‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76

tigகரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய உருளைகளாக அள்ளி உண்டபடி இடக்கையில் இருந்த ஆட்டுத் தொடையையும் கடித்துத் தின்றான். வயிறு நிறைந்த உணர்வை அடைந்தபின் எழுந்து குடில் வாயிலுக்கு வந்து மெழுக்கு படிந்த கையை மண்ணில் துடைத்தபின் அங்கேயே படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

பெரும்பாலும் திறந்த வானின் கீழ் வெறுந்தரையில் துயில்வதே அவன் வழக்கம். குலாடகுடியின் இளையோர் பலரிடம் அவ்வழக்கம் இருந்தாலும் அரசிளமைந்தன் அவ்வாறு துயில்வது குறித்த ஏளனச் சொற்கள் அங்கிருந்தன. “மண்ணில் படுத்து விண்ணை நோக்காதவன் துயிலென்பதை அறிவதில்லை” என்று அவனுக்கு கதைப்படை பயிற்றுவித்த குலாட மூத்தவரான விசோகர் கூறியது அவன் நினைவில் எழுவதுண்டு. இளநாள் முதலே விண்மீன்களை விழித்துநோக்கிக்கொண்டு எண்ணங்கள் மெல்ல நிலைக்க உளமழிந்து துயிலில் ஆழ்வது அவன் வழக்கம். மண்ணிலுள்ள அனைத்துப் பொருட்களும் ஏதேனும் பொருள் கொண்டவையாக இருக்க விண்மீன்கள் மட்டிலும் முற்றிலும் பொருளற்றவையாக விழிநிறைத்து வெளி அமைத்து இருப்பதாக அவன் எண்ணினான். ஒரு விண்மீனைக்கூட தனித்துப் பார்த்ததில்லை என்று முன்பொருமுறை அவன் வியந்துகொண்டதுண்டு. ஒருமுறை நோக்கிய விண்மீனை மறுமுறை அடையாளம் கண்டுகொண்டதில்லை. ஒவ்வொரு நாளும் அங்கெழுவது ஒவ்வொரு விண்மீனா என்றும் தோன்றும்.

அன்று சித்தத்தின் இறுதித் துளியில் ‘நாளை’ என்றொரு சொல் எஞ்சியிருந்தது. முதல் விழிப்பில் அச்சொல்லே மீண்டும் எழுந்துவந்தது. நாளை! ஆனால் மறுகணம் சிறு துரட்டியால் குத்தப்பட்டதுபோல உடல் அதிர அச்சொல் அவனுள் உருமாறியது… ‘இன்று’. “ஆம், இன்று!” என்றபடி இரு கைகளையும் தரையில் அறைந்து எழுந்து அமர்ந்தான். சூழ நோக்கியபோது பாண்டவப் படைகளில் பந்தங்கள் ஒழுகி அலையத் தொடங்கியிருப்பதை கண்டான். வானை நோக்கி விடிவதற்கு மேலும் பொழுதிருப்பதை உணர்ந்தான். எழுந்து ஆடையிலிருந்த மண்ணையும் பொடியையும் உதறி உடல் நிமிர்த்திக்கொண்டான். தசைகள் இழுபட்டு நிமிர்கையில், எலும்புகள் ஓசையுடன் மூட்டுகளில் அமைகையில் எழும் உடலின்பமே அவனுக்கு இருக்கிறேன் என்னும் உணர்வென்றாவது. ஒவ்வொருநாளையும் அழகுறச் செய்யும் தொடக்கம்.

புலரியின் குளிர்காற்று உடலை மெய்ப்பு கொள்ளச் செய்தது. அதில் குதிரைகளும் யானைகளும் வீழ்த்திய சாணியும் சிறுநீரும், அரைபட்ட புல்லும் கலந்த மணம் நிறைந்திருந்தது. குலாடபுரியிலேயே அவன் பெரும்பாலும் யானைக்கொட்டிலருகேதான் துயில்வது வழக்கம். புலரியில் மட்டும் எழும் அந்த வாடையே புலரிக்கான மணம் என்று அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. அரிதாக சூதர் பாடல்களை செவிகொள்கையில் புலரி மணமென்பது மலர்களிலிருந்து எழுவது என்றும் புலரியின் ஓசையென்பது பறவைகளின் குரல்களே என்றும் அவர்கள் பாடக் கேட்பான். ஒருபோதும் அவன் அதை உணர்ந்ததில்லை. தொழுமணமும் யானைச்சங்கிலிகளும் குதிரைமணிகளும் ஒலிக்கும் ஓசை குளம்போசையுடன் கலந்தொலிக்கும் முழக்கமும் அச்சொற்களின் பொருளென்று அவனுள் மாறின.

