வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–13

பகுதி இரண்டு – பெருநோன்பு – 7

blஇடைநாழியினூடாக அசலையின் தோள்களை பற்றிக்கொண்டு சிறிய காலடிகளை எடுத்துவைத்து மூச்சுவாங்க நடந்த காந்தாரி நின்று நீள்மூச்செறிந்து “நெடுந்தொலைவு வந்துவிட்டோம் போலும்!” என்றாள். “இல்லை அன்னையே, நாம் இரு இடைநாழிகளையே கடந்துள்ளோம்” என்று அசலை சொன்னாள். “நான் முன்பு கால்களாலும் எண்ணங்களாலும் அறிந்த அரண்மனையல்ல இது. மிகப் பெரிதாக பரந்துவிட்டது” என்றாள் காந்தாரி. அசலை “காலம் அவ்வாறு பரந்துவிட்டது போலும்” என்றாள். “வருக!” என்று மீண்டும் அவளை அழைத்துச் சென்றாள்.

முகம் சிவந்து உருகிவிடப்போவதுபோலிருக்க மூச்சு சீறியபடி “ஒவ்வொரு தூணுக்குமிடையே இத்தனை இடைவெளி இருந்ததில்லை. ஒவ்வொரு படிக்கட்டும் இத்தனை மடிப்புகள் கொண்டிருந்ததும் இல்லை. இந்த அரண்மனைக்கு என்ன ஆயிற்று?” என்றாள் காந்தாரி. அசலை “அது நம்முடன் விளையாடுகிறது, பேரரசி. நம் மைந்தர்களுக்கு முன் சின்னஞ்சிறு மரப்பெட்டி போலாகிவிடுகிறது. அவர்கள் இதன் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு கிளை விட்டு கிளை தாவும் குரங்குகள்போல செல்கிறார்கள்” என்றாள். “வீடுகள் ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை என்று எங்கோ சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன். தவழும் குழந்தைகளுக்கு சுவர்களும் தரையும் மென்பஞ்சுகளென குழைந்து சூழ்ந்து கொள்கின்றன. முதியோருக்கு கடுமை கொண்டு காத்து நிற்கின்றன” என்றாள் காந்தாரி.

ஒரு தூணைப் பற்றியபடி நின்று “முதுசெவிலி அகலிகை சென்ற ஆண்டு அடுமனை வாயிலில் முட்டி விழுந்தபோது மருத்துவர் பிரகதர் கூறினார், ஒவ்வொரு சுவரும் படிகளும் தூண்களும் வஞ்சத்துடன் முதியோரை சூழ்ந்திருக்கின்றன என்று. உரிய தருணம் அமையும்போது அறைந்து வீழ்த்துகின்றன. பன்னிரண்டு நாட்கள் படுக்கையில் உழன்றபின் அவள் இறந்தாள். அவள் அரண்மனைக்குள் நுழைந்தபோது பதின்மூன்று வயது. அறுபதாண்டுகாலம் அந்த உத்தரம் அவளுக்காக காத்திருந்திருக்கிறது என்றாள் விறலி. ஆயிரம் முறை அது அவளை அறைய எழுந்து பின் தவிர்த்திருக்கவும் கூடும்” என்றவள் மீண்டும் உடலை எழுப்பியபடி “இன்னும் எவ்வளவு தொலைவு?” என்றாள்.

“இந்த இடைநாழிக்கு அப்பால்…” என்றாள் அசலை. “அங்கு யார் இருக்கிறார்கள்? துரோணர் மட்டுமா?” என்று காந்தாரி கேட்டாள். “இல்லை பேரரசி, விதுரரையும் கிருபரையும் வரச்சொன்னேன்” என்றாள் அசலை. காந்தாரியின் முகம் சுருங்கியது. “விதுரர் எதற்காக?” என்றாள். அசலை “நம்பொருட்டு அவரும் பேசுவார் என்று எண்ணினேன்” என்றாள். காந்தாரி தலையசைத்து “இல்லை. அவர் முன் அவர்கள் உளம் திறக்கமாட்டார்கள். அவர் அங்கு இருக்கவேண்டியதில்லை” என்றாள். “நான் சொல்கிறேன் அவரிடம்” என்று அசலை சொன்னாள்.

