வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37

பகுதி ஆறு : பொற்பன்றி – 2

bl-e1513402911361நகர்நுழைவின் களைப்பு அகல்வதற்குள்ளாகவே துச்சளை திருதராஷ்டிரரை சந்திக்கவேண்டும் என்றாள். அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவள் முற்றிலும் உடல் ஓய்ந்திருந்தாள். தேரிலிருந்து காலெடுத்து படிகளில் வைக்கவே அவளால் இயலவில்லை. தேர் நின்றதும் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தவளிடம் சாரிகை “அரசி, அரண்மனை” என்றாள். அவள் சூழ்ந்தொலித்த ஓசைகளில் முற்றிலும் மூழ்கி வேறெங்கோ இருந்தாள். வாயை துடைத்துக்கொண்டு எழுந்தபோது தேர் ஓடிக்கொண்டிருப்பதாக எண்ணிய உடல் அலைபாய பின்னால் சரிந்து பீடத்தில் ஓசையுடன் விழுந்தாள். அவள் எடையால் பீடம் விரிசலிட்டு உடைந்த ஓசை எழுந்தது.

சாரிகை எழுந்து அவளை பிடித்தாள். “வருக… உதவி!” என அவள் கூச்சலிட வெளியே அவர்களுக்காகக் காத்திருந்த அரசியருக்கு அருகே நின்றிருந்த சேடிப்பெண்கள் இருவர் தேருக்குள் ஏறினர். அவர்கள் மூவரும் சேர்ந்து கைபற்றித் தூக்கி அவளை மெல்ல எழுப்பினர். அவள் நின்று மூச்சிரைத்து “விழுந்துவிட்டேன்” என்று புன்னகைத்தாள். பானுமதியும் அசலையும் தாரையும் வெளியே நின்று எட்டிப்பார்த்து “என்ன ஆயிற்று?” என்றனர். “ஒன்றுமில்லை… நிலைதவறிவிட்டேன்” என்றபடி சேடியர் தோள்பற்றி மெல்ல இறங்கினாள்.

மூச்சிரைக்க சேடியர் தோளைப்பற்றியபடி நின்று அண்ணாந்து அந்த மாளிகையை நோக்கினாள். “ஒவ்வொருமுறை வரும்போதும் இது சிறிதாகிக்கொண்டே செல்கிறதே!” என்றாள். பானுமதி புன்னகைத்து சேடியரிடம் கைகாட்ட மங்கல இசையும் குரவையொலிகளும் எழுந்தன. ஏழு அணிச்சேடியர் மங்கலத்தாலங்களை கொண்டுவந்து அவள்முன் உழிந்து விலகினர். ஒரு சேடி அளித்த சிறிய அகல்விளக்கை கையில் ஏந்தியபடி துச்சளை அரண்மனைக்குள் புகுந்தாள். அவளைத் தொடர்ந்து அரசியர் நடக்க தாரை அவள் தோளை ஒட்டியபடி நடந்தாள்.

“என்னடி புன்னகைக்கிறாய்?” என்று தன் பெரிய கைகளால் தாரையின் காதைப்பற்றி முறுக்கினாள். தாரை சிரித்து “யானை சேற்றில் சிக்குண்டுவிட்டது போலிருந்தது, அக்கை” என்றாள். பானுமதி தாரையை நோக்கி சினத்துடன் திரும்ப “மெய்யாகவே நானும் அப்படித்தானடி எண்ணினேன்” என்று துச்சளை வெடித்துச் சிரித்தாள். “வலி இருந்திருந்தால் பிளிறிக்கூட இருப்பேன்.” பானுமதி பொறுமையை மீட்டுக்கொண்டு “செல்வோம்” என்றாள். அசலை “எப்படி இருக்கிறீர்கள், அக்கையே?” என்றாள். “பார்க்கிறாயே? வளர்ந்துகொண்டிருக்கிறேன். ஆகவேதான் அரண்மனைகள் சிறிதாகின்றன” என்றாள் துச்சளை.

“ஆனால் அழகாக ஆகிவிட்டிருக்கிறீர்கள்…” என்று தாரை சொன்னாள். துச்சளை அவளை நோக்கி திரும்பி உதட்டைச் சுழிக்க “மெய்யாகவே, அக்கையே. எப்படியோ பேரழகி ஆகிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் முகத்திலிருந்து எவராலும் விழியகற்ற இயலாது” என்றாள். துச்சளை அவள் தலையைத் தட்டி “என்னடி உளறுகிறாய்?” என்று சொல்லி இழுத்து தோளுடன் சேர்த்துக்கொண்டாள். பானுமதி “பேரரசி காலையிலிருந்து பத்துமுறை சேடியை அனுப்பி வினவிவிட்டார். அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்து உடைமாற்றுங்கள். அன்னையை சென்று பார்ப்போம்” என்றாள்.

