நான்காவது கொலை !!! [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]

[முன்குறிப்பு: திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்]

அத்தியாயம் : ஒன்று

கோவளத்தில் தனியார் கடற்கரையில் தென்னையோலை வேய்ந்த குடிலின் கீழ் குட்டை ஈசி சேரில் படுத்து கணேஷ் இந்தமுறையாவது போரும் அமைதியும் வாசித்து முடிக்க முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருந்தபோது தனக்கு ஆசிரியரால் அளிக்கப்பட்ட குணாதிசயத்தை நிறைவேற்றும் பொறுப்பை சிரமேற்கொண்ட வசந்த் “பாஸ், குட்டி சும்மா குளோனிங் ஆடு மாதிரி கும்முன்னு இருக்கா. ஜெர்மன் ஹைப்ரீடுன்ன்னு நெனைக்கிறேன். என்ன சொல்றீங்க?” என்றான்.

“ஏய், அவள் உடம்பை பாத்தியா, ரெஸ்லிங் பொண்ணு மாதிரி. கைமா போட்டுரப்போறா” என்றான் கணேஷ்.

“அட, நீங்க அதெல்லாம்கூட பாக்கிறது உண்டா?”

“சும்மா துப்பறியறதுக்குடா”

“நான் இந்த ஊட்டச்சத்து மாமியை கொஞ்சம் துப்பறிஞ்சுக்கிட்டு வரேன் பாஸ். அதுவரைக்கும், … அதென்ன புஸ்தகம்…”

“வார் அண்ட் பீஸ்”

“சரியாப்போச்சு, இதை அந்தாளே அம்பது பக்கம் தாண்டலை. அவரு வாசிச்சாத்தானே நீங்க முடிக்க முடியும்? உடுங்க. ஜோரா ஒரு பாத்திரம் தென்னங்கள்ளு குடிச்சுட்டு அந்தத் தென்னைகீழேயே சின்னதுக்கு போய்ப் பாருங்க, சொர்க்கம்!” வசந்த் அந்த வளமான சேச்சியை காதலாகப் பார்த்து “கேரளா தெய்வங்களோட சொந்த நாடு பாஸ். அம்மே, நாராயணீ, பரதேவதே, ரட்சிக்கணே!” என்றான்.

கோர்ட் ஞாபகமில்லாமல் பத்துநாள் என்று வசந்த் தான் கூட்டிவந்தான். ஏழு கேஸ் வாய்தாவிலேயே ஓடிக் கொண்டிருந்தது. ரங்காச்சாரி சவடால் இல்லாமல் கமுக்கமாக இருந்தது வேறு கணேஷைத் தொந்தரவு செய்தது. பழைய ஒரு தொடர்கதையில் அவரை ஒரு கேஸில் எக்கச்சக்கமாக குழப்பி ஜெயித்திருந்தான்.

“ஆயுர்வேதிக் சென்டர்லே சேச்சிகளே தைலம் தேச்சு உருவி விடறாங்களாம் பாஸ். வீக்லே ஒரு கவர் ஸ்டோரி பாத்தேன்”

“ரகசிய மருத்துவமலர்’லே தானே? உன் டேபிள்லே பாத்தேன்”

“பாஸ் என்னையே துப்பறியறீங்களா? தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்கு…”

“அதென்னடாது, அதில தாந்தீரிக மருத்துவம்னு ஒண்ணு போட்டிருக்கு?”

வசந்த் உற்சாகமாகி “அதுவா, பூர்ண பீஜ ஸ்தம்பனம்னு ஒண்ணு பாஸ். நாப்பத்தெட்டு நாள் நினைப்போ ஸ்பரிசமோ இல்லாம இருந்து மெதுவா…….”

“அதானா, சரி விடு!”

