‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20

tigபிரேமை “நம் மைந்தன் பெருவீரன். காட்டெருதுகளை தோளில் தூக்கி வருபவன். ஒருமுறை சேற்றில் சிக்கிய பொதிவண்டியையே தூக்கி அப்பாலிட்டான். எங்கள் குடியின் பேருடலன். உங்கள் பால்ஹிக மூதாதையை ஒருநாள் அவன் தூக்கி மண்ணில் அறைவான்” என்றாள். பூரிசிரவஸ் “நன்று, நான் விழைந்த வடிவம்” என்றான். கால்கள்மேல் தோல்போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். பிரேமை சிறுமணையை அவன்முன் இட அதன்மேல் சைலஜை ஊன்துண்டு இட்டு கொதிக்கவைத்த சோளக்கஞ்சியை மரக்கோப்பையில் கொண்டு வந்து வைத்தாள். மரக்குடைவுக் கரண்டியால் அவன் அதை அள்ளி உறிஞ்சினான். இனிப்பாக இருந்தது. தலைதூக்கி “இது வெல்லமிட்ட ஊன் கஞ்சியா?” என்றான்.

முகம்மலர “ஆம், இந்த மலைப்பகுதியில் இப்போது இதுதான் விரும்பப்படும் உணவு” என்றாள் சைலஜை. “முன்பு இன்கஞ்சி இருந்ததில்லையா?” என்றான். “இங்கே இனிப்பே இருந்ததில்லை என இப்போது தேனும் வெல்லமும் வந்தபின்னரே தெரிகிறது. நாங்கள் சோளத்தின் மெல்லிய சுவையையே இனிப்பு என்று எண்ணிக்கொண்டிருந்தோம்” என்று பிரேமை சொன்னாள். பூரிசிரவஸ் அதன் வெம்மையை உடலெங்கும் உணர்ந்தான். “நன்று” என தலையசைத்தான். அவன் குடிப்பதை அவள் நோக்கி அமர்ந்திருந்தாள். சைலஜையும் அருகே நிற்க அவள் “போடி” என்றாள். அவள் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

“ஊரில் உங்களுக்கு எத்தனை மனைவியர்? எவ்வளவு குழந்தைகள்?” என்று அவள் கேட்டாள். “நான்கு மனைவியர், ஏழு மைந்தர்கள். நான் என் குலத்தில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெண்ணென கொள்ளவேண்டியிருந்தது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அங்கு அதுதான் வழக்கமென்றார்கள். அந்த மைந்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? என் மைந்தனுடன் நிகர்நிற்க முடியுமா?” என்றாள். “ஏழு மைந்தரையும் உனது மைந்தன் ஒற்றைக்கையால் அள்ளித்தூக்கிவிட முடியும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “என் கனவுகள் இங்கு ஒரு மைந்தனாயின. என் அச்சங்களும் தயக்கங்களும் விழைவுகளும் அங்கு ஏழு மைந்தராயின” என்றான்.

“இப்படித்தான் நூல்களில் உள்ள வரிகளை சொல்கிறீர்கள்” என்று சொன்ன பிரேமை “நான் சொன்ன எதுவும் என் அன்னைக்கோ தங்கைக்கோ இதுவரை புரிந்ததில்லை. இப்போது உங்கள் பேச்சைக் கேட்டால் திகைப்பார்கள்” என்றாள். “தங்கைக்கு குழந்தைகள் இல்லையா?” என்றான் பூரிசிரவஸ். “அவளுக்கு மூன்று மைந்தர்கள். அவர்கள் தந்தையின் ஊருக்கு வேட்டைபயிலும்பொருட்டு சென்றுள்ளனர்” என்றாள் பிரேமையின் அன்னை. பூரிசிரவஸ் அந்த உலகியல் உரையாடலினூடாக அக்குடிக்குள் தன்னை முற்றாக பொருத்திக்கொண்டான். அன்னை “பேசிக்கொண்டிருங்கள்” என்று சொல்லி அறைக்குள் சென்றாள்.

