‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16

bowஅசங்கன் மூச்சுவாங்க விரைந்தோடிச் சென்று அரக்கர்நிரைமுன் வந்தவன் அருகே சிற்றுருவாக நின்று தலைவணங்கி “வணங்குகிறேன் மூத்தவரே, தாங்கள் இடும்பவனத்தின் அரசர் கடோத்கஜர் என்று எண்ணுகிறேன். நான் ரிஷபவனத்தின் சாத்யகரின் சிறுமைந்தனும் யுயுதானரின் முதல் மைந்தனுமான அசங்கன்” என்றான். கடோத்கஜன் முழு உடலாலும் புன்னகை புரிந்தான். கரிய உதடுகள் அகல பெரிய பற்கள் பளிங்குப் படிக்கட்டுகள்போல விரிந்தன. “நான் இடும்பவனத்தின் காகரின் சிறுமைந்தனும் பாண்டவர் பீமசேனரின் மைந்தனுமாகிய கடோத்கஜன்” என்று சொல்லி வணங்கி அவன் தோளில் கைவைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் செய்திகளை குறைவாகவே கேட்டிருக்கிறேன். உங்கள் தந்தையின் பெயர் எப்போதோ செவியில் ஒலித்திருக்கிறது. அவர் இளைய யாதவரின் படைத்தலைவர் அல்லவா?” என்றான்.

அசங்கன் கடோத்கஜனின் கைகளை பற்றிக்கொண்டு “என்னை இளையோனே என்று அழையுங்கள். உங்களுக்கு அணுக்கமாக இருப்பது என் பேறு. இங்கு அரண்மனைகள் அனைத்திலுமே உங்களைப்பற்றிய கதைகள் எப்போதும் பேசப்படுகின்றன. உங்கள் தந்தையிடம் எதிர்நின்று பொருதவும் வெல்லவும் வாய்ப்புள்ள ஒரே மானுடர் நீங்களே என அறிந்திருக்கிறேன். நான் சிறுவனாக இருக்கையிலேயே உங்களை கதைகளினூடாக நன்கறிவேன். ஒருவேளை நீங்களே அறிந்திராத உங்கள் வீரச்செயல்கள்” என்று சிரித்த அசங்கன் “என்னால் காலூன்றி நிற்கவே முடியவில்லை. என் உடன்பிறந்தார் உங்களை பார்க்கவேண்டும். என் இளையோன் சினி தங்களை பார்த்தால் அருகிலிருந்து விலகமாட்டான். இப்புவியிலேயே அவனுக்கு மிக உகந்த வீரர் தாங்கள்தான்” என்றான்.

கடோத்கஜன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து வெடிப்பொலி எழுப்பி முழவோசையுடன் நகைத்தான். உடலை அலைக்கழித்து துள்ளியமைவதுபோல கால்களை மடித்து நீட்டி சிரித்தபடி அருகே நின்ற அவனளவே பேருருக்கொண்ட துணைவனிடம் “சகுண்டரே, கேட்டீர்களா? நமது வீரச்செயல்கள்!” என்றான். அவன் “ஆம்!” என தலையைச் சுழற்றி சிரித்தான். கடோத்கஜன் அசங்கனை இழுத்து தன் நெஞ்சோடணைத்துக்கொண்டான். பெரிய கைகள் இரு கரிய காட்டாறுகள்போல அவனை வளைத்தன. இறுக்கத்தில் அவனுக்கு மூச்சுத்திணறியது. அவன் உடலில் கரடிகளுக்குரிய புழுதிமணமும் வியர்வைநாற்றமும் கலந்த வீச்சம் இருந்தது. கடோத்கஜனின் உடலில் எங்கும் மயிரே இல்லை என்று முகம் அவன் மார்பில் அழுந்திய போதுதான் அசங்கன் உணர்ந்தான். ஆகவே அவன் உடலின் ஒவ்வொரு நரம்பும் எலும்பும் தசையும் நன்றாகத் தெளிய அவன் கருங்கல்லில் செதுக்கப்பட்டவன்போல தெரிந்தான்.

“உன்னை சந்தித்ததில் மகிழ்வு, இளையோனே. உன் தந்தைக்கு என் வணக்கங்கள். எங்கள் காடுவரை இப்போர் நிகழும் செய்தி வந்து சேர மிகவும் பிந்திவிட்டது. அறிந்த அக்கணமே கிளம்பிவிட்டோம். போதிய படைப்புறப்பாடு எதுவும் செய்துகொள்ளவில்லை. ஆகவே எங்களிடம் குறைவாகவே படைக்கலங்கள் உள்ளன” என்றான். அசங்கன் “இங்கு படைக்கலங்களுக்கு குறைவே இல்லை. மானுடர் மீண்டு வருவதில்லை, படைக்கலங்கள் அனலாடி மீண்டு வந்தபடியே இருக்கின்றன” என்றான். “அரசர் இருக்குமிடமே இந்திரப்பிரஸ்தம். பாண்டவர்களின் நகரிக்கு தங்கள் வரவு சிறப்புறுக!” என்றான்.