“நீங்கள்லாம் சும்மாவே வாக் இன் செலக்ஷன் கேஸ் பாஸ். இப்ப உங்க பிராண சக்தியாகப்பட்டது ஸ்வஸ்த குண்டலினியிலே நாகப்பாம்பு ரூபத்திலே…”

“விடுரா. ஏற்கனவே வெயில் கொளுத்துது”

வசந்த் அந்த பெண்ணைப் பின்தொடர்ந்து “ஹாய்” என்று சொல்ல அவள் “கிரீப்!” என்றாள். “தாங்க்யூ” சொல்லி பின் வாங்கி விட்டான். “பெயரை கேக்கவேயில்லை பாஸ், அவளா சொல்றா…”

“வழியாதே…”

“வழியறதா? சாயந்தரத்துக்குள்ள ஒரு ப்ரிட்னி ஸ்பியர்ஸ் 2002 மாடலை மடக்கி யோகா கத்துத்தரலை அப்புறம் அக்கினிசிறகுகள்னு கலாம் எழுதினதுக்கு என்ன பாஸ் அர்த்தம்? ஹாய், யூ ஆர் ஃப்ரம்?” என்று கூடப்போய்விட்டான்.

கணேஷ் மீண்டும் படிக்க ஆரம்பித்தான். டால்ஸ்டாயின் பிரபுகுல உறவுமுறைகளை தீவிரமாக புரிந்துகொள்ள முற்பட்டதில் பிரின்ஸ் ஆன்ட்ரூவுக்கு அவன் மனைவி என்ன உறவு என்று குழம்பிப்போய், சிக்கலாக யோசித்துக் கொண்டிருந்தபோது செல்போன் அடித்தது.

“லாயர் கணேஷ்?” என்ற மலையாள குரல் கேட்டது. “என் பெயர் ராமசாமி. உங்களை நான் பாக்கணும்.”

“உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்?”

“தெரியாம என்ன, பார்த்தாலே தெரியுதே. ஜெயராஜ் ஓவியம்தான் சார் பொருத்தம். இப்ப விகடன்லே சியாம் சரியில்ல. உங்களுக்கு கொஞ்சம் வினோத்மெஹ்ரா சாயல்னு ‘அனிதா இளம் மனைவி’ யிலே ஒருபொண்ணு மோனிகாவோ என்னவோ சொல்லியிருக்கு. அது ஆச்சு முப்பது வருஷம். வினோத் மெஹ்ரா கூட பல்லுபோயி தாத்தா ஆயிருப்பார். என்ன நான் சொல்றது? நான் உங்களை அவசியமா, அவசரமா, பாத்தாகணும்… நில்லுங்கள் ராஜாவேதான் நான் முதல்ல வாசிச்சது. நான் தொடர்கதைலே வர்ரது இதான் முதல்தடவை…”

“ஸாரி, இங்க நாங்க பிஸினஸ் விஷயமா பேச விரும்பலை”

“இது பிசினஸ் விஷயமில்லை. சொந்த விஷயம்”

“உங்க சொந்த விஷயம்தான் எங்க பிசினஸ், ஸாரி” என்று மடக்கப்போனான்.

“ஒரு நிமிஷம் கணேஷ். இது உங்க சொந்த விஷயம், அதாவது என் பிசினஸ்”

கணேஷ் தன் நீண்டகால தொடர்கதை அனுபவத்தில் விஷயத்தை கச்சிதமாகப் புரிந்து கொண்டு அத்தியாயத்தின் கடைசியில் அந்த ஆள் சாவதற்குள் அவருடன் பேசி கதையின் முதல் முடிச்சை தெரிந்து கொள்ள அவசரமாகக் கிளம்பினான். செல்போனின் படி அவர் ஒரு கேரள ஜோசியர். பெரிய அரசியல் தலைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் மணிக்கு பல்லாயிரம் ஃபீஸ் பெற்று அடுத்த கட்டச்சதி வகுத்து தருபவர்.