மீண்டும் நடந்தபடி “அவர் முன் நானும் உளம் திறக்க இயலாது” என்று காந்தாரி சொன்னாள். “எப்போதுமே அவரை நான் விரும்பியதில்லை. எங்கோ உள ஆழத்தில் அவரும் என்னை வெறுக்கிறார் என்று அறிவேன். எங்கள் இருவருக்கும் தலைவர் ஒருவர் என்பதால்…” அசலை இடைநாழியின் ஓரமாக நின்ற சேடியை விழிகளால் அருகழைத்து தாழ்ந்த குரலில் “அறைக்குள் இரு ஆசிரியர்களை மட்டுமே பேரரசி பார்க்க விழைகிறார்” என்றாள். காந்தாரி பதறி “அல்ல, இது என் ஆணை அல்ல. என் விழைவும் அல்ல. அவ்வாறு அவரிடம் சொல்லவேண்டியதில்லை” என்றாள்.

அசலை “அவள் நுட்பமறிந்த சேடி. முறைப்படி அதை அவரிடம் கூறுவாள்” என்றாள். “வேண்டியதில்லை. எப்படி கூறினாலும் என் விருப்பின்மை அவள் சொற்களில் எழுந்துவிடும்” என்று காந்தாரி சொன்னாள். “இல்லையேல் நம் சந்திப்பே வீணாகிவிடக்கூடும், பேரரசி” என்றாள் அசலை. “நான் அமைச்சரிடம் சொன்னது அவர் அறியாமல் இங்கொரு சந்திப்பு நிகழ இயலாது என்று அறிந்திருந்தமையால்.” காந்தாரி “தாழ்வில்லை, அவர் இருக்கட்டும்” என்றாள். “அவரை விலக்க நாம் எவ்வாறு முயன்றாலும் அவர் அறிவார். அவருடைய சிறு உளச்சுளிப்பையும் அவர் தமையன் அறிவார்.”

சேடியை விழிகளால் விலக்கிவிட்டு அவள் தோள்களைப்பற்றி அசலை அழைத்துச் சென்றாள். சிற்றறையின் வாயிலை அவர்கள் அடைந்தபோது அங்கு நின்றிருந்த காவலன் தலைவணங்கி வாழ்த்துரை சொன்னான். அசலையின் தோள்களைப் பற்றியபடி நின்ற காந்தாரி “முற்றிலும் பிறிதொரு இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு. அஸ்தினபுரிக்கு அப்பால் இதுவரை நான் அறிந்திராத ஒரு புதுநகர்போல இது உள்ளது” என்றாள். “அரண்மனையின் இப்பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் வந்து பல ஆண்டுகளாகின்றன, பேரரசி” என்றாள் அசலை. “ஆம், நான் மிகக் குறைவாகவே அகத்தளத்திலிருந்து வெளியே வருகிறேன். படியிறங்கி தேர் முற்றத்திற்கு செல்வதற்கப்பால் இவ்வரண்மனையில் நான் உலவுவது மிகக் குறைவு” என்றாள் காந்தாரி.

