‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41

tigதுரியோதனன் “அஸ்தினபுரியிலிருந்து நீ விரும்பியதை கொண்டுசெல்லலாம், இளையோனே” என்றான். “இங்கு நீ கௌரவரில் ஒருவன். கருவூலத்தில் நூற்றொன்றில் ஒன்று உன்னுடையது. அஸ்தினபுரியின் படைகளிலும் நூற்றொன்றில் ஒன்று உனக்குரியது.” யுயுத்ஸு “இங்கிருந்து நான் எதையும் எடுத்துச் செல்லலாகாதென்று உறுதிகொண்டிருக்கிறேன். ஆகவே இந்நகரின் எல்லையில் இவ்வாடைகளையும் களைந்து மரவுரி அணிந்தபடி இளைய யாதவரை நோக்கி செல்லவிருக்கிறேன்” என்றான்.

“நன்று! அது உன் விருப்பம். இங்கிருந்து நினைவுகளையும் உணர்வுகளையும்கூட எடுத்துச் செல்லவேண்டியதில்லை, இளையோனே” என்றான் துரியோதனன். குண்டாசி “அதாவது அஸ்தினபுரியின் படைசூழ்கைகளை அவையில் அமர்ந்து அறிந்திருக்கிறாய். அத்தகவல்களை நீ பாண்டவர்களுக்கு சொல்லக்கூடாது என்று பொருள்” என்றான். சினத்துடன் திரும்பி நோக்கிய துரியோதனன் பின்னர் தன்னை வென்று மெல்ல சிரித்து “இங்கு உன் சிறுமையினூடாக இருப்பு அறிவிக்க வேண்டுமென்று எண்ணுகிறாய் அல்லவா?” என்றான்.

“அல்ல, இங்கு வருகையில் இத்தருணத்தின் மங்கலத்தை கெடுக்க எதையும் செய்யக்கூடாது என்று எண்ணிதான் வந்தேன். ஆனால் அமர்ந்த பின் தோன்றியது நான் எதையும் குலைக்கவில்லை என்று. ஏனெனில் மிகச் சிறியவன். களிமகனாகவும் வீணனாகவும் என்னை ஆக்கிக்கொண்டதனூடாக என் சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் செய்து கொண்டவன். ஆகவே எந்த அவையில் எதை சொன்னாலும் எதுவும் நிகழ்வதில்லை. சொல்வதன் பயன் எனக்கு மட்டுமே. அந்தப் பயன் ஒவ்வொரு தருணத்திலும் எது உண்மை என்று மழுப்பாமல் தொட்டெடுப்பது” என்றான் குண்டாசி. “எனக்கு பலிகொள்ளும் பள்ளிவாள் போன்ற இரக்கமில்லாத கூர்மைகொண்ட உண்மை தேவை, மூத்தவரே. நான் பேசுவது அதன்பொருட்டே.”

“இவன் நம் தந்தையிடம் சொல்பெறும் தருணத்தில் அங்கிருந்தேன். தந்தை எந்தத் தயக்கமுமின்றி இவனுக்கு சொல்லளிப்பார் என்று அறிந்திருந்தான். வெளிவரும்போது என்னிடம் சொன்னான், அன்னையரும் மறு எண்ணமின்றி வழியனுப்புவார்கள் என்று. நீங்களும் அவ்வாறே என்று நான் அறிந்திருந்தேன். நம் அனைவருடைய பெருந்தன்மையை பயனென ஈட்டி இவன் இங்கிருந்து கிளம்புகிறான். அப்பெருந்தன்மையை நாம் எதற்காக நடிக்கிறோம்? மெய்யாகவே அப்பெருந்தன்மை நமக்கிருக்குமென்றால் ஏன் நாம் அவர்களை காட்டுக்கு துரத்தினோம்? ஏன் நிலம் மறுத்தோம்? அவர்களின் அரசியை அவைச் சிறுமை செய்தபோது எங்கு சென்றது இப்பெருந்தன்மை?” என்று குண்டாசி கேட்டான். ஏதோ சொல்ல வாயெடுத்த சுபாகு துரியோதனனின் முகத்தை பார்த்த பின் அடக்கிக்கொண்டான்.

