நான்காவது கொலை!!! -9

சங்கர்லால் அந்த இருவரையும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடரும்போது எதிரே வேறு ஒரு ஆசாமி பதுங்கிப்பதுங்கி வருவதைக் கண்டு [சரவணா ஸ்டோரில் கிலோ விலைக்கு வாங்கிய] துப்பாக்கியை சரேலென்று உருவி ஒரு தூணின் மறைவில் ஒளிந்தபடி எட்டிப்பார்க்கையில் ஒரு சடைமுடிச் சாமியார் பம்முவதைக் கண்டு “கைகளை மேலே தூக்கு! உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்.

“கைகளை மேலே தூக்கினால் வேட்டி அவிழ்ந்துவிடுமே” என்றார் சாமியார்.

“அப்படியானால் ஒருகையை மட்டும்தூக்கினால் போதும்.” சங்கர்லால் கட்டளையிட்டார். “நீர் யார்?”

சாமியார் புன்னகையுடன் “என் பெயர் திகம்பர சாமியார். பூர்வாசிரமத்திலே சொக்கலிங்கம் பிள்ளை. மனைவி சிவகாமியுடன் துப்பறியும்பொருட்டிங்கு வந்தேன், துப்பறிவதற்கு தாசிகளைத் தேடி போகிறேன்” என்றார்.

“தாசிகளா எதற்கு?”

“என்ன கேள்வி இது மகனே? பத்து பக்கத்துக்கு பத்துபக்கம் தாசிகதைகள் இல்லாமல் என்னால் எப்படித் துப்பறிய முடியும்? நீ என் புகழ்பெற்ற கும்பகோணம் வக்கீல் என்ற கேஸைமட்டுமாவது ஒருமுறை படித்துப் பார்க்கவேண்டும்…” திகம்பர சாமியார் சொல்லலானார். “நீ கேட்ட வினாவானது ஆழமானதும் அற்புதகரமானதுமாகுமெனக் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.. பரமயோகிகள்கூட இதைப்பற்றி பலவாறாக சிந்தித்தும் பதில் காணமுடியாது தவித்துக் கொண்டிருகிறார்களெனினும் உனதுவினாவினை ஒருவாறு தெளிந்து சில சொற்கள் சொல்லலுற்றேன். கும்பகோணம் மன்னார்குடி ரஸ்தாவிலே பாபநாசம் என்று ஒரு சிற்றூருண்டு. அங்கே ஸ்தனபாக்கியம் என்றொரு தாசி……….”

சங்கர்லால் எட்டிப்பார்த்தார். ஐயத்துக்குரிய இருவரும் வெகுதொலைவில் சென்றுவிட்டிருந்தார்கள். “சற்று வேகமாக சொல்லவேண்டும் சுவாமி…” என்றார்.

“ஆயிரத்து துளாயிரத்து முப்பதுகளிலே எங்கள் வடுவூரார் கதையே அதிவேக இலக்கியமென அறியப்பட்டதென நீவிரறியீரோ? தஞ்சாவூர் கும்பகோணம் பாசஞ்சர் போல ராத்திரி முழுக்க பாய்ந்து போய்க்கொண்டே இருக்குமென்பார்கள். ஒரு புள்ளியைக்கடக்க ஐம்பத்தேழாயிரம் சொற்களோ அல்லது ஆறு நாட்களோ அல்லது இதில் எதுஅதிகமோ அது ஆகும்… நான் யாரென நீவிர் கேட்டவினாவுக்கு பதில்சொல்லப்புகின் விரியும். அமரும்…”

சங்கர்லால் தந்திரமாக கீழ்பக்கம் ஓடிய படிகளை பார்த்தார் “…. அங்கே தர்மநெறி வழுவா பிராமணோத்தமர்கள் தினம் சந்திவந்தனம் பந்திவந்தனமீறாக குலதர்மங்களை மீறாதவர்களாக ஒழுகிவந்தமையினால்…..”