அவன் சிறுகுடிலை அடைந்து அதன் வாயில் திரையை விலக்கி உள்ளே பார்த்தான். தென்மேற்கு மூலையில் அரவான் நிமிர்ந்த உடலுடன் கைகளை மடியில் கோத்து விழிமூடி ஊழ்கத்தில் அமர்ந்திருப்பதை கண்டான். அவன் முகம் கனவுகண்டு புன்னகைக்கும் குழந்தையினுடையதாக தோன்றியது. சிறிய சிவந்த உதடுகள் மெல்ல அசைவு கொள்கின்றனவா? திரும்பி வந்து குடிலுக்கு அப்பால் பாயில் ஒருக்களித்து துயின்றுகொண்டிருந்த ஸ்வேதனை அணுகி “மூத்தவரே…” என்றான். முதல் அழைப்பிலேயே விழித்துக்கொண்ட ஸ்வேதன் எழுந்தமர்ந்து “புலரி அழைப்பு எழுந்துவிட்டதா?” என்றான். “இல்லை. ஆனால் இன்னும் சற்று நேரத்தில் எழும்” என்றான் சங்கன்.

ஸ்வேதன் எழுந்து தன் ஆடைகளையும் குழலையும் புழுதி போக தட்டிக்கொண்டான். சங்கன் கிழக்கே குருக்ஷேத்ரத்தின் உயரமான எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ஏழு அடுக்குள்ள பொழுதறிவிப்பு மேடையை எண்ணிக்கொண்டான். கௌரவர்களும் பாண்டவர்களும் சேர்ந்து அமைத்த நிமித்திகர் குழு அங்கே முதல்தளத்தில் அமர்ந்திருந்தது. அவர்களின் அறிவிப்புகளை படைகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு முரசறைவோரும் எரியம்பு எய்வோரும் கொம்பூதிகளும் இரண்டாம் தளத்தில் நின்றனர். மூன்றாம் தளத்தில் படைக்கலமேந்திய காவலர். இரு பக்கமும் பல்லாயிரம் விழிகளும் செவிகளும் கிழக்கே அந்த மேடையைத்தான் கூர்ந்திருக்கின்றன என்று சங்கன் எண்ணினான்.

“உணவருந்தினாயா?” என்றான் ஸ்வேதன். “இல்லை, மூத்தவரே. இப்போதுதான் எழுந்தேன். தங்களை எழுப்பிவிட்டுச் செல்லலாம் என்றிருந்தேன்” என்றான் சங்கன். “அரவான் எங்கே?” என்று ஸ்வேதன் கேட்டான். சங்கன் “ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார்” என்றான். “நேற்று முன்னிரவில் அமர்ந்தது” என்றான் ஸ்வேதன். சங்கன் தலையசைத்தான். சங்கனை நோக்காமல் “அவள் எங்கே?” என்று ஸ்வேதன் கேட்டான். “அடுமனைப்பிரிவில் வைப்பறைகளின் இடுக்கில் அவள் அமர்ந்திருப்பதை நேற்று அந்தியில் பார்த்தேன்” என்று சங்கன் சொன்னான். “எவர் முகத்தையும் ஏறிட மறுக்கிறாள். எவர் சொல்லையும் செவி அறிவதில்லை. தெய்வமெழுந்தவள்போல் விழிகொண்டிருக்கிறாள்.”

ஸ்வேதன் அக்கறையில்லாதவன் போன்ற ஒலிக்குறிப்புடன் “அழுகிறாளா?” என்றான். சங்கன் “இல்லை. வேறெங்கோ இருந்துகொண்டிருக்கிறாள்” என்றான். ஸ்வேதன் “நான் அவனிடம் பொழுதணைகிறதென்று சொல்கிறேன். நீ ஒருங்கி உணவுண்டு சித்தமாகு. இன்று நம் நாள்” என்றான். இன்று எனும் சொல் சங்கனை அதிரச்செய்தது. “ஆம் மூத்தவரே, இன்று” என்றான். ஸ்வேதன் திரும்பிப் பார்க்கவில்லை. “நான் நேற்று முன்மாலையிலேயே இளைய பாண்டவரைக் கண்டு கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “நன்று!” என்றபடி அரவானை எழுப்ப குடிலுக்குள் நுழைந்தான்.

