‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29

tigஅவையில் அரசகுடிகள் அனைவரும் பால்ஹிகரை வணங்கி வாழ்த்து பெற்று முடிந்ததும் நிமித்திகன் மேடையேறி சிற்றுணவுக்கான பொழுதை அறிவித்தான். பால்ஹிகர் எழுந்து நின்று தன் மேலாடையை இழுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பூரிசிரவஸை விழிகளால் தேடினார். அவன் ஓடி அருகே சென்று வணங்கிநிற்க “யானை உணவுண்டுவிட்டதா?” என்றார். முதலில் அவனுக்கு புரியவில்லை. பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு “வருக, பிதாமகரே!” என்று அவரை அழைத்துச்சென்றான். வெளியே சென்றதும் அவருக்குப் பின்னால் வந்த கனகர் “நல்லவேளை! இவை இப்படி சிறப்பாக முடியுமென்று சற்றும் எண்ணியிருக்கவில்லை” என்றார்.

பூரிசிரவஸ் “அவர் எப்போதும் ஏமாற்றியதே இல்லை, அமைச்சரே. அத்தனை பித்துக்கும் பேதைமைக்கும் அடியில் அவர் இவ்வரசகுடியின் மூதாதை” என்றான். கனகர் “நம் யானைகளிலேயே முதன்மையான யானையை ஒருக்கி நிறுத்த ஆணையிட்டேன். செய்திருப்பார்கள்” என்றார். பூரிசிரவஸ் “ஆம், நானும் அவரிடம் அதைத்தான் சொன்னேன்” என்று பால்ஹிகரை கையைப் பிடித்து முன்னால் கொண்டுசென்றான். “நீங்கள் களிற்று முற்றத்திற்கு செல்லுங்கள். நான் பிறவற்றை ஒருக்குகிறேன்” என்றபின் கனகர் திரும்பிச்சென்றார்.

களிற்று முற்றத்தில் படைத்தலைவரான சிம்மவக்த்ரர் காத்து நின்றிருந்தார். அவர்களை நோக்கி அவர் ஓடிவர பால்ஹிகர் சிரித்து அவரை சுட்டிக்காட்டி “மூடன், யானையைக் கண்டு அஞ்சி ஓடிவருகிறான்” என்று சொன்னார். பூரிசிரவஸ் “ஆம், அது மிகப் பெரிய யானை. தங்களை மட்டுமே அது அஞ்சும்” என்றான். “நான் அந்தக் கவச உடைகளை அணிந்துவிட்டு மேலே ஏறியிருக்கலாம். அவை வெயிலில் பளபளவென்று மின்னும். என்னை நான் பெரிய உடைவாள் என்று நினைத்துக்கொள்வேன்” என்றார். “இப்போது தாங்கள் மேலும் அழகாக இருக்கிறீர்கள். இதுதான் யானைக்கு பிடித்த கோலம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், நாம் அதை ஏமாற்றுகிறோம்” என்று சொல்லி பால்ஹிகர் கண்களைச் சிமிட்டி சிரித்தார்.

சிம்மவக்த்ரர் அருகே வந்து “பட்டத்து யானை ஒருங்கியிருக்கிறது, பால்ஹிகரே” என்றார். குரலைத் தாழ்த்தி “மெய்யாகவே பட்டத்து யானையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பீஷ்ம பிதாமகரின் ஆணை, பட்டத்து யானை மேல் பிதாமகரை அமரவைத்து நகரத்தின் அனைத்து தெருக்களையும் சுற்றிவரச் சொல்லியிருக்கிறார்” என்றார். களிற்று முற்றத்தில் அங்காரகன் முழுதணிக்கோலத்தில் மெல்ல ஆடியபடி செவிவீசி நின்றிருந்தது. அதன் பொன்னிற முகபடாம் அலைநுரையென ஒளிகொண்டிருந்தது. முதுகிலிடப்பட்டிருந்த பெரிய அணிபடாமின் நுனியிலிருந்த பொற்குமிழ் மணிகள் அசைவின் தாளத்திற்கு ஏற்ப குலுங்கின.

பால்ஹிகர் திகைப்புடன் கைசுட்டி “இது என்ன?” என்றார். “பிதாமகரே, இதுதான் அங்காரகன், பட்டத்து யானை” என்றான் பூரிசிரவஸ். “இது ஏன் இத்தனை துணிகளை அணிந்திருக்கிறது? அனைத்தையும் கழற்றச் சொல்” என்றார். “பட்டத்து யானை அவ்வாறு அணிகளை அணியவேண்டும், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் அது யானை போலவே இல்லையே? திரையணிந்த சாளரம் போலல்லவா தோன்றுகிறது?” என்றார். “இல்லை. தாங்கள் அதன்மேல் ஏறியதும் அது யானைபோல் ஆகிவிடும்” என்றான் பூரிசிரவஸ். “யானையை துணிகளை கழற்றச் சொல்” என்று அவர் மீண்டும் சொன்னார். “பிதாமகரே, ஆடைகளை கழற்றினால் யானை நாணம் கொள்ளும். சினம்கொண்டு தங்களை மேலேற்றாமலாகும்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் சில கணங்கள் யானையையும் அவனையும் மாறி மாறி பார்த்தபின் “அப்படியானால் நன்று” என்று சொன்னார்.