“நான் நீர் எடுத்து வைக்கிறேன். இவர் நீராடி ஆடை மாற்ற வேண்டுமல்லவா?” என்றாள் சைலஜை உள்ளிருந்து. “சொன்னால்தான் செய்வாயா?” என்றாள் பிரேமை. பூரிசிரவஸ் தனியாக அவளுடன் அமர்ந்தபோது நெஞ்சு மீண்டும் படபடக்கத் தொடங்கியதை உணர்ந்தான். அவள் தோள்களையும் கழுத்தையுமே அவன் விழிகள் பார்த்தன. எத்தனை அணுக்கமானது. ஒவ்வொரு மயிர்க்காலும் நினைவில் நிற்குமளவுக்கு அவன் அறிந்தது. அப்பொழுதும் அதே பெருங்காமம் அவள்மேல் எழுவதை உணர்ந்தான். ஆணென்று நின்று தான் விரும்பிய ஒரே பெண். அரசனென்றும் தொல்குடியினனென்றும் விழைந்ததும் அடைந்ததுமான பெண்டிர் பிறிதொருவருக்குரியவர்கள். எனக்குரியவள் இவள் மட்டுமே.

அவன் விழிகளைப் பார்த்து அவள் விழிகள் மாறுபட்டன. “இங்கு எவ்வளவு நாள் இருப்பீர்கள்?” என்றாள். “சிலநாட்கள்… நான் செல்லவேண்டும்” என்றான். அவள் மெல்ல கிளுகிளுத்துச் சிரித்தபடி “நான் நாம் தனித்திருந்ததை நினைத்துக்கொண்டே இருப்பேன். பிறகு எனக்கு ஐயம் வந்தது. அவ்வாறு தனித்திருந்ததை நினைத்தால் குழந்தை பிறந்துவிடுமா என்று. ஏனெனில் நிறைய முறை கனவுகளில் நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆகவே குலப்பூசகனிடம் சென்று கேட்டேன். கனவில் நிகழ்வதனால் எவரும் கருவுறுவதுமில்லை, குழந்தை பிறப்பதுமில்லை என்று அவர் சொன்னார். நினைப்பதனால் நினைப்பிலேயே குழந்தை பிறக்குமல்லவா என்று நான் கேட்டேன். ஆமாம், அந்தக் குழந்தை பிறர் விழிக்குத் தெரியாமல் உன்னுடன் இருந்துகொண்டே இருக்கும் என்றார்.”

ஒழுக்கென பெருகிய சொற்கள் அவளை கொண்டுசென்றன. அவன் தொடையைத் தட்டி அழைத்து அழைத்து சொல்லிக்கொண்டே சென்றாள். “கனவில் பிறந்த குழந்தை கனவில் வாழும் என்றார். எனக்கு கனவில் இன்னொரு மைந்தன் இருக்கிறான். அவன் மிகச் சிறியவன். பெரியவனை என்னால் இப்போதெல்லாம் அணுகவே முடியவில்லை. சிறியவன் மேலும் அன்பானவன். உங்களைப்போலவே மென்மையாகவும் ஏதும் புரியாமலும் பேசுபவன். எனக்கு அவனைத்தான் மேலும் பிடித்திருக்கிறது” என்றாள். “இன்னும் நிறைய குழந்தைகள் வேண்டும்… ஏராளமான குழந்தைகள்.” பூரிசிரவஸ் “எவ்வளவு குழந்தைகள்?” என்று கேட்டான். “நூறு” என்று அவள் சொன்னாள். பத்து விரல்களைக் காட்டி “நூறு குழந்தைகள். நான் தனியாக படுத்திருக்கும்போது என்னைச் சுற்றி சிறுகுருவிகள்போல ஒலியெழுப்பி அவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நூறு குழந்தைகள்” என்றபின் அவனை நோக்கி குனிந்து குரலைத் தாழ்த்தி “அவ்வளவு முறை நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம் தெரியுமா?” என்றாள்.