பின்னர் நினைவுகூர்ந்து “இங்கு நில்லுங்கள்… ஒருகணம் இங்கு நில்லுங்கள்” என்று சொல்லி திரும்பி ஓடினான். காவல்மேடையை அவன் அடைவதற்குள் எதிரே சுவீரர் புருவங்கள் சுளிக்க கடோத்கஜனை உறுத்துப் பார்த்தபடி வேலை ஊன்றி விரைந்து வந்தார். “யாரவர்? எங்கிருந்து வருகிறார்கள்?” என்றார். அசங்கன் “சுவீரரே, இது என் ஆணை. வருபவர் என் மூத்தவர், பீமசேனரின் மைந்தர் இடும்பவனத்தின் கடோத்கஜன். அரசமுறைப்படி முரசுகள் முழங்கட்டும். கொம்போசையும் சங்கொலியும் எழ வாழ்த்துக்குரல்கள் சூழ அவரை நாம் வரவேற்கவேண்டும்” என்றான். சுவீரர் மேலும் கண்கள் இடுங்க “அதற்கான முறையான ஆணையில்லை. ஏனெனில்…” என்று சொல்ல “இது என் ஆணை” என்றான் அசங்கன்.

சுவீரர் உளநிகர் அடைந்து “இளவரசே, அவர்கள் அரக்ககுலத்தோர். அவர்களின் நோக்கமென்ன என்று இன்னமும் நமக்கு தெளியவில்லை. அவர்களை நம் படை ஏற்றுக்கொள்ளப்போகிறதா என்பதும் முடிவாகவில்லை. அம்முடிவுகளை படைசூழ்வோர்தான் எடுக்கமுடியும். அதற்குள் அரசமுறைப்படி வரவேற்பளிப்பதற்கு வழியில்லை. காவலர்களான நாம் முடிவெடுத்து முந்தலாகாது” என்றார். அசங்கன் “நான் முடிவெடுத்துவிட்டேன்” என்றான். அவன் குரல் மாறுபடுவதைக் கண்டு சுவீரர் ஏறிட்டுப் பார்த்தார். “ரிஷபவனத்து யாதவன் என்ற வகையிலும் பாஞ்சால அரசமகளை மணந்தவன் எனும் வகையிலும் உங்கள் படைப்பிரிவுகள் அனைத்திற்கும்மேல் சொல்லாட்சி கொண்டவன் நான். இது என் ஆணை” என்றான் அசங்கன்.

“இதை அரசுசூழ்தல் முறைகளால் முடிவெடுக்கவில்லை, குருதியால் முடிவெடுத்திருக்கிறேன். இப்பாண்டவ குலத்தின் முதல் மைந்தர் அவரே. முரசும் கொம்பும் வாழ்த்தொலிகளும் இன்றி அவர் எதிர்கொள்ளப்படலாகாது. என் ஆணை மீறப்படுமெனில் அரசமகன் அனைவரையும் தலைவெட்டி குவிக்க ஆணையிடுவேன். அன்றி உயிர்துறப்பேன்” என்றான். கைகளை நீட்டி “அரசே…” என்றார் சுவீரர். அசங்கன் “ம்ம்” என்று உறுமினான். “ஆணை” என்று சுவீரர் தலைவணங்கி பின்னால் திரும்பிச்சென்று இரு கைகளையும் விரித்து காவல்மாடத்திலிருந்து அவரை பார்த்துக்கொண்டிருந்த வீரர்களிடம் செய்கையால் பேசினார்.

காவல்மாடத்தில் நின்றவர்களும் முதலில் திகைப்பதை அவர்கள் அமைதியிலிருந்து உணரமுடிந்தது. பின்னர் ஒரு காவல்மாடத்திலிருந்து பெருமுரசு அரசகுடியினரை வரவேற்பதற்குரிய களிற்றுநடைத் தாளத்தை எழுப்பத் தொடங்கியது. மும்முறை மும்முறையென கொம்புகள் ஒலித்து “அரச மைந்தருக்கு நல்வரவு! பாண்டவ மைந்தருக்கு வாழ்த்து!” என்று முழங்கின. சங்குகளும் மணிகளும் இணைந்துகொள்ள பலநூறு தொண்டைகளிலிருந்து “கடோத்கஜர் வாழ்க! குருகுல மைந்தர் வாழ்க! பாண்டவ மைந்தர் வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன.

அசங்கன் மீண்டும் கடோத்கஜனை நோக்கி சென்றான். “வருக, மூத்தவரே! தங்களை முறைப்படி வரவேற்கவேண்டும் என்பதற்காகத்தான் ஆணையிடும்பொருட்டு சென்றேன்” என்றான். கடோத்கஜன் சூழ ஒலித்த முரசொலிகளை திரும்பிப்பார்த்த பின் “இவை போர்முரசுகளா என்ன?” என்றான். “இல்லை, தங்களை வரவேற்கும் பொருட்டு ஒலிப்பவை” என்றான் அசங்கன். “எங்கள் ஊர்களில் தோட்டங்களிலோ இல்லத்தொகைகளுக்குள்ளோ யானை புகுந்துவிட்டால் இவ்வண்ணம் முழவோசை எழுப்புவார்கள்” என்றான் கடோத்கஜன். அவனுக்குப் பின்னால் நின்ற பிறிதொரு கரியவன் வெடித்து நகைத்தான். “இவன் உத்துங்கன், என் அணுக்கன்” என்றான் கடோத்கஜன்.