துப்பறியும் நிபுணர்களுக்கேயுரிய லாவகத்துடன் சங்கர்லால் தப்பியோடியமை வாசகர்கள் ஊகித்தறிந்து மகிழ்வு கொள்ளத்தக்க விஷயமேயாகும்.

******

காலையில் வசந்த் தொடர கணேஷ் ஹாலுக்கு வந்தபோது அங்கே ஒரே களேபரமாக இருந்தது. “பாஸ் நம்ம ஃபல்குனன் பிள்ளா என்னமோ ஸ்டால் திறந்திருக்காப்ல” என்றான் வசந்த்.

ஃபல்குனன் பிள்ளா ஒரு மேஜைக்கு பின்னால் சொகுசாக சாய்ந்து தேசாபிமானி பார்த்துக் கொண்டிருந்தார். “வணக்கம் வாங்க…”

“என்ன எஸ்.டி.டி பூத்தா?” என்றான் வசந்த்.

“இல்லை சார். போலீஸ் செய்தி தொடர்புக்குப் போட்டிருக்காங்க. ஏகப்பட்ட துப்பறியும் நிபுணர்கள் வந்திட்டாங்க. எல்லாருக்கும் செய்தி சொல்லிக் கட்டுப்படியாகவில்லை. அதுதான். இரண்டாவது கொலை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கிட்டீங்களா?”

“என்னது பிட் நோட்டீஸா?”

“இல்லை சார். நூறு காப்பி வரை தேவைப்பட்டது. அதான் எஸ். பி உத்தரவு”

“புத்தம் புதிய சருமத்துக்கு புன்னகை பூசுமஞ்சள் தூள்! “ என்று வசந்த் வாசித்தான்.

“ஹி ஹி ஹி செலவை விளம்பரம் வழியாக ஈடுகட்டுகிறோம் சார்…”

அந்தபக்கமாக ஒருவர் நடந்து போக வசந்த் உற்று பார்த்து “எங்கேயோ பார்த்த முகம்” என்றான்.

“பெரி மேசன் சார். பின்னால் போகிறது அவரது துப்பறியும் நிபுணர்”

“ஏகப்பட்ட ஆட்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே”

“மொத்தம் எண்பதுபேர். கான்ஸ்டபிள் கந்தசாமி, குங்குமப்பொட்டு குமாரசாமி, ஆனந்த சிங்”

“சரிதான் சர்தார்ஜி ஜோக் வேறயா?”

“இவர் ஆரணி குப்புசாமி முதலியார் கதாபாத்திரம்.”

“இத்தனைபேர் ஒரு கதையிலேயா?”

“இந்த கதாசிரியர் ஒரு டைப் சார். மொத்தம் ஆயிரத்துஅறுநூறு பக்கம் நாநூறு கதாபாத்திரங்கள் என்று திட்டமிட்ட பிறகுதான் நாவலுக்குக் கருவே யோசிப்பாராம். இந்தக் கதையைக்கூட மொத்தம் ஆறாயிரத்து எழுநூற்று பதினெட்டு அத்தியாயம் எழுதபோகிறதாக பேச்சு. நல்ல வேளை நான் அதற்குள்ளே ரிட்டையர் ஆகிவிடுவேன். நீங்கள்தான் பாவம், மர்மம் அவிழாமல் நிம்மதியாக டாய்லட் கூட போக முடியாது”

“அதுக்காக இப்படியா, ஒருத்தர் பின்பக்கத்தை இன்னொருத்தர் லென்ஸ் வைச்சு பாக்கணும்போலவா?”

“அதுதான் இந்தக் கதையின் ஜீவகளை சார். இந்த கதையிலே துப்பறியும் நிபுணர்கள் மேலேயே சந்தேகம். குற்றவாளி யார்? கணேஷ் வசந்த்? ஷெர்லக் ஹோம்ஸ்? துப்பறியும் அப்புசாமி?”

“அந்தாள் வந்துட்டானா?” வசந்த் அலறிவிட்டான்.

