‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21

bowலட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி, மூத்தவரே?” என்றான். லட்சுமணன் தலையசைத்தான். துருமசேனன் “இன்று படைவீரர்கள் சோர்ந்திருக்கிறார்கள். நேற்றும் அவர்களை கனவுகள் அலைக்கழித்தன என்கிறார்கள்…” என்றான். லட்சுமணன் “உம்” என்றான். “அதே கனவுகள்தான். பேயுருக்கொண்ட ஆழத்துதெய்வங்களும் விண்வாழ்தெய்வங்களும் மண்ணிலிறங்கி பூசலிட்டன” என்றான் துருமசேனன்.

“அவர்கள் சொல்வதை கேட்டால் இதுவரை மண்ணில் உருக்கொண்ட அத்தனை தெய்வங்களும் இங்கு வந்துள்ளன என்று தோன்றுகிறது. பல்லாயிரக்கணக்கான குலதெய்வங்கள், லட்சக்கணக்கான அன்னைதெய்வங்கள், பலகோடி மூதாதைதெய்வங்கள். இங்கே தெய்வங்களுக்குப் போக எஞ்சிய இடமே மானுடருக்கு” என்று துருமசேனன் தொடர்ந்தான். லட்சுமணன் “தெய்வங்களுக்கு ஊசிமுனைமேல் நூறு நகர் அமைக்கும் ஆற்றல் உண்டு” என்றான். “ஆம்” என்றான் துருமசேனன். லட்சுமணன் என்ன சொல்கிறான் என அவனுக்கு புரியவில்லை. “உணவுண்டாயா?” என்றான் லட்சுமணன். “ஆம்” என அவன் நாணத்துடன் சொன்னான். “நீங்கள் உணவருந்தவில்லை என அறிவேன். ஆனால் என்னால் காலையில் எழுந்தவுடன் உண்ணாமலிருக்க இயல்வதில்லை.”

லட்சுமணன் புன்னகையுடன் அவன் முதுகில் கைவைத்து “அதிலென்ன? நீ அடுமனையில் வாழ்பவன் என அறியாதவனா நான்?” என்றான். துருமசேனன் “நான் அடுமனைக்கே செல்லவில்லை” என்றான். “உணவை கூடாரத்தில் கொண்டுவந்து வைத்திருந்தாயா?” என்றான் லட்சுமணன். “எப்படி தெரியும்?” என்று துருமசேனன் கேட்டான். லட்சுமணன் புன்னகை செய்தான். துருமசேனன் குற்றவுணர்ச்சியுடன் “ஆனால் நான் உங்களுக்கான உணவை கொண்டுவந்து வைத்துள்ளேன். சென்றதுமே நீங்கள் உண்ணலாம்” என்றான். லட்சுமணன் “நன்று” என்றான்.

அவர்கள் படைகளின் நடுவே நடந்தார்கள். முந்தையநாள் களம்பட்ட இளையோர் எண்பத்தைந்து பேர் வரிசையாக சிதைக்கு முன் அடுக்கி போடப்பட்டிருந்ததை அவன் பார்த்திருந்தான். அவர்களின் உடல்கள் சிதைந்திருந்தமையால் செந்நிற மரவுரியால் சுருட்டி உருளையாக வைக்கப்பட்டிருந்தனர். “மலைப்பாறைகளால் உருட்டி சிதைக்கப்பட்டவர்கள் போலிருந்தன உடல்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். லட்சுமணன் சீற்றத்துடன் “வாயை மூடு!” என்றான். ஆனால் அவனால் அந்த உளஓவியத்திலிருந்து மீளவே முடியவில்லை.

கௌரவ மைந்தர் சிலரே வந்திருந்தார்கள். “எஞ்சியவர்கள் உண்டு துயிலச் சென்றாகவேண்டும் என ஆணையிட்டேன், மூத்தவரே” என்றான் துருமசேனன். “அவர்கள் அனைவரும் துயரில் இருக்கிறார்கள். இங்கு வந்தால் தாளமாட்டார்கள். அவர்கள் ஓர் உடல்போல. ஒவ்வொருவரின் இறப்பும் தங்கள் இறப்பென்றே தோன்றும்.” லட்சுமணன் புன்னகையுடன் “நன்று, ஆயிரம்முறை இறப்பதற்கு நல்லூழ் வேண்டும். இனி பிறப்பும் இறப்பும் இல்லை போலும்” என்றான். அவன் சொல்வது புரியாமல் துருமசேனன் விழித்து நோக்கினான்.