அசங்கன் “தங்களைப்போன்றே இருக்கிறார்” என்றபின் கடோத்கஜனின் படைவீரர்களைப் பார்த்து “அனைவருமே தங்களைப்போல பேருருவர். அனைவருமே தங்களைப்போல அள்ளிப் பற்றும் கால்களை கொண்டிருக்கிறார்கள்” என்றான். “நாங்கள் அங்கு மரங்களின் மேலே பிறந்து வாழ்கிறோம். நிலத்தில் நடப்பதே எங்களுக்கு கடினமானது” என்று உத்துங்கன் சொன்னான். “ஆம், நீங்கள் நடப்பதை முதலில் நோக்கியபோதே விந்தையை உணர்ந்தேன். உங்கள் கால்கள் கைகளைவிட மிகச் சிறியவை. பக்கவாட்டில் வளைந்தும் உள்ளன” என்றான் அசங்கன். “குரங்குகளின் கால்கள்போல” என்று சொன்ன சகுண்டன் “எங்கள் தெய்வங்கள் குரங்குவடிவம் கொண்டவை” என்றான்.

எதிரில் சுவீரர் வரவேற்பாளர்நிரை ஒன்றை இட்டுவந்தார். இருப்பவர்களைக்கொண்டு அதை அமைத்திருந்தார். ஏழு படைவீரர்கள் உணவுண்ணும் மரத்தாலத்தில் மண், நீர், அன்னம், கத்தி, குருதி என்னும் ஐந்து படைமங்கலங்களை ஏந்தி வந்தனர். கடோத்கஜன் திகைப்புடன் “என்ன கொண்டுவருகிறார்கள்?” என்றான். “ஐந்து மங்கலங்கள், இவை வரவேற்புக்குரிய சடங்கு” என்றான் அசங்கன். “அவற்றில் ஒன்றில் நீர் இருக்கிறது. அதை என்ன செய்யவேண்டும், அருந்தவேண்டுமா?” என்றான். “அல்ல, அவற்றை நோக்கி கைகூப்பிவிட்டு கடந்து சென்றால் போதும்” என்றான் அசங்கன். “வெறுமனே கைகூப்புவதற்கு இத்தனை பொருட்களா?” என்றான் கடோத்கஜன்.

“அன்னமும் உள்ளது” என்றான் உத்துங்கன். சகுண்டன் “அரசே, நாம் மௌரியர் நகருக்குச் செல்கையில் இதேபோல ஐந்து மங்கலங்களை தாலங்களில் கொண்டுவந்தார்கள்” என்றான். “ஆம், ஆனால் அவை வேறுபொருட்கள்” என்றான் கடோத்கஜன். “அவை நகர்மங்கலங்கள். இது களம். இங்கே சில பொருட்களுக்கு ஒப்புதல் இல்லை” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அறிவேன்” என்றபின் பெரிய தலையை சற்றே குனித்து பற்கள் வெளிவர முகம் சுளித்து நோக்கி “நிரையாக வருகிறார்கள்” என மகிழ்ந்தான். “ஆனால் பெண்டிரைப்போல தாலமேந்தி வருகிறார்கள்” என்றான் உத்துங்கன்.

“நாம் உள்ளே செல்கையில் இனியவற்றின் மேல் நம் விழி படவேண்டுமென்பதற்காக” என்றான் அசங்கன். “ஆம், அவை இனியவை” என்ற உத்துங்கன் அதிலிருந்து தன் முகத்தில் வீசிய ஒளிக்கற்றைக்காக தலை திருப்பி “ஆடி வைக்கப்பட்டுள்ளது” என்றான். “அது ஆடி அல்ல, வாள்” என்றான் அசங்கன். “வாளை எதற்கு வைக்கவேண்டும்?” என்று கடோத்கஜன் கேட்டான். “அது மங்கலப்பொருள்” என்றான் அசங்கன். “குறுவாளா? அது எப்படி மங்கலப்பொருள் ஆகும்?” என்றான் உத்துங்கன். “தீட்டப்பட்ட வாளில் வானம் நிறைந்துள்ளது” என்றான் அசங்கன்.

கடோத்கஜன் புரியாமல் அசங்கனை சிலகணங்கள் பார்த்துவிட்டு “நான் பார்த்ததில்லை” என்றான். “மூத்தவரே, நீர்நிறைந்த ஏரியில் வானம் விரிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்” என்றான் அசங்கன். “ஆம் ஏரியில்!” என்றபின் மேலும் குழம்பி “ஏரியில் நான் நீரைத்தான் பார்த்திருக்கிறேன்!” என்றான் கடோத்கஜன். உத்துங்கன் மேலும் ஆர்வமாக “மீன்களும் உண்டு!” என்றான். அசங்கன் வாய்விட்டு நகைத்தான். உத்துங்கன் “அந்த வாளுக்கு மாற்றாக ஆடியை வைத்திருக்கலாம். அதைவிட அழகான வேறொன்றில்லை. விளையாட உகந்தது” என்றான்.