“ஆம், அதற்கு முன் நான் தந்தையையும் பார்க்கவேண்டும்” என்றாள் துச்சளை. “அவரும் நோயுற்றிருக்கிறார்” என்றாள் அசலை. “அன்னை?” என்றாள் துச்சளை. “அன்னையின் நோய் வெளியே தெரிவதில்லை” என்றாள். துச்சளை தலையசைத்து “ஆம்” என்றாள். கூடத்தினூடாக அவர்கள் நடந்தனர். முன்னால் சென்ற நிமித்தச்சேடி சங்கொலி எழுப்பி “அஸ்தினபுரியின் இளவரசி, குருகுலத்தோன்றல், காந்தாரத்து தொல்லன்னையரின் வழிவந்தவர், சைந்தவி துச்சளை வருகை!” என அறிவித்தாள். “எவரிடம் சொல்கிறாள்?” என்றாள் துச்சளை. “நம்மிடம்தான், நாம் அடிக்கடி இதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறதே?” என்றாள் தாரை.

“இவள் முன்னர் எலிக்குஞ்சு போலிருந்தாள். நாவெழுவதே இல்லை. இப்போது நன்றாகச் சிலம்பும் மணிபோலாகிவிட்டாளே?” என்றாள் துச்சளை. அசலை “ஆம், அவைகளில் உண்மையில் ஒலிப்பது இவள் குரலே” என்றாள். பானுமதி தாரையிடம் “அரசியை அவர் அறைக்கு கொண்டுசெல்க! அனைத்தும் ஒருங்கமைந்துள்ளதா என்று நோக்குக!” என்றபின் “ஓய்வெடுத்து மீள்க, அரசி! அதன்பின் நாம் சந்திப்போம்… நான் உடனே அரசவைக்கு செல்லவேண்டியிருக்கிறது. காமரூபத்து அரசர் அவைபுகுகிறார். அவைமுறைமைகள் உள்ளன” என்றாள். “ஆம், உனக்கு இனி விடிந்திருளும்வரை இதுவே பணி என்றிருக்கும்” என்றாள் துச்சளை.

அரசியர் அனைவரும் துச்சளையுடனேயே நடந்தனர். சிம்ஹிகி, புஷ்டி, அனங்கை ஆகியோர் தாரையுடன் இணைந்து முண்டியடிப்பதுபோல் நடந்தனர். “இவர்களெல்லாம் உன் குலம் அல்லவா?” என்றாள் துச்சளை. “இவள் பெயர் சிம்ஹிகி அல்லவா?” சிம்ஹிகி “ஆம், அரசி” என்று அருகே வந்து அவள் கைகளை தொட்டாள். “அத்தனைபேரும் உங்களை சந்திக்க வர விழைந்தனர், அரசி. ஆனால் நகர்நுழையும் அரசர்களின் அரசியரையும் பிறரையும் நேரில்சென்று முறைமைசெய்ய அவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் நாளையும் உங்களைப் பார்க்க வந்துகொண்டே இருப்பார்கள்” என்றாள் அசலை. “ஆம், மச்சர்குலத்து அரசியர் உங்களைப்பற்றி மட்டும்தான் நேற்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்” என்றாள் தாரை.

துச்சளை அவளுக்குரிய அறையை அடைந்ததும் இடையில் கையூன்றி நின்று “இத்தனை படிகளை ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் மஞ்சத்தறைகள் அனைத்தும் மாடியிலேயே உள்ளன?” என்றாள். “அடித்தளம் முழுக்க ஏவலருக்கு என்பதுதான் எங்குமுள்ளது” என்றாள் அசலை. “அது ஏன் என்கிறேன்” என்றாள் துச்சளை. “நான் சொல்கிறேன். எங்கள் மச்சர்நிலத்தில் மூங்கில்கால்களில்தான் இல்லங்கள் நின்றிருக்கும். அவற்றின் அடிப்பக்கம் விலங்குகளுக்கு உரியது. எருமைகள் அங்கே நிற்கும். பின்னர் அரண்மனைகளாக அவ்வில்லங்கள் வளர்ந்தபோது அங்கே காவல்வீரர்களை தங்கவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றாள்.

“சரியாகத்தான் சொல்கிறாள்” என்றாள் துச்சளை. அசலையின் அருகே நின்றிருந்த தேவகாந்தி “சுற்றிலும் கோட்டை இருப்பதனால் கீழ்த்தளங்களில் காற்றொழுக்கு இருக்காது. அங்கே புரவிகளும் யானைகளும் இருப்பதனால் கொசுக்களும் ஈக்களும் மிகுதி. ஆகவேதான் மேல்தளங்களில் மட்டும் அரசகுடியினர் தங்குகிறார்கள் என என்னிடம் என் அன்னை சொன்னாள்” என்றாள். “அதுவும் சரியாகத்தான் தெரிகிறது” என்ற துச்சளை அசலையிடம் “பொதுவாக என்னைவிட எல்லாருமே நன்றாகவே எண்ணிப்பார்க்கிறார்கள் போலிருக்கிறதடி” என்றாள்.