சத்யனும் சத்யசந்தனும் அவர்களுக்குப் பின்னால் வந்தனர். நாகதத்தன், சம்பு, கன்மதன், துர்தசன், சுப்ரஜன் ஆகியோர் ஒரு சிறு குழுவாக நின்றனர். அப்பால் துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோர் கூடி நின்றனர். சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோர் இன்னொரு குழுவாக நின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஒற்றை உடலென நின்றனர். அவர்கள் எப்போதுமே அப்படித்தான் நிற்பது வழக்கம், ஆகவே அவர்களை ஆலமர விழுதுகள் என பிறர் களியாடுவதுமுண்டு. ஆனால் அப்போது இழுத்துச்செல்லவிருக்கும் ஏதோ சரடு ஒன்று அவர்களை கட்டி நிறுத்தியிருப்பதுபோலத் தோன்றியது.

தனியாக நின்றிருந்த இருவரை நோக்கி லட்சுமணன் நின்றான். “அவர்கள் இளைய தந்தை குண்டாசியின் மைந்தர்கள் அல்லவா?” என்றான். “ஆம், தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும். அவர்கள் எப்போதும் தனித்தே நிற்கிறார்கள். ஒருவருக்கொருவர்கூட பேசிக்கொள்வதில்லை” என்றான் துருமசேனன். லட்சுமணன் “தந்தையிடமிருந்து நோய்களை தவறாமல் பெற்றுக்கொள்கின்றனர் மைந்தர்” என்றான். கைநீட்டி அவர்களை அருகே அழைத்தான். அவர்கள் அவன் அழைப்பை விழிகடந்து உளம் பெற்றுக்கொள்ளவே சற்று பிந்தியது. இருவருமே எதையும் நோக்காத முகம் கொண்டிருந்தனர். அருகே வந்ததும் தீர்க்கநேத்ரன் சொல்லின்றி வணங்கினான். சுரகுண்டலனின் வாயில் ஒரு சொல் எழுவதுபோல ஓர் அசைவு வந்து மறைந்தது.

லட்சுமணன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே கைநீட்டி அவர்களின் தோளை மட்டும் தொட்டான். சுரகுண்டலன் பெருமூச்சுவிட்டான். ஏதாவது சொல்லவேண்டும் என லட்சுமணன் எண்ணினான். ஆனால் அவர்களிருவரிடமும் அவன் பேசுவதே அரிது. அவர்களின் கைகளை மட்டும் மெல்லப் பிடித்து அழுத்தினான். அங்கிருந்து நடந்தபோதும் அவர்களின் கைகளை தன் கையிலேயே வைத்திருந்தான். அவர்களும் சொல்லின்றி உடன் நடந்தார்கள். ஒவ்வொரு உடலாக பார்த்தபடி மெல்ல நடந்து சிதையை அணுகியபோது உள்ளம் வெறுமைகொண்டு எடையற்றிருந்தது.

முந்தையநாள் இறந்தவர்களுக்கான செல்கைச் சடங்குகள் அரசர்களின் பாடிவீடுகளின் முற்றங்களிலேயே நிகழ்ந்தன. களத்திலிருந்து அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு முற்றங்களில் நிரையாக வைக்கப்பட்டிருந்தன. ஷத்ரிய முறைப்படி வெண்கூறைக்குமேல் வாளும் வேலும் சாத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவ்வுடல்களுக்கு இறந்தவர்களின் தந்தையர் வாய்க்கரிசியிட்டு வணங்கினர். அவர்களின் களப்போர்த்திறத்தையும் வெற்றியையும் போற்றி பாணர் எருமைமறம் பாடினர். அங்கிருந்து உடன்பிறந்தார் தொடர அவ்வுடல்கள் எரிகளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

ஆனால் மறுநாளே அரசர் உடல்கள் எவையும் படைகளுக்குள் கொண்டுவரப்படலாகாது என்று ஆணையிட்டுவிட்டார். அவ்வுடல்கள் படைகளின் உளச்செறிவை அழிக்கின்றன என்று அவருக்கு சொல்லப்பட்டிருந்தது. அது உண்மை என லட்சுமணன் படைகளில் இருந்து உணர்ந்திருந்தான். போருக்குப் பின் படைகள் களைப்பையும் உயிருடனிருப்பதன் மகிழ்வையும் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் தழைந்த தோற்பரப்பில் விரல்கள் குழைந்தாட பருபருத்த குரலில் பாணர் பாடிய எருமைமறப் பாடல்கள் கேட்டவர்களை விழிநீர்விடச் செய்தன. அத்துயர் சொல்லில்லாமல் கடுங்குளிர் என படையில் பரவியது.

