இனிய ஜெயம்
நேற்று புதுவை சென்றிருந்தேன் .மருத்துவமனை வாயில் வரை சென்று விட்டேன் . ஏதோ உத்வேகம் மீண்டும் அவரை எங்கேனும் மேடைல் அவர் தோன்றும்போது பார்த்துக் கொள்வோம் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு திரும்பி விட்டேன் . பிரபஞ்சன் இம்முறை நீண்ட நாள் மருத்தமனை வாசத்தில் இருக்கிறார் .மிகுந்த பலவீனம் அடைந்திருக்கிறார் . பாஸ்கர் என்ற காவல்துறை அதிகாரி பிரபஞ்சனின் நண்பர் .எனக்கும் . அவ்வப்போது அவர் சென்று பார்த்து நிலவரங்கள் சொல்கிறார் . பெரும்பாலான கவிதாயினிக்கள் பவா செல்ல துரை எல்லாம் வந்து போனதாக சொன்னார் . நலம் பெறட்டும் .
புதுவையில் முதன் முறையாக பேராசிரியர் வகிதையா கான்ஸ்டன்டைன் அவர்களை சந்தித்தேன் . வலிய சென்று வாசகராக அறிமுகம் செய்து கொண்டேன் . பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படம் திரை இட்டு கலந்துரையாடல் செய்ய வந்திருந்தார் .அவர் உட்பட நண்பர்கள் பலருக்கு அண்ணன் சிறில் அலெக்ஸ் வழியாகவும் நற்றிணை வழியாகவும் என்னை தெரிந்திரின்தது மாலதி மைத்ரி ஒய் நீதானா அது சிறில் சொல்லிருக்கார் என முதல் சந்திப்பிலேயே உற்சாகம் அடைந்தார் .
அருள் எழிலன் இயக்கிய மிக முக்கியமான ஓங்கி புயல் மரணங்கள் குறித்த ஆவணப் படம் .இன்று அந்த ஆவணம் பேசும் அரசியல் இடர்கள் எல்லாம் தற்ச்சமயம் அந்த ஆவணப் படத்துக்கு மிகுந்த கவனத்தை பெற்று தரும் .கொஞ்ச நாளில் எல்லாம் அடங்கிய பின் ,அந்த ஆவணம் அதற்குள் இயங்கும் கலைஞனின் அகத்தின் உண்மை ,கலை நேர்த்தி இவற்றுக்காக காலம் கடந்து வாழும் .
குறிப்பாக ஒரு காட்சி சர்ச்சை நம்பி வாழும் மக்களுக்கு சர்ச் அவர்களை ஜனநாயக அரசியலில் இருந்து தனிப்படுத்தும் நிலையை பேசுகிறது . ஆவணத்தின் துவக்கத்தில் குமரி கடல் கிராமம் ஒன்றில் ஏதோ கிறிஸ்துவ திருவிழா ,இரவு .ஊர் முழுக்க வண்ண விளக்குகள் ,ஊரின் மையத்தில் சர்ச் மட்டும் முற்றிருளில் மூழ்கி கிடக்கிறது .
இப்படி பல காட்சிகள் எங்கேனும் என்றேனும் இந்த ஆவணம் குறித்து எழுத வேண்டும் .
கடலூர் சீனு
அன்பின் ஜெ
ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் சொன்னது கொஞ்சம் வருத்தத்தை வருவிக்கிறது. நான் உங்கள் போல் சரளமாக தமிழ் பேச தெரியாதவன். ஆனால் உணர்வு இருக்கிறது. பிரெஞ்சு பெண்ணிய புரட்சி பற்றி நீங்கள் விமர்சிக்க கூட தகுதி இல்லாதது போல் பேசியுளீர்கள். பிரிட்டிஷ் பெண்ணியத்தை புகழ்ந்து பேசியது உங்கள் விக்டோரியன் மனப்பான்மையை(Victorian Mindset) தான் காண்பிக்கிறது.
பிரிட்டிஷ்காரர்கள் தான் ஒரு காலத்தில் நம் நாட்டில் இயற்கையாய் இருந்த பல குழுக்களாக இருந்த மக்களை பிரித்து பண்பாடை அழித்து, பெண் அடிமைத்தனத்தை வளர்த்து இன்னும் அதில் இருந்து விடுபடாமல் நம் மக்களையும் அதே விக்டோரியா மனப்பான்மைக்கு ஆளாக்கிவிட்டனர். ‘இரண்டாம் பால்’ சிமோன் தீ பூவா வின் நூலை வாங்கி படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர் என்னமோ Reactionary போன்று நீங்கள் பார்ப்பது கொஞ்சம் வேதனையளிக்கிறது.
பிம்பத்தை உடைக்கலாம் நீங்கள், அது தவறல்ல. ஆனால் மறந்து நீங்கள் சில சமயத்தில் உண்மையையும் சேர்த்து உடைத்துவிடுகிறீர்கள் என்ற பயம் கண்டிப்பாக இருக்கிறது.
பிரெஞ்சு பெண்கள் மற்றும் ஆண்களால் அவர் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்று தான் நினைக்கிறன்.
இப்படிக்கு
இராம்ஜி