அசலை “ஓய்வெடுங்கள், அரசி” என்றாள். “ஓய்வெடுக்கவா? நான் உடனே தந்தையை பார்க்கவேண்டும். ஒவ்வொரு படி ஏறுகையிலும் அவரை எண்ணி என் உள்ளம் எடைமிகுந்தபடியே வந்தது” என்றாள். “சற்று ஓய்வெடுத்து நீராடுக… நான் உடனே வருகிறேன்” என்று அசலை பிற அரசியருடன் திரும்பிச்சென்றாள். ஒவ்வொருவரும் துச்சளையிடம் வந்து விடைபெற்றனர். “சென்று வருகிறேன், அரசி. இரவு வருகிறேன். உங்களிடம் பேசவேண்டுமென்று எண்ணி எண்ணி பெருக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் தேவமித்ரை.

அறைக்குள் சேடியர் பேழைகளை கொண்டு வைத்தனர். துச்சளை அறை நடுவே நிற்க சேடியர் அவள் ஆடைகளைக் களைந்து மாற்றாடை அணிவித்தனர். தாரை நோக்குவதைக் கண்ட துச்சளை “பெண்ணுடல் எத்தனை விரைவாக அழகிழந்துவிடுகிறது இல்லையா? ஆண்கள் இப்படி அழகிழப்பதில்லை” என்றாள். “அல்ல, அரசி. எனக்கு உங்கள் உடல் அன்னையுரு என்று தோன்றுகிறது. எங்கள் நாட்டில் களிமண்ணில் பேரன்னை உருவுகளை அமைத்து நெய்தல்பூசெய்கை நிகழ்த்துவோம். உங்களைப்போலவே இருக்கும் அவ்வுருக்கள்” என்றாள்.

ஆடை மாற்றிக்கொண்டபின் மெல்ல பீடத்தில் அமர்ந்த துச்சளை “எவ்வளவு சடங்குகள்! புலரியில் கோட்டைமுகப்பைக் கண்டதும் ஒரு நாழிகைக்குள் அரண்மனைக்குள் சென்றுவிடுவோம் என எண்ணினேன். இதோ வந்துசேர நான்கு நாழிகை கடந்துள்ளது” என்றாள். “நெடுநாட்களுக்குப் பின் அஸ்தினபுரிக்கு திரும்புகிறீர்கள். நூற்றுவருக்கு ஒரே தங்கை நீங்கள்.” துச்சளை தலைகுனிந்து விழிசரிய அமர்ந்திருந்தாள். “மக்கள் உங்களைக் காண கோட்டைமுகப்பில் நேற்றிரவே கூடி முகக்களத்தை நிறைந்துவிட்டனர் என்று அறிந்தேன்” என்றாள் தாரை.

‘ஆம், என்னைக் கண்டதும் களிவெறிகொண்டார்கள். கூச்சலும் நடனமும் என காடு புயல்கொண்டதுபோலத் தோன்றியது. கோட்டைமுகப்புக்கு விதுரர் வருவார் என நான் நினைக்கவேயில்லை. அவர் வந்ததைக் கண்டதும் விழிநீர் சிந்திவிட்டேன். தந்தையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். தந்தைக்கு விதுரர் இருக்கிறார் என்ற எண்ணம் வந்தது…” என்றாள் துச்சளை. “நகரமே உங்களுக்காக விழா கொண்டாடியது, அரசி. காலையில் ஆலயம் செல்லும்போது பார்த்தேன். தோரணங்கள் இல்லாத இடமே இல்லை” என்று தாரை சொன்னாள்.

“அதை தனக்கான வரவேற்பாக நினைத்துக்கொள்கிறார் சைந்தவர்” என்று துச்சளை புன்னகைத்தாள். “நான் ஒன்று நோக்கினேன், அரசி. நீங்களோ அரசியரோ ஒருசொல்கூட கொழுநர்களைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை” என்றாள் தாரை. “நாங்கள் எப்போதுமே பேசுவதில்லை” என்றாள் துச்சளை. “ஏன்?” என்று தாரை கேட்டாள். “பேசுவதில்லை. ஏன் என்று கேட்டால் ஒருவேளை எங்களுக்கு அவர்கள் அத்தனை முதன்மையானவர்களல்ல என்று தோன்றுகிறது” என்றபின் “மெய்யாகவே எனக்கு சைந்தவர் எவ்வகையிலும் பொருட்டல்ல” என்றாள்.

“என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை” என்றாள் தாரை. “நல்ல கணவர்களைப் பெற்ற பெண்களால் அதை புரிந்துகொள்ள இயலாது” என்றாள் துச்சளை. “நீங்கள் இருவரும் சேர்ந்தமர்ந்து தேரில் வருவீர்கள் என எண்ணினேன்” என்றாள் தாரை. “ஆம், அதுவே வழக்கம். மக்கள் அப்படித்தான் காணவிழைவார்கள். என்னிடம் அமைச்சர் சொன்னபோது தேவையில்லை என்று மறுத்துவிட்டேன்.” “ஏன்?” என்று தாரை கேட்டாள். “நானும் அவரும் ஆண்டுக்கொருமுறை இந்திரவிழாவின்போது அரசவையில் அருகருகே அமர்ந்திருப்போம். மற்றபடி சந்தித்துக்கொள்வதுகூட இல்லை” என்றாள் துச்சளை. “மெய்யாகவா?” என்று தாரை கேட்டாள்.

