‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82

tigகதிர் இறங்கிய பின்னரும் மண்ணில் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. உலோகப்பரப்புகளில் ஒளி ததும்பியது. சாத்யகி தன் புரவியில் களத்தினூடாகச் சென்று திரண்டு மீண்டும் நிரைகொண்டுவிட்ட பாண்டவப் படைகளின் நடுவே மையப்பாதையில் நுழைந்தான். புண்பட்ட வீரர்களை கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய பலகைப்பாதைகளினூடாக ஒற்றை அத்திரிகள் இழுத்த இருசகட வண்டிகள் நீண்ட நிரையாக சென்றுகொண்டிருந்தன. தோளுடன் தோள் என இணையாக அடுக்கப்பட்டிருந்த வீரர்கள் குருதி வழிய முனகிக்கொண்டும் அரற்றிக்கொண்டும் இருந்தனர். வண்டிகளில் இருந்து சொட்டிய குருதியால் பலகை சிவந்து தசைக்கதுப்புபோல் ஆகிவிட்டிருந்தது. வண்டிகள் சென்ற வழியெங்கும் குருதி ஊறி வழிந்தது. சாலையின் பலகைப்பொருத்துக்களில் சகடம் விழ வண்டி அதிர்ந்தபோது புண்பட்டவர்கள் உடல் உலைந்து அலறினார்கள்.

சாத்யகி முகங்களை நோக்கிக்கொண்டு சென்றான். புண்பட்டவர்களில் சிலர் பித்துநிறைந்த கண்களுடன் வெறித்து நோக்கினர். சிலர் காய்ச்சல்கண்டவர்களாக நடுங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களுக்குள் மென்குரலில் அரற்றினார்கள். சிலர் அருகே செல்பவர்களை நோக்கி “வீரர்களே! தலைவர்களே!” என கூவி அழைத்தனர். அவர்களில் சிலர் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தனர் என்பது நிலைத்த விழிகளில் இருந்து தெரிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் முடிவிலாது சென்றுகொண்டே இருந்தன. அவற்றை ஓட்டிச்சென்றவர்களும் குருதியில் நனைந்திருந்தார்கள். போர் நிகழ்ந்த பகல் முழுக்க குருதிமணம் நிறைந்திருந்த காற்று சித்தத்தை அடையவில்லை. விழிகளும் செவிகளும் விழிசெவியென்றான உடலும் மட்டுமே புலன்களென்றிருந்தன. போர் அணைந்த மறுகணமே மூக்கு உயிர்கொண்டது. வானும் மண்ணும் குருதிவாடையால் மூடப்பட்டன.

களத்தில் இருந்த அனைத்தும் வெட்டிவைத்த தசைகளின் வாடைகொண்டிருந்தன. காற்று சுழன்றடிக்கையில் குமட்டல் எழுந்தது. அறியாமல் வயிறு அதிர வாய் ஊறிக்கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருமே காறிக்காறி துப்பினர். களத்தில் விரிந்து கிடந்த சடலப்பரப்பை அவன் இடையில் கைவைத்து நின்று விழியோட்டி நோக்கினான். உடல் வலிப்புகொண்டமையால் முகம் கோணலாகி உதடுகள் இழுபட பற்கள் வெறித்து அவை நகைப்பவைபோல் தோன்றின. வெட்டுண்ட தலைகளில் மட்டும் விழிமூடிய ஆழ்ந்த அமைதி தெரிந்தது. உடலின் பொறுப்பிலிருந்து விடுபட்டமையின் அமைதியா அது?

ஒருவன் அலறிக்கொண்டே இருந்தான். அவனை நோக்கியபின்னரே அந்த அலறல் காதில் விழுந்தது. அவன் எவரையும் நோக்கி அழவில்லை. வானிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தான். புண்பட்ட அனைத்து விலங்குகளுமே வானிடம்தான் முறையிடுகின்றன. அங்கு எவரேனும் இருக்கிறார்களா? தேவர்கள், தெய்வங்கள், அலகிலியாகிய பிரம்மம்? இல்லை என்றால் இந்தக் கண்ணீருக்கும் முறையீட்டுக்கும் என்ன பொருள்? எதற்குத்தான் பொருள்? அன்பு, அளி, மானுடம் அனைத்தும் போர் தொடங்குவதற்கு முன்னரே பொருளிழந்து உதிர்ந்துவிடுகின்றன. நெறி, அறம் என ஒவ்வொன்றாக உடைந்து களத்தில் சரிகின்றன. வெற்றி என்ற சொல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தெய்வங்களே, மூதாதையரே, இறுதியில் அச்சொல்லேனும் பொருளுடன் எஞ்சவேண்டும்.

உயிர்நோக்கிகள் நீண்ட ஈட்டிகளுடன் சடலங்களின் நடுவே கால்தூக்கி வைத்து நடமிடுபவர்கள்போல சென்றனர். கீழே கிடந்த உடல்களைப் புரட்டி நோக்கி உயிரில்லை என்றால் அப்பால் சென்றனர். தேறும்புண்பட்டு உயிர் எஞ்சியிருப்பதைக் கண்டால் அவ்வுடல் மேல் வெண்சுண்ணத்தால் வட்டமுத்திரை ஒன்றை பதித்தபின் அருகே ஒரு சிறிய வெண்கொடி கட்டப்பட்ட மூங்கிலை நட்டுவிட்டு முன்னால் சென்றனர். சிறுவிரல் அளவுள்ள மூங்கில்களின் கீழ்நுனியில் இரும்புக்கூர் இருந்தது. குருதி நனைந்து ஊறிய தரையில் அதை எளிதில் குத்தி நிறுத்த முடிந்தது.

அவர்களுக்கு அப்பால் வந்துகொண்டிருந்த களக்காப்பர்கள் அந்தக் கொடிகளை அடையாளமாகக் கொண்டு அணுகி புண்பட்டவர்களின் அருகே குருதியில் ஊறி துளிசொட்டிக்கொண்டிருந்த மரவுரியை விரித்து உடல்களை புரட்டி அதிலிட்டு இருபுறமும் பற்றித்தூக்கி சகடப்பரப்பில் வைத்தபின் மரவுரியை உருவி எடுத்தனர். உடலில் தைத்திருந்த அம்புகளை அவர்கள் பிடுங்கவில்லை. அம்புகள் அசைந்தபோது புண்பட்டோர் முனகினர், விழித்தவர்கள் கூச்சலிட்டனர். விழுந்த மரங்களில் எழுந்த தளிர்கள் என அவன் உடல்களில் நின்ற அம்புகளைப்பற்றி எண்ணினான். பின்னர் அவ்வெண்ணத்திற்காக நாணி அகம் விலக்கிக்கொண்டான்.