சிதையருகே இளைய தந்தை குண்டாசி நின்றிருந்தார். அவர் ஏன் அங்கே வந்தார் என்னும் திகைப்பை அவன் அடைந்தான். பின்னர்தான் முந்தையநாளே அவர்தான் கௌரவப் படைத்தரப்பின் ஈமநிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டது நினைவு வந்தது. அவனுடைய மெலிந்த சிற்றுடல் காற்றில் சருகு பறப்பதுபோல அங்கே தத்தி அலைந்தது. கைகளை வீசி ஆணைகளை பிறப்பித்தபடி சுற்றிவந்தான். லட்சுமணனைக் கண்டதும் அருகணைந்து “என்ன? உன் தந்தை எங்கே?” என்றான். “அரசர் வரவில்லை என செய்தி…” என்றான் லட்சுமணன். “ஆம், அது இங்கு வந்துள்ளது. வாய்க்கரிசிச் சடங்குகளுக்காக இறந்தோரின் தந்தையர் வரவேண்டும்…” என்றான் குண்டாசி. “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று லட்சுமணன் சொன்னான். குண்டாசி தன் மைந்தர் அங்கிருப்பதை அறியாதோன்போல “பொழுதில்லை… இச்சிதை கொளுத்தப்பட்ட பின்னரே பிற சிதைகள்… இன்று மட்டும் நாநூற்று எழுபது சிதைகள். அவை முழு இரவும் எரிந்தாலே இன்று வீழ்ந்தவர்கள் விண்ணேறமுடியும். மின்னலும் தூறலும் உள்ளது, மழைவருமென்றால் இடர்தான்” என்றான்.

குண்டாசி சற்று மிகையான ஊக்கத்துடன் இருக்கிறானோ என்னும் ஐயம் அவனுக்கு எழுந்தது. அங்கே நிரையென நீண்டுசென்றிருந்த இளையோரின் உடல்களை அவன் ஒருகணத்துக்கு மேல் நோக்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் குளிரை உணர்ந்து நடுங்குவதுபோல் அவ்வப்போது சிலிர்ப்புகொண்டது. குண்டாசி எதையுமே எண்ணுவதுபோல தெரியவில்லை. படைப்புறப்பாட்டுக்கு முந்தைய ஏற்பாடுகளை செய்பவன்போல பரபரப்பாக இருந்தான். அவன் உடல் மெலிந்து கூன்விழுந்திருந்தமையால் அது வில்மூங்கில் நிலத்தில் ஊன்றப்படுகையில் என சற்று துள்ளுவதுபோலத் தோன்றியது.

எண்பத்தைவருக்கும் ஒற்றைச் சிதை அடுக்கப்பட்டிருந்தது. அங்கே ஆலயம் ஒன்று எழுப்பப்படவிருப்பதாகவும் மரங்கள் அடுக்கப்பட்டு அடித்தளம் ஒருக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றியது. அரக்கும் மெழுகும் நெய்யும் பொழியப்பட்ட விறகுகள் நனைந்தவை போலிருந்தன. குண்டாசி ஒருவனை உரக்க அதட்டி கீழ்மொழியில் ஏதோ சொன்னான். துருமசேனன் “எப்போதுமே சிறிய தந்தையை செயலூக்கத்துடன் பார்த்ததில்லை” என்றான். “இத்தருணத்துக்காகத்தான் அவர் அப்படி இருந்தார் போலும்” என்ற லட்சுமணன் எண்ணிக்கொண்டு குண்டாசியின் மைந்தர்களை பார்த்தான். அவர்கள் சொல்கேளாதோர்போல அணைந்த விழிகளுடன் இருந்தனர்.

தேர்கள் ஒலிக்க அனைவரும் திரும்பிப்பார்த்தனர். “வந்துவிட்டார்களா?” என்று கேட்ட குண்டாசி “விரைக… பொழுதணைகிறது!” என ஏவலரை ஊக்கினான். ஏழு தேர்களில் இருந்து சித்ராங்கனும், பீமவேகனும், உக்ராயுதனும், சுஷேணனும், மகாதரனும், சித்ராயுதனும், நிஷங்கியும், திருதகர்மனும், சேனானியும், உக்ரசேனனும், துஷ்பராஜயனும், திருதசந்தனும், சுவர்ச்சஸும், நாகதத்தனும், சுலோசனனும், உபசித்ரனும், சித்ரனும், குந்ததாரனும், சோமகீர்த்தியும், தனுர்த்தரனும், பீமபலனும் இறங்கி வந்தனர். ஒருவரே மீண்டும் மீண்டும் வருவதுபோல் விழிச்சலிப்பு ஏற்பட லட்சுமணன் நோக்கு விலக்கிக்கொண்டான்.