கணேஷ் வசந்தைப் பாதிவழியில் ஒரு பிக்கினியின் நிழலில் இருந்து பிக்கப் செய்துகொண்டு, [“டிராப்பிக்கல் நாடுகளிலே பல்தேய்க்கவேண்டிய அவசியமே இல்லைண்ணு எந்த பஞ்சமாபாபாவியோ அவகிட்டே சொல்லியிருக்கான் பாஸ்”] அந்த மூன்று விண்மீன் ஓட்டலின் பிரம்மாண்டமான கான்கிரீட் வாசலில் நுழைந்து, பூதம் போன்ற கதகளி சிற்பங்களையும் தென்னைமர ஓவியத்தையும் சிரியன் கிறிஸ்தவ வரவேற்பினிகளையும் தாண்டி உள்ளே போனான்.

“பாஸ் ஜோசியர்களுக்கெல்லாம் நம்மகிட்டே என்ன வேலை? வேண்ணா மாயவரம்கேஸ் பத்தி ஒரு ஜோசியம் நாம கேட்டு பாக்கலாம்…”

“அத ஜட்ஜ் செய்வாருடா” என்றான் கணேஷ்.

அவர்கள் சொல்லப்பட்ட 639-வது சூட் வாசலுக்கு வந்தபோது அந்தக்கதவு திறந்து கிடந்தது. கணேஷை குழப்பியது “பாஸ் கூட்டுத்தொகை பாத்தீங்களா? ரொம்பப் பெரிய கைன்னு நெனைக்கிறேன்.”

அத்தியாயத்தின் வார்த்தை எண்ணிக்கை ஐநூறுக்குப் போய்விட்டமையால் கணேஷுடன் உரையாடலுக்கு அவகாசம் தரப்படாமல் அந்த ஆள் அவசரமாகக் கொல்லப்பட்டு அறைக்குள் பாதி சோபாவிலும் மீதி கார்ப்பெட்டிலுமாக சரிந்து கிடந்தார்.

“மைகாட், பாஸ் மாட்டிக் கிட்டோம்! மறுபடியும் தொடர்கதை!” வசந்த் அலறினான். “எப்டியும் நாப்பது அத்தியாயத்துக்கு இழுத்திரும். அதுவரைக்கும் கோவளமா?”

“அத நாம நிம்மதியா கோவளம் பீச்சில உக்காந்திருக்கிற முதல் வரியிலேயே நீ ஊகிச்சிருக்கணும்” என்றான் கணேஷ். “போலீஸை கூப்பிடு. அதுக்கு முன்னால ஓட்டல் மானேஜரை.”

“மிஸ்…” என்று வசந்த் அந்த பணியழகியிடம் அணுக, “நான் தங்களுக்கு எவ்வகையில் உதவ முடியுமென தயை கூர்ந்து சொல்ல முடியுமா?” என்று அவள் சங்ஙனாச்சேரி ஆங்கிலத்தில் கேட்டாள்.

“மிக்க நன்றி. ஒரு கொலை நடந்திருக்கிறது” என்றான் வசந்த்.

“ஓ, நைஸ்” என்று அவள் புருவத்தை தூக்கி வசீகரமாகப் புன்னகைத்தாள்.

“இதெல்லாம் கால்குலேட்டர் கேஸ் பாஸ். உள்ளார ஒரே ஒரு புரோக்ராம், வெளிய எட்டு கீ. அதில ஒண்ணு…”

“டேய், பாத்துடா”

“மிஸ். நிங்கள் மானேஜர் அடுக்கல் ஞான் சம்சாரிக்குன்னு….”

“ஓ நைஸ்” புன்னகை மாறாமல் அவள் இடையசைத்து நடந்து முன்னால் போக வசந்த் பின்னால் போனான். சற்று நேரத்தில் பணியாட்கள் கூடி எட்டிப்பார்த்து கிசுகிசுக்க, ஒரு ஆங்கிலோ சாக்சன் பாட்டி தலை தட தடவென்று நடுங்க உபயவேதாந்த முகபாவத்துடன் நீச்சலுடையில் சந்தேகாஸ்பதமான இளைஞனால் கைத்தாங்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டாள்.