அலறிக்கொண்டிருந்தவனை அணுகிய உயிர்நோக்கிகளில் ஒருவர் குனிந்து அவன் உடலை நோக்கினார். அவன் வயிற்றில் பெரிய வாய் ஒன்று திறந்திருந்தது. உள்ளே செக்கச்சிவந்த நாக்கு ஒன்று தவித்தது. அவன் “மூத்தோரே! மூத்தோரே!” என்று கூவினான். உயிர்நோக்கி முதிர்ந்தவராக இருந்தார். விழிகள் விலங்கு விழிகள் என உணர்வற்று, மானுடரை அறியும் மொழியொளி அற்று, இரு வெறிப்புகளாக தெரிந்தன. அவர் கையை அசைக்க பின்னால் வந்த வீரன் ஈட்டியை ஓங்கினான். அவர் தலையசைத்ததை உணர்ந்த புண்பட்டவன் “வீரரே! தந்தையே” என்று கூவி கையை நீட்டி தடுக்க அவன் மிக இயல்பாக, செயல்தேர்ந்த கையசைவின் பிழையின்மையுடன் ஈட்டியால் அவன் நெஞ்சில் இரு விலாவெலும்புகளுக்கு நடுவே குத்தி இறக்கி சற்றே சுழற்றினான். ஈட்டியை உருவியபோது குருதி சொட்டியது. அதை அப்புண்பட்டவனின் உடையிலேயே துடைத்தபின் அவன் முன்னால் சென்றான்.

நெஞ்சக்குமிழை ஈட்டிமுனை வெட்டியதனால் இருமுறை உடல் உலுக்கிக்கொண்டு புண்பட்டவன் வாய்திறந்து ஒலியிலாச் சொல் உரைத்து உறைந்தான். உயிர்நோக்கிகள் அவனை திரும்பி நோக்காமல் முன்னால் சென்றனர். இன்னொருவனை குனிந்து நோக்கி மீண்டும் தலையசைத்தார் முதியவர். மீண்டும் ஈட்டி மேலெழுந்து இறங்கியது. அதே விலாவெலும்பின் இடைவெளி. அதேபோன்ற ஆழ்நடுகை. அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தேர்ச்சியின் முழுமை இருந்தது. இக்களத்தில் இன்று பல்லாயிரம்பேர் விழுந்திருக்கக்கூடும். மானுடருக்கும் உடல்களுக்கும் நடுவே மெல்லிய வேறுபாடு மட்டுமே. அதை அவர்கள் அறிவார்கள். அவர்களின் விழிகள் அதை மட்டுமே அறியும்.

tigசாத்யகி திருஷ்டத்யும்னனின் கூடாரத்தை அணுகியபோது மிகவும் தளர்ந்திருந்தான். வெளியே தோல்வார்கள் இழுத்துக் கட்டிய உயரமற்ற கட்டிலில் ஆடையில்லாமல் திருஷ்டத்யும்னன் படுத்திருந்தான். அவன் உடலில் இருந்து அம்புமுனைகளையும் உடைந்த தேர்ச்சிம்புகளையும் மருத்துவர் பிடுங்கிக்கொண்டிருந்தனர். அவன் அவ்வப்போது நடுங்கி முனகிக்கொண்டிருந்தாலும் சூழ்ந்து நின்றிருந்த துணைப்படைத்தலைவர்களுக்கு ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தான். படைத்தலைவன் சிம்மவக்த்ரன் பாண்டவப் படைகளின் இழப்பை சொல்லிக்கொண்டிருந்தான். “இன்னும் கணக்கு எடுக்கப்படவில்லை. இறந்தவர்களை முத்திரை நோக்கி கணக்கிட ஏவலர்களை அனுப்பியிருக்கிறோம். ஆனால் விழிநோக்கிலேயே தெரிகிறது நம் இழப்பு அரை அக்ஷௌகிணிக்கு குறையாது…” பின்னர் தயங்கி “ஒருவேளை ஓர் அக்ஷௌகிணிகூட இருக்கலாம்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “ஆம், இருக்கும். பீஷ்மர் இன்று ஆடிய கொலைத்தாண்டவம் எண்ணற்கும் அரிது” என்றான். “இத்தனை நாள் இரவும்பகலும் அவர் பயின்ற வில் இதன்பொருட்டே போலும்… இளமைந்தர்களின் குருதியாட!” கசப்புடன் சிரித்து “இறந்த மைந்தர்களின் ஆத்மாக்கள் இன்று அவர் துயிலும் கூடாரத்தை சூழ்ந்திருக்கும்… நன்கு உறங்கட்டும் பிதாமகர்” என்றான். சாத்யகியை கண்டதும் “யாதவரே, நமது பிணங்களை முறைப்படி விண்ணேற்றும் பொறுப்பை உம்மிடம் அளிக்கிறேன். எரியேற்றுவதும் புதைப்பதும் அந்தந்தக் குடிகளின் முறைமைப்படி நிகழ்க! சுடலைப்பொறுப்பை மூத்தவர் சிகண்டி ஏற்றுக்கொண்டிருக்கிறார்” என்றான். “முறைப்படி அதை செய்ய ஈராயிரம் ஏவலர்களை எட்டு பிரிவுகளாக அமைத்துள்ளேன். ஆயிரம் வண்டிகள் அதற்கென்றே அனுப்பப்பட்டுள்ளன. நள்ளிரவுக்குள் மானுடர் அனைவரும் மண்ணோ எரியோ புகுந்தாகவேண்டும். அதன்பின் விலங்குகள். விடிவதற்குள் மீண்டும் களம் தூய்மையடையவேண்டும்” என்றான்.

சாத்யகி தலையசைத்தான். “ஒருவர் உடல்கூட முறைப்படி இறுதிச்செயல்கள் இன்றி செல்லக்கூடாது. அதை உறுதிசெய்க! இறந்தவர்களின் எண்ணிக்கை புலரிக்கு முன் என் கைக்கு வரவேண்டும். முற்புலரியில் அரசர் அவைகூடும்போது நான் அதை அளிக்கவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆணை!” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் அருகே நின்றிருந்த படைத்தலைவன் சிம்ஹநேத்ரனிடம் “எனக்கு ஒவ்வொரு படைப்பிரிவிலும் எஞ்சியுள்ளோரின் கணக்கு இன்று இரவு எழுவதற்குள் வந்தாகவேண்டும். நள்ளிரவுக்குள் தேய்ந்துவிட்ட படைப்பிரிவுகளுக்கு புதிய வீரர்களை அனுப்பவேண்டும்” என்றான். சாத்யகி தலைவணங்கி விடைகொண்டான்.