“ஆம், அவருக்குத் தேவையான பெண்கள் அவரை சூழ்ந்திருக்கிறார்கள்” என்று துச்சளை சொன்னாள். “என் உடல் இப்படியாவது வரை என்மேல் மெல்லிய ஈடுபாடு அவருக்கிருந்தது. அது அகன்று பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன.” தாரை கனிந்த விழிகளுடன் நோக்க “அப்படி நோக்கி துயர்கொள்ள வேண்டியதில்லை. அது மிகப் பெரிய விடுதலை. என் உள்ளம் அதன்பின்னரே கனியத் தொடங்கியது. எனக்கு அது எப்போதுமே பெரிய துயராகவே இருந்திருக்கிறது” என்று துச்சளை சொன்னாள். “நானே எண்ணிக்கொள்வதுண்டு, என் உடல் மல்லர்களுக்குரியதா என. இது கொஞ்சப்படுவதை மறுக்கிறது.”

மாறாத மென்புன்னகையுடன் எளியதொன்றை சொல்வதைப்போல “என் உடலை அவர் ஆள்கையில் உள்ளூர சிறுமதிப்பு செய்யப்படுவதாக உணர்வேன். அதைவிட நானே என் உடலால் அதன்பொருட்டு செலுத்தப்படுகையில் மேலும் சிறுமைகொள்வேன். ஒவ்வொருமுறையும் என்னை எண்ணிக் கூசியபடியே அதிலிருந்து விலகுவேன். என்றோ ஒருநாள் இனியில்லை என்னும் எண்ணம் எழுந்தபோது மெய்ப்புகொண்டுவிட்டேன். கண்ணீர் வழியத்தொடங்கியது. அன்றெல்லாம் அழுதுகொண்டிருந்தேன். என் உள்ளம் அன்று உணர்ந்த எழுச்சி அறுபடாது இன்றுவரை நீடிக்கிறது” என்றாள்.

தாரை அவளை விந்தையாக நோக்கிக்கொண்டிருந்தாள். “உனக்குப் புரியாது” என்றாள் துச்சளை. “இழப்பு எப்படி விடுதலை ஆகும்?” என்றாள் தாரை. “மெய்யாகவே நான் உணர்வது இதுதானடி. எதையுமே விட்டுவிட மானுடனால் இயலாது, இழப்பதே விடுதலைக்கான ஒரே வழி. இழந்தவை எத்தனை விரைவாக நம்மைவிட்டு அகல்கின்றன என்பது விந்தையிலும் விந்தை. ஏனென்றால் நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொன்றும் இங்கு இப்போது மட்டுமே நீ என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன. எதிர்காலம் நில்லாதே வா என இழுத்துக்கொண்டிருக்கிறது.”

துச்சளை கன்னங்களில் நீள்குழிகள் எழ சிரித்து “காமம் துறக்க தவம்செய்வோர் கொள்ளும் அல்லல்களை நூல்களில் படிக்கையில் ஆழ்ந்த இரக்கமே ஏற்படுகிறது. வெட்டி வீசினால் அது மிக எளிது என அறியாதவர்கள்” என்றாள். தாரை கையால் வாய் பொத்தி சிரித்தாள். சாரிகை இன்னீர் கொண்டுவர அதை வாங்கி அருந்தியபடி “நீராடவேண்டும்” என்றாள் துச்சளை. “நீராட்டறை ஒருங்கியிருக்கிறது, அரசி” என்றாள் சாரிகை. தாரை “நீங்கள் உங்கள் உடன்பிறந்தாரை சந்திப்பதைப்பற்றி சொல்லவேயில்லை” என்றாள். “ஆம், சந்திக்கவேண்டும்” என்றபின் “அவர்கள் இப்போது இவ்வுலகில் எதனுடனும் இல்லை என எண்ணுகிறேன்” என்றாள் துச்சளை.

bl-e1513402911361திருதராஷ்டிரரின் அறைவாயிலில் நின்றிருந்த சங்குலனைக் கண்டதும் துச்சளை திகைப்புடன் “அய்யோ, இவர் விப்ரர் அல்லவா?” என்றாள். அவன் புன்னகைத்து “நான் அவர் மைந்தன், அரசி” என்றான். “இவனை நான் முன்னரே அறிவேன்… ஒருமுறை நான் கொற்றவை ஆலயத்திற்குச் செல்லும்போது இவனை பார்த்தேன். ஏனோ அன்று இவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தூக்கி கொஞ்சிவிட்டு ஒரு முத்தாரத்தை இவன் அன்னையிடம் அளித்தேன்” என்றாள். சங்குலன் “ஆம், அரசி. அந்த முத்தாரம் இப்போதும் இருக்கிறது” என்றான்.