அவர்கள் வந்து நின்றதும் குண்டாசி “இறந்தவர்களின் தந்தையர் மட்டும் நிரையாக வந்து தனியாக நிற்கவேண்டும். ஒருவர் சிதையேற்றினால் போதும்” என்றான். அருகே நின்றிருந்த அந்தணர் ஏதோ சொல்ல தலையசைத்து “ஆம், ஒரு கொள்ளியை அனைவரும் கைமாற்றி இறுதியில் ஒருவர் சிதையில் வைக்கலாம்…” என்றான். கௌரவர்களில் பன்னிருவர் உடல்களில் கட்டுகள் போட்டிருந்தனர். துஷ்பராஜயனும், திருதசந்தனும் தடி ஊன்றி காலை நீட்டி வைத்து நடந்தார்கள். அவர்களின் முகங்கள் இருண்டு ஆழ்நிழல் போலிருந்தன. “விரைவு… சடங்குகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. வாய்க்கரிசியிட்டு, நீரூற்றி, மலர்பொழிந்து சிதையேற்றுவதே எஞ்சியுள்ளது” என்றான் குண்டாசி.

இறந்தவர்களின் உடல்கள் நிரையாக கொண்டுவரப்பட்டன. இறந்த மைந்தனின் தந்தை மட்டும் முன்னால் சென்று அரிசியை அள்ளி மும்முறை வாய்க்கரிசி இட்டு, நீர் தெளித்து வணங்கினான். மலரிட்டு தலைதாழ்த்தியபோது அவன் விம்மியழ அவன் துணைவர் இருவர் விழிநீர் வழிய தூக்கி அகற்றினர். சடங்குகள் முடிந்ததும் சடலங்கள் சிதைமேல் பரப்பப்பட்டன. இருபது சடலங்கள் பரப்பப்பட்டதும் அரக்கும் மெழுகும் கலந்து இறுக்கப்பட்ட பலகைகள் அவர்களுக்குமேல் அடுக்கப்பட்டு மென்விறகு செறிவாக பரப்பப்பட்டது. அதன்மேல் மீண்டும் இருபதுபேர். நான்கு அடுக்குகளாக அவர்களின் உடல்கள் அடுக்கப்பட்டபின் மேலே மீண்டும் மெழுகரக்குப் பலகைகளும் விறகும் குவிக்கப்பட்டன. அவர்கள் விழிகளிலிருந்து மறைந்ததுமே லட்சுமணன் ஒரு விடுதலையுணர்வை அடைந்தான். ஆனால் கௌரவத் தந்தையரிடமிருந்து விம்மலோசைகளும் அடக்கப்பட்ட அழுகைகளும் எழுந்தன.

தீப்பந்தம் கௌரவர் கைகளுக்கு அளிக்கப்பட்டது. பீமவேகன் அதை வாங்கத் தயங்கி பின்னடைந்தான். துஷ்பராஜயனும் பின்னடைய குண்டாசி “எவரேனும் வாங்குக… பொழுதாகிறது!” என்றான். உபசித்ரன் அதை வாங்கிக்கொண்டான். அவனிடமிருந்து சித்ரன் பெற்றுக்கொள்ள கைகள் வழியாகச் சென்ற தழல் மகாதரனை அடைந்தது. “தழல் மூட்டுக, மூத்தவரே!” என்றான் குண்டாசி. மகாதரன் தன் பெரிய வயிற்றுடன் மெல்ல கால்வைத்து நடந்தான். இருமுறை நின்றபோது “செல்க!” என்றான் குண்டாசி. சிதையருகே சென்று அவன் நின்று விம்மியழுதான். நிஷங்கியும் சுஷேணனும் அருகே சென்று அவன் தோள்களை பற்றிக்கொண்டார்கள். அவன் விழப்போகிறவன்போல காலை நீட்டி வைத்து நடந்தான். சிதையருகே சென்றதும் எதிர்பாரா விசையுடன் பந்தத்தை வீசி எறிந்தான். சிதையின் அரக்கும் நெய்யும் கலந்த ஈரம் நீலநிறமாக பற்றிக்கொண்டது. நூறாயிரம் நாக்குகள் என நீண்டு எழுந்த தழலால் சிதை கவ்வப்பட்டது. வெடித்து நீலத்தழல் துப்பி நின்றெரியலாயிற்று.

குண்டாசி “திரும்பிச்செல்லலாம். இது களமென்பதனால் இனி நீராட்டு முதலிய சடங்குகள் ஏதுமில்லை” என்றான். பின்னர் “சாவு தொடர்ந்து வந்துவிடக்கூடும் என அஞ்சவேண்டியதில்லை. அது எப்போதும் உடனுள்ளது” என்று சொல்லி புன்னகைத்தான். ஒடுங்கிய முகமும் துறித்த விழிகளும் எழுந்த பற்களுமாக அச்சிரிப்பு அச்சுறுத்தியது. மகாதரன் ஏதோ சொல்ல வாயெடுக்க சித்ரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். கௌரவர்கள் கால்களை தள்ளித் தள்ளி வைத்து தேர்களை நோக்கி நடந்தார்கள்.