அவன் அவளிடம் தன் உணர்வுகளை சொல்ல விரும்பினான். நீயே என் ஒரே பெண் என்று. வெறும் ஆணாக இருப்பதை அஞ்சியே உன்னை தவிர்த்தேன் என்று. ஆனால் அவன் என்ன சொன்னாலும் அவள் புரிந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது. ஒன்றுமட்டும் சொல்லாமலிருக்க இயலாதென்று தெரிந்தமையால் அவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “நான் மெய்யாகவே ஒன்று சொன்னால் நீ அதை நம்பவேண்டும்” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள். ஆனால் அவள் தான் மேலும் சொல்லவிருக்கும் சொற்களால் கண்கள் மின்ன புன்னகை கொண்டிருந்தாள். “இப்புவியில் நான் அணுக்கமாக உணர்ந்த பிறிதொரு உயிர் நீ மட்டுமே. அன்பென்றும் காதலென்றும் நான் அறிந்தது உன்னிடம் மட்டுமே. பிறிதெவருக்கும் நான் கணவனோ காதலனோ அல்ல” என்றான். அவள் விழி கனிந்து “அது எனக்குத் தெரியும்” என்றாள். “எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். “எப்படியோ தெரியும்” என்று சொல்லி “நீங்கள் எவ்வளவு நாள் இங்கிருப்பீர்கள்?” என்று கேட்டாள். முன்னரே சொன்னது அவள் உள்ளத்தை சென்றடைந்திருக்கவில்லை. “சில நாட்கள். நான் உடனே திரும்பவேண்டும். அரசுப் பணிகள் உள்ளன” என்றான். அதுவும் அவள் உள்ளத்தை சென்றடையவில்லை.

வெளியே புரவிக்குளம்படி கேட்டது. “வந்துவிட்டான்!” என்றபடி அவள் எழுந்து வெளியே ஓடினாள். அவன் “யார்?” என்று கேட்டான். ஆனால் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. “நம் மைந்தன்” என்றபடி அவள் வெளியே சென்றாள். பூரிசிரவஸ் மெத்தையில் அமர்ந்திருப்பதா எழுந்து நிற்பதா என்று தெரியாமல் தவித்தான். பின்னர் தன்னை அடக்கிக்கொண்டு அசையாது அமர்ந்திருந்தான். புரவியிலிருந்து மைந்தன் இறங்குவதும் அவள் மலைமொழியில் அவனுடன் உரக்கப் பேசுவதும் அவன் குறுமுழவின் கார்வைகொண்ட குரலில் அவளுக்கு மறுமொழி உரைப்பதும் கேட்டது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவள் மேலும் மேலும் உரக்க நகைப்பதும் கொந்தளிப்பும் கொப்பளிப்புமாக பேசுவதும்தான் புரிந்தது. உள்ளே வந்து அவன் என்ன கேட்கப்போகிறான் என்று அவன் எண்ணினான். உடனே அதை எண்ணுவதில் பொருளே இல்லை, எதுவானாலும் அத்தருணத்திற்கு முற்றாக தன்னை அளித்துக்கொள்வதே செய்யக்கூடுவது என்று தோன்றியது.

மைந்தன் தன் நெடிய உடலைக் குனித்து இரண்டாக மடிந்தவன்போல சிறிய வாயிலினூடாக உள்ளே வந்தான். பூரிசிரவஸ் அவனுடைய கால்களைத்தான் பார்த்தான். ஃபூர்ஜ மரத்தின் அடிக்கட்டைபோல் உறுதியாக மண்ணில் பதிந்தவை. பெருநரம்புகள் புடைத்து ஆற்றலின் வடிவென்றானவை. விழிதூக்கி வான்தொடுவதுபோல் நின்றிருந்த மைந்தனை பார்த்தான். இரண்டு பெரிய கைகளும் சற்றே தூக்கியவைபோல் நின்றன. எவ்வளவு பெரிய விரல்கள் என்று சிறுவனைப்போல அவன் உள்ளம் வியந்தது. தோளில் கிடந்த கன்னங்கரிய நேர்குழல். சிறிய விழிகள். கீறப்பட்டவை போன்ற உதடுகள். விரிந்த தாடை. சுண்ணக்கல்லின் நிறம். முகத்தில் மீசை அரும்பியிருக்கவில்லை. புகைபோல மென்மயிர் படிந்திருந்தது. அவன் தன் உள்ளம் அச்சத்தில் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். சினம்கொண்டு எழுந்து அவன் தன் நெஞ்சில் மிதித்தால் அக்கணமே குலைவெடித்து குருதிபீறிட அங்கே விழுந்து உயிர்துறக்கவேண்டியதுதான். எண்ணும் மறுசொல் எழவும் பொழுதிருக்காது.

