அண்மையில் இளம்நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது அவர் கதை எழுதியபோது கிடைத்த அனுபவம் பற்றிச் சொன்னார். பாராட்டுக்கள் வந்தன, சம்பிரதாயமானவை. கதையில் அவர் விட்டிருந்த வாசக இடைவெளிகளை நிரப்பும் முயற்சி இல்லாதவை. கடுமையான எதிர்விமர்சனங்களைவிட அவை சோர்வளிப்பதாகச் சொன்னார்.
அது உண்மை. நான் எழுதவந்தகாலகட்டத்தில் உண்மையில் இச்சிக்கல் இல்லை. வாசகர்கள் நூறுபேர்தான், அவர்களில் இருபதுபேர் எதிர்வினையாற்றுவார்கள், பத்தொன்பது எதிர்வினைகள் நிறைவளிக்கும் வாசிப்பு கொண்டிருக்கும். இன்றையசூழலில் அடிக்கோடிட்டாலொழிய படைப்புகளுக்கான கூரிய கவனம் கிடைக்காமலாகிறதா?
நான் சமீபத்தில் கவனித்த சில இளையதலைமுறை எழுத்தாளர்களின் கதைகளின் இணைப்புகளை இங்கே தரலாமென நினைக்கிறேன். அதிகபட்சம் பத்து கதைகள். வாசகர்கள், நண்பர்கள் தங்கள் எதிர்வினைகலை எழுதியனுப்பலாம். அவையும் பிரசுரமாகும். இது சிறுகதைகளைப்பற்றிய ஒரு பொதுவிவாதமாக நிகழட்டும். அத்தனை கதைகளும் பிரசுரமாகக் காக்கவேண்டியதில்லை, அவ்வப்போதே கூட எதிர்வினைகளை அனுப்பலாம்
ஜெ
***
டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து செல்வதாக ஏற்றியவரின் டாக்சி, முப்பது நிமிட நேர பயணத்திற்குப்பின் சாலை விளக்குகள் இல்லாத கம்பத்துப்பாதையில் குலுங்கியபடி நகர்ந்தது.