தாரையிடம் திரும்பி “இயல்பாக கைநீட்டி தூக்கமுயன்றேன். என்ன எடை தெரியுமா? அப்படியே குனிந்துவிட்டேன். என்ன அகவை, இரண்டா என இவன் அன்னையிடம் கேட்டேன். இல்லை இளவரசி, ஏழு மாதம்தான் என்றாள். திகைத்துவிட்டேன்” என்றாள். அவன் தோள்களைத் தொட்டு “பெருந்தோளன்… நீ மற்போர் பயின்றாயா?” என்றாள். “ஆம், தந்தையிடமிருந்து” என்றான். “விப்ரர் மாமல்லர், தெரியுமல்லவா?” என்றாள் துச்சளை. தாரை “ஆம்” என்றாள்.

“இளமையில் தந்தை பீஷ்மரிடம் மற்போர் பயின்ற காலத்தில் ஒருமுறை அவரும் இளையவர் பாண்டுவும் கங்கைவழியாக படகில் செல்கையில் வாரணவதம் அருகே சிம்ஹபதம் என்னும் ஊரில் ஓர் இளைஞர் படகு ஒன்றை தனியாகத் தூக்கி நீரிலிறக்குவதை இளையவர் கண்டு தந்தையிடம் சொன்னார். அவரை அருகழைத்து தன்னுடன் மற்போரிடும்படி தந்தை கோரினார். கரைச்சேற்றில் அவர்கள் போரிட்டனர். அவர் இறுதியில் தந்தையை வென்றார். சேற்றுடன் தந்தையை அழுத்திப்பிடித்துக்கொண்டு பொறுத்தருள்க அரசே என்று சொன்னார். தோல்வியை ஏற்றுக்கொண்டு எழுந்த தந்தை எப்படி என்னை உனக்குத் தெரியும் என்று கேட்டார். கதைகளினூடாக உங்களை ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார். அவ்விளைஞர்தான் விப்ரர்” என்றாள் துச்சளை.

“அவரை உடனே தன்னுடன் அழைத்துக்கொண்டுவந்து அணுக்கராக வைத்துக்கொண்டார் தந்தை. அது ஒரு அரசசூழ்ச்சியாகவே செய்யப்பட்டது, அவர் எங்கும் சென்றுவிடக்கூடாதென்று. பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கறிந்தவர்களானார்கள். பயிற்சிக்களத்தில் ஒவ்வொருநாளும் தோள்கோத்து அடைந்த அணுக்கம் அது.” துச்சளை அவனிடம் “தந்தையிடம் இப்போது நீதான் போரிடுகிறாயா?” என்றாள். “ஆம் அரசி, சென்ற பதினைந்து நாட்களுக்கு முன்புவரை” என்றான் சங்குலன். துச்சளை முகம் மாறி “எப்படி இருக்கிறார்?” என்றாள். “நலம்பெறுவார் என நம்புகிறேன்” என்றான் சங்குலன். அந்த மறுமொழியிலிருந்த நுட்பத்தை உணர்ந்து துச்சளை புன்னகைத்து “செல்வோம்” என்றாள். தாரை தயங்கி நிற்க “நீயும் வாடி” என தோளைத் தொட்டு அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

திருதராஷ்டிரரின் மஞ்சத்தறை பெரிய அவைக்கூடம்போல் எட்டு சாளரங்களும் மேலெழுந்து குவிந்த கூரையும் நான்கு வாயில்களுமாக விரிந்திருந்தது. அவருடைய மஞ்சமும் முரசுக்கட்டில்போல அகன்றிருந்தது. அதன்மேல் வெண்பட்டு விரிக்கப்பட்ட இறகுச்சேக்கையில் வெண்ணிறப் பட்டு உறையிட்ட தலையணைகளில் தலைவைத்து அவர் படுத்திருந்தார். நீண்ட நரைகுழல்சுருள்கள் தலையணைமேல் பரவியிருந்தன. பெரிய கருந்தோள்கள் வெண்பட்டின் பகைப்புலத்தில் துலங்கித்தெரிந்தன. துச்சளை அவரைக் கண்டதும் கைகூப்பியபடி கண்ணீர் வழிய அசையாமல் நின்றுவிட்டாள். சங்குலன் மெல்ல பின்னகர்ந்து வாயிலை சாத்தினான். தாரை அவ்வோசையில் சற்று அதிர்ந்தாள்.

திருதராஷ்டிரரின் கண்கள் சுருங்கி அதிர்ந்தன. இமை திறந்து செந்நிறத் தசைக்குமிழிகள் துள்ளின. “துச்சளையா? துச்சளையா?” என்றார். அவருடைய குரல்வளை எழுந்து ஆடியது. கைகள் இரண்டும் காற்றில் நீண்டு துழாவின. “துச்சளை! வந்துவிட்டாயா?” என்றார். தாரை “அரசி, அருகே செல்க!” என்றாள். அவருடைய கைகள் துழாவிக்கொண்டே இருந்தன, பசித்த யானையின் துதிக்கைகள் என. “துச்சளை, அருகில் வா… துச்சளைதானே?” தாரை துச்சளையைத் தொட்டு “அருகில் செல்க, அரசி” என்றாள். துச்சளையால் நடக்கமுடியவில்லை. நெஞ்சில் கைவைத்து அழுத்தியபடி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தாள். “துச்சளை!” என்றபடி திருதராஷ்டிரர் எழுந்து அமர்ந்தார். “நான் உன்னை தேடினேன்… நீ வருவாய் என்று…” என்றபின் இருமி உடல் அதிர்ந்தார்.