“நாம் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொன்றாக நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம். அத்தருணங்களுக்கிடையே இணைப்பென்றிருப்பது நாம் பின்னர் எண்ணி உருவாக்கிக்கொள்ளும் எண்ணங்கள் மட்டும்தானா?” குண்டாசி யுயுத்ஸுவை பார்த்தான். “ஆகவே கௌரவ நூற்றுவரில் எஞ்சியிருக்கும் சிறுமையின் முகமாக நின்று இவனிடம் பேசலாமென்று தோன்றியது. உன்னை நாங்கள் வாழ்த்தி அங்கு அனுப்புவது அது எங்கள் அச்சமின்மையின் அடையாளமாக அவர்களுக்கு தெரியட்டும் என்பதற்காகத்தான். மண் மறுத்ததனால் நாங்கள் சிறுமை கொண்டவர்களல்ல என்றும் அரசியை அவையிழிவு செய்ததனால் சிறியோரும் அல்ல என்றும் இது காட்டக்கூடும். ஆம், அதன்பொருட்டே.”

“வாயை மூடு!” என்று துச்சாதனன் கூவினான். “ம்” என்று அவனை துரியோதனன் அடக்கினான். குண்டாசி அந்த எதிர்ப்பாலேயே ஊக்கம் பெற்று தொடர்ந்தான். “அதைவிட ஒன்றுண்டு. நாளை நாங்கள் நூற்றுவரும் களத்தில் மடிவோம் எனில் தார்த்தராஷ்டிரக் குருதியின் ஒரு துளியென நீ அங்கு எஞ்சியிருப்பாய். இப்புவியில் ஒரு துளியேனும் நம் குருதி எஞ்சவேண்டும். குருகுலத்தின் அறத்தின் வடிவென நீ இன்று அங்கு செல்கிறாய். நாளை உன்னை அவர்களும் அவர்களின் சூதர்களும் அவ்வாறு சொல்லவும் கூடும். ஆனால் நீ தார்த்தராஷ்டிரன். எங்கள் அனைவரிலும் இருக்கும் அத்தனை இழிவும் சிறுமையும் உன்னிலும் இருக்கும்.”

குண்டாசி கூவினான் “எத்தனை மதிக்கூர்மை! எவ்வளவு முன்திட்டம்! பேருருக்கொண்டு பல்லாயிரம் கைகளால் யாதவர் கௌரவர்களை முற்றழிக்கலாம். அவரது காலடியிலேயே நாங்கள் ஒரு துளியென எஞ்சியிருப்போம். எங்களை அழிக்கையிலேயே எங்களில் ஒரு பகுதியை அவர் பேணுவார். நன்றல்லவா? பெரும் காவியஆசிரியன் ஒருவன் எழுதிய நாடகத்தருணமல்லவா? இதற்கிணையான சூழ்ச்சியை இந்திரனும் செய்ததில்லை. ஆம், அதன் பொருட்டே உன்னை அங்கு அனுப்புகிறோம்.”

யுயுத்ஸு “எத்தருணத்தையும் இவ்வாறு எல்லாத் திசைக்கும் இழுக்கமுடியும், மூத்தவரே” என்று அமைதி மாறாத குரலில் சொன்னான். “எத்திசைக்கு இழுத்தாலும் அங்கு ஓர் உண்மையும் நின்றிருக்கும். நான் அவ்வாறு எண்ணம் சூழ்வதில் நம்பிக்கை கொண்டவனல்ல. ஒருபோதும் அதை இயற்றியவனுமல்ல.” குண்டாசி நகைத்து “நன்று! பெருந்தன்மையை எதிர்கொண்ட நீ சிறுமையை எப்படி எதிர்கொள்வாய் என்று பார்க்கிறேன்” என்றான். பற்களைக் கடித்து சிரிப்பதுபோல் முகம் இளிக்க “இங்கிருந்து கிளம்புகையில் உன் அன்னையின் சொல்லை நீ பெற முடியாது என்று என்னிடம் சொன்னாய். ஆனால் மெய்யாகவே உனக்குக் கிடைத்தது உன் அன்னையின் சொல் மட்டுமே. பிறர் தங்கள் பெருந்தன்மையால் அதை அளித்தார்கள். உன் அன்னை தன் சிறுமையால் அதை அளிக்கிறாள். அது மேலும் மெய்.”