மீண்டும் புரவியை அடைந்தபோது அவன் இறப்பின் தருணம் என களைத்திருந்தான். எங்காவது விழுந்து மண்ணில் உடல்பதித்து மறந்து உறங்கவேண்டும் என விழைந்தான். புரவிமேல் உடல் கோணலாக அமைய தளர்ந்த தோள்களுடன் அமர்ந்திருந்தான். எச்சில் மார்பில் விழுந்தபோதுதான் விழித்துக்கொண்டான். புரவி குளம்புகள் செந்தாளம் இட சீராக சென்றுகொண்டிருந்தது. அவன் தன் சித்தத்துக்குள் பெரும்போர் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டான். அங்கிருந்து நோக்கியபோது எறும்புநிரை என புண்பட்டோரை ஏற்றிய அத்திரிவண்டிகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கியபடி மருத்துவநிலை நோக்கி செல்வதை கண்டான். ஒழிந்த வண்டிகள் இன்னொரு சாலையினூடாக மீண்டும் களம்நோக்கி சென்றன. நீர் இரைக்கும் சகடக் கலநிரை என அவ்வரிசை சுழன்றுகொண்டிருந்தது.

அவன் எரிநிலையை சென்றடைந்தபோது அங்கே சிகண்டி இருக்கவில்லை. அவருடைய துணைப்படைத்தலைவன் காதரன் “பாஞ்சாலர் தெற்குக் காட்டுக்குள் சென்றிருக்கிறார், யாதவரே” என்றான். “நான் அரக்கு கொண்டுசெல்லும் வண்டிகளை கணக்கிட்டு செலுத்தும்பொருட்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளேன்.” சாத்யகி தெற்கே விரிந்திருந்த குறுங்காட்டுக்குள் சென்றான். தொலைவிலேயே பேச்சொலிகள் கேட்டன. அவன் உள்ளே நுழைந்தபோது சிகண்டியின் அணுக்கக் காவலன் வணங்கி எதிர்கொண்டான். சாத்யகி “மூத்த பாஞ்சாலரை பார்க்கவந்தேன்” என்றான். அக்காவலனுக்கும் சிகண்டியின் உயிரிழந்த விழிகள் இருந்தன. அவன் சொல்லில்லாமல் தலைவணங்கி அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.

குறுங்காட்டில் நீர் வழிந்தோடி உருவான ஆழமான பள்ளத்திற்குள் பத்து பெருஞ்சிதைகள் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. எருதுகள் இழுத்த வண்டிகளில் கொண்டுவரப்பட்ட எடைமிக்க விறகுக் கட்டைகள் பள்ளத்திற்குள் உருட்டப்பட்டன. அங்கிருந்தவர்கள் அவற்றை பிடித்துத் தூக்கி அடுக்கினர். இரண்டு சிதைகள் அடுக்கப்பட்டு இறுதிநிலையில் இருந்தன. மேலே அரக்குக் கட்டைகளை அடுக்கி அவற்றின்மேல் மெல்விறகை நிரப்பினர். சிகண்டி அப்பால் ஏவலருடன் பேசிக்கொண்டு நின்றிருந்தார். அவன் அருகே சென்று தலைவணங்கினான். “சொல்!” என்று அவர் சொன்னார். “பாஞ்சாலரே, இறந்தவர்களின் மொத்தக் கணக்கு நாளை காலைக்குள் அரசருக்கு அளிக்கப்படவேண்டும் என்றார் படைத்தலைவர்” என்றான் சாத்யகி. “கணக்கிடாமல் இங்கே எரிப்போம் என எவர் சொன்னது?” என்றார் சிகண்டி. அவருடைய எரிச்சலை நோக்கி மேலும் பணிவுகொண்டு “இல்லை, பாஞ்சாலரே. நீங்கள் முறையாகவே செய்வீர்கள் என அறிவேன். அனைத்தையும் ஒருங்கிணைப்பது மட்டுமே என் பணி” என்றான் சாத்யகி.

“பிணக்கணக்கு குறிப்பதற்கு அறுபது பேரை அமரச்செய்துள்ளேன். இறந்தவரின் பெயர், குலம், படைப்பிரிவு, நாடு ஆகியவை முறையாக பதிவுசெய்யப்படும். கிளம்பும்போதே அனைத்துச் செய்திகளும் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அச்சுவடிகளின் பிறிதோலைகள் அனைவரிடமும் அளிக்கப்பட்டுள்ளன. நோக்கி கண்டு பதிவுசெய்வார்கள்” என்று சிகண்டி சொன்னார். சாத்யகி “நன்று” என்றான். “எங்களுக்கிருக்கும் மிகப் பெரிய இடர் பிழையாக அடையாளம் காணப்பட்டு கௌரவர் தரப்பினரின் உடல்கள் இங்கு வந்துவிடுவது. அவற்றை மீண்டும் திரும்ப கொண்டுசெல்வது பெரும்பணி. அங்கு சென்று அடையாளம் காணும் பணிகளை மேலும் செம்மை செய்க… இதுவரை எழுபது உடல்கள் வந்துவிட்டன” என்றபின் அவன் செல்லலாம் என கைகாட்டியபடி சிகண்டி அப்பால் சென்றார்.

சாத்யகி அருகே நின்ற சூதரை நோக்கி புன்னகைத்தான். அவரும் புன்னகைக்கும் வழக்கம் இல்லாதவராக, இறந்த விழிகொண்டவராக தோன்றினார். எதையாவது பேசவேண்டும் என்பதற்காக “ஏன் குழிகளில் சிதைகள் ஒருக்கப்படுகின்றன?” என்றான் சாத்யகி. “மேட்டில் என்றால் சிதை மேலும் மேடாகும். விறகுகளைத் தூக்கி மேலே கொண்டுசென்று அடுக்கவேண்டியிருக்கும். சிதையடுக்க யானைகளை கொண்டுவரும் வழக்கமில்லை” என்றார் சூதர். சினம் எழுந்தாலும் அவன் அதை அடக்கிக்கொண்டான். “நன்று” என்றபடி நடந்தான்.