அசங்கன் சிரித்துக்கொண்டே இருந்தான். “வருக, மூத்தவரே” என்று அவர்களை உள்ளே அழைத்துச்சென்றான். மங்கலத்தால நிரை அவர்களை அணுகி இரு பிரிவாகப் பிரிந்து தலைவணங்கியது. கடோத்கஜன் இருபக்கமும் நோக்கி ஒவ்வொருவருக்கும் தலைவணங்கினான். “இவர்கள் படைவீரர்களா?” என்று கேட்டான். “அல்ல, காவலர்கள்” என்றான் அசங்கன். “ஆம், அவ்வாறுதான் எண்ணினேன். ஏனெனில் இவர்கள் உடலில் புழுதியோ குருதியோ இல்லை” என்ற உத்துங்கன் “காவலர்கள் எதற்கு?” என்று கேட்டான். சுவீரர் “படைகளுக்கான காவல்” என்றார்.

திகைப்புடன் படைகளை நோக்கிய கடோத்கஜன் “படைக்குக் காவலா?” என்றபின் இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு உரக்க நகைத்தான். “முள்வேலிக்கு மூங்கில்வேலியிடுவது போலவா? படைக்கலம் ஏந்திய படைக்கு காவலர்களை நிறுத்துவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்” என்றான். உத்துங்கனும் சகுண்டனும் உடன் சேர மொத்தப் படையும் நகைக்கத் தொடங்கியது. “படைக்கு படை காவல்… எப்படியிருக்கிறது?” என்று உத்துங்கனின் தோளில் அறைந்தான் கடோத்கஜன். உத்துங்கன் கண்ணீர்வர நகைக்க அவர்களை நோக்கி திகைத்து நின்றனர் சுவீரரின் அணியினர். அப்போதுதான் அதிலிருந்த வேடிக்கை புரிய அசங்கனும் நகைத்தான். சிரிப்பை நிறுத்தி கண்ணீரை துடைத்தபடி, நோக்கி வாய்திறந்து நின்ற சுவீரரிடம் “மூத்தோரின் வருகையை அரசருக்கு அறிவிக்க வேண்டும்” என்றான். “ஆம், புறாச்செய்தி சென்றுவிட்டது” என்று சுவீரர் சொன்னார்.

பின்னர் தன்னிலை மீண்டு கடோத்கஜனிடம் “இளவரசே, தங்கள் வருகை எங்களுக்கு நலம் பயக்கட்டும். எங்கள் படைகளுக்கும் குடிகளுக்கும் வெற்றியும் மங்கலமும் அளிக்கட்டும்!” என்றார். “வருக!” என அவனை அவர் இட்டுச்சென்றார். கடோத்கஜன் ஆடியாடி நடந்தபடி “மிகப் பெரிய படை… ஆனால் நான் இன்னும் இதை முழுமையாக பார்க்கவில்லை” என்றான். சகுண்டன் “ஆம், மிகப் பெரிய படை. காடுபோல” என்றான். உத்துங்கன் “எறும்புக்கூடுபோல” என்றான். அந்தச் சொல்லாட்சியால் கவரப்பட்ட கடோத்கஜன் திரும்பி கண்கள் இடுங்க உற்றுநோக்கினான். அவனுக்கு அது சரியாகப் புரியவில்லை. ஆகவே ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டான்.

bowபடைகளினூடாக நடந்து செல்கையில் ஒவ்வொரு காலடிக்கும் கடோத்கஜனும் அவன் படையினரும் தயங்குவது போலிருந்தது. அது புதுப் பொருள்மேல் குரங்குகள் கொள்ளும் கால்தயக்கம் என்று அசங்கனுக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. அவ்வாறு தோன்றியதுமே அவர்கள் அனைவரும் பேருடல் குரங்குகள் போலவே நடப்பதை அவன் கண்டான். அவர்களின் சிறிய கால்கள் உடல் எடையால் வளைய மென்மூங்கில்மேல் என அவர்கள் ததும்பினர். தோள்கள் பேருருக் கொண்டு தசைபுடைப்புகளும் நரம்புவரிகளும் பாறைநிறக் கீற்றுகள் என தேமல்களுமாக திரண்டிருக்க தொடைகள் வற்றியிருந்தன. பின்திரட்சிகளே அவர்களுக்கு இருக்கவில்லை.

கடோத்கஜன் தவிர பிறருக்கு உடலில் மயிர் இருந்தது. உத்துங்கனின் உடலில் காய்ந்த பாறைப்புல்போல செம்மைகலந்த மயிர் புறங்கையிலும் அடர்ந்திருந்தது. தாடி தேன்கூடுபோல் முகவாய்க்கு கீழே தொங்கியது. மீசை மென்மையாக மென்பாசிப்படர்வு போலிருந்தது. ஒவ்வொரு கணமும் மின்னி மின்னி திரும்பி சூழலை நோக்கிகொண்டிருந்தன அவர்களின் சிறிய கண்கள். கடோத்கஜன் “நாங்கள் இவ்வாறு நெடுந்தொலைவு நடந்து செல்வதில்லை” என்றான். அசங்கன் “அங்கிருந்து நடந்துதானே வந்திருப்பீர்கள்?” என்றான். “நீ என்ன நினைத்தாய்? அங்கிருந்து நடந்து வந்திருந்தால் போர் முடிந்த பின்னரே வந்து சேர்ந்திருப்போம். நாங்கள் மரங்களின் மீது பாய்ந்து பறந்து வந்தோம்” என்றான் சகுண்டன்.