“ஆம், அவள் தன் சிறுமையால் உன்னை உள்ளூர வாழ்த்துகிறாள். ஆகவே அதை தன்னிடமிருந்தும் மறைத்துக்கொள்கிறாள். நீ இன்று திருதராஷ்டிரரை விட்டு கிளம்புவது எந்த அறத்தினாலும் அல்ல. காந்தாரத்திலிருந்து இங்கு வந்து வைசியர் மகளாக இருப்பினும் சூதர்குலத்தவளாக ஐம்பதாண்டுகள் அரண்மனையில் சிறுமை பெற்று அமர்ந்திருந்த உன் அன்னையின் உளஆழத்து வஞ்சமல்லவா அது? அவள் அளித்த நஞ்சை நீ உன் தந்தைக்கு ஊட்டி கிளம்பிச் செல்கிறாய்” என்றான் குண்டாசி.

யுயுத்ஸு எந்த முகமாற்றமும் இல்லாமல் “அவ்வாறும் இருக்கலாம். ஒவ்வொரு தருணத்திலும் ஓராயிரம் தெய்வங்கள் நிற்கின்றன. ஊசிமுனைமேல் ஓராயிரம் வேழங்கள் என்பார்கள். சொல் பிரித்தாடுவதில் எனக்கு தேர்ச்சியில்லை. தங்கள் சொற்களையும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்” என்றான். அவன் கண்களையே குண்டாசி கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். “நீ இங்கு நடிக்கிறாய். இத்தருணத்தை அந்நடிப்பினூடாக கடந்து செல்கிறாய். ஆனால் இந்நகரைவிட்டு நீங்குகையில் உன் உள்ளத்திலிருந்து கொந்தளித்துக்கொண்டிருப்பது நான் இப்போது சொன்ன இதுவாகவே இருக்கும்” என்றான்.

“இல்லை மூத்தவரே, இங்கிருந்து கிளம்புகையில் நன்றோ தீதோ என்னிடம் ஒரு சொல்லும் எஞ்சாது” என்று யுயுத்ஸு சொன்னான். “நீ காந்தாரப்பேரரசியிடம் என்ன சொன்னாய்? அதை மட்டும் சொல். நான் அறியவிரும்புவது அதை மட்டும்தான்” என்றான் குண்டாசி. “நான் அவர்களிடம் சென்று பணிந்து இளைய யாதவருக்கு என்னை ஒப்புக்கொடுக்கவிருக்கிறேன். இத்தருணம் அவருடன் நிற்பவர்கள் யார் என்று துலங்கும்பொருட்டே இங்கு நிகழ்கிறது. ஆகவே இதை நான் தவறவிடவில்லை. என்னை வாழ்த்துக அன்னையே என்றேன். அன்னை தன் இரு கைகளையும் என்னை நோக்கி நீட்டினார். நான் அருகே சென்று குனிந்ததும் என் தலைமேல் கைகளை வைத்து நன்று சூழ்ந்தாய், உன்னிலிருந்து வழிகாட்டும் உன் தெய்வம் உனக்கு அருளட்டும், நலம் சூழ்க என்றார்” என்றான் யுயுத்ஸு.

குண்டாசி “உன் அன்னையைப்பற்றிய ஒரு சொல்லும் அங்கு பேசப்படவில்லையா?” என்றான். “இல்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “நீ அன்னையை எண்ணினாயா?” என்றான் குண்டாசி. “ஆம்” என்று யுயுத்ஸு சொன்னான். “நீ எண்ணியதென்ன?” என்றான் குண்டாசி. “பேரரசியிடம் விடைபெற்றுவிட்டேன் என்று அன்னையிடம் சொல்லவேண்டுமென்று” என்று யுயுத்ஸு சொன்னான். “அல்ல, அதற்கப்பால் நீ ஒன்று எண்ணியிருப்பாய். அது என்ன?” என்றான் குண்டாசி. யுயுத்ஸு “அன்னை என்னை வாழ்த்தி அனுப்பமாட்டார். ஒருகணமும் திருதராஷ்டிரரிடமிருந்து தன்னை அவர் பிரித்துக்கொள்ள மாட்டார் என்று எண்ணினேன்” என்றான்.

