‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25

tigஅஸ்தினபுரியை அணுகுவதற்குள்ளாகவே பால்ஹிகபுரியின் படைப்பிரிவுகள் சலன் தலைமையில் அஸ்தினபுரியை சென்றடைந்துவிட்டிருந்தன. சோமதத்தரும் உடன்சென்றார். பால்ஹிகபுரியின் பொறுப்பை பூரியிடம் அளித்துவிட்டு பூரிசிரவஸும் கிளம்பினான். அஸ்தினபுரியிலிருந்து தனக்கு வந்த ஆணையின்படி அவன் வாரணவதத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டு ஆணைகளை பிறப்பித்துவிட்டு அங்கிருந்து அஸ்தினபுரியின் எல்லைக்காவல் நிலைகள் ஒவ்வொன்றையும் சீரமைத்தபடி தலைநகர் நோக்கி சென்றான். அவனுடன் தனித்தேரில் பால்ஹிகரும் வந்தார்.

பால்ஹிகரை சலனுடன் அனுப்புவதாகத்தான் அவன் முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவர் சலனை அடையாளம் காணவே இல்லை. பால்ஹிகபுரியில் பூரிசிரவஸைத் தவிர பிற மனிதர்கள் எவருமே அவர் விழிகளுக்கு படவில்லை. அரண்மனைக்குச் சென்ற மறுநாளே கிளம்பி அவர் முன்பு வந்தபோது தங்கிய சிபிரரின் பழைய இல்லத்தின் முகப்பில் சென்று நின்றிருந்தார். அரண்மனையில் அவரை காணவில்லையென்ற செய்தி வந்ததும் பூரிசிரவஸ் திகைத்தான். ஒற்றர்களை தூமவதி முதல் க்ஷீரவதி வரை செல்ல அனுப்பிவிட்டு நகரை சுற்றிவந்தபோதுதான் அவர் அங்கிருக்கக்கூடும் என்ற எண்ணம் வந்தது.

புரவியைத் தட்டி விரைந்து சென்றபோது அவ்வில்லத்தின் முன் இரு கைகளையும் கன்னத்தில் ஊன்றி திகைத்து நோக்கி நின்றிருந்த பால்ஹிகரை பார்த்தான். அங்கிருந்த சிறுவர்களும் முதுபெண்டிரும் முற்றத்தில் இறங்கி நின்று அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் அவர்களை விந்தையான விலங்குகளை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு இருபுறமும் பால்ஹிகபுரியின் வீரர்கள் படைக்கலங்களுடன் நின்றனர். பூரிசிரவஸ் புரவியை விரைவழித்து நிறுத்தி விரைந்து அவரை அணுகி “பிதாமகரே, இங்கிருக்கிறீர்களா?” என்றான். அவர் திரும்பி அவனைப் பார்த்து “இது எந்த ஊர்?” என்றார்.

“இது பால்ஹிகபுரி, பிதாமகரே. நான் உங்கள் சிறுமைந்தன் பூரிசிரவஸ்” என்று அவன் சொன்னான். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. “நான் கங்கைக்கு செல்ல வேண்டும். நீராட வந்தேன்” என்றார். “பிதாமகரே, இங்கு கங்கை இல்லை” என்றான். “இது அஸ்தினபுரி அல்லவா?” என்று அவர் கேட்டார். “அஸ்தினபுரியின் அருகிலும் கங்கையில்லை” என்று அவன் சொன்னான். அவர் தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். “பார்த்திபன்… பார்த்திபனின் இல்லம்… ஆனால்…” பின்னர் அங்கே நின்றிருந்த முதியவரை கைசுட்டி “இவன் பார்த்திபன்” என்றார். அவர் “இளவரசே, என் பெயர் சிபிரன்…” என்றார். தலையை தட்டியபடி “என் சித்தம் குழம்புகிறது. பார்த்திபர் என் முதுதாதையின் பெயர். அவர் இங்கிருந்து மறைந்து நூறாண்டுகளுக்கும் மேலாகின்றன” என்றார். அவருக்குப் பின்னால் வந்து நின்ற அவருடைய துணைவி “இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் இன்னொரு பால்ஹிக மூதாதை இதேபோல வந்து எங்கள் வீட்டுக்கு முன் நின்றார்” என்றார்.