அறைக்கதவு திறந்து வெளியே வந்த விதுரர் “பேரரசியை வணங்குகிறேன். தங்கள் பணிக்காக காத்திருக்கிறேன்” என்றார். “ஆசிரியர்கள் இருவரையும் என் தனி நலன்பொருட்டு சந்திக்கலாம் என்று விழைந்தேன், அமைச்சரே” என்றாள் காந்தாரி. விதுரர் அசலையிடம் காந்தாரியை உள்ளே கொண்டு செல்லும்படி விழிகாட்டிவிட்டு “அவ்வண்ணமே ஆகுக! சந்திப்பு முடிந்ததும் நான் வந்து தங்களை பார்க்கிறேன்” என்றார். அசலை சிறிது துணுக்குறலுடன் விதுரர் முகத்தை பார்க்க அங்கே ஏதும் தெரியவில்லை. காந்தாரி “நன்று!” என்றபின் தன்னை உள்ளே அழைத்துச் செல்லும்படி கைகாட்டினாள். விழியின்மையால் அவள் தன் முகவுணர்வுகளை மறைக்க முடியவில்லை என்பதை அசலை கண்டாள். விதுரர் அதை நோக்கினாரா என அறியமுடியவில்லை.

அசலை காந்தாரியை உள்ளே அழைத்துச் சென்றபின் கதவை மூடினாள். அறைக்குள்ளிருந்த கிருபரும் துரோணரும் எழுந்து “காந்தாரப் பேரரசிக்கு வணக்கம். தங்கள் வருகையால் மாண்புற்றோம்” என்றனர். துரோணர் “இது என் குடிக்கும் எனக்கும் நற்பொழுது, பேரரசி” என்றார். காந்தாரி கைகூப்பியபடி “என் மைந்தர்களின் ஆசிரியர்கள் என் குடிக்கு அருள்புரியும் தெய்வங்களைப் போன்றவர்கள். உங்கள் வாழ்த்துக்களால் நானும் என் கொடிவழியினரும் நலம்பெற்று பொலிகிறோம்” என்றபின் பீடத்தில் உடல் பொருத்தி அமர்ந்தாள். தன் கால்களை அவள் நீட்ட அசலை மண்டியிட்டு அவள் கால்களைப் பற்றி மெல்ல நீவி இழுத்துவிட்டாள்.

அலுப்புடன் முனகியபடி இரு கைகளையும் இரு பீடத்தில் வைத்து சாய்ந்துகொண்ட காந்தாரி கிருபரிடம் “இது அரச முறை சந்திப்பு அல்லவென்பதனால் தங்களை என் அரண்மனைக்கு அழைக்கவில்லை. முறைப்படி தங்களை தங்கள் பயிற்றுக்குடில்களில் வந்து நான் பார்க்கவேண்டும். என் உடலின் இயலாமையால் அது அரிதென்பதனால் பொதுவாக இங்கு வரச்சொன்னேன். பிழையாக எண்ணலாகாது” என்றாள். கிருபர் “இது எங்கள் பேறு, பேரரசி. தங்கள் ஆணை எதுவும் எங்கள் கடமையே” என்றார். துரோணர் “எங்களிடம் தாங்கள் எந்நிலையிலும் பேரரசியென்றே சொல்லாடலாம்” என்றார்.

காந்தாரி “நான் எதன்பொருட்டு தங்கள் இருவரையும் சந்திக்க விரும்பினேன் என்று ஒருவாறு உணர்ந்திருப்பீர்கள், ஆசிரியரே” என்றாள். துரோணர் தாடியை கைகளால் சுழற்றி நீவி கசக்கியபடி கிருபரை பார்த்தார். கிருபர் “ஆம் பேரரசி, அரண்மனையிலும் நகரிலும் அணுகிவரும் போரைப்பற்றியன்றி பிறிது எதைப்பற்றியும் எவரும் பேசாமாலாகியிருக்கிறார்கள்” என்றார். “ஆம், ஏனெனில் இப்போர் நிகழுமென்றால் அணுக்கமான ஒருவரையேனும் இழக்காமல் எக்குடியும் பாரதவர்ஷத்தில் எஞ்சாது. பாரதவர்ஷத்திலேயே தீயூழ் நிறைந்தவள் நானாக இருப்பேன். எப்படி இருப்பினும் நான் என் மைந்தர்களிலும் பெயர்மைந்தர்களிலும் பெரும்பாலானவர்களை இழந்துவிடுவேன்” என்றாள்.

