தஸ்தயேவ்ஸ்கி இரு கடிதங்கள்

idiaa

ஜெமோ,

 

ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு நாவலின் பாதிப்பகுதியைக் கடந்திருக்கிறது தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’.  அந்த ஒரு கதாபாத்திரத்தை, நீ யார்? உன் பெயர் என்ன? என்று கேட்பதற்குக் கூட யாருமில்லாமல் கதைசொல்லியான நானொருவனே போதுமென்ற இறுமாப்புடன் படைக்கப்பட்டிருக்கிறது இக்குறுநாவலின் முதல் பகுதி. படைப்பூக்கத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு படைப்பாளியின், அன்றாடங்களைப் பற்றிய நுண்ணிய அவதானிப்பாகத்தான் இந்நாவலை நான் கருதுகிறேன்.

 

 

 

ஆரம்பித்து முற்றுப் பெறாமலேயே சென்று கொண்டிருக்கும் கதைசொல்லியின் சொல்லாடல்களில் நம்மை அறியாமலே நாமும் ஒரு கதாபாத்திரமாக மாறுவது தான் இந்நாவலாசிரியனின் வெற்றி. ஒரு வாசகனாக நாமும் இங்கே வெற்றியடைகிறோம். தஸ்தயேவ்ஸ்கி சித்தரிக்கும் அன்றாட மனிதர்களின் உளச்சிக்கல்களை எந்த விதச் சிக்கலுமில்லா மொழி நடையில் தெளிந்த நீரோடை போல நமக்கு கடத்தியிருக்கிறார் எம். ஏ. சுசீலா அவர்கள். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்கள்,  மூலநாவலைப் பற்றிய மொழிபெயர்ப்பாளரின் அவதானிப்பாகவோ அல்லது விமர்சனமாகவோ தொனிக்கும் வாய்ப்பு அதிகம். இதை மிக கவனமாக எம்.ஏ.சுசீலா அவர்கள் தவிர்த்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. மூலநாவலில் தஸ்தயேவ்ஸ்கி மறைந்திருப்பதுபோல, மொழிபெயர்ப்பில் சுசீலா அவர்களும் மறைந்தே இருக்கிறார்.

 

 

 

ஒரு நுண்ணணர்வு கொண்ட மனிதன் அன்றாட மனிதர்களின் உணர்வுகளோடு தன்னை எப்படி பொருத்திப் பார்த்துக் கொள்கிறான் என்பதாகவே இந்நாவலின் முதல்பகுதி முழுதும் நகர்கிறது. தன்னை அதிபுத்திசாலியாகவும், சுயமரியாதையோ அல்லது சுயவெறுப்போ இல்லாத சமநிலையில் இருப்பவனாகவும், அதுவே தன்னை செயலின்மைக்கு கொண்டு செல்வதாகவும்  கருதிக் கொள்கிறான். ஆனால் அதே சமயத்தில் நான் சோம்பித் திரிபவனும் இல்லை என்கிறான். செயலூக்கத்தின் உச்சமாகிய செயலின்மையா இது?

 

 

 

“இங்கு இயல்பானவர்களெல்லாம் இயற்கைக்கு பிறந்தவர்கள் போலும். என்னைப் போன்ற நுண்ணுணர்வுள்ளவர்கள் சோதனைக் குழாய்க்குத்தான் பிறந்தவர்கள் போலும்” என்ற கதைசொல்லியின் சொல்லாடல் நம்மை உயர்த்துவது போலிருந்தாலும் அதைத் தொடரும் “புத்திசாலிகள் எல்லாம் மந்த புத்திக்காரர்கள்” என்ற சொல்லாடல் அன்றாடங்களை நுண்பகடி செய்கிறது.

 

 

இது தான் என்று அறுதியிட்டு கூறிவிடமுடியாததே மனித மனம்.  அப்படி அறுதியிட்டு கூறிய மறுகணமே அதைப் பொய்யாக்குவதற்கான முயற்சியில் இறங்கிவிடும் வினோத குணம் கொண்டது மனித மனம். இந்த வினோத குணம்தான் மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது போலும். விஞ்ஞானம், பகுத்தறிவு முதலியன சொல்பவற்றை  புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றுவிட்டாலும், அதை ஒத்துக் கொள்ளும் பக்குவமோ அறிவோ இல்லாத ஆதிமனநிலையிலேயே நாம் இன்னும் இருக்கிறோம் என்கிறது நாவல். நுண்ணர்வு கொண்டவர்கள் தன்னிலுள்ள இப்பக்குவமற்ற மனநிலையை வெளியிலிருந்து காணும் சாட்சியாக இருக்கிறார்கள். இந்த மீறல்களைக் கண்டு ஆச்சரியமோ அச்சமோ கொள்ளாமல் கடந்து முழுமையை நோக்கி பயணிக்கிறார்கள். இது தான் இந்நாவலின் முதல்பகுதி வழியாக எனக்கு கிடைத்த தரிசனம். இதை எனக்கு  சாத்தியப்படுத்திய சுசீலா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 

 

அன்புடன்

முத்து

 

வணக்கம் சார்..

 

தஸ்தாயெவ்ஸ்கியின் தமிழ் குரல் என்ற நிகழ்வு நடைபெற இருக்கும் இவ்வேளையில் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன்..

 

அசடன் நாவலை பற்றி நான் எழுதிய வாசிப்பு அனுபவம் தங்கள் பார்வைக்கு..

 

அன்புடன்

தேவராஜ் விட்டலன்..

 

அசடன் வாசிப்பு தேவராஜ் விட்டலன்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-14
அடுத்த கட்டுரைகவிதை மொழியாக்கம் -சீனு