அவன் முன்னால் வந்து குனிந்து பூரிசிரவஸின் கால்களைத்தொட்டு தலைமேல் சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். பூரிசிரவஸ் தன் நடுங்கும் கைகளை அவன் தோளில் வைத்தான். மனித உடலை தொட்டதுபோல் தோன்றவில்லை. எருதின் புள்ளிருக்கையை தொட்டது போலிருந்தது. மானுடத் தசைகளுக்கு இத்தனை இறுக்கம் இருக்க இயலுமா என்ன? இளைய பாண்டவர் பீமனையோ அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனையோ அங்க நாட்டரசர் கர்ணனையோ ஒரே வீச்சில் அடித்து மண்ணில் வீழ்த்திவிட இவனால் முடியும். ஒருவேளை இப்புவியில் இன்று வாழ்வதிலேயே மாபெரும் மல்லன். மலையிறங்கி வந்தால் அனைத்து அவைகளிலும் அரசர்கள் எழுந்து பணியும் பேருருவன். பூரிசிரவஸ் கண்கள் நிறைந்து கன்னத்தில் வழிந்த விழிநீருடன் நடுங்கும் உதடுகளைக் கடித்தபடி நோக்கிக்கொண்டிருந்தான்.

“வாழ்த்துங்கள், தந்தையே” என்று அவன் சொன்னான். பூரிசிரவஸ் அவன் தலையில் கைவைத்து “என் வாழ்த்துக்கள் எப்போதும் உனக்குண்டு, மைந்தா. நினைவிலேயே உன்னை ஒவ்வொரு நாளும் வாழ்த்தியிருக்கிறேன்” என்றான். “ஆம், நான் அதை அறிவேன். என் கனவுகளில் நீங்கள் வந்து விளையாடியதுண்டு. இதே வடிவையே நான் பார்த்திருக்கிறேன்” என்றான் யாமா. பூரிசிரவஸ் “எப்படி?” என்றான். “அன்னை கீழிருந்து வந்த சிலரை சுட்டிக்காட்டி இவர்போல் காது, இவர்போல் மூக்கு என்று சொல்வாள். இணைத்து நான் உருவாக்கிய அதே முகம் தாங்கள் கொண்டிருப்பது” என்றான். அவனிடம் நெகிழ்வோ துயரோ வெளிப்படவில்லை. நேரடியான உவகை மட்டுமே இருந்தது. அது அவன் முகத்தில், தோள்களில் எங்கும் வெளிப்பட்டது.

பூரிசிரவஸ் “அது நானேதான். நான் உன்னிடம் வந்துகொண்டே இருந்திருக்கிறேன்” என்றான். அவன் திரும்பி பிரேமையிடம் “தந்தை வந்திருக்கிறார் என்று இவ்வூருக்கு தெரியுமா?” என்று கேட்டான். அப்பால் நின்றிருந்த பிரேமை “தெரியாது. முதுபால்ஹிகர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இங்கு வந்திருக்கிறார். அவர்கள் எவரிடமும் சொல்லமாட்டார்கள்” என்றாள். “நான் சொல்கிறேன். தந்தை வரப்போகிறார் என்று சொல்லும்போது இங்குள்ளவர்கள் சிரிப்பதுண்டு. இப்போது சிரிக்கட்டும்” என்றபின் எதிர்பாராத கணத்தில் அவன் பூரிசிரவஸை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான். “என்ன செய்கிறாய்? என்ன செய்கிறாய்!” என்று கூவி பூரிசிரவஸ் அவன் தோளில் அறைந்தான். ஆனால் சிறு பாவையென அவனை வெளியே கொண்டுசென்று தலைக்குமேல் தூக்கிச் சுழற்றியபடி உரத்த குரலில் “எல்லோரும் கேளுங்கள்! தந்தை வந்திருக்கிறார்! என் தந்தை வந்திருக்கிறார்! கேளுங்கள் ஊராரே! நோக்குக குடிகளே!” என்று அவன் கூவினான். பூரிசிரவஸ் நகைத்தபடி “என்ன செய்கிறாய்? அறிவிலி… விடு. விடு என்னை” என்று அவன் கையிலிருந்து கைகால்களை உதைத்து கூச்சலிட்டான்.

