வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-2

wild-west-clipart-rodeo-3பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள் அமையும் அப்பெருவிரிவின் அலையற்ற காலத்தை அதன் சித்தம் உணர்ந்தது. தன் சிறகுகளால் அக்காலத் தேங்கலை அசைக்கமுடியும் என்று கண்டுகொண்டது. சிறகசைவை எண்ணி காலத்தை கணக்கிடத் தொடங்கியதும் தயங்கியபடி பிரிவின்மையிலிருந்து முக்காலம் சொட்டி வடிந்து அதை வந்தடைந்தது. அதன் ஊசலில் முடிவிலாது ஆடியது பிரபாவன்.

புவிக்குமேல் அசைவென எஞ்சியிருந்தது பிரபாவனின் சிறகுகள் மட்டுமே. புவியில் இருப்பென எஞ்சியிருந்தது தியானிகனின் உள்ளம். ஆயிரமாண்டுகளுக்கொருமுறை மண்ணில் இறங்கி வந்து தியானிகனைக் கண்டு ஒன்றும் நிகழவில்லை என்பதைச் சொல்லி மீண்டது பிரபாவன். பின்னர் ஒன்றும் நிகழவில்லை என்னும் செய்தியாகவே அதன் உடல் அமைந்தது. குறையாது தவம்கொள்ளும் நிலைகொண்டிருந்தது தியானிகன். சலிக்காது செயல்கொள்ளும் விசை கொண்டிருந்தது பிரபாவன். எண்ணங்களை அவியாக்கி வேள்வி இயற்றியது தியானிகன். அதன் காவலன் என்று பிரபாவன் அமைந்தது.

எங்கு தவமும் செயலும் முற்றிணைகின்றனவோ அங்கே தெய்வமொன்று எழுகின்றது. புவியில் அன்று எஞ்சியது அவர்களின் கூட்டில் முகிழ்த்த தெய்வம் மட்டுமே. ஹவனை என்னும் அத்தெய்வம் ஒவ்வொரு கணமும் நாளும் ஆண்டுமென வேள்விக்கொடை பெற்று வளர்ந்தது. பேருருக்கொண்டு எழுந்து விண்ணுலகை அடைந்தது. அங்கே இந்திரனின் நகரில் அழகிய இளநங்கை எனச் சென்று நின்றது. தழல்போல் சுடர்விட்ட ஆடையணியற்ற உடலுடன், இடக்கையில் செந்தாமரையுடன், வலக்கையில் ஏந்திய வெண்சங்கை ஊதியபடி அமராவதியின் தெருக்களினூடாகச் சென்று அவன் அவையை அடைந்தது.

ஓமென்ற ஒலியுடன் அவைபுகுந்த அப்புதிய தெய்வத்தைக் கண்ட இந்திரன் திகைப்புடன் எழுந்து “அழகியே, நீ யார்?” என்று கேட்டான். “ஹவனை என்ற பெயர்கொண்ட நான் மண்ணில் தியானிகன் என்னும் சிறுபுழுவின் நாவில் எஞ்சிய இறுதிச்சொல் ஒன்றில் சிறு ஒலித்தாதுவென இருந்தவள். ஊழ்கம், கலை, எண்ணம், எழுத்து என நான்கு கைகள் கொண்டு அமைந்த சொல்தெய்வதத்தின் மகள். விண்ணில் பறந்தலையும் பிரபாவன் என்னும் பறவையின் சிறகின் ஒரு பிசிறு என பருவடிவுகொண்டேன். தியானிகனின் சித்தவேள்வியின் அவிபெற்று வளர்ந்தெழுந்தேன். பிரபாவனின் விழிப்பால் பேணப்பட்டேன். மண்ணின்பொருட்டு முடிவிலா விண்ணைக் கூவி அழைப்பது என் பணி” என்றாள் ஹவனை.

“எதற்காகக் கூவி அழைக்கிறாய்? எதன்பொருட்டு நீ இங்கு வந்தாய்?” என்று இந்திரன் கேட்டான். “அரசே, மண்ணில் வாழ்க்கை நின்றுவிட்டது. செயல்கள் அறுந்தன. செயல்திரண்டு கூர்கொள்வதே வேள்வி என்பதனால் அவிகொண்டு வாழும் தெய்வங்கள் மழையின்றி கருகியழியும் புல் என வேரின் காத்திருப்பு மட்டுமாக எஞ்சிவிட்டன. மண்ணில் கைவிடப்பட்டுள்ள இறுதிச் சித்தம் ஒன்றின் அழைப்பு நான். மண் அழிந்தால் அங்கு முளைத்த தெய்வங்களும் அழியும் என்று கொள்க! ஒரு தெய்வத்தின் அழிவென்பது தெய்வங்களாலான மாபெரும் நெசவாகிய விண்ணின் அழிவின் தொடக்கமே என்றுணர்க! தீர்வுதர வல்லோர் அதை கேட்குமாறாகுக!” என்றாள் ஹவனை.