சிதைகளை அடுக்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் படைவீரர்கள். பிறப்பால் இடுகாட்டுத்தொழில் செய்பவர்கள் அங்கே மேல்நோட்டப் பொறுப்புகளை மட்டுமே ஆற்றினர். சிதைகளின் அளவை அப்போதுதான் அவன் நோக்கினான். ஒவ்வொன்றும் மூன்று ஆள் உயரம் இருக்கும். இருபது வாரை நீளமும் இரண்டுவாரை அகலமும் கொண்ட விறகுக்குவைகள். “ஒவ்வொன்றிலும் எத்தனை பேரை எரிப்பார்கள்?” என்றான். மேல்நோட்டக்காரர் திரும்பி “ஒன்றில் இருநூறுபேர் வரை அடுக்கலாம்” என்றார். அவன் உள்ளத்தில் ஓடிய எண்ணத்தை உணர்ந்து “குருதியும் சலமும் நிறையவே இருக்கும். ஆகவேதான் இத்தனை விறகு. அரக்கும் இருப்பதனால் விறகு எளிதில் எரிந்தேறும். ஆனால் பேரனல் எழுந்துவிட்டதென்றால் வாழைத்தண்டையும் விறகாக்கலாம்” என்றார்.

அப்பால் நின்றிருந்த முதிய சிதைக்காரர் ஈறிலிருந்து நீண்டு நின்ற பற்களைக் காட்டி சிரித்து “முதல் நூறு எரிந்துகொண்டிருக்கையிலேயே அடுத்த நூறை உள்ளே செலுத்துவோம். பின்னர் விறகே தேவையில்லை. உடல் உருகும் கொழுப்பே எரியுணவாகும். ஒரு பிணம் இன்னொரு பிணத்துக்கு விறகாகும்” என்றார். அவன் அவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கினான். அவற்றில் ஓர் அறியவொண்ணா நுண்களிப்பு இருக்கிறதா? அது தங்கள் பணியை திறம்படச் செய்பவர்களுக்கு உருவாகும் நிறைவா? அடுமனையாளர் விழவூட்டுகளில் அடையும் உவகை. அன்றி வேறேதுமா? அவனுக்கு சிதையில் ஊனுண்ண வரும் பாதாள தெய்வங்களைக் குறித்த சூதர்பாடல்கள் நினைவிலெழுந்தன. அத்தெய்வங்கள் இவர்களில் குடியேறியுள்ளனவா?

அவன் சிதைகளில் இருந்து விலகிச்சென்றான். சிற்றமைச்சர் ஜலஜர் சாலமரத்தடியில் நிற்பதை கண்டான். அவனைக் கண்டதும் அவர் தலைவணங்கினார். அவன் அருகணைந்து “தாங்கள் இங்கு பொறுப்பிலிருக்கிறீர்களா, உத்தமரே?” என்றான். “இல்லை, இங்கு நிகழவேண்டிய வைதிகச் சடங்குகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு” என்றார். “நாங்கள் நூறு அந்தணர் இங்கு வந்துள்ளோம். வைதிக முறைப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் மைந்தர்களோ தந்தையோ ஆசிரியரோ எரியூட்டி இறுதிச்சடங்கு இயற்றலாம். ஆசிரியர்களாக நின்று நாங்கள் அதை செய்வோம்.” அப்பால் ஒரு கூண்டு வண்டியில் இருந்து வைதிகர்கள் இறங்கி வெண்ணிற ஆடைகள் அந்திவெளிச்சத்தில் துலங்கித்தெரிய கைகளில் தர்ப்பையும் மரக் கமண்டலங்களுமாக ஓசையில்லாமல் நடந்து வந்தனர்.

“தாங்கள் இங்கே பொறுப்பு கொள்கிறீர்களா?” என்றார் ஜலஜர். “ஆம், இவையனைத்தையும் ஒருங்கிணைக்க என்னிடம் பணித்துள்ளனர். ஆனால் இங்கே நான் செய்வதற்கென்ன உள்ளது என்றுதான் புரியவில்லை” என்றான் சாத்யகி. ஜலஜர் “ஆம், பாஞ்சாலர் இங்கு வருவதற்குமுன் உபப்பிலாவ்யத்திலேயே இங்கு எத்தனை பேர் இறக்கக்கூடும் என மதிப்பிட்டிருந்தார். இன்று போர் முடிந்ததுமே எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என முழுமையாக கணக்கிட்டுவிட்டார். விறகு, அரக்கு வண்டிகள், அத்திரிகள், அந்தணர் என அனைத்தையும் முன்னரே முடிவுசெய்துவிட்டார்” என்றார். “மெய், நான் அவரிடம் ஒரு சொல்லும் உசாவமுடியாது என்றும் உணர்ந்துகொண்டேன்” என்றான் சாத்யகி. “புதைப்பவர்களை என்ன செய்கிறார்கள் என்று மட்டும் நோக்கிவிட்டால் களத்துக்கு செல்வேன்.”

ஜலஜர் “முன்னரே பாஞ்சாலர் இக்களத்திற்கு வந்து நோக்கி புதைப்பதற்கு உரிய எளிய வழிகளை கண்டடைந்துவிட்டிருக்கிறார். இங்கே மண்ணுக்குள் மாபெரும் வெடிப்புகளும் பிலங்களும் உள்ளன. அவ்வெடிப்புகளில் உடல்களைப் போட்டு மண்ணிட்டு மூடுகிறார்கள். மண்ணுக்குள் ஓடும் பிலங்களுக்குமேல் சிறு குழிகளை தோண்டி அத்துளைகளினூடாக பிணங்களை உள்ளே போட்டு துளையை மூடுகிறார்கள்” என்றார். “இல்லாவிடில் இத்தனைபேருக்கும் குழிகள் தோண்டுவது போரைவிட பெரிய பணி. நள்ளிரவுக்குள் பிணங்கள் முழுமையாகவே மறைந்துவிடும். நாளை களம் தூய்மையாக இருக்கும்.” அவர் பற்கள் தெரிய சிரித்து “உண்ட தாலத்தை அடுத்த உணவுக்கு கழுவி வைப்பதுபோல” என்றார்.

