ஒன்று
மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது மும்மாத இதழின் பொறுப்பில் , குரு நித்யா ஆய்வரங்கம் சார்பில் , ஏற்பாடு செய்தோம் .கூட்டம் சொல் புதிதின் கூட்டங்கள் வழக்கமாக நடப்பதுபோல மிக நட்பார்ந்த விதத்தில் , தீவிரமான விவாதங்களுடன் நடந்தது .
தடைகள், பிரச்சினைகள்
உண்மையில் சென்ற நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது இது . ஊட்டியின் தட்பவெப்பநிலை மிக மோசமாக இருந்ததால் முதலில் ஒத்திப்போடப்பட்டது . பின்பு ஒரு மாதக்காலம் ஊட்டி – கோவை பாதை பழுதடைந்ததனால் தடை ஏற்பட்டது . பின்பு ‘சொல் புதிதை ‘ புதிய சூழலில் அச்சிடும் நிலை ஏற்பட்டது. அதில் வெளியிடத் திட்டமிட்டிருந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குறித்த ஆய்வுகளுக்கான பயணங்கள் ,அதன் உபரி பக்கங்கள் ஆகியவை காரணமாக நிதிநிலை ஒரு பிரச்சினையாக ஆயிற்று . ஆய்வரங்கை நடத்த வேண்டுமென மிக ஆர்வமாக இருந்த தளையசிங்கத்தின் இளம் வாசகரான ஆர் .பிரபு [மயிலாடுதுறை] தன் சேமிப்பில் இருந்து ஆகும் செலவில் பாதியை அளித்தார் . ஊட்டி நாராயண குருகுலத்திலிருந்து டாக்டர் சுவாமி தம்பான் கூப்பிட்டு கூட்டம் நடத்தலாமே என்ற்று ஊக்குவித்தார். ஊட்டி நண்பர் நிர்மால்யா [கேரள தலித் பே ‘ராளி அய்யன்காளியின் வரலாற்றை எழுதியவர் , மொழிபெயர்ப்பாளர் ] ஆர்வம் காட்டியதுடன் செலவில் ஒரு பகுதியையும் ஏற்பதாகச் சொன்னார் . மீதி செலவை அருண்மொழி நங்கை அவளது சேமிப்பில் இருந்து அளித்தாள் .
கூட்டம் உறுதிசெய்யப்பட்ட பின்பு மேலும் பிரச்சினைகள் . நித்யா ஆய்வரங்குகளை முன்பு ஹொகேனெகல்லில் ஏற்பாடு செய்தவரான நண்பர் தங்கமணி [மொரப்பூர் ] அவர்களின் திருமணம் மே ஆறாம்தேதி . இன்னொரு நண்பரான முகையூர் அசதா[எழுத்தாளர் ]வின் திருமணமும் ஆறாம்தேதி . ஆய்வரங்கின் முக்கிய உறுப்பினர்களான நண்பர் பாவண்ணன் , பிரேம் ஆகியோர் வரமுடியாத நிலை . முக்கியமாக , ஆய்வரங்கின் புரவலரான பிரபு பொறியியல் தேர்வுகள் நீட்டிக்கப்பட்டமையால் வரமுடியாமல் ஆயிற்று . தேதியை மேலும் நீட்டிக்க முடியாத நிலையில் கூட்டத்தை நடத்துவது என முடிவெடுத்தாலும் சற்று சோர்வு இருந்தது .
முக்கியமான தடை தளைய சிங்கத்தின் நூல்கள் கிடைக்கவில்லை என்பதே . ஒரே பிரதியில் இருந்து ஒளிநகல் செய்து அனைவருக்கும் அளிக்க நேர்ந்தது . அதற்கான செலவே அரங்கின் முக்கியச் செலவாக இருந்தது . வேதசகாயகுமார் , ஜெயமோகன் , சரவணன் ஆகியோருடைய கட்டுரைகளை ஒளிநகல் செய்து அனைவருக்கும் முன்கூட்டியே அனுப்பினோம். தளைய சிங்கத்தின் கருத்துக்கள் வாழ்க்கைக்குறிப்பு ஆகியவற்றை 40 கைப்பக்க அளவில் மலையாளத்தில் மொழியாக்கம் செய்து குருகுலப் பிரம்மசாரிகளுக்கும் சுவாமி வினய சைதன்யாவிற்கும் அனுப்பினேன். கூட்டங்களில் கட்டுரையை படிப்பது சோர்வுதருகிறது. ஆகவே அவற்றை சுருக்கமாக பேச வைத்தோம் . கூட்டத்துக்கு இடம் குருகுலத்தால் இலவசமாக அளிக்கப்பட்டது . சமையல் பொருட்கள் வாங்கி அளித்ததும் ,கம்பிளிபோர்வைகள் வாடகைக்கு எடுத்ததும் மட்டுமே எங்கள் செலவாக இருந்தது . நிர்மால்யா கடுமையாக உழைத்து ஏற்பாடுகள் செய்தார் . குருகுலத்தின் பிரம்மசாரிகள் சமையல் செய்து உதவினார்கள்
ஏன் தளையசிங்கம் ?
நித்யா கருத்தரங்கம் தனிப்பட்ட எழுத்தாளர்களைப்பற்றி நடத்தும் மூன்றாவது அரங்கு இது. பிரபஞ்சன் , நாஞ்சில் நாடன் ஆகியோரைப்பற்றி ஆய்வரங்குகள் நடத்தப்பட்டுள்ளன . தளையசிங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட தெளிவான காரணங்கள் உண்டு . சொல் புதிதில் ஆரம்பம் முதலே தத்துவ அறிவியல் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம் .தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் இவ்விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டதேயில்லை . கலை இலக்கியம் ஆகியவற்றுக்கும் அறிவியல் தத்துவம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி மீண்டும் மீண்டும் நித்யா பேசியிருக்கிறார் . நவீன அறிவியல் இன்று தத்துவப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்வதாக ஆகியுள்ள நிலையில் இத்தொடர்பை மேலும் அழுத்திக் காட்டவேண்டியுள்ளது . அறிவியல் தத்துவம் இலக்கியம் மெய்யியல் ஆகிய தளங்களை தொட்டுப்பேசும் ஒரே தமிழ் முன்னோடிச் சிந்தனையாளர் தளைய சிங்கம் மட்டுமே . பிறரைப்போல அவர் மேற்கத்திய சிந்தனைகளை தமிழுக்கு இறக்குமதி செய்ய முனையவில்லை . அச்சிந்தனையாளர்கள் அங்கு எதிர்கொண்ட அதே பிரச்சினைகளை தமிழ் சூழலில் நின்று எதிர்கொள்ள முயல்கிறார் . அதில் அவர் அடைந்த வெற்றியும் தோல்வியும் நமக்கு முக்கியமானவை .
தமிழில் தளையசிங்கம் உரிய முறையில் கவனிக்கப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை .இதற்குக் காரணம் தளைய சிங்கம் அடிப்படைகளை பற்றி பேசியவர் என்பதே. தமிழில் இலக்கிய விமரிசனம் பலவீனமாக உள்ளது , விமரிசன மொழி இல்லை போன்ற குறைகள் பொதுவாகச் சுட்டப்படுபவை . இலக்கியப்படைப்புகளைப்பற்றிய பேச்சுகளில் பொத்தாம் பொதுவான கூற்றுக்கள் வெறும் அரசியல் நிலைபாடுகள் , அக்கப்போர்கள் மட்டுமே இங்கு காணக் கிடைக்கின்றன .இதற்குக் காரணம் இங்கு அடிப்படைகளைப்பற்றிய விவாதம் நடப்பதில்லை, பெரும்பாலோர் அடிப்படைகளை பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முயல்வதேயில்லை என்பதே. பலகாலமாக இங்கு தரமான இலக்கியம் குறித்து பேசப்படுகிறது . ஆனால் தரம் என்றால் என்ன என்ற வினாவை எவரும் எழுப்பிக் கொண்டதில்லை. இலக்கிய அனுபவம் என்பது என்ன , அழகு என்பது எந்ன என்பது போன்ற கேள்விகள் கூட எழுந்தது இல்லை. இவற்றை புறவயமாக சொல்ல முயலும்போது தத்துவத்தின் எல்லைக்குள் இலக்கியம் நகர்ந்துவிடுகிறது .
தத்துவமே இலக்கிய விமரிசனத்தை தருக்கபூர்வமாக ஆக்குகிறது . இலக்கியவிமரிசனத்தின் மொழி தத்துவத்தின் தனிமொழியின் நகலேயாகும்.சமகால சிந்தனைகளில் இருந்தே இலக்கியவிமரிசனம் தன் விமரிசன /ஆய்வு உபகரணங்களைப் பெற முடியும். தமிழில் அடிப்படைகள் பற்றிய தேடல் இல்லாமையால் தத்துவ நோக்கும் உருவாகவில்லை , விமரிசன மொழியும் உருவாகவில்லை . இப்போது நாம் சுயமான ஒரு தேடலை அடிப்படைகளை முன்வைத்து செய்ய முயன்றால் நம் முன் உள்ள ஒரே மூன்னுதாரணம் தளையசிங்கமே . அடிப்படைகளை வகுத்துக் கொள்ள அவர் பல கோணங்களில் முயல்கிறார்.அதை நாம் ஏற்கலாம் ,மறுக்கலாம் ,மேலும் முன்னேறலாம் .ஆனால் அவர் மிக முக்கியமான ஒரு துவக்கப்புள்ளி.
சமீபகாலம் வரை நவீனத்துவம் உருவாக்கிய இலக்கிய அணுகுமுறையே இங்கு வலிமையாக இருந்தது . இலக்கியவாதியின் இலக்கு அழகியல் முழுமை கொண்ட படைப்பை உருவாக்குவது மட்டுமே ,இலக்கியப்படைப்புக்கு சமூகப் பங்களிப்பு என்று ஏதுமில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வலுவாக இருந்தன. இன்று சமூகம் கருத்துக்களாலேயே கட்டப்பட்டுள்ளது என்றும் , அக்கருத்துக்கள் ஆழ்மன அளவில் படிமங்களாக தொகுக்கப்பட்டுள்ளன என்றும் கருதப்படுகிறது .ஆழ்மனதுடன் உரையாடும் இலக்கியம் சமூகக் கருத்தியலிலும் ,அதன் மூலம் சமூக அமைப்பிலும் ஆழமான தாக்கத்தை நிகழ்த்துகிறது எனப்படுகிறது . இன்றைய எழுத்து இவ்வகையில் சமூகத்தின் ஆழ்மனக்கட்டமைப்பு நோக்கி பேச முற்படுகிறது . அழகுப்பொருளாக இலக்கியம் இன்று கருதப்படுவது இல்லை .இந்தக் கோணத்தில் இலக்கியவாதியின் சமூகப் பொறுப்பு என்ன , அதை அவன் எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதெல்லாம் முக்கியமான பிரச்சினையாக ஆகிறது .