இந்திரன் நாரதரிடம் “விண்ணுலாவியான மாமுனிவரே, அனைத்துலகுகளையும் அறிந்தவர் நீங்கள். அங்கு என்ன நிகழ்கிறதென்று அறிந்து வருக!” என்றான். “அவ்வண்ணமே” என வணங்கி எழுந்த நாரதரை தன் கையில் ஒரு கணையாழி என அணிந்துகொண்டு ஹவனை விண்நகரில் இருந்து இறங்கினாள். பொன்னொளிகொண்ட முகில் என அவள் விண்ணில் பறந்துகொண்டிருந்த பிரபாவன் முன் தோன்றினாள். அவளிலிருந்து ஓர் ஒளித்துளி என எழுந்த நாரதர் “பறவையே, நீ விழைவதென்ன?” என்றார். “நான் கிளையின் இலை, முனிவரே. என் பொருட்டு தவமியற்றும் வேரை சந்தியுங்கள்” என பிரபாவன் அவரை மண்ணுக்கு அழைத்துவந்தது.

தன்முன் காலைவெயிலில் ஒளிகொண்ட பனித்திரள் ஒன்று வந்தமைவதைக் கண்டு தியானிகன் எழுந்தது. அருகே வந்த அப்பொன்னிறச் சுருளில் இருந்து எழுந்த நாரதர் “உங்கள் தவம் நிறைவுறுக! உங்கள் தெய்வம் என்னை விண்ணிலிருந்து அழைத்துவந்தது. உங்கள் வேள்விக்காவலரால் இங்கு கொண்டுவரப்பட்டேன்” என்றார். கைகூப்பி உடல்பணிந்து ஹவனையை வணங்கிய தியானிகன் “உன் அளியால் காக்கப்பட்டேன், என் தெய்வமே. என்னில் எழுந்தவள் என்றாலும் இப்புவியைக் காப்பவளாக நீ அமைக! நானும் என் கொடிவழியினரும் அளிக்கும் அவிபெற்று நீ முடிவிலாது வளர்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றது.

பின்னர் நாரதரிடம் “இசைமுனிவரே, இங்கு புவியிலிறங்குகையிலேயே வேறுபாட்டை உணர்ந்திருப்பீர்கள்” என்று சொன்னது. “ஆம், இங்கு அனைத்து ஒலிகளும் முற்றிலும் ஒத்திசைந்துள்ளன. எனவே எங்கும் இசை எழவேயில்லை” என்றார் நாரதர். “இசை என்பது அமைதியின் ஒலிவடிவம். அமைதி தன்னை வெளிப்படுத்த முடிவில்லாத ஒலிவேறுபாடுகளை ஆள்வதன் விளைவு அது. ஒலிகள் வேறுபாடழிந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அமையும் வெறுமையில் அமைதி தன்னை இன்மை என வெளிப்படுத்திக்கொள்கிறது.”

“ஆம், ஏனென்றால் இங்கு உயிர் இல்லையென்றாகிவிட்டது” என்றது தியானிகன். “ஏன்?” என்றார் நாரதர். “ஏனெனில் இறப்பு இங்கு நிகழாதொழிந்துள்ளது” என்றது தியானிகன். “அறமும் காலமும் அழிந்துவிட்டன. அனைத்தும் மண்ணுடன் படிந்து இன்மைசூடியிருக்கின்றன.” நாரதர் “எவ்வண்ணம் இது நிகழ்ந்தது?” என்றார். “அறியோம். தன் இருண்ட ஆழங்களில் தென்றிசைத்தெய்வமான யமன் தொழிலியற்றாது அமைந்துவிட்டார் என்று எண்ணுகிறேன். அவருக்கு என்ன ஆயிற்று என்று சென்று உசாவியறிய திசையுலாவியான உங்களால் மட்டுமே இயலும்” என்றது தியானிகன்.