பால்ஹிகர் “கல்லாலான அறை… அறைகளுக்குள்…” என்று ஏதோ சொல்லி கையை மேலே தூக்கினார். பின்னர் “எனது புரவி எங்கே?” என்று அவனிடம் கேட்டார். “இங்கிருக்கிறது, வருக!” என்று அவன் அவர் கைபற்றி அழைத்துச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “அவர் மானுடர்தானா?” என்று எவரோ கேட்டனர். “அரக்கர் குலத்தவரா?” என ஒரு குரல். “வாயை மூடு! தொல்பால்ஹிகர்கள் பேருருவர்கள்” என்றது பிறிதொரு குரல்.

புரவியில் ஏறிக்கொண்டு அரண்மனைக்கு திரும்புகையில் “பிதாமகரே, நீங்கள் என் மூத்தவருடன் அஸ்தினபுரிக்கு செல்லலாம்” என்றான். “அவருடன் படைகள் செல்கின்றன. நீங்கள் பாதுகாப்பாக செல்லமுடியும்.” அவர் “எவருடன்?” என்று கேட்டார். “சலன், எனது மூத்தவர். அவர்தான் பால்ஹிகபுரியின் பட்டத்து இளவரசர்” என்றான். “சலன் யார்?” என்று அவர் மீண்டும் கேட்டார். பூரிசிரவஸ் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டான்.

சலன் திட்டவட்டமாகவே சொன்னான் “இவருக்கு நமது படைவீரர்கள் தளபதிகள் எவரையுமே அடையாளம் தெரியவில்லை. இவர் சொல்லும் அத்தனை பெயர்களும் இங்கே நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுடையது. எங்கள் எவருக்கும் இவரிடம் பேசுவதற்கு சொற்களில்லை. இவரை அழைத்துச் செல்வது எளிதல்ல. அனைத்துக்கும் மேலாக வழியில் காணாமல் போய்விட்டாரென்றால் திரும்ப கண்டுபிடிப்பதும் இயல்வதல்ல. உன்னுடன் வரட்டும். உன்னுடன் பேசிக்கொண்டிருப்பதுவரை உன்னைவிட்டு செல்லமாட்டார். பித்தின் போக்கில் வழி தவறினாலும்கூட உன் பெயரை சொல்ல அவருக்கு தெரிந்திருக்கிறது.”

சலன் படைகளுடன் கிளம்பிய மறுநாளே பூரிசிரவஸ் பால்ஹிகருடன் சிறிய படையொன்றை அழைத்துக்கொண்டு கிளம்பினான். அவர் சிந்தாவதியின் கரை வழியாக சுற்றிலும் நோக்கியபடி வந்தார். பின்னர் முகம் மலர “அஸ்வயோனி! அஸ்வபக்ஷம் வழியாக செல்லும்போது…” என்றார். அஸ்வயோனி என்றழைக்கப்பட்ட சிறிய பாறையிடுக்கு பெரிய சாலைமுகமாக ஆகியிருந்தது. அஸ்வபக்ஷம் என்று சொல்லப்பட்ட பாறையடுக்குகளை தீயிட்டு வெடிக்கச்செய்து நெம்புகோல்களால் உடைத்துத் தள்ளி பாதையை அமைத்திருந்தனர். அச்சொற்களையே அனைவரும் மறந்துவிட்டிருந்தனர்.

“ஆம் பிதாமகரே, நாம் அங்குதான் செல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். “அங்கிருந்து அப்பால் மலைச்சரிவு. வாரணவதம். அங்கு ஒருபெண். அவள் பெயர்…” என்றபின் “அவள் பெயர் என்ன?” என்றார். பூரிசிரவஸ் “நினைவில்லை” என்றான். “அவள் பெயர்…” என பால்ஹிகர் தன் உள்ளத்துக்குள் தேடினார். நூற்றியிருபதாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண். அவளும் உயிர்வாழ்கிறாள் என்றால் எப்படி இருக்கும்? காலம் என்ற ஒன்று பொருளிழந்து ஈசலிறகுபோல் உதிர்ந்துகிடப்பதாக அவன் எண்ணிக்கொண்டான்.