மானேஜர் கறுப்பு ஃபுல்சூட்டில் வியர்த்து வழிய வந்து, கைக்குட்டையால் வழுக்கையே நெற்றியாகியிருந்த பிராந்தியத்தை மீண்டும் மீண்டும் துடைத்து விட்டபடி, “எங்களுடையது மிக நம்பகமான நிறுவனம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கொல்லப்பட்டவர் பஞ்சக்கச்சம் அணிந்து சந்தனக்குறி போட்டு பலவிதமான மாலைகள் தாயத்துகள் கலைந்துகிடக்க மலையாள அப்பா நடிகர் சாயலில் சிவப்பாக கனமாக இருந்தார் — அதாவது இருந்திருந்தார். “இதெல்லாம் என்ன பெரிய கொலை” என்பது போல வாய் கோணலாக திறந்திருக்க கார்ப்பெட்டில் ரத்தம் இன்னும் அமில வீச்சம் அடித்தது.

“பாஸ், ஏதாவது இட்சிணி அடிச்சிருக்குமோ” என்றான் வசந்த்.

“ஒண்ணுமே இடம் மாறலை. ரூம் நீட்டா இருக்கு. யாரோ ரொம்பத் தெரிஞ்சவங்கதான் செஞ்சிருக்கணும். பேசிட்டே இருக்கிறப்ப…”

“பார்டா, முன்பக்கம் குண்டு பாய்ஞ்ச தடமே இல்லை. துப்பாக்கியால சுட்டா சத்தம் கேட்டிருக்கும். சைலன்ஸர் உள்ள துப்பாக்கின்னாகூட ஆசாமி கத்தியிருக்கணும். அதை யாருமே கேட்டதா தெரியலை.”

போலீஸ் வந்தது. கிழட்டு போலீஸ்காரர் கூட்டத்தை “மாறி நில்கினெடே” என்று அன்பாகச் சொல்ல உள்ளே வந்த சப் இன்ஸ்பெக்டர் கெ.ஃபல்குனன் பிள்ள சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட கொழுத்த முகத்தில் கவலையுடன், பல்பல்லாக துல்லியப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தில் “யார் முதலில் பார்த்தது?” என்று கேட்க கணேஷ் “நான் தான்…” என்றான்.

“நீங்கள் யார்?” என்றார் இன்ஸ்பெக்டர் தொப்பியை தூக்கி கைக்குட்டையை தலையிலிருந்து எடுத்தபடி. ஃபாரன்சிக் ஆட்கள் வந்து வேலையை ஆரம்பிக்க சடலம் உறைதன்மை பெறத் துவங்கியது.

“லாயர் கணேஷ். இது என் ஜூனியர் வசந்த்”

“நீங்களா?”

“ஆமா, நாங்களேதான்”

அவர் மலையாளத்தில் குழம்பி “உண்மையாகவா?” என்றார். “அப்படியானால் இது தொடர்கதைதானா? அதுதானே பார்த்தேன்” என்று ஆறுதலாகி ஃபாரன்சிக் கெட்டிமீசையிடம் “ராகவன் சேட்டா எல்லாம் ஒரு மிதமாயிட்டு மதி கேட்டோ. சங்கதி இது துடர்கதயாணு” என்றார். “ஞான் மங்களம் துடர்கதையில் வருந்நு. இது எதிலே வரும்? கேரள குங்குமத்தில தானே?”

“அதெல்லாம் எங்களிடம் கேட்பதில்லை. டிவி சீரியலாகக் கூட வரலாம். இல்லை அப்படியே நிலம் தொடாமல் நேராகவே திரைக்கதையாகக்கூட ஆகிவிடலாம்.”