“அங்கு சென்று கருங்காலவடிவரை காணுங்கள், மெய்யறிவரே. அவரை உங்கள் சொற்களால் மீட்டெடுங்கள். மண்ணுலகில் கோடிமுகம் கொண்டு பெருகிப்பரந்திருக்கும் உயிர்க்குலத்தின் மன்றாட்டை முன்வையுங்கள். விழிநீருடன் கைநீட்டி அவரிடம் இறைஞ்சுகிறோம். தேவா, கருணைகொண்டு இறப்பை எங்களுக்கு மீண்டும் அளியுங்கள். எந்த அமுது இங்கே உயிர்பெருகச் செய்ததோ அதை மீண்டும் கனிந்தருளவேண்டும். எதன் மேல் இங்கு அத்தனை நெறிகளும் அமைந்ததோ அதை எங்களுக்கு மறுக்கலாகாது. நாரதரே, எங்கள் கண்ணீரை சென்றுரையுங்கள். எங்கள் அடைக்கலம்கோரலை தெரிவியுங்கள். எங்கள் முதல்மூதாதைத் தெய்வமென்று அமர்ந்தவரிடமன்றி நாங்கள் எவரிடம் செல்வோம்?”

“காலம் சமைத்து, அதன் கணுக்களென சித்தம் ஒருக்கி, இப்புவிக்குப் பொருள் அளித்த சாவு எனும் பேரருளை எங்களுக்கு மறுத்தால் இங்கு இதுவரை இயற்றப்பட்ட அனைத்தும் அறுபட்டு அழியும். முழுமையடையாத எதுவும் முற்றிலும் பொருளற்றதே என்பது அவர் அறியாதது அல்ல. எதன்பொருட்டு பிரம்மனால் இப்புவி படைக்கப்பட்டதோ அந்நோக்கத்தை முறிக்கவேண்டாம் என்று சொல்லுங்கள். எந்த ஆணையின்படி செயல்கள் வேள்விகளாகி தேவர்கள் எழுந்தனரோ அந்த ஆணையை மறுக்கவேண்டாமென மன்றாடுங்கள். எங்கள் நாவென அங்கு சென்று நில்லுங்கள். உயிர்க்குலங்களின் பொருட்டு உங்களிடம் அடிபணிந்து மன்றாடுகிறேன்” என்றது தியானிகன்.

“ஆம், அது என் கடமையே” என்றார் நாரதர். “ஆனால் நான் செல்லும் வழி பாதுகாக்கப்படவேண்டும். இவள் என்னை கொண்டுசெல்லும் ஊர்தியாகவேண்டும். அறிக, இந்திரன் உலகுக்குச் செல்வதிலும் பன்னீராயிரம் மடங்கு ஆற்றல் தேவை இருளுலகுக்கு அமிழ. ஏழு உலகங்களிலும் நிலைபிறழாது செல்வதற்கு அசைவில்லா துலாமுள் அமையவேண்டும். இரு தட்டுகளும் பேரெடை கொண்டாலொழிய அது நிகழ்வதில்லை” என்று நாரதர் சொன்னார். தியானிகன் “நான் என்ன செய்யவேண்டும், முனிவரே?” என்றது.

“இப்புவியிலிருந்து சித்தவேள்வியின் அவி இவளுக்கு வந்துகொண்டே இருக்கவேண்டும்” என்றார் நாரதர். “புவியில் இப்போது அனைவரும் இன்மையென அமைந்துள்ளனர், முனிவரே” என்றது தியானிகன். நாரதர் “உம்முள் எழுந்துள்ள விழைவை அவர்களுக்கு பகிர்ந்தளியும். அவர்கள் தன்னுணர்வுகொண்டு சித்தம் அசையப்பெறுவார்கள். அனைவரும் சேர்ந்தளிக்கும் சொற்களின் அவி இவளுக்கு உணவாகுக!” என்றார். “உம் குலத்தை எழுப்புக. அவர்கள் சுண்டும் விரல்களென்றாகி பிற உயிர்க்குலங்களை தொட்டெழுப்புக!”