tigமலையேறியதிலிருந்தே உடல் குளிருக்கு எதிராக இழுத்துக் கட்டப்பட்ட நாண்போல் நின்றிருந்ததை சிறிய குளியலறைக்குள் கொதிக்கும் வெந்நீரால் உடலை கழுவிக்கொள்ளத் தொடங்கியபோதுதான் உணர்ந்தான். முதலில் தசைகள் அதிர்ந்து உடல் மெய்ப்பு கொண்டது. பின்பு இறுகியிருந்த குருதி உருகியதுபோல் உடலெங்கும் வெம்மை பரவியது. சில கணங்களுக்குள் மென்மையான கள்மயக்குபோல் ஒரு உவகை நிலை அவன் உடலில் பரவியது. சிறிதாக நீரை அள்ளி உடலில் விட்டுக்கொண்டே இருந்தான். குளியலறைக்கு வெளியே நின்று யாமா “மேலும் நீர் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். “போதும்” என்று பூரிசிரவஸ் சொல்வதற்குள் அவனே கதவைத் திறந்து உள்ளே வந்து நீரை மரத்தொட்டியில் ஊற்றினான்.

பூரிசிரவஸ் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்ததனால் திடுக்கிட்டு பின்னால் திரும்பிக்கொண்டான். ஆனால் யாமா எத்தயக்கமும் இல்லாமல் நின்று “மறுபடியும் நீரை கொதிக்கவைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் கண்கள் எரியத் தொடங்கும்வரை குளிக்கலாம்” என்றான். பூரிசிரவஸ் “சரி” என்றான். அவன் இயல்பாக அவனுக்கு முன்னால் வந்து இன்னொரு கொப்பரையை எடுத்து “இதைக்கொண்டு நீரை அள்ளி ஊற்றுங்கள். ஒவ்வொரு குடுவை நீரும் உடல்முழுக்க படவேண்டும். உடலில் ஒரு பகுதி குளிர்ந்தும் இன்னொரு பகுதி வெம்மைகொண்டும் இருக்கக்கூடாது” என்றான். தன் ஆடையின்மையை அவன் பார்த்துவிட்டது அவனை விதிர்க்கச் செய்தது. ஆனால் யாமா அதை பொருட்டாக எண்ணவில்லை. “தசைகளை உருக்கி திரும்பவும் அமைப்பது மிக நன்று. நான் மாதமொருமுறை நீராடுவேன்” என்றான்.

பூரிசிரவஸ் சில கணங்களுக்குப்பின் அவனை நோக்கி நன்றாகவே திரும்பி “ஆம், இனிது” என்றான். யாமா “உங்களுக்கு உடல் தேய்த்துவிடவேண்டுமென்றால் நான் அதை திறம்பட செய்யமுடியும். இங்கு தேவதாரு மரப்பட்டையிலிருந்து எடுத்த நார்ச்சுருள்கள் உள்ளன. நானே என் கையால் உரித்து உலரவைத்தவை. குளித்துமுடித்தபின் உடல் நறுமணம் கொண்டிருக்கும்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். மைந்தன் வெளியே சென்று மரப்பட்டைச் சுருளைக் கொண்டுவந்து அவன் உடலை மென்மையாக உரசி தேய்த்துவிட்டான். அவன் கைகள் தன் உடலில் படும்போதெல்லாம் பூரிசிரவஸ் புரவி சிலிர்ப்பதுபோல் மெய்ப்பு கொண்டான். பின்னர் அவனே கொதிக்கும் நீரை அள்ளி பூரிசிரவஸின் உடலில்விட்டு நீராட்டினான்.