“அங்கிருந்து இங்குவரை தொடர்ச்சியாக மரங்கள் இருந்தனவா?” என்றான் அசங்கன். மரங்களில்லாத இடங்களில் கழைகளை கொண்டு நாங்கள் தாவினோம். பாறைகளிலும் இல்லங்களின் மீதும் தாவி வரமுடியும். அரிதாக காட்டு யானைகள் மீதும் தாவுவோம்” என்று சொல்லி உத்துங்கன் சிரித்தான். அவன் உதடுகள் கரிய படகு போலிருந்தன. அத்தனை பெரிய வாயின் நகைப்பு இந்திரப்பிரஸ்தத்தின் இந்திர ஆலயத்தின் கீழ்நிலைகளில் செதுக்கப்பட்டிருந்த பேருருவ நிலப்பூதங்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் விழிகளில் இருந்த மென்மையும் ஓசையிலிருந்த நட்பும் அச்சிரிப்பை உளத்திற்கு மிக அணுக்கமென்றாக்கின.

கடோத்கஜனின் உடலை தொட்டுக்கொண்டிருக்க அசங்கன் விழைந்தான். அவன் கைகளைப் பற்றியபடி “என் இளையோரை தங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும், மூத்தவரே” என்றான். திரும்பி அருகே வந்த சுவீரரிடம் “என் தம்பியர் அனைவரும் உடனடியாக இங்கு வரவேண்டும்” என்று சொன்னான். “ஆணை” என்றார் சுவீரர். “எத்தனை உடன்பிறந்தார் உனக்கு?” என்றான் உத்துங்கன். கடோத்கஜன் அவனை ஒருமையில் அழைக்கத் தொடங்கியதுமே அவனும் அவ்வாறு அழைப்பதை உணர்ந்து அசங்கன் புன்னகைத்தான். “நாங்கள் பதின்மர்” என்றான். “அனைவருமே இங்கிருக்கிறீர்களா? நன்று நன்று!” என்றான் கடோத்கஜன்.

“இங்கே உங்களுக்கு மாபெரும் இளையோர் நிரை உள்ளது, மூத்தவரே. உங்கள் ஐந்து தந்தையரின் குருதி வழிவந்த இளையோர் ஒன்பதின்மர். எந்தையின் மைந்தர்களும் பாஞ்சால இளவரசரின் மைந்தர்களும் உள்ளனர். மேலும் பல இளவரசர்கள் இருக்கின்றனர்.” அவன் பீஷ்மரால் கொல்லப்பட்டவர்களை எண்ணினான். சொல் தணிய தலையை திருப்பிக்கொண்டான். “நான் முன்னரே பலமுறை இங்கு வர எண்ணியிருந்தேன். ஒவ்வொரு முறையும் வருகை தவிர்த்தது என் கால்கள் அளித்த தயக்கத்தால்தான். அஸ்தினபுரியிலும் நாங்கள் நிலத்தில் நடந்தே ஆகவேண்டுமென்றனர் ஒற்றர். நிலத்தில் நடந்து செல்கையில் ஆற்றலற்றவர்களாகவும் கேலிக்குரியவர்களாகவும் தோன்றுகிறோம்” என்றான் கடோத்கஜன்.

அசங்கன் “தங்கள் நடை மாறுபட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் உங்கள் குடியினரின் பெருந்தோள்களைக் கண்டு விழிமலைக்காத ஒரு வீரனைக்கூட இதுவரை பார்க்கவில்லை” என்றான். “நாங்கள் இதுவரை பார்த்த பேருருவர்கள் தங்கள் தந்தையும் கௌரவ மூத்தவரும் பேரரசர் திருதராஷ்டிரரும்தான். அனைவரை விடவும் பெரியவர் மூதரசர் பால்ஹிகர். அவர்களின் தோள்களைவிடவும் பெரியவை தங்களுடையவை. கதை ஏந்தி தாங்கள் களம்புகுந்தால் எதிர்கொள்ள இங்கு எவருமில்லை” என்றான். கடோத்கஜன் சிரித்து கண்களை சிமிட்டியபடி “படைமுகம் நிற்கவே வந்துள்ளேன். எந்தைக்கு துணைநிற்க…” என்றான். “எங்கள் உதவி களத்தில் இருக்கவேண்டும் என பேரன்னை குந்திதேவி முன்னர் சொல்லியிருந்தார்கள். ஆனால் போர் தொடங்கியபோது எங்களுக்கு செய்தி அனுப்பாதொழிந்துவிட்டார்கள்…” அசங்கன் “அது இயல்புதானே?” என்றான். “அழைக்காவிட்டாலும் வருவோம் என அவருக்குத் தெரியாது” என்றான் சகுண்டன்.