“அவ்வாறே” என்றது தியானிகன். “அறிக, நோயின் தெய்வமாகிய வியாதிதேவியும் மூப்பின் தெய்வமாகிய ஜரைதேவியும் ஒவ்வொரு உயிருக்கும் அருகே காத்திருக்கிறார்கள். சித்தமயக்கின் தெய்வமாகிய உன்மாதையும் வலியின் தெய்வமாகிய பீடையும் வியாதியன்னையின் மகள்கள். மறதியின் தெய்வமாகிய விஸ்மிருதியும் அச்சத்தின் தெய்வமாகிய பீதியும் அழுகையின் தெய்வமாகிய ரோதனையும் ஜரையன்னையின் குழவிகள். உயிர்க்குலங்களில் துன்பத்தை நிறைப்பவர்கள் அவர்கள். இறப்பின் தெய்வமாகிய மிருத்யூ அவர்கள் எழுவரை புரவிகளெனப் பூட்டிய கரிய தேரிலேறி செந்நிறக் குழல் பறக்க கரிய முகத்தில் கண்கள் கனல உயிர்களை அணுகுகிறாள்.”

“அறிக, தன்னுணர்வினூடாகவே அவர்கள் உடல்புகுந்து உள்ளத்தை கைப்பற்ற முடியும். நீர் உம் குடியினருக்கும் உயிர்களுக்கும் இருப்புணர்வை அளித்ததுமே ஏழன்னையரும் பேருருக்கொண்டு கோடி கண்களும் கோடானுகோடி உகிர்விரற்கைகளும் நாக்கொடுக்குகளும் நச்சுப்பற்களும் பூண்டு நகைத்தபடியும் உறுமியபடியும் கனைத்தபடியும் பெருகிச்சூழ்ந்து நிறைவார்கள். ஒவ்வொரு கணமும் பெருந்துன்பமே உயிர்க்குலத்தை ஆளும். அதை ஏற்று உளம்தளராது நின்று சொல்லளித்து இவளை விசைகொள்ளச் செய்யவேண்டும் நீங்கள்.”

தியானிகன் “ஆம், அதை செய்கிறோம். எங்களுக்கு வேறுவழியில்லை” என்றது. “அவ்வாறே ஆகுக!” என நாரதர் சொல்லளித்தார். பின்னர் ஹவனையிடம் “என்னை ஏழாமுலகுக்கு அழைத்துச்செல், தேவி. குன்றாது அவி வருமென்றால் உன்னால் எங்கும் செல்லமுடியும். உன் பயணம் வெல்லும்பொருட்டு இவர்கள் இங்கு இயற்றும் தவம் வெல்க!” என்றார்.

wild-west-clipart-rodeo-3பன்னீராயிரமாண்டுகாலம் நாரதர் ஹவனையின் மேலேறி ஆழுலகங்களுக்குள் சென்றுகொண்டிருந்தார். மண்ணுலகில் அனைத்துப் புழுக்களும் தன்னுணர்வு கொண்டன. அக்கணமே அவற்றை வியாதியும், ஜரையும் தங்கள் மகள்களுடன் வந்து பற்றிக்கொண்டனர். வலிகொண்டு துடிப்பதற்கு என்றே அமைந்த உருக்கொண்ட புழுக்கள் பெருகிப்பரவி மண்ணை நிறைத்தன. அங்கிருந்த அனைத்து உயிர்களையும் அவை தொட்டெழுப்பின. எங்கும் பெருந்துன்பம் நிறைந்தது. பெருவலியில் எழும் கதறல்களும் அழுகைகளும் அவை ஓய்ந்தெழும் முனகல்களுமாக புவி முழங்கிக்கொண்டிருந்தது. விண்ணிலிருந்து நோக்கிய தெய்வங்கள் அதை ஒரு தேன்கூடென உணர்ந்தன.

அதலம், விதலம், சுதலம், தலாதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் என்னும் அடுக்குகளைக் கடந்து பாதாளத்தின் மையச்சுழி என்றமைந்த யமபுரியைச் சென்றடைந்தார் நாரதர். ஒவ்வொரு தளத்திலும் எதிர்கொண்ட பெருந்தடைகளை மண்ணிலிருந்து வந்த அவியின் ஆற்றலால் ஹவனை வென்றாள். வலியின் அசைவுகளே முத்திரைகளாக, துன்ப ஒலியே வேதச்சொற்களாக, விழிநீரே அவியாக பெருவேள்வி ஒன்று நிகழும் வேள்விச்சாலையாக இருந்தது புவி. தொலைவில் யமபுரியைக் கண்டதும் நாரதர் பெருமூச்சுவிட்டு “வந்தடைந்துவிட்டோம். இத்தனை பெருந்துயருடன் உயிர்க்குலம் எதையும் கோரியதில்லை” என்றார்.