சடங்குகளை முடித்து தம்பியருடன் திரும்பி பாடிவீட்டுக்குச் செல்கையில் லட்சுமணன் எதையும் உணரவில்லை. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று மட்டுமே அகம் தவித்தது. முற்றத்தில் சென்றமர்ந்து கைகளை கழுவிக்கொண்டதும் கள்ளும் ஊனுணவும் கொண்டு வரப்பட்டது. உணவை கையிலெடுத்த கணம்தான் உடலுக்குள்ளிருந்தென ஓர் அலை வந்து அவன் நெஞ்சை அறைந்தது. தம்பியர் அனைவரும் உணவு அருந்தியாயிற்றா என்னும் சொல்லன்றி நினைவறிந்த நாள் முதல் அவன் ஒருபோதும் உண்டதில்லை. பற்கள் உரசிக்கொள்ளும் ஓசை தலைக்குள் வெடித்தது. அவன் அதிர்வதை நோக்கி “என்ன? என்ன, மூத்தவரே?” என்றான் துருமசேனன். ஒன்றுமில்லை என அவன் தலையசைத்தான். உடல் உலுக்கிக்கொண்டே இருந்தது. ஊன் துண்டை மீண்டும் தாலத்தில் வைத்துவிட்டு எழுந்து சென்றான்.

துருமசேனன் “மூத்தவரே!” என்றான். அவனை கையை காட்டி விலக்கிவிட்டு லட்சுமணன் நடக்க துருமசேனன் பின்னால் வந்து “உணவுண்ணாவிட்டால் நாளை களைத்திருப்பீர்கள். உண்க, மூத்தவரே!” என்றான். “இல்லை, என்னால் உண்ண இயலாது” என்றான் லட்சுமணன். “மூத்தவரே!” என்று அவன் மீண்டும் கூற “என்னை தனிமையில் விடு” என்றான். துருமசேனன் பேசாமல் நின்றான். லட்சுமணன் விண்மீன்களை பார்த்தபடி சாலமரத்தடியில் சரிவான பீடத்தில் சென்று அமர்ந்தான். விண்மீன்களின் பொருளின்மை அவனை திகைக்க வைத்தது. உளம் பதைத்து அதிலிருந்து விலகிக்கொள்ள முயன்றான். ஆனால் பிறிதொரு விசை விழிகளை அதிலிருந்து விலக்கவும் விடவில்லை.

நெடுநேரம் கழித்து பெருமூச்சொன்று எழ உளம் கலைந்தபோது அருகே துருமசேனன் நின்றுகொண்டிருந்ததை கண்டான். “நீ துயிலவில்லையா?” என்றான். “இல்லை” என்று அவன் சொன்னான். “இளையவர்கள் துயின்றுவிட்டார்களா?” என்றான் லட்சுமணன். “அனைவருக்கும் இருமடங்கு அகிபீனா அளிக்கும்படி ஆணையிட்டேன். பெரும்பாலானவர்கள் துயின்றுவிட்டார்கள்” என்றான் துருமசேனன். “நீ சென்று துயில்கொள்” என்று லட்சுமணன் சொன்னான். “இல்லை, மூத்தவரே” என்று துருமசேனன் சொன்னான். “நீ உணவுண்டாயா?” என்று லட்சுமணன் கேட்டான். அவன் மறுமொழி சொல்லவில்லை. பெருமூச்சுடன் “சரி, உணவை கொண்டுவா. நாமிருவரும் இணைந்து உண்போம்” என்றான் லட்சுமணன்.

தலைவணங்கியபின் துருமசேனன் சென்று தாலத்தில் ஊன் துண்டுகளை கொண்டுவந்தான். ஒரு துண்டை எடுத்தபின் இன்னொன்றை எடுத்து அவனுக்கு அளித்தான் லட்சுமணன். ஆனால் துருமசேனன் அதை கையிலேயே வைத்திருந்தான். அவன் கடித்து உண்ணத்தொடங்கிய பின்னரே உண்டான். உண்டு முடித்து கைகளைக் கழுவியதும் லட்சுமணன் “எனக்கும் அகிபீனா வேண்டும். இரண்டு உருளை” என்றான். “மூன்று வைத்திருக்கிறேன்” என்றான் துருமசேனன். “ஆம்” என்றபின் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். கையிலிட்டு உருட்டிக்கொண்டே இருந்தான். அதிலிருப்பது என்ன? அது ஒரு சிறு ஊற்று. அது ஊறி ஊறிப் பெருகி பெருவெள்ளமாகி அனைத்தையும் மூடிவிடுகிறது. முழுமையாக தன்னுள் அமைத்துக்கொண்டு மெல்ல அலைகொண்டு முடிவிலாது பெருகி நிற்கிறது.