கண்கள் எரிந்து வாய்க்குள்ளும் மெல்லிய எரிச்சல் தொடங்கும் வரை பூரிசிரவஸ் நீராடிக்கொண்டிருந்தான். பின்னர் குளியலறையிலேயே தலையையும் உடலையும் நன்கு துவட்டி அங்கேயே ஆடை அணிந்து வெளியே வந்தான். கொல்லும் பசி எழுந்து அவன் உடலை பதற வைத்தது. “உணவு ஒருங்கிவிட்டது” என்று பிரேமை சொன்னாள். கம்பளி மெத்தைமேல் அவன் அமர சிறுமேடை ஒன்றை அவன் முன்னால் போட்டு அதில் மரக்கிண்ணத்தில் ஊன் சாறு கொண்டுவந்து வைத்தாள். கொதித்து குமிழியிட்டுக்கொண்டிருந்தது அது. மரக்கரண்டியால் அதை அள்ளி மெல்ல அவன் உண்டான். அன்றைய உணவு அது என்றுதான் அவன் எண்ணினான். உணவுக்கு முந்தைய தொடக்கம் மட்டும்தான் என்பது அவன் பாதி அருந்திக்கொண்டிருக்கும்போதே பெரிய மரத்தாலங்களில் சுடப்பட்ட ஊனுடனும் கிழங்குகளுடனும் ஆவிபறக்க வேகவைக்கப்பட்ட அப்பங்களுடனும் பிரேமையும் மைந்தனும் வரும்போதுதான் தெரிந்தது. “எவருக்கு இத்தனை உணவு?” என்று அவன் திகைப்புடன் கேட்டான். “தங்களுக்குத்தான், தந்தையே” என்றான் யாமா. “நான் இந்த ஊன்சாறையே உணவென அருந்துபவன்” என்றான் பூரிசிரவஸ். “இவ்வளவா? இதை உண்டால் உங்களால் இங்கு ஒருபாறையைக்கூட ஏறிக்கடக்க முடியாது” என்றான் யாமா.

யாமாவும் பிரேமையும் அவனுக்கு இருபுறங்களிலுமாக அமர்ந்து அள்ளி அள்ளி உணவை வைத்தனர். அன்று உண்டதுபோல் வாழ்நாளில் அவன் எப்போதும் உண்டதில்லையென்றாலும் “இவ்வளவு குறைவாக உண்டால் நீங்கள் விரைவிலேயே இறந்துவிடுவீர்கள்” என்றான் மைந்தன். “குறைவாக உண்பதே உயிர்வாழ்வதற்குத் தேவை என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் மிகுதியாக உண்கிறோம். நாங்கள் நெடுங்காலம் உயிர் வாழவில்லையா?” என்று யாமா கேட்டான். “இது வேறு உலகம்” என்று பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

உண்டு முடித்து மைந்தனின் கைபற்றி எழுந்தபோது அவன் கையை விட்டால் எங்காவது விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. விழுந்த இடத்தில் மண் குழிந்து பள்ளம் உருவாகுமென்று எண்ணியபோது புன்னகை வந்தது. துயில் கொள்ளவேண்டும் என்று அவன் சொன்னான். “ஆம், உணவுக்குப்பின் துயில்வது நல்லது. உடலுக்குள் வாழும் மலைத்தெய்வங்கள் நம் கைகளிலிருந்தும் கால்களிலிருந்தும் கிளம்பிச்சென்று அவ்வுணவை தாங்கள் உண்கின்றன” என்று யாமா சொன்னான்.

வெளியே குளிர்காற்று வீசத்தொடங்கியிருந்தது. சாளரங்கள் அனைத்திலும் சீழ்க்கை ஒலி கேட்டது. பூரிசிரவஸ் தரையிலிட்ட கம்பளி மெத்தையில் படுத்தான். அவனுக்குமேல் கம்பளிப் போர்வையை போர்த்தி அதற்குமேல் மென்மயிர் படர்ந்த தோல் போர்வையை போர்த்தி “துயில்க, தந்தையே!” என்றான் யாமா. அவன் அப்போதுதான் புரவியிலிருந்து எடுத்த தனது பொதியை கொண்டுவரவில்லை என்று நினைவுகூர்ந்தான். “எனது பரிசுப்பொதி மூத்த பால்ஹிகர் இல்லத்தில் உள்ளது. அதை எடுத்துவரச் சொல்லவேண்டும். அதிலிருப்பவை உனக்கும் உன் அன்னையருக்கும் உரியவை” என்று அவன் சொன்னான். “நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றான் மைந்தன். மேலும் பேச முடியாத அளவுக்கு அவன் நா தளர்ந்தது. தாடை வலுவிழந்து கீழே விழுந்து தன் மூச்சொலியை தானே கேட்டு, மயங்கும் எண்ணங்களில் எங்கோ சென்றுகொண்டிருந்தான்.