ஆயிரம் யோசனை அகலம் கொண்ட ஆழிவடிவப் பெருநகர் அது. நான்கு திசைகளுக்கும் பெருவாயில்கள் அமைந்திருந்தன. மீளா பயணத்தால் வந்தணையும் உயிர்கள் தெற்கு வாயிலின் வழியாக கரிய பெருநதிபோல உள்நுழைந்தன. அங்கே சித்ரபுத்திரனின் காகக்கொடி பறக்கும் மாளிகை அமைந்திருந்தது. அங்குள்ள நூறாயிரம்கோடி யமர்கள் இறப்பின் கணக்குநோக்கி அவர்களை தனித்தனியாகப் பிரித்து உள்ளே அனுப்பினர். ஒவ்வொருவரும் அங்கேதான் அவர்கள் செய்தவை என்னென்ன என்று ஒட்டுமொத்தமாகக் கண்டனர். “இல்லை, அது நானல்ல!” என்ற அலறல் ஒவ்வொரு நாளும் அங்கே எழுந்துகொண்டிருந்தது. இழுத்துக் கொண்டுசெல்லப்படுகையில் ஒவ்வொரு காலடியாக தளர்ந்து பின் நிலம்தொட விழுந்து “ஆம், அது நானே” என்று விம்மினர்.

அந்நகருக்குள் நுழைந்தவர்கள் உருமாறி அங்குள்ள பொருட்களென்றாயினர். பொறுப்பிலாதலைந்தவர்கள் கோட்டைச்சுவரில் கற்களாயினர். ஒழுங்கிலாதிருந்தவர்கள் இல்லங்களின் செங்கற்களாக அடுக்கப்பட்டனர். அளிக்காதவர்கள் தூண்களென்றாயினர். உதவாதவர்கள் படிகளாயினர். ஆட்சி செய்தவர்கள் அடித்தளக் கற்களாயினர். தன்னை எண்ணி தருக்கியவர்கள் மணற்பருக்களாயினர். தனித்தலைந்தவர்கள் குவைகளென்றமைந்திருந்தனர். ஒவ்வொருவரும் அவ்வாறு அமைவதற்கு முன் “எத்தனை காலம்?” என்றே இறுதியாக வினவினர். “முடிவிலிவரை” என்ற சொல் அவர்கள் உளம்போழ்ந்துசெல்லும் இரக்கமற்ற வாளென்று எழுந்தது.

யமபுரியின் கிழக்குவாயில் மூன்றுதெய்வங்களுக்கு மட்டுமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே யானைத்தலைகொண்ட எண்ணாயிரம் காவலர் நின்றிருந்தனர். திசைக்காவலர் உள்ளிட்ட தேவர்களுக்கு வடக்கு. அங்கே பன்னிரண்டாயிரம் காவலர் பன்றித்தலையுடன் நின்றிருந்தனர். இறவாமை எனும் அருள் பெற்ற மாமுனிவர்களுக்கு மேற்கு. அங்கே எருமைத்தலையர் இருபத்துநாலாயிரம்பேர் காத்து நின்றனர். அம்மூன்று வாயில்களும் பெரும்பாலும் திறக்கப்படுவதேயில்லை. ஏனென்றால் ஆழுலகைக் கடந்து அங்குவரும் எவரும் ஒவ்வொரு அடிவைப்பிலும் தங்கள் தவத்தை இழந்துகொண்டிருக்கவேண்டும் என்பதே நெறி.

நகரைச் சூழ்ந்திருந்த பெருங்கோட்டை வெப்பமும் தண்மையும் ஒருங்கே கொண்டதெனத் தோன்றி தொட்டவரை எரிக்கும் இரும்பாலானது. இருளும் ஒளியும் ஒருங்கே அமைந்ததுபோல் கரிய மின் கொண்டிருந்தது. அதற்குள் செம்பாலான உட்கோட்டையும் நடுவே வெள்ளியாலான அரண்மனைக்கோட்டையும் அமைந்திருந்தன. சகஸ்ரபத்மம் என்னும் பொன்மாளிகை ஒரு மையத்தாமரை என தன்னுள் இருந்து எடுத்த ஒளியால் நடுவே பொலிருந்திருந்தது. ஆயிரம் இதழ்களாக குவைக்கோபுரங்கள் கொண்டிருந்தது. பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் பதினெட்டாயிரம் வாயில்களும் கொண்டிருந்தது. அதன் உச்சியில் காகக்கொடி பறந்தது.