“பிதாமகரே, தாங்கள் யானையைவிட்டு எதன்பொருட்டும் கீழிறங்கக்கூடாது. யானை கால்களை மடித்ததும் தரையிலிறங்கினால் போதும்” என்றான் பூரிசிரவஸ். “நான் இறங்கமாட்டேன். யானை கால்களை மடித்தாலும் நான் இறங்கப்போவதில்லை” என்று பால்ஹிகர் சொன்னார். “தாங்கள் அதன் மேலேயே அமர்ந்திருக்கலாம். தங்களை இந்நகர் முழுக்க கொண்டு செல்லப் போகிறார்கள். தங்கள் மேல் மலர்களும் மஞ்சள்அரிசியும் தூவி குடிகள் வாழ்த்துவார்கள்” என்றான் பூரிசிரவஸ். “எதன் பொருட்டு?” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் “தாங்கள் யானைமேல் அமர்ந்திருப்பதால். இங்கு வேறு யாரும் அந்த யானைமேல் அமரமுடியாதல்லவா?” என்றான். “ஆம், மெய்தான்” என்றார். “ஆகவே அவர்கள் ஊக்கமிகுதியால் கூச்சலிடுவார்கள். மகிழ்ச்சியால் கைவீசுவார்கள். தாங்கள் அவர்களை நோக்கியபடி கைவீசி இந்நகரை சுற்றிவருக! படைப்பிரிவுகள் அனைத்தையும் பார்த்து அந்தியில் நகர் நுழைக!” என்றான்.

பால்ஹிகர் “இதை நான் எப்போது மலைமேல் கொண்டு செல்வது?” என்றார். “நீங்கள் இந்நகரத்தை சுற்றிவருக! வந்து ஓய்வெடுத்து நாளை காலை தென்மலைக்கு செல்லலாம்” என்றான். பால்ஹிகர் சில கணங்கள் எண்ணிவிட்டு “ஆனால் நான் குருக்ஷேத்திரப் போருக்குத்தானே வந்தேன்?” என்றார். “ஆம், போர் முடிந்து நீங்கள் செல்லலாம்” என்றான். “போரில்தான் நான் இறந்துவிடுவேனே?” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் அக்கணம் ஒரு சலிப்பை உணர்ந்தான். பால்ஹிகர் புன்னகைத்து “நாளை நான் தென்மலைக்கு சென்றுவிட்டு உடனே திரும்பிவந்து போரில் கலந்துகொண்டு உயிர்துறக்கிறேன்” என்றார். “நன்று, பிதாமகரே! தாங்கள் யானைமேல் ஏறிக்கொள்ளுங்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

சிம்மவக்த்ரர் “பிதாமகரே, வருக” என்றார். “யாரிவன்?” என்று பால்ஹிகர் கேட்டார். “இவர்தான் யானைக்கு பொறுப்பானவர். யானைக்குக் கீழே இவர் புரவியில் அமர்ந்திருப்பார்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “தங்களுக்கு என்ன தேவையென்றாலும் இவரிடம் சொல்லலாம்.” பால்ஹிகர் “நான் யானையிடம் சொல்ல முடியாதா?” என்று கேட்டார். “யானையிடமும் சொல்லலாம். ஆனால் யானையின் காது கீழே இருக்கிறது. தாங்கள் சொல்வது யானைக்கு கேட்காது. நீங்கள் இவரிடம் சொன்னால் யானையிடம் இவர் சொல்வார்” என்றான். “மெய்தான்” என்றபின் படிகளில் இறங்கி களிற்று முற்றத்தினூடாக பால்ஹிகர் நடந்தார். பூரிசிரவஸ் படிகளிலேயே நின்றான். சிம்மவக்த்ரர் அவனை நோக்கி திரும்பி தலைவணங்கிவிட்டு பால்ஹிகருடன் சென்றார்.

யானையின் அருகே பால்ஹிகர் நின்றபோதுகூட அவர் உருவம் சிறிதென தெரியவில்லை என்பதை பூரிசிரவஸ் வியப்புடன் உணர்ந்தான். அவருடன் நின்ற பாகர்களும் படைத்தலைவர்களும் எல்லாம் அவர் நெஞ்சுக்குக் கீழே இருந்தனர். அவர் தலை யானையின் காதளவு உயரமிருந்தது. அதன் காதைப்பற்றி அசைத்தபின் அவர் சிம்மவக்த்ரரை பார்த்து புன்னகைத்தார். பாகன் ஆணையிட யானை முன்காலை தூக்கியது. அவர் அதில் மிதித்து ஏறி மேலே சென்று அங்கிருந்த அம்பாரிமேல் அமர்ந்தார். அவருக்கு மேல் அஸ்தினபுரியின் வெண்கொற்றகுடையை பற்றியபடி வீரனொருவன் அமர்ந்தான். முகப்பில் வெண்ணிறத் தலைப்பாகை அணிந்த யானைப்பாகன் அமர்ந்தான்.