“அரைபிளேடு, ரசகுண்டு ஜ.ரா.சுந்தரேசன் எல்லாரும் வந்தாச்சு”

“சி. ஐ. டி சகுந்தலா வரலீங்களா?”

“அவங்கதான் இன்னைக்கு காபரே ஆட்டம். போஸ்டர் பார்க்கவில்லையா?”

“பாஸ் இன்னைக்கு நான் தனியா துப்பறியறேனே?”

கணேஷ் நொந்துபோய் “விடுரா, நான் போய் போரும் அமைதியும் மறுபடி படிக்கமுடியுமான்னு பார்க்கிறேன்” என்று போய்விட வசந்த் ரிசப்ஷனில் இருந்த ஒல்லியான பெண்ணிடம் “மிஸ், நீங்க ஹார்லிக்ஸ் சாப்பிடுவது கிடையாதா?” என்று கேட்கப்புகுந்தான்.

அப்போது அவிழ்ந்த கூந்தலுடன் கொற்றவையல்லள் என வேம்பு பாய்ந்து வந்து “என்னாங்க ஓட்டல் இது? தினத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாங்கறீங்க. ஒட்டடையெல்லாம் கூட்டி தொடைச்சு வைக்கிறதில்லையா? கோந்தை வெளையாடற எடம்…” என்றாள்.

“ஒட்டடையா? இருக்காதே” என்றார் மேனேஜர்.

“எங்கிட்டே சொல்றேளா? அந்த ஓரத்து ரூமிலே இத்தா பெரிசு ஒரு சிலந்தி…”

“அய்யோ அம்மா. அது ஸ்பைடர்மேன். ராத்திரி பூரா துப்பறிஞ்சுட்டு இப்பதான் வந்து உத்தரத்துக்கு அடியிலே ஒட்டிக்கிட்டு ரெஸ்ட் எடுக்கறார்” என்றார் பட்லர் பரமசிவம்.

“ஏன் அவருக்கு மூல உபத்திரவமோ?” வசந்தால் அந்த ஒல்லியை சிரிக்க வைக்க முடியவில்லை.

“அந்த வடக்குப் பக்க ரூமிலே பேட்மேன் வேற தலைகீழா தொங்கிட்டிருக்கார். பாத்துப்போங்கோ..”

“நல்ல ஓட்டல் கட்டினீங்க போங்க. பூச்சியும் பொட்டுமா….”

அப்போது ஒரு ஆசாமி மூக்குமேல் இரு மெல்லிய குச்சிகளை வைத்து ஆட்டியபடியே போனார்.

“வித்தைக்காரருங்களா?” என்றான் வசந்த்.

“இல்லீங்க. இவரு பேரு காக்ரோச் மேன்…”

“கேள்விப்பட்டதில்லையே?”

“இன்னும் ரிலீஸ் ஆகலை. ஸ்பைடர்மேன் கிட்டே அப்ரண்டிஸாக இருக்கார்.”

“வெங்காய சருகு மாதிரி இருக்கு” வசந்த் அந்த ஆளின் கோட்டை தொடப்போனான்.

“பின்னாலே போகாதீங்க. அவரோட ஆயுதமே பின்னாலே பீச்சி அடிக்கிற நாத்தம்தான். முந்தாநேத்து பார்க்கிங் லாட்லே அப்டியே சீறிட்டார். இன்னும் கழுவி முடிக்கலை….”

வேறு ஒருவர் சோபாநுனிகள் மேல் கால்வைத்து தாவித்தாவி போனார் “இவரு யாருண்ணு நான் சொல்றேன். கிராஸ்ஹோப்பர்மேன். சரியா?” என்றான் வசந்த்.

“இந்தமாதிரி ஏகப்பட்டது இருக்கு சார். இன்னும் பதினேழுபேர் இப்ப லார்வா ஸ்டேஜிலே இருக்காங்க”

அந்தப்பக்கமாக போன இரு வெள்ளையர்களை வசந்த் கவனித்தான். அவர்களில் ஒருவர் ஸ்டிக்கர்பொட்டு வைத்திருந்தார்.