மூன்று உருண்டைகளையுமே வாயிலிட்டு கரைந்துவந்த சாற்றை விழுங்கிக்கொண்டு விண்மீன்களை பார்த்துக்கொண்டு லட்சுமணன் படுத்திருந்தான். சற்று நேரத்தில் துருமசேனனின் குறட்டையொலி கேட்கத் தொடங்கியது. விண்மீன்கள் சிலந்திகள் வலையில் இறங்குவதுபோல நீண்ட ஒளிச்சரடொன்றில் தொங்கி கீழிறங்கி வந்தன. மிக அருகே வந்து அவனைச் சுற்றி ஒளிரும் வண்டுகள்போல் பறந்தன. பறக்கும் விண்மீன்களின் சிறகோசையை அவன் கேட்டான். அந்த ரீங்காரம் யாழ்குடத்திற்குள் கார்வை என அவன் தலைக்குள் நிறைந்தது. புலரிக்கு முன் அவன் விழித்துக்கொண்டபோதும் அது எஞ்சியிருந்தது.

லட்சுமணன் படைகளை நோக்கியபடி நின்றான். அவனால் நடக்கமுடியவில்லை. “நம் இளையோர் எங்கிருக்கிறார்கள்?” என்றான். “அவர்கள் எட்டு படைப்பிரிவுகளிலாக இணைந்து பணியாற்றுகிறார்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். “இப்போது கிளம்பினால் எட்டு படைப்பிரிவுகளிலும் சென்று அவர்களை நாம் பார்த்துவர முடியுமா?” என்றான் லட்சுமணன். துருமசேனன் அவனைப் பார்த்து ஒருகணம் தயங்கி “ஆம், சற்று விரைந்து சென்றால் இயலும்… ஆனால்” என்றான். “சொல்” என்றான் லட்சுமணன். “அது அமங்கலப்பொருள் அளிக்கக்கூடும்” என்றான். லட்சுமணன் “ஆம், ஆனால் அது கைநெல்லி என துலங்கும் உண்மை. அவர்களை நோக்காதொழிந்தால்…” என்றபின் “நேற்று சென்றவர்கள் என் கனவில் வந்தனர். பலரை நான் அருகணைந்து ஒரு சொல் உரைத்தே பல ஆண்டுகளாகின்றன என்று உணர்ந்தேன்” என்றான். துருமசேனன் “அழைத்துவரச் சொல்கிறேன்” என தலைவணங்கினான்.

bowலட்சுமணன் காவல்மாடத்தருகே புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அதன் கணுமூங்கில் வழியாக மேலேறிச் சென்றான். அங்கிருந்த ஒரு காவலன் இறங்கி அவனுக்கு இடமளித்தான். புதிய முரசின் சிவந்த தோலில் கழி விழுந்த தடம் நிறமாற்றமாக தெரிந்தது. லட்சுமணன் தன்னை நோக்கி தலைவணங்கிய காவலனிடம் “மறுபால் படைகள் எழுந்துள்ளனவா?” என்றான். “ஆம் இளவரசே, இன்று அவர்கள் மேலும் ஊக்கம் கொண்டுள்ளனர்” என்றான்.

அவன் மேலே சொல்லும்பொருட்டு லட்சுமணன் காத்து நின்றான். “அங்கே பீமசேனரின் மைந்தர் கடோத்கஜன் வந்துள்ளார். பேருருவ அரக்கர்” என்றான் காவலன். “நம்மவரும் அச்செய்தியை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அது அனைவரையும் அஞ்சவைத்திருப்பதையும் காணமுடிகிறது. இன்று களத்தில் பெரும் கொலைவெறியாட்டு நிகழுமெனத் தோன்றுகிறது.”

லட்சுமணன் தலையாட்டியபின் பாண்டவப் படைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அங்கே வாழ்த்தொலிகளும் வெறிக்கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. போர்க்களத்தின் இயல்பான உளநிலை சோர்வே என்று அவனுக்கு தோன்றியது. அதை அவர்கள் வெவ்வேறு நிமித்தங்களால் ஊக்கமென மாற்றிக்கொள்கிறார்கள். மிகையாக்கி களியாடுகிறார்கள். சிரித்துக்கொண்டே சாவுக்குச் செல்வதே மேலும் எளிதானது.

துருமசேனன் வருவதை அவன் ஓரவிழியில் அசைவாகக் கண்டு திரும்பி நோக்கினான். முன்னால் துருமசேனனின் புரவி பலகைப்பாதையில் பெருநடையில் வந்தது. தொடர்ந்து அவன் தம்பியர் நிரை வந்தது. கருமணி மாலை ஒன்று நீண்டுகொண்டே இருப்பதுபோல. ஒருவரே மீளமீள வருவதைப்போல. அவர்களின் முகங்களும் தோற்றங்களும் வெவ்வேறு என்பதை விழிநிலைத்தால் காணமுடியும். ஆனால் அவர்களை ஒற்றைத்திரளெனக் காணவே உள்ளம் விழையும். அவ்வாறு ஒன்றென அவர்களைத் திரட்டும் ஏதோ ஒன்று அவர்களிடமிருந்தது.