அருகே சென்ற துச்சளை அவர் கைதொடும் தொலைவில் நின்றாள். அவள் உடல் மெய்ப்புகொண்டு சிலிர்த்திருப்பது தெரிந்தது. அத்தனை பெரிய உடல் மெல்லிய இறகுபோல அதிர்வது தாரைக்கு விந்தையாகத் தோன்றியது. துழாவிய திருதராஷ்டிரரின் கைகள் துச்சளையை தொட்டன. திடுக்கிட்டு அசைவிழந்தன. பின்னர் உறுமலோசையுடன் அவளை அள்ளி இழுத்து தன் மார்பின்மேல் போட்டுக்கொண்டார். அச்சுறுத்தும் முனகலோசையும் உறுமலோசையும் எழ தன் பெரிய கைகளால் அவளைத் தழுவி நெஞ்சோடு இறுக்கினார். அவள் உடல் அவர் பிடிக்குள் பிதுங்கி நெரிந்தது.

அவள் மூச்சுத்திணறி இறந்துவிடக்கூடும் என்று தாரை அஞ்சினாள். ஆனால் அவள் முகம் சிறுகுழவியினுடையதுபோல அழுகையில் துடித்து நின்றது. கண்ணீர் கன்னங்களில் வழிந்து தாடையில் துளித்து சொட்டிக்கொண்டிருந்தது. திருதராஷ்டிரர் அவளை முத்தமிட்டார். கன்னங்களிலும் தோள்களிலும் நெற்றியிலுமாக. அவர் கைகள் அவள் தலையையும் கன்னங்களையும் கழுத்தையும் பருத்த தோள்களையும் உருண்ட பெரிய கைகளையும் தொட்டுத்துழாவின. அவளுடைய முலைகளைப் பற்றிநோக்கி கீழிறங்கின. வயிற்றைத் தொட்டு இடையை வருடி தொடைகளில் நடந்தன. அத்தொடுகையை தாரை தானும் உணர்ந்தாள்.

துழாவித் துழாவிச் சலித்த திருதராஷ்டிரரின் கைகள் மெல்ல ஓய்ந்தன. “நீ வந்துவிட்டாய்… நான் உன்னை தொடாமல் இறந்துவிடுவேன் என எண்ணினேன்… நீ வந்துவிட்டாய்” என்றார். துச்சளை ஒன்றும் சொல்லவில்லை. “உன்னையே நினைத்துக்கொண்டிருந்தேன்… உன் உடல் என் கைகளில் இருக்கிறது. சில தருணங்களில் முற்றிலும் அகன்றும்விடுகிறது. உன்னைத் தொட்டு எத்தனையோ ஆண்டுகளாகின்றன. உன்னை நான் தொட்டு… விதுரா… அடேய்… விதுரா, மூடா!”

துச்சளை “அவர் இங்கில்லை” என்றாள். “ஆம், அவன் இங்கு வந்துவிட்டு இப்போதுதான் சென்றான். உன் அரசனை வரவேற்கச் சென்றான்… அவனிடம் நான் சொன்னேன், நீ பருத்திருப்பாய் என்று. உன் கைகள் பெரிதாக இருக்கும் என்று. அவ்வாறெல்லாம் இருக்காது என்றான். மூடன்! என் மகள் எப்படி வளர்வாள் என எனக்குத் தெரியாதா? நான் உன்னை நாள்தோறும் வருடிக்கொண்டிருக்கிறேன். உன்னை வருடாமல் ஒருநாள் கடந்துசென்றதில்லை… தெரியுமா? உன்னை என் கை அறிந்ததுபோல அவர்கள் அறியமாட்டார்கள்… எப்போது வந்தாய்? உணவருந்தினாயா? ஓய்வெடுக்காமல் இங்கேயே வந்துவிட்டாயா? சஞ்சயா, அறிவிலி…”

துச்சளை “அவரும் இங்கில்லை, தந்தையே” என்றாள். “அவன் உன்னை பார்க்கவேண்டும். அவன் முன் நீ ஒருநாள் முழுக்க அமர்ந்திரு. உன்னைப் பார்த்து அவன் எனக்கு ஒருநாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நடுவே வேறு எவரும் வரக்கூடாது. ஒரு சொல்கூட நாம் பேசிக்கொள்ளக்கூடாது. உன்னைப்பற்றி அவன் சொல்வது மட்டும் என் காதில் விழவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர். அவர் குரல் உடைந்தது. “நான் இசை கேட்டு நெடுநாட்களாகின்றன. என் உள்ளத்திலும் இசையே இல்லை. நேற்று ஒரு பண்ணைப்பற்றி நினைவுகூர்ந்தேன். அது சொல்லாகவே என்னுள் எழுந்தது…”