சாத்யகி “முன்பும் இவ்வாறுதான் செய்தார்கள் போலும்” என்றான். அங்கே பெரும்பாலானவர்கள் எதையாவது சொல்லி சிரிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிரிப்பு அவர்களின் உள்ளம் கொள்ளும் இறுக்கத்தை நிகர்செய்யும் வழியா? அதனூடாக அவர்கள் உடையாது தங்களை தொகுத்துக்கொள்கிறார்களா? அன்றி அவர்களில் வந்தமர்ந்து அறியாத் தெய்வங்கள்தான் மானுடரை நகையாடுகின்றனவா? ஜலஜர் “ஆம், பெரும்பாலான பிளவுகளுக்குள் நொதிக்கும் செஞ்சேறு குருதி என நிறைந்துள்ளது. ஓரிரு நாட்களில் உடல்களை செரித்துக்கொள்ளும் பசி கொண்டவை அவை. பிலங்கள் அடியிலிபோல் ஆழமானவை. இங்குள்ள முழுப் படையினரையும் உள்ளே செலுத்தினாலும் நிறையாதவை” என்றார். சாத்யகி பெருமூச்சுவிட்டான். “பிலங்களுக்குள் பல்லாயிரமாண்டு எலும்புகள் குவிந்திருப்பதாகவும் பலகோடி பேய்கள் வாழ்வதாகவும் கதைகள் உள்ளன, யாதவரே” என்றார் ஜலஜர்.

மீண்டும் புரவியிலேறி குறுங்காட்டின் மறுபக்கம் வழியாக அவன் வெளியே சென்றான். அங்கே உடல்களை ஏற்றிய வண்டிகள் எருதுகளால் இழுக்கப்பட்டு நீண்ட நிரையாக வந்து வளைந்து நின்றன. அவற்றிலிருந்து பிணங்களை இறக்கி நீண்ட பன்னிரு வரிசைகளாக அடுக்கி நிரத்தினர் வீரர்கள். தோளோடு தோள் ஒட்டி மல்லாந்து கிடந்த உடல்களில் அறுபட்ட தலைகளை பொருத்தாமல் சற்று அப்பால் தனியாக வைத்தனர். வெட்டுண்ட கைகளையும் கால்களையும் வயிற்றின்மேல் வைத்தனர். உடல்களை அடையாளம் காண்பதற்குரிய முத்திரைகளையும் படைக்கலங்களையும் பிற பொருட்களையும் மார்பின் மேல் சீராக அமைத்தனர். அங்கிருந்து நோக்கியபோது ஒரு பெரும்படையை கிடைமட்டமாக பார்ப்பதுபோல் தோன்றியது. அவர்களனைவரும் எங்கோ போருக்கு சென்றுகொண்டிருப்பதுபோல.

துணைக்கணக்கர்கள் ஒவ்வொரு சடலத்தையாக நோக்கி அடையாளங்களைக் கொண்டு குலத்தையும் பெயரையும் படைப்பிரிவையும் நாட்டையும் அடையாளம் கண்டு உரக்க கூவிச் சொன்னார்கள். “கிருவிகுலத்தைச் சேர்ந்த முத்ரன். எட்டாவது பாஞ்சாலப் படைப்பிரிவு.” அந்த இளைஞனின் தலை தனியாக தரையில் மல்லாந்து விண்நோக்கி வெறித்திருந்தது. வெண்பற்களுடன் அவன் எதையோ சொல்ல விழைவதுபோல. அவனுடைய உடல் அந்த ஓசைக்கு அப்பால் வெறும் பருப்பொருளாக கிடந்தது. விழிகள் இருந்தமையால் அந்தப் பெயரை அவன் தலை அறிந்தது, ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. அந்தப் பெயரையும் குலத்தையும் படையையும் நாட்டையும் கேட்டு அது திகைப்பதுபோல தோன்றியது. பெயர்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. “துர்க்ரும குலத்து அகாதன். மூன்றாவது விராடப் படைப்பிரிவு.” அவன் கண்மூடி துயின்றுகொண்டிருந்தான். சூழ நிகழ்வதை அவன் கேட்பதுபோல, அவன் கனவுக்குள் வேறொன்றாக அதை அறிந்துகொண்டிருப்பதுபோல.

மீண்டும் செல்லத்தொடங்கியபோதுதான் ஏன் தலைகள் இணைத்து வைக்கப்படவில்லை என்பதை சாத்யகி எண்ணி புரிந்துகொண்டான். வெட்டுண்ட தலை சேர்க்கப்பட்டால் பாதாள உயிர்கள் அவ்வுடலில் குடியேறிவிடக்கூடும். புதிய விழிகளுடன் எழுந்து நிற்கக்கூடும். ஏனென்றறியாமல் அவன் உடல் மெய்ப்புகொண்டது. தன் உடலெங்கும் வந்து மொய்த்த அறியா விழிகளின் நோக்கை அவன் உணர்ந்தான். இறந்தவர்களின் விழிகள்! காற்றில் எழுந்த அவர்களின் ஆத்மாக்களின் மூச்சு அவன் மேல் மெல்லிய காற்றென தொட்டது. அவன் புரவிக்கு வலப்பக்கம் முடிவிலாது பிணங்களின் அடுக்கு வந்தபடியே இருந்தது. அது முடிந்ததை விழிதிருப்பாமலேயே கண்டு அவன் நீள்மூச்சுவிட்டு எளிதானான்.

தென்மேற்கே ஏழு ஆழ்ந்த நிலவெடிப்புகள் உண்டு என அவன் கேட்டிருந்தான். புரவியை அவன் செலுத்தாமலேயே அது அத்திசை நோக்கி சென்றது. அங்கேயும் பிணங்களின் நீண்ட நிரை உருவாகிக்கொண்டிருந்தது. அவன் சென்று இறங்கி அங்கே நின்றிருந்த துணைப்படைத்தலைவனிடம் “பாஞ்சாலர் ஆணைப்படி கணக்குகள் பதிவாகின்றன அல்லவா?” என்றான். அத்துணைப்படைத்தலைவனின் முகமும் சிகண்டியின் முகம்போலவே இருந்தது. எப்போதோ உள்ளூர இறந்துவிட்ட முகம். “ஆம், இப்போதுதான் தொடங்கியிருக்கின்றன” என்று அவன் சொன்னான். சாத்யகி உள்ளே சென்றான்.