“இது மாபெரும் படை” என்றான் கடோத்கஜன். “எங்கள் இனத்துக்குள்ளேயே மற்போர்களில் ஈடுபட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை போரென எதுவும் புரிந்ததில்லை.” சுற்றிலும் நோக்கி “இப்பெரும்போர்… இது எங்கு நிகழ்கிறது?” என்றான். அசங்கன் குழம்பி “இங்குதான்” என்றான். “நான் படைகளை பார்க்கிறேன். நான்குபுறமும் விழிதொடும் எல்லைவரை நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் சென்று போரிடும் இடம் எது?” என்றான் கடோத்கஜன். “இளவரசே, இங்கு நம் படை நின்றிருக்கிறது. எதிரில் அவர்களின் படை. ஒவ்வொரு நாளும் புலரியிலிருந்து அந்திவரை மோதிக்கொள்வோம்.”

கடோத்கஜன் நின்று இடையில் கைவைத்து திகைப்புடன் கூர்ந்துநோக்கி “மொத்தப் படையினரும் முழுமையாகவே மோதிக்கொள்கிறார்களா?” என்றான். “ஆம் மூத்தவரே, அதுதான் போர்” என்றான் அசங்கன். “இங்கு பல்லாயிரவர் இருப்பார் போலிருக்கிறதே” என்றான் உத்துங்கன். “பல லட்சம்” என்றான் அசங்கன். “அஸ்தினபுரி இந்திரப்பிரஸ்தம் போன்ற நகரங்களைவிட மிகையான வீரர்கள் இங்கு இருக்கிறார்கள்.” சகுண்டன் “இவர்கள் அனைவரும் ஒரே தருணத்தில் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக்கொள்கிறார்களா?” என்றான். “ஆம்” என்று அசங்கன் சொன்னான். “தேர்ந்தெடுத்த வீரர்களை அனுப்புவதில்லையா?” என்றான் சகுண்டன்.

“இதை நான் எத்தனை விளக்கினாலும் தங்களுக்கு புரியப்போவதில்லை. நாளை ஒருநாளில் அனைத்தும் தெளிவாகிவிடும்” என்றான் அசங்கன். “ஆம்” என்று கடோத்கஜன் சொன்னான். பின்னிருந்து மரப்பலகைமேல் புரவிகளின் குளம்போசை கேட்டது. கடோத்கஜன் படையிலுள்ள அனைவரும் திடுக்கிட்டவர்கள்போல் பார்த்தனர். முதலில் வந்த புரவியிலிருந்து அசங்கனின் இளையவன் சினி இறங்கி அதே விரைவில் கைகளை விரித்தபடி ஓடினான். மூச்சுவாங்க கடோத்கஜன் அருகே நின்று தலைதூக்கி நோக்கி “இவரா?” என்றான். அவன் கை சுட்டுவிரல் நீண்டு அசைவிழிந்து காற்றில் நீண்டிருந்தது.

“ஆம், இவரேதான். நமக்கெல்லாம் மூத்தவர், குருகுலத்து முதல் மைந்தர்” என்றான் அசங்கன். “இவரது தலைதான் குடம் போன்றிருக்கும். ஆகவே தான் இவருக்கு கடோத்கஜன் என்று பெயர்” என்றபின் சினி “ஆனால் இங்கிருந்து தலை தெரியவில்லை. மிக உயரம்…” என்றான். கைகளை விரித்து “பாறைகளைப்போல… அவ்வளவு உயரம்!” என்றான். கடோத்கஜன் முழங்காலில் கைகளை வைத்து குனிந்து தலையை கீழே கொண்டுவந்தான். “தொட்டுப் பார்!” என்றான். சினி சிரித்தபடி தயங்கி பின்னடைந்தான். “அஞ்சவேண்டாம். தொட்டுப் பார்” என்றான் கடோத்கஜன் . சினி பின்னடைந்து தன் மூத்தவனாகிய உத்ஃபுதனை பற்றிக்கொண்டான்.

கடோத்கஜன் சினியின் இடையை இரு கைகளாலும் பற்றி சிறுகுழவியென தூக்கிச் சுழற்றி மேலெடுத்து தன் வலத்தோளில் வைத்துக்கொண்டான். சினி மேலிருந்து அலறிச்சிரித்தான். அச்சமும் பதற்றமுமாக கால்களை உதறினான். “தொட்டுப் பார்!” என்றான் கடோத்கஜன். சினி அவன் தலையை கைகளால் அறைந்து “யானை மத்தகம் போலிருக்கிறது” என்றான். சாந்தன் சிரித்து “மதோத்கஜன் என்று தங்களுக்கு பெயர் இட்டிருக்க வேண்டும், மூத்தவரே” என்றான். அசங்கன் நகைத்து “மதங்கோத்கஜன்… சிறந்த பெயர்! ஏன் நாம் அவ்வாறே அழைக்கக்கூடாது?” என்றான். “இது எனக்கு என் தந்தை சூட்டிய பெயர்” என்று கடோத்கஜன் சொன்னான்.