****

இன்ஸ்பெக்டர் கோபாலன் தன் முதன்மை சந்தேக பாத்திரத்தை அடிமேலடி வைத்து நிழல்போல பின்தொடர்ந்து கொண்டிருந்தது அவரது குணச்சித்திரத்துக்கு இயல்பே என அதிபுத்திசாலிகளான நமது நேயர்கள் இதற்குள் ஊகித்திருப்பார்கள். இவ்வாறு பழகிவிட்டமையினால் அவர் தன்முன் பின்தொடர யாருமில்லாத பட்சம் நடப்பதேயில்லை. அடிமேலடி காரணமாக அவருக்கு கொன்னக்கோல் என்றபெயரும் காய்கறிக்கடை வட்டாரத்தில் உண்டு. [அவர் தன் வீட்டில் சமையலறையிலிருந்து குளியலறைக்கு போகும்போது அம்மியில் தடுக்கி விழ அது சற்று நகர்ந்த விஷயத்தை எமது “பழமொழிகளும் உண்மையும்” என்ற நூலில் காண்க. விலை மூன்றணா. முன்பணம் கட்டுபவர்களுக்கு பிழைதிருத்தப்பட்டியல் இனாம்]

கறுப்புக்கண்ணாடி அணிந்த அந்த மர்ம ஆசாமி பேசும் மொழியும் விபரீதமாக இருப்பதை கோபாலன் கவனிக்கத் தவறவில்லை. ஒரு வேளை ஏதாவது தமிழ்ப்பாடநூலில் இருந்து தவறி வந்த கதாபாத்திரமோ என்ற சந்தேகமும் அவருக்கு எழாமலில்லை. கடைசியில் முப்பது சொற்களுக்குமிகாமல் பதில் சொல்ல வேண்டியிருக்குமோ என பீதியுடன் எண்ணிக் கொண்டார், அவர் தமிழ்பாடத்தில்தான் ஃபெயிலாகி போலீஸ் பக்கம் வந்தார்.

வராந்தாவை தாண்டிச்செல்கையில் “……கண்ணாடி காந்தாமணி என்பவளைப்பற்றி கேள்விப்பட்டிருக்காதவர்கள் வெகுஅபூர்வம். இவளது கன்னமாகப்பட்டது பெல்ஜியம் கண்ணாடி போலிருப்பதாலிப்பெயர் சித்திததென்று கூறுவாருளர். கண்ணாடிக்கடை கந்தப்பமுதலியென்பானின் எடுத்துவைப்பிவளென்பதால் இப்பெயரென்று கூறுவார் சிலருமுளர்….” என்று ஒரு குரல் கேட்டது.

கறுப்புக்கண்ணாடி அணிந்த மர்ம ஆசாமி அக்குரலைக் கேட்டதுமே இடியோசைகேட்ட நாகம் போலவும், அம்மா குரல் கேட்ட மந்திரிபோலவும் பம்மிப் பதுங்கி மறுபக்கமாகச் செல்வதை கோபாலன் கவனிக்காமலிருப்பரென நாம் எதிர்பார்க்கமுடியாது. அவ்வழி வந்த ஒரு பட்லரிடம் “அதென்ன ஏதோ கதை கேட்கிறது?” என்று கோபாலன் கேட்டார்.

“அது துப்பறியும் திகம்பர சாமியார் சார். அவரிடம் யாரோ எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுவிட்டார்கள். காலையிலிருந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்டவன் தப்பி ஓடிவிட்டான், வழிதவறி ஒரு ஆசாமி அகப்பட்டுக் கொண்டான். அவனை மீட்க தீயணைக்கும்படைக்கு சொல்லி அனுப்பியிருக்கிறது….” என்றான்.