பால்ஹிகர் தன் இரும்புக்கவசத்தின் தலையணியை மட்டும் அணிந்திருந்தார். அவர் பால்ஹிகபுரிக்கு வந்ததுமே அவன் இரும்புக்கொல்லர்களை வரவழைத்து அவருக்கென தனியான கவசங்களை வார்த்தெடுக்கச் செய்தான். கால்குறடுகளும் முழங்கால்காப்புகளும் தோளிலைகளும் மணிக்கட்டு வளைகளும் மானுடருக்குரியவையா என்ற வியப்பை எழுப்பும் அளவுக்கு பெரிதாக இருந்தன. அவற்றை கொல்லன் தன் வண்டியில் கொண்டுவந்து முற்றத்தில் இறக்கினான். பெரிய தோல் பையிலிருந்து அவற்றை அவன் எடுத்து வைத்தபோது பூரிசிரவஸே “நீர் சரியாக அளவுகள் எடுத்துக் கொண்டீரல்லவா?” என்றான்.

கொல்லன் புன்னகைத்து “அஞ்ச வேண்டியதில்லை, இளவரசே. அவருக்குப் பொருந்துவதாகவே அமைத்தேன்” என்றான். “ஆனால் என் உதவியாளர்கள் நான் பிழையாக அளவெடுத்துவிட்டேன் என்றும் இவை எந்த மானுடருக்கும் உரிய அளவுகள் அல்ல என்றும் சொன்னார்கள். இவர் எளிய மானுடரல்ல என்று சொன்னேன்” என்றான். இரும்புச் சங்கிலிகளால் ஆன மார்புக்கவசத்தை கொல்லனால் இரு கைகளாலும் தூக்க முடியவில்லை. பூரிசிரவஸ் ஒருபக்கம் தூக்க இருவரும் தூக்கி எடுத்தபோது யானை மத்தகத்திற்கு போடவேண்டிய கவசம்போல தோன்ற பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

அவன் எண்ணத்தை உய்த்துணர்ந்த கொல்லன் “ஆம், யானைகளுக்குரிய கவசங்கள் போலத்தான். ஒன்று கருதுக, இளவரசே! இவ்வீரர் களத்தில் மானுடரால் கொல்லப்பட மாட்டார். இவரை கொல்பவன் உண்டென்றால் இவருடைய குருதியில் இவருக்கு நிகரான உடல்கொண்டவனாகவே இருப்பான்” என்றான். “இறப்பார் என்று எவர் சொன்னது?” என்று பூரிசிரவஸ் மெல்லிய புன்னகையுடன் கேட்டான். “இப்போரிலும் இறக்கவில்லையென்றால் பிரம்மனுக்கு பித்து எழுந்துவிட்டது என்றுதான் பொருள். அவருக்கு என்ன அகவை? நூற்றி இருபது கடந்துவிட்டதா?”

“நூற்று எழுபது அகவை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நூற்றெழுபது அகவை வரை மானுடர் உயிர்வாழ்வதா? நல்லவேளை பிரம்மன் பல்லாயிரத்தில், லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நீள்வாழ்வை அளித்திருக்கிறான். அனைவருக்கும் அளித்திருந்தால் இப்புவியே முதியவர்களால் நிறைந்திருக்கும்” என்றார் அருகே நின்றிருந்த அமைச்சரான சுதாமர். “பிதாமகரை அழைத்து வருக!” என்று பூரிசிரவஸ் ஏவலனிடம் சொன்னான். கொல்லன் “மெய்யுரைப்பதென்றால் கவசங்களை வடிக்கையில் உருவாகும் நிமித்தங்களை கணிக்கும் ஒரு முறைமை உண்டு, இளவரசே. இக்கவசங்கள் வடிக்கப்படும்போது எழுந்த எதிர்நிமித்தங்கள் இவர் களம்படுவார் என்பதையே காட்டுகின்றன” என்றான்.

பால்ஹிகர் ஏவலருடன் வந்தார். “பிதாமகரே, உங்கள் கவசங்கள்” என்று பூரிசிரவஸ் காட்டினான். பால்ஹிகரால் அவை என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. “என்ன அது?” என்றபடி அருகே வந்தார். மணிக்கட்டு வளையை எடுத்து “இது எதற்காக?” என்றார். பூரிசிரவஸ் அதை வாங்கி அவர் கைகளில் பொருத்தினான். “தங்களுடன் போர் புரிபவர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக, மூத்தவரே” என்றான். “அவர்களும் இதேபோல் அணிந்திருப்பார்களா?” என்றார். “ஆம்” என்றான். “அவ்வாறெனில் நாமும் எவரையும் கொல்ல முடியாதே?” என்று அவர் கவலையுடன் கேட்டார்.