இளையோர் ஒவ்வொருவராக அவன் அருகே வர இரு கைகளாலும் அவர்களை பற்றி இழுத்து நெஞ்சோடணைத்தான். உத்ஃபுதனையும் சாந்தனையும் அணைத்து நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான். உத்துங்கனும் சகுண்டனும் பிறரும்கூட வந்து அவர்களை மாறிமாறி தூக்கி முத்தமிட்டார்கள். முத்தமிடுவது அவர்களின் குலவழக்கம் போலும் என்று எண்ணிக்கொண்டான் அசங்கன். முத்தம் பெற்றபோது மைந்தர் நாணி உடல் மெய்ப்புகொள்ள தோள் குறுகினர்.

புரவிகள் வரும் ஓசை கேட்டது. எதிரே பன்னிரு புரவிகளில் படைவீரர் சூழ வந்த ஆயிரத்தவனாகிய சூசிகட்கன் புரவியிலிருந்து பாய்ந்திறங்கி “பாஞ்சால இளவரசருக்கு செய்தி சென்றுவிட்டது. தங்களை முறைப்படி வரவேற்று கொண்டு செல்லும் பொறுப்பிலிருக்கிறேன்” என்றான். அவர்களின் கால்களை நோக்கியபின் “தங்களுக்கான தேர்கள் அல்லது புரவிகள்…” என்று தயங்கினான். “நாங்கள் பிற உயிர்கள்மேல் ஊர்வதில்லை” என்றான் கடோத்கஜன். “உயிர்கள்மேல் ஊர்பவர்களை மரங்கள் ஏற்றுக்கொள்வதில்லை” என்று உத்துங்கன் சொன்னான். அசங்கன் “அவர்கள் நடந்தே வருவார்கள்” என்றான்.

இருபுறமும் பாண்டவப் படை மணற்கரையென செறிந்து விழிகளாகி கடோத்கஜனை பார்த்தது. ஆங்காங்கே வாழ்த்துக்குரல்கள் எழுந்தாலும்கூட சொல்லற்ற பெருமுழக்கமே படையில் நிரம்பியிருந்தது. கடோத்கஜனின் தலை அவர்கள் அனைவருக்கும் மேலாக எழுந்திருந்தது. எனவே விண்ணில் ஊரும் கந்தர்வனை பார்ப்பவர்கள்போல அவர்கள் முகம் தூக்கியிருந்தார்கள். காவல்வீரர்கள் முன்னால் சென்று கடோத்கஜனின் வரவை முழவோசையால் அறிவித்துக்கொண்டிருந்தனர். அம்முழக்கம் ஒன்றிலிருந்து ஒன்றென தொட்டுப்பெருகி விலகிச்செல்ல படைகளிலிருந்து கார்வை என எதிர்முழக்கம் எழுந்தது.

அசங்கன் கடோத்கஜனுக்கு அவைமுறைமைகள் தெரியுமா என்று ஐயுற்றான். மிகவும் பிழையாக ஏதேனும் ஆகிவிடக்கூடுமென்று தோன்றியது. அவன் யுதிஷ்டிரரையும் அர்ஜுனனையும் பீமனையும் தழுவி முத்தமிடுவதைப்பற்றி எண்ணியபோது தன்னையறியாமலேயே புன்னகையை அடைந்தான். “மூத்தவரே, இங்கு அரசவையில் முறைமைகளென சில உள்ளன” என்றான். “நான் அறிவேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “அவர்களுக்கு நாம் புறம் காட்டலாகாது. அவர்கள் பேசுகையில் ஒவ்வொருமுறையும் தலைதாழ்த்தி ஆணை என்று சொல்லவேண்டும். அவர்கள் பேசும்போது நாம் சிரிக்கவோ ஓசையிடவோ கூடாது” என்றான். “ஆணை என ஒவ்வொரு முறையும் சொல்லவேண்டியதில்லை” என்று அசங்கன் சொன்னான். “அப்படித்தானே சொன்னார்கள்?” என்று நின்று திரும்பிப்பார்த்தான் கடோத்கஜன். ஒருகணம் எண்ணியபின் “ஆம், அவ்வாறே சொல்வதில் தவறில்லை” என்று அசங்கன் கூறினான். “அவர்கள் எவரையும் நீங்கள் தொடக்கூடாது. அவர்களே உங்களை தொட்டால் கூட அதற்கு உங்கள் உடலை அளிக்கவேண்டுமேயொழிய திரும்பி அவர்களை தொடுவதோ அணைப்பதோ கூடாது” என்றான்.

கடோத்கஜன் குழப்பமாகத் தலையை அசைத்தான். “அவர்களை ஒருபோதும் நீங்கள் என்று அழைக்கலாகாது. தாங்கள் என்ற சொல்லை தேவையென்றால் மட்டும் பயன்படுத்தலாம். அவர்களை நோக்கி பேசுகையில் விரல் சுட்டுவதோ இருப்பிடத்திலிருந்து அவர்களை நோக்கி எழுந்து செல்வதோ எவ்வகையிலேனும் படைக்கருவி எதையும் கையிலெடுப்பதோ பெரும்பிழையென கருதப்படும்.” கடோத்கஜன் மீண்டும் நின்று “இவை அனைத்தையும் என்னால் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது” என்றபின் உத்துங்கனை பார்த்தான். உத்துங்கன் “ஆம், ஏராளமான செய்திகள்” என்றான்.

