ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை

kesavamani_amuttu (1)

அன்புள்ள ஜெயமோகனுக்கு

வணக்கம். நலம்தானே.

இயல்விருது செய்தியை வெளியிட்டு படங்களையும் போட்டதற்கு மிக்க நன்றி. பல நாடுகளிலிருந்து விசாரித்தார்கள். உங்களுடைய இணையதளத்தின் பரப்பு ஆச்சரியமளிப்பது.

கனடாவில் வருடாவருடம் 6000 தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். இன்னும் பல மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் பரீட்சை எழுதுவதில்லை. ஆனால் சமீப காலங்களில் தமிழ் கற்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளதை என்னால் அவதானிக்க முடிகிறது. இங்கே 22 வயதான இளைஞனை சந்தித்தேன். தொல்காப்பியத்தில் அவர் நிபுணர் என்று சொல்கிறார்கள். இங்கே பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கவேண்டும் என்ற விசயத்தை நானும் செல்வாவும் அவர் இருந்த காலத்திலேயே பலதடவை முயன்று தோலிவியுற்றோம். இப்பொழுது காலம் கனிந்துவிட்டது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை மிகவும் வெற்றிகரமாக முடிந்தது. ஆறு மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக உலகம் முழுவதும் இருந்து 7880 அன்பர்கள் நிதி சேகரித்து அனுப்பி பெரும் வெற்றிபெற உதவினார்கள்.

இது கொடுத்த உற்சாகத்தில் ரொறொன்ரோ பல்கலையிலும் தமிழ் இருக்கை ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. தேவையான நிதி 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே. 25 யூன் அன்று  ரொறொன்ரோ பல்கலை வளாகத்தில் பெருவிழா கனடா பிரதம மந்திரியின் ஆசியுடன் நடைபெறுகிறது. அமெரிக்காவில் இருந்து மருத்துவர்கள் ஜானகிராமன் , சம்பந்தம், பால் பாண்டியன். முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் வருகை தந்து நிதியுதவி  வழங்குகிறார்கள். கனடாவில் தமிழ் பற்றாளர்களும் ஆர்வலர்களும் நிதி அளிக்கிறார்கள். அன்றைய விழாவில் 500,000 டொலர்கள் நிதி திரண்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். இந்த செய்தியை படங்களுடன் நான் அனுப்புவேன். இந்த தகவலை நீங்கள் வெளியிடுவதுடன் ஆதரவு தரவேண்டும் என  வழக்கம்போல  கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

அ. முத்துலிங்கம்

IMG_7135
அ.முத்துலிங்கம் அவர்களின் அறிக்கை

ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை

ஹார்வர்ட் தமிழ் இருக்கை வெற்றியை தொடர்ந்து ரொறொன்ரோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது. கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக ரொறொன்ரோவில் ஒரு தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்ற மக்களின் விருப்பம் இறுதியில் நிறைவேறியிருக்கிறது.

இதிலே பாராட்டவேண்டியது ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று கனடா தமிழ் பேரவையுடன் இணைந்து இதனை நடத்தியதுதான். மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து நன்கொடை நல்கி விழாவை தொடக்கிவைத்தனர். இந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அமைச்சர் க.பாண்டியராஜன்;  நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார் முனைவர் ஆறுமுகம்.  கனடாவின் பொறுப்பாளர்களான எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் வ.ரகுராமன், டன்ரன் துரைராஜா  ஆகியோர் முன்னின்று விழாவை நடத்தினர்.

கனடிய தேசிய கீதத்தை ’செந்தூரா’ பாடல்  புகழ்  லக்‌ஷ்மி பாட அதைத் தொடர்ந்து சுப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா தமிழ் இருக்கை கீதத்தை இசைத்தார். நித்திய கலாஞ்சலி மாணவிகள் நடனவிருந்து அளித்தனர். கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். தமிழ் பற்றாளர்கள்  மேடையிலே தங்கள் நன்கொடைகளை  பல்கலைக் கழகத்தை சேர்ந்த  ஜோர்ஜெட் சினாட்டியிடம் கையளித்ததை தொடர்ந்து விருந்துபசாரம் நடைபெற்றது. ஏறக்குறைய 600,000 கனடிய டொலர்கள் (இந்திய ரூ 3.12 கோடி) சேர்ந்தது அமைப்பாளர்களே எதிர்பார்க்காத ஒன்று.  பல்கலைக் கழகத்தின் உபதலைவர் புரூஸ் கிட் பேசியபோது ஓர் இரவில், இரண்டே மணி நேரத்தில் 600,000 கனடிய டொலர்கள் திரட்டியது கனடிய வரலாற்றிலும், பல்கலைக் கழகத்தின் சரித்திரத்திலும் முதல் தடவை என மக்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே கூறினார். மக்கள் அணிவகுத்து வந்து நன்கொடை வழங்கிய காட்சி அவர்களின்  எழுச்சியை நிரூபித்தது.  தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் இருக்கை நிறுவியது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது.

 [email protected]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28
அடுத்த கட்டுரைசிறுபான்மையினர் மலர்கள்