துரோணர் “அந்த அச்சம் தேவையில்லை, பேரரசி. என் வில்லும் என் மைந்தனின் வில்லும் என் தோழர் கிருபரின் வில்லும் தங்கள் மைந்தர்க்கு அரண் என நின்றிருக்கும்” என்றார். “ஆம், அதை அறிவேன். அவ்வேலியைக் கடந்து தேவர்களும் வரமுடியாதென்று அறிவேன். ஆனால் ஊழுக்கு வேலி கட்ட இயலாது என்று இளமையிலேயே கற்றவர்கள் நாமனைவரும். ஊழ் வடிவாக மானுடர் எழுகிறார்கள். ஆசிரியர்களே, நான் அஞ்சுவது மின்னலின் மைந்தன் வில்லை அல்ல. காற்றின் மைந்தனின் கதாயுதத்தையும் அல்ல. இளைய யாதவனை மட்டுமே” என்றாள் காந்தாரி.

கனவிலென அவள் சொன்னாள் “ஏனெனில் நான் அவனை மிக அணுக்கமாக அறிவேன். என் மைந்தரைவிட, என் ஆயிரம் பெயர்மைந்தரைவிட, இப்புவியிலுள்ள வேறெந்த மானுடரையும் விட. எண்ணப்போனால் நானறிந்தவன் அவன் ஒருவனே. அவன் சொல் வெல்லும். அதன் முன் வெற்புகளும் பெருங்கடல்களும்கூட நிற்க இயலாது. தடைநிற்கும் எவரும் அழிவர். என் மைந்தர் அவன் சொல்லுக்கு எதிர்நிற்கலாகாது. என் மைந்தர் இன்னமும் அவன் பெருந்தோற்றத்தை உணரவில்லை. தங்கள் தோள்களிலும் தோழர்களின் படைக்கலங்களிலும் மிகை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பருப்பொருட்கள் பருப்பொருட்களுடனேயே மோதமுடியும், நுண்வடிவான ஊழுடனல்ல. பேருருக்கொண்டு கைபெருகி விழிபெருகி நின்றிருக்கும் ஊழின் வடிவே அவன். அவர்களிடம் கூறுக, எந்நிலையிலும் இப்போரில் அவர்கள் வெல்லமுடியாது! முற்றிலும் குல அழிவு மட்டுமே அவர்களுக்கு எஞ்சியிருக்கிறது.”

கிருபரும் துரோணரும் சொல்லிழந்ததுபோல் அமர்ந்திருந்தனர். கிருபர் மெல்லிய குரலில் “இதை தாங்களே தங்கள் மைந்தரிடம் சொல்லியிருக்கலாமே, பேரரசி” என்றார். “சொன்னதுண்டு, ஆனால் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அன்று அச்செய்தியைக் கேட்டபின் அவன் என் மைந்தனல்ல என்று விலக்கிக்கொண்டேன். பிறிதொரு பெண்ணின் பெற்றி அறியாதவன் அன்னையை அறிந்தவன் அல்ல. பெண்ணுக்கிழைக்கும் சிறுமை எதுவும் தன் மூதன்னையருக்கு எதிரானதே என்றுணராதவனிடம் எச்சொல்லை நான் உரைப்பது? அவன் அழிந்தால் அதை மூதன்னையரின் சொல் என்றே கொள்வேன். எனக்கு அதில் துயரேதுமில்லை.” அதிர்ந்தவர்போல கிருபர் துரோணரை நோக்கினார். துரோணர் விழிதாழ்த்தியிருந்தார்.

