கலையில் மடிதல்- கடிதங்கள்

Kalamandalam-Geethanandan-

 

கலையில் மடிதல்

அன்பு ஜெயமோகன்,

 

‘ஓட்டன் துள்ளல்’ நடனக் கலைஞர் கலாமண்டலம் கீதானந்தன் அவர்களின் மறைவையொட்டி நீங்கள் எழுதியிருந்த “கலையில் மடிதல்” பதிவை வாசித்தேன். இந்த வரிகளை வாசித்துவிட்டு, நீங்கள் பகிர்ந்திருந்த காணொளியையும் பார்த்தேன்.

 

It gave me Goosebumps!

 

நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்கிறார். உயிரிழக்கக்கூடும் என்று தோன்றியிருக்கலாம். ஆகவே பாதி ஆட்டத்தில் திரும்பி ஆட்டத்தை முடிக்கும் முகமாக பாடகரை வணங்கியபடி சரிந்து விழுந்துவிட்டார்.

 

அர்ப்பணிப்பு அந்தச் சிறிய செயலில்தான் வெளிப்படுகிறது. மேடையிலேயே விழுந்துவிடலாம். ஆனால் அந்த ஆட்டம் வடிவமுழுமை பெறவேண்டும் என அவர் நினைத்தார். கலைஞர்களுக்குரிய இயல்புகளில் ஒன்று தன் கலைவடிவின் ஒத்திசைவு, முழுமைக்கான அவர்களின் தீவிரம். அதை ஒருவகை வெறி என்றே சொல்லலாம்.

 

அதன் பிறகு அவருடைய ஓட்டன் துள்ளலை இந்தக் காணொளியில் பார்த்து ரசித்தேன்.

 

https://www.youtube.com/watch?v=q3SDqAmQsGo&t=2673s

 

ஜீவா பற்றி சுந்தர ராமசாமியின் “ஜீவா காற்றில் கலந்த பேரோசை” கட்டுரை நினைவுக்கு வந்தது. அவர் ஒரு நண்பரிடம், “ஜீவா மறைந்துவிட்டார்” என்று கூறியதற்கு ஸ்தம்பித்து நின்ற அந்த நண்பர் சிறிது நேரம் கழித்து, “கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுதேவா?” என்று கேட்டாராம். இன்னும் பலரும் அவ்வாறே கேட்டிருக்கிறார்கள். மேடையில் அவர் முழங்கிக்கொண்டிருக்கும்போதுதான் மடிந்திருக்கக்கூடும் என்று ஏன் அவர்கள் தாமாகக் கற்பனை செய்துகொள்ளவேண்டும் என்றவர், ஜீவா தன்னுடைய உன்னத சேவையால் சாதாரணமானவர்களின் மனங்களில் எழுப்பியிருக்கும் சித்திரம் எத்தனை ஜீவகளையுடன்  காட்சி தருகிறது என்றும் எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் சு.ரா பேசியிருப்பதும் கலையில் மடிதலைப் பற்றித்தான்.

 

கீதானந்தன் அவர்களின் மரணம் குறியீடு போல் தெரிகிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒரு கலைஞன் கலை ஆற்றுகையில் மடிதல் என்பது அவன் அந்தக் கலையுடன் கலந்துவிட்டதற்கான குறியீடு.

 

அன்புடன்,

மாதவன் இளங்கோ

 

 

அன்புள்ள ஜெ

 

கலையில் மடிதல் கட்டுரை கண்டேன். இந்த அம்சம் உலகமெங்கும் கலையிலும் இலக்கியத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. நீங்கள் எழுதிய ‘லங்காதகனம்’ கதைகூட இந்த தீம் கொண்டதுதான்.

 

கலையில் ஈடுபட்டிருக்கும்போது ஏராளமானவர்கள் இப்படி மடிந்திருக்கிறார்கள். பொதுவாக கலை அளிக்கும் அதிகமான உடல்சிரமத்தால் இதய அடைப்பு வருகிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது உண்மை அல்ல. அப்போது மனம் சமநிலையில் பரவசத்தில்தான் உள்ளது. ஆகவே உடல் சிரமம் அல்ல காரணம். அது ஒரு ரகசிய ஆசை. பெரும்பாலான கலைஞர்கள் கலையிலேயே சாகவேண்டும் என நினைக்கிறார்கல். அந்த ஆசையின் தீவிரம் சிறிய உடல்பிரச்சினைகள் இருந்தால் அதனுடன் இணைந்துகொள்கிறது. ஆகவே இது நடக்கிறது

 

ஏன் அப்படி ஆசைப்படுகிறார்கள் என்றால் அது ஒரு பெரிய குறியீடு என்பதனால்தான். கலாமண்டலம் கீதானந்தன் ஒருவகையன குறியீடாக ஆகிவிட்டார். அதோடு கலைஞர்களுக்கு ஒரு எண்ணம் உள்ளது. அவர்கள் அன்றாடவாழ்க்கையில் மிகச்சிறியவர்கள். ஆனால் கலையில் மிகப்பெரிய ஆளுமைகள். அங்கே செத்தால்தான் கலைஞராகச் சாவது

 

அசோகமித்திரனின் அப்துல்காதர்  [புலிக்கலைஞன்] புலியாக மாறி செத்தால்தான் உண்மையில் சொர்க்கம் செல்கிறார் இல்லையா?

 

செந்தில்

முந்தைய கட்டுரைகலை -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைபடைப்பூக்கம்