ஆகவே தன் அழகியலையும் அறத்தையும் இலக்கியவாதி எந்த அடிப்படையில் அமைத்துக் கொள்வது என்ற வினா இன்று மேலும் முக்கியப்படுகிறது. அவன் வெறும் அழகு உற்பத்தியாளனல்ல. அவன் பொறுப்பற்ற அராஜகவாதியாக இருக்கமுடியாது .தன் செயல்கள் மீதும் விளைவுகள் மீதும் அவனுக்குத் தெளிவான புரிதல் இருக்கவேண்டும் . அதாவது இலக்கியவாதியின் மெய்யியல் என்ன என்பது இன்று ஒரு முக்கியமான கேள்வி . அக்கேள்வியைத் துவங்க மிகப் பொருத்தமான முன்னோடி இலக்கியவாதி தளையசிங்கம் தான் .
பொதுவாக ஈழ எழுத்தாளர்களும் விமரிசகர்களும் தமிழ்நாட்டு இலக்கியத்தை குறித்து காட்டிய ஆர்வத்தையும் முன்வைத்த விமரிசன எதிர்கொள்ளலையும் தமிழ் எழுத்தாளர்களும் விமரிசகர்களும் முன்வைத்தது இல்லை . இது குறித்து நானும் எம் வேதசகாய குமாரும் பலமுறை விவாதித்தது உண்டு. அதன் விளைவே வேதசகாய குமார் ‘காலம் ‘ இதழில் எழுதிய ஈழச் சிறுகதைகள் குறித்த கட்டுரை . ஈழச்சிறுகதைகளை அங்குள்ள பார்வைக்கு நேர் மாறான அழகியல் சார்ந்த அணுகுமுறையுடன் மதிப்பிட்டு ஒரு விமரிசனச் சட்டகத்தினை உருவாக்கும் அக்கட்டுரை முக்கியமான முன்னோடி முயற்சி .அதில் ஈழ இலக்கியத்தின் முதன்மையான முன்னோடியாக தளையசிங்கத்தையே அவர் முன்வைக்கிறார் .அவ்வகையிலும் அவரைப்பற்றி பேசவேண்டிய அவசியமுள்ளது என்று பட்டது . ஆகவேதான் இவ்விவாதத்தை திட்டமிட்டோம் .
இரண்டு
முதல்நாள் அமர்வு . 4/5/2002 காலை
ஊட்டியில் இது உச்ச சீசன் .பேருந்துகள் நெரிசலால் தாமதம் .ஆகவே பலர் வந்துசேர்வதற்கு பிந்திவிட்டது . நானும் அருண்மொழியும் வேதசகாயகுமாரும் சென்ற பேருந்து சரியான ஓட்டை .கிளம்பும்போதே நல்ல மழை . உள்ளே சற்று குறைவாக மழை . முன் கண்ணாடி துடைப்பான் வேலை செய்யவில்லை . ஆகவே ஊட்டியில் இரண்டுமணி நேரம் தாமதமாக காலை எட்டுமணிக்கு சென்றிறங்கினோம் . மழைமூட்டமாகவும் குளிராகவும் இருந்தது. எங்கும் சுற்றுலாக்கூட்டம் . குருகுலம் அமைதியாக தனித்து இருந்தது . ஏற்கனவே வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன்,நாஞ்சில் நாடன் , கீதாஞ்சலி பிரியதரிசினி , சூத்ரதாரி, க.மோகன ரங்கன் , அன்பு வசந்தகுமார் , [தாமரை ]ஆறுமுகம் , ஆர் பி ராஜநாயகம் ,ஆகியோர் வந்து சமையலறையில் டா குடித்துக் கொண்டிருந்தனர் . சரவணன் , ப சிவகுமார் ஆகியோர் சற்றுப் பிந்தி வந்தனர் . மதிய உணவுக்க்கு பின்பு முதல் அமர்வை வைத்துக் கொள்ளலாம் , அதுவரை வெறுமே பேசி அறிமுகம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தோம் . சிலர் ஒருவருக்கொருவர் முதல்முறையாகச் சந்திப்பவர்கள் .உற்சாகமான உரையாடல்களாக இருந்தது . இருண்ட வானம் மேலும் இருட்டி மழை கொட்டியது .நல்ல குளிரில் நனைந்து நடுங்கியபடி முத்துராமன் வந்து சேர்ந்தார்.தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் கடும் கோடைகாலம் .ஆகவே பலருக்கும் குளிர் பிடித்திருந்து .
முதலில் தளையசிங்கத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதன் தேவை குறித்து நான் விளக்கினேன் . ஈழ எழுத்துக்களைப்பற்றி இங்கு பேசும்போது உள்ள சிக்கல்களைப்பற்றியும் சொன்னேன். ஈழ இலக்கியச்சூழலில் தமிழகம் குறித்த அச்சமும் அவநம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் தங்கள் எழுத்துக்களுக்கு புறக்கணிப்பு இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.தமிழக எழுத்துக்களே கூட தமிழகத்தில் புறக்கணிப்பைத்தான் பெறுகின்றன என்பதை அவர்கள் கருத்தில் கொள்வது இல்லை . அதேபோல இங்கிருந்து கடுமையான விமரிசனங்கள் வந்தால் அதை ‘பெருநில மனோபாவம் ‘ என சொல்ல ஈழ எழுத்தாளர்கள் தயங்குவது இல்லை. இங்கு எல்லா தமிழ் எழுத்தாளர்களைப்பற்றியும் கடுமையான விமரிசனக்களே உள்ளன என்ற உண்மையையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை . இந்நிலையில் இந்திய இலக்கியவாதிகளுக்கு சிலசிக்கல்கள் ஏற்படுகின்றன . அவர்களில் புகழ்பெற்றவர்கள் சிலர் ஈழ இலக்கியம் இந்தியாவுக்கே முன்னோடி ,அடுத்தநூற்றாண்டின் விடிவெள்ளி என்றெல்லாம் சொல்லிவிடுகின்றனர் . நம்பாவிட்டாலும் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்நிலையில் தீவிரமான விமரிசனத்தை முன்வைப்பது மேலும் சிக்கலாகிறது .
அத்துடன் ஈழ இலக்கியத்தின் இயல்பு வேறு இந்திய தமிழிலக்கியத்தின் இயல்பு வேறு . அவர்கள் வாழ்க்கையின் நேரடியான அனுபவங்களுக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறார்கள் . ஆகவே தீவிரம் அங்குள்ள எழுத்துக்கு முதல் இயல்பாக உள்ளது . இலக்கியத்தை ஒரு நேரடியான சமூக அரசியல் செயல்பாடாகக் கொள்பவர்களும் அங்கு அதிகம். நமது படைப்பாளிகள் பெரும்பாலோர் நேரடியான செயல்பாடுகளில் அவநம்பிக்கை உடையவர்கள் . நமது இலக்கியப்படைப்புகளோ சூட்சுமத்தை முதன்மையாகக் கொண்டு இயங்குபவை .அவர்களுடைய படைப்பில் நுட்பங்களை எதிர்பார்த்து நாம் ஏமாற்றம் கொள்வது போலவே நமது படைப்பில் நேரடியான வேகத்தை எதிர்பார்த்து அவர்களும் ஏமாற்றம் அடைகிறார்கள் .இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நெருங்கிவரவேண்டியுள்ளது . அதற்கு ஒருவரை ஒருவர் மனம் திறந்து விமரிசிக்கவும் வேண்டியது அவசியம் . இன்றைய சூழலில் நாம் செய்ய வேண்டியது அவர்கள் படைப்புகளைப்பற்றி நாம் என்ன எண்ணுகிறோம் என்பதை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்வதேயாகும் .அதனால் சிலர் புண்படகூடும்தான் .ஆனால் இலக்கியம் நட்புறவை வளர்க்கும் ராஜதந்திரக் கலை அல்ல . என்னைப் பொறுத்தவரை என் கருத்தை கடுமையாகவே முன்வைத்திருக்கிறேன் என்றேன்
பின்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப தளையசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை ,படைப்புகள் உருவான சூழல் குறித்து ஓர் எளிய அறிமுகம் அளித்தேன். ஆசியராக வாழ்க்கையைத் தொடங்கிய தளையசிங்கம் தன் குருவாகிய நந்தகோபாலகிரியை கண்டதன் பிறகு சமூகப் போராட்டத்தையும் ஆன்மீகத் தேட்டத்தையும் இணைத்துக் கொண்டார். புங்குடு தீவு கண்ணகியம்மன் கோயிலில் நன்னீர் கிணறுகளில் தலித் மக்களுக்கு நீர் பிடிக்கும் உரிமைக்காக முன் நின்று போராடினார் . அதன் பொருட்டே அவரது மரணமும் நிகழ்ந்தது . அதன் பின்னணி குறித்து தேவகாந்தன் சொன்னார் . பொதுவாக அது அனைவருக்குமே முக்கியமான ஒரு விஷயமாக தோன்றியது . தன் நம்பிக்கைகளின் படி வாழ்வதென்பது எழுத்தாளனுக்கு எப்போதுமே பெரிய சவால் தான் என்றார் நாஞ்சில்நாடன் .அதுவும் இலட்சிய வாதிகள் அப்படி வாழ முயல்வது பெரிய சிக்கல்களுக்கு இட்டுசெல்லும் . அவ்வகையில் தளையசிங்கத்தின் தியாக வாழ்க்கை அவரது எழுத்துக்களை வெறும் கனவுகள் என உதாசீனப்படுத்த முடியாத நிலையை உருவாக்குகிறது என்றார் .
இலக்கியத்தால் சமூக மாற்றம் சாத்தியமில்லை , அழகியல் ரீதியான ஒரு கச்சிதமான முழுமையான வடிவத்தினை அடைவதே இலக்கியத்தின் சவால் என்று நவீனத்துவம் நம்பியது , அந்நம்பிக்கை இல்லாதவர் தளையசிங்கம் என்றார் மோகன ரங்கன் . அந்நம்பிக்கையே தமிழக நவீனத்துவபடைப்பாளிகள்பலரிடம் இயங்கியது . அந்நம்பிக்கையுடன் இயங்கிஉஅ போதிலும்கூட அவர்களில் எவருமே வெறும் வடிவ விளையாட்டையோ மொழியாட்டத்தையோ ஆடியவர்களல்ல .அவர்களை மீறி அவர்கள் கலையில் சமூகப் பொறுப்பும் அறச்சீற்றமும் வெளிப்படவே செய்தது அது சிறந்த இலக்கியப்படைப்புகள்பலவற்றை உருவாக்கியது .தளையசிங்கம் முதலில் நவீனத்துவத்துக்கு முந்தைய காலகட்டத்தை சார்ந்தவராக இருந்தார் . கதைகளில் தன் தரப்பை முன்வைத்து பேச முயன்றார் . அக்கருத்தின் எல்ல்லையை மீறி அவருடைய கலை நகர்ந்தபோது அவை சிறந்த படைப்புகளாயின. அதன் பின் அவரது படைப்புகள் நவீனத்துவ சாயல் கொண்டன. பிறகு தன் பாதையில் அதைக் கடந்து சென்றார் . இலக்கியத்தின் சமூகப்பங்களிப்பு என்ன என்ற கேள்வி எப்போதுமே தளைய சிங்கத்திடம் இருந்துகொண்டிருந்தது . ஆகவே அவரால் கடைசி வரை மார்க்ஸியத்தின் முக்கியத்துவத்தை உதறமுடியவில்லை . மிகவும் ஆன்மீகமான தளங்களை நோக்கிச் சென்றபோதும் கூட அவர் மார்க்ஸிய அடிப்படைகளை கைவிடவில்லை என்று எம் வேதசகாயகுமார் சொன்னார் .ர் .
அரங்கின் முதல் கட்டுரை யை ‘சரவணன்1978 ‘ முன்வைத்தார் . [ சொல் புதிதின் ஆசிரியர் . தமிழ் முதுகலை பட்டதாரி . பிறந்த வருடத்தை சேர்த்து புனைபெயரை உருவாக்கியுள்ளார் ] சரவணனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளின் அமைப்பையும் சாராம்சத்தையும் முன்வைத்து அவரை அறிய முயல்வது . தளையசிங்கம் அடிப்படையில் தத்துவ பிரச்சாரகரே என்பதை சரவணன் ஏற்கிறார். ஆனால் தத்துவப்பிரச்சாரகர்கள் பொதுவாக தங்கள் தரிசனத்துக்கு ஏற்ப தங்கள் கதைசந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்வார்கள் .தங்கள் மையத்தை அழுத்தும் முகமாக கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை தொகுத்துக் காட்டுவார்கள் . தளைய சிங்கத்தின் துவக்க காலக் கதைகள் இப்பலவீனங்களுக்கு ஆட்படாமல் தனித்து நிற்கின்றன என்றார் சரவணன்.
தளையசிங்கம் மனித மன ஓட்டங்களை சித்தரிக்கும் போது அவற்றை மிக சிக்கலான பன்மை இயக்கங்களாகவே காட்டுகிறார் , ஒற்றைப்படையான நீட்சியாக அல்ல என்று சரவணன் அவரது கோட்டை ,தேடல், வீழ்ச்சி போன்ற கதைகளை முன்வைத்து விரிவாக விளக்கினார் .இக்கதைகளில் மனம் முரண்பட்டு ,மோதிக் கொண்டபடி முன்னகர்கிறது. எப்போதுமே மனதின் நுட்பமான ஒரு பகுதி குறிப்புணர்த்தப்பட்டு அடியில் மறைந்துள்ளது.தளையசிங்கம் தன் கதைகளில் முதல்கட்டத்தில் எளிய பாசாங்குகள் , இரட்டைவேடங்கள் ஆகியவற்றின் அடியில் உள்ள அப்பட்டமான உண்மையை வெளியே இழுத்துப்போடுகிறார். கோட்டை இதற்கு சிறந்த உதாரணம் . அடுத்த கட்ட கதையில் அந்தப்பட்டமான கசக்கும் அந்தரங்க உண்மைக்கு அப்பால் ஆன்மீகமான ஒரு பேருண்மை உள்ளதை சூட்சுமமாகத் தொட்டுக் காட்டுகிறார் . முதலில் அவர் ஒழுக்கமறுப்பாளராக [amoral ] தன்னை வெளிக்காட்டுகிறார் .பின்பு அதனூடாக ஆன்மீகமான தளங்களுக்கு சென்று சேர்கிறார். இவை அவரது வளார்ச்சி நிலைகள் . இந்த வளர்ச்சியே அவரை தமிழின் முக்கியமான படைப்பாளியாக ஆக்குகிறது என்றார் சரவணன்.
வேதசகாய குமார் : சரவணன் தன் கட்டுரையில் தளைய சிங்கம் இதை சொல்கிறார் , இதை வலியுறுத்துகிறார் என்று வகுத்துக்காட்ட முயல்வது கல்வித்துறை சார்ந்த விமரிசன மரபின் பாணியில் உள்ளது . ஒரு படைப்பாளி எதையுமே வலியுறுத்தவில்லை என்று கொள்வதே சரியான வாசிப்பாக இருக்க முடியும் . நாம் எதை வாசிக்கிறோமென்பதையே நாம் சொல்லவேண்டும் என்றார். தளையசிங்கம் மன ஓட்டத்தை சித்தரிக்கும்போது ஒருங்கிணைவுள்ள சிந்தனையாக காட்டாமல் சிதறிப்பரக்கும் எண்ணத்துணுக்குகளாகவே எழுதுகிறார் . இது முக்கியமான கலைஞனை இனம் காட்டுகிறது என்று சரவணன் சொன்னது ஏற்புடையதே . ஆனால் அதன் மூலம் அவர் ஓர் அகவய அனுபவத்தையே தர முயல்கிறார் . மனம் பற்றிய கோட்பாடுகளையல்ல .
தேவதேவன்: தளையசிங்கத்தின் கதைகள் உள்ளுணர்வின் தூண்டுதலால் உருவானவை என்பதை விட அவை கருத்துக்களாக முதலில் தரிக்கப்பட்டவை என்று சோல்வதே சரியாக இருக்கும் . அவரது கதைகளை கருத்துக்களாக சுருக்கிவிடுவது சாத்தியமாகவே உள்ளது .
மோகனரங்கன்: எல்லா கதைகளும் அப்படி இல்லை . புதுயுகம் பிறக்கிறது என்ற தொகுப்பில் உள்ள ஆரம்ப கால கதைகள் ஆழமான அகத்தூண்டல் உள்ள கதைகளாகவே உள்ளன. போர்பறை தொகுப்பிலும் பிறகும் உள்ள பிற்காலக் கதைகள் தான் கருத்துக்களை மையமாக கொண்டு இயங்குபவை .
தேவதேவன் : கருத்துக்களை வலியுறுத்தும் பொருட்டோ ,பிரச்சாரம் செய்யும் பொருட்டோ எழுதப்பட்ட கதைகள் அவை என நான் எண்ணவில்லை . அவை கருத்தாக முதலில் தரிக்கப்பட்டவை . அதாவது கேள்விக்கு பதிலாக பதிலே அவற்றின் ஆதாரம் . அந்த கருத்தை அவர் எளிமைப்படுத்தவில்லை . வலியுறுத்தவுமில்லை . அதை அனுபவமாக ஆக்குகிறார் .அந்த அனுபவத்தின் வீச்சு அக்கருத்தை பற்பல தளங்களுக்கு நகர்த்திச் செல்கிறது .அந்தக்கருத்து சில கதைகளில் அவ்வனுபவத்தளத்தின் மூலமாக ஒரு தரிசனமாகவே வளர்ந்து விடுகிறது . உதாரணமாக ரத்தம் , தொழுகை போன்ற கதைகள் .மோகனரங்கன் குறிப்பிட்ட பிற்காலக் கதைகளில் அவ்வளர்ச்சி நிகழவில்லை . அவரது நல்ல கதைகள் கூட அவற்றின் கலைத்திறனால் முக்கியத்துவம் அடைபவை அல்ல ,அவற்றின் தரிசனப் பண்பால் முக்கியத்துவம் அடைபவையேயாகும்.
வேதசகாய குமார் : அதற்குக் காரணம் தளையசிங்கம் எப்போதுமே ஒரு தத்துவ வாதியாகவும் செயல்படுகிறார் என்பதுதான் . ஆழமான ஒரு தத்துவக்கேள்வியை எழுப்பி ஒரு நிலைகுலைவை உருவாக்கி வாசகனை சிந்திக்கவைத்தால் கலையின் வேலை முழுமையடைகிறது .ஆனால் தத்துவவாதி அப்படி போய்விட முடியாது . அவனுக்கு விடையும் வேண்டும் . புதுமைப்பித்தனின் அகலிகை கதைக்கு தளையசிங்கம் ஆற்றிய எதிர்வினையே அவரது அகலிகை கதை . புதுமைப்பித்தன் தன் கதையில் நமது மனசாட்சியை நோக்கியும் நமது வரலாற்றை நோக்கியும் ஆழமான கேள்வியை எழுப்பிவிட்டு நின்றுவிடுகிறார் . கெளதமனுக்கும் அகலிகைக்கும் தங்கள் கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை .ஆனால் தளைய சிங்கம் மேலே செல்கிறார் . கதையை வளர்த்தி சென்று அகலிகைக்கு ஆன்மீகமான விடை கிடைக்கசெய்கிறார் . இதுதான் கலைஞனுக்கும் தளையசிங்கத்துக்கும் இடையேயான வேறுபாடு . ஆனால் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு .புதுமைப்பித்தனின் கதை சிறுகதைக்குரிய அழகியல் முழுமையுடன் கலைவெற்றியை அடைகிறது . தளையசிங்கத்தின் கதை தத்துவ விவாதமாக மாறி தேவைக்குமேல் நீண்டு ஒரு சாதாரணமான கதையாக ஆகிவிட்டது .அவரது கதையின் முக்கியத்துவம் அவர் முன்வைத்த ஒட்டுமொத்த தத்துவப்பார்வைமீது அதை போட்டுப்பார்க்கும்போதுமட்டும் உருவாகிவருவதாகும் .
ஜெயமோகன்: தளையசிங்கம் அவரது ஆரம்பகால அழகியல் நோக்கில் நின்றிருந்தாரென்றால் மேலும் நல்ல கதைகளை எழுதியிருப்பார் .அவரது தத்துவத்தேடல் அவரை அங்கு நிற்க அனுமதிக்கவில்லை .ஆனால் அவரது படைப்பூக்கம் அவர் தத்துவவாதியாக ஆனபோது இல்லாமல் போய்விட்டது என்று கூறுவதை நான் ஏறகமாட்டேன் . அவர் சிறுகதையின் அழகியல் பாணியை விட்டு வெளியே நகர்ந்துவிட்டார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். தத்துவார்த்த சிந்தனையும் படைப்பூக்கத்தின் விளைவே .
வெங்கட் சாமிநாதன் : இப்போது நான் பார்க்கும்போது தளையசிங்கம் எந்த வடிவிலும் முக்கியமாக எதையும் சாதிக்கவில்லை என்றே எனக்கு படுகிறது. எங்குமே அவரால் நிற்கமுடியவில்லை . மேகம் போல கலைந்து கலைந்து மாறி சென்றபடியே இருந்தார். அவரது சிறுகதைகளின் வடிவங்கள் முழுமையும் துல்லியமும் இல்லாதவை . அவரது சிந்தனைகளும் ஒழுங்கும் மையமும் இல்லாதவை .அவரை வகுத்துக் கொள்வது கடினம் .ஆனால் தளைய சிங்கம் பயணம் செய்தார் ,எங்குமே தேங்கிநிற்கவில்லை .அது மேலான கலைஞனுக்குரிய குணம்.அவர் எதையுமே தெளிவாகசொல்லவில்லை என்பது பலவீனம் என்றால் எல்லாவற்றிலும் இருந்து வெளியேறியபடியே இருந்தார் என்பது பலம் .எங்காவது உறைந்து நின்றுவிடுவதே வழக்கமாக உள்ள தமிழ் சூழலில் இது அபூர்வமான ஒரு விஷயம்தான்.
வேதசகாயகுமார்: சரவணன் தன் கட்டுரையில் தளையசிங்கம் யாழ்ப்பாண சமூகத்தின் போலிவேடங்களை அம்பலப்படுத்துவது பற்றி சொல்லியிருந்தது மிக முக்கியமான கருத்து . அவரது பார்வை முதலில் விழுவதே ஒழுக்கம் அறம் என்றெல்லாம் சொல்லி மனிதர்கள் போடும் போலிவேடங்கள் மீது தான் .மிக மூர்க்கமாக அவற்றை கிழித்தெறிய தளையசிங்கம் முயல்கிறார் . ‘கோட்டை ‘ அப்படிப்பட்ட முக்கியமான கதைதான் . ஆனால் ‘தொழுகை ‘ அதற்கு அப்பாலும் செல்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அவள் சைவ வேளாளப் பெண் . அவன் சாணான் . அவளுடைய வீட்டுக்குள் வயது வந்த பெண்கள் தூங்குகின்றன. கதவை சாத்திவிட்டு அவனுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறாள். அவனை அவள் சந்த்தித்தே பத்துநாள்தான் ஆகிறது .அவனுடன் அவளுக்கு உள்ள உறவு முழுக்க முழுக்க காமம் மட்டும் தான் . அவன் அவளை ஒரு பெண்ணுடல ‘க மூர்க்கமாக கையாள்வதும் அவள் வைதபடி முரண்டுவதுமெல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது . அவளுடைய மனம் கணவன் மீதுதான் இருக்கிறது . அவர் என் உயிர் ,உன் மீது தான் ஆசை என்கிறாள் . முத்துவுக்கு அந்த நிலை போதவில்லை .வெறும் காமக்கருவியாக அவனால் இருக்க முடியாது . ஆகவே அவன் பேரம் பேசுகிறான் . பயம்காட்டுகிறான். இதெல்லாம் ஒரு தளம் . ஆனால் பிறகு என்ன ஆகிறது ? உறவுக்கு பிறகு அவர்கள் மனநிலையே மாறிப்போய் விடுகிறது . ஒழுக்கரீதியான ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து முடிந்திருக்கவேஎண்டிய கதை ஆன்மீகமான ஒரு தளத்துக்கு நகர்ந்துவிடுகிறது .
நாஞ்சில்நாடன் : ஆனால் அந்தக்கதையில் எல்லாமே திட்டமிட்டு உருவாக்கியதுபோலத்தான் உள்ளது .வேளாள பெண் நாடார் ஆண் .அவர்கள் உடலுறவு கொள்ளும்போது திருப்பாவை கேட்பது எல்லாம் வெளிப்படையாக திட்டமிட்டவை போல்த்தானே உள்ளன. இந்தக்கதை எழுதப்பட்ட காலத்தில் பெரிய அதிர்ச்சி தரும் கதையாஅக் இருந்திருக்கலாம் .ஆனால் இன்று அப்படியல்ல, அதைவிட பெரிய அதிர்ச்சிகளை நம் இலக்கியம் சந்தித்துவிட்டது.
வேதசகாயகுமார் : உண்மை .அக்கதை அதிர்ச்சியை மட்டுமே அளிப்பதாக இருந்தால் அப்படி சொல்லலாம். ஆனால் அக்கதை அந்த எல்லையை தாண்டி செல்கிறது .அந்த முடிவு வரிகளை படிக்கிறேன் ‘ ‘செல்லம்மாவின் தோற்றம் அவனை பிரமிக்க வைக்கிறது . உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் துளிர்த்து பொங்கிய வியர்வை ஒளியோடு போட்டிபோட்டு பூரித்து பிரகாசித்த அவ்ளின் முகம் அவனை புல்லரிக்க வைக்கிறது .எங்கோபார்த்ததோற்றம் .கோயில் சாத்துப்படி -ஸ்தான மூலையில் தங்கத்தால் செய்து நிற்கும் அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றம் …..தங்கச்சிலை தெய்வச்சிலை ,தெய்வம்… ‘ ‘ இதைதொடர்ந்து அந்த திருவெம்பாவை பாடல்கேட்கிறது. இங்கு பள்ளியெழுச்சி , புதுப்புனலாடல் அனைத்துக்கும் குறியீட்டு ரீதியாக விரிவான பொருள் வந்துவிடுகிறது.
ஜெயமோகன்: ‘ ‘ஒன்றின் மெய்யான தன்மையில்தான் அதன் அசல் தரிசனம் உள்ளது .நாகரீகம் புனிதம் விலக்கப்பட்டவை என்ற பூச்சு கொண்டு அந்த மெய்யான தனமையை மறைத்தால் அதை நான் அறியவே முடியாது என்று தளையசிங்கம் சொல்கிறார் ‘ ‘ என்று சரவணன் எழுதுகிறார்…. ..
வேதசகாயகுமார்: மெய்யான தன்மையை உடைத்துக் காட்டுவது அல்ல ,அதை ஆன்மீகமான இடத்துக்கு உயர்த்துவதும் இக்கதையில் உள்ளது .தொழுகை எது ? காம உறவா ? மனமும் உடலும் அதன் முழுமையில் கூடும்போது அது ஒரு வகையான தொழுகை என்கிறார் தளையசிங்கம் .அதாவது கலகத்தைக் கூட ஆன்மீகமான ஒன்றாகவே அவர் காண்கிறார்
ஜெயமோகன் :முக்கியமான ஆன்மீகவாதிகளில் எல்லாம் ஒரு அராஜக அம்சம் உள்ளதை காணலாம்.அது அவர்களுடைய ஆரம்ப காலத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது .ஏசு மக்தலீனாமேரியை மன்னித்தது அப்படிப்பட்ட ஒரு கலகம் தான். தல்ஸ்தோய் , கசன்ந் சகிஸ் , ஹெஸ் முதலிய ஆன்மீக அம்சம் உள்ளபடைப்பாளிகளில் எல்லாமே ஒழுக்கம்மீறிய அல்லது ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட [amoral] தளம் ஒன்று எப்ப்பொதுமே உள்ளது . இவ்வுலகம் போடும் வேடங்களுக்கு எதிரான பொறுமையின்மையின் விளைவு அது. ஆனால் அந்த கலகம் அங்கேயே நிற்பது இல்லை .அது மேலேறிச் செல்கிறது .
மோகனரங்கன்: ஆனால் சில கதைகளில் தளையசிங்கம் தன் தத்துவ விசாரத்துக்கு ஒரு குறியீட்டு வடிவம் உருவாக்கும் பொருட்டு கதைகளை எழுதுகிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.உதாரணமாக கோயில்கள் என்ற கதை . மரணத்தின் பின்னணியில் வாழ்க்கையை வைத்துப் பார்த்து உடலே ஒரு கோயில் என்ற இடத்துக்கு நேரடியாகவே போய்விடுகிறார் .
ஜெயமோகன்: சரவணன் சொல்லும் வீழ்ச்சி போன்ற கதைகளும் அப்படி தத்துவசட்டகத்துக்கு ஏற்ப கட்டப்பட்டவையே .
சூத்ரதாரி: ஆரம்பகால கதைகளில் அவர் மன ஓட்டத்தின் இயல்பான நகர்வை ஒரு கலைஞனாக பதிவு செய்கிறார் .ஆகவே அவை வெறும் தத்துவ சட்டகங்களாக இல்லை .பிற்கால கதைகளில் அவர் சிந்தனை ஓட்டத்தையே சொல்கிறார் ,அது தத்துவ சிந்தனையாக இருக்கிறது .
தேவகாந்தன் : யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றி இங்கு சொல்லவேண்டும் .கிடுகுவேலி கலாச்சாரம் என்பார்கள் .ஒவ்வொருவரும் தன் எலைக்குள் தனித்து இருப்பார்கள் .ஆகவே போலித்தனமும் அதிகம். அந்தக் கிடுகுவேலிகளை உடைக்கமுய்ல்கிறார் தளையசிஙகம் .அதை உடைத்தால் மட்டுமே வெளியேறமுடியும் சுதந்திரம் கிடைக்கும் , அடிப்படையானதேடல்கள் சாத்தியம் என அவர் நம்புகிறார். கோட்டை , தொழுகை போன்ற கதைகள் எல்லாமே இப்படிப்பட்டவைதான்.அதன் அடுத்த கட்டத்தில் அவர் சமூக நடவடிக்கைகளில் தீவிரம்னாக இறங்கினார். இம்மாதிரி அதிர்ச்சிகள் தருவதிலோ தத்துவ விசாரத்திலோ நின்றுவிடவில்லை .
மோகனரங்கன் : எனக்கு பிரச்சினை வருவதே அவர் அரசியல் சமூக செயல்பாடுகளை பற்றி பேசத்தொடங்கும்போதுதான்.அவர் மிக திட்டவட்டமாக பேச ஆரம்பிக்கிறார். இதுதான் சரி என்று சொல்லாஅரம்பிக்கும்போதே அறிவதிகாரம் வந்தாகிவிட்டது .அவர் செய்தது சரியாக இருக்கலாம் .ஆனால் அதை அவர் வகுத்து சித்தாந்தமாக முன்வைக்கிறார்.அது நிறுவனமாகும் , அதிகார செயல்பாடுகளாகும் .படிப்படியாக அழிவு சக்தியாக மாறும் .
ஜெயமோகன்: தளையசிங்கம் சித்தாந்தி அல்ல. கலைஞனாக தொடங்கி தத்துவ தேடலில் முடிந்தவர் .
மோகனரங்கன் :அவரை சித்தாந்தியாக ஆக்கியிருக்கலாம் .அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன.
வெங்கட் சாமிநாதன் : அவருடைய கதைகளில் எல்லாவகையான வாழ்க்கைபார்வைக்கும் இடம் இருந்தது .கடைசியில் அவர் தத்துவம் என்று ஆரம்பித்தபோது அதெல்லாம் இல்லாமலாகி ஒரே விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் வர ஆரம்பித்தது என்று படுகிறது .
வேதசகாய குமார் : ஓர் இலக்கியவாதியாக ஆவதற்காக எல்லாவற்றையும் துறக்க தயாராக இருப்பதாக அவர் ஆரம்பத்தில் சொல்கிறார் ,பிறகு தத்துவத்துக்காக இலக்கியத்தையே துறந்தார் .
ஜெயமோகன் : உண்மைக்காக . அப்படித்தான் அவர் சொல்கிறார் .அவரை பொறுத்தவரை இலக்கியம் மெய்மைக்கான தேடலே ,அப்பயணமே அவரை இங்கெல்லாம் இட்டு சென்றது .
மதிய உணவுக்காக கூட்டம் பிரிந்தது . மழை இருட்டி , குளிர் பெருகியது . கோடைதானே என்று பலர் ஸ்வெட்டர் கொண்டுவரவில்லை .கைகளை மார்பில் கட்டி பணிவுடன் நின்றிருந்தார்கள் .அவர்களுக்கு குருகுல பிரம்மசாரிகளிடம் இருந்து இரவல் வாங்கிய ஸ்வெட்டர்களை தந்தோம். பேசியபடியே மதிய உணவுக்கு பிரிந்தோம்.
முதல்நாள் அரங்கு , மாலை 6 மணி
மதிய உணவுக்கு பிறகு குருகுல அறைக்குளேயே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் .நல்ல மழை பெய்தது . சில இடங்களில் ஆலங்கட்டிகள் விழுந்தன . இம்மாதிரி சந்திப்புகளின் முக்கியக் கவர்ச்சியே இப்படி அனைவரும் கூடி அமர்ந்து அரட்டை அடிப்பதுதான் .இலக்கியவாதிகள் பற்றிய வேடிக்கைகள் , கொஞ்சம் வம்புகள்,பரஸ்பரக் கிண்டல்கள் . இதற்கு மிக முக்கியமானத் தேவை நட்பார்ந்த சூழல் . தனிப்பட்ட குரோதங்கள் கொண்ட ஒரே ஒருவர் இருந்தாலும் இவ்வரட்டைகள் மிக மோசமான மனபாதிப்பு ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். அதேபோல கட்டுப்படின்றி மது அருந்துபவர்கள் , தன்னை முன்னிலைப்படுத்தும் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்கள் ஆகியோரும் இச்சூழலை சிதைத்துவிடூவார்கள் .சொல் கூட்டங்களுக்கு எல்லா தரப்பினரையும் அழைத்தாலும் எப்ப்பொதுமே நட்பின் எல்லைகளை தாண்டாதவர்களையே அழைக்கிறோம் . இப்போது பின்னால் திரும்பி பார்க்கும்போது முக்க்கியமான ஆக்கங்களை எழுதிய கணங்களும் நண்பர்களுடன் உரையாடிய நாட்களும் மட்டுமே இலக்கிய வாழ்வில் மகிழ்ச்சிகரமானவையாக ஒளிபெற்று தெரிகின்றன. அங்கீகாரங்கள் ,வெற்றிகள் ,விழாக்கள் எதுவுமே மனதில் ஆழப்பதியவில்லை .
ஆறுமணிக்கு நூலக அறையில் கூடினோம் .ஆளுக்கொரு கனத்த கம்பிளியை எடுத்து போர்த்திக்கொண்டு அமர்ந்தார்கள் .மோகனரங்கன் தன் கட்டுரையை வாசித்தார் .மோகனரங்கனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளை மதிப்பிட்டபடி தொடங்கியது .மனித வாழ்க்கையின் விசித்திரத்தையும் புரிந்துகொள்ள முடியாத தன்மையையும் கொண்டு அதை கூர்ந்துகவனிப்பவனாகவே எழுத்தாளன் செயல்படுகிறான்.அவன் தத்துவ ஆசிரியனாக ஆகும்போது அந்த வியப்புணர்வு இல்லாமலாகிறது .அவன் விடைகளையும் தீர்வுகளையும் முன்வைக்க ஆரம்பித்துவிடுகிறான். தளையசிங்கத்துக்கும் இதுதான் நடந்தது . தளைய சிங்கத்தின் கதைகளில் தொடக்க காலத்தில் உண்மையை நோக்கிச் செல்லும் உக்கிரம் இருந்தது ,அது முக்கியமானது .ஆனால் அவரது தத்துவ நோக்கு குறித்து த்னக்கு பல ஐயங்கள் உள்ளன என்றார் மோகனரங்கன் .
தளையசிங்கத்தின் கோட்பாடுகள் , இலட்சியங்கள் ஆகியவை நிதரிசனத்தின் தொடர்போ , கறாரான அறிவார்ந்த புறவயத் தருக்கங்களோ இல்லாமல் வெறும் கனவுகளாகவே நின்று விட்டிருக்கின்றன என்றார் மோகனரங்கன். இந்த காரணத்தால் அவை கவித்துவக் கூற்றுகள்ளாகவோ வெற்றுக் கனவுகளாகவோ நின்றுவிடுகின்றன. மேலும் தளையசிங்கம் உபயோகிக்கும் இந்திய சிந்தனை மரபு சார்ந்த கருத்தியல் உபகரணங்கள் மிகுந்த இடர்களை விளைவிப்பவையாக உள்ளனன . யோகம் , அன்னமய கோசம் போன்ற சொற்களெல்லாம் வேறு ஒரு சூழலில் வேறுவெறு பொருளில் பயன்படுத்தப்படுபவை . ஆகவே தளையசிங்கம் சொல்வதை புரிந்து கொள்வதில் பல மயக்கங்கள் ஏற்படுகின்றன. செயல்தளத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக வடிவமைக்கப்படாத கோட்பாடினால் பயன் இல்லை . அப்படி வடிவமைக்கப்படும் போதே அது மாற்று உண்மைகளை மறுக்கும் அறிவதிகாரம் ஆகியும் விடுகிறது .தன்னளவில் எந்த சித்தாந்தத்தையும் சந்தேகத்துடன்த்‘ன் பார்க்க முடியும் என்றார் மோகனரங்கன் .சித்தாந்தங்கள் உலகில் போதிய அழிவை ஏற்கனவே உருவாக்கிவிட்டிருக்கின்றன.சித்தாந்தங்களால் முழுமையான உண்மையை ஒரு போதும் நெருங்கமுடியாது .
ஜெயமோகன்: தளையசிங்கம் முன்வைப்பவை கோட்பாடுகள்தானா ? அவை ஒரு சிந்தனையாளனின் அகத்தரிசனக்கள் என்ற நிலையில் மட்டும்தானே உள்ளன ? கோட்பாடுகள் விரிவான தருக்க அமைப்பை கொண்டிருக்கும் . தங்கள் கூற்றுக்களை அவை நிறுவ முயன்றபடியே இருக்கும் .அனைத்துக்கும் மேலாக கோட்பாடுகளை அடுத்த கட்ட அறிஞர்கள் மேலும் மேலும் வளர்த்து சென்றபடியே இருக்க முடியும் . அதாவது கோட்பாடு தன்னளவில் அதை, உருவாக்கியவனின் அடையாளம் இல்லாமல் செயல்பட முடியும் . ஆனால் தளையசிங்கத்தின் தரிசனங்களை நாம் அவரில் இருந்து பிரிக்கவே முடியாது அல்லவா ?
தேவகாந்தன்: மு பொன்னம்பலம் போன்ற சிலர் தளையசிங்கத்தின் கருத்துக்ளை கோட்பாடுகளாக ஆக்கிக் கொள்ள முயன்றிருக்கிறார்கள் . பொன்னம்பலம் தளையசின்ங்கத்தை மையமாகி ஒரு மதமனப்பான்மையையே உருவாக்க முயல்கிறார் என்று படுகிறது .
ஜெயமோகன்: ஆனால் அதற்குரிய தருக்கக் கட்டுமானத்தை தளையசிங்கத்தில் இருந்து பெற முடியாது .அவரது அகவயமான கூற்றுக்களை விளக்கி விரித்து கோட்பாடாக மாற்ற முடியும் , அவ்வளவுதான்
தேவதேவன்: இம்மாதிரி ஒரு தரிசனத்திலிருந்து தத்துவத்தை உருவாக்குவது எப்போதும் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது . இன்னும் சொல்லப்போனால் எல்லா தத்துவ சட்டகங்களும் ஒரு படைப்பாளியின் மேலான தரிசன மன எழுச்சியை அடுத்துவரும் தலைமுறையானது தொகுத்து வகுத்துக்கொள்ள முயலும்போது உருவவதேயாகும்.உதாரணமாக புத்தர் தரிசன மனநிலையில் இருந்துகொண்டு கவித்துவமாக பேசுகிறார் . எப்போது புத்தரின் க்ஷணவாதம் ஒரு கோட்பாடாக மாறியதோ அப்போதே புத்தர் நிராகரிக்கப்படுகிறார் .ஆகவேதான் தன் மெய்மையனுபவத்தை விளக்க அவர் முற்படவில்லை . அதை விளக்கும்படி கோரப்பட்டபோது அந்த ஞானம் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்போது பேசலாம் என்று சொன்னார்.
ஜெயமோகன் : விஷ்ணுபுரத்தில் இது வருகிறது .புத்தர் எல்லாமே நிலையற்றது ,நாம் அறிபவை எதுவுமே அறியும் நிலையில் மாறாமல் இல்லை என்றார் .அதை தத்துவார்த்தமாக விரிவுபடுத்தும் நாகார்ச்சுனர் உண்மையில் எதுவுமே இல்லை நமது அறிவுகூட என்ற சூனியவாத கோட்பாட்டுக்கு போய் சேர்கிறார் .
தேவதேவன் : மகாயான பெளத்தமே புத்தரிலிருந்து வெகு தொலைவில் நிற்கும் ஒன்றுதான்.
மோகனரங்கன்:விடைகளை யார் முன்வைத்தாலும் அப்படித்தான் ஆகும்
ஆர்.பி ராஜநாயகம்: புத்தரைப்பற்றி சொன்னீர்கள் . என் நண்பர் ஒருவர் ,அவர் ஒரு முஸ்லீம் , மதுரைக்கு அருகேயுள்ள ஒரு சங்கிலிக் கருப்பனைப்பற்றி ஆய்வு செய்தார் . ஏழடி உயரமுள்ள சிலை அது .வெள்ளியில் மீசையும் கண்களும் செய்து பதித்திருப்பார்கள் . வருடத்தில் எப்படியும் அங்கு இரண்டாயிரம் ஆடுகளாவது பலிவிழாமல் இருக்காது . தேவர் சாதிக்கு முக்கியமான கோயில் . நண்பருக்கு சிலையின் அமைப்பைப் பார்த்து சந்தேகம் .பூசாரியை கைக்குள் போட்டுக் கொண்டு ஒருநள் உள்ளே நுழைந்து மீசையும் கண்களையும் எடுத்துப்பார்த்துவிட்டார் .அவர் சந்தேகப்பட்டது சரிதான் , அது ஒரு புத்தர் சிலை ! வெளியே சொல்ல முடியுமா, தலை காணாமல் போய்விடும் என்றார்….
வேதசகாய குமார்: விழுப்புரத்துக்கு அருகேகூட ஒரு சிலை இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். .தலையில்லாத முனிசாமி .வருடத்திற்கு ஒருமுறை தலையை வேறு எங்கிருதோ கொண்டுவந்து வைப்பார்கள் ,உடனே ஒரு ஆயிரம் ஆடாவது வெட்டப்படுமாம். அது புத்தரின் தலை .
ஜெயமோகன்: இது பெளத்தம் கைவிடப்பட்டபிறகு அச்சிலைகளை கைப்பற்றிய மற்ற மதத்தவர் செய்வது .ஆனால் பெளத்தர்களில் வஜ்ராயனர்கள் புத்தருக்கே உயிர்பலி அளித்திருக்கிறார்கள், விஷ்ணுபுரத்தில் கூட அப்படி ஒரு இடம் வரும்…
தாமரை ஆறுமுகம் : மோகனரங்கன் கட்டுரை பற்றிய என் கருத்துக்களை தொகுத்துச் சொல்கிறேன். ஒன்று தளையசிங்கம் மார்க்ஸியத்தில் காணும் முக்கியமான குறைபாடு அதில் தனிமனிதனின் ஆன்மீக கடைத்தேற்றத்துக்கு ஏதும் வழியில்லை என்பதுதான் . இந்தபோதாமையை நிரப்ப மார்க்ஸியத்திலிருந்து மேலே போக வேண்டுமென அவர் எண்ணுகிறார் . அதற்கான முயற்சியில் அவர் செய்தது மார்க்ஸியத்துடன் அரவிந்தர் போன்ற சில ஆன்மீக சிந்தனையாளர்களில் சிந்தனைகள் சிலவற்றை ஒட்ட வைத்தது தான் .எங்கல்ஸுக்கும் இடையேயான கருத்தொற்றுமையைக்கூட குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மார்க்சியத்தை ஒரு அறிவியல்கோட்பாடாக பார்க்காமல் ஒரு விதமான தரிசனமாகவும் , மார்க்ஸை ஒரு அதிமானுடனாகவும் பார்க்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது . என்னதான் ஆன்மீகம் பேசினாலும் செயல்தளத்துக்கு வரும்போது அவரால் மார்க்சியத்தைதாண்டி செல்லமுடியவில்லை . கருத்துக்களிலும் கைலாசபதியிடம் உள்ள அதே குறைகளை இவரிடமும் காணலாம்.இவரும் கருத்து செயல்பாடை நேரடியான பொருளில் ஒருவகைப் பிரச்சாரமாகவே காண்கிறார் .
சூத்ரதாரி: ஆனால் கலையை தளையசிங்கம் அப்படிக் காணவில்லையே .அவர் ‘கலை பரவச விடுதலையை அளிக்கும் ‘ என்றுதானே சொல்கிறார் .
தாமரை ஆறுமுகம் :உண்மைதான் .ஆனால் தன் கருத்துக்களை அவர் உபதேசம்தான் செய்கிறார் .மெய்யுளிலும் உபதேசம்தான் உள்ளது.
மோகனரங்கன் : ஆனால் தளையசிங்கம் தன் போராட்டங்களில் காந்திய மார்க்கத்தையே கடைப்பிடித்துள்ளார் .குறிப்பாக சிரமதானம் போன்றவிஷயங்களில் அவருக்கு நம்பிக்கை இருந்துள்ளது .
தாமரை ஆறுமுகம் : அது உண்மை.ஆனால் அவருடைய மனத்தில் இருந்த சமூக மாற்றம் பற்றிய சித்திரமானது மார்க்ஸிய அடிப்படையிலானது என்றே தோன்றுகிறது .
அன்பு வசந்தகுமார் :தளையசிங்கம் முரணியக்க இயங்கியல் போன்ற மார்க்ஸிய தத்துவ அடிப்படைகள் மீது ஐயங்களை எழுப்புகிறார் .ஆனால் சமத்துவம் ,விடுதலை ,மக்கள்போராட்டம் போன்ற கருத்துக்களில் அவரது பார்வை மரபான மார்க்ஸிய பார்வையேதான். விழிப்புணர்வு பெற்ற ஒரு சிறுபான்மையினர் உழைக்கும் மக்களை விடுதலை உணர்ச்சி பெறச்செய்வது பற்றி அவர் பேசுமிடமும் மார்க்ஸிய அடிப்படைக்குள்தான் வருகிறது .மார்க்ஸியத்தில் இருந்து அடுத்த தளத்துக்கு போக முடியுமா என்று பார்த்த ஒரு மார்க்ஸியர் என்று அவரைச் சொல்லலாம் .
தேவகாந்தன் :எனது கருத்தும் அதுதான் ,தளையசிங்கம் இலங்கையில் கல்வித்துறை பத்திரிகை ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு உருவாகி வந்த முற்போக்கு முகாமின் அதிகாரத்தை தான் எதிர்த்தார் . அவர்கள் இலக்கியத்தை வெறும் அரசியலாகவும் சமூகவியலாகவும் குறுக்குவதை கண்டித்தார் . ஆனால் மார்க்ஸியத்துக்கும் அவருக்கும் இடையே நேரடியான ந்ல்லுறவுதான் இருந்தது .தளையசிங்கத்தின் கருத்துக்களை மார்க்ஸியத்திலிருந்து பிரிக்கமுடியாது.
ஜெயமோகன்: தளையசிங்கத்தில் அவரது காலகட்டத்து எல்லா இலட்சியவாதங்களின் தாக்கமும் உள்ளது . மார்க்ஸியம் அக்கால கட்டத்து இலட்சியவாதங்களில் முக்கியமானது . விவேகானந்தர் ,காந்தி ,அரவிந்தர், பாரதி ஆகியோரும் அவரை பாதித்துள்ளனர் . அடிப்படையில் அவர் ஒரு இலட்சியவாதி என்பதே இதற்குக் காரணம் .அவரில் பாதிப்பு செலுத்தாதவர்கள் இலட்சியவாதப்பண்பு இல்லாத மேற்கத்திய எழுத்தாளர்கள் தான். எனக்கு வியப்பு என்னவெனில் இவ்வளவு இலட்சியவாதப்பண்பு உள்ளவரில் ஏன் தல்ஸ்தோயின் தாக்கம் சொல்லும்படியாக இல்லை என்பதுதான்.அவர் எங்கும் தல்ஸ்தோய் பற்றி குறிப்பிட்டதேயில்லை …
வெங்கட் சாமிநாதன் : நான் தளையசிங்கத்திடம் காணும் குறையே அதுதான் .அவரது புதுயுகம் என்பது மார்க்ஸியத்தையே சற்று திருப்பிப் போட்டு பார்த்தது மட்டும்தான் . எல்லாரும் சமமாக ஆவது , அரசு உதிர்ந்துபோவது , தனியுடைமை இல்லமலாவது என்றெல்லாம் மார்க்ஸியம் சொல்லும் கனவைத்தான் இவரும் அடுத்த யுகம் என்று சொல்கிறார் . ஆனால் இத்தகைய கனவுகள் எல்லாம் என்ன ஆயிற்று வரலாற்றில் ? மனிதனின் இயல்பான சின்னத்தனம் ,சுயநலம் ,அதிகாரவெறி ஆகியவை இத்தகைய கனவுகளையெல்லாம் அழித்துவிட்டதைத்தானே பார்க்கிறோம் அரசாங்கம் இல்லாமலாகும் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட அமைப்பில் அரசாங்கம் சரித்திரத்திலேயே இல்லாத அளவு வலிமையுள்ளதாக ஆயிற்று. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பில் ஏழைகள்தான் கூட்டம்கூட்டமாக கொன்றொழிக்கப்பட்டனர் .இதோ நம்முடைய காலத்திலேயே காந்தியக்கனவு -ராமராஜ்யம் -இல்லமலாயிற்று . இவ்வளவுக்குபிறகும் நாம் எப்படி இம்மாதிரி வெற்று இலட்சியக்கனவுகளை மதிக்க முடியும் ?
ஆர். பி .ராஜநாயகம் : என் சொந்தக்காரர் ஒருவர் வினோபாவேயின் ஆசிரமத்தில் இருந்தார். ஏராளமான சொத்து வைத்திருந்தவர் . வினோபாபேச்சைக்கேட்டு எல்லாவற்றையும் பூதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் . ஆனால் கடைசியில் வினோபாவின் இயக்கத்தில் அவரைத்தவிர எல்லாருமே அயோக்கியர்கள் ஆக இருந்தார்களாம். ஆசிரமத்திற்குள்ளேயே விபச்சாரம் நடக்குமாம். கடைசியில் வினோபாவுக்கே இது தெரிந்துவிட்டது .இனி உயிரோடு இருக்கவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார் .
நாஞ்சில்நாடன் : ஆமாம் ,அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . இந்திராகாந்தி அவரைப்பார்க்கசென்றபோது இந்த உடை அழுக்காகிவிட்டது கழற்றப்போகிறேன் என்றுதான் சொன்னாராம்…. தளையசிங்கம் சீக்கிரமே போய்சேர்ந்துவிட்டார் .
வேதசகாயகுமார் : மோகனரங்கன் தளையசிங்கத்தின் இலக்கியமதிப்பீடுகள் ஏற்புடையவையாக இல்லை என்று சொன்னார் . தளையசிங்கம் புதுமைப்பித்தனைவிட ஜெயகாந்தனை தூக்கிப்பிடிப்பது கசப்பூட்டுவதாகக் கூறினார் . …
மோகனரங்கன்: மெளனி புதுமைப்பித்தன் ஆகியோருடைய எல்லா கதைகளும் சேர்ந்தால்கூட ஜெயகாந்தனின் பிரளயம் ,விழுதுகள் போன்ற கதைகளுக்கு சமமல்ல என்று அவர் சொல்வது அபத்தமான முடிவென்றே படுகிறது.கலையின் நுட்பங்களை கணக்கில் கொள்ளாது பொத்தாம் பொதுவாக மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த முடிவுக்கு வருகிறார் ….
வேதசகாய குமார் : இந்த எண்ணம் இங்கு உருவாக்கப்பட்ட ஒன்றா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது . காரணம் இங்கு தளையசிங்கத்தின் விமரிசன ஆளுமைபற்றி பேசப்படும்போதெல்லாம் ஜெயகாந்தனை தூக்கிபிடித்தார் ,ஆகவே இலக்கியத்தின் கருத்துக்களை மட்டுமே கணக்கில் கொள்ளும் இயந்திரவாத அணுகுமுறை உடையவர் என்று தளையசிங்கம் குற்றம் சாட்டப்படுகிறார் . இந்த விமரிசனத்தினை உருவாக்கியவர்கள் தளையசிங்கத்தின் ஆரம்பகட்ட விமரிசனங்களை குறிப்பாக ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியை எந்த அளவுக்கு பொருட்படுத்தியுள்ளனர் என்று தெரியவில்லை . ஏழாண்டு இலக்கியவளர்ச்சியை பார்த்தால் அதில் தெரியும் தளையசிங்கம் படைப்பை வடிவம் உள்ளடக்கம் என்று பிரித்து பார்ப்பவரே அல்ல. அவருக்கு இரண்டும் பிரிக்கமுடியாதவையாகவே பட்டிருக்கின்றன.உதாரணமாக எஸ்பொன்னுதுரையை நிராகரிக்க தளையசிங்கம் முன்வைக்கும் வாதகதிகள் அனைத்துமே மொழி மற்றும் வடிவம் சம்பந்தப்பட்டவை… .
நாஞ்சில்நாடன்: எந்தக் கோணத்தில் ஆனால் என்ன , ஜெயகாந்தன் கதைகளுக்கு புதுமைப்பித்தன் கதைகளைவிட ஆழமும் மதிப்பும் ஏற்படும் ஓர் அணுகுமுறையை எப்படி ஏற்கமுடியும் ?
வேதசகாயகுமார்: ஒன்று கவனிக்கவேண்டும் ,ஜெயகாந்தனின் எல்லா கதைகளையுமல்ல ஆரம்பகட்ட கதைகளையே தளையசிங்கம் குறிப்பிடுகிறார் .சொல்லப்போனால் பிரளயம் விழுதுகள்போன்ற ஓரிரு கதைகளை மட்டுமே அவர் குறிப்பிட்டு பேசுகிறார் . புதுமைப்பித்தனை விட ஜெயகாந்தனைமேலாக மதிப்பவனல்ல நான்.புதுமைப்பித்தன் கதைகளை கலைக்கும் ஜெயகாந்தன் கதைகளை போலிக்கலைக்கும் ஒப்பிட்டு நான் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ என்று ஒரு நூலே எழுதியுள்ளேன். நான் இங்கு பேச விழைவது ஏன் தளையசிங்கம் ஜெயகாந்தனை முன்வைத்தார் என்பதை எளிமைப்படுத்தக் கூடாது என்றுதான் .ஜெயகாந்தனின் கலைச்சிதறல்களை அறியமுடியாதவரல்ல தளையசிங்கம். ஓரிரு முறை அவரே அதை சொல்லியும் இருக்கிறார் .கலை என்பது ஆழமான அகவய அனுபவமேயொழிய கருத்தை அறிந்துகெ ‘ள்ளும் சகஜநிலையல்ல என அவரளவுக்கு அழுத்திச் சொன்னவர்களும் இல்லை. கலையை மதிப்பிட சக்தியற்று உடன்பாடான கருத்துக்களைதேடி அவற்றைகண்டடைந்ததும் அப்படைப்பாளியை ஏற்கும் மேலோட்டமான வாசகராக தளையசிங்கத்தை அவரை ஆய்வு செய்யும் எவருமேசொல்லமாட்டார்கள் .பிறகும் ஏன் அவர் ஜெயகாந்தனை முன்வைத்தார் ?அவரது மனதில் தனது இலக்கியப் படைப்புக்கான ஒரு முன்வரைவு உள்ளது . அதன் கூறுகள் சிலவற்றை அவர் ஜெயகாந்தனில் காண்கிறார் ….
மோகனரங்கன்: மெய்யுளில் அவர் அதற்காக முயற்சி செய்கிறாரே …
வேதசகாய குமார்: அம்முயற்சி ஒரு தோல்வி என எல்லாருக்கும் தெரியும் .கடைசிவரை அவரால் தன் மனத்தில் இருந்த வடிவததை உருவாக்கிக் காட்டமுடியவைல்லை .அதன் ஒரு கோட்டுச்சித்திரத்தை ம்னெய்யுள் தருகிறது . அதன்படி தளைய சிங்கம் கனவுகண்ட இலக்கியப்படைப்பானது எதிர்மறைத்தன்மை உடையதல்ல. விமரிசனத்தை மட்டும் முன்வைபதுமல்ல.பெரும் இலட்சியக்கனவுகளை முன்வைப்பது . கவிதையும் ,அறிவார்ந்த தருக்கமும் ,கறொஅனைவீச்சும் இணைந்த ஒன்று .அப்படிப்பார்க்கும்போது ஜெயகாந்தனிலுள்ள இலட்சியக்கனவின் அம்சமும் , அறிவார்ந்ததன்மையும் முக்கியமாக அவருக்கு பட்டது இயல்பே ….
நாஞ்சில்நாடன் : புதுமைப்பித்தனிலும் அந்த இலட்சியக்கனவு இல்லாமலில்லை …..
வேதசகாயகுமார்: அதை தளையசிங்கமும் ஒப்புக் கொள்கிறார். தமிழில் முதன் முதலாக இன்று மிகபரவலாக உள்ள பாரதி > புதுமைப்பித்தன் என்ற வரிசையை உருவாக்கியவர் தளையசிங்கம்தான் . அதற்குமுன்பு அந்த வரிசை அப்படியில்லை . நடுவேபலபெயர்கள் . கு ப ரா, பாரதிதாசன் என்று ஏராளமான பேர்கள் . புதுமைப்பித்தனில் உள்ள இலட்சியவாத அம்சம் தளையசிங்கத்தை கவர்ந்தேயிருந்தது. ஆனால் ஒரு புதுயுகத்தைக் கனவுகாணும் வலிமை பெரும் கலைஞனுக்கு இருக்கவேண்டுமென அவர் எதிர்பார்த்தார் .
வெங்கட் சாமிநாதன் : மோகன ரங்கன் கட்டுரையில் தளையசிங்கம் பேர்மனம் பற்றி சொல்லியிருப்பவையெல்லாம் வெறும் கனவுகளாக உள்ளன என்று சொல்வதை நான் ஏற்கிறேன் . பேர்மனம் என்றால் அவர் என்ன சொல்கிறார் என்று தெளிவாக புரியவில்லை . இன்றைய குழந்தையின் மனவளர்ச்சி நேற்றைய குழந்தையை விட மிக அதிகம் . இன்றைய வசதிகள் சூழல் கருவிகள் இதெல்லாம் பலமடங்கு அதிகம் .ஆனால் பேர்மனம் இதனால் உருவாகுமா ? இவை அளவுசார்ந்த வளர்ச்சிகள்.அது குணவயமான ஒரு வளர்ச்சி நிலை அல்லவா ? தளையசிங்கம் அதை எளிமைப்படுத்துகிறார் .அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக அதை உருவகிக்கிறார் . மனிதமனத்தின் உன்னத நிலைகள் பல சாத்தியம்தான் என நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவற்றுக்காக தேடி அவற்றை முயன்று அடையும் மனங்கள் சில மட்டுமே. ஏன் எப்படி அந்த தாகம் ஏற்படுகிறது என்றெல்லாம் விளக்கிவிடமுடியாது. அதை ஒருபோதும் அனைவருக்கும் உரிய ஒன்றாக மாற்ற முடியாது .அதை கற்பிக்கவோ பரப்பவோ முடியாது .தளைய சிங்கம் பேர்மனம் பற்றி சொல்லும்போது தாயத்து விற்பவனின் மொழியில் இதோ இதை வாங்கி கட்டிக் கொள் உனக்கு பேர்மனம் கிடைக்கும் என்பது போல பேசுகிறார் . அதற்கு யோக முறைகளையெல்லாம் சிபாரிசு செய்கிறார் .இதெல்லாம் எனக்கு மிக அபத்தமாகவே படுகிறது. ரஷ்யாவிலே கம்யூனிசம் ஸ்தாபித்தபோது சொன்னார்கள் உடைமை உணர்வில்லாத ஜனங்களை கல்வி மூலம் உருவாக்குவோம் என்று . என்ன ஆயிற்று ? இரண்டு தலைமுறை வந்ததே நடந்ததா ? அதைப்போலத்தான் இதுவும் .ஒரு கனவுக்கு ஏற்ப சமூகத்தை பயிற்றுவிக்கமுயற்சி செய்தால் நேர் எதிரான விளைவுகள் உருவாகும் அழிவுதான் ஏற்படும் .
ஜெயமோகன்: இங்கே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும் .தளையசிஙக்ம் புதுயுகத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய ஒரு சமுக்கசெயல்திட்டமாக முன்வைக்கவில்லை.அதை மானுடகுலத்தின் ஒரு பரிணாமகட்டமாகத்தான் குறிப்பிடுகிறார் .
மோகனரங்கன் : அன்னமய கோசம் ,பிராணமய கோசம் என்பதெல்லாம் தனிமனித உடல் சம்பந்தமானவை .அதை எப்படி சமூகத்துக்கும் சரித்திரத்துக்கும் போட்டு பார்க்கிறார் என்று புரியவில்லை .
வெங்கட் சாமிநாதன்: அவை சைவசித்தாந்தத்தின் கருத்துக்கள் ….
ஜெயமொகன்:இல்லை ,அது இந்திய சிந்தனைகளில் அனைத்திலுமே பழங்காலம் முதல் காணப்படும் கருத்துருவம் தான்.
வெங்கட் சாமிநாதன்: அப்படியா ?
சுவாமி வினயசைதன்யா: முதன்முதலாக உபநிஷதங்களில் இந்த உருவகம் வருகிறது .பிறகு எல்லா மரபுகளும் ஆயுர்வேதம் கூட இதை ஏற்றுக் கொண்டுள்ளன .
ஜெயமோகன் : மனித உடலையும் பிரபஞ்சத்தையும் ஒரே போல அளந்து வகுக்கும் மனப்போக்கின் விளைவு இது என ஊகிக்கிறேன் .மனிதன் என்பவன் பற்பல அடுக்குகளினாலானவன் .ஒன்று மனித உடல் .அது பருப்பொருளாலானது . அதுவே அன்னமய கோசம் .அதன் அடுத்த தளம் உயிர் .அது பிராணமய கோசம் . அதற்கடியில் மனம் இயங்கியபடியே உள்ளது .அது மனோமயகோசம் . அதற்கு அடியில் அம்மனையக்கத்தை அறியக்கூடிய ஒரு உட்பிரக்ஜை உள்ளது .அப்படியொன்று இருப்பதனால்தான் மன இயக்கத்தையே நம்மால் அறிய முடிகிறது .இதை ஆனந்தமயகோசம் என வகுக்கிறார்கள் .பலவிதமான வகைபாடுகள் உண்டு . யோகமரபின்படி மொத்தம் ஏழுவகையான தளங்கள் அடங்கியது மானுட இருப்பு . [அன்னம் ,பிராணன், அசுத்த மனம்,சுத்தமனம் ,அனந்தம், சின்மயம், சதானந்தம்,என ஏழு கோசங்கள் ] அந்த ஒவ்வொரு மனமும் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தளத்துடன் உறவு கொள்கின்றன என்று கருதினார்கள். அன்னம் அன்னமய உலகை அறிகிறது. பிராணன் பிராணமய உலகை. அவ்வாறு .அவ்வாறு பிரபஞ்சமும் ஏழுதளங்களாக உள்ளது என்றனர் . இங்கே மோகன ரங்கன் இம்மாதிரியான உருவகங்களை ஏற்க முடியாமலிருப்பதன் சிக்கலைப்பற்றி ச் சொன்னார்.இவற்றை உருவகங்களாக பார்க்காததன் பிரச்சினைதான் அது .ஆழ்மனம் , நனவிலி , தொல்படிமம் என்பதெல்லாம் கூட உருவகங்கள்தானே ? அவற்றை நாம் சாதாரணமாக கையாளவில்லையா ?
மோகனரங்கன் : என் பிரச்சினை அதுவல்ல. மரபான அர்த்தத்தில் இவற்றை புறவயமான கருதுகோள்களாக கருதவில்லை, அகவய உருவகங்களாகவே கருதுகிறார்கள் .அந்த அடிப்படையை எப்படி தளையசிங்கம் மாற்றிகிறார் என்பது தெளிவாக இல்லை என்பதே .
ஜெயமோகன்: தளையசிங்கம் இக்கருத்துக்களை பரிணாமத்தை விளங்கிக் கொள்ளும் ஒரு முறையாக பயன்படுத்துகிறார் . பூமியில் முதலில் உடல் உருவாயிற்று.பிறகு உயிர் .அதன் பின் மனம். இன்று மனதை மையமாக கொண்ட வாழ்க்கை இங்கு உள்ளது .இனி அழ்மனதை அல்லது மேல்மனதை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை உருவாகும் ஏன்கிறார் …..
வினயசைதன்யா: இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன் . உங்கள் தமிழ் பேச்சை நான் போதுமான அளவுக்கு பின்தொடரமுடியவில்லை . தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் அனுப்பிய குறிப்பை மட்டுமே நான் படித்துமுள்ளேன். உபநிடதத்தில் அன்னமய கோசம் பிராணமய கோசம் குறித்து வரும் இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது .வேதாந்த விவாதத்தில் இரு பெரும் தரப்புகளாக உள்ளது இது . பிருகுமுனிவரின் மகன் அவரிடம் மெய்மை என்றால் என்ன என்று கேட்கிறான் .அவர் ‘சென்று தவம் செய் ‘ என்கிறார் . அவன் தவம் செய்து அறிகிறான், உடலே மெய். அன்னம் அனத்தை உண்கிறது .அன்னத்தில் சேர்கிறது . ஆகவே அன்னமயகோசமே மெய் .அதை அவன் தந்தையிடம் சொல்லும்போது அவர் மேலும் தவம் செய் என்கிறார் . அவன் மேலும் தவம் செய்கிறான். அப்போது பிராணனே மெய் என உணர்கிறான் .அன்னமய உலகை இயக்குவது உயிரே . அதை அவன் தந்தையிடம் சொல்கிறான் . மேலும் தவம் செய் என்கிறார் தந்தை . அவன் தவம் செய்து மனமே மெய் என அறிகிறான் . அதை தந்தையிடம் சொல்ல அவர் மேலும் தவம் செய்ய சொல்கிறார் .இவ்வாறு அவன் நகர்ந்து சென்று மெய்யை அறிகிறான்.
இங்கு என்ன சிக்கல் வருகிறது என்றால் இந்த இடத்தை விளக்கியவர்கள் சிலர் ஆனந்தம் ஒன்றே மெய் என இது உணர்த்துவதாக பொருள் கொண்டனர். உடல் உயிர் மனம் முதலியவை திரைகளைப்போல என்றும் , அவற்றை ஒவ்வொன்றாக கிழித்து இறுதியில் உண்மையை சென்றடையவேண்டுமென்றும் சொன்னார்கள் . உண்மையில் பிருகு முனிவர் மகன் உடலை மெய் என அறிந்து வரும் போது அதை மறுக்கவில்லை .அப்படி மறுக்கும் சொல்லே உபநிடதத்தில் இல்லை . மேலும் போ என்று மட்டுமே சொல்கிறார் . இதை குறிப்பிட்டு சொல்லிய நாராயணகுரு அன்னமய கோசமும் பிராணமய கோசங்களும் எல்லாம் பொய்தோற்றங்களல்ல , அவை உண்மையின் மாறுபட்ட படிநிலைகள் மட்டுமே என்று சொன்னார் . உடலையும் பருப்பிரபஞ்சத்தையும் பொய் என நிராகரித்து அவற்றுக்கு அப்பால் உண்மையை தேடும் போக்கை அவர் ஏற்கவில்லை . தளையசிங்கம் எந்தப் போக்கை ஏற்கிறார் என்பதை கவனிக்கவேண்டும் ….
ஜெயமோகன்: என் வாசிப்பில் கிடைத்தவரை பார்த்தால் தளையசிங்கம் பருப்பொருளை நிராகரிக்கும் மாயவாதம் நோக்கிபோகவில்லை .
தேவதேவன்: சீர்திருத்தம் செய்ய முற்படுவதும் சரி , வாழ்க்கையைப்பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் பெரும் கனவுகளை உருவாக்கிக் கொள்வதும் சரி, ஆன்மீகத் தேடலுக்கு எதிரானவையே. நான் புரிந்துகொண்டவரை ஆன்மீகம் அடிப்படையில் ஒரு முடிவற்ற தேடலே . அது எதிலுமே முழு உறுதியும் திருப்தியும் கொள்வது இல்லை . தளையசிங்கம் என்ன செய்கிறார் ?பெரும் கனவுகளில் மூழ்குகிறார். சமூகத்தையும் வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிவிடும் முய்ற்சியில் ஈடுபடுகிறார் . யோசித்துப் பார்த்தால் இதற்குப்பின்னால் உள்ள அகங்காரம் என்ன என்று தெரியும் .அந்த அகங்காரம் ஆன்மீக தேடலுடையவனிடம் ஒருபோதும் இருக்காது .இதுதான் தளையசிங்கம் அடைந்த பெரியதடை என்று படுகிறது.
அன்பு வசந்த குமார் : அவருடைய இலக்கும் சரி ,வழிமுறையும் சரி ,மிக தூலமாக உள்ளன . அவற்றில் ஒரு யதார்த்தவாதியின் மனச்சித்திரம்தான் தெரிகிறது .அக்கனவின் வீச்சில்தான் கற்பனைபோக்கு உள்ளது . என் பார்வையில் அவரது முக்கியமான பிரச்சினையே அவரது அணுகுமுறையில் உள்ள முரண்பாடுதான்.அவர் பேசுவது மெய்யியல் விடுதலை பற்றி.ஆனால் அவர் அதற்குரிய வழிமுறையாக கருதியது அரசியல் .
தேவகாந்தன்: அவர் ஈழத் தேர்தல்களில் கூட பங்குபெற்றிருக்கிறார் ….
நாஞ்சில்நாடன்: ஆகவே தளையசிங்கம் ‘ ‘ ‘ ‘அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும் ‘ ‘ என்று மெய்யுளில் சொல்லும்போது நேரடியான அரசியலை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு . என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபட்டால் இன்னும் குழப்பம் தான் வரும் .அதற்கேற்ற தெளிவு அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை . இலக்கிய விவகாரங்களிலேயே பார்க்கிறோமே . எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மூலம் மறைமுகமாக கருத்தியல் சார்ந்து ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த முடியும் . அதுகூட எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது .தளையசிங்கம் சொல்லும் பலவிஷயங்கள் இப்படி வெற்றுக் கனவுகளாகவே உள்ளன.
மோகனரங்கன் :அந்தக் கனவுகளை அவர் கலையாக மாற்றியிருந்தால் அதன் மதிப்பே வேறு . அதைத்தான் நான் சொல்லவிரும்பினேன்.
இரவு பத்து மணிக்கு அமர்வை முடித்தோம் . குளிர் ஏறிவிட்டிருந்தது . ஆனால் அதன் பிறகும் அவரவர் அறைகளில் ஓரிருவராக கூடி அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் . கம்பிளி முதலியவை கிடைத்தனவா என்று கேட்க நான் அறைகளுக்குள் சென்ற போது நாஞ்சில்நாடன் , அன்பு வசந்தகுமார் ,தாமரை ஆறுமுகம் ,வேதசகாய குமார் ஆகியோர் ஒரு குழுவாகவும் தேவகாந்தன், வெங்கட்சாமிநாதன் ஆகியோர் தனியாகவும் , மோகனரங்கன் சூத்ரதாரி மற்ற இளைஞர்கள் தனிகுழுவாகவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன் . எல்லாருமே மிகவும் களைத்து போயிருந்தார்கள் .ஆனால் யாருமே தூங்க விரும்பவுமில்லை. காலையில் எழுந்து காலைநடை போகவேண்டும் என்று சொல்லி அவர்களிடம் தூங்குமாறு கேட்டுக் கொள்ளவேண்டியிருந்தது . இலக்கியவாதிகளுக்கு ஒருபோதும் பேசி அலுப்பதில்லை .
[இரண்டாம் நாள் அமர்வு தொடரும்]