அதற்குள் கறுப்புக்கண்ணாடி அணிந்த மர்ம ஆசாமி தப்பிவிட்டான் என கோபாலன் அறிந்து ஆஹாரம் போட்டு தேட ஆரம்பித்தார். ஐம்பதுகளில் அவர் இருந்தமையால் இப்படி சிந்திக்கும்போதெல்லாம் ஆகா போடவேண்டிய கட்டாயத்திலிருந்தார்.

எல்லா அறைக்கதவுகளும் மூடியிருந்தமையால் அவர் ஒவ்வொரு அறைக்கதவாக காதைவைத்து கேட்டது துப்பறியும் சாஸ்திர விதிப்பிரகாரமேயாகும். ஓர் அறைக்குள்ளிருந்து பயங்கரமான சிரிப்பொலியும் “ “வாலு போயி கத்தி வந்தது! டும்! டும்! டும்!” என்ற கவிதையும் யாரோ நடனமிடும் ஒலியும் கேட்டது.

கோபாலனுக்கு கோபம் வந்தது, என்ன தொடர்கதை இது சம்பந்தமே இல்லாமல். என்னதான் அங்கதக்கதை என்றாலும் இப்படியா? திடீரென அவர் மனதை பீதி கவ்வியது. ஒருவேளை உள்ளே இருப்பதுதான் கதாசிரியரா? கதைபோகிற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. அடாடா மாட்டிக் கொண்டேனே, என்ன செய்வது என அவர் தவித்தபோது கதவு திறந்து உள்ளே நின்ற வெள்ளைக்கார நாரீமணியின் காலடியில் அவர் குப்புற விழுந்து தெண்டனிட்டார்.

“அய்யோ அய்யோ! அறையிலும் இருக்க விடமாட்டார்களா?” என்றாள் அவள்.

“நான்.. நான்…..” என்றார் கோபாலன்.

“தெரியும் நீங்கள் காங்கிரஸ் கட்சி. ஐயா, எனக்கு இத்தாலி என்ற தேசத்தையே தெரியாது போதுமா…”

“நான் துப்பறியும் கோபாலன்” என்றார் கோபாலன் “துப்பறியும் சாம்பு கூட வருவேனே?”

“கேள்விபட்டதில்லையே?”

“கத்தி போயி ரொட்டி வந்தது ! டும் ! டும் ! டும் !”

“மரவீடு அதாவது பி.ஜி.வுட்ஹவுஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய மூன்றாம் கார்பன் தாளைத்தான் கல்கி என்பவர் ரொம்பநாள் வரவழைத்து பயன்படுத்தினார். எங்கள் ஆசிரியர் அதை பொறுக்கி அவர் பயன்படுத்துவார். யார் இவர்?”

“இவர்தான் பொரி மேசன்….”

“இங்கிலாந்திலெல்லாம் கொத்தனார்களுக்கு நல்ல மவுஸ் போல. பார்க்க பந்தாவாக இருக்கிறார்…”

“நான் டெல்லா ஸ்ட்ரீட்…”

“நான் தம்புசெட்டி தெரு. நீங்க இவருக்கு யாரு?”

“இவர் உலகப்புகழ்பெற்ற துப்பறியும் வக்கீல் சார். நான் இவரோட செகரட்டரி. எத்தனையோ சிக்கல்களை அனாயாசமாக தீர்த்துவைத்த எங்கள் பாஸ் இங்கே ஒரு பெரிய சிக்கலை தீர்க்கமுடியாமல் இப்படி ஆகிவிட்டார்…”

“அடாடா, என்ன ஆயிற்று?”

“ரொட்டி போயி புட்டி வந்தது! டும்! டும்! டும்!”

“இந்தக்கதையின் ஆசிரியர் கத்துக்குட்டி. கதை ஓடாமல் பக்கத்து நாவலில் இருந்து எங்கள் பாஸை இழுத்துவிட்டார். பாஸ் ஒரு இங்கே ஒரு கார் லைசன்ஸ் எடுக்க விரும்பினார். அதற்காக ஆர்.டி.ஓ ஆபீஸ் போனார்…”

“அடாடா…”

“ஐம்பது ஆவணங்கள் கேட்டார்கள். இன்ஷூரன்ஸில் தொடங்கி ஆர்த்தோ டாக்டரின் சான்றிதழ் வரை.”