“இல்லை! இல்லை! அதற்குமேல் நீ ஒன்று எண்ணினாய். அதை நான் இப்போது சொல்கிறேன்” என்றபடி குண்டாசி பீடத்திலிருந்து எழுந்தான். “திருதராஷ்டிரரை பேரரசி கைவிட்டார், வைசியஅரசி கைவிடவில்லை என்று உன் அன்னை ஓர் உளநிறைவை அடைவாள். ஆகவே அவள் வாழ்த்தாவிட்டாலும் நன்று என்று நீ எண்ணினாய்” என்றான். “ஆம், அதை எண்ணினேன்” என்றான் யுயுத்ஸு. “சிறுமை! இந்த ஒரு துளிச் சிறுமை போதும், நீ இன்றுவரை நடித்த நன்மை அனைத்தையும் அது நஞ்சென்று ஆக்கிவிடும்” என்றான் குண்டாசி.

“அது சிறுமையென்று நான் எண்ணவில்லை. சிறுமையென்றாலும்கூட என் அனைத்துச் சிறுமைகளுடன் என்னைக் கடந்து செல்லும் பேருருவனுடன் செல்லவே விரும்புகிறேன்” என்றான் யுயுத்ஸு. குண்டாசி பற்களைக் காட்டி நகைத்தபோது பசியுடன் சீறும் ஓநாய் போலிருந்தான் “நீ உன் அன்னையைப்பற்றி எண்ணியபோது பேரரசியும் அவளைப்பற்றி எண்ணினார். உன் அன்னையிடம் வாழ்த்துபெற்ற பின்னர்தான் தன்னை சந்திக்க வந்தாயா என்று உன்னிடம் கேட்க பேரரசி எண்ணினார். ஆனால் அதை கேட்காமல் தவிர்த்தார்” என்றான். “எண்ணியிருக்கலாம்” என்று யுயுத்ஸு சொன்னான். “அது அவர் கொண்ட சிறுமை” என்றான் குண்டாசி.

நகைத்தபடி திரும்பி துரியோதனனிடம் “மூத்தவரே, ஒரு மாறுதலுக்காக நாம் அனைவரும் ஏன் அவரவர் சிறுமைகளை படைக்கலங்களாக வெளியே எடுத்து அவற்றை வைத்து போராடக்கூடாது? பெருந்தன்மையை கவசங்களாக வேண்டுமானால் அணிந்துகொள்ளலாம்” என்றான். துரியோதனன் “உன்னில் இருந்து மகிழும் அந்த இருண்ட தெய்வத்தை நான் நன்கு அறிவேன். இத்தருணத்தை இரக்கமின்றி எதிர்கொள்கிறாய் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். அதே இரக்கமின்மையுடன் நீ இந்த ஆடலை இங்கு ஏன் நிகழ்த்துகிறாய் என்று எண்ணிப்பார்” என்றான்.

“எதன் பொருட்டும் அல்ல. உண்மையின் பொருட்டு, உண்மையின் பொருட்டு மட்டுமே” என்று உரத்த குரலில் குண்டாசி சொன்னான். “சற்று ஒதுங்கியிருந்து அவ்வுண்மையை ஆராய்ந்து பார்” என்றபின் துரியோதனன் யுயுத்ஸுவிடம் “நன்று இளையோனே, இப்போது கௌரவர்களின் அறியாத பக்கங்களையும் பார்த்துவிட்டாய். சென்று உன் தலைவனிடம் சொல், இந்தப் போர் வென்றாலும் தோற்றாலும் நான் நிறைவு கொள்வேன் என்று. எது எனக்கு அளிக்கப்பட்டதோ அதை முழுமையாக நிறைவேற்றுகிறேன் என்று” என்றான்.

யுயுத்ஸு தலைவணங்கினான். துரியோதனன் “என் தம்பியரில் உள்ளத்திற்கு மிக அணுக்கமானவனை யுதிஷ்டிரனிடம் அனுப்புகிறேன். இனி அவன் ஐவருக்கு மூத்தவன்” என்றான். யுயுத்ஸு மீண்டும் தலைவணங்கி திரும்பிச் சென்றான். அவன் செல்வதை நோக்கி நின்றிருந்த துச்சாதனன் நீள்மூச்செறிந்தான். துர்மதனும் சுபாகுவும் உடல்தளர்ந்தனர். துரியோதனன் பீடத்தில் சாய்ந்து கால்நீட்டினான்.

