மாவோயிசம் கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!

வணக்கம்!

ஸ்டாலினிசத்தின் ஆதரவு தலைவர்களில் முக்கியமானவரான கிம் இல் சாங்(Kim ill sung) வட கொரியாவில் நடத்தி வரும் கொடுங்கோல் ஆட்சி முறை, அங்கு இருக்கும் வறுமை ஆகியவை கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இத்தனைக்குக் வட கொரியா இயற்கை வளங்கள், நீர் வளம் மற்றும் நில வளம் மிகுந்த நாடு. அதுவும் சீனாவின் கைப்பிள்ளையே. மாவோ சீனாவில் துரத்தி அடிக்கப் பட்டவர் இங்கு இருப்பவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

தர்மபுரி மாவட்டத்தில் கல்வி, நீர்ப்பாசன வசதிகள் இந்த குழுக்களை நீர்த்து போகச் செய்து விட்டன. சில குழுக்கள், அமெரிக்காவை எதிர்த்து சில சமயம் போராட்டம் நடத்துவதை காணலாம். இப்போது, நவீன, இயற்கை வேளான்மையில் இந்த இரு மாவட்டங்கள் முன் மாதிரிக விளங்குகின்றன. காமராஜர் பள்ளிகளை திறந்தது மிக முக்கிய அங்கம். வேளாண்மை உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் சென்னைக்கு சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. ஒரு அறிவு ஜீவி இந்த நான்கு வழி சாலைகளால் என்ன பயன்? சீக்கிரம் சென்னை சென்று பிச்சை எடுக்கலாம் என்று எழுதி இருந்தார். அவர் நிச்சயம் மாவோயிஸ்டுகளை ஆதரிப்பவராக இருப்பார்.

மானுட எழுச்சி, இந்த இயக்கங்களால் எழுப்ப இயலாது. அதிகாரத்தை மாற்றம் செய்வதுடன் நிறுத்தி விடுகிறார்கள்.
நன்றி!

தண்டபாணி
கிருஷ்ணகிரி

அன்புள்ள தண்டபாணி

நலம்தானே? இந்திய வேளாண்மையில் இனிமேல் மரபான வழிகள் செல்லுபடியாகாது. கூட்டான பெருமுதலீட்டுடன் கிட்டத்தட்ட தொழிற்சாலை போல நிகழும் வேளாண்மை தேவை. அந்த தளத்தில் நீங்கள் செய்து வரும் முயற்சிகளைப்பற்றி நாம் நேரில் பேசியதை நினைவுகூர்கிறேன்.

இன்று நமக்கு தேவையாக இருப்பவை இவ்வகை புரட்சிகள் மட்டுமே

ஜெ

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

Dear J,

This is an important analysis by ‘Economic and Political Weekly’ about Maoists of India :

Arms Over the People: What Have the Maoists Achieved in Dandakaranya?
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUODlhMzZlMWItMDgzYS00MzJhLWFkOTItOTk2M2RhMDU3YjE2&hl=en


Regards / அன்புடன்

K.R.Athiyaman / K.R.அதியமான்
Chennai – 96

http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
http://athiyaman.blogspot.com (english)

===================================

அன்புள்ள ஜெ

உங்களை போன்ற மக்கள் எந்த ஊழலை சாடாமல் யார் சாடுவது. நீங்கள் இதெற்கெல்லாம் சப்பை கட்டு கட்டுவது சரியில்லை.. ஒன்று உங்களுடைய பயம்.. அல்லது எதை சாடினால் அதனால் நீங்கள் இழக்கும் சினிமா வாய்ப்புகள்… எனக்கு புரிய வில்லை….கமல், ரஜினி, உட்பட, சினிமா உலகத்தை தங்கள் பக்கம் வைத்திருக்கும் கருணா குடும்பத்தை எதிர்பதிற்கு பயம்… வேறு ஒன்றும் இல்லை…

சும்மா இந்த வரலாற்று கதையெல்லாம் வேண்டாம்..

Please do not mistake my words.. I am a great fan of your writings…
அன்புடன்,
சண்முகம்

அன்புள்ள சண்முகம்

உங்கள் புரிதல் சிலிர்க்கச் செய்கிறது.

நன்றி

++++++++++++++++++++++++++++++++++

அன்பு ஜெ சார்,
”மாவோயிச வன்முறை” – மிகச் சிறப்பான கட்டுரை.
வரலாற்றின் கூர்ந்த தெளிவும், உண்மையான சமூக அக்கறையும், அனுபவங்களின் தைரியமும் கலந்த அக்கட்டுரை என் சிந்தனையை நேர்ப்படுத்தியது; மிக்க ந்ன்றி.

வெங்கடேஷ் ஸ்ரீனிவாசகம்

அன்புள்ள வெங்கடேஷ்

நான் உருவாக்கியது ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை மட்டுமே. அந்த கோணத்தில் இணையத்தில் தேடினாலே தரவுகள் மலையாக உள்ளன. பலசமயம் நாம் மிகையுனர்ச்சியுடன் எழுதப்படும் ஒற்றை வரிகளை அறியாத ஒரு தருணத்தில் நம் கருத்துக்களாக எடுத்துக்கொள்கிறோம். ஒட்டுமொத்த நோக்கு அதை விலக்கும் இல்லையா?

ஜெ

+++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++
அன்புள்ள ஜெ

தங்களது மாவோயிச வன்முறை படித்தேன்.மிகச் சிறந்த சிந்தனை.