“கடைசியாகச் சொன்னது எதற்கு?”

“சைடு கொடுக்கும்போது கையை வெளியே விட்டு வேகமாக ஆட்டத்தேவையான எலும்புபலம் இருக்கிறது என்று. இந்த ஐம்பது ஆவணங்களை வாங்க மொத்தம் இருநூற்று எண்பத்தெட்டு ஆவணங்கள் தேவைப்பட்டன.”

“அப்புறம்?”

“பாஸ் சோர்ந்துவிடுபவரல்ல. அவற்றைப் பெற முயன்றார். அதற்கு மொத்தம் ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு ஆவணங்கள் தேவைப்பட்டன…”

“பிறகு?”

“பாஸ் பிறகு ஒரு ஏஜென்ஸியை அமர்த்தினார். அந்த ஆயிரத்து அறுநூற்று பதினெட்டு ஆவணங்களைப் பெறுவதற்கு மொத்தம் பதினெட்டாயிரத்து முந்நூற்று அறுபத்தேழு ஆவணங்கள் தேவை என்று கணக்கிட்டுவிட்டார். படிப்படியாக விடாமுயற்சியுடன் முன்னேறினார். அப்போதுதான் காற்றடித்து ஆவணங்களைப்பற்றிய குறிப்புகள் கலந்துவிட்டன. போன திங்கள்கிழமை அவற்றை அடுக்கமுயன்றார். ஒருவாரம் ரொட்டிவைன் உள்ளே செல்லவில்லை. இப்போது இப்படி ஆகிவிட்டார். இந்தப்பாட்டு ஆர்.டி.ஓ ஆபீஸ் வாசலில் ஒரு பைத்தியம் பாடிக்கொண்டிருந்தது. அதையே விடாமல் பாடுகிறார்.”

“பாவம்”

“எனக்கு இப்போது ஒரு குழப்பம்”

“நான் போய்விட்டு பிறகு வருகிறேனே அவசரமாக ஒரு…”

“இருங்கள். பிளீஸ். அந்த டிரைவிங் லைசன்ஸ் கிடைத்து விட்டது…”

“அப்பாடா. எப்படி?”

“பட்லர் பரமுவிடம் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தேன். மறுநாளே வாங்கிவந்துவிட்டான்.”

“அப்புறமென்ன?”

“சந்தோஷத்தில் அவனுக்கு இரண்டாயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுத்தேன். அவனுக்கு என் ஆங்கிலம் புரியாமல் இன்னொரு லைசன்ஸ் வாங்கி வந்துவிட்டான்…”

“இன்னொன்றா?”

“ஆனால் இது விமானம் ஓட்டும் லைசன்ஸ். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ..மூளை குழம்புகிறது. எங்கேயோ கேட்ட ஒரு பாட்டுமட்டும் பழுதடைந்த ரேடியோ போல மூளைக்குள் கேட்டபடியே இருக்கிறது….”

கோபாலன் “அமைதியாக இருங்கள். என்ன இது?” என்றார்.

அந்த அம்மையார் “அடிக்கிற கைதான் அணைக்கும்…” என்று பயங்கரமாகப் பாட ஆரம்பிக்க கோபாலன் வெளியே பாய்ந்து படிகளில் தாவி “இவளுக்கு தனலட்சுமி தனலட்சுமியென்று ஒர் அதிரூ – பலா- வண்யவதியான ஒரு மகளுண்டு. ரூபவதிகளின் குணங்களேழு வகை. அவையாவனவெனில்…” என்று சொல்லிக்கொண்டிருந்த திகம்பர சாமியாரை தாண்டி ஓடினார்.

[தொடரும்]

முந்தைய கட்டுரைகுடும்பமும் ஊழலும் ஒருகடிதம்
அடுத்த கட்டுரைதல்ஸ்தோய் காட்சி