இரு யானைப்பாகர்கள் இருபுறமும் யானையின் காதுகளை பற்றிக்கொண்டனர். தலைமைப்பாகன் ஆணையிட அது மெல்ல வலக்காலை எடுத்து வைத்து முற்றத்திலிருந்து சாலை நோக்கி சென்றது. அங்கே முன்னரே அணிகொண்டிருந்த மங்கல இசைச்சூதர்கள் தங்கள் தேரில் ஏறிக்கொண்டனர். இசைத்தேர் முன்னால் செல்ல அதைத் தொடர்ந்து பட்டத்து யானைமேல் அமர்ந்து பால்ஹிகர் சென்றார். அவர் நகைத்துக்கொண்டே இருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். திரும்பி பூரிசிரவஸை நோக்கி கைவீசி சிரித்தார். அவருக்குப் பின்னால் ஒளிரும் படைக்கலங்களுடன் வீரர்கள் தொடர்ந்து சென்றனர். அந்த ஊர்வலம் களிற்று முற்றத்திலிருந்து பெருவீதியை அடைந்து மறைந்தது.

tigபூரிசிரவஸ் நீள்மூச்சுடன் திரும்பி இடைநாழியினூடாக நடந்து சற்று நேரம் சென்ற பின்னரே அது உணவுப்பொழுதென்று உணர்ந்தான். உணவுக்கூடம் நோக்கி சென்றான். அங்கு ஏற்கெனவே அரசர்கள் உணவுண்ணத் தொடங்கிவிட்டிருந்தனர். சிற்றுணவு என்று சொல்லப்பட்டாலும் அனைவருக்கும் ஊனுணவும் அன்னங்களும் பரிமாறப்பட்டன. அரசர்கள் அவையிலிருந்த உளநெகிழ்வு உவகையாக மாற நிலைமறந்து கை வீசி உரக்க கூவி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் நடுவே சென்றபோது ஒவ்வொருவரும் பால்ஹிகருக்கும் தங்கள் குடிக்குமான குருதியுறவைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதை அவன் அறிந்தான். உதிரிச் சொற்களினூடாகவே அவர்கள் சொல்ல விழைவது தெளிந்தெழுவதை எண்ணி புன்னகைத்துக்கொண்டான்.

கூடத்தின் வலது ஓரத்தில் சலன் அமர்ந்து உண்டுகொண்டிருப்பதை பார்த்தான். அருகே சென்று தனக்குரிய பீடத்தில் அமர்ந்தான். சலன் அவனிடம் “பிதாமகர் யானைக் கொட்டிலுக்கு திரும்பிவிட்டாரா?” என்றான். “இல்லை, பட்டத்து யானைமேல் ஏறி நகர்வலம் வருகிறார்” என்றான் பூரிசிரவஸ். சலன் புருவம் சுளித்து “யார் ஆணை?” என்றான். “பிதாமகர் பீஷ்மரின் ஆணை. இக்குடியின் மூதாதை நேரில் எழுந்தருள்வது போன்றது அது. அதைப்போல எழுச்சியூட்டுவது வேறில்லை” என்றான் பூரிசிரவஸ். “சில நாட்களாகவே அவர் இங்குதான் இருக்கிறார். நகர்மக்கள் பாதிபேர் அவரை பார்த்திருப்பார்கள்” என்றான் சலன். “ஆம், முன்னரே அவருடைய பேருடலைப் பற்றி மட்டுமே எண்ணியிருப்பார்கள். இன்று இவ்வரச கோலத்தில் அவரை பார்த்தால் கைகூப்பி கண்ணீர்மல்க விழுந்து வணங்குவார்கள்” என்றான் பூரிசிரவஸ்.