“மீண்டும் இசை கேட்கலாம், தந்தையே” என்றாள் துச்சளை. நெடுநேரமாக பேசாமலிருந்தமையால் அவள் குரல் அடைத்திருந்தது. கனைத்து தொண்டையை தீட்டிக்கொண்டு “நானும் தங்களுடன் அமர்ந்து இசை கேட்கிறேன்” என்றாள். “இனிமேல் என்னால் இசை கேட்கமுடியுமென்று தோன்றவில்லை. மெய்யாகவே இனி என்னால் இயலாது… நான் அதை அத்தனை உறுதியாக உணர்கிறேன். கற்பாறையைத் தொட்டு அறிவதுபோல” என்றார் திருதராஷ்டிரர். தலையை ஆட்டியபடி அவர் விழிநீர் வடித்தார்.

“நீ அறியமாட்டாய், இசை என்றால் எனக்கு என்ன என்று. புறவுலகு பொருள்வயமானது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையில் தனித்தது. ஒன்றுக்கும் பிறவற்றுக்குமான உறவை பிரம்மம் எப்படி வகுத்துள்ளது என நாம் அறியவே இயலாது. நாம் அவற்றுக்கு அளிக்கும் உறவைக்கொண்டுதான் நம் உலகு உருவாகிறது. நீங்கள் விழிகளால் அவற்றை ஒன்றாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் உலகம் ஒளியாலானது. என் ஒளி இசையே. நான் தொட்டறியும் அத்தனை தனிப்பொருட்களும் என்னுள் குவிந்து மலைப்பை அளித்தபோதுதான் இசையை கண்டடைந்தேன். இசை அவற்றை இணக்கி இயையச் செய்து தொடுத்து விரித்து என் உலகை அமைத்தது, நான் அதில் வாழ்ந்தேன்.”

“இப்போது என் அகம் மீண்டும் பொருளற்ற பருக்களின் பெருங்குவியலாக கிடக்கிறது. சிலசமயம் துணுக்குறலுடன் நான் இறந்துவிட்டேனா என உணர்கிறேன். என் கைகளால் என் தோள்களையும் மார்பையும் தொட்டுத் தொட்டு நான் உயிருடன்தான் இருக்கிறேன் என நிறுவிக்கொள்கிறேன்.” அச்சொற்களை அவர் உள்ளூர பலமுறை பேசிக்கொண்டிருக்கவேண்டும். அவற்றை சீராகச் சொன்னதுமே அவர் எளிதானார். பெருமூச்சுடன் மெல்ல அமைந்து “உன்னை மீண்டும் தொடும்போது நான் மீண்டுவருவேன் என்று உணர்ந்தேன். மீண்டும் என்னால் இசை கேட்கமுடியும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “மெய்யாகவே முடியும், தந்தையே. இன்று இசை கேளுங்கள்…” என்றாள் துச்சளை.

அவர் பெருமூச்சுவிட்டு “ஆனால் இந்த ஆறுதல் பொய் என முதல் உள எழுச்சி அமைந்ததுமே தெரியத்தொடங்குகிறது… சுனைக்குள் இந்தக் கரும்பாறை எந்த அலையாலும் கரைக்கமுடியாதபடி அமைந்துள்ளது” என்றார். “நீ அறிந்திருப்பாய், என் மைந்தன் எனக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்போகிறான்.” துச்சளை ஒன்றும் சொல்லவில்லை. “அவன் என்னை முற்றிலும் துறக்கப்போகிறான். அச்சடங்கு நிகழ்ந்தால் நான் உயிருடனில்லை என்றுதான் என் முன்னோர் பொருள்கொள்வார்கள். நானே அவ்வாறுதான் கொள்வேன். என் கைகளும் கால்களும் அசைவிழக்கும். செத்த உடலாக இங்கே நான் கிடப்பேன். ஒவ்வொருநாளுமென அழுகிக்கொண்டிருப்பேன்.”

மீண்டும் அவர் குரல் நெகிழத்தொடங்கியது. “அவனிடம் சொல்… அவன் கால்களை பற்றிக்கொண்டு நான் கெஞ்சுகிறேன் என்று சொல். அவன் என்னை விட்டுவிடலாகாது. அவனால்தான் நான் பெருந்தந்தை. அவன் என்னை உதறினால் என் நூறு மைந்தரும் ஆயிரம் பெயர்மைந்தரும் என்னிடமிருந்து அகல்வார்கள். பின்னர் நான் வெறும் தசைக்கூண்டு… என் செல்வமே, அவனிடம் செல். உன் சொற்களால் எப்படியாவது அவனை மீட்டுக்கொண்டு வா… அவன் என்னை உதறினால் எனக்கு பின்னர் வாழ்வில்லை… அவனிடம் சொல். அவனிடம் சொல். அவனிடம் சொல், கண்ணே!”