லட்சுமணன் மேலிருந்து கீழிறங்கினான். அவன் நிலத்தை அடைந்தபோது புரவியில் அணுகி வந்த துருமசேனன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி இறங்கி தலைவணங்கினான். பிறர் ஒவ்வொருவராக இறங்கினர். அவர்கள் ஆயிரத்தவராக இருந்தமையாலேயே அந்தத் திரள்தன்மை அவர்களுக்கு உருவாகிறது என லட்சுமணன் எண்ணினான். கலைந்துபரவும் கட்டின்மையை அவர்கள் எப்போதும் கொண்டிருந்தாலும் அது புகை என, நீர்ப்பாசி என தனக்குரிய ஒரு வடிவையும் கொண்டிருந்தது. அவர்களில் எவரும் தொலைந்து தனித்துச் செல்வதில்லை. அதை எண்ணியதுமே அவன் குண்டாசியின் இரு மைந்தரை நினைவுகூர்ந்தான். அவர்கள் எப்போதும் தனியர். அவர்கள் அத்திரளில் இருக்கிறார்களா என்று அவன் பார்த்தான். இல்லை என்று கண்டதும் அவன் தலையசைத்து ஆம் என எண்ணிக்கொண்டான்.

துருமசேனன் “நாங்கள் எங்களுக்கென ஒரு முரசொலியை உருவாக்கிக்கொண்டோம், மூத்தவரே. அதை எழுப்பினால் எளிதில் இணைந்துகொள்ள இயல்கிறது” என்றான். விப்ரசித்தியும் நமுசியும் நிசந்திரனும் குபடனும் அகடனும் சரபனும் வந்து அவன் அருகே நின்றார்கள். அஸ்வபதியும் அஜகனும் சடனும் சவிஷ்டனும் தீர்க்கஜிஹ்வனும் மிருதபனும் நரகனும் அவர்களுக்குப் பின்னால் நின்றனர். லட்சுமணன் அவ்வாறு அவர்களை வரச்சொன்னதை எண்ணி கூச்சமடைந்தான். அதில் மங்கலமின்மை இருந்தது. அதை அகம் உணர்ந்தது.

“நான் உங்களைப் பார்த்து சிலநாட்களாகின்றது. நலமாக இருக்கிறீர்களா என்று அறிய விழைந்தேன்” என்றான் லட்சுமணன். அவன் உள்ளத்தை அச்சொற்களிலிருந்தே உணர்ந்த துருமசேனன் “நாம் உடன்பிறந்தார் போரில் நமக்கென படைச்சூழ்ச்சிகள் சிலவற்றை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை சொல்ல மூத்தவர் விழைகிறார்” என்றான். ஆனால் பின்னால் நின்றிருந்த அஸ்வசங்கு “நானும் மூத்தவர் எங்களை சந்திப்பது நன்று என்று எண்ணினேன். ஏனென்றால் நேற்று மட்டும் எண்பத்துமூன்றுபேர் இறந்துள்ளனர். முதல்நாள் போரில் பன்னிருவர். அறுவர் புண்பட்டுக் கிடக்கின்றனர். இப்போது ஆயிரத்தவரில் நூற்றுவர் குறைகிறோம்…” என்றான். அவனை துருமசேனன் தடுப்பதற்குள் அவனருகே நின்றிருந்த கேசி “இன்றும் நூற்றுவருக்குக் குறையாமல் இறப்போம். எங்களை முழுமையாக மூத்தவர் பார்ப்பது நன்று என தோன்றியது” என்றான்.

துருமசேனன் அலுப்புடன் தலையசைத்தான். லட்சுமணன் அப்பேச்சை நேரடியாக எதிர்கொள்வதே நன்று என உணர்ந்து “ஆம், நாம் எஞ்சியோர் இன்றே சந்தித்துக்கொள்வதே நன்று. இப்போரில் நான் விழுந்தால் உங்கள் முகங்கள் நினைவில் எஞ்ச விண்புகுவேன்” என்றான். “இங்கிருந்தாலும் மேலுலகில் இருந்தாலும் ஒன்றென்றே இருப்போம், இளையோரே.” அதை சொன்னதும் அவன் தொண்டை இடறியது. அந்த உணர்வெழுச்சியை அவனே நாணி தலையை குனித்துக்கொண்டான். கைகளால் விழிகளை துடைக்க முயன்று அசைவு நிகழ்வதற்குள்ளே உள்ளத்தால் அடக்கினான்.