குண்டாசி “அவன் ஏன் செல்கிறான் என்று நான் சொல்கிறேன். ஒருவேளை இங்கு போரில் நாம் அனைவரும் இறந்தால் நம் நிலத்துக்கு அவனை துணையரசனாக ஆக்கி அவர்கள் ஆள்வார்கள். ஒருவேளை அவர்களும் இறந்தால் முழுநாட்டுக்கும் அவனே முடிசூடக்கூடும். ஏனெனில் ஒருநாள் அஸ்தினபுரியின் முடியை அவன் சூடுவான் என்று நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். பீடத்திலிருந்து எழுந்து நின்று “அவனை அழையுங்கள்! இதை அவனிடம் நான் சொல்ல வேண்டும். அவனிடம் நான் காட்டவேண்டிய இறுதிச் சிறுமை” என்றான்.

துரியோதனன் “ஆம், என்னிடமும் அதை நிமித்திகர்கள் சொன்னதுண்டு. அவன் ஒருவேளை முடிசூடக்கூடும்” என்றான். குண்டாசி துரியோதனனை சில கணங்கள் பார்த்துவிட்டு மீண்டும் பீடத்தில் அமர்ந்தான். அவனை இயக்கிய விசை தளர்ந்து இருமல் ஆட்கொண்டது. இருமி இருமி அவன் உடல் துவண்டது. கால்கள் வலிப்புகொண்டவைபோல இழுபட்டன. கண்களில் நீர் வழிய மெல்ல மீண்டு அவன் திரும்ப துர்மதன் கோளாம்பியை எடுத்து நீட்டினான். அதில் துப்பி ஓய்ந்து தளர்ந்து அவன் பீடத்தில் சாய்ந்தான். அதுவரை உருவிலாது அங்கிருந்த ஒரு தேவன் வெளிப்பட்டதுபோல அங்கிருந்த அனைத்து இறுக்கங்களும் உணர்வுகளும் மறைந்து தாளமுடியாத வெறுமை உருவாகியது. கணம் கணமென அது பெருகியது. துரியோதனன் மட்டும் அதே நிமிர்வுடன், அசைவின்மையுடன் அமர்ந்திருந்தான்.

பெருமூச்சுடன் மீண்டு வந்த குண்டாசி அரைத்துயிலில் தழைந்த தன் இமைகளை மேலே தூக்கி இருமுறை தொண்டையைச் செருமி “சொல்க, மூத்தவரே! சொல்வதாகச் சொன்னீர்களே! நான் இந்த நாடகத்தை ஏன் இங்கு நடத்துகிறேன்? என்னை அறிஞனென்றும் இரக்கமில்லாமல் உண்மையை நாடிச் செல்பவன் என்றும் எனக்கு நானே காட்டிக்கொள்ளவா?” என்று கேட்டான். “அல்ல” என்று துரியோதனன் சொன்னான். “நீயும் தார்த்தராஷ்டிரனே. எங்கள் அனைவருக்குள்ளும் நீ கொண்ட அறம் சற்று குடியிருக்கிறது. ஆகவே நாங்கள் அனைவரும் கொண்ட தீமையும் உன்னிலிருக்கிறது. அதை வெல்லத்தான் இத்தனை நஞ்சை நீ அருந்திக்கொண்டிருக்கிறாய்.”

குண்டாசி அவனை சிலகணங்கள் கூர்ந்து பார்த்தபின் உதடுகள் வளைய நகைத்து “என்னை புண்படுத்தி துரத்த எண்ணுகிறீர்கள். அம்புபட்ட நாய்போல் நான் அலறியபடி இங்கிருந்து வெளியே சென்றால் நிறைவடைவீர்கள்” என்றான். “அல்ல, இரக்கமின்றி கிழித்துப் பார்ப்பதாக நீ சொன்னாய். இரக்கமின்றி தன்னை கிழித்துப்பார்த்த எவரும் இப்படி அலைமோதுவதில்லை. கள்மயக்காலும் சொற்பெருக்காலும் உணர்வலைகளாலும் தன்னை தன்னிடமிருந்து மறைத்துக்கொள்வதுமில்லை. நீ இரக்கமின்றி ஒருபோதும் உன்னை கிழித்துக்கொண்டதில்லை” என்றான் துரியோதனன்.

