற்போதும் செலுத்திக் கொண்டு இருக்கும் விசை எது ?

இந்த நாடகக்கலை தான். எனக்கு இப்போதும் பொருளாதார நிர்பந்தங்கள் இல்லை என்றால் ஒரு முழு நேர நாடக்கலைஞராக வாழவே விரும்புகிறேன். எங்கள் சங்கல்பாவையும் வளர்க்க விரும்புகிறேன். அது போக இப்போது தோழர் வி பி குணசேகரன் வழிகாட்டுதலில் நான் பழங்குடிகளின் நலனுக்காக பணியற்றி வருகிறேன். தொடர்ந்து அவர் தலைமையில் இப்பழங்குடிகளுக்கு அவர்கள் விரும்பும் ஒரு மேம்பட்ட வாழ்வை அளிப்பதும் எனது விருப்பம்.

இவரை சந்தித்து திரும்பிய அனுபவம் ஒரு அழுத்தமான புனைவுக்குள் வாழ்ந்து முடித்த அனுபவம். அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். நான் எனது வாழ்வில் சந்தித்த வெகு சில அடர்த்தியான ஆளுமைகளில் ஒருவர் அன்புராஜ்.

அன்புராஜ் விகடன் பேட்டி

முந்தைய கட்டுரைதன்னறம் நூல்வெளி
அடுத்த கட்டுரை‘யானை’ – சிறுகதை