சலன் திரும்பி “மெய்தான். முதற்கணம் அவர் அரச மேடையில் வந்து நின்றபோது மானுட உடல் கொண்டெழுந்த தெய்வம் ஒன்றைத்தான் பார்த்தேன். என் மெய்ப்பு அடங்க வெகுநேரமாயிற்று. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. இளையோனே, நானும் கைகூப்பி அழுதுகொண்டிருந்தேன்” என்றான். “பார்த்தேன்” என்று பூரிசிரவஸ் புன்னகையுடன் சொன்னான். “மெய்யாகவே இவர் மானுடரல்ல என்றிருக்குமோ? நீ மலைக்குச் சென்று நம் மூதாதையர் வடிவை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் மலைத்தெய்வம் ஒன்றைத்தான் அழைத்து வந்தாயா?” என்றான். பூரிசிரவஸ் அவ்வெண்ணத்தால் மெய்ப்பு கொண்டான். பின்னர் சிரித்து “எதிர்காலத்தில் சூதர்கள் எழுதப்போகும் கதையை இப்பொழுதே உருவாக்குகிறீர்கள், மூத்தவரே” என்றான். சலன் தானும் நகைத்து “ஆம், இது ஒரு பெருங்காவியத்திற்கான தொடக்கம்தான்” என்றான்.

உணவுண்டு முடித்து ஒட்டியிருந்த கொட்டகையில் அமர்ந்து அரசர்கள் வாய்மணமும் இன்நீரும் கொண்டனர். ஒருவருக்கொருவர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நல்லுணவே கள்மயக்கை அளிப்பது என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். சிலர் இனிய களைப்பில் இருந்தனர். சிலர் துயிலில் விழிசரித்தனர். சிலர் வியர்வை வழிய கூச்சலிட்டு சிரித்துப்பேச சிலர் பூசலிடும் உளநிலை கொண்டனர். மொத்த ஓசையும் எழுந்து அலையலையென கூரையை அறைந்தது. சலன் “நகர் முழுமைக்கும் பெருங்கொட்டகையாக போட்டிருப்பார்கள் போலுள்ளது” என்றான். “இந்நகருக்குள் இன்றிருக்கும் மானுட எண்ணிக்கைக்கு சாலைகளைக்கூட இணைத்து ஒற்றைபெரும் மாளிகையாக மாற்றிவிடவேண்டியதுதான்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

கூட்டத்தினூடாக கடந்து வந்த கனகர் பூரிசிரவஸிடம் “அவை கூடவிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் கொம்புகள் ஒலிக்கும்” என்றபின் குரல் தாழ்த்தி “பேரரசர் திருதராஷ்டிரர் தங்களை சந்திக்க விரும்புகிறார்” என்றார். “என்னையா?” என்ற பூரிசிரவஸ் எழுந்தான். “ஆம், வருக!” என்று கனகர் சொன்னார். சலனிடம் விடைபெற்றுக்கொண்டு அக்கொட்டகையில் நிறைந்திருந்த அரசர்கள் நடுவே எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும் தலைவணங்கி ஓரிரு சொல் முகமனுரைத்தபடி கனகரைத் தொடர்ந்து அவன் சென்றான். இடைநாழியில் செல்கையில் கனகர் “பேரரசர் சற்றே உளம் திரிபு கொண்டிருக்கிறார்” என்றார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அதை நீங்களே பேசிக்கொள்ளுங்கள்” என்று கனகர் சொன்னார்.

அரசவையை ஒட்டிய சிற்றறைக்குள் திருதராஷ்டிரர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததை வெளியே இருந்த கொடி காட்டியது. அவர்கள் சென்றதும் வாயில்காத்த சங்குலன் அவர்களை நோக்கி விழிதூக்காமலேயே உள்ளே செல்லும்படி பணித்தான். பூரிசிரவஸ் கைகூப்பியபடி உள்ளே சென்று அங்கே பெரும்பீடத்தில் கால் நீட்டி உடல் தளர்த்தி அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை அணுகி தாள்பணிந்து “அரசே, நான் பால்ஹிகன், பூரிசிரவஸ்” என்றான். “தெரிகிறது. உன் மணத்தை நான் மறக்கவில்லை” என்று சொன்ன திருதராஷ்டிரர் கைவீசி “அமர்க!” என்றார். அவர் உடலில் தசைகள் நெகிழ்ந்து இறுகி சிற்றலை கொண்டிருந்தன. பற்களை கடித்திருந்தமையால் தாடை இறுகியசைந்தது.

பூரிசிரவஸ் அமர்ந்தான். அவர் “பிதாமகர் எங்கிருக்கிறார்?” என்றார். பூரிசிரவஸ் “அவர் யானைமேல் ஏறி நகர்வலம் சென்றிருக்கிறார். பீஷ்ம பிதாமகரின் ஆணை அது” என்றான். “நன்று” என்று திருதராஷ்டிரர் முனகிக்கொண்டார். கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுக்கிக்கொண்டு “அது நன்றே. அவரை மக்கள் காணட்டும். அவரே இக்குடியின் முதன்மையர் என அவர்கள் அறியட்டும்” என்றார். பின்னர் “பால்ஹிகனே, இப்போது குருகுலத்தின் முடிக்கு முழுதுரிமை கொண்டவர் யார்?” என்றார். அவர் எண்ணுவதை உணர்ந்துகொண்ட பூரிசிரவஸ் “பால்ஹிக மூதாதைதான்” என்றான். “ஆம், அவர் துறந்தமையால்தான் மணிமுடி பிறருக்கு வந்தது. அவர் இல்லை என்பதனால்தான் அரசர் சூடமுடிகிறது” என்றான்.

“பால்ஹிகனே, இப்போர் ஒழிவதற்கு வழி ஒன்றே. அதை நான் இன்று அவையில் கண்டுகொண்டேன். மணிமுடி பால்ஹிகப் பிதாமகருக்குரியது என நான் அவையில் இன்று அறிவிக்கிறேன். அவர் அதை சூடட்டும். அவர் இந்நிலத்திற்கும் குடிக்கும் தலைமைகொள்ளட்டும். அதன்பின் போர் நிகழ வாய்ப்பில்லை” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, பேரரசே. அது தவறான கணிப்பு. அங்ஙனம் போர் நின்றுவிடாது. பாரதவர்ஷத்தின் அரசர்கள் போருக்கென திரண்டெழுந்துவிட்டனர். படைகள் கூடிவிட்டன. போர் ஒருக்கங்கள் முடிந்துவிட்டன. போர்வஞ்சினம் இன்று உரைக்கப்படவுள்ளது. ஓரிருநாட்களில் படைகள் குருக்ஷேத்திரம் நோக்கி செல்லப்போகின்றன.”

“எவருக்கு எதிராக?” என்றார் திருதராஷ்டிரர். “பால்ஹிகப் பிதாமகர் முடிசூடினால் அதை யுதிஷ்டிரன் மறுக்கப்போவதில்லை. அவன் மறுத்து படைகொண்டுவராவிட்டால் எவருக்கு எதிராக இவர்கள் போரிடுவார்கள்?” அவர் முகம் கோணலாகி இழுபட தலை ஆடியது. இடக்கை அடிபட்ட நாகம்போல் துவண்டு அசைந்தது. “அல்லது நான் மணிமுடியை என் மூதாதைக்கே திருப்பியளிப்பதை துரியோதனன்தான் மறுக்கப்போகிறானா? மறுத்தால் அஸ்தினபுரியின் படைகளும் குடிகளும் அதை ஏற்பார்களா? பால்ஹிகனே, இங்குள்ள ஷத்ரியர் படைகொண்டு எழுந்திருப்பதே ஷத்ரிய குடிமுறைமைகளை காக்கவும் அக்குடிமுறைகளுக்கு அடிப்படையாக உள்ள வேதத்தை நிலைநிறுத்தவும்தானே? மூதாதைக்கு முடி மறுப்பவனை அவர்கள் ஆதரிப்பார்களா?”

பூரிசிரவஸ் மறுமொழி சொல்லவில்லை. அதெப்படி என்று உள்ளம் வியந்தாலும்கூட அது நிகழக்கூடியதே என்று தோன்றிக்கொண்டிருந்தது. “என் கண்முன் என் மைந்தர் அழிவதை தடுக்க எனக்கு மூதாதையர் அளித்த வாய்ப்பு இது. அரச உடையணிந்து பேருருக்கொண்டு என் மூதாதை இன்று அவைக்கு வந்த கணமே அதை உணர்ந்தேன். ஹஸ்தி இன்று அவையிலெழுந்தருளினார். ஹஸ்தியின் முன் நான் அடிபணிந்தேன். என் மூதாதையரின் ஆணை இது. அவர்கள் முன் எச்சமின்றி பணிந்து அமைவது மட்டுமே என் கடன்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், போர் முடிந்துவிட்டது. அதை அருகென காண்கிறேன். இனி என் மைந்தர் போரிட்டு அழியமாட்டார்கள்.”

பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். “மூதாதை அரசமைக்கிறார் என்று யுதிஷ்டிரனிடம் சென்று சொல்லச் சொல். விதுரனிடம் சொல். அவனை என்னை வந்து பார்க்கச்சொன்னேன், அவன் வரவில்லை. அவன் வரட்டும். அவனே சென்று பாண்டவர்களிடம் சொல்லட்டும். அவர்கள் இங்கே வருவார்கள். என் மைந்தருடன் கைகோப்பார்கள். என் மைந்தர்…” உதடுகள் விம்மலில் வெடிக்க உடல் மெல்ல அதிர திருதராஷ்டிரர் விம்மி அழுதார். “என் மைந்தர் மீண்டும் ஒன்றாவார்கள். இந்த அஸ்தினபுரியின் தொன்மையான முற்றத்தில் மீண்டும் இளையோர் என அவர்கள் தோள்தழுவி விளையாடுவார்கள். மீண்டும் இந்நகரை நோக்கி விண்ணமர்ந்த சந்தனுவும் விசித்திரவீரியரும் புன்னகைப்பார்கள்.”

“தெய்வங்களே, மூதாதையரே, எனக்கு மீண்டும் ஒரு நல்வாய்ப்பை அளித்தீர்கள்… என்னை மீண்டும் நம்பிக்கையுடன் வாழச் செய்திருக்கிறீர்கள்… இனி நான் இறக்கவியலும். இந்த அஸ்தினபுரியின் அரண்மனை முற்றத்திலிருந்து நான் சிதைநோக்கி செல்கையில் ஒருமுனையில் பாண்டவரும் மறுமுனையில் கௌரவரும் என் படுசேக்கையை ஏந்தியிருப்பார்கள். நான் எரிகையில் இருசாராரும் விழிநீர் சிந்துவார்கள்…” அவர் கையை தூக்கி விழிகளென்றான தசைக்கோளங்கள் உருள திணறினார். புன்னகையில் கரிய முகத்தில் பெரிய பற்கள் ஒளியுடன் எழுந்தன.

“ஆம்! நான் விண்ணேகி அன்னை சத்யவதியிடம் சொல்வேன். ஒரு வெறும் ஊடல். குருதியிலெழுந்த சிறு குமிழி. அனைத்தும் சீராகிவிட்டது. அன்னையே, கீழே நோக்குங்கள். அங்கே நம்குடியின் சிறுமைந்தர் கைகோத்து ஆடிக்களிப்பதை. நம் நிலம் வெல்லமுடியாததாக ஆகியிருப்பதை. கருவூலங்களில் பொன்நிறைய களஞ்சியங்களில் நெல்நிறைய ஆபெருக்க நீர்செழிக்க காடு தழைக்க நம் நாட்டின்மேல் தேவர்கள் நிறைந்திருப்பதை… அங்கே எங்கள் அன்னையர் அம்பிகையும் அம்பாலிகையும் இருப்பார்கள். என் இளையோன் பாண்டு…”

அவர் மீண்டும் விம்மியழுதார். தொண்டை அடைக்க செருமி முனகி “என் இளையோன் பாண்டு… அவன் அங்கிருப்பான். அவனை என்னால் அணைத்து நெஞ்சோடு சேர்க்க முடியும். நம் மைந்தர் நலம்கொண்டனர் இளையோனே என்று சொல்லமுடியும்…” என்றார். அவர் முகம் உறுதிகொண்டது. ஆம் என தலையை அசைத்தபடி “மாற்று எண்ணத்துக்கே இடமில்லை. நான் முடிவுசெய்துவிட்டேன். குருகுலத்தின் மணிமுடி பால்ஹிகப் பிதாமகருக்குரியது. நீ இதை எவரிடமும் சொல்லவேண்டியதில்லை. மீண்டும் அவைகூடும்போது பிதாமகர் அவையில் இருக்கவேண்டும்” என்றார்.

“ஆணை” என்றான் பூரிசிரவஸ். “அவரை அழைத்து வந்து அவ்வரியணையில் மீண்டும் அமர்த்துக! ஹஸ்தியின் மணிமுடி கருவூலத்திலுள்ளது அதை எடுத்துவரும்படி ஆணையிட்டிருக்கிறேன். பால்ஹிகப் பிதாமகர் அதைச் சூடி அமரட்டும். இன்று அவையில் எழுந்த உளக்கொந்தளிப்பை பார்த்தாயல்லவா? எண்ணிக்கொள், வாழ்த்தொலி அன்றி பிறிதொரு சொல்லும் எழாது. அஸ்தினபுரியின்கீழ் அனைத்து ஷத்ரியக்குடிகளும் ஒன்றென நின்றிருக்கும். கிராதரும் நிஷாதரும் அசுரரும் அரக்கரும் அஞ்சி பின்னடைவர். பாரதவர்ஷம் வேதச்சொல் திகழ வாழும்… ஆம், அதுவே நிகழவிருக்கிறது.”

மீண்டும் பூரிசிரவஸ் “ஆணை” என்றான். “செல்க!” என்றார் திருதராஷ்டிரர். தலைவணங்கி பூரிசிரவஸ் வெளியே நடந்தான். வெளியே நின்றிருந்த கனகர் “என்ன சொல்கிறார்?” என்றார். “பெருங்கனவு… இனி கனவுகளில்தான் அவர் தன்னை நிறைவடையச் செய்யவேண்டும்…” என்றான் பூரிசிரவஸ். “என்ன சொன்னார்?” என்று கனகர் கேட்டார். “ஹஸ்தியின் மணிமுடியை அவைக்கு கொண்டுவரச்சொல்லி ஆணையிட்டிருக்கிறார்” என்றபடி முன்னால் நடந்த பூரிசிரவஸின் பின்னால் வந்தார். “பால்ஹிக மூதாதையை முடிசூட்டிவிட்டால் போர் ஒழிந்துவிடும் என எண்ணுகிறார்” என்றான் பூரிசிரவஸ். கனகர் நின்றுவிட்டார். பின்னர் மீண்டும் ஓடிவந்து “அது நிகழக்கூடும்!” என்றார். “நிகழாது” என்றான் பூரிசிரவஸ். “அனைத்தும் அவ்வாறு நிகழ்வதற்கு உகந்தவையாகவே தெரிகின்றன. ஆனால் தெய்வங்கள் அதை விழையவில்லை என்பதும் கண்கூடாகத் தெரிகிறது.”

tigஇடைநாழியினூடாக பூரிசிரவஸ் நடந்தான். அப்பால் கொம்போசை எழுந்தது. ஏவலர்களும் காவலர்களும் ஊட்டறைக்கும் அரசர்கள் அமர்ந்த கொட்டகைக்கும் சென்றனர். அங்கிருந்து அரசர்கள் எழுந்து ஆடை திருத்தி தங்கள் அணுக்கர்களுடன் உரையாடியபடியே அவை நோக்கி செல்லத்தொடங்கினர். அவன் எங்கு செல்வதென்று அறியாமல் தயங்கி நின்றான். முதலில் தோன்றியது விதுரரிடம் சென்று என்ன நிகழவிருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றுதான். ஆனால் அவர் விழிகள் இறந்துவிட்டிருந்தன. சொல்கேட்க அவ்வுடலுக்குள் எவருமில்லை. அல்லது துரியோதனனிடம் சொல்லவேண்டும். அதற்கு முன் அரசரின் ஆணையை நிறைவேற்றியாக வேண்டும்.

ஆனால் மேலும் சில எட்டுகள் வைத்தபோது அரசரின் ஆணைக்கு முன்னரே தான் செய்யவேண்டியது துரியோதனனை சந்தித்து அரசரின் எண்ணப்போக்கை அறிவிப்பதுதான் என்று அவன் எண்ணினான். மேலுமிரு எட்டு வைக்க அவன் உள்ளம் சொல்கோத்து அமைத்ததும் எண்ணம் உறுதியாயிற்று, இப்போது மணிமுடிசூடி அரியணையில் அமர்ந்திருப்பவர் துரியோதனர். எனது கடப்பாடு இக்குடிக்கோ கொடிவழிக்கோ அல்ல. இதன் மணிமுடிக்கு மட்டுமே. அச்சொற்றொடரை சொல்லச் சொல்ல அவன் மேலும் தெளிவடைந்தான். திரும்பி இரு சிற்றறைகளினூடாக துரியோதனன் அமர்ந்திருந்த அரசஅறை நோக்கி சென்றான். செல்லும் வழியிலேயே சுபாகு அவனைக் கண்டு அருகே வந்து “என்ன?” என்றான். தன் முகக்குறி கவலையை காட்டுவதை உணர்ந்து அவன் புன்னகையைக் காட்டி “ஒன்றுமில்லை. அரசரிடம் தனியாக சில சொற்கள் பேசவேண்டும்” என்றான். “தனியாகத்தான் இருக்கிறார். உடன் மூத்தவர் துச்சாதனர் மட்டுமே” என்றான் சுபாகு.

“நன்று” என்றபின் அவன் சென்று சிற்றறை வாயிலில் காவலுக்கு நின்றிருந்த துர்மதனிடம் “அரசரை பார்க்க வேண்டும்” என்றான். அவனுடைய முகக்குறியால் துர்மதனும் விழிமாறினான். துர்மதன் உள்ளே சென்று ஒப்புதல் பெற்று வெளியே வந்து கைகாட்டினான். சிற்றறைக்குள் தன் கால்களை சிறுபீடத்தின்மேல் தூக்கி வைத்து சாய்ந்த பீடத்தில் படுத்ததுபோல் துரியோதனன் அமர்ந்திருந்தான். கைகளை தன் வயிற்றின்மேல் கட்டியிருந்தான். அப்பால் சாளரத்தருகே துச்சாதனன் கைகட்டி நின்றிருந்தான். உள்ளே வந்த பூரிசிரவஸ் தனக்குப் பின்னால் கதவு மூடப்பட்டதை திரும்பிப் பார்த்தபின் “வணங்குகிறேன், அரசே. சற்று முன் நான் பேரரசரை சந்திக்க வேண்டியிருந்தது. என்னை சந்திக்குமாறு அழைப்பு அனுப்பியிருந்தார்” என்றான்.

“ஆம், கனகர் தங்களை அழைத்ததை அறிந்தேன்” என்றான் துரியோதனன். தான் அவனிடம் சொல்லவந்தது எத்தனை நன்று என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். “பேரரசர் என்னிடம் உடனடியாக மூதாதை பால்ஹிகரை அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டிருக்கிறார்.” துரியோதனன் புருவங்கள் சுருங்கின. “அவர் அவைக்கு வரவேண்டுமென்று ஆணை” என்று மீண்டும் பூரிசிரவஸ் சொன்னான். “சொல்க!” என்று துரியோதனன் கைகாட்டினான். “அவ்வாணையை நிறைவேற்றுவதற்கு முன்னர் தங்களை சந்தித்து அவரது எண்ணத்தை சொல்லிவிட்டுப் போகவேண்டுமென்று தோன்றியது. அரசே, பால்ஹிகரின் வருகை விண் வாழும் மூதாதை ஒருவர் மண் இறங்குதல் என்று அரசர் எண்ணுகிறார். முன்னரே போரை எண்ணி அவர் உள்ளம் கலங்கிக்கொண்டிருக்கிறது. இப்போரில் தன் மைந்தர் முற்றழிவார்கள் என்று அவர் அஞ்சுகிறார்.”

துரியோதனன் “ஒவ்வொரு நாளும் நிமித்திகர்கள் அவரிடம் அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அதை தவிர்க்கும் பொருட்டுதான் மண்மறைந்த மூதாதையர் பால்ஹிகரை அனுப்பியிருக்கிறார்கள் என்று எண்ணுகிறார். குலமுறைப்படி ஹஸ்தியின் கொடிவழியில் இன்றிருக்கும் மூத்தவர் பால்ஹிக பிதாமகரே. எனவே அவருக்குத்தான் மணிமுடி உரியது. தான் தந்தையிடமிருந்து பெற்ற மணிமுடியை திரும்ப அவருக்கே அளித்துவிடப்போவதாக பேரரசர் கூறுகிறார்” என்றான்.

துரியோதனன் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை ஆனால் விழிகள் பூரிசிரவஸின் மேல் அசைவின்றி பதிந்திருந்தன. “அவர் கூறுவது குலமுறைப்படி சரியானதே. முன்னர் பிதாமகர் பீஷ்மர் அளித்ததன் பொருட்டே மணிமுடி பேரரசருக்கு வந்தது. இன்று அவையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அரசர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு மேலும் மேலுமென கிளர்ந்துகொண்டிருக்கின்றது. பேரரசர் அவையெழுந்து தன் மணிமுடியை திரும்பவும் பால்ஹிகருக்கே அளிப்பதாக சொன்னாரென்றால் அவையில் எழுவது வாழ்த்தொலிகளும் விழிநீர் கொந்தளிப்புமாகவே இருக்கும். அதனால் போர் நின்றுவிடுமென்று அவர் எண்ணுகிறார். பால்ஹிகரை மீறி எண்ண அஸ்தினபுரியின் குடிகளாலோ படைவீரர்களாலோ இயலாது. பாண்டவர்களாலும் அதை எண்ணிப் பார்க்க இயலாது” என்றபின் பூரிசிரவஸ் “மெய்யாகவே போரை நிறுத்துவதற்கான மிகச் சரியான வழி இதுதான். போர் எதன்பொருட்டேனும் நிற்குமென்றால் இதன்பொருட்டே” என்றான்.

துச்சாதனன் “மூத்தவரே, நான் மாதுலரையும் கணிகரையும் இங்கு வரவழைக்கிறேன்” என்றான். “வேண்டாம்” என்று துரியோதனன் கையசைத்து அவனை தடுத்தான். பூரிசிரவஸ் “அரசே, முடியை திருப்பி அளிக்க முடியாதென்று தாங்கள் நிலைகொள்ளலாம். ஆனால் எந்த அரசனும் தன் குடிகளையும் படைகளையும் பகைத்துக்கொண்டு மணிமுடி சூடி அமர இயலாது. அரசரின் மணிமுடி என்பது குடிகளால் சூட்டப்படுவதும் படைகளால் நிலைநிறுத்தப்படுவதுமாகும். குடிகளும் படைகளும் குலநெறிப்படியும் தொல்லறங்களின்படியுமே அரசர்களை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்றான். பின்னர் “அனைத்தையும்விட போர்வீரர்களின் நம்பிக்கை முதன்மையானது. உயிர்துறக்கச் செல்வோர் உறுதிகொண்டிருக்கவேண்டும். அது கலைந்தால் ஒரு சொல், ஒரு கணநேரத் தயக்கம் போதும், அணிகுலைந்து அவர்கள் பின்வாங்கத் தொடங்குவர்” என்றான்.

துரியோதனன் சிலகணங்கள் அசைவின்றி அமர்ந்திருந்தபின் சற்றே கலைந்து பூரிசிரவஸிடம் “எதுவாயினும் பேரரசரின் ஆணை, அதை நீர் இயற்றியாகவேண்டும். சென்று பிதாமகரை அவை திரும்பும்படி செய்க!” என்றபின் திரும்பி துச்சாதனனிடம் “நாம் அவை புகுவோம், இளையோனே” என்றான். துச்சாதனன் தலைவணங்கினான்.

முந்தைய கட்டுரைஆமீர்கான் – “நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா
அடுத்த கட்டுரைஇலுமினாட்டி -கடிதங்கள்