“கொல்லமுடியும், கவசங்களை உடைக்க முடியும்” என்றான். “உடைக்க முடியும் என்றால் நாம் ஏன் இதை அணியவேண்டும்?” என்றார். பூரிசிரவஸ் நகைத்து “பிதாமகரே, தங்கள் கையின் வாளும் கதையும் நூறுமடங்கு விசைகொண்டவை. அவை பிறர் கவசங்களை உடைக்கும். தங்கள் கவசங்களை உடைக்கும் அளவுக்கு பெரிய வாளையோ வேலையோ ஏந்தும் வீரர்கள் எவருமில்லை” என்றான். “இருக்கிறான். அவன் பெயர் பீமன்” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் திகைத்தான். “எவர் சொன்னது?” என்றான். “உன் மைந்தன் காகளன். அவனிடம் நான் இன்று விளையாடும்போது அவன் பந்தை எடுத்து வீசினேன். என்னை பீமன் கொல்வான் என்று அவன் சொன்னான்” என்றார் பால்ஹிகர்.

பூரிசிரவஸ் பேச்சை விலக்கி கொண்டுசெல்லும் பொருட்டு “இவற்றை பாருங்கள்… உங்கள் உடலுக்குரியவை” என்றான். பால்ஹிகர் குழந்தைகளுக்குரிய ஆர்வத்துடன் கவசங்கள் ஒவ்வொன்றையாக எடுத்து பார்த்தார். அவற்றை தன் உடலில் வெவ்வேறு இடங்களில் பொருத்தி மெல்ல அவற்றின் உருவங்களை தன் உடலில் கண்டுகொண்டார். “என் உடல்போலவே இருக்கின்றன. நான் இரும்பாக மாறியதுபோல” என்றார். நகைத்தபடி எழுந்து “இது என் தோள்களுக்குரியது. என் தோள்களில் இது பொருந்துகிறது. ஆம், என் தோள்களுக்குரியது!” என்று கூவினார். “ஆம், பிதாமகரே. உங்கள் தோள்களுக்குரியவை அவை. தோள் அளவுக்கே வடிக்கப்பட்டவை” என்றான். “இதில் நான் கால் நுழைத்துக்கொள்ள முடியும்” என்று அவர் கால்கவசங்களை காட்டி சொன்னார். “ஆம், தங்கள் கால்களுக்குரியவை” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

அவர் அவற்றை எடுத்து தன் கால்களில் அணிந்துகொண்டு மரத்தரையில் ஓசையுடன் நடந்தார். அந்த ஓசை உவகையளிக்க காலை ஓங்கி ஓங்கி தட்டினார். “இவற்றால் நான் பாம்புகளைக்கூட மிதித்துக் கொல்லமுடியும்” என்றார். “ஆம், பிதாமகரே. தாங்கள் முள்ளிலும் அனலிலும்கூட இவ்விரும்புக் குறடுகளுடன் நடக்க முடியும்” என்று அவன் சொன்னான். அவர் அவற்றை குனிந்து நோக்கி “ஆனால் நான் இவற்றுக்குள் இல்லாதபோது இவை தாங்களே நடந்துசென்றுவிடுமோ?” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

அவர் நெஞ்சுக்கவசத்தை எடுத்து குலுக்கிப் பார்த்தார். சிறிய குழந்தை கிலுகிலுப்பையை ஆட்டுவதுபோல் இருந்தது. பெருமையும் மகிழ்ச்சியுமாக பூரிசிரவஸை பார்த்தார். “இதை சலங்கையாக யானைக்கு கட்டலாம்” என்றார். பூரிசிரவஸ் “ஆம்” என்றான். “ஆனால் இங்கே யானை இல்லையே?” என்றார் பால்ஹிகர். “அஸ்தினபுரியில் ஏராளமான யானைகள் உள்ளன” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அங்கே யானைகள் உள்ளன” என அவர் தலையசைத்தார். “தாங்கள் இதை தங்கள் மார்பில் அணிந்துகொள்ளலாம். வேல்கள் மார்பில் பதியாமல் இது காக்கும்” என்றான்.