முதலாளித்துவ ஜனநாயகம் தார்மீக அடிப்படைகளில் தவறாக இருப்பினும் யதார்த்தத்தில் அதை விட்டால் வேறு வழியில்லை என்ற உண்மையைப் பூசி மெழுகாமல் கூறியுள்ளீர்கள்.

தமிழின் மிகப்பெரிய சிந்தனையாளர் ஒருவருடைய எழுத்துக்கள் எந்த இதழிலும் வெளி வராமல் இருப்பது வருந்தத்தக்கது.

மிக்க அன்புடன்

ராமானுஜம்

அன்புள்ள ராமானுஜம்,

நன்றி

இதழ்களில் எழுதுவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் இந்த சுதந்திரம், குழப்பங்களைக்கூட எழுதும் சுதந்திரம், அங்கே இருப்பதில்லை. இந்த சில வாசகர்களாவது சீராக இருப்பது நல்ல விஷயம்

ஜெ

===========================================================================================

அன்புள்ள ஜெ.,

நீங்கள் மாவோயிச வன்முறை குறித்த கட்டுரையை முழுவதும் முடிக்குமுன் இதை எழுதுவதற்கு மன்னிக்கவும். இருந்தாலும் சைனா இன்னும் கொஞ்சம் குறித்து விளக்காமல் உங்கள் கட்டுரையை முற்றுப்பெறாது என்றே நம்புகிறேன்.

அங்கே அடக்குமுறை குறித்து பல பிரச்னைகள் எழுந்தாலும், மொத்த தேசத்தின் முன்னேற்றத்தை நாம் மறுக்க முடியாதல்லவா? சர்வதிகாரம் நன்மையும் செய்யக்கூடும் என்பதற்கு விதிவிலக்காக இதை எடுத்துக் கொள்ளலாமா? என்னைப் பொறுத்தவரை, சைனாவின் சர்வாதிகார ஆட்சி அந்த நாட்டுக்கு ஒரு கண்ணிவெடி போல. இருந்தாலும் அதுபோன்ற ஒரு ஆட்சி சிலபல விஷயங்களில் நம் ஊழல் ஜனநாயகத்தை விட உயர்ந்ததுதான் இல்லையா?

காந்தி கண்ட கனவைக் கிட்டத்தட்ட நனவாக்கியிருக்கும் ஒரு சீன கிராமம் இங்கே:
http://www.rediff.com/business/slide-show/slide-show-1-this-is-huaxi-chinas-richest-village/20101206.htm

இந்த கிராமம் சைனாவில் ஒரு விதி விலக்காக இருக்கலாம். அது போல சைனாவும் உலகத்திற்கு ஒரு விதி விலக்கோ என்று படுகிறது.

நன்றி,
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

நீங்கள் கொஞ்சம் சின்னப்பையன் என நினைக்கிறேன்.

உலகில் உள்ள அத்தனை சர்வாதிகார அரசுகளும் செய்யும் ஒரு விஷயம் அவர்களைப்பற்றிய சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடுவது. அந்த அரசின் சாதனைகள் , அவர்கள் உருவாக்கிய பொன்னுலகம் குறித்த மாயையை திட்டமிட்டு கட்டமைப்பது. அந்த நாட்டு மக்களுக்கேகூட உண்மைகள் தெரியாமல் பார்த்துக்கொள்வது.

ஏறத்தாழ 75 வருடம் சோவியத் ருஷ்யா இதேபோல பல்லாயிரம் கதைகளை உருவாக்கியது. இவற்றை எழுத இலக்கியவாதிகளும் இதழாளர்களும் விருந்தினர்களாகச் சென்று வந்தார்கள். தமிழில் மட்டும் எப்படியும் 500 கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும். நூறு நூல்களாவது வந்திருக்கும். அத்தனையும் பொய் என அவர்களின் இதழாகிய தாமரையில் அவர்களின் மூத்த கோட்பாட்டாளாரான ரகுநாதனே எழுதும் காலமும் வந்தது!

நாட்டு மக்களில் பாதியை கொன்றழித்த மார்க்ஸிய சர்வாதிகார் போல்பாட் கடைசியில் கவிழும் காலம் வரை அங்கே பொன்னுலகம் மிளிர்வதாக ஊடகங்களில் சொல்லிக்கொண்டிருந்தார். நானே இடதுசாரி ஊடகங்களில் எத்தனை கட்டுரைகள் வாசித்திருப்பேன்!

காசுக்கு எழுத எப்போதும் ஆட்களுண்டு. மாயையில் சிக்கவும் அப்பாவிகள் உண்டு

சீனா முதலில் அவர்களைப்பற்றி எழுத சுதந்திர ஊடகத்தை உருவாக்கட்டும். ஊடகங்களை அனுமதிக்கட்டும்.டியானன் மைன் சதுக்கம் போல உலகறிந்த நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தமாக மறைக்கும் செய்திச்சமையலை நிறுத்தட்டும்

அதன்பின் இந்த ஃபிலிம் காட்டலை அறிவுடையோர் நம்புவார்கள்.

ஜெ

மாவோயிச வன்முறை 1 , 2 , 3 4

முந்தைய கட்டுரைநட்பு-ஒரு விளக்கம்
அடுத்த கட்டுரைஅறிவிப்பு கடிதங்கள்