சங்கன் தன் புரவியிலேறிக்கொண்டு விரைந்து அடுமனைப் பகுதியை அடைந்தான். அங்கு அவனுக்கு அணுக்கமான அடுமனையாளர்கள் விதர்க்கரும் விடங்கரும் புன்னகையுடன் தலைவணங்கினர். “உணவு ஒருக்கமல்லவா?” என்று அவன் கேட்டான். “புலரியில் அடுமனை எழவேண்டியதில்லை என்று ஆணை. நேற்றைய உணவு பெருமளவு எஞ்சியுள்ளது. படைகளுக்கான உணவு அனைத்தும் இரவே அளிக்கப்பட்டுவிட்டன” என்றார் விதர்க்கர். “நன்று! சிறுபொழுது” என்றான் சங்கன். பின்னர் “அவள் என்ன செய்கிறாள்?” என்றான். “அவ்வண்ணமே” என்றார் விடங்கர். ஒருகணம் அவரை நோக்கிவிட்டு அவன் சென்று காலைக்கடன் முடித்து அங்கிருந்த கொப்பரையிலிருந்த சிறிதளவு நீரில் முகம் கைகழுவி வந்தமர்ந்தான்.

முந்தைய நாள் எஞ்சிய உணவு இரு மரத்தொட்டிகளில் அவன் முன் கொண்டுவைக்கப்பட்டது. பன்றியூன் துண்டுகளை இரு கைகளாலும் எடுத்து விரைந்து உண்டான். அப்பங்களையும் கள்ளையும் அருந்தி முடித்து எழுந்து கைகளை உதறியபடி “நான் படைமுகம் கிளம்புகிறேன்” என்றான். “வெற்றி சூழ்க!” என்றார் விடங்கர். சங்கன் “இந்நாட்களில் என் நாவும் வயிறும் மகிழும்படி உணவளித்தீர்கள், விடங்கரே. உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இச்சொல் ஒன்றே இப்போது என்னால் அளிக்கத்தக்கது” என்றான். விடங்கர் “இவ்வாய்ப்பும் இச்சொல்லும் இறை எங்களுக்கு அளித்த பரிசு. என்றும் எண்ணியிருப்போம், இளவரசே” என்றார்.

மீண்டும் அவன் தன் குடிலை அடைந்தபோது அங்கு அவனுக்கான கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் ஏவலர் காத்திருந்தனர். அவன் அவற்றை நோக்கியபடியே அணுகினான். அது அவனுடைய பிறிதுடல் என சிதறிக்கிடந்தது. அவ்வெண்ணம் எழுந்ததுமே உள்ளம் அதிர்ந்தது. அவன் சென்று நின்றதும் அவர்கள் அவன் தோளிலும் மார்பிலும் இரும்புவலையாலான கவசங்களை அணிவித்தனர். தோளிலைகளும் முழங்கைக்காப்பும் முழங்கால்காப்பும் கைகால்களில் மூட்டுக்காப்பும் பொருத்தி ஆணியிட்டு இறுக்கினர். அவன் எழுந்ததும் இடையில் இரும்புக்கச்சையை கட்டி அதில் உடைவாளையும் குத்துக்கத்தியையும் பொருத்தினர்.

அவன் விரலில் தோலுறைகளை அணிந்து விரல்களை நீவி இழுத்துவிட்டான். இரு கால்களிலும் இரும்புப் பட்டையிட்ட தோல்குறடுகளை ஏவலர் அணிவித்து இறுக்கிக் கட்டினர். தன் உடல் இருமடங்கு எடைகொண்டுவிட்டதென்று தோன்றியது. காலடி எடுத்துவைத்து சற்று நடந்தான். பின்னர் திரும்பி புன்னகைத்து “யானையென்று உணர்கிறேன்” என்றான். அவன் தலைக்கவசத்தை ஒரு வீரன் கையில் வைத்திருந்தான். அரைக்கணம் விழிதிருப்பியபோது தன் தலையே அவன் கையிலிருப்பதாக உளமயக்கெழ சங்கன் உரக்க நகைத்து “நன்று! உடைந்தால் மீண்டும் அணிந்துகொள்ள இன்னொரு தலை” என்றான். பின்னர் அதை கையில் வாங்கிக்கொண்டு “என் கதை தேரிலிருக்கட்டும். வில்லும் அம்புகளும் ஆவக்காவலனிடம்” என்றான். “ஆணை!” என்று ஏவலன் தலைவணங்கினான்.