ஒன்றுக்குள் ஒன்றென்று அமைந்த நூற்றெட்டு தெருக்களால் ஆனது காலபுரி. முதல் தெருவில் பன்னிரண்டாயிரம் இல்லங்களில் காய்ச்சலின் தெய்வமான ஜ்வரை, வலிப்பின் தெய்வமான அபஸ்மாரை, புண்ணின் தெய்வமான க்ஷதை முதலான தெய்வங்கள் தங்கள் பல்லாயிரக்கணக்கான படைக்கணங்களுடன் வாழ்ந்தன. அதற்கடுத்த தெருவில் சினத்தின் தெய்வமான குரோதை, வஞ்சத்தின் தெய்வமான பிரதிகாரை, வெறுப்பின் தெய்வமான விரோதிதை முதலிய பதினொன்றாயிரம் தெய்வங்கள் தங்கள் எண்ணற்ற ஏவலர்களுடன் வாழ்ந்தன. தொடர்ந்தமைந்த தெருவில் ஸ்கலிதை, விஃப்ரமை, தோஷை முதலிய பிழைகளின் தெய்வங்கள் பத்தாயிரம் இல்லங்களில் குடியிருந்தன.

யமன் தன் மாளிகையின் மையத்தில் அமைந்த பேரவையில் தன் பட்டத்தரசி தூமோர்ணையுடனும் அப்பிராப்தி, சியாமளை, இரி என்னும் இணையரசியருடனும் அரியணை அமர்ந்து ஆட்சிசெய்தான். அவன் அவையில் அறமறிந்த முனிவர்கள் பதினாறாயிரம்பேர் காகபுசுண்டரின் தலைமையில் அமர்ந்து நாளும் நெறிதேர்ந்தனர். மண்ணில் அறம்பிழைக்கும் ஒவ்வொரு முறையும் அதை ஒரு பறவைக்குரல் அங்கே கூவியறிவித்தது. பேரழிவு நிகழ்கையில் விண்ணில் ஒரு குருதியொளிகொண்ட மீன் எழுந்தது. அவைமுதல்வனும் படைமுதல்வனும் இறக்கும்போது சங்கொலி எழுந்தது. அந்நகரின் ஒவ்வொரு மணற்பருவிலிருந்தும் எண்ணத்தால் தன் வடிவேயான ஓர் உருவை உருவாக்கி மண்ணுக்கு அனுப்பி அறத்தை ஆண்டான் யமன்.

யமபுரியின் மேற்குவாயிலை அடைந்த நாரதர் அங்கிருந்த எருமைத்தலைக் காவலர்களால் தடுக்கப்பட்டார். “இவ்வழியே எவரும் வருவதில்லை. இதைத் திறக்க அரசரின் ஆணை தேவை” என்றார் காவலர்தலைவராகிய நியமர். “என் வழியை எவரும் தடுக்கவியலாது” என்று நாரதர் முன்னால் சென்றார். அவரை ஏந்திச்சென்றிருந்த ஹவனை அனலுருக்கொண்டாள். அவ்வனல் தாளாமல் எருமைத்தலையர் அப்பால் விலகி கூச்சலிட்டனர். ஹவனை யமபுரியின் மேற்குக் கோட்டையின் வாயிலை உருக்கி அழித்தாள். அதனூடாக நாரதர் உள்ளே நுழைந்தார்.

அவர் அணுகுவதை ஏவலர் வந்துசொல்ல காகபுசுண்டரின் ஆணைப்படி அவரை அரசவைக்கு கொண்டுசென்றனர். வழியெங்கும் அப்பெருநகரம் செயலின்மையில் சோர்ந்து நிழலசைவு என இயங்கிக்கொண்டிருப்பதை நாரதர் கண்டார். எவரும் எவரிடமும் பேசவில்லை. ஒருவர் விழியை பிறர் நோக்கவுமில்லை. ஒவ்வொன்றும் முன்னரே நிகழ்ந்ததன் மறுநிகழ்வு என உயிரற்றிருந்தன.

அவைமுகப்பில் அவரை எதிர்கொண்டு வணங்கிய காகபுசுண்டர் “எவ்வண்ணம் இங்கு வந்தீர், நாரதரே?” என்றார். “இங்கு எவரும் வரலாகாதென்று தடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இங்கு வந்து நோக்கியபின் எங்கும் எதிலும் எப்பொருளையும் காணவியலாது. இங்கன்றி எங்கும் பின்னர் வாழவும் இயலாது.” நாரதர் “ஆம், ஆயினும் நான் வரவேண்டியிருந்தது. புவியின் உயிர்க்குலங்களின்பொருட்டு மட்டும் அல்ல. புவியென்று எழுந்த பெருவிளையாடலின் பொருட்டும்கூட” என்றார். “என்னை இங்குவரை கொண்டுசேர்த்தது மண்ணில் நிகழும் பெருவேள்வியின் அவிப்பயனே.”