அவர் விசும்பி அழத்தொடங்கினார். பெரிய கருந்தோள்கள் குலுங்க வேழமருப்பென விரிந்த மார்பு எழுந்தமைய கண்ணீர் உதிர அவர் அழுதுகொண்டிருப்பதை நீர்விழிகளுடன் துச்சளை நோக்கிக்கொண்டிருந்தாள். “அவனைத் தூக்கி காட்டில் வீசிவிடும்படி நிமித்திகர் சொன்னார்கள். விதுரனே அவ்வாறுதான் எண்ணினான். அவன் அன்னையும்கூட அன்றிருந்த நிலையில் அதை ஏற்றிருப்பாள். நான் அவனை நெஞ்சோடணைத்துக்கொண்டேன். நானே அவனென்று உணர்ந்தேன்… அவன் என் மைந்தன் மட்டுமல்ல. எல்லா தந்தையருக்கும் மைந்தர்கள் மூதாதை வடிவங்கள். மண்ணிழிந்த தெய்வங்கள்… அவனிடம் சொல். அவன் அடிபணிகிறேன் என்று சொல். அவன் என் தலையை உதைக்கட்டும்… அவனுக்கு நான் எந்த ஆணையையும் விடுக்கவில்லை. அவன் தன் உடன்குருதியினரை கொல்லட்டும். பாரதவர்ஷத்து நிலம் அனைத்தையும் ஆளட்டும். மண்ணில் அனைத்துப் பழிகளையும் சூடட்டும். நான் அவன் தந்தை என்றே நின்றிருப்பேன். அவன் என்னை உதறக்கூடாது. அதைமட்டும் அவன் செய்யக்கூடாது.”

அவர் அவள் கைகளைப்பிடித்து நெரித்து இறுக்கினார். அவற்றை உலுக்கியபடி மீண்டும் மீண்டும் “அவனிடம் சொல்… அவனிடம் சென்று சொல்” என்றார். ஒருகணத்தில் வெடித்தெழுவதுபோன்ற குரலில் “நான் கணிகரிடம் செல்கிறேன். அவர் காலடியில் தலைவைக்கிறேன். அவர் உமிழ முகம் கொடுக்கிறேன். அவர் இழைக்கும் திரிபு இது. அவரால் இதை மீட்கவும் இயலும்… அவர் என்னை காக்கமுடியும்… அவரிடம் செல்க! நான் அவரை சந்திக்கவருகிறேன் என்று சொல்க… அவர் சகுனியிடம் சொல்லட்டும்” என்றார்.

“நான் அவர்களிடம் பேசுகிறேன், தந்தையே” என்றாள் துச்சளை. “அவர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்க! நான் எளியவன், விழியற்ற பெரும்புழு. மானுடனாக அமையாத குறையுடையவன். என் துயர் என் உள்ளிருந்து வெளியே வழிய வாயிலே இல்லை. அவனிடம் சொல்… அவன் என்னை உதறக்கூடாது. அவனிடம் சொல், என் தெய்வமே!” அவர் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தார். சொல்லச் சொல்ல வெறியேறி பித்தர்போல, இறையேற்றம் பெற்றவர்போல அதை திரும்பத் திரும்ப சொன்னார். ஊழ்நுண்சொல் என “அவனிடம் சொல்! அவனிடம் சொல்!” என்றார். அவள் கைகளைப்பிடித்து உலுக்கினார்.

அவருடைய வெறி ஏறி ஏறி வந்தது. தாரை அச்சத்துடன் பின்னடைந்தாள். ஐம்புலன்களும் கொண்டவர்களிடம் எழும் வெறியல்ல அது என்று தோன்றியது. அது தெய்வங்களுக்கு எதிரான வஞ்சம். சூழ்ந்திருக்கும் முழு உலகுக்கும் எதிரான சினம். சங்குலன் உள்ளே வந்து எழுந்துகொள்ளும்படி விழிகாட்டினான். திருதராஷ்டிரரின் கைகள் வலிப்பு வந்தவைபோல அசைய துச்சளை எளிதாக கைகளை உருவிக்கொண்டாள். அவள் பின்னடைந்ததும் அதை உணர்ந்த திருதராஷ்டிரர் “எங்கே செல்கிறாய்? எங்கே செல்கிறாய்? அவனிடம் சொல்!” என்று கூவினார். ஓங்கி தன் நெஞ்சிலும் தலையிலும் அறைந்துகொண்டார். தன் உடலில் இரு கைகளாலும் அறைந்தபடி நெருப்புபட்ட களிறுபோல பிளிறினார்.

சங்குலன் அவருடைய இரு கைகளையும் பற்றி அவரை படுக்கையோடு சேர்த்து பற்றிக்கொண்டான். “துயில்க, துயில்க!” என்றான். கைநீட்டி அருகே இருந்த பீதர்நாட்டு வெண்களிமண்ணாலான மூக்குக்குவளையை எடுத்து அதை வாயால் ஊதி பொறி எழுப்பி அதன் புகையை அவருக்கு அளித்தான். செல்க என துச்சளையிடம் விழிகாட்டினான். துச்சளை பின்னடி எடுத்துவைத்து வெளியே செல்ல தாரை உடன்சென்றாள்.

முந்தைய கட்டுரைசாக்கியார் முதல் சக்கரியா வரை
அடுத்த கட்டுரைஞாநி பற்றி…