அங்கே நிலப்பிளவின் விளிம்பில் படைவீரர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவருமே நிஷாதர்களும் கிராதர்களும் அரக்கர்களும் அசுரர்களும்தான் என்பதை கண்டான். அகன்ற பலகைகள் சாலையென வந்து உடைந்த பாலம்போல பிலத்தின் விளிம்பில் நீட்டி நின்றன. நிரையிலிருந்து ஓர் உடலை ஒருவர் சிறு நடைவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டுவந்து அந்தப் பலகையில் வைத்தார். குடிமூத்தார் ஒருவர் தலையில் கழுகிறகு சூடி குடிக்கோலை இடக்கையில் ஏந்தி நின்றிருந்தார். அவருக்கு உதவ இருவர் தாலங்களில் காட்டு மலர்களுடன் பின்னால் நின்றனர். குடிமூத்தார் “சூக குலத்து காரகனே, மூதாதையருடன் மகிழ்ந்திரு! உனக்கு அங்கே நிறைவுண்டாகுக! உன் கொடிவழியினருக்கு நீ வேரென்றாகுக! மண்ணுக்கு அடியில் இருந்து உயிரும் உப்புமென எழுந்து நீ மீண்டும் வருக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவ்வுடல்மேல் ஒரு மலர் வைக்கப்பட்டதும் ஏவலன் பலகையை சரித்தான். உடல் சரிந்து ஆழத்தில் சென்று விழுந்தது. அடுத்த உடல் கைவண்டியில் அருகணைந்தது.

சாத்யகி அதை நோக்கியபடி நின்றான். இருபது இடங்களில் அவ்வாறு நீப்புச்சொற்களுடன் உடல்கள் மண்ணுக்குள் செலுத்தப்பட்டன. பசிஅணையா வாய் ஒன்றுக்கு ஊட்டிக்கொண்டே இருந்தனர். எடைகொண்டு குளிர்ந்திருந்த கால்களை உந்தி நீக்கியபடி நடந்து அவன் மீண்டும் புரவியை அணுகினான். துணைப்படைத்தலைவனிடம் “நான் புலரிக்கு முன் வந்து இந்த பெயர்பதிவை பெற்றுக்கொள்கிறேன்” என்றபின் கிளம்பினான். இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. அவன் படைமுகப்பு நோக்கி செல்லத் தொடங்கியபோது தொலைவில் ஒரு சங்கொலி கேட்டது. மணியோசையும் வாழ்த்துக்குரல்களும் உடன் எழுந்தன. அவன் நின்று செவிகூர்ந்தான். பின்னர் அத்திசைநோக்கி புரவியை செலுத்தினான்.

அப்பகுதி குறுங்காட்டில் தனியாக காவலிட்டு பிரிக்கப்பட்டிருந்தது. அவன் அணுகியபோது அங்கிருந்த காவலர்தலைவன் தலைவணங்கி உள்ளே செல்ல ஒப்புதல் அளித்தான். உள்ளே மேலும் காவலர்கள் தென்பட்டனர். சிற்றமைச்சர் சந்திரசூடர் அங்கே நின்றிருந்தார். அவனைக் கண்டதும் அருகணைந்து தலைவணங்கினார். “என்ன நிகழ்கிறது?” என்றான். “இங்கே அரசகுடியினருக்கான எரியூட்டல் நிகழ்கிறது. இளவரசர் அரவான் முதலில் சிதைகொள்கிறார்” என்றார். தயக்கத்துடன் “அந்த உடல் இங்குதான் உள்ளதா?” என்றான் சாத்யகி. “ஆம், யாதவரே. பிற இளவரசர்களின் உடல்கள் அவர்களின் படைப்பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அங்கே அரசகுடியினருக்குரிய நீப்புச்சடங்குகள் நிகழ்கின்றன. அவை இங்கே நள்ளிரவுக்குப் பின்னர்தான் ஒவ்வொன்றாக வந்துசேரும்” என்றார் சந்திரசூடர். “இந்நாளில் பெரும்பலி விராடர்களுக்கும் குலாடர்களுக்கும்தான். அவர்களின் உடல்கள் அங்கே குடிச்சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. அரசரும் உடன்பிறந்தாரும் அங்கு சென்றுள்ளனர்.”

பின்னர் குரல் தாழ்த்தி “இது அரவானின் உடல் மட்டுமே. முறைப்படி நாகர்குடிக்குரிய சடங்குகள் அந்த தலைக்குத்தான் செய்யப்படும். இதை வெறுமனே எரித்துவிடும்படி ஆணை” என்றார். “எச்சடங்கும் இன்றியா?” என்றான் சாத்யகி. அவருடைய விழிகள் மேலும் சுருங்கின. “சடங்கு என்றால்…” என்றபின் “அந்த ஆணிலி வந்திருக்கிறாள். அவள் அவரை தன் கணவன் என்கிறாள். அவருடன் சிதையேறுவேன் என்று சொல்கிறாள். அதை ஒப்புவதா என்று அறியாமல் குழம்பி அரசருக்கே செய்தியனுப்பினோம். அவள் விருப்பம் நிறைவேறுக என ஆணை வந்துள்ளது” என்றார்.

சாத்யகி புரவியில் இருந்து இறங்கி குறுங்காட்டின் சிறு பாதையினூடாக நடந்தான். அவன் உடல் ஓய்ந்து தசைகள் உயிரற்றவைபோல தோன்றின. கண்ணிமைகள் அவனை மீறி மூடிமூடி எழுந்தன. ஒரு சில கணங்கள் எண்ணங்கள் சூழலிழந்து எங்கோ அலைந்து மீண்டன. சற்று பள்ளமான இடத்தில் ஓர் ஆள் உயரமுள்ள நீண்ட சிதை ஒருக்கப்பட்டிருந்தது. அதன்மேல் அரக்குபொழிந்த விறகு அடுக்கப்பட்டு அரவானின் தலையிலாத உடல் வெண்கூறை மூடி வைக்கப்பட்டிருந்தது. அவன் கீழே செல்ல எண்ணினாலும் உடலை அசைக்காமல் மேலேயே மகிழமரத்தின் அடியில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அரவானுக்கான சிதைநெருப்பை வைக்கும் அந்தணர் தெற்குமூலையில் அமர்ந்து சடங்குகளை செய்துகொண்டிருந்தார். அங்கிருந்து நோக்கியபோது அவர் செய்வதென்ன என்று தெரியவில்லை. அவர் அருகே முழவும் மணியும் சங்கும் கொண்டு மூவர் நின்றிருந்தனர்.

கீழே சிதையின் கால்பகுதியில் கைகளைக் கூப்பியபடி ரோகிணி நின்றிருப்பதை கண்டான். அவள் அருகே குலாடகுடியின் இரு படைத்தலைவர்கள் உருவிய வாளுடன் நின்றனர். அவள் செந்நிறமான புத்தாடை சுற்றி கழுத்தில் செம்மலர்மாலை அணிந்திருந்தாள். குழலிலும் மலர்களை சூடியிருந்தாள். முகம் சிலைபோல் உறுதிகொண்டிருந்தது. முழவொலியும் சங்கொலியும் மணியோசையும் எழ அந்தணர் சடங்குகளை முடித்து கையில் அனற்கலத்துடன் எழுந்தார். அவருக்கு முன்னால் சங்கூதியபடி ஒருவன் சென்றான். அவர் மும்முறை சிதையை வலம் வந்து அதன் காலடியை வணங்கியபின் நெஞ்சில் அனல்கலத்தை வீசினார். மீண்டும் மும்முறை வணங்கிவிட்டு திரும்பிப்பாராமல் நடந்து அப்பால் சென்றார். முழவும் மணியும் உச்சவிசைகொண்டு ஓசையெழுப்பி ஓய்ந்தன. சங்கை மும்முறை ஊதியபின் அவர்கள் சென்று ரோகிணியின் அருகே நின்றனர்.

அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்டு செவ்விதழ்களாகப் பெருகி கொழுந்துவிட்டு எரிந்து மேலேறுவதை சாத்யகி கண்டான். அவன் உள்ளம் எந்தப் பரபரப்பும் இன்றி உறைந்து கிடந்தது. இப்பெரும்போருக்குப் பின் அன்றி வேறெப்போதாவது இந்நிகழ்வை பார்த்திருந்தால் உடலும் உள்ளமும் பதறித் துடித்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் சூதர்கள் முழவுகளையும் மணிகளையும் முழக்கத் தொடங்கினர். மும்முறை சங்கு முழங்கியது. ரோகிணி சிதையின் எரியும் கால்பகுதியை வணங்கி கைகளை கூப்பியபடி மும்முறை சுற்றிவந்தாள். முழவோசை தேம்பல்போல ஒலித்தது. மூன்றாவது சுற்றுக்குப்பின் அவள் சற்றே பின்னகர்ந்து பாய்ந்து சென்று சிதைமேல் ஏறி கைகளை விரித்தபடி அரக்குடனும் விறகுடனும் உருகி உடைந்து பொசுங்கி கொழுந்தாடி எரிந்துகொண்டிருந்த அரவானின் உடல்மேல் விழுந்தாள். அவள் உடல் அங்கே இருமுறை துள்ளியது. பின்னர் தழல்கள் அவளை முழுமையாக மூடிக்கொண்டன.

சாத்யகி தழலை நோக்கிக்கொண்டிருந்தான். அதற்குள் அவள் உடலின் அசைவுகள் தெரிவன போலவும் அது தழலாட்டம் மட்டுமே என்றும் தோன்றியது. பின்னர் பெருமூச்சுடன் திரும்பியபோது இடக்கால் செயலிழந்ததுபோல மண்ணில் பதிந்திருந்தது. அவன் காலை இழுத்து நடந்தபோது ஒரு தசைமட்டும் விதிர்த்தபடியே இருந்தது.

tigபூரிசிரவஸ் கௌரவப் படைகளினூடாக புரவியில் செருமுகப்பு நோக்கி சென்றான். படைகள் முற்றமைந்துவிட்டிருந்தமையால் மரத்தாலான பாதையில் அவனால் விரைந்து செல்ல முடிந்தது. வானில் வெளிச்சம் மீதியிருந்தது. தொலைவில் மருத்துவநிலைகளில் மட்டும் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனை நெருப்புகளை தொலைவில் காணமுடிந்தது. அந்தச் செவ்வெளிச்சத்தை பார்த்ததுமே பசி பொங்கி எழுந்தது. சூடான ஊன்கஞ்சி, இப்பொழுதை நிறைக்கவல்லது அதுதான். இப்போது இங்கிருக்கும் வீரர் அனைவருக்கும் பிற எவற்றையும்விட முதன்மையானது சூடான புத்துணவு.

பிறிதெப்போதும் உணவு இத்தனை சுவைகொள்ள வாய்ப்பில்லை. உணவு என உருக்கொண்டு மண் தன் அத்தனை சுவைகளுடன் சூழ்ந்துகொள்ளும். வானம் அத்தனை மணங்களுடன் அணைத்துக்கொள்ளும். உயிர் “ஆம், இதோ நான்” என்று உணவிடம் சொல்லும். உணவு “ஆம், இதோ நீ” என்று உயிரிடம் சொல்லும். நல்லுணவுக்குப்பின் மல்லாந்து மண்மேல் படுத்து விண்ணைநோக்கும் வீரன் நிறைவுடன் புன்னகைப்பான். ஒவ்வொருநாளும் மரங்கள் விண் நோக்கி அடையும் விரிவை முதல்முறையாக தானும் அடைவான்.

பூரிசிரவஸ் படைமுகப்பை அடைந்தபோது மெல்லிய பாடலோசை கேட்டது. அதை முதலில் அழுகையோசை என்றுதான் பழகிப்போன செவி புரிந்துகொண்டது. மேலும் அணுகியபோதுதான் அது பலர் இணைந்து மெல்லிய குரலில் பாடுவது என்று புரிந்தது. அவன் புரவிமேல் தளர்வாக அமர்ந்து அப்பாடலை கேட்டுக்கொண்டே சென்றான். சொற்கள் புரியவில்லை. ஆனால் சீரான தாளத்துடன் அது அமைந்திருந்தது. அதில் துயரில்லை என்பது முதலில் தெரிந்தது. மெல்லிய களியாட்டு இருப்பது பின்னர் புரிந்தது. மேலும் அணுகியபோதுதான் அது செருகளத்தின் பிணக்குவியல்களின் நடுவிலிருந்து ஒலிப்பதை அவன் புரிந்துகொண்டான்.

செருகளம் முதற்பார்வைக்கு பெருவெள்ளம் வடிந்தபின் சேற்றை நிறைத்துப் பரவியிருக்கும் மட்கிய மரக்கட்டைகளின் குவியல்போல தெரிந்தது. இடைவெளியே இல்லாமல் உடல்கள். மனிதர்கள், புரவிகள். நடுவே பாறைகள் என ஆங்காங்கே யானைகள். அவற்றின் நடுவே அலைநீரில் ஆடுபவைபோல சிறிய நெய்விளக்குகள் அலைந்தன. அவற்றின் பின் அவற்றை ஏந்தியவர்களின் நிழல்கள் எழுந்து ஆடின. சிறுகுழுக்களாக அவர்கள் செருகளத்தில் பரவியிருந்தனர். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அப்பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள். பிணங்களின் நடுவே காலடி வைத்து நடக்கும்போதும் பிணங்களை குனிந்து நோக்கும்போதும் அவர்களின் உடல்கள் இயல்பான தாளத்துடன் அசைய அந்தப் பாடல் எழுந்தது.

விளக்கொளியால் பிணங்களின் அடையாளங்களை நோக்கி கண்டடைந்ததும் “யானை!” என்றோ “எருது!” என்றோ கூவினர். யானை என்பது கௌரவப் படையை குறிக்கிறது என்று அந்த உடல் உடனே அங்கிருந்து தூக்கப்பட்டு கிழக்குப் பக்கமாக ஒதுக்கப்படுவதிலிருந்து பூரிசிரவஸ் அறிந்தான். ஒதுக்கி வைக்கப்பட்ட பிணங்களை அவை அணிந்திருந்த ஆடையால் தலையும் உடற்பகுதிகளும் சேர்த்து தரையிலிட்டு உருட்டி சுற்றிக் கட்டினர். அவற்றை இருவர் தூக்கி சிறிய கைவண்டிகளில் வைக்க ஒருவர் தள்ளிக் கொண்டுவந்து செருகளத்தின் விளிம்பில் மரப்பாதைமேல் நின்றிருந்த பிணவண்டிகளில் அடுக்கினர். விறகுபோல ஒன்றன் மேல் ஒன்றென வண்டி நிறைந்து கவியும் அளவுக்கு அடுக்கியதும் அது முன்னகர அடுத்த வண்டி வந்து நின்றது. வண்டியோட்டிகளும் அப்பாடலை மெல்ல பாடிக்கொண்டிருந்தார்கள்.

பூரிசிரவஸ் அங்கே நின்று அவர்களின் பணியை நோக்கிக்கொண்டிருந்தான். மேலும் சற்று தொலைவில் நின்று அந்த இடத்தை நோக்கினால் அங்கே உளம்நிறைவடையச் செய்யும் இனிய சடங்கொன்று நிகழ்வதாகவே எவருக்கும் தோன்றும் என எண்ணிக்கொண்டான். அந்தப் பாடல் கொஞ்சுவதுபோலவும் வேடிக்கையாக ஊடுவதுபோலவும் ஒலித்தது. ஆனால் மென்முழக்கமாக ஒலித்தமையால் சொல் புரியவில்லை. அந்தப் பாடலில் அவர்கள் வானிலிருந்து தொங்கும் சரடு ஒன்றில் ஆடிச் சுழலும் பாவைகள் என ஆனார்கள். சற்றுநேரம் கழித்தே அவர்கள் ஒரே திரளாக பணியாற்றுவதை அவன் உணர்ந்தான். அவர்களில் இரு தரப்பிலும் இருந்து வந்த ஏவலர் இருந்தனர். ஓர் உடலை மேற்கே இழுத்து விலக்கிவிட்டு இன்னொன்றை கிழக்கே கொண்டு சென்றனர்.

அப்பால் புரவியில் வருவது சாத்யகி என அவன் புரவியில் அமர்ந்திருந்ததில் இருந்தே உணர்ந்தான். சாத்யகி புரவியை இழுத்து நிறுத்தி அவர்களை நோக்கினான். அவன் தன்னை பார்த்துவிட்டதை பூரிசிரவஸ் உணர்ந்தான். “அவர்கள் கழையர்கள், முரசும் கொம்பும் ஒலிக்கும் அறிவிப்பாளர்கள்” என்று அவன் வேறெங்கோ நோக்கியபடி சொன்னான். அது அவனை நோக்கி சொல்லப்படாததனாலேயே விந்தையானதோர் அழுத்தம் கொண்டிருந்தது. சற்றுநேரம் கழித்து “ஆம்” என்றான். “அவர்கள் போரின் நடுவே இருக்கிறார்கள். ஆனால் போரிடுவதில்லை. முழுப் படையையும் பறவைநோக்கில் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் படையை பிற எவரும் பார்ப்பதில்லை” என்று சாத்யகி மீண்டும் சொன்னான். அப்பேச்சு ஏன் என அவனுக்கு புரியவில்லை. சாத்யகி பேசவிழைகிறான் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதன்பின் நெடுநேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

மீண்டும் பேசியபோது சாத்யகியின் குரல் மாறிவிட்டிருந்தது. “வலுவான புண்களேதும் இல்லையே?” என்றான். “இல்லை, தங்களுக்கு?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை” என்று சாத்யகி சொன்னான். படைகளில் பந்தங்கள் எழத்தொடங்கின. சற்றுநேரத்தில் நெடுந்தொலைவு வரை செந்தழல்களின் நிரை எழுந்தது. சாத்யகி “இன்னும் சில நாழிகைகளில் மனித உடல்கள் அகற்றப்பட்டுவிடும்” என்றான். “ஆம், ஆனால் அதன்பின்னர் புரவிகளும் யானைகளும் உள்ளன. தேர்களின் உடைவுகளை நீக்கவே நெடும்பொழுதாகும்” என்றான். சாத்யகி “யானைகளை அரசன்போலவும் புரவிகளை வீரன்போலவும் எரியூட்டவேண்டும் என்று நெறி” என்றான்.

பூரிசிரவஸுக்கு அது புதிய செய்தியாக இருந்தது. “மெய்யாகவா?” என்றான். “ஆம், யானைகள் கான்வேந்தர் என்றே நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் இறந்தால் அரசனின் ஓலை படிக்கப்பட்டு முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சிதையேற்றப்படவேண்டும். ஏழாண்டுகள் நீர்க்கடன் அளிப்பார்கள்” என்றான் சாத்யகி. “புரவிகள் இறந்தால் புதைக்கலாம். ஆனால் அவற்றுக்கு நடுகல் நிறுத்தப்படும். ஓராண்டு நிறைவில் கள்ளும் மலரும் படைத்து வணங்கி விண்ணேற்றுவார்கள்.”

மீண்டும் அவர்கள் சொல்லின்மையை அடைந்தனர். பூரிசிரவஸ் சிலமுறை பேச எண்ணினான். ஆனால் சொற்கள் எழவில்லை. பின்னர் அவன் அம்முயற்சியை கைவிட்டு அமைதியிலாழ்ந்தான். சாத்யகியும் பிறகு பேச முற்படவில்லை. ஆனால் அருகருகே இருக்க விழைந்தனர். களம் முழுக்க ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடலை கேட்டபடி நின்றிருந்தார்கள்.

[செந்நா வேங்கை நிறைவு]

முந்தைய கட்டுரைவெண்முரசு புதுவை கூடுகை
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் -கடிதம்