முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

mukundjpg
இனிய ஜெயம்
வழமைபோல கவிதை தேடுதலில் கண்டடைந்தவை இவை.  முகுந்த் நாகராஜன் எழுதிய புதிய கவிதைகள் இவை
 முகுந்த் form-ல இருக்கார் போல .
கடலூர் சீனு
வீட்டைப் பிரித்தல்
=================
பாத்ரூம் கதவென்று
தப்பாக நினைத்த பாப்பா
வீட்டுக்கதவைத்
திறந்த உடனேயே
போய் விட்டது.
ஹாலைக் கடந்து
படுக்கையறைக்குள் நுழைந்து
பாத்ரூம் கதவைத்
திறப்பதற்குள்
காலம் கடந்து விட்டது.
வழியெங்கும் சிந்திய
நீர்த்துளிகள்
வீட்டை இரண்டாகப்
பிரித்து விட்டிருந்தன,
குழந்தைக்கு முன்,
குழந்தைக்குப் பின் என.
அம்மா வழிச்சாலை
===================
ஒரு துண்டு தோசை கொடுத்தால்
‘அம்மா தரட்டும்’ என்று
கூவிக்கொண்டு ஓடுவாள் நேயமுகில்.
டம்ளரில் மென் சூடான பால் கொடுத்தாலும்
அப்படியே ஓடுவாள்.
பல் துலக்க ப்ரஷ்ஷைக் கொடுத்தாலும்
அப்படியே.
ஒருநாள் காலை
ஈரமான கையால்
அவள் முகம் துடைக்கப் போனேன்.
என் கையைப் பிடித்துக்கொண்டே
‘அம்மா தரட்டும்’ என்று ஓடி
என் கை ஈரத்தை
அம்மாவின் கைக்கு மாற்றி
முகம் துடைத்துக் கொண்டாள்.
அவளை அடைய
அம்மா வழிச்சாலை ஒன்றே இருக்கிறது.

*

எப்போதும்,
‘ஆஃபீஸ்-ல பூச்சி இருக்கு,
போகாதே’ என்று சொல்லும்
நேயமுகில்
அன்று ஒரு கோபத்தில்
‘அப்பா, நீ ஆஃபீஸ்-க்குப் போ’
என்றுவிட்டாள்.
‘சரி, நான் போறேன்’ என்று
திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
சுற்றிச் சுற்றி வந்தாள் கொஞ்ச நேரம்.
தன் சாரட்டு வண்டியைக் கொடுத்து
சமாதானம் செய்ய வந்தாள்.
நான் வாங்கிக்கொள்ளவில்லை.
திடீர் உற்சாகத்துடன்
‘அப்பா, உனக்கு லீவ் ஆச்சே’ என்றாள்.
அட, ஆமாம்.
‘எனக்கும் லீவு’ என்றாள்.
‘செக்கருக்கும் லீவு’ என்றாள்.
அது அவளுடைய கரடி பொம்மை.
தன் பொம்மைகளையெல்லாம்
ஒவ்வொன்றாக அழைத்து
விடுமுறை அறிவித்தாள்.
சமைக்க வைத்திருந்த காய்கள்,
தொலைக்காட்சி, சோபா, ஒயர் கூடை,
விளக்கு, மின்விசிறி, ஜன்னல்,
தண்ணீர் பாட்டில்,என்று
தன் பார்வையில் பட்ட எல்லாவற்றுக்கும்
விடுமுறையைக் கொடுத்தாள்.
ஒவ்வொரு அறையாக நுழைந்து
தன் பொற்பிரம்பால் தொட்டு
பொருட்களையெல்லாம் விடுவித்தாள்.
தண்ணீர் கேன் ‘அப்பாடா’ என்று
தன் பெருமூச்சை
ஒரு குமிழியாய் வெளியிட்டு
காலை நீட்டி உட்கார்ந்து கொண்டது.
முந்தைய கட்டுரைசிற்பங்களை அறிவது…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50