பால்ஹிகர் ஒவ்வொரு சங்கிலியாக எடுத்து சற்று முறுக்கி மறுபடியும் கீழே விட்டார். “மார்பில் பொருத்திக்கொள்ளுங்கள், பிதாமகரே” என்றான். அவர் அதை தன் மார்பில் வைத்து “இதை வைத்தால் நான் யானை போலிருப்பேன். என் நெஞ்சு யானையின் முகபடாம் அணிந்ததுபோல் தென்படும்” என்றார். “ஆம், பிதாமகரே” என்றான். “ஆனால் நான் அம்பால் சாகமாட்டேன். கதையால்தான் சாவேன்” என்றார். “இளையவன் சொன்னான். நான் பீமனின் கதையால் சாவேன் என்று” என்றபின் இன்னொரு கவசத்தை எடுத்தார்.

திடீரென்று ஐயம்கொண்டு “இவை எனக்குத்தான் அல்லவா? பிற எவரும் இதை பகிர்ந்துகொள்ள மாட்டார்களல்லவா?” என்றார். பூரிசிரவஸ் “உங்களுக்கேதான். நீங்களே வைத்துக்கொள்ளலாம். நீங்கள் இவற்றை அணிந்துதான் போருக்கு செல்லவிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், நான் இவற்றை அணிந்துகொண்டு போரில் இறந்து விழுவேன்” என்று அவர் சொன்னார். பூரிசிரவஸ் வாய்விட்டு நகைத்துவிட்டான்.

அவர் அக்கவசங்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் அவற்றை முறையாக அணிந்துகொண்டு அவன் அறைக்கு வந்து கதவை தட்டினார். சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அவன் எழுந்து கதவை திறந்தபோது முற்றிலும் கவச உடையணிந்து பளபளக்கும் இரும்புப் பாவையென பேருருக்கொண்டு நின்றிருந்த அவரைக் கண்டு திடுக்கிட்டான். அவர் “நாம் எப்போது போருக்கு கிளம்புகிறோம்?” என்றார். “பிதாமகரே, இவற்றை நாம் போர்க்களத்தில்தான் அணிந்துகொள்ள வேண்டும்” என்றான். “ஏன்? இப்போது அணிந்தால் என்ன?” என்று அவர் கேட்டார்.

“இப்போது அணிந்தால் இவற்றின் எடை நம்மை வருத்தும். நம்மால் அமரவோ படுக்கவோ இயலாது” என்றான். “அத்தனை பெரிய எடையெல்லாம் ஏதுமில்லை” என்று அவர் சொன்னார். “நான் இவற்றை நேற்றுமுதல் அணிந்திருக்கிறேன். இரவில் இவற்றை அணிந்தபடியேதான் துயின்றேன். நான் இவற்றை அணியாமல் இருந்தால் வேறு எவரேனும் எடுத்து அணிந்துவிடுவார்கள்” என்றார். “இல்லை பிதாமகரே, வேறு எவரும் இவற்றை அணியப்போவதில்லை. இவை தங்களுக்குரியவை” என்று அவன் சொன்னான்.

பால்ஹிகர் அவனை ஐயத்துடன் பார்த்து “உனக்கு வேறு கவசங்கள் உள்ளனவா?” என்றார். “ஆம், இருக்கிறது பிதாமகரே. மேலும் தங்கள் கவசங்களை வேறு எவருமே அணிய முடியாது” என்றான். அவர் அவனை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “நான் கழற்றப்போவதில்லை துயிலும்போதும் கழற்றப்போவதில்லை” என்றபின் திரும்பிச் சென்றார். அவன் அவருக்குப் பின்னால் ஓரடி எடுத்து வைத்துவிட்டு புன்னகையுடன் நின்றுவிட்டான்.

ஒருவகையில் அது நன்றுதான் என்று பின்னர் தோன்றியது. அவரால் அக்கவச உடையுடன் நெடுந்தொலைவு செல்ல இயலாது. எங்கும் விழிகள் திடுக்கிட்டு திரும்பி நோக்கும். மேலும் இரண்டு நாட்கள் ஆயிற்று அவர்கள் கிளம்புவதற்கு. அதுவரை அவர் அந்தக் கவச உடைக்குள்ளாகவே இருந்தார். சலனுடன் படைகள் கிளம்பிச் சென்ற பின்னர் பூரிசிரவஸ் தானும் கிளம்ப முடிவெடுத்தான். அவனுடைய சிறிய படை வாள்களும் வேல்களுமாக ஒருங்கி அரண்மனை முற்றத்தில் நின்றிருந்தது.