காகபுசுண்டர் “ஆம், எங்கோ ஒரு பெருவேள்வி நிகழ்கிறது என்று உணர்கிறேன். இங்கு எங்கும் இளமஞ்சள் ஒளியும் இனிய இசையும் நறுமணங்களும் நிறைந்துள்ளன” என்றார். “அவ்வேள்வி புவியில் நிகழ்கிறது. வேள்விகளில் தலையாயது அது. யாதனா யக்ஞம் என அதை சொல்கின்றனர் முனிவர். ஒவ்வொரு உடலணுவிலும் பெருவலியை நிறைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலத்துளியையும் துயரென்றே உணர்ந்தபடி, கண்ணீரும் அலறலுமாகச் செய்யும் வேள்வி அது. நோயுற்ற உடல்கள் அதை இயற்றுகின்றன. நலிந்து இறக்கும் உயிர்கள் அதனூடாகவே விடுதலை பெறுகின்றன. முனிவரே, இப்போது புவியின் உயிர்க்குலமே அதை அங்கே செய்துகொண்டிருக்கிறது.”

“நோக்குக!” என்று நாரதர் கைகாட்ட காகபுசுண்டர் மண்ணுலகை தன் அகவிழியால் கண்டார். அங்கே ஒவ்வொரு உயிரும் தன்னுடலை தானே ஒடுக்கி உச்ச வலியில் துடித்துக்கொண்டிருந்தது. நெரிபட்ட பற்கள், இழுபட்டு முறுகிய நரம்புகள், அதிரும் தசைநார்கள், இறுகப்பற்றிய கைகள், நீர்கோத்த சிவந்த விழிகள், நீலம்பாரித்த தோல்கள். “பெருந்துயர்!” என காகபுசுண்டர் சொன்னார். “ஏனென்றால் அங்கே இறப்பு இல்லாமலாகிவிட்டிருக்கிறது. யமன் அந்த அமுதக்கொடையை நிறுத்திவிட்டிருக்கிறார். அவரைக் காணவே வந்தேன்” என்றார் நாரதர்.

“ஆம், இங்கே அறச்செயல்கள் நின்றுவிட்டிருக்கின்றன. அதில் நாங்கள் செய்வதற்கேதுமில்லை. நாங்களும்  தெய்வங்களேதும் தலையிடவேண்டுமென்று எண்ணியிருக்கிறோம்” என்றார் காகபுசுண்டர். அங்கு நிகழ்வதென்ன என்று விளக்கினார். நெடுங்காலமாக அரசரில்லாமல் அவை ஒழிந்துகிடந்தது. பெருநகர் புதிய ஆணைகள் இல்லாமல் ஆற்றியதையே மீண்டும் மீண்டும் இயற்றிக்கொண்டிருந்தது. மையச்செயல் நின்றுவிட்டபோது அங்குள்ள ஒவ்வொன்றும் இலக்கழிந்தது. ஒவ்வொருவரும் இருப்பிழந்தனர்.

“தென்றிசையில் முஞ்சவான் என்னும் மலையின் உச்சியில் சென்றமர்ந்து மூவிழியனை தவம்செய்துகொண்டிருக்கிறார் அரசர். அங்கே எவர் செல்வதையும் அவர் விரும்பவில்லை. தன்னந்தனிமையில் தன் கைகளால் உருவாக்கிய சிவக்குறியை ஒழியா உளச்சொல்லால் வழிபட்டபடி அமர்ந்திருக்கிறார். அவரை அரசியர் கண்டே நெடுங்காலம் ஆகின்றது. அன்றுமுதல் இறப்புச்செயல் நிலைத்துவிட்டது” என்று காகபுசுண்டர் சொன்னார்.