துருமசேனன் அந்த இடைவெளியை நிறைக்கும்பொருட்டு “மூத்தவரை வணங்குக!” என்று இளையோரிடம் சொன்னான். அவர்கள் ஒவ்வொருவராக வந்து லட்சுமணனை வணங்கினர். அவன் அவர்களை நெஞ்சோடு அணைத்து வாழ்த்துரைத்தான். அணைக்க அணைக்க தம்பியர் பெருகுவதுபோல் உணர்ந்தான். இறந்தவரும் இவர்களுக்குள் இருப்பார்கள்போலும் என்று எண்ணி மெய்ப்புகொண்டான். ஆயிரத்தவர். கார்த்தவீரியனின் ஆயிரம் தம்பியர். அவன் கண்களில் இருந்து நீர் வழியத்தொடங்கியது. இளையோரும் விழிசொரிந்தனர். பின்னர் அடக்கவேண்டியதில்லை என்றாக அவர்கள் விம்மலோசை எழ அழுதனர். அழுகை ஏதோ இடத்தில் நின்றுவிட சிரித்தனர்.

“மூத்தவரே, அவனை இருமுறை வாழ்த்திவிட்டீர்கள்” என்றான் சம்பிரமன். “சிலர் கூட்டத்தில் புகுந்து மீண்டும் மீண்டும் வாழ்த்து பெறுகிறார்கள். இப்படி போனால் அந்திவரை இந்த வாழ்த்துரை தொடரக்கூடும்.” லட்சுமணன் வாய்விட்டு நகைத்து “வாழ்த்து பெற்றவர்களெல்லாம் அப்பால் செல்க!” என்றான். “வாழ்த்து பெற்றவர்களின் முகத்தில் ஏதேனும் அடையாளம் வைக்கலாம்” என்றான் சத்ருதபனன். “முகத்திலா? ஓங்கி அறையலாம். சிவந்த தடம் எஞ்சும்” என்றான் துருமசேனன். சிரித்துக்கொண்டே அவர்கள் வணங்க அவர்களின் தோள்களில் அறைந்தும் முதுகைத் தட்டியும் லட்சுமணன் தழுவிக்கொண்டான்.

“மூத்தவரே, நேற்று சிறிய தந்தை பீமசேனரின் போராடலை கண்டேன். எனக்கு மெய்ப்பு எழுந்தது. போர்த்தெய்வம் எழுந்தது போலிருந்தார்” என்றான் கிரதன். தரதன் “அவருடைய கைகளையும் கால்களையும் பெருங்காற்றுகள் எடுத்துக்கொண்டன என்று சூதர் பாடினர். அவர் காற்றின் மேலேயே ஊர்வதை பலமுறை கண்டேன்” என்றான். “அவர் கையால் சாவதென்பதே நற்பேறு. நம்குடியின் மாவீரர் அவர். ஒருமுறையேனும் அவருடன் கதைபொருதி களத்தில் வீழ்ந்தால் நான் பிறந்தது ஈடேறும்” என்றான் குகரன். ”ஆம், அவருடைய தோள்தசைகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். கதை அவரைச் சூழ்ந்து பறக்கும் மெல்லிய இறகு போலிருந்தது” என்றான் ஆஷாடன்.

லட்சுமணன் முதலில் சற்று திகைப்படைந்தான். ஆனால் அவர்களின் முகங்களை பார்க்கையில் அவன் உள்ளம் மலர்ந்தது. “ஆம், போர்க்கலைகளில் கதைப்பயிற்சியே உச்சமென நேற்று நானும் எண்ணினேன்” என்றான். துருமசேனன் அச்சொல்லால் ஊக்கம் பெற்று “நான் அவருடன் இருமுறை கதைபொருதினேன். என் கதையை தட்டித்தெறிக்கச் செய்தார். யானைக்குப் பின் சென்று உயிர் தப்பினேன். பின்னர் எண்ணினேன், பெருங்காற்றுகளின் மைந்தனுடன் நின்று பொருதி மீண்டிருக்கிறேன். நானும் கதைத்திறலோன் என்று ஆனேன் என்று…” என்றான்.

“இளமையில் அவருடைய தோளில் தொற்றி களிநீராடியிருக்கிறோம், மூத்தவரே. அதைப்போல ஒரு விளையாட்டுதான் இது என்று எனக்கு பட்டது” என்றான் உத்வகன். லட்சுமணன் “ஆம், இது வெறும் விளையாட்டு. நாம் எஞ்சுவோம். அழியாது வாழும் ஓர் இடத்திலிருந்து இவை அனைத்தையும் எண்ணி எண்ணி மகிழ்வோம்” என்றான். துருமசேனன் “பொழுதணைகிறது, மூத்தவரே” என்றான். அவர்கள் தனி முகங்களை இழந்து மீண்டும் திரளென்றாகி தங்கள் புரவிகளை நோக்கி சென்றார்கள்.

முந்தைய கட்டுரைபாலுணர்வை அறிதலும் எழுதுதலும்
அடுத்த கட்டுரைநூறுநிலங்கள் -கடிதங்கள்