அவன் மைந்தனையே நோக்கிக்கொண்டிருந்தான். யாமா அவனருகே அமர்ந்தான். அவன் கைநீட்டி மைந்தனின் கால்களை தொட்டான். “என்றாவது என்மேல் சினம் கொண்டிருக்கிறாயா?” என்றான். “சினமா? எதற்கு?” என்று யாமா கேட்டான். அவனுடைய தெளிந்த விழிகளை பூரிசிரவஸ் நோக்கிக்கொண்டிருந்தான். ஐந்து அகவை நிறைந்த சிறுவனுக்குரியவை அவை என்று எண்ணினான். அவன் கண்கள் மெல்ல சரிந்தன. அஸ்தினபுரியின் ஓசைகள் வழக்கம்போல அவனை சூழ்ந்துகொண்டன. அவையில் சகுனி பேசிக்கொண்டிருந்தார். அவன் ஒரு காவல்மாடத்தின் உச்சியில் நின்று படைகள் இடம்மாறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். முரசுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஆற்றங்கரையில் ஒருவன் புரவியை நிறுத்திவிட்டு அவனை நோக்கி வந்தான். “இந்த ஆற்றை நாம் கடக்கமுடியுமா?” என்றான். “ஆம், நாமிருவரும் சேர்ந்து கடப்போம்” என்றான் பூரிசிரவஸ்.

திடுக்கிட்டு அவன் விழித்துக்கொண்டான். கைகால்கள் இழுத்துக்கொள்வதுபோல நடுங்கின. எழுந்து திரும்பிய யாமா திகைத்து “என்ன? ஏன் நடுங்குறீர்கள், தந்தையே?” என்றான். “ஒரு கனவு” என்றான் பூரிசிரவஸ். “என்ன கனவு?” என்று அவன் கேட்டான். “வழக்கமானதுதான்… இவ்வாறு பலமுறை நான் இரவுகளில் விழித்துக்கொள்வேன்” என்றான் பூரிசிரவஸ். “என்ன கனவு?” என்று அவன் மீண்டும் கேட்டான். “என் கைகள் வெட்டப்படுவதுபோல. நெடுநாட்களாகவே அக்கனவு என்னை துரத்துகிறது” என்றான் பூரிசிரவஸ். “நீ செல். நான் துயில்கொள்கிறேன்.” யாமா அமர்ந்து அவன் தலையை எடுத்து தன் தொடைமேல் வைத்துக்கொண்டான். “துயில்க, தந்தையே… இனி அக்கனவு வராது” என்றான். பெருமரம் ஒன்றின் வேர்ப்புடைப்பில் தலைவைத்தது போலிருந்தது.

மெய்யாகவே தன்னுள் எப்போதும் இருந்துகொண்டிருந்த பதைப்பு ஒன்று அகல்வதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அது வெறும் தோன்றலா? ஆனால் அத்தருணத்தில் மிகவும் எளிதாக மாறிவிட்டிருந்தது உள்ளம். பனியில் நடந்து இளஞ்சூடான இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதுபோல. எங்கோ பனிக்காற்றின் ஓசை கேட்டது. கூரை படபடத்து அமைந்தது. அவன் இமைகள் சரிந்தன. சிறுமைந்தனாக மாறிவிட்டிருந்தான். மிகப் பெரிய வெண்ணிறமான மரத்தின் அடியில் சோமதத்தரின் மடிமேல் அவன் படுத்திருந்தான். வாயில் பீதர்நாட்டு இனிப்பொன்றை மென்றுகொண்டிருந்தான். காட்டின் ஓசைகள் சூழ்ந்திருந்தன. அவன் துயில்கொண்டதும் கண்கள் மேலும் காட்சிகொண்டன. அந்த வெண்மரம் படமெடுத்து நின்ற மாபெரும் நாகம் என தெரிந்தது. அசையாது குடைபிடித்து அது நின்றிருந்தது.

முந்தைய கட்டுரைநற்றிணை இலக்கியவட்டம் -கடலூர்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்