நாரதர் “நான் அங்கு சென்று அரசரைக் கண்டு பேசவிழைகிறேன்” என்றார். “மூன்று முதன்மைத் தெய்வங்களில் ஒன்றே அங்கே செல்லமுடியும். அதிலொன்று எழுந்தருளும் என்று எண்ணினேன்” என்றார் காகபுசுண்டர். “அதிலொன்றின் ஆடல்போலும் இது. ஆடும் அனைவரும் அவனே” என்றார் நாரதர். “அங்கு செல்லும் வழியெல்லாம் தடையென அரசரின் காவல்பூதங்கள் உள்ளன, முனிவரே” என்றார் காகபுசுண்டர், “அவற்றைக் கடக்கும் வழியை நானும் அறியேன்.” நாரதர் “நான் செல்வது அவர் நலனையும் சார்ந்தது. அதனாலேயே இறுதியில் தடைகள் அகலும்” என்றபின் கிளம்பினார்.

wild-west-clipart-rodeo-3முஞ்சவான் என்னும் மலைமுடிக்கு நாரதர் இருளில் இருந்து மேலும் இருளினூடாகச் சென்றார். இருளில் அவர் உடலழிந்தது. பின் விழி அழிந்தது. அவர் நினைவுகளிலும் இருள் செறிந்தது. அறிந்தவை இருண்டன. இருத்தல் இருண்டது. பின்னர் செல்கை என்பதாக மட்டுமே அவர் எஞ்சினார். “மேலும் அவி கோரி புவியில் எரியிலென எழுக!” என்று ஹவனையிடம் சொன்னார். “ஆம், என் சித்தம் அங்கே எழுந்து கைவிரித்து அலறி அவர்களிடம் கொடை கோருகிறது. இன்னும் துயர் கொள்க, இன்னும் விழிநீர் விடுக, உங்கள் உடலுருகி நெய்யாகுக, உங்கள் உளமுருகி சொல்லாகுக என்று ஆணையிடுகிறேன்” என்றாள் ஹவனை.

பன்னிரு ஆண்டுகள் இருளில் சென்று நாரதர் இருண்ட நீரில் கரிய நீர்க்குமிழியென தன்னொளிகொண்டு வானில் நின்றிருந்த முஞ்சவானை சென்றடைந்தார். அங்கே யமனால் காவல்நிறுத்தப்பட்டிருந்த பேய்களும் பூதங்களும் காகங்களும் எருமைகளும் கழுதைகளும் பன்றிகளுமாக கரிய உருப் பெருக்கி அலறியபடி அவரை சூழ்ந்துகொண்டன. “நான்! நான்!” என நுண்சொல் உரைத்து தன்னை ஊழ்கத்தில் நிறுத்தி அவற்றை வென்றார். பின்னர் எழுந்தவை அவருடைய உருவம் கொண்டிருந்தன “தேவர்கள் தேவர்கள்” என்று சொல்லி அவற்றை வென்றார். பின்னர் எழுந்தவை அவர் அறிந்த தேவர்களின் உருக்கொண்டிருந்தன. “தெய்வம் தெய்வம்” என்று அவற்றை வென்றார்.

மூன்றுதெய்வங்களின் வடிவிலெழுந்து விழுங்க வந்த இருள்முகில் காலர்களை “பிரம்மம்! பிரம்மம்!” என்று சொல்லி கடந்தார். அதன்பின் பெருங்கால வடிவுகொண்டு வந்தன பூதங்கள். “தேவி, உன் ஆற்றல் மிகுக!” என்றார் நாரதர். “முனிவரே, இப்போது புவியிலுள்ளவர்களை ஏழு கொடுந்தெய்வங்களின் வடிவுகொண்டு வதைத்துக்கொண்டிருப்பவள் நான். இரக்கமில்லாமல் அவர்கள்மேல் நின்று நடமிடுகிறேன்” என்றாள் ஹவனை. காலவடிவ பூதங்களை “அகாலம் அகாலம்” என்று தவம்செய்து வென்றார் நாரதர்.

எதிரே இருளெனக் குவிந்து இரும்புக் கோட்டையென உருத்து நின்ற தடையை நோக்கி “காலதேவா, அகாலதேவா, அறனுருவே, மறலியே, அடைக்கலமாகுக, நீ!” என்று கூவியபடி நேர்நோக்கிப் பாய்ந்தார். ஹவனை அவரிலிருந்து ஒரு மெல்லிறகென உதிர்ந்தாள். அவர் சென்று சென்று காலதேவனின் முன் சிறு கருங்குருவி என சிறகு மடித்து இறங்கினார்.

முந்தைய கட்டுரைநல்லிடையன் நகர் -1
அடுத்த கட்டுரைமகாபாரதம் அரிய உண்மைகள்