சங்கன் காலடிகள் மண்ணில் அழுந்தி ஒலிக்க நடந்து ஸ்வேதனின் குடில் முகப்பை அடைந்தான். அங்கு ஸ்வேதனுக்கு இரண்டு ஏவலர் கவசங்களை அணிவித்துக்கொண்டிருந்தனர். கையுறைகளை இழுத்தணிந்தபின் எழுந்த ஸ்வேதன் அவனை நோக்கி திரும்பி “கற்சிலை போலிருக்கிறாய், இளையோனே” என்றான். “சற்றுமுன் யானை என உணர்ந்தேன்” என்றபடி சங்கன் அருகே வந்தான். ஸ்வேதன் அணிந்த இரும்புக்கவசத்தின் மார்புவளைவில் தன் முகத்தை பார்த்தான். அது நீரலையிலென வளைந்திருந்தது. “நேற்று நன்று துயின்றீர்களா, மூத்தவரே?” என்றான். “ஆம்” என்றான் ஸ்வேதன். “சற்றுநேரம்தான். ஆனால் ஆழ்ந்த உறக்கம்.”

“போருக்கு முன்னர் வீரர்கள் ஆழ்ந்துறங்குவர் என்று கேட்டிருக்கிறேன்” என்றான் சங்கன். “நானும் நன்கு உறங்கினேன். ஆனால் அது வழக்கமான உறக்கம் என்று எண்ணிக்கொண்டேன்.” ஸ்வேதன் “ஆனால் பின்னிரவிலேயே விழித்துக்கொண்டேன். என்னுள் ஏற்கெனவே படுகளம் பேரோசையுடன் நிகழத்தொடங்கிவிட்டது” என்றான். “நான் பார்க்கும் அனைவரும் போர்க்களத்துள் நிற்பதுபோன்ற விழிகளுடன்தான் தெரிகிறார்கள்” என்றான் சங்கன். ஸ்வேதன் “போரைப்போல மானுடன் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பிறிதொன்று இல்லை” என்றான். “நாகர் எழுந்துவிட்டாரா?” என்றான் சங்கன். “ஆம், ஆடைமாற்றிக்கொண்டிருக்கிறான்” என்று ஸ்வேதன் சொன்னான்.

“நாம் விடைகொள்கிறோம், மூத்தவரே. எனது இடம் இடது எல்லையில். தங்களது வலது எல்லை. இன்று போர் அணைந்து இரவெழுகையில் இறையருளிருந்தால் மீண்டும் பார்ப்போம்” என்றான் சங்கன். ஸ்வேதன் தன் உணர்வுகளை வென்று புன்னகைத்து “எங்கிருந்தாலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருப்போம், இளையோனே” என்றான். சங்கன் குனிந்து ஸ்வேதனின் கால்களைத் தொட்டு தலைசூடி “வாழ்த்துக, மூத்தவரே!” என்றான். “என்றும் என் தந்தையின் இடத்தில் தாங்கள் இருந்தீர்கள்.” ஸ்வேதன் உணர்ச்சிகளை உள்ளே சுருக்கிக்கொண்டு அவன் தலையில் கைவைத்து “சிறப்புறுக! தெய்வங்கள் துணையமைக! மூதாதையர் வாழ்த்துக!” என்று வாழ்த்தினான்.

குடிலுக்குள்ளிருந்து அரவான் பாண்டவப் படைகளுக்குரிய செம்மஞ்சள் வண்ண உடையுடன் வெளிவருவதை சங்கன் கண்டான். புன்னகைத்து “படைக்கோலம் பூண்டுவிட்டீர்கள், நாகரே” என்றான். அரவான் புன்னகைத்து “ஆம், நான் பிறிதொரு ஆடையை அணிவது வாழ்வில் முதல்முறை” என்றான். சங்கன் “பிறிதொருவர் ஆகிறீர்கள்” என்றான். வானில் ஒரு சிறுபறவை இன்குரலெழுப்பி கடந்து சென்றது. அரவான் அண்ணாந்து நோக்கி “நற்பொழுது” என்றான்.

சங்கன் தன் தேரில் ஏறி பாகனிடம் “படைமுகப்புக்கு” என்றான். தேர்த்தட்டில் அவனுடைய கதை வைக்கப்பட்டிருந்தது. வில்லும் ஆவநாழியும் கொண்டு ஆவக்காரன் நின்றிருந்தான். சங்கன் தேர்த்தட்டில் கைகளைக் கட்டியபடி நின்று இருபுறமும் பாண்டவப் படைகள் அரையிருளில் அசைவதை நோக்கினான். பந்தங்கள் அலைந்துகொண்டிருந்தன. படைவீரர்கள் அனைவருமே விழித்தெழுந்து ஒருக்கச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலில் கலைந்திருந்தாலும் அதற்குள் வழியும் நீருக்குள் படிகளின் வடிவம் என படையணிவகுப்பு தெரிந்தது. அவன் நோக்கியபடியே சென்றான். ‘என் படை!’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தது. ‘நான்!’ என அவ்வெண்ணம் வளர்ந்தது.

கிழக்கில் தொலைவில் புலரியெழுகையை அறிவிக்கும் ஏழு எரியம்புகள் ஒன்றன்மேல் ஒன்று எழுந்து இருண்ட விண்ணில் புதைந்தன. அவ்வொளியின் ஒலிவடிவமாக கொம்புகள் ஆர்த்தன. போர்முரசுகள் அதிரத்தொடங்கின. ஒரு முரசிலிருந்து பிறிதொன்று தொடுத்துக்கொண்டு விரிந்து ஒற்றைப்பேரலை என படைப்பெருக்கினூடாக கடந்து விளிம்புகளை நோக்கி சென்றது அவ்வோசை. தொடர்ந்து பெருமுழக்கத்துடன் படை தன்னுணர்வு கொண்டது. அத்தருணம் பாகனின் சவுக்கினூடாக புரவியை அடைந்து அதை ஓடச்செய்தது. சங்கன் “மெல்ல” என்றான். பாகன் புரவியின் மேல் மெல்ல தட்டி விரைவழியச் செய்தான். இடைச்சாலையினூடாக பலகை மேல் சகடங்கள் ஓசையிட தேர் விரைந்து சென்றது.

படை கிளர்ந்தெழுந்துவிட்டிருந்தது, அதற்குள் இருந்து பேருருக்கொண்ட பிறிதொன்று எழத் திமிறுவதுபோல. பெருவெள்ளம் எழுகையில் கங்கையின் நீருக்குள் போர்வைக்குள் போரிடும் பெருமல்லர்கள் இருப்பதாக சிற்றகவையில் அவன் எண்ணுவதுண்டு. கவசங்களை பொருத்தியவர்களும், காப்புகளில் ஆணியை இறுக்கிக்கொண்டிருந்தவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள். அனைவருமே உளவிசையால் உடல் ததும்பிக்கொண்டிருந்தனர். ஆகவே ஒவ்வொன்றையும் மிக விரைவில் ஆற்றினர். ஒருவரையொருவர் நோக்கி வீசும் கையசைவுகளுடன் கூச்சலிட்டனர். எதையேனும் எடுப்பதற்கு ஓடிச்சென்றனர். சந்துவழியில் எதிர்ப்பட்டவர்களிடம் ஒற்றைச் சொல்லாடினர். சிலர் வெடித்து நகைத்தனர். சிலர் இரு கைகளையும் விரித்து உடலை பெருக்கிக்கொள்வதைப்போல் நெஞ்சு விரிப்பதை, சிலர் தங்கள் படைக்கலங்களை தீட்டி கூர்நோக்குவதை அவன் பார்த்தான்.

படைகளில் பெரும் சோர்வு ஒன்றிருப்பதாக முந்தைய நாள் ஸ்வேதன் சொன்னதை நினைவுகூர்ந்தான். அத்தருணத்தில் அவர்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்தவர்களாகவே தோன்றினர். அவன் விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். ஊக்கமும் திளைப்புமே தெரிந்தது. ஆனால் சற்றுநேரம் கழித்து இயல்பாக ஒருவனின் விழிகளை நோக்கியபோது அவன் உணர்ந்தான், அவனிடம் போருக்குரிய உணர்வு இல்லை என. உடனே அத்தனை முகங்களிலும் அதை காணலானான். அவர்கள் ஒரு பெருவிழவுக்கு எழும் கொண்டாட்டத்தையே கொண்டிருந்தனர். போர் ஒரு பெருவிழவு, ஆனால் இறப்பால் அடியிடப்பட்டது. அனைத்திற்கும் அடியில் அச்சமென ஒன்று இல்லாமலிருக்காது. பொருளின்மை ஒன்றை உளம் சென்று தொடாமலிருக்காது.

போர்முகம் கொள்ளும் படைவீரர்களின் விழிகளில் வெறி நகைப்பும், புரிந்துகொள்ள இயலாமை ஒன்றின் திகைப்பும் தெரியுமென்று அவன் ஆசிரியர் சொன்னதை நினைவுகூர்ந்தான். “இவர்கள் போரை எதிர்நோக்கவில்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். தங்கள் முன்னணிப்படைவீரர் இறந்து விழும்போது, பின்னால் செல்பவர்கள் அந்தப் பிணக்குவையில் முட்டி விழுந்து குருதிபூசி எழுந்து நிற்கும்போது, அருகே நின்றிருப்பவர் அலறிவிழத் தொடங்கும்போது, என்றும் கண்டு கண்பழகிய படைக்கலங்களின் கூர்களனைத்தும் புதுப்பொருள் கொள்ளத் தொடங்கும்போது இக்கொண்டாட்டம் நீரலைபட்டு சுடர்கள் அணைவதுபோல் மறையும். இவர்கள் என்ன செய்வார்கள்? அஞ்சி அலறியபடி பின்வாங்குவார்களா?

பின்வாங்கும் படை என்பது அதிலுள்ள அனைவரையும் அடித்துச் சுழற்றிக் கொண்டுசெல்லும் பேராற்றல் கொண்டது. பின்வாங்கும் எண்ணம் அனைவருக்கும் எழவேண்டியதில்லை. எவரோ ஒருவர் உள்ளத்தில் தோன்றினால் போதும். சொல்லின்றியே அது பரவும். கணப்பொழுதில் முழுப்படையும், வளைந்து பின்மடிந்துவிடும். அதன்பின் எதுவும் அவர்களை தடுக்கவியலாது. குலாடகுடியின் முதல் போர். இதில் அவர்கள் பின்வாங்கினால் பெரும்போர்களுக்குரியவர்களல்ல நிஷாதர் என்னும் இழிசொல் மீண்டும் உறுதிப்படும். இன்னும் ஆயிரமாண்டுகாலம் குலாடர் அரசர்களென்று அறியப்பட இயலாது.

இப்போரில் ஒருவர் எச்சமின்றி கொல்லப்பட்டால்கூட அவர்களின் புகழ் நிலைகொள்ளும். அவர்களை பின்னகர விடக்கூடாது. பின்னகர்ந்தாலும் அம்புகளால் கொன்று முற்றழிக்கப்படும்படி அமைக்கவேண்டும் தன் படைநிலையை. ஆனால் அதை முன்னரே ஷத்ரியர் கணித்துவிட்டனரா? அவர்களின் படைகளை அதனால்தான் முன்னால் நிறுத்தினார்களா? அவர்களுக்கு நேர்பின்னால் திருஷ்டத்யும்னனின் படைகளும் அதற்குப் பின்னால் நகுலனின் படைகளும் நின்றன. பின்னகர விடாத தடைச்சுவர்கள் அவை. அவ்வாறென்றால் இன்று அவர்களின் நாள். பலிபீடம் ஒருங்கிவிட்டிருக்கிறது.

படைமுகப்பில் அவனுடைய தேர் வந்து நின்றபோது அவன் உள்ளம் எண்ணங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. இடையில் கைவைத்தபடி அவன் தன் படைகள் அணிவகுப்பதை நோக்கி நின்றான். ஒவ்வொருவரும் முன்னரே தங்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தை சென்றடைய அரைநாழிகைக்குள் அவன் படை செங்கல் அடுக்கிக் கட்டப்பட்ட சுவராகி மடிந்து மாளிகையாகி எழுந்தது. சங்கன் எங்கேனும் சிறு பிழையோ பழுதோ உள்ளதா என்று விழிகளால் தொட்டு தேடினான். ஒவ்வொன்றும் முழுதமைந்திருந்தன. ஒவ்வொரு படைவீரனும் முற்றிலும் அணியும் ஆடையும் கொண்டிருந்தான். படைக்கலங்களின் விளிம்புகள் ஒற்றை நேர்கோடென நின்றன.

விழிசுழன்று மீண்டும் வருகையில் அவன் ஒரு படைக்கலம் சற்றே விலகி நிற்பதை கண்டான். அது அவனுக்கு விந்தையான ஓர் ஆறுதலை அளித்தது. அதை சீரமைக்க முயலாமல் புன்னகையுடன் கடந்து அப்பால் சென்றான். படைமுகப்பில் வந்து அவன் தேர் நின்றபோது அவனுக்குப் பின்னால் குலாடர்களின் படை பன்னிரண்டு நிரைகளாக நின்றது. அங்கிருந்து அவனால் பாண்டவப் படைகளின் விரிவை உளத்தால் அறிய இயலவில்லை. அவன் படை முப்புரிவேலின் ஒரு முகம். நடுவில் உத்தரனின் படை. அப்பால் ஸ்வேதனின் படை. வேலுக்கு ஏழு கவர்கொண்ட பிடியென பாண்டவர்களும் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும்.

படைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நீளுருக்கொள்வதை அவன் கண்டான். பொழுது எழுவதற்காக பாண்டவப் படை காத்து நின்றது. முகில்களையே அவர்கள் நோக்கிக்கொண்டிருந்தனர். சங்கன் செருகளத்தின் செம்மண் பரப்பை பார்த்தான். முந்தைய நாள் அதில் விழுந்த காலடிகள் அனைத்தையும் இரவெலாம் சுழன்று வீசிய காற்று அகற்றி மெல்லிய செவ்வலைவெளியை உருவாக்கியிருந்தது. தோல் உரிக்கப்பட்ட ஊன்பரப்பென அது உயிரசைவு கொண்டிருப்பதாக தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் பல்லாயிரம் அம்புகள் எழுந்து அதன் மேல் தைக்கும். பல்லாயிரம்பேர் குருதி வழிய அலறி அதில் விழுவார்கள். அதில் உடல் புதைந்து துடித்து உயிர் விடுவார்கள். அது குருதிச்சேறென்றாகி மிதிபட்டு குழம்பும். அதன் மடிப்புகளில் குருதி ஓடையென செல்லும்.

அவ்வெண்ணம் தன்னுள் எந்த அச்சத்தையும் உருவாக்கவில்லை என்று அவன் உணர்ந்தான். ஆனால் கிளர்ச்சியையும் உருவாக்கவில்லை. முன்னரே நிகழ்ந்து முடிந்த ஒன்றை எத்தொடர்பும் இன்றி எண்ணுவதாகவே தோன்றியது. முகில்களின் விளிம்புகள் ஒளிகொள்ளத் தொடங்கின. அவன் கையசைக்க கழையறிவிப்பாளன் தன் கணுக்கழையை நாட்டி அதன் மேல் தொற்றி அணிலென ஏறி ஒரேகணம் நாற்புறமும் நோக்கி உடனே கீழிறங்கினான். “படைகள் முற்றணிகொண்டுவிட்டன! முப்புரிவேல் கௌரவப்படை நோக்கி நின்றுள்ளது. மறுபுறம் கலைமான் கொம்பு எழுந்துள்ளது. அதன் முகப்பின் முதல்கூர் என பிதாமகர் பீஷ்மரின் படை. பீஷ்மர் தன் வில்லும் அம்பும் கொண்டு தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறார்” என்றான்.

சங்கன் மீண்டும் தன் உடலை நிமிர்த்தி கைகளை இறுக்கி பின்பு தளர்த்தினான். துளித்துளியென பொழுது கடந்துகொண்டிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் விராடர் படைப்பிரிவின் கூர்மூக்கின் வளைவு துலக்கமாக தெரிந்தது. அங்கே அரவான் இருக்கக்கூடும் என்று எண்னினான். அரையிருளில் விழிகூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். நோக்க நோக்க தெளிவதுபோல் காலை எழுந்தது. ஒருகணத்தில் அவன் அரவானை பார்த்தான். படைமுகப்பில் இடையில் தன் நாகக்கத்தியுடன் வெறுந்தரையில் அவன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் உத்தரன் தேரில் நின்றிருக்க வலது பக்கம் விராடரின் தேர் நின்றது. அரவான் தனித்து நின்றிருந்தான். காட்டிலிருந்து ஓர் இலை மட்டும் உதிர்ந்து விலகிக்கிடப்பதுபோல. அப்படையினர் அனைவரும் நிகழப்போவதென்ன என்று அறிந்திருந்தார்கள் என்று தோன்றியது.

சங்கன் மீண்டும் கையசைக்க கழையன் மேலேறி நோக்கி இறங்கி “கௌரவப் படைகளில் அனைவரும் கொடியுடன் தேரிலெழுந்துவிட்டனர், இளவரசே. கலைமான் கொம்பின் பத்து கவர்முனைக் கூர்கள் என துரோணரும் கிருபரும் சல்யரும் துரியோதனரும் அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் கிருதவர்மரும் மாளவர் இந்திரசேனரும் கலிங்கமன்னர் ஸ்ருதாயுஷும் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரும் நின்றிருக்கிறார்கள்” என்றான். “போர் வெடிப்புறுவதற்கு முந்தைய கணங்கள் முற்றமைந்துவிட்டன என்பதை படைநிலைகள் காட்டுகின்றன. நம் படைகளில் விழிதொடும் எல்லை வரை அசைவின்மை ஆற்றல்கொண்டு நின்றுள்ளது” என்றான்.

சங்கன் கைவீசினான். அவன் கழையை சரித்தபடி முன்னால் சென்று நின்றான். சங்கன் பெருமூச்சுவிட்டு தன் வில்லை எடுத்து இணையாக நிறுத்தி அதன் நாணை கையால் வருடினான். அவன் மட்டுமே கேட்கும்படி அது “ஆம்” என விம்மியது. ஓர் அம்பை எடுத்து அதில் குலாடகுடியின் முத்திரையை பார்த்தான். முதல் அம்பு. அதற்கு இரையாகும் கௌரவ வீரன் இப்போது பொறுமையிழந்து போர் தொடங்குவதற்காக காத்திருப்பான். கனியின் கனிந்த காம்பு என அவன் கால் மண்ணிலிருந்து எழ வெம்பிக்கொண்டிருக்கும்.

வானில் ஒற்றை எரியம்பு எழுந்து சுடர்ந்து அணைந்தது. படைகளிலிருந்து குரலற்ற ஓசை ஒன்று முழக்கமென எழுந்து சுழன்றது. முகில்கள் ஒளிகொள்வதை சங்கன் கண்டான். ஒவ்வொரு கணமும் அத்தனை நீளம் என அப்போதறிந்தான். இரண்டாவது அம்பு எழுந்து வெடித்து அணைந்தது. செவிகள் மேலும் மேலும் துலங்க பெருமுழக்கத்திற்குள் ஒவ்வொரு தனியோசையும் தெளிந்தது. ஒவ்வொரு படைக்கலமும் தனியாக ஒலித்தது. ஒவ்வொரு மூச்சொலியையும் தனித்தனியாக கேட்க இயலும் என தோன்றியது. தலைப்பாகைகள் வண்ணம் துலங்கின. வாள் முனைகளில் ஒளிப்புள்ளிகள் குடியேறின. தேர்வளைவுகளும் கவசங்களின் பரப்புகளும் மெழுக்கும் மினுக்கும் கொண்டன. புலரியில் அவன் அன்று அடைந்த சொல்லை மீண்டும் அடைந்தான். ‘இன்று! ஆம், இன்று!’

மூன்றாவது அம்பு எழுந்து அணைந்ததும் பொழுது அறிவிப்பு முரசுகளும் கொம்புகளும் முழங்கின. தொடர்ந்து இரு படைகளிலும் பல்லாயிரம் போர்முரசுகள் ஒற்றைப் பெருங்குரலில் ஒலித்தன. அவ்வோசை கேட்டு உடலில் குடியேறிய விதிர்ப்புடன் அவன் விழிகள் படைகளில் அலைந்தன. மறுகணம் சித்தம் சென்று தொட அவன் ஆழம் திகைத்தெழுந்தது. விழிகளால் துழாவி அரவானை பார்த்தான். அவன் தன் நாகக்கத்தியை தூக்கியபடி கூச்சலிட்டு முன்னால் ஓடி செருகளத்தின் எல்லையைக் கடந்து சிவந்த மண்ணில் விழுவதுபோல சென்று முழங்கால் மடிய அமர்ந்து வான் நோக்கி இரு கைகளையும் விரித்து மும்முறை குரலெழுப்பியபின் இடக்கையால் தன் குடுமியை பிடித்திழுத்து வலக்கையால் தன் கழுத்தை கத்தியால் அறுத்தான்.

இழுத்த இடக்கையில் அவன் தலை தனியாக பிரிந்து விலகி அதிர்ந்தது. வலப்பக்கமாக அவன் உடல் மண்ணில் விழுந்தது. அவன் தலையை இடக்கை நீட்டி பிடித்திருக்க அவன் உடல் அங்கு கிடந்து துடிப்பதை சங்கன் பார்த்தான். தன் இடத்தொடை வெட்டுண்டதுபோல் துள்ளிக்கொண்டிருப்பதை உணர்ந்து அதை கையால் பற்றி நிறுத்தினான். படைமுகப்பில் நின்ற உத்தரன் தன் வாளை உருவி மும்முறை ஆட்டி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினான்.    அக்கூச்சலுடன் அவன் தேர் கிளம்பிய அக்கணம் “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற போர்க்குரல் எழுந்தது. பாண்டவப் படை பேரலையென பெருகிச் சென்று செருகளத்தை அடைந்தது.

முந்தைய கட்டுரைசாதியும் நட்பும்
அடுத்த கட்டுரைஇலக்கியத்திற்காக ஒரு தொலைக்காட்சி