அவன் அவர் அறைக்குச் சென்று “பிதாமகரே, நாம் கிளம்புவோம்” என்றான். அவர் தன் அறைக்குள் ஈட்டி முனையொன்றை தனியாக கழற்றி எடுத்து அதைக் கொண்டு தனது கால் குறடை சுரண்டிக்கொண்டிருந்தார். அவனை நிமிர்ந்து பார்த்து “எங்கே?” என்றார். “நாம் போருக்கு கிளம்புகிறோம்” என்றான். உடனே அவனுக்கு அச்சம் எழுந்தது. முதியவர் முற்றத்தில் இறங்கியதுமே அங்கு நின்றிருக்கும் காவல் வீரர்களை தாக்கத் தொடங்கிவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். “போர் இங்கல்ல பிதாமகரே, போர் நிகழ்வது நெடுந்தொலைவில். அஸ்தினபுரியில்” என்றான். “ஆம், அஸ்தினபுரியில்” என்றார் பால்ஹிகர். அஸ்தினபுரி என மெல்ல நாவுக்குள் சொல்லிக்கொண்டார்.

“போர் அறைகூவல் எழுவதுவரை தாங்கள் போர் செய்ய வேண்டியதில்லை” என்றான் பூரிசிரவஸ். “ஆம், போர் அறைகூவல் கேட்க வேண்டும். நான் அதன்பிறகு போர் செய்வேன். ஆனால் நான் யாரை கொல்லவேண்டும்?” என்று அவர் கேட்டார். “அங்கு சென்ற பின்னர் தாங்கள் கொல்லவேண்டியவர்களை சுட்டிக்காட்டுவோம். அவர்களை மட்டும் தாங்கள் கொன்றால் போதும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம்” என்றபின் அவர் கண்களை மூடி புன்னகைத்து “போர்க்களத்தில் என்னை ஒரு யானை கொல்லும்” என்றார். “யார் சொன்னது?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “நான் கனவுகண்டேன்” என்றார். “நான் நிமித்திகனிடம் அது உண்மையா என்று கேட்டேன். அவன் தெரியாது என்றான். ஆகவே நான் அவனைத் தூக்கி உப்பரிகையிலிருந்து கீழே போட்டேன்.”

பூரிசிரவஸ் பால்ஹிகருடன் முற்றத்திற்கு வந்தபோது அங்கு கூடி நின்றிருந்த வீரர்கள் அனைவரும் அவருடைய பெருந்தோற்றத்தைக் கண்டு திகைத்து மறுகணம் அவர்களை அறியாமலேயே “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினார்கள். பால்ஹிகர் படைக்கலங்களை எடுத்துவிடக்கூடும் என்று எண்ணி அவன் திரும்பிப் பார்த்தான். அவர் இரு கைகளையும் விரித்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்று சொன்னபின் பூரிசிரவஸை நோக்கி பெருமையுடன் புன்னகைத்தார். அவர் நிமிர்ந்த தலையுடன் நடந்தபோது பூரிசிரவஸும் மெய்ப்பு கொண்டான்.

பால்ஹிகபுரியிலிருந்து கிளம்பும்போது பூரிசிரவஸ் பெரும் அச்சமும் தயக்கமும் கொண்டிருந்தான். செல்லும் வழியெங்கும் முதியவர் செய்யக்கூடிய பிழைகள் என்னென்ன என்று எண்ணி அவன் கணக்கிட்டுக்கொண்டே வந்தான். காணாமலாகிவிடக்கூடும், பிழையாக எவரையேனும் கொன்றுவிடக்கூடும், வழியில் விலங்குகளைக் கண்டு வேட்டையாடும் பொருட்டு பின்னால் சென்றுவிடக்கூடும். எப்பொழுதும் அவர் அருகே ஐந்து வீரர்கள் இருக்கவேண்டுமென்று அவன் ஆணையிட்டிருந்தான். அவர்கள் அச்சமும் ஆர்வமுமாக எப்போதும் அவருடன் இருந்தனர். அவர் அவர்கள் தன்னைச் சூழ்ந்து தொடர்வதை உணரவேயில்லை.