“பேரரசர்கள் எவரையும் நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. நான் பார்த்த ஒரே அரசர் மௌரிய யாதவ குடியின் அரசர் முரு மட்டுமே. அவர் கன்றோட்டிக்கொண்டு காட்டுக்குச் செல்பவர்” என்றான் கடோத்கஜன். “முதல்முறையாக ஓர் அரசரை பார்க்கும் வாய்ப்பு அமைகையில் அவரை வேடிக்கை பார்ப்பதை விடுத்து இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எண்ணத்துள் அடுக்கிக்கொண்டிருப்பது என்னால் இயலாது.” உத்துங்கன் “ஒன்று செய்யலாம். இவனை நம் அருகில் நிறுத்திக்கொள்ளலாம்” என்றான். கடோத்கஜன் “ஆம்” என்று சொல்லி அசங்கனின் தோளில் கல்லால் ஆனதோ என எடைகாட்டிய பெரிய கையை வைத்து “நீ என்னுடன் இரு. நான் செய்யும் பிழைகளை சொல்” என்றான்.

உடன் நடந்துகொண்டிருந்த சினி கடோத்கஜனின் இடையாடையைப்பற்றி அசைத்து “மூத்தவரே, நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு சொல்கிறேன்” என்றான். உத்துங்கன் “ஆம், இவனென்றால் இன்னும் எளிது. ஓர் ஆடையால் இவனை உங்கள் முதுகில் சேர்த்து கட்டிக்கொள்ளலாம். பின்னாலிருந்து காதுகளில் சொல்லிக்கொண்டே இருப்பான்” என்றான்.  சகுண்டன் “கிளிபோல” என்றான். அவர்கள் வேடிக்கையாக சொல்கிறார்கள் என எண்ணி நோக்கிய அசங்கன் உண்மையாக எண்ணிச்சொல்கிறார்கள் என உணர்ந்து திகைக்க சினி “ஆம். உங்கள் உடலுடன் கட்டிக்கொள்ளுங்கள், மூத்தவரே. மெய்யாகவே என்னை உங்கள் உடலுடன் கட்டிக்கொள்ளுங்கள்” என கூவினான்.

அசங்கன் சினத்துடன் “பேசாமல் வா. இது அரச நிகழ்வு, விளையாட்டல்ல” என்றான். முன்னால் சென்ற படைவீரர்கள் அதே விரைவில் திரும்பி வருவதைக் கண்டு அசங்கன் நின்றான். “என்ன ஆயிற்று?” என்றான் கடோத்கஜன். “அவர்களை யாரோ துரத்தி வருகிறார்கள்!” என்றான் சகுண்டன். “அல்ல” என்று அசங்கன் சொல்லி முன்னால் ஓடினான். சூசிகட்கன் புரவியிலிருந்து வேகமழியாமலே தாவி ஓடி அருகே வந்து “அரசர்! பேரரசர்!” என்றான். “என்ன? என்ன?” என்றான் அசங்கன். மூச்சடைக்க “பேரரசர் நேரில் அவரே வருகிறார். அரக்ககுலத்து இளவரசரை வரவேற்பதற்கு அவரே குடையும் சாமரமும் அணுக்கப்படையுமாக வந்துகொண்டிருக்கிறார்!” என்றான்.

சூசிகட்கனால் நிற்கமுடியவில்லை “அரசரே வருவதாக புறா வந்துள்ளது. நான் ஓடிவந்தேன்” என்றான். சுவீரர் பதைப்புடன் “மெய்யாகவா?” என்றார். சூசிகட்கன் “இதற்கென்ன முறைமை என்று எனக்கு தெரியவில்லை. இங்கு இவர் என்ன ஆற்றவேண்டும்?” என்றான். அசங்கன் “தாங்கள் விலகிக்கொள்க! இதை நான் நிகழ்த்துகிறேன்” என்றான். “அரசர் பிற நாட்டின் முதன்மை அரசர்களை மட்டுமே நேரில் சென்று வரவேற்பது வழக்கம். அந்த அரசர்கள் தாங்களும் வெண்குடை சூடியிருக்க வேண்டும். இருபுறமும் சாமரங்கள் விசிறப்படவேண்டும். இரு தரப்பிலிருந்தும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் முதலில் முன்னால் செல்லவேண்டும். படைத்தலைவர்கள் முழந்தாளிட்டு அமர்ந்து வாள் தாழ்த்தி வணங்கியபின் விலக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச்சொல் பரிமாற வேண்டும். அதன் பின்னரே அரசர்கள் சந்திக்கவேண்டும்” என்றார் சுவீரர்.

அசங்கன் “அம்முறைமைகள் எதுவும் இங்கு தேவையில்லை. தந்தை தன் மைந்தரை பார்க்க வருகிறார் என்பதன்றி வேறெதற்கும் பொருள் இல்லை. விலகுக!” என்றான். காவலர்கள் விலக அசங்கன் தன் உள்ளம் எடைகொண்டு நிறைந்து துடிப்பதை உணர்ந்தான். தொலைவில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறப்பது தெரிந்தது. அது அணுகி வருவதை அதன் பின்னரே உணர முடிந்தது.

முந்தைய கட்டுரைவல்லிக்கண்ணன்
அடுத்த கட்டுரைநிலவில் முகம்