“இப்போர் திரண்டெழுவதை பல மாதங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதை தவிர்க்கவியலாதென்றும் அறத்தின் ஆறு இதுவென்றும் எண்ணினேன். இவள் வந்து என்னிடம் சொன்னாள், என் பெயர்மைந்தரின் பொருட்டேனும் இப்போரை தவிர்க்க வேண்டும் நான் என்று. இங்கு நான் வந்திருப்பது என் மைந்தரின் பொருட்டல்ல. அவர்களின் முடிவை அவர்களே தங்கள் செயல்களால் வடித்துக்கொண்டார்கள். என் பெயர்மைந்தர் ஏதுமறியாதவர்கள். காட்டில் விளையாடும் களிற்றுக்குழவிகள்போல இனிய அறியாமையால் நிறைந்தவர்கள். அவர்கள் வாழ்வதற்கு முன் மண்படுவது துயர்மிக்கது. அது நிகழலாகாது. அதன்பொருட்டே உங்களிடம் மன்றாட வந்தேன்.”

துரோணர் கிருபரை பார்த்துவிட்டு “நாங்கள் அரசரிடம் என்ன சொல்லமுடியும், அரசி? போர் ஒழியவேண்டுமென்றால் நிலம் பகுக்கப்படவேண்டும். அதை ஒருபோதும் அரசர் செய்யமாட்டார்” என்றார். கிருபர் “படை திரண்டுவிட்டது. ஷத்ரியப் பேரவை ஒன்று விரைவில் கூட்டப்படவிருக்கிறது. அதில் படைத்தலைவர்களும் அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் போரைத் தவிர்ப்பது குறித்து நாம் பேச என்ன இருக்கிறது?” என்றார். “நீங்கள் இருவரும் படைக்கலம் கொண்டு அவனுக்காக களம் நிற்கமாட்டீர்கள் என்று சொல்லுங்கள். உங்களை நம்பி போருக்கெழவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்” என்றாள் காந்தாரி.

துரோணர் “அது தங்கள் ஆணை என்றால் அதை மீற இயலாது. ஆனால் அதன்பின் உயிர்துறப்பதன்றி எங்களுக்கு வேறுவழியில்லை, பேரரசி. எங்கள் வில் அரசருடன் நிற்குமென்று சொல்லளித்தவர்கள் நாங்கள். எதன்பொருட்டும் கடமையிலிருந்து விலகி நிற்பது எங்களால் இயலாது” என்றார். கிருபர் “நீங்கள் பிதாமகரிடம் பேசிப்பார்க்கலாம். இத்தருணத்தில் அவர் ஒருவரே அரசருக்கு அறிவுறுத்தும் நிலையிலிருப்பவர்” என்றார். “நான் அவரிடமும் பேசினேன்” என்றாள் காந்தாரி. “இங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் பேசுவதாக இருக்கிறேன். அங்கன் என் மைந்தனுக்கு ஒரு படி மேலானவன். அவனை அழைத்து சொல் பெறலாமென்றும் எண்ணுகின்றேன்.”

துரோணர் “பாரதவர்ஷமே இரு அணிகளாக பிரிந்துவிட்டது, பேரரசி. தொல்புகழ் வேதங்களின் தரப்பு நாம். வேதத்திற்கு அரணென எழுந்த ஷத்ரியர் அனைவரும் இங்கு அணிவகுத்திருக்கிறார்கள். இங்கு நின்றிருப்பதே பிதாமகரும் நாங்களும் இயல்பாக எடுக்கக்கூடிய நிலை. வேதம் மறுத்து பிறவேதம் காண்பவர் எவராக இருந்தாலும் இங்கு தங்கள் பிழையுணர்ந்து வந்து பணிந்து மறுவழி தேர்வதே உகந்தது” என்றார். காந்தாரி புருவம் சுளித்து அவர் சொல்லை கேட்டு அமர்ந்திருந்தாள். கிருபர் “ஆம், குடிக்கும் மண்ணுக்கும் நெறிக்கும் சொல்லுக்கும் மேலானது வேதக்கடன்” என்றார்.

அசலை “வேதம் வகுத்த வழியில் எனில் அந்தணர் அரசாள்வதெப்படி, ஆசிரியரே?” என்றாள். “மகளே…” என்று காந்தாரி அசலையின் கைகளை பற்றினாள். துரோணரின் கைகள் நடுங்கத் தொடங்கின. “என்ன சொல்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா?” என்றார். “தங்களிடம்தான், ஆசிரியரே. வேதம் அந்தணருக்கு வேள்வியையும் ஊழ்கத்தையும் மட்டுமே அறிவுறுத்தியது. இரந்துண்ணுதலும் துறந்து மீளுதலுமின்றி பிறிதொரு வாழ்வையே அவர்களுக்கு அது வகுக்கவில்லை. வில்லேந்தி போரிடுவதோ மண்வென்று முடிசூடுவதோ அவர்களுக்கு உகந்ததல்ல. வேதமறுப்பென்றால் அதன் முதன்மை பழி உங்களுக்கே அமையும்” என்றாள்.

துரோணர் பீடம் ஓசையிட விசையுடன் எழுந்து “என்னை சிறுமை செய்யும்பொருட்டு பேசுகிறாயா?” என்றார். “மெய் உங்களை சிறுமை செய்யும் என்றால் பொய் மேலும் சிறுமை செய்யும் என்று உணர்க!” என்று அசலை சொன்னாள். “உங்கள் உள்ளம் எவ்வகையில் ஓடுகிறதென்று உணர்வது மிக எளிது. உங்கள் மைந்தர் பாஞ்சாலத்தின் அரசரென முடிசூடியபோது உங்களுள் வாழ்ந்த அந்தணர் முற்றாக மறைந்தார். அவையில் பட்டுத்துணிக்கு இப்பால் அமர்ந்து உங்கள் சொற்களை கூர்ந்து கேட்டிருக்கிறேன். எந்த அவையிலும் உங்கள் மைந்தரின் புகழ் பாடாமல் நீங்கள் இருந்ததில்லை” என்றாள் அசலை.

“ஆம், அவன் என் மைந்தன். வில்லேந்தினால் பாரதவர்ஷத்தை வென்று மும்முடி சூடும் ஆற்றல் கொண்டவன். அவன் வேண்டாமென ஒழிந்த நிலத்தை ஆள்பவரே உங்கள் அரசர்கள் என்று உணர்க!” என்றார் துரோணர். “திரைநீக்கி ஆணவம் வெளிவந்தது நன்று. இனி பிறிதொன்றை எண்ணி மயங்கி சொல்லெடுக்க வேண்டியதில்லை. நேரிடையாகப் பேசுவோம்” என்று அசலை சொன்னாள். “நீங்கள் அறிவீர்கள் வில்லெடுத்த அந்தணர் என்பதனால் உங்களுக்கு வேதமுறைமை சார்ந்த ஒப்புதல் இல்லை என்று. வேதத்தின்பொருட்டு வில்லெடுப்பதாக நடித்தால் இப்போருக்குப்பின் உங்கள் மைந்தரின் கொடிவழிகளுக்கு முறைமை ஒப்புதல் கிடைக்கும் என்று எண்ணுகிறீர்கள். இது அறத்தால் அல்ல, கடமையால் அல்ல, தன்னலத்தால் எடுக்கப்பட்ட முடிவு.”

துரோணர் பதறும் குரலில் உரக்க “ஆம், இத்தரப்பிலும் மறுதரப்பிலும் படைகொண்டு வந்து கூடியுள்ள அத்தனை பேரும் தங்கள் நலம் கருதியே வருகிறார்கள். இப்புவியில் தங்கள் நலம் கருதித்தான் உழவர் வளம் பெருக்குகிறார்கள். ஆயர் உயிர் பெருக்குகிறார்கள். அரசர் கோல் கொண்டிருக்கிறார்கள். அந்தணர் வேள்விகள் செய்கிறார்கள். நான் இவ்வுலகைத் துறந்து இன்னும் காடேகவில்லை. என் கொடிவழிகள் இங்கு பேரரசர்களின் நிரையெனப் பெருகவேண்டுமென என் உள்ளம் விழைகிறது. அதை எந்த அவையிலும் சொல்வதற்கு எனக்கு தயக்கமில்லை” என்றார்.

சொல்லச் சொல்ல தன் சொற்களை அவர் கண்டுகொண்டார். “ஆம், நான் இத்தரப்பிலேயே நின்றிருக்கமுடியும். இங்குதான் என் குலம் மதிப்புகொள்ளும். நிஷாதரும் அசுரரும் கூடிய பாண்டவர் தரப்பில் நின்று இழிவுசூட எனக்கு விருப்பில்லை” என்றார் துரோணர். “நன்று, குல இழிவின் துயரை அறிந்தவர் நீங்கள். பிற குலத்தை இழிவுசெய்தே அதிலிருந்து மீளமுடியுமென்று கண்டுகொண்டிருக்கிறீர்கள். நலம் திகழ்க!” என்றாள் அசலை. ஒருகணம் சினத்துடன் பற்களைக் கடித்த துரோணர் உடனே தன்னை வென்று “ஆம், அது மெய்யே. இழிவுசெய்யப்பட்ட நான் என் திறனால் வென்று உயர்ந்தேன். திறன்கொண்டவர்கள் எழுக! அதுவே உயர்வுதாழ்வின் நெறி” என்றார்.

காந்தாரி அசலையிடம் “போதும் மகளே, நாம் இங்கு பூசலிட வரவில்லை” என்றபின் துரோணரிடம் “பொறுத்தருள்க, ஆசிரியரே! இவள் நாத்துடுக்கை நானும் கணிக்கவில்லை” என்றாள். “ஒருவர் நாவிலெழுவது பிற அனைவரின் உள்ளத்தில் ஊறியதே” என்றார் துரோணர். “ஆம் அந்தணரே, இந்நகரில் அனைவரும் எண்ணியதே நான் சொன்னது” என்றாள் அசலை. “போதும்” என்று உரக்க காந்தாரி கூவினாள். அவள் முகம் குருதிச் செம்மை கொண்டது. “போதும். இனி ஒரு சொல்லும் எவரும் எடுக்கவேண்டியதில்லை” என்றாள்.

கிருபர் “அமர்க, ஆசிரியரே! அமர்க!” என்றார். துரோணர் மூச்சுவாங்க தன் பீடத்தில் அமர்ந்து “பேரரசி ஆணையிட்டால் நான் அரசரிடம் சென்று இப்போரில் நான் பங்கெடுக்கவில்லை என்று சொல்கிறேன். அவர் கூறுவாரென்றால் என் மைந்தனையும் போரிலிருந்து விலக்குகிறேன். ஆனால் அதன் பிறகு நான் உயிர்வாழமாட்டேன். சொல்லுக்கு என்னை ஆளும் பொறுப்பை அளித்துவிட்டமையால்தான் நான் ஆசிரியன்” என்றார். “வேண்டியதில்லை. நான் கேட்டதற்கு பொறுத்தருள்க!” என்றாள் காந்தாரி.

கிருபர் “நாம் இயற்றக்கூடியதொன்றே, பேரரசி. பீஷ்மப் பிதாமகர் முடிவுசொல்லட்டும். இப்போரிலிருந்து அவர் ஒழிவாரென்றால் அவரை நாங்கள் துணைக்கிறோம். அது எங்கள் சொல் மீறலாகாது. நாங்கள் சொல்லளித்திருப்பது அவருக்காகத்தான். துரோணரும் அவருக்கே கட்டுப்பட்டவர்” என்றார். “ஆம்” என்று துரோணர் சொன்னார். “அவர் எடுப்பது எந்த முடிவாயினும் அவருடன் நான் நிற்கிறேன்.”

காந்தாரி இரு கைகளையும் விரித்து “இன்று காலை நான் அவரிடம் பேசினேன். என் சொற்களை அவர் மறுத்துவிட்டார்” என்றாள். அசலை “இல்லை, அதன் பின் நான் சென்று அவரிடம் பேசினேன்” என்றாள். கிருபர் திகைப்புடன் அசலையைப் பார்த்து “தனியாகவா ?” என்றார். “ஆம், அவரது நீண்ட வாழ்வில் இரண்டாம் முறையாக அவர் விழிகளைப் பார்த்து பேசிய பெண் நான். அவர் கேட்க விரும்பாத அனைத்தையும் சொன்னேன். அவையனைத்தும் உண்மையென்று அவர் உணர்ந்தார். அவர் ஒப்புவார்” என்றாள்.

“அவர் வந்து அவையில் உரைப்பாரா, எழவிருக்கும் இப்போரிலிருந்து தான் முற்றொழிவதாக??” என்று கிருபர் கேட்டார். “ஆம், அவர் ஒழிவார். பிறிதொரு நிலையும் அவர் எடுக்க இயலாது” என்று அசலை சொன்னாள். “பிறகென்ன? அவர் ஒழிவாரெனில் நானும் துரோணரும் போர் ஒழிகிறோம்” என்று கிருபர் சொன்னார். “நாங்கள் மூவரும் போரிலில்லை என்றால் அங்கனை மட்டும் நம்பி இளைய யாதவனை எதிர்க்க முடியுமா என்று அரசர் எண்ணாமலிருக்க மாட்டார். ஒருகணம் அவ்வாறு அவர் ஐயுற்றால்கூட அதை பற்றிக்கொண்டு போரிலிருந்து நீங்கள் அவரை பின்னிழுக்க முடியும்.”

காந்தாரி தளர்ந்தவள்போல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அசலை “அவர் அரசரிடம் அதை கூறட்டும். அதன் பின் அரசரை போரிலிருந்து பின்னிழுக்க நானும் அரசியும் முயல்கிறோம்” என்றாள். துரோணர் “உன் உணர்வுகள் புரிகின்றன, அரசி. அன்னையென மைந்தரையன்றி பிற எதையும் நீங்கள் எண்ணவில்லை. அதுவே உயிர்களுக்கு இறையளித்த தன்னியல்பு. உங்கள் முயற்சி வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

காந்தாரி அசலையின் கைகளைப் பற்றியபடி நடந்தாள். “பழுதற்ற பெருஞ்சுவர்முன் நிற்பதைப்போல் உணர்கிறேன்” என்றாள். “ஏதேனும் ஒரு வழி இருக்கக்கூடும். இருந்து அதை நாம் ஆராயாமல் விட்டுவிட்டோமென்று ஆகவேண்டியதில்லை” என்றாள் அசலை. “இவர்கள் தவிர்க்கிறார்கள். போரை விரும்பும் அகம் தெரிகிறது” என்றாள் காந்தாரி. “அவர்கள் போரை விரும்புவது உலகியல்நலன் நாடி மட்டும் அல்ல. அவர்கள் சலித்திருக்கிறார்கள். வாழ்நாளெல்லாம் படைக்கலங்களுடன் புழங்கியவர்கள். படைக்கலம் அவர்களை கையிலெடுத்துவிட்டது.”

அசலை “இருக்கலாம், அன்னையே. ஆனால் அவர்களுக்குள்ளும் தந்தையர் வாழ்வர். இத்தனை சொல்லெடுத்தாலும் துரோணர் உள்ளாழத்தில் தன் மைந்தனின் உயிருக்காக அஞ்சுவார் என்றே எண்ணுகிறேன். அதை நோக்கியே நான் பேசினேன். அவர் மகனை நினைவுறுத்தாமல் நாம் அவரிடம் எதையும் கோரமுடியாது” என்றாள். காந்தாரி “அவரை வெல்லப்போவது எதுவென்று பார்ப்போம்” என்றாள். “மூதன்னையரே, வாழ்வதே வீணென்று தோன்றும் கணம் எத்தனை கொடிது” என தனக்குத்தானே என சொல்லிக்கொண்டாள்.

முந்தைய கட்டுரைநீதியும் சட்டமும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 18