அவர் அவனுடன் மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வந்தபின் அறிந்த ஒன்று, அவர் முற்றிலும் துயில்வதே இல்லை என்பது. பகலில் அவர் நிலைகொள்ளாமல் அரண்மனையிலும் சுற்றியிருந்த சிறு காட்டிலும் அலைந்துகொண்டிருந்தார். இரவில் அவரை பேச்சுக்கொடுத்து அழைத்துச் சென்று அறைக்குள் படுக்க வைத்தார்கள். சற்று நேரம் மஞ்சத்தில் படுத்து தலையை அசைத்தபடி தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடுக்கிட்டவர்போல் எழுந்து அமர்ந்தார். தன் அறையையும் அறைக்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் கூர்ந்து ஆராய்ந்தார். எழுந்து எச்சரிக்கையுடன் வெளியே வந்து இடைநாழியை பார்த்தார். மிக மெல்ல இடைநாழியை அடையாளம் கண்டுகொண்டதும் அதனூடாக நடந்து மீண்டும் காட்டுக்குள் சென்றார். அவரை கண்காணிக்கும் வீரர்கள் ஓசையில்லாமல் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

இரவுகளில் காடுகளில் என்ன செய்கிறார் என்று உடன் சென்ற வீரர்களிடம் அவன் கேட்டான். “வேட்டையாடுகிறார். உயிர்களைக் கிழித்து அனல் மூட்டி சுட்டு முழுமையாகவே உண்கிறார். ஒரு முழு மானை எச்சமின்றி உண்டு திரும்பி வருகிறார்” என்று வீரன் சொன்னான். இன்னொருவன் “இளவரசே, அவர் மானுடர் அல்ல. மலையிலிருந்து தாங்கள் விண்வாழ் கந்தர்வர் எவரையோ அழைத்து வந்திருக்கிறீர்கள் என்று இங்கே குடியினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அவரால் அத்திமரத்தை வெறும் கைகளால் உலுக்கி காய்களை உதிர்க்கமுடிகிறது” என்றான் இன்னொருவன்.

ஆனால் பால்ஹிகர் பால்ஹிகபுரியின் எல்லையைக் கடந்ததுமே ஆழ்ந்த அமைதி கொண்டார். பால்ஹிகபுரியின் எல்லையில் அமைந்த சிற்றாலயத்தில் அவருக்கே கட்டப்பட்ட ஆலயத்தின் கருவறைக்குள் அமர்ந்திருந்த சிலையைப் பார்த்து கைசுட்டி “இதுதான் அந்தச் சிலை” என்றார். அங்கிருந்த பூசகர் உள்ளிருந்து அனலும் புனலும் காட்டி பூசை முடித்து சுடர் கொண்டு அவருக்கு காட்டினார். அவர் அதை தொட்டு வணங்கவில்லை. “எவர்?” என்று பூரிசிரவஸ் குழப்பத்துடன் கேட்டான். “பால்ஹிகன்!” என்று அவர் சொன்னார். பூரிசிரவஸ் “தங்களிடம் எவர் சொன்னது?” என்றான். “நான் சிறுவர்களுடன் சேர்ந்து இங்கு வந்தேன். உள்ளே இருப்பது யார் என்று கேட்டேன். பால்ஹிகர் என்றார்கள்” என்று பால்ஹிகர் சொன்னார்.

பால்ஹிகபுரியின் குடிகள் இறுதி வரை அவர்களின் தெய்வம் நேரில் எழுந்ததை உணர்ந்துகொள்ளவே இல்லை. அவர்கள் பால்ஹிகர் எனும் மூதாதை தெய்வத்தின்மேல் ஏற்றிவைத்த கதைகள் எதுவும் அவர்மேல் படியவில்லை. அத்தெய்வம் ஆழ்ந்த அமைதியும் அருள்புரியும் விழிகளும் கொண்டிருந்தது. அவர்களின் அனைத்துச் சொற்களையும் செவிகொடுத்து கேட்டது. அவர்களின் கோரிக்கைகளுக்கு கனிந்தது. எப்போதும் அவர்களுடன் இருப்புணர்த்தி துணையென அமைந்தது. அவர் அவர்களின் அனைத்துச் சொற்களுக்கும் அப்பாற்பட்டவராக அவர்கள் எவரையும் அறியாதவராக இருந்தார். அவர்களுடன் கொடூரமாக விளையாடினார். அவர்களின் குழந்தைகளைத் தூக்கி வானில் எறிந்து வெறும் கைகளால் பிடித்தார். அவர்களின் பசுக்களை தூக்கிச் சுழற்றி அப்பால் வீசினார். அவருடன் சிறு பூசல் எவருக்கேனும் எழுமென்றாலும் சினந்து அறைந்தார். அவரிடம் அறைபட்டவர்கள் பலநாட்கள் கழித்தே நினைவு மீண்டனர். புரவிகளும் யானைகளும்கூட அவரை அஞ்சி பின் காலெடுத்து வைத்தன.