“அப்ப ஜோடி, டூயட்டெல்லாம் இருக்குமே, ஏன் பாஸ்” என்ற வசந்த் திடீரென்று கவனமாகி “பாஸ் அங்க பாருங்க… அந்தாளை எங்கோ பாத்தது மாதிரி இல்ல?”

அந்த கிழவர் கறுப்பு கோட் அணிந்து, பஞ்சக்கச்சமும் குடையுமாக அசட்டு முழியுடன் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்தார். “ஆர்.கெ.லட்சுமணனோட திருவாளர் பொதுஜனம் மாதிரி இருக்கார், பாஸ்”

“அந்தாள் மூக்கப் பாருடா. …என்னமோ தப்பு நடக்குது.”

“பாஸ், துப்பறியும் சாம்பு!” வசந்த் அலறிவிட்டான். “என்ன குளறுபடி இது? இந்தாள் இங்க எங்க வந்தார்? கதை எங்கியோ போகுது…”

“அதான் எனக்கும் புரியலை” கணேஷ் சொன்னான். “இது வழக்கமான நாப்பது வாரத்தொடர் இல்லை, என்னமோ போஸ்ட்மாடர்ன் உட்டாலக்கடின்னு தோணுது…”

“என்ன ஆச்சு நம்மாளுக்கு, எட்டு தொடர்கதை ஏககாலத்தில எழுதின கை….”

“இல்லடா. இது வேற எவனோ செய்ற வேலை. இரு” என்றான் கணேஷ். “கதை எங்க ஆரம்பிக்குது பார். கோவளம். அப்புறம் மலையாளத்தை தமிழ்லே யார் எழுதினாலும் தப்புதப்பாத்தான் வரும். இரா.முருகன் கொஞ்சம் பரவாயில்லை. நம்மாள்னா சொதப்புவார். இதில பார், பக்காவா இருக்கு…”

“அப்ப?” என்று கேட்ட வசந்த் உடனே ஊகித்து “அவனா? திமிர் பிடிச்ச ஆளுன்னு அன்னிக்கு திருவல்லிக்கேணியிலே பதினாலுபேர் கூட்டம் போட்டு திட்டிக்கிட்டு இருந்தாங்க. பாஸ், இவங்கள்லாம் தலைக்காணி, அதுக்கு உறைன்னு எழுதித் தள்ற டைப். அவன் இதில எங்க பூந்தான்?”

“காலம் மாறிப்போச்சுடா. சுந்தர ராமசாமியேக்கூட கிளுகிளு தொடர்கதை எழுதப் போறதா பூந்தமல்லிப்பக்கமா பேச்சு அடிபடுது…”

“பாஸ் இந்தாள்தானே தெவச மந்திரத்தையெல்லாம் நடு நடுவிலே போட்டு விசிப்பலகை சைசுக்கு ஒண்ணு எழுதினான்?”

“விஷ்ணுபுரம். இன்னும் படிக்கலை. சிறுகதைத் தொகுப்பா கட்டுரையான்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள பாதி ஓடிடுதுங்கிறாங்க”

“பாஸ் துப்பறியும் சாம்பு பத்தி வெளிநாடுகள்லே கவிதைகள்லாம் எழுதறாங்க” என்றான் வசந்த்.

துப்பறியும் சாம்பு தன் குடைமிளகாய் மூக்கை வாஞ்சையாக தடவியபடி, கணேஷைப் பார்த்து புன்னகை புரிந்து “எஸ்பராண்டோ படிச்சிருக்கேளா?” என்று கேட்டார்.

[தொடரும்]

***

* சட்டபூர்வமான எச்சரிக்கை. விளம்பர வாசகங்களை நம்புவது உடல் மன நலங்களுக்கு தீங்கானது.

முந்தைய கட்டுரைதிருவையாறு
அடுத்த கட்டுரைபயணங்கள் கடிதம்