“நான் கிழித்துக்கொண்டுவிட்டேன். அதனால் நோயுற்றேன். மறு எல்லைக்குச் சென்று வாழ்ந்தேன். மீண்டும் இருண்டேன். அதன் பின்னரே இந்த நிலைகுலையாமையை அடைந்தேன்” என்று துரியோதனன் சொன்னான். குண்டாசி சிரித்து “அந்த நிலைகுலையாமையை எனக்கும் அருள்க, மூத்தவரே!” என்று ஏளனமாக சொன்னான். “வாரணவதத்தில் அவர்களை எரித்த செய்தி உனக்கு அளித்ததுதான் இந்த அனல் அல்லவா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் குண்டாசி. “வாரணவதத்தில் அரக்குமாளிகையை எரித்தவர்களின் குருதியே நீயும் என்பதனாலா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம்” என்று குண்டாசி சொன்னான். அவன் நடுங்கிக்கொண்டிருந்தான்.

துரியோதனன் கண்கள் இடுங்க அவனை கூர்ந்து நோக்கினான். “அல்லது நீயும் உன் உள்ளத்தால் அவ்வெரித்தலை நிகழ்த்தினாய் என்பதனாலா?” குண்டாசி “இதைக் கேட்டு நான் புண்படுவேன் என்று எண்ணுகிறீர்களா? எண்ணி கடந்து நீங்கள் வந்து சேரும் அந்த நச்சுமுனை இவ்வளவுதானா?” என்றான். “அல்ல” என்றான் துரியோதனன். “வாரணவதம் தொடக்கமல்ல. அதற்கு முன்பும் ஒன்று நிகழ்ந்தது. அன்று பீமனை நஞ்சூட்டி கைகால் கட்டி கங்கையிலிட்டதை நீ அறிவாய்.” குண்டாசி திடுக்கிட்டு எழுந்து விட்டான். “இல்லை, அன்று நான் மிக இளையவன். நான் ஏதும் அறியவில்லை” என்றான்.

“நீ அறிவாய். நீ அறிவாய் என்று அன்றே எனக்கு தெரியும். அதை நீ எவரிடமும் பகிர்ந்ததில்லை. நீ சொல்லமாட்டாய் என்றும் நான் அறிந்திருந்தேன். பதினெட்டாண்டுகாலம் அதை உன்னுள் கரக்க உன்னால் முடிந்திருக்கிறது. ஆகவேதான் வாரணவதம் உன்னை பற்றி எரியச்செய்தது.” குண்டாசி கால்கள் நடுங்க பின்னால் நகர்ந்து பீடத்தில் உடல்முட்டி விழுந்து அமர்ந்தான். இரு கைகளையும் தலைமேல் வைத்து உடலை வளைத்து அமர்ந்து உடல் விதிர்த்தான். “அன்று நஞ்சுண்டவன் அவன் மட்டுமல்ல, நீயும்தான். உன் தலையை அவன் கதைக்கு பலி கொடுக்கவேண்டுமென்று நீ சொல்வது வாரணவதத்தின் பொருட்டல்ல, அந்த கங்கை நிகழ்வின் பொருட்டுதான். அது நிகழ்க!” என்று துரியோதனன் சொன்னான்.

குண்டாசி மெல்ல முனகினான். மீண்டும் எழுந்தபோது வலியின் கேவல்போல் அது ஒலித்தது. கையூன்றி எழமுயன்றான். அவன் வலது காலும் கையும் இழுத்துக்கொண்டன. இடக்கையை விசையுடன் ஊன்றி எழுந்து நின்று காலை இழுத்தபடி வாயில் நோக்கி சென்றான். செல்லும் வழியிலேயே வலப்பக்கமாக ஓர் உதை விழுந்ததுபோல் உணர்ந்து சரிந்து கீழே விழுந்து வலிப்பெழுந்து வாயிலிருந்து நுரை வழிய துடிக்கத் தொடங்கினான்.

முந்தைய கட்டுரைசமஷ்டி
அடுத்த கட்டுரைவிளையாட்டு