பால்ஹிகர் எல்லையை அடைந்ததுமே அவனிடம் “நாம் அஸ்தினபுரிக்கு செல்கிறோம்” என்று அறிவித்தார். “ஆம் பிதாமகரே, அஸ்தினபுரிக்கு செல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். “அங்கு நாம் போரிடுகிறோம். ஏராளமான அரக்கர்களை கொல்கிறோம்!” என்றார். “அரக்கர்களையா?” என்று அவன் கேட்டான். “ஆம், சிறகுகள் உள்ளவர்கள். அவர்கள் வாயில் நாக்கு அனலென்றிருக்கும். சிறிய செவிகள்” என்று அவர் விரலை காட்டினார். “அஸ்தினபுரியில் நான் ஆயிரம் அரக்கர்களை கொல்வேன். அதன்பிறகு பீமன் என்பவன் யானையாக வந்து என்னை கொல்வான். மிகப் பெரிய யானை. அது எட்டு பெருங்கொம்புகள் கொண்டிருக்கும்” என்றார்.

“இவற்றை யார் சொன்னது?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அங்கே வடக்குத் தெருவில் பீலன் என்றொரு சிறுவன் இருக்கிறான், அவன் சொன்னான்” என்றார் பால்ஹிகர். பகலில் பெரும்பாலான பொழுதுகளில் நகரின் சிறுவர்களுடன்தான் செலவிடுகிறார் என்பதை பூரிசிரவஸ் அறிந்திருந்தான். உள்ளத்தின் ஒழுங்கு சிதறியமையால் அவரால் பெரியவர்களின் சொற்களை உள்வாங்க இயலவில்லை. ஆனால் குழந்தைகள் பேசும் ஒவ்வொன்றும் அவருக்கு பொருள்பட்டன. மகிழ்ந்து சிரித்தபடி அவர்கள் பேசுவதை அவர் கேட்டுக்கொண்டிருப்பதை பலமுறை அவன் பார்த்திருந்தான்.

செல்லும் வழியெங்கும் பால்ஹிகர் சிறுவர்களைப்போல ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி “அது என்ன?” என்று வினவினார். அவன் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே அவை என்ன என்று அவரே சொன்னார். ஒவ்வொன்றும் முற்றிலும் வேறாக, திகைப்பும் நகைப்பும் ஊட்டுவதாக அவருக்குள் உருமாறி பதிந்திருந்தன. கோட்டைகள் மிதக்கும் கலங்களாக தெரிந்தன. காவலர்கள் ஏந்திய ஈட்டிகள் அவர்களின் தலையில் எழுந்த கூரிய கொம்புகளாக தோன்றின. தேர்கள் விந்தையான விலங்குகள். காவல்மாடங்களை அவர் பூதங்கள் என்றார்.

அவன் மலைச்சாலையின் உச்சியில் நின்று திரும்பி பால்ஹிகபுரியை நோக்கினான். கோட்டைசூழ்ந்த நகரம் ஓர் இல்லம்போல் தோன்றியது. மலைகளின் மகவு. தூமவதி, ஷீரவதி, பிரக்யாவதி, பாஷ்பபிந்து, சக்ராவதி, சீலாவதி, உக்ரபிந்து, ஸ்தம்பபாலிகை, சிரவணிகை, சூக்ஷ்மபிந்து, திசாசக்ரம் என்னும் அன்னையரின் ஒரே பேறு. அது மழலை மாறி வளர்ந்துவிட்டிருந்தது. ஆயினும் அன்னையருக்கு அது குழவியே. அவன் பனிமலையடுக்குகளை நோக்கிக்கொண்டு நின்றான். படைத்தலைவன் “இளவரசே” என்றதும் நிலைமீண்டு பெருமூச்சுடன் புரவியை செலுத்தினான்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : பேரா.சுஜாதா தேவி
